Showing posts with label ஓய்வு. Show all posts
Showing posts with label ஓய்வு. Show all posts

Saturday, 23 November 2024

உழைப்புக்கு ஓய்வு கொடுக்க முடியுமா? - ஊக்கமூட்டும் உன்னத கதை!

உழைப்புக்கு ஓய்வு கொடுக்க முடியுமா?

-         ஊக்கமூட்டும் உன்னத கதை!

நீங்களே சொல்லுங்கள்? உழைப்புக்கு ஓய்வு கொடுக்க முடியுமா? அப்படி ஓய்வு கொடுத்தால் என்னவாகும்? உழைப்பாளிகள் உழைப்புக்கு ஓய்வு கொடுக்காமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருப்பதால்தான் உலகில் அனைவரும் அனைத்து வசதிகளையும் பெற்று வளமாக வாழ்கிறோம்.

முதுமையிலும் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உழைத்துச் சாதனை படைத்தவர்கள் பலர். அவர்களுள் அமெரிக்க தொழிலதிபரான ராக்பெல்லரும் ஒருவர். ஒரு முறை அவர் விமானத்தில் பயணித்துக்  கொண்டிருந்த போது முதுமையிலும் அவர் கடுமையாக உழைப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் ஓர் இளைஞர்.

நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய இந்த வயதிலும் இவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டுமா என்று அந்த இளைஞர் ராக்பெல்லரைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு ராக்பெல்லர் சிரித்துக் கொண்டே ஒரு கேள்வி கேட்டார். இந்த விமானம் இப்போது வானத்தில் பறக்கிறது. அதற்காக இந்த விமானத்தின் எந்திரங்களை நிறுத்தி விடலாமா? அப்படி நிறுத்தினால் என்னவாகும்? என்று கேட்டார்.

அந்த இளைஞர் யோசித்தார். பெரும் விபத்து நேரும் என்றார் அந்த இளைஞர்.

இப்போது உங்களுக்குப் புரிகிறதா என்று கேட்ட ராக்பெல்லர் மேலும் கூறினார். வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டி இருக்கிறது. உயரத்தைத் தொட்டு விட்டோம் என்று நினைத்து உழைப்பதை நிறுத்தி விட்டால் தொய்வு ஏற்பட்டு விடும். அதுவரை பெற்றுள்ள உயரத்திலிருந்து தடுமாறி விழ நேரிடும். உழைப்பு என்பது வருமானத்துக்கு மட்டுமல்ல. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காகவும்தான் என்றுவிளக்கம் கூறினார்.

உண்மைதானே. வாழ்நாள் முழுவதும் உழைக்க தயாராக இருப்பவர்கள் ஒரு போதும் முதுமையடைவதில்லை. அவர்கள் எப்போதும் இளமையாக உற்சாகமாக இருக்கிறார்கள். ஆகவே உழைப்பை ஒரு போதும் நிறுத்தாதீர்கள்.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

*****