Sunday, 26 April 2026

மாற்றத்தின் வித்து – ஒரு பட்டாம்பூச்சி விளைவு!

மாற்றத்தின் வித்து – ஒரு பட்டாம்பூச்சி விளைவு!

உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் உடனே ஒரு போர்க்கொடி தூக்க வேண்டும் அல்லது பில்லியன் டாலர் செக் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.

ஒரு சின்ன ஸ்பார்க் போதும். அது உங்கள் உள்ளுக்குள் ஒரு மெல்லிய குரலில் பேசும், ஏன் இதை இன்னும் கொஞ்சம் நல்லதாக மாற்றக்கூடாது? என்று.

இன்று உலகெங்கும் சாதாரண மனிதர்கள் அசாதாரணமான காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். புரட்சி என்பது எப்போதும் கர்ஜனை செய்வதில்லை. சில நேரங்களில் அது ஒரு மெல்லிய கிசுகிசுப்பாகத்தான் தொடங்குகிறது.

ஸ்கூல் கேன்டீனில் சாப்பாடு போடும் ஒரு பெண்மணி, அந்த இடத்தை ஒரு சின்ன மியூசிக் ஸ்டேஜ் ஆக மாற்றி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருகிறார்.

நீங்கள் உணவு பரிமாறும் போது பூக்கும் புன்முறுவல் சாப்பாட்டை இன்னும் அதி உன்னத ருசி கொண்டதாக ஆக்கும்.

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவர், இன்று அதே கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் காவலராக மாறியிருக்கிறார்.

நீங்கள் நடும் ஒரு மரம் நாளை ஆயிரம் பறவைகளுக்கு வீடாக மாறும். வெயிலுக்காக நிழலில் ஒதுங்கும் எத்தனையோ மனிதர்களுக்குக் குளுமையைத் தரும்.

அசாதாரண மாற்றங்களைச் செய்த யாரும் சூப்பர் மேன் டிரஸ் போட்டு வரவில்லை. தங்கள் வேலையைச் செய்யும் விதத்தை மாற்றிக்கொண்டார்கள், அவ்வளவுதான்!

நீங்களும் அப்படி உங்கள் மனதில் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்து கொண்டால், ஓர் அசாதாரண மாற்றம் இந்த உலகில் உருவாகும்.

ரிமோட் கிராமங்களில் வெளிச்சம் கொண்டு வரும் பாட்டிகள் ஒரு பக்கம் என்றால், குப்பையாக வீசப்படும் பிளாஸ்டிக் மலைகளில் பிரம்மாண்டமான கலைப் படைப்புகளைப் பார்க்கும் கலைஞர்கள் மறுபக்கம்.

வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே என்று நிரூபிக்கும் இளைய தலைமுறையினர். இவர்கள் எல்லாரும் உலகத்தை ரீஇமேஜின் செய்கிறார்கள்.

ஒரு மொட்டை மாடித் தோட்டம் அமைத்து தேனீக்களைக் காப்பாற்றுவதோ அல்லது ஒரு சின்ன அன்பான வார்த்தையைத் தொடங்கி வைத்து அது ஆயிரம் பேரைத் தொடச் செய்வதோ, அது எதுவாக இருந்தாலும் அது ஒரு ரிப்பில் எபெக்ட். தண்ணீரில் ஒரு கல்லைப் போட்டால், அது எப்படி வளையங்களாகப் பரவுகிறதோ, அப்படித்தான் மாற்றமும்.

ஒரு சின்ன நல்ல விசயம், மிகப்பெரிய நல்ல விசயத்திற்கான வித்து. நம் தலைமுறைக்கான சொத்து.

நாம் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி, ஒரு தனி மனிதனால் என்ன செய்ய முடியும்? என்பதல்ல.

நாம் கேட்க வேண்டிய சரியான கேள்வி, நான் முதலில் என்ன செய்யப் போகிறேன்? என்பதுதான்.

மாற்றம் என்பது ஒரு பெரிய சுவிட்ச் அல்ல. அது ஒரு சின்ன விதையைப் போடுவது போன்றது. இன்று ஒரு விதையைப் போடுங்கள், நாளை அது ஒரு காடாக மாறலாம்.

*****

இயக்குநர் ஷங்கர் வில்லனா?

இயக்குநர் ஷங்கர் வில்லனா?

ரஜினி சாரை வைத்துப் படம் எடுப்பதை விட, அந்தப் படத்திற்கு இயக்குநர் மற்றும் வில்லனைத் தேடும் படலம் தான் சுவாரசியமான திரைக்கதையாக இருக்கிறது. சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு அத்தனை திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் அஸ்வத் மாரிமுத்து பக்கம் வண்டி திரும்பியிருக்கிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், ஒருவேளை சிபி சக்கரவர்த்தி இயக்கினால், இயக்குநர் ஷங்கர் வில்லனாக நடிப்பாராம்! பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வில்லத்தனம் செய்வாரோ என்னவோ? சிம்ரன், ஷோபனா, பாசில் ஜோசப், சிறப்புத் தோற்றத்தில் கமல் என ஒரு பெரிய மல்டி ஸ்டாரர் பட்டாளமே அணிவகுக்கிறது. கடைசியில் யார் இயக்குகிறார்கள் என்பது காலத்திற்கே வெளிச்சம்.

நடிகர் சூரி இப்போது முழுநேரக் கதாநாயகன் ஆகிவிட்டார். அவர் நடிக்கும் புதிய படத்திற்கு மண்டாடி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மண்டாடி என்றால் ஏதோ மண்டையில் அடிப்பது என்று நினைத்துவிடாதீர்கள். நிச்சயமாகத் திரையரங்கில் அது நடக்காது என நம்புவோம். கடல் அலை, காற்றின் திசை ஆகியவற்றை அறிந்து மீன்பிடித் தொழிலை வழிநடத்தும் நிபுணரைத்தான் அப்படி அழைப்பார்களாம். அதாவது, ஜி.பி.எஸ் கருவி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் இருந்த கூகுள் மேப்ஸ் மனிதர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். ராமநாதபுரம் வெயிலில் கஷ்டப்பட்டுப் படமாக்கியிருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தில் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் துல்லியமாக இருக்கிறதாம். மீன் கிடைக்குதோ இல்லையோ, ஹிட் கிடைக்குதா என்று பார்ப்போம்.

சினிமா உலகில் ஒரு நடிகை பிசியாக நடிப்பதைக் கண்டாலே, வீட்டில் இருப்போர் சரி, போதும், ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைப்போம், என்று கிளம்பிவிடுவது வழக்கம். 30 வயதான சம்யுக்தா மேனனுக்கும் இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அவர் சுயம்பு உள்ளிட்ட படங்களில் பிசியாக இருந்தாலும், குடும்பத்தினர் ரகசியமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்களாம். அவரோ, என் கவனம் முழுவதும் நடிப்பில்தான், என்று வழக்கமான டயலாக்கைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் ஸ்டன்னிங் புகைப்படங்களைப் பார்த்தால், ரசிகர்களின் கவனம் முழுவதும் வேறு பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ராக்கா படத்தில், அவர் மூன்று வேடங்களில் நடிக்கிறாராம்.

1. போலீஸ்.

2. ராட்சசன்.

3. அப்பா.

இதில் எது ராட்சசன், எது அப்பா என்பது படம் பார்த்தால்தான் தெரியும்.

தீபிகா படுகோனுக்கு பாலிவுட்டே அதிரும் அளவுக்குச் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ராஷ்மிகா முதல்முறையாக வில்லியாக நடிக்கிறாராம். படத்தில் லாஜிக் இருக்குமோ இல்லையோ, பட்ஜெட்டும் சம்பளமும் நிச்சயமாகப் பான் இந்தியா அளவில் மிரட்டலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உலகநாயகனின் புதல்வி ஸ்ருதிஹாசன் ஒரு ஆன்மிக அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஏதோ ஒரு சின்ன வாராஹி அம்மன் கோவிலுக்குப் போனாராம். அங்கே வி.ஐ.பி தரிசனம் இல்லை, டொனேஷன் தொல்லை இல்லை. கடவுளுக்கே ஆச்சரியமாக இருந்திருக்கும்! நாம மட்டும் கடவுளைத் தேடல, கடவுளும் நம்மளத் தேடுறாரு, என்று ஒரு தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார். அந்தத் தரிசனத்திற்குப் பிறகு அவருக்குப் பயம் போய்த் தெளிவு கிடைத்துவிட்டதாம். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகிறது. ஸ்ருதிஹாசன் பாடிய சைக்கோ பாடல்களைக் கேட்ட ரசிகர்களுக்கும் அந்தத் தெளிவு கிடைத்தால் சரிதான்! அப்பா பக்கா நாத்திகர். மகள் பக்கா ஆத்திகர்.

*****

Saturday, 25 April 2026

டைம் பாஸ் செய்திகள் – 26.04.2026

டைம் பாஸ் செய்திகள் – 26.04.2026

விஷ்ணு எடவன் என்றோர் இளைஞர். லோகேஷ் கனகராஜின் ஸ்கூலில் படித்தவராம். நயன்தாரா – கவின் நடிக்கும் ஹலோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் குரலில் ஒரு பாட்டை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். கன்னக்குழியா புதைகுழியா? என்று அவர் பாட, நெட்டிசன்களோ கன்னக்குழி ஓகே, ஆனா அது புதைகுழி ஆகாம இருந்தா சரி, என்று கமெண்ட் அடிக்கிறார்கள். நயன் - கவின் கெமிஸ்ட்ரியை விட, இந்தப் படத்தில் இருக்கும் 7 ஸ்க்ரீன், ரவுடி பிக்சர்ஸ் எனத் தயாரிப்பு நிறுவனங்களின் லிஸ்ட்தான் நீளமாக இருக்கிறது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சிந்து வாசுதேவன் என்றொரு பாடகி இப்போது தமிழுக்கு வந்திருக்கிறார். 15 மொழிகளில் பாடுவாராம். பார்க்க அச்சு அசலாக நித்யா மேனன் போலவே இருக்கிறார். நித்யா மேனனுக்கே இது தெரியுமா என்று தெரியவில்லை. ஏ.ஆர்.ரகுமான் மேல் தீராத காதல் கொண்ட இவர், டி. இமான் இசையில் ஒரு மெலடி பாடிவிட்டாராம். இயக்குநர்கள் இவரைப் பார்த்ததும் பாட வந்தது இருக்கட்டும், ஹீரோயின் ஆகிறீர்களா? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அமெரிக்காவிலிருந்து பாட்டுப் பாட வந்தவரை கால்ஷீட் கேட்டு பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிரசாந்த் நீல் என்றால் சும்மாவா? திரையில் எதையாவது கறுப்பு மையால் அடித்து, அதில் ஒரு ஹீரோவை மாஸாகக் காட்டுவதுதான் அவர் ஸ்டைல். என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மே 20 இல் ஒரு கிளிம்ப்ஸ், அதாவது படத்தில் ஒன்றுமே புரியாத ஒரு பத்து செகண்ட் காட்சி வரப்போகிறதாம். 2027இல்தான் படம் வருமாம். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை ரசிகர்கள் அந்தப் போஸ்டரில் இருக்கும் என்.டி.ஆரின் தாடியை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

உப்பு புளி காரம் என்று ருசியாகத் தொடர் எடுத்தவர்கள், அடுத்து பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று குடும்ப உறவுகளைப் பிழிய வருகிறார்கள். போஸ் வெங்கட் இதில் ஒரு டெக்ஸ்டைல் ஷோரூம் ஓனர். வீட்டில் எப்போதும் ஒரு கட்டுப்பாடான முகத்துடன் அலைவாராம். மே மாதம் ஓடிடிஇல் இது ரிலீஸ் ஆகிறது. நான்கு உடன்பிறந்தவர்களின் கதையாம். சொந்த அண்ணன் தம்பிகளுடன் சண்டை போடவே நேரம் இல்லாத நமக்கு, அடுத்த வீட்டுச் சண்டையைப் பார்க்க நேரம் இருக்கத்தான் செய்கிறது.

*****

சந்தோஷமாக இருப்பது எப்படி?

சந்தோஷமாக இருப்பது எப்படி?

சந்தோஷம் என்பது ஒரு தோட்டம் போன்றது. சரியான உரம், தண்ணீர் இருந்தால் அது தானாக வளரும்.

இதில் ஒரு சுவாரஸ்யமான மேட்டர் என்னவென்றால், உங்கள் மகிழ்ச்சியில் 40 சதவீதம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

அப்படியானால் மீதி எங்கே இருக்கிறது என்கிறீர்களா?  மீதி 60 சதவீதம் மரபணுவும் சூழ்நிலையும் சார்ந்து இருக்கிறது.

60 சதவீதத்தை எதுவும் செய்ய முடியாது. ஆனால், அந்த 40 சதவீதத்தை எப்படி மேனேஜ் செய்ய முடியும். எப்படி என்கிறீர்களா?

மனசும் உடம்பும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். நீங்கள் ஓடத் தொடங்கினால் மூளை என்டார்பின் எனும் குதூகல கெமிக்கல்களை ரிலீஸ் செய்யும். இதற்காக நீங்கள் மாரத்தான் ஓட வேண்டாம். தினமும் வெறும் 20 நிமிடம் டான்ஸ் ஆடினாலோ அல்லது நடையாய் நடந்தாலோ கூட போதும்.

வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு போனஸ் சந்தோஷம் கிடைக்கிறது. நாய் ஒரு ஜட்ஜ்மென்ட் பார்க்காத நண்பன். அது உங்களை வாக்கிங் கூட்டிச் செல்லும், கூடவே உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

சந்தோஷம் என்பது ஒரு மல்டிப்ளையர். தனியாகச் சிரிப்பதை விட நண்பர்களுடன் சிரிப்பது எனர்ஜியை ஏற்றும். தினமும் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்குங்கள். பழைய நண்பருக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அல்லது உறவினருக்கு ஒரு போன். இது உங்கள் மூளைக்கு ஒரு பாசிட்டிவ் பூஸ்ட். நாய் பூனைகளைத் தடவிக் கொடுப்பதும் இந்த லிஸ்ட்டில் சேரும்!

தியானம் என்பது ஏதோ சாமியார்கள் செய்வது மட்டுமல்ல. அது ஒரு சைக்காலஜிக்கல் ட்ரீட்மென்ட். இதற்குப் பல டெக்னிக்குகள் இருக்கின்றன. ஒரு சின்ன டெக்னிக் 5-5-5. அதென்ன என்கிறீர்களா?

5 செகண்ட் மூச்சை இழுங்கள்.

5 செகண்ட் அப்படியே பிடியுங்கள்.

5 செகண்ட் மெதுவாக விடுங்கள்.

இதோடு கொஞ்சம் உங்கள் மீதே உங்களுக்குக் கொஞ்சம் கரிசனத்தைச் சேர்த்துக்கொண்டால் ரிசல்ட் இன்னும் டாப். கஷ்டமான நேரத்தில் உங்கள் நெஞ்சில் கை வைத்து, பரவாயில்லை, பார்த்துக்கலாம், என்று ஒரு நண்பனிடம் பேசுவது போல உங்களிடமே நீங்கள் பேசிக்கொள்ளுங்கள்.

வெறும் ஜாலியாக இருப்பதால் மட்டும் சந்தோஷம் நீடிக்காது. ஒரு நோக்கம்  வேண்டும். தெருவில் கிடக்கும் குப்பையை எடுப்பது அல்லது பக்கத்து வீட்டுப் பெரியவருக்கு உதவி செய்வது போன்ற சின்ன சின்ன மைக்ரோ வாலண்டியரிங் காரியங்கள் உங்கள் மனதுக்கு ஒரு நிறைவைத் தரும்.

சிரிப்பு ஒரு நல்ல ஒர்க் அவுட். ஒரு நிஜமான புன்னகைக்கு 12 தசைகள் வேலை செய்ய வேண்டும். ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 300 முறை சிரிக்கிறது. ஆனால் நாம்? வெறும் 17 முறைதான்!

தினம் 15 நிமிட சிரிப்பு என்பது  10 முதல் 40 கலோரிகளை எரிக்கிறது. ஜிம்முக்குப் போகாமலே உடல் எடையைக் குறைக்க இதோ ஒரு வழி!

சந்தோஷம் என்பது ஒரு திறமை. அதைத் தினமும் பிராக்டிஸ் செய்ய வேண்டும். ஒரு ஜாய் டூல் கிட் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த பாட்டு, மொபைலில் இருக்கும் சில ஜோக் வீடியோக்கள், பழைய போட்டோக்கள். மூட் அவுட் ஆகும்போது இரண்டு நிமிடம் இதைத் திறந்து பார்த்தால் போதும்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலமாகிறது. அதாவது, சிரிப்பு ஒரு மருந்து மட்டுமல்ல, ஒரு கவசமும் கூட!

இன்று நீங்கள் செய்த மூன்று நல்ல விஷயங்கள் என்னென்ன? யோசித்துப் பாருங்கள், சந்தோஷம் தானாக வரும்.

அப்புறம் என்ன? சந்தோசமாக இருங்கள். அதற்கு எதாவது தடையாக இருந்தால் சொல்லுங்கள். அதை எப்படிச் சரி செய்வது என்பதைச் சேர்ந்தே யோசிப்போம்.

*****

Friday, 24 April 2026

லேட் ப்ளூமர்ஸ் – வெற்றிக்கு ஏது எக்ஸ்பயரி டேட்?

லேட் ப்ளூமர்ஸ் – வெற்றிக்கு ஏது எக்ஸ்பயரி டேட்?

வெற்றி என்பது ரயிலைப் பிடிப்பது போன்றது என்கிறார்கள். ஆனால், சிலருக்கு அந்த ரயிலே நாற்பது வயதில்தான் பிளாட்பாரத்துக்கே வருகிறது. முப்பது தாண்டிவிட்டால் லைஃப் முடிந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்கு இதோ சில லேட் ப்ளூமர் கதைகள்.

வேரா வாங் முதலில் ஒரு ஐஸ் ஸ்கேட்டிங் வீராங்கனை. ஒலிம்பிக் கனவு தகர்ந்தது. அடுத்து 20 வருடம் ஒரு பத்திரிகையில் எடிட்டர் வேலை. தன் திருமணத்துக்காக ஒரு நல்ல கவுன் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், 40 வயதில் சொந்தமாக டிசைன் செய்ய ஆரம்பித்தார். இன்று உலகின் காஸ்ட்லி திருமண உடைகள் இவர் பெயரில்தான் விற்கின்றன. இவரது முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் அதிகம்!

மார்த்தா ஸ்டீவார்ட் முதலில் ஒரு மாடல், பிறகு ஸ்டாக் புரோக்கர். 30 வயதில் ஒரு கேட்டரிங் பிசினஸ். ஆனால், 41 வயதில்தான் தன் முதல் சமையல் புத்தகத்தை வெளியிட்டார். அவருடைய டாக்டர் சொன்னாராம், நீங்கள் ஒரு லேட் ப்ளூமர் என்று. அதை ஒரு பாராட்டாக எடுத்துக்கொண்ட மார்த்தா, இன்று பில்லியன் டாலர் மீடியா அதிபர். கனவு காண வயது ஒரு தடையல்ல என்பதற்கு இவர் ஒரு லைப் ஸ்டைல் உதாரணம்.

ஸ்டீவ் கேரல் இருபது வயதில் சின்னச் சின்ன விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். முப்பது வயதில் பெரிய அடையாளம் இல்லை. நாற்பத்து மூன்று வயதில்தான் தி பார்ட்டி இயர் ஓல்டு வர்ஜின் படத்தில் நடித்தார். அப்புறம் தி ஆபீஸ் என்ற படத்தில் நடித்தார். இன்று ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகர். வெயிட்டிங் பீரியட் என்பது வீணான காலம் அல்ல, அது ஒரு பயிற்சிக் காலம்.

ஜூலியா சைல்ட்டின் கதை வித்தியாசமானது மற்றும் ஆச்சரியமானது. ஆச்சரியம் என்னவென்றால், முப்பத்து ஏழு வயது வரை ஜூலியாவுக்கு சமையலே தெரியாது! கணவருடன் பாரிஸ் சென்றபோதுதான் பிரஞ்சு உணவுகள் மேல் காதல் வந்தது. லெ கார்டன் ப்ளூ பள்ளியில் சேர்ந்து ஒன்பது வருடம் மெனக்கெட்டு புத்தகம் எழுதினார். அவர் டிவியில் அறிமுகமானபோது வயது ஐம்பது. அமெரிக்க சமையலறைகளை மாற்றியமைத்த அந்தப் பெரியம்மாவுக்கு சமையல் என்பது ஒரு லேட் பேஷன்.

ஐன்ஸ்டீன், இவரை ஒரு ஜீனியஸ் என்று கொண்டாடுகிறோம். ஆனால், இருபத்தாறு வயது வரை அவருக்கு ஒரு கல்லூரி வேலை கூட கிடைக்கவில்லை. ஒரு பேடன்ட் ஆபீஸில் கிளர்க்காக இருந்தபோதுதான் ரிலேட்டிவிட்டி தியரியை எழுதினார். அதற்காக அவருக்கு 42 வயதில்தான் நோபல் பரிசு கிடைத்தது. கேள்வி கேட்பதை நிறுத்தாதீர்கள். ஒவ்வொரு நாளும் இந்த பிரபஞ்ச ரகசியத்தை கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ள முயலுங்கள், என்றார் அவர்.

உங்களுக்கு இருபத்தி இரண்டு வயதில் வேலை கிடைக்கவில்லையா? முப்பது வயதில் செட்டில் ஆகவில்லையா? கவலைப்படாதீர்கள்.

சில பூக்கள் அதிகாலையில் பூக்கும், சில பூக்கள் அந்தி மாலையில் மலரும். மல்லிகைக்கும் அந்திமந்தாரைக்கும் அதனதன் அழகு உண்டு.

வெற்றிக்குத் தேவை டைமிங் அல்ல, விடாமுயற்சி.

ஐன்ஸ்டீன் முதல் மார்த்தா வரை எல்லோரும் சொல்வது இதைத்தான்.

இது போன்ற கதைகள் நிறைய இருக்கின்றன. காத்திருங்கள்!

*****

தொடையைத் தட்டினால் தேசிய விருது கிடைக்குமா?!

தொடையைத் தட்டினால் தேசிய விருது கிடைக்குமா?!

இசைஞானி இளையராஜா என்பவர் ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு மெலோடி மேனுஃபேக்ச்சரிங் யூனிட். காலையில் குளித்துவிட்டு வரும் வழியில் ஒரு நாற்பது மெட்டுகளை யோசித்துவிட்டு, காபி குடிக்கும் இடைவெளியில் ஒரு முழுப் படத்துக்கும் பின்னணி இசையைக் கோர்த்து முடித்துவிடுவார்.

1986இல் மட்டும் அவர் 58 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்றால், அந்த வருடத்தில் அவர் தூங்கிய நேரத்தை விட, ஆர்மோனியப் பெட்டியைத் தட்டிய நேரம்தான் அதிகம் என்று அடித்துச் சொல்லலாம்.

நிமிடங்களில் மெட்டுப் போடும் இந்த வித்தைக்காரரை, ஒரே ஒரு பாடல் மட்டும் சுமார் எட்டு மணி நேரம் ஸ்டுடியோவில் உட்கார வைத்து பெண்டு நிமிர்த்தியது.

இயக்குநர் மகேந்திரன் அப்போது நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.

சுட்சுவேசன் இதுதான். காலையில் ஹீரோவும் ஹீரோயினும் ஜாகிங் போகிறார்கள்.

இளையராஜாவிடம், இங்கே ஒரு பாட்டு வேணும். ஆனா அது வெறும் பாட்டா இருக்கக் கூடாது, அந்த ஜாகிங் போற உணர்வு மியூசிக்ல வரணும், என்றார் மகேந்திரன்.

ராஜா யோசித்தார். சரி, காலடிச் சத்தத்தையே மெட்டாக்கிடுவோம் என்று முடிவு செய்தார்.

முதலில் ஸ்டுடியோவில் ஒருவரை மைக் முன்னால் நிற்க வைத்து, டேய், ஜாகிங் போற மாதிரி ஓடுடா, என்றார்கள். அவர் ஓடினார். ஆனால் ஸ்பீக்கரில் கேட்ட சத்தம் ஜாகிங் மாதிரி இல்லை; ஏதோ யானை தன் காதுகளைப் படபடவென அடித்துக்கொள்வது போலவோ அல்லது பழைய இரும்புக்கடையில் தகரம் விழுவது போலவோ இருந்தது.

மைக்ரோபோன்கள் மிரண்டன. ராஜாவுக்குத் திருப்தி இல்லை. விதவிதமான தரைகளில், விதவிதமான செருப்புகளைப் போட்டு ஓடிப் பார்த்தார்கள். ஜாகிங் சத்தம் மட்டும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.

எட்டு மணி நேரம் ஓடியாயிற்று.

ஸ்டுடியோவில் இருந்தவர்களுக்குக் கால் வலி வந்ததுதான் மிச்சம்.

கடைசியில் ராஜாவுக்கு ஒரு பொறி தட்டியது.

தபேலா வித்வான் கண்ணையாவை அழைத்தார். கண்ணையா, தபேலாவை அப்புறம் வாசிக்கலாம். மைக் முன்னாடி உட்கார்ந்து உன் ரெண்டு தொடையிலயும் மாத்தி மாத்தித் தட்டு, என்றார்.

கண்ணையா தட்டினார்.

ஸ்பீக்கரில் சத்தம் கேட்டது.

அட! இதுவல்லவா ஜாகிங் சத்தம்!

ஒரு மனிதன் அதிகாலையில் பனி மூட்டத்தில் மெல்ல ஓடி வரும்போது எழும் அந்தச் துல்லியமான ஓசை, ஒரு தபேலா கலைஞனின் தொடையில் ஒளிந்திருந்தது.

அந்தத் தாளக்கட்டை அப்படியே பிடித்துக்கொண்டு, பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடல் உருவானது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், எஸ்.ஜானகியும் தங்கள் குரலால் மேஜிக் செய்தார்கள்.

இன்று கேட்டாலும் அந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த தட்-தட்-தட் சத்தம் நம்மை அறியாமல் நம் கால்களை ஜாகிங் மோடிற்கு மாற்றிவிடும்.

இந்தத் துல்லியமான உழைப்புக்காக அந்தப் பாடலுக்கு சிறந்த ஒலி அமைப்புக்கான தேசிய விருது கிடைத்தது.

தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் மூளையைப் பயன்படுத்தினார்கள். இன்று தொழில்நுட்பம் இருக்கிறது, ஆனால் மூளையை சைலண்ட் மோடில் போட்டுவிட்டார்கள்.

ஒரு மனிதனின் தொடை சத்தம் தேசிய விருது வாங்கும் என்று கண்ணையா அன்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அதுதான் இளையராஜாவின் மேஜிக்.

*****

Tuesday, 21 April 2026

Work Chart for Election - 2026

Work Chart for Election - 2026

ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேலைத் திட்ட ஒழுங்கு வரைபடத்தைக் கீழே காண்க.

*****