Saturday 18 May 2024

தமிழ்நாடு அரசின் ‘தோழி’ பெண்கள் தங்கும் விடுதிக்கு விண்ணப்பிக்க…

தமிழ்நாடு அரசின் ‘தோழி’ பெண்கள் தங்கும் விடுதிக்கு விண்ணப்பிக்க…

பணிபுரியும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ‘தோழி’ பெண்கள் தங்கும் விடுதி தமிழக அரசால் தொடங்கப்படுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்விடுதிகளில் சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்.ஓ. வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.

குடும்பங்கள் / உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.

இவ்விடுதிகளில் தங்கும் மகளிர் இரவு 10:00 மணிக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றாற் போல விடுதிக்கு வரலாம்.

தமிழ்நாடு அரசின் ‘தோழி’ விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும்,  techexe@tnwwhcl.in  என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இது குறித்த மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnwwhcl.in/

இவ்விடுதிகளுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnwwhcl.in/hostel-details

*****

Thursday 16 May 2024

எப்படி நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது?

எப்படி நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது?

மறந்து போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், நினைவாற்றலை வளர்த்துக் கொள்வதற்குப் பல வழிமுறைகள் இருக்கின்றன. அதற்கான வழிமுறைகளை ஒவ்வொன்றாகக் காண்போமா?

1. பதிய வைக்க வேண்டியதைப் படமாக்குங்கள் :

படிப்பதை நினைவில் வைத்துக் கொள்ள, அதை படமாக்கி மனக்கண்ணில் திரைப்படத்தைப் போல ஓட விட்டுப் பாருங்கள். படங்களாகப் பதிபவை மனதை விட்டு அகலுவதில்லை. இதற்கு ஒரு சிறந்த பயிற்சியாக உங்கள் எதிரே உள்ள பத்து பொருட்களைப் பாருங்கள். இப்போது கண்ணை மூடிக் கொண்டு அந்தப் பத்து பொருட்களையும் மனக்கண்ணில் நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள்.

உங்களால் எத்தனை பொருட்களை நினைவில் கொண்டு வர முடிகிறது?

பத்துப் பொருட்களையும் கொண்டு வர முடிந்தால் அடுத்த இந்த எண்ணிக்கையை 15, 20 என உயர்த்திக் கொண்டு செய்து பாருங்கள். வகுப்பறையில் ஆசிரியர் மேசையின் மீது சில பொருட்களை வைத்துப் பார்க்கச் செய்து விட்டு, பின்பு அவற்றைத் துணியால் மூடி விட்டு, மேசையில் நீங்கள் பார்த்த பொருட்களைக் கூறச் செய்யும் நினைவாற்றல் பயிற்சிகளை நீங்கள் செய்திருப்பீர்கள் அல்லவா! அது போன்ற பயிற்சிதான் இது.

2. செய்வதை எழுதிப் பழகுதல் :

அன்றாடம் செய்ததை எழுதிப் பழகுங்கள். இது நினைவாற்றலை வளர்ப்பதற்கு நல்லதொரு வழிமுறையாகும். இது நாட்குறிப்பு எழுதுவது போன்றதுதான். நாம் அன்றாடம் என்ன செய்கிறோம் என்பது குறித்த ஒரு கவனக் குவிப்பு இதனால் ஏற்படும். இது நினைவாற்றலை வளர்ப்பதற்குப் பெரிதும் உதவும்.

3. விளையாடுங்கள் :

கட்டாயம் ஒரு விளையாட்டை தினந்தோறும் அரை மணி நேரம் விளையாடுங்கள். இது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைக்கும். விளையாடும் போது விதிகளுக்கு உட்பட்டு கவனத்தை ஒருங்கிணைக்கும் திறன் உங்களை அறியாமல் அனிச்சையாக நடைபெறும். இது ஒரு செயலைக் கவனித்துச் செய்யும் திறனை உங்களிடம் வளர்க்கும். கவனமோடு ஒரு செயலைச் செய்யும் திறன் உங்களுக்கு வந்து விட்டாலே, உங்கள் நினைவாற்றல் தானாக அதிகரிக்கத் தொடங்கி விடும்.

4. மனதை அமைதிப்படுத்துங்கள் :

நினைவாற்றலுக்கும் மன அமைதிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன அமைதியை வளர்க்கும் தியானம் இந்த வகையில் நினைவாற்றல் பெருக உதவும். தினந்தோறும் ஐந்து நிமிடமாவது தியானம் செய்யுங்கள்.

5. புதியன கற்றுக் கொள்ள விழையுங்கள் :

ஏதேனும் ஒரு புதிய திறனை எப்போதும் கற்றுக் கொண்டே இருங்கள். இதனால் மூளை நரம்புகள் உற்சாகமாக இருக்கும். உதாரணமாக ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வது, புதுப்புது இசைக் கருவிகளை இசைக்கக் கற்றுக் கொள்வது, ஓவியம் கற்றுக் கொள்வது, நடனமாட கற்றுக் கொள்வது,… என்று இப்படி எதையாவது புதியதாகக் கற்றுக் கொண்டே இருங்கள்.

6. கண்ணை மூடி நடந்ததை அசை போடுங்கள் :

எந்த ஒரு செயலைச் செய்ததும் பரபரப்பாக அடுத்த செயலை நோக்கி ஓடிக் கொண்டு இருக்காதீர்கள். ஒரு செயல் முடிந்ததும் கண்ணை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் அமருங்கள். அந்தச் செயலை அப்படியே நினைவுபடுத்திப் பாருங்கள். மனதில் செய்த அந்தச் செயல் குறித்து அசை போடுங்கள்.

7. செயல்பாட்டுக்குக் கொண்டு வாருங்கள் :

நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கற்றால் அதைச் செயல்படுத்திப் பாருங்கள். அப்போதுதான் அது மறக்காது. உதாரணமாக ஒரு பாடலைக் கற்றால், அதைச் சொல்லிப் பாருங்கள் அல்லது பாடிப் பாருங்கள். ஒரு கணித சமன்பாட்டைக் கற்றால் அதை எழுதிப் பாருங்கள் அல்லது அதை தேவைபடுவோருக்குக் கற்றுக் கொடுங்கள். ஏனென்றால் கற்றதை உபயோகப்படுத்திப் பார்க்கும் போதுதான் அது நினைவில் தங்குகிறது.

இந்த ஏழு உத்திகளும் உங்கள் நினைவாற்றலை இயல்பாக வளர்க்க உதவும். அபாரமான நினைவாற்றல் என்பது சாகசமோ அல்லது சாதிக்க முடியாத ஒன்றோ அல்ல. நினைவாற்றலுக்கான உத்திகளைப் பின்பற்றினால், நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு உங்கள் நினைவாற்றல் அபாரமாக வளர்ச்சியடைவதைக் காண்பீர்கள். ஆகவே நினைவாற்றலுக்கான இந்த உத்திகளைப் பயன்படுத்தி உங்களது நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

*****

Wednesday 15 May 2024

இப்போதே ஏன் தங்கத்தை வாங்க வேண்டும் என்று தெரியுமா?

இப்போதே ஏன் தங்கத்தை வாங்க வேண்டும் என்று தெரியுமா?

ஏன் தங்கத்தை வாங்க வேண்டும் என்ற காரணம் உங்களுக்குத் தெரியுமலா இருக்கும்? உண்மையான பணம் என்பது தங்கம்தான். தங்க மதிப்பிற்கு ஈடாகத்தான் பணம் அச்சடிக்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில் டாலர் கையிருப்புக்கு ஈடாகப் பணம் அச்சடிக்கப்பட்டாலும், டாலரின் மதிப்பு சரியும் போதெல்லாம் தங்கத்தின் மதிப்பு ஏறும். இதுதான் தங்கத்தை வாங்க வேண்டியிருப்பதற்கான முதன்மையான காரணம்.

இப்போது ஏன் தங்கத்தை வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது தெரியுமா?

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் (சென்ட்ரல் பேங்குகள்) தங்கத்தை வாங்குவதில் தற்போது முனைப்பு காட்டி வருகின்றன. இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியும் தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய வங்கிகள் ஏன் தங்கத்தை வாங்க வேண்டும்?

டாலர் மதிப்பில் காணப்படும் நிலையற்ற தன்மை, கச்சா எண்ணெய் விலையில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள், பொருளாதார மந்த நிலை குறித்த அச்சம் ஆகியன நிலையான ஒரு பொருளாதார மதிப்பின் மீது மத்திய வங்கிகளின் முதலீட்டுக் கையிருப்பைக் குவிக்க வைக்கின்றன. நிலையான பொருளாதார மதிப்பு உள்ளதாக எப்போதும் கருதப்படுவது தங்கம்தானே. இதனால்தான் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதில் போட்டிப் போட்டுக் கொண்டு, வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கின்றன.

கடந்த பத்தாண்டுகள் வரை தங்கம் வாங்குவதைத் தவிர்த்து வந்த உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 2022 இல் 1082 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ என்பது உங்களுக்குத் தெரியும்தானே. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 2022 இல் வாங்கிய தங்கமானது, அதற்கு முந்தைய ஆண்டை விட 100 சதவீதம் அதிகம் என்பதிலிருந்தே தங்கம் எந்த அளவுக்கு வாங்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

சீனாவின் மத்திய வங்கியான பீப்புள்ஸ் பேங்க் ஆப் சைனா 2022 இல் 62 டன் அளவுக்கும், 2023 இல் 225 டன் அளவுக்கும் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறது. 2024 இல் தற்போது வரை 27 டன் வரை தங்கத்தை வாங்கியுள்ளது.

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 2022 இல் 34 டன்னும், 2023 இல் 16 டன்னும், 2024 இல் தற்போது வரை 19 டன்னும் தங்கத்தை வாங்கியுள்ளது.

ஆகவே உலக நாடுகள் ஒவ்வொன்றின் மத்திய வங்கிகளே தங்கத்தை வாங்கிக் குவிக்கும் போது பொதுமக்களாகிய நீங்களும் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வதில் தவறு ஏதுமில்லை.

அப்படி வாங்கும் போது உங்களிடம் நகையாக இருக்கும் தங்கம் அதாவது பிசிக்கல் கோல்ட் 50 பவுன் வரை இருக்கலாம். அதற்கு மேலான தங்கத்தை தங்கப் பத்திரங்களாகவோ, மின்னணு தங்கமாகவோ (டிஜிட்டல் கோல்ட்), இ.டி.எப். ஆகவோ வாங்கி வைத்துக் கொள்வதுதான் நல்லது. ஏனென்றால் அதில்தான் செய்கூலி, சேதாரம் இல்லை. திருடு போகுமோ, காணாமல் போகுமோ என்ற அச்சமும் இல்லை. அப்படி வாங்கும் தங்கத்தால் பணமானது முடக்கமில்லாமல் பொருளாதார சுழற்சிக்கும் உதவுவதாக இருக்கும்.

என்ன நீங்கள் இப்போது தங்கம் வாங்க தயார்தானே? தற்போது உங்களது தங்க கையிருப்பைப் பொருத்து, நீங்கள் எந்த வடிவில் தங்கம் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டு, இப்போதே தங்கம் வாங்க புறப்படுங்கள்!

*****

Tuesday 14 May 2024

பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்கள்!

பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்கள்!

பாதுகாப்பான முதலீடு திட்டங்களுக்கு அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகள் தரும் பின்வரும் திட்டங்களைப் பரிசீலிக்கலாம்.

1. ஐந்தாண்டு நிரந்தர வைப்புத் திட்டம் :

வங்கிகளில் ஐந்தாண்டு நிரந்தர வைப்புத் திட்டத்திற்கு 6.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

அதுவே, அஞ்சலகத்தில் 7.5 சதவீத வட்டி வழங்கப்படுவதால் ஐந்தாண்டு நிரந்தர வைப்புத் திட்டத்தை வங்கிகளில் தொடங்குவதை விட அஞ்சலகங்களில் தொடங்குவது தற்போது சிறப்பாகும்.

2. பொது சேமநல நிதி (பப்ளிக் பிராவிடன்ட் பண்ட் – பி.பி.எப்.) :

வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் இதற்கான கணக்கைத் துவங்கலாம். தற்போது இத்திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது 15 ஆண்டு காலத் திட்டமாகும். ஓராண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஒன்றரை லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

3. செல்வமகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரிதி அக்கௌண்ட் – எஸ்.எஸ்.ஏ.) :

பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இக்கணக்கைத் தொடங்க முடியும். தற்போது இத்திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஓராண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஒன்றரை லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதே போல ஆண் குழந்தைகளுக்கும் செல்வமகன் சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கலாம்.

4. தேசிய சேமிப்பு பத்திரம் (நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிபிகேட்) :

ஐந்தாண்டு முதிர்வு காலம் கொண்ட இத்திட்டத்திற்கு 7.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ஆயிரம். அதற்கு மேல் 100 இன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

5. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (சீனியர் சிட்டிசன் சேவிங்க்ஸ் ஸ்கீம் – எஸ்.சி.எஸ்.எஸ்) :

ஐந்து ஆண்டு கால முதிர்வு கொண்ட இந்த அஞ்சலகத் திட்டத்தில் மூத்த குடிமக்கள் சேர்ந்து பயன் பெறலாம். இதற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீடு ஆயிரம் ரூபாய், அதிகபட்ச முதலீடு முப்பது லட்ச ரூபாயாகும். கணவன், மனைவி தம்பதி சகிதமாகக் கணக்குத் தொடங்கினால் ஆறுபது லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். வட்டி வருமானத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சேமிப்புக் கணக்கில் பெற்றுக் கொள்ள முடியும்.

மேற்காணும் அரசு சார்ந்த பாதுகாப்பான இம்முதலீட்டுத் திட்டங்களில் உங்களது தேவைக்கேற்ப கணக்குத் தொடங்கிப் பயன்பெறவும்.

*****

Monday 13 May 2024

DDO CODE ஐக் கண்டறிவது எப்படி?

DDO CODE ஐக் கண்டறிவது எப்படி?

உங்கள் PAYSLIP இன் கீழே உள்ள TOKEN NO மூலமாக DDO Code ஐக் கண்டறியலாம்.

அதில் உள்ள முதல் எட்டு இலக்கம் தான் DDO CODE.

அதாவது, TOKEN NO இல் உள்ள முதல் 4 இலக்கம் உங்கள் Treasury Code, அடுத்த 4 இலக்கம் Pay Drawing Authority DDO No ஆகும்.

*****

மாறுதல் விண்ணப்பம் – 2024 : இணைய வழியில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்!

மாறுதல் விண்ணப்பம் – 2024 : இணைய வழியில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்!

பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24, 2024 முதல் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மே 13 - 17 வரை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.

EMISல் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் தவிர ஏனைய விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்ய வேண்டும்.

அதற்கு எமிஸ் இணையதளத்தில் செல்ல வேண்டிய முறைகளும் வழிமுறைகளும் :

profile :

Staff Transfer Application :

Transfer Application :

கலந்தாய்வு (தாங்கள் கலந்துகொள்ள இருக்கும் கலந்தாய்வுகளை தெரிவு செய்யவும்)

ஆசிரியரின் அடையாள எண் (EMIS ID No.) :

XXXXXXXX

ஆசிரியரின் பெயர் :

பாலினம் :

கைபேசி எண் :

தற்போது வகிக்கும் பதவியின் பெயர் :

எந்த பாடம் எடுப்பதற்காக நியமிக்கப்பட்டவர் :

பிறந்தநாள் :

தற்போது பணிபுரியும் பள்ளியின் UDISE No. :

ஆசிரியராக முதன் முதலாக பணியில் சேர்ந்த நாள் :

தற்போது பணிபுரியும் பள்ளியின் பெயர் : (முகவரி, மாவட்டம், அஞ்சல் எண்) மற்றும் பள்ளி நிர்வாகம்

IFHRMS :

DDO Code :

தற்போதைய பதவியில் முதன் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாள் :

ஆசிரியரின் முகவரி :

தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்ற நாள் :

சிறப்பு முன்னுரிமை : பணியின் போது இறந்த இராணுவ வீரரின் மனைவி / கணவர்

ஆம் / இல்லை

தற்போது பணிபுரியும் ஒன்றியத்தில் பணியேற்ற நாள் :

முதன் முதலில் பணியில் சேர்ந்த ஒன்றியம் :

முதன் முதலில் பணியில் சேர்ந்த பதவி :

இப்பள்ளிக்கு மாறுதல் பெற்ற வகை :

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியரின் முன்னுரிமைப் பட்டியல்/ பேணல் தாய் ஒன்றியத்தில் பராமரிக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதா ?

ஆம் / இல்லை

குறிப்பு :

முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முதல் கட்ட ஒப்புதலுக்காக ஒப்படைக்க வேண்டும். தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை மீண்டும் நகல் எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று BEO / CEO இடம் இரண்டையும், அதாவது,

1. விண்ணப்ப நகல் கையொப்பத்துடன்,

2. தலைமை ஆசிரியரால் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்கப்பட விண்ணப்ப நகல்  ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும்.

தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர் தலைமை ஆசிரியராக இருப்பின் முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு BEO / DEO(S) / CEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் இதற்கான இணைய இணைப்புகளுக்குக் கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.

Transfer Application Link :

 https://emis.tnschools.gov.in/staff/teacher-transfer

Mutual Transfer Application Link :

 https://emis.tnschools.gov.in/staff/mutualtransfer-application

Unit Transfer Application :

 https://emis.tnschools.gov.in/staff/unit-transfer

*****

ஐ.ஐ.எம். பற்றித் தெரிந்து கொள்வோமா?

ஐ.ஐ.எம். பற்றித் தெரிந்து கொள்வோமா?

ஐ.ஐ.எம். (IIM) என்பது Indian Institute of Management என்பதன் சுருக்கமாகும். ஐ.ஐ.எம். இந்தியாவில் மேலாண்மைக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆகும். எம்.பி.ஏ. படிப்பதற்கான தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக ஐ.ஐ.எம்கள் கருதப்படுகின்றன.

இந்தியாவில் 21 இடங்களில் ஐ.ஐ.எம்கள் உள்ளன. அதில் முதன்மையானது அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். இது 1961 இல் டாக்டர் விக்ரம் சாராபாயால் துவங்கப்பட்டது. இதுவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆகும். அமெரிக்காவின் ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் மற்றும் போர்ட் பவுன்டேஷன் பங்களிப்பால் உருவான நிறுவனம் இது.

அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். கட்டுமானத்தை அமைத்தவர் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டிசைன் நிறுவனத்தைச் சேர்ந்த லூயிஸ்கான்.

ஐ.ஐ.எம்., அகமதாபாத்தில் படித்தவர்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 34 லட்சமும், அதிகபட்சமாக 1.46 கோடியும் சம்பளமாகக் கிடைக்கிறது. ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் படித்த பலர் இவ்வளவு வருமானம் தரும் வேலையையும் உதறி விட்டு சொந்தத் தொழில் தொடங்க போய் விடுகிறார்கள். அந்த அளவுக்கு தன்னம்பிக்கையைத் தரும் விதத்தில் ஐ.ஐ.எம்., அகமதாபாத்தில் படிக்கும் மேலாண்மைப் படிப்பு அமைகிறது.

ஐ.ஐ.எம்மில் சேர்வதற்கு CAT எனப்படும் Common Admission Test எழுத வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை அல்லது ஆகஸ்டில் வெளியாகும். இத்தேர்வு 120 நிமிடங்கள் நடக்கும். 66 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தவிர பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண் 10, ப்ளஸ்டூ மதிப்பெண்களுக்கு அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண் 10, இளநிலை பட்டபடிப்பு மதிப்பெண்களுக்கு அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண் 10, 3 ஆண்டு பணி அனுபவத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 5 ஆக 35 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்களாக வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பில் 90 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் முழு வெயிட்டேஜ் மதிப்பெண்ணான 10 மதிப்பெண்களையும் பெறலாம். அதே போல பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல், வணிகவியல் பிரிவு என்றால் 90 சதவீத மதிப்பெண்களும், கலைப்பிரிவு என்றால் 85 சதவீத மதிப்பெண்களும் பெற்றால் முழு வெயிட்டேஜ் மதிப்பெண்ணான 10 மதிப்பெண்களையும் பெறலாம். இளநிலைப் படிப்பில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் முழு வெயிட்டேஜ் மதிப்பெண்ணான 10 மதிப்பெண்களைப் பெறலாம். இச்சதவீதங்களுக்குக் குறைந்தால் அதற்கேற்ப குறைந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இத்தேர்வை ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் எழுதுகின்றனர். நாடு முழுவதும் இத்தேர்வுக்காக 150 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம்களில் படிப்பதற்காக உள்ள மொத்த இடங்கள் 5500.

இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனங்களாகக் கருதப்படும் ஐ.ஐ.எம்களில், மதிப்பு வாய்ந்த படிப்பாகக் கருதப்படும் எம்.பி.ஏ. படிப்பைப் படிக்க இப்போதிலிருந்தே CAT நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி விட்டீர்கள்தானே?

*****