Saturday 11 May 2024

வருமான வரிக் கழிவில் வீட்டுக்கடன் எந்த அளவுக்கு உதவும்?

வருமான வரிக் கழிவில் வீட்டுக்கடன் எந்த அளவுக்கு உதவும்?

பழைய வருமான வரி முறையைத் தேர்வு செய்பவர்களுக்கு வீட்டுக்கடன் வரிக் கழிவுகளைப் பெற்றுத் தரும். ஆனால் வருமான வரிக் கழிவுக்காக வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டுவது சரியான முடிவாக இருக்காது. அதே நேரத்தில் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் பழைய வருமான வரி முறையைத் தேர்வு செய்து அத்துடன் 80சி மூலமாகக் கிடைக்கும் ஒன்றரை லட்ச ரூபாய் வரிச் சலுகைகளையும் பெற முடியும்.

பழைய வருமான வரி முறையில் வீட்டுக்கடன் கழிவுகளைப் பெற்றுத் தருகிறது என்றாலும், புதிய வருமான வரி முறையில் ஐந்து சதவீதம், பத்து சதவீதம், பதினைந்து சதவீதம், இருபது சதவீதம் எனப் பல வரி வரம்புகள் இருக்கின்றன. இது பழைய வருமான வரி முறையில் ஐந்து சதவீதம், இருபது சதவீதம், முப்பது சதவீதம் என்கிற வகையிலான வரி வரம்புகளாக இருக்கின்றன.

புதிய வருமான வரி முறையில் ஐந்து ஐந்து சதவீதமாக அதிகரிக்கும் வரி வரம்பானது பழைய வருமான வரி முறையில் பத்து சதவீதம், பதினைந்து சதவீதமாக அதிகரித்துக் கொண்டு போவதை நீங்களே காணலாம். இதனால்தான் புதிய வருமான வரி முறையானது பழைய வருமான வரி முறையை விட கவர்ச்சிகரமாக உள்ளது.

அத்துடன் புதிய வருமான வரி முறையில் வரிச்சலுகை பெறுவதற்கான எந்த விதமான சான்றுகளையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. பழைய வருமான வரி முறையில் வரிச்சலுகை பெறும் ஒவ்வொன்றுக்கும் உரிய சான்றுகளை நீங்கள் சமர்ப்பித்தாக வேண்டும்.

பழைய வருமான வரி முறையில் படிவத்தைத் தயார் செய்வதை விட ,வெகு சுலபமாக நீங்கள் புதிய வருமான வரி முறையில் படிவத்தைத் தயார் செய்து விடலாம். இது மற்றொரு அனுகூலம்.

உங்களது ஆண்டு வருமானம் ஏழரை லட்சத்தைத் தாண்டும் போது பழைய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுப்பதை விட, புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாக சில ஆயிரங்களையாவது நீங்கள் மிச்சம் செய்ய முடியும். இதுவே பழைய வருமான வரி முறை என்றால் நீங்கள் வீட்டுக்கடன் சலுகை, சேம நல நிதி, குழந்தைகளின் கல்விக் கட்டணம், ஆயுள் காப்பீடு, பரஸ்பர நிதி போன்றவற்றைக் காட்டியே வரிச்சலுகைகளைப் பெற முடியும்.

எந்த வித நீண்ட கால முதலீட்டையும் செய்யாமல் புதிய வருமான வரி முறையில் பழைய வருமான வரி முறையை விட வரிச் சலுகைகளை நீங்கள் பெறலாம். ஆனால் நீண்ட கால முதலீடுகள் செய்வது முக்கியமானது. அதை வரிச்சலுகைக்காகச் செய்யாமல் உங்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே செய்வதே உசிதமானது.

ஒரு வீடு மிக மிக அவசியம் என்ற நிலையில் இருப்பவர்கள் வீட்டுக்கடன் மூலமாக வீட்டை வாங்கி அதன் மூலமாக பழைய வருமான வரி முறையைத் தேர்வு செய்து வரிச் சலுகைகளைப் பெறலாம். மற்றவர்கள் புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்வதே தற்போதைய நிலையில் ஏற்றதாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் வீட்டுக்கடன் மூலமாக வீட்டை வாங்குவதை விட, வாடகை வீடு உங்கள் பணத்தை மிச்சம் செய்து கொடுக்கும். உதாரணமாக நீங்கள் வீட்டுக்கடனுக்காக மாதந்தோறும் தவணைத்தொகையாக இருபதாயிரம் கட்டுவதாக வைத்துக் கொண்டால், பத்தாயிரம் வாடகையிலேயே நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டைப் பிடித்துக் கொள்ளலாம். இதனால் மாதா மாதம் உங்களுக்குப் பத்தாயிரம் மிச்சமாகும். இந்தப் பத்தாயிரத்தை மாதந்தோறும் நல்ல வளர்ச்சியுள்ள முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து கொண்டே வந்தால் இருபது ஆண்டுகளில் அந்தத் தொகையை எடுத்து எவ்வித கடனோ, கடனுக்கு வட்டியோ இல்லாமல் உங்கள் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இப்போது நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வீட்டுக்கடனுக்காகப் பழைய வருமான வரி முறையைத் தேர்வு செய்யப் போகிறீர்களா? அல்லது புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்து பணத்தை முறையாக முதலீடு செய்து சில பத்து வருடங்களில் சொந்த வீட்டைச் சுலபமாக வாங்கிக் கொள்ளப் போகிறீர்களா?

இது குறித்த சந்தேகங்கள் இருப்பின் உங்கள் சந்தேகங்களைக் கருத்துப் பெட்டியில் (கமென்ட் பாக்ஸ்) நீங்கள் கேட்கலாம். மேலும் உங்கள் கருத்துகளையும் பதிவிடலாம்.

நன்றி.

வணக்கம்.

*****

No comments:

Post a Comment