Thursday, 30 April 2026

குட்டிச் சாத்தான்களும் மகா புரட்சிகளும்!

குட்டிச் சாத்தான்களும் மகா புரட்சிகளும்!

இதெல்லாம் உனக்கு எதுக்கு?போய் பாடத்தைப் படி – இது நம் ஊர் வீடுகளில் அடிக்கடி கேட்கும் வசனம்.

ஆனால், உலகம் முழுக்க சில சுட்டிகள் இந்தப் பொதுப்புத்தியை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடையாது, ஆனால் சமூக மாற்றத்திற்கான ஸ்டீயரிங் இவர்களிடம்தான் இருக்கிறது.

ஜெரோம் பாஸ்டர் வெள்ளை மாளிகையின் மிக இளவயது ஆலோசகர். இவர் செய்த காரியம் என்ன தெரியுமா? 80 வாரங்கள் தொடர்ந்து வெள்ளை மாளிகை வாசலில் நின்று பருவநிலை மாற்றத்திற்காகப் போராடினார். இன்று ஒபாமா முதல் கிரெட்டா துன்பெர்க் வரை இவரைத் தெரியும். ஒன் மில்லியன் ஆப் யுஎஸ் என்ற அமைப்பு மூலம் இளைஞர்களை ஓட்டுப் போடத் தூண்டுகிறார். புவி வெப்பமடைதல் என்பது ஏதோ தியரி அல்ல, அது நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்ட நிஜம்! அதற்கான முன்னெடுப்புகளை அவர் முன்னெடுக்கிறார்.

லிட்டில் மிஸ் பிளிண்ட் என்று அழைக்கப்படும் மேரி கோபெனிக்கு அப்போது எட்டு வயதுதான். தன் ஊர் குடிநீர் நச்சுத்தன்மையாக இருப்பதை எதிர்த்து அப்போதைய அதிபர் ஒபாமாவுக்குக் கடிதம் எழுதினார். விளைவு? அந்த ஊருக்கு 100 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டது. 7 லட்சம் டாலர் நிதி திரட்டி பல்லாயிரம் வாட்டர் பில்டர்களை வழங்கியிருக்கிறார்.

ஓரியன் ஜீன் என்பவர் டைம் இதழின் கிட் ஆப் தி இயர் விருது பெற்றவர். ஒரு பேச்சுப் போட்டியில் வென்ற 500 டாலரை வைத்து பொம்மைகளைத் தானம் செய்ய ஆரம்பித்தார். இன்று 5 லட்சம் புத்தகங்கள், 1 லட்சம் உணவுகள் என இவர் தொடங்கிய ரேஸ் டூ கைன்ட்னெஸ் ஒரு தேசிய இயக்கமாகவே மாறிவிட்டது. அன்பு என்பதும் ஒரு செயின் ரியாக்சன்தான் என்பதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம்.

ராபி நோவாக். இவரை கிட் பிரசிடென்ட் என்றுதான் உலகுக்குத் தெரியும். இவரது வீடியோவை 49 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். டாம் ஹாங்க்ஸுக்கே டான்ஸ் சொல்லிக்கொடுத்தவர். அரசியல் பேசலாம், ஆனால் மற்றவர் கருத்தைக் கேட்கும் மனப்பக்குவம் வேண்டும், என்கிறார் இந்த 21 வயது இளைஞர்.

மலாலா யூசுப்சாய் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தற்போதும் பெண்கள் கல்விக்காக மலாலா பண்ட் மூலம் போராடிக்கொண்டிருக்கிறார்.

அதேபோல சிரியாவின் போர் அவலங்களை ஏழு வயதிலேயே ட்வீட் மூலம் உலகுக்குச் சொன்னவர் பனா அல்அபெத். போர்க்களத்தில் ஒரு சிறுமியின் குரல் அணுகுண்டை விட வலிமையானது.

இவர்களைப் போல எத்தனை எத்தனை சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளைஞிகள் மகா மாற்றங்களை முன்னெடுத்திருக்கிறார்கள் தெரியுமா?

ரியான் ஹிக்மேன் மூன்று வயதிலேயே ரீசைக்ளிங் கம்பெனி ஆரம்பித்தவர். 1.7 லட்சம் பவுண்டு குப்பைகளைச் சேகரித்து கடலில் சேராமல் தடுத்திருக்கிறார்.

பிரான்சிஸ்கா ட்ரௌட்மேன் நியூ ஆர்லியன்ஸ் நகர கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு கடற்கரை மணலை உருவாக்குகிறார். மணிக்கு 3000 பவுண்டு கண்ணாடி பாட்டில்களை மணலாக்கும் இவரது டெக்னாலஜி, கடற்கரை அரிப்பைத் தடுக்க உதவுகிறது.

இந்தச் சிறுவர்கள், சிறுமிகள் யாரும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கவில்லை. இவர்களிடம் அனுமதி கேட்கும் பழக்கம் கிடையாது. அநீதியைக் கண்டால் மோதும் துணிச்சல் மட்டுமே உண்டு.

வயது என்பது வெறும் நம்பர் தான், உங்கள் மனதுக்குள் இருக்கும் அந்த ஸ்பார்க்தான் நிஜம்.

உலகம் உருண்டை என்பதை விட, உலகம் இளைஞர்கள், இளைஞிகள் கையில் என்பதுதான் இன்றைய லேட்டஸ்ட் ட்ரெண்ட்!

*****

Wednesday, 29 April 2026

வானளாவிய தேனீக்கள் – நியூயார்க் மொட்டை மாடி அதிசயங்கள்!

வானளாவிய தேனீக்கள் – நியூயார்க் மொட்டை மாடி அதிசயங்கள்!

தேனீக்கள் இல்லை என்றால் மனித இனம் சில ஆண்டுகளிலேயே அழிந்துவிடும் என்றார் ஐன்ஸ்டீன்.

அது நிஜமோ இல்லையோ, நாம் சாப்பிடும் தக்காளி, வெள்ளரி முதல் பாதாம் வரை எல்லாவற்றுக்கும் இந்தச் சின்னஞ்சிறு பூச்சிகளின் மகரந்த சேர்க்கைக்கு அதாவது பாலினேஷன் சேவைக்குத் தேனீக்கள் அவசியம்.

இப்போது நியூயார்க் போன்ற கான்கிரீட் காடுகளில் ஒரு சுவாரஸ்யமான புரட்சி நடக்கிறது. அதுதான் ரூப்டாப் பீ கீப்பிங்.

நியூயார்க் மக்கள் உயரமான கட்டிடங்களின் உச்சியில் பல மில்லியன் வேலையாட்களை தட் மீன்ஸ் தேனீக்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள்.

இப்போது நியூயார்க் மொட்டை மாடிகளில் தேனீக்கள் வளர்ப்பது என்பது முடி வளராத மண்டையில் அமேசான் காட்டு மூலிகையால் முடி பல்கி பெருகுவது போலப் பெருகிக் கொண்டிருக்கிறது.

தேன் விற்பது ஒரு பக்கம், சுற்றுச்சூழல் சமநிலை இன்னொரு பக்கம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் மேட்டர் இது.

நியூயார்க்கின் மிகப்பெரிய கண்காட்சி மையமான ஜாவிட்ஸ் சென்டர் உச்சியில் ஏழு ஏக்கர் பரப்பளவில் ஒரு கிரீன் ரூப் இருக்கிறது. அங்கே தேனீக்கள் ஜாலியாக உலவுகின்றன. அந்தத் தேனீக்கள் கொடுக்கும் தேனை வைத்து அந்த மையத்தின் உணவகத்திலேயே ஸ்பெஷல் உணவுகளைத் தயாரிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் பேஷன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. அங்கே தேனீக்கள் பூக்களுக்குப் போயிட்டு வருவது ஒரு பக்கம் என்றால், தேன் மெழுகை வைத்து துணிகளுக்கு இயற்கை சாயம் தயாரிக்கும் முறையை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறார்கள். சயின்ஸும் பேஷனும் கைகோர்க்கும் இடம் இதுதான்!

தரைமட்டத்தில் தேனீ வளர்ப்பதை விட, மொட்டை மாடியில் வளர்ப்பதில் சில டெக்னிக்கல் நன்மைகள் உண்டு. அவையாவன,

முக்கியமாக பூச்சிகளின் தொல்லைகள் குறைவு. எறும்புகள், வண்டுகள் போன்றவை மண்ணில்தான் வாழும். அவ்வளவு உயரத்துக்கு அவை லிஃப்ட் ஏறிப் போகாது!

உயரத்தில் இருக்கும் தேனீக்கள் சுமார் 3 மைல் தூரம் வரை பறந்து சென்று அக்கம் பக்கத்துத் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. இது நிறைய ஏரியாவைக் கவரேஜ் செய்ய உதவுகின்றது.

உயிரியில் நிபுணர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறார்கள். உலகில் 40,000 வகை தேனீக்கள் உள்ளன. தக்காளி வளர பம்பிள் தேனீக்கள் வேண்டும், வெள்ளரிக்கு ஸ்குவாஷ் தேனீக்கள் வேண்டும். வெறும் தேன் தேனீக்கள் மட்டும் போதாது!

அமெரிக்காவுக்குப் போட்டியாக நெதர்லாந்தின் உட்ரெக்ட் நகரில் ஓர் அசத்தல் ஐடியா செய்திருக்கிறார்கள். நகரின் 300க்கும் மேற்பட்ட பஸ் ஸ்டாப் கூரைகளைச் சிறிய காடுகளாக தட் மீன்ஸ் க்ரீன் ரூப்ஸ் ஆக மாற்றியிருக்கிறார்கள். இது தேனீக்களுக்கு ஒரு ஸ்டாப்பிங் போலச் செயல்படுகிறது. மழையை உறிஞ்சிக் கொள்வதோடு, நகரின் வெப்பத்தையும் இது குறைக்கிறது.

தேனீயை ஒரு சின்னப் பூச்சிதானே என்று அலட்சியப்படுத்தாதீர்கள். உங்கள் மொட்டை மாடியில் ஒரு சின்னப் பூந்தொட்டி வைத்தால் கூட அது ஒரு தேனீயின் உயிரைக் காப்பாற்றலாம். இயற்கை என்பது ஒரு பெரிய சங்கிலித் தொடர். அதில் ஒரு கண்ணி அறுந்தாலும் மொத்தச் சங்கிலியும் விழுந்துவிடும்.

நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் மிருகக்காட்சி சாலை முதல் ஹெல்ஸ் கிச்சன் வரை பல இடங்களில் இப்போது தேனீ சரணாலயங்கள் பெருகிவிட்டன. கான்கிரீட் காடு இப்போது நிஜக் காடாக மாற முயற்சி செய்கிறது!

நீங்களும் மாற்ற முயற்சிக்கலாம்! ஒரு பூச்செடி வளர்த்தால் கூட போதும். ஹாய் சொல்ல ஒரு தேனீயாவது வந்து விடும். நீங்கள் ஹலோ சொல்லி அதனோடு உரையாடலாம்.

*****

Tuesday, 28 April 2026

கொஞ்சம் சந்தோஷம் கொடுங்கள் பாஸ்!

கொஞ்சம் சந்தோஷம் கொடுங்கள் பாஸ்!

பள்ளிச் சாப்பாட்டுக்கூடம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது வரிசையில் நிற்பதும், ஏதோ ஒரு குழம்பை ஊற்றிக்கொண்டு போவதும்தான். நம்மூரில் சத்துணவு. ஆனால், அமெரிக்காவின் சில பள்ளிகளில் மதிய உணவு என்பது ஒரு ஜாய் தெரபியாக மாறியிருக்கிறது. சமைப்பவர்கள் வெறும் கரண்டியை மட்டும் பிடிக்கவில்லை, குழந்தைகளின் மனசையும் பிடிக்கிறார்கள்.

வர்ஜீனியா பீச் பள்ளியில் ஸ்டேசி ட்ரூமன் ஒரு வித்தியாசமான மேனேஜர். அவர் சும்மா பழம் கொடுப்பதில்லை. ஒவ்வொரு வாழைப்பழத்தின் தோலிலும் நீ ஒரு சூப்பர் சுட்டி, நீ ஒரு அறிவாளி என்று குட்டி குட்டி ஊக்கமூட்டும் வாசகங்களை எழுதுகிறார்.

விளைவு?

குழந்தைகள் உற்சாகமானது ஒருபுறம், அந்த மெசேஜைப் படிப்பதற்காகவே அடம் பிடிக்காமல் பழங்களைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு மார்க்கர் பேனா இருந்தால் போதும், ஆரோக்கியத்தை ஆசையாக மாற்றிவிடலாம் என்பதற்கு இது ஒரு சிம்பிள் டெக்னிக்.

நியூயார்க்கைச் சேர்ந்த லிண்டா கிப்லர், பள்ளி கேன்டீனை ஒரு மாயாலோகமாக மாற்றுகிறார். இதற்காக அவர் காசு செலவழிப்பதில்லை. பள்ளிக் குப்பையில் வீசப்படும் பழைய அட்டைப் பெட்டிகளை எடுத்து பிரம்மாண்டமான அலங்காரங்களைச் செய்கிறார். வெற்றுச் சுவர்களைப் பார்ப்பது போரடிக்கிறது, என்கிறார் இந்த எனர்ஜி பாட்டி. ஆக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, கற்பனைத் திறனுக்கு வயது கிடையாது, பழைய அட்டைப் பெட்டிகளுக்கும் உயிர் உண்டு!

சவுத் கரோலினாவில் தாரியஸ் மெக்லைன் என்ற ஊழியர் இருக்கிறார். அங்கே குழந்தைகள் சாப்பிட்டு முடித்துவிட்டுத் தட்டுகளைக் கொடுக்க வரிசையில் நிற்கிறார்கள். ஏன் தெரியுமா? ஒவ்வொரு தட்டை வாங்கும்போதும் தாரியஸ் ஒரு குட்டி டான்ஸ் ஆடுவார். யாராவது ஒரு குழந்தை சோகமாக இருந்தால், அவர்களை சிரிக்க வைப்பதே என் வேலை, என்கிறார் அவர். மறுநாளே குழந்தைகளும் அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

விசயம் இதுதான்.

சந்தோஷம் என்பது ஒரு கெமிக்கல் ரியாக்சன். நீங்கள் யாருக்காவது ஒரு சின்ன உதவி செய்யும்போது உங்கள் மூளையில் ஆக்ஸிடாசின் சுரக்கிறது. இது உங்களுக்கும், அந்த உதவி பெற்றவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும்.

இதையெல்லாம் கேள்விப்படும் போது நமக்கும் சில யோசனைகள் தோன்றத்தான் செய்கின்றன.

பஸ் ஸ்டாப் பெஞ்சில் ஒரு சின்ன சாக்லேட்டையும், இன்று உங்கள் நாள் சிறப்பாக அமையட்டும் என்ற குறிப்பையும் வைத்துவிட்டு வந்தால் என்ன?

முகம் பார்க்கும் கண்ணாடிகளில், நீ அழகாக இருக்கிறாய், என்று ஒரு ஸ்டிக்கி நோட் ஒட்டினால் என்ன?

பேருந்தில், ரயிலில் நம்மோடு வருபவர்களுக்கு ஒரு நேர்மையான புன்னகையையும் கையோடு ஒரு நல்ல புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்தால் என்ன?

யார் செய்தார், எவர் செய்தார், ஏன் செய்தார் என்று தெரியாமல் ஒருவருக்குக் கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே, அது ஒரு செயின் ரியாக்சன். அவர்கள் அந்தப் பாசிட்டிவ் எனர்ஜியை இன்னொருவருக்குக் கடத்துவார்கள்.

இந்த உலகம் இயங்குவது பெரிய தலைவர்களால் மட்டுமல்ல, இது போன்ற சின்னச் சின்ன மனிதர்களின் பெரிய மனதால்தான்.

அந்தச் சின்னப் பட்டியலில் இன்று நீங்கள் யாரைச் சேர்க்கப் போகிறீர்கள்? ஒரு நாளைக்கு ஒருவரையாவது சேருங்களேன்.

மகிழ்ச்சியைப் பரிமாறப் பெரிய படிப்பு தேவையில்லை, கொஞ்சம் அன்பு இருந்தால் போதும்!

*****

Monday, 27 April 2026

குப்பைத் தொட்டிக்குள் ஒரு கோகினூர்!

குப்பைத் தொட்டிக்குள் ஒரு கோகினூர்!

உலகத்தில் நாம் உருவாக்கும் குப்பைகளில் 75 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியவை.

ஆனால், நாம் உருப்படியாகச் செய்வது வெறும் 30 சதவீதம்தான்.

மீதி 45 சதவீதம் எங்கே போகிறது?

ஆற்றுக்கும், கடலுக்கும், நம் தலைமுறைக்கும் பாரமாகப் போகிறது.

ஆனால், சில மூளைக்காரக் கலைஞர்கள் அந்தக் குப்பையையே கவிதையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஹலிமா கேசல்ஸ் மற்றும் ஹன்னா டிஸிடெஸ் என்ற இரண்டு கலைஞர்கள். இவர்கள் நதிக்கரையில் ஒதுங்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், உடைந்த ஹேர் கிளிப்புகள், பழைய டப்பாக்களைச் சேகரிக்கிறார்கள். ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் இந்தச் சமூகத்தின் மனப்பான்மையை மாற்ற வேண்டும், என்கிறார்கள். இவர்கள் செய்யும் கலைப்படைப்புகள் வெறும் அலங்கார பொம்மைகள் அல்ல, அவை பிளாஸ்டிக் அரக்கனைப் பற்றிய எச்சரிக்கைப் பலகைகள்!

பிரேசிலிய அமெரிக்க கலைஞரான விக் முனீஸ் செய்தது ஒரு அசாத்தியமான காரியம். ஜார்டிம் கிராமாச்சோ என்பது உலகின் மிகப்பெரிய குப்பை மேடு. அங்கே குப்பை பொறுக்குபவர்களை வைத்தே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர்கள் அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளைக் கொண்டே, அந்த உழைப்பாளிகளின் பிரம்மாண்டமான உருவப்படங்களை உருவாக்கினார். அந்த ஓவியங்களை விற்று வந்த கோடிக்கணக்கான பணம், அந்த ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கே திரும்பச் சென்றது. இதுதான் கலை செய்யும் சமூகப் புரட்சி.

போர்ச்சுகல் நாட்டு கலைஞர் போர்டாலோ தெருக்களில் வீசப்பட்ட பழைய காரின் பம்பர்கள், எரிந்துபோன குப்பைத் தொட்டிகள், தேய்ந்த டயர்களைச் சேகரிக்கிறார். அவற்றைக் கொண்டு பிரம்மாண்டமான விலங்குகளின் சிலைகளைச் செய்கிறார். நம்முடைய சுற்றுச்சூழல் விழிப்புணர்வற்ற பழக்கவழக்கங்கள் எப்படி இயற்கையைச் சிதைக்கின்றன என்பதை இந்தச் சிலைகள் உங்களுக்குப் புரியவைக்கும், என்கிறார் அவர். அதாகப்பட்டது, அவர் உருவாக்குபவை எல்லாம் தூரத்திலிருந்து பார்த்தால் அது ஒரு சிங்கம் அல்லது பறவை. கிட்டத்தில் போய்ப் பார்த்தால் அது நீங்கள் தூக்கி எறிந்த குப்பை!

இந்தக் கலைஞர்கள் குப்பையை ஓவியமாக்கவில்லை, நம்முடைய நுகர்வு கலாச்சாரத்தின் விகாரமான முகத்தை நமக்குக் கண்ணாடி போட்டுக் காட்டுகிறார்கள். இனி ஒரு பிளாஸ்டிக் டப்பாவைத் தூக்கி எறியும் முன் யோசியுங்கள். அது ஒரு சாக்கடைக்குப் போக வேண்டுமா அல்லது ஒரு கலைப்படைப்பாக மாற வேண்டுமா?

குப்பை என்பது வேறொன்றுமில்லை, நாம் எதைக் கலை என்று பார்க்கத் தவறுகிறோமோ அதுதான் குப்பை!

*****

Sunday, 26 April 2026

மாற்றத்தின் வித்து – ஒரு பட்டாம்பூச்சி விளைவு!

மாற்றத்தின் வித்து – ஒரு பட்டாம்பூச்சி விளைவு!

உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் உடனே ஒரு போர்க்கொடி தூக்க வேண்டும் அல்லது பில்லியன் டாலர் செக் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.

ஒரு சின்ன ஸ்பார்க் போதும். அது உங்கள் உள்ளுக்குள் ஒரு மெல்லிய குரலில் பேசும், ஏன் இதை இன்னும் கொஞ்சம் நல்லதாக மாற்றக்கூடாது? என்று.

இன்று உலகெங்கும் சாதாரண மனிதர்கள் அசாதாரணமான காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். புரட்சி என்பது எப்போதும் கர்ஜனை செய்வதில்லை. சில நேரங்களில் அது ஒரு மெல்லிய கிசுகிசுப்பாகத்தான் தொடங்குகிறது.

ஸ்கூல் கேன்டீனில் சாப்பாடு போடும் ஒரு பெண்மணி, அந்த இடத்தை ஒரு சின்ன மியூசிக் ஸ்டேஜ் ஆக மாற்றி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருகிறார்.

நீங்கள் உணவு பரிமாறும் போது பூக்கும் புன்முறுவல் சாப்பாட்டை இன்னும் அதி உன்னத ருசி கொண்டதாக ஆக்கும்.

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவர், இன்று அதே கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் காவலராக மாறியிருக்கிறார்.

நீங்கள் நடும் ஒரு மரம் நாளை ஆயிரம் பறவைகளுக்கு வீடாக மாறும். வெயிலுக்காக நிழலில் ஒதுங்கும் எத்தனையோ மனிதர்களுக்குக் குளுமையைத் தரும்.

அசாதாரண மாற்றங்களைச் செய்த யாரும் சூப்பர் மேன் டிரஸ் போட்டு வரவில்லை. தங்கள் வேலையைச் செய்யும் விதத்தை மாற்றிக்கொண்டார்கள், அவ்வளவுதான்!

நீங்களும் அப்படி உங்கள் மனதில் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்து கொண்டால், ஓர் அசாதாரண மாற்றம் இந்த உலகில் உருவாகும்.

ரிமோட் கிராமங்களில் வெளிச்சம் கொண்டு வரும் பாட்டிகள் ஒரு பக்கம் என்றால், குப்பையாக வீசப்படும் பிளாஸ்டிக் மலைகளில் பிரம்மாண்டமான கலைப் படைப்புகளைப் பார்க்கும் கலைஞர்கள் மறுபக்கம்.

வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே என்று நிரூபிக்கும் இளைய தலைமுறையினர். இவர்கள் எல்லாரும் உலகத்தை ரீஇமேஜின் செய்கிறார்கள்.

ஒரு மொட்டை மாடித் தோட்டம் அமைத்து தேனீக்களைக் காப்பாற்றுவதோ அல்லது ஒரு சின்ன அன்பான வார்த்தையைத் தொடங்கி வைத்து அது ஆயிரம் பேரைத் தொடச் செய்வதோ, அது எதுவாக இருந்தாலும் அது ஒரு ரிப்பில் எபெக்ட். தண்ணீரில் ஒரு கல்லைப் போட்டால், அது எப்படி வளையங்களாகப் பரவுகிறதோ, அப்படித்தான் மாற்றமும்.

ஒரு சின்ன நல்ல விசயம், மிகப்பெரிய நல்ல விசயத்திற்கான வித்து. நம் தலைமுறைக்கான சொத்து.

நாம் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி, ஒரு தனி மனிதனால் என்ன செய்ய முடியும்? என்பதல்ல.

நாம் கேட்க வேண்டிய சரியான கேள்வி, நான் முதலில் என்ன செய்யப் போகிறேன்? என்பதுதான்.

மாற்றம் என்பது ஒரு பெரிய சுவிட்ச் அல்ல. அது ஒரு சின்ன விதையைப் போடுவது போன்றது. இன்று ஒரு விதையைப் போடுங்கள், நாளை அது ஒரு காடாக மாறலாம்.

*****

இயக்குநர் ஷங்கர் வில்லனா?

இயக்குநர் ஷங்கர் வில்லனா?

ரஜினி சாரை வைத்துப் படம் எடுப்பதை விட, அந்தப் படத்திற்கு இயக்குநர் மற்றும் வில்லனைத் தேடும் படலம் தான் சுவாரசியமான திரைக்கதையாக இருக்கிறது. சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு அத்தனை திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் அஸ்வத் மாரிமுத்து பக்கம் வண்டி திரும்பியிருக்கிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், ஒருவேளை சிபி சக்கரவர்த்தி இயக்கினால், இயக்குநர் ஷங்கர் வில்லனாக நடிப்பாராம்! பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வில்லத்தனம் செய்வாரோ என்னவோ? சிம்ரன், ஷோபனா, பாசில் ஜோசப், சிறப்புத் தோற்றத்தில் கமல் என ஒரு பெரிய மல்டி ஸ்டாரர் பட்டாளமே அணிவகுக்கிறது. கடைசியில் யார் இயக்குகிறார்கள் என்பது காலத்திற்கே வெளிச்சம்.

நடிகர் சூரி இப்போது முழுநேரக் கதாநாயகன் ஆகிவிட்டார். அவர் நடிக்கும் புதிய படத்திற்கு மண்டாடி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மண்டாடி என்றால் ஏதோ மண்டையில் அடிப்பது என்று நினைத்துவிடாதீர்கள். நிச்சயமாகத் திரையரங்கில் அது நடக்காது என நம்புவோம். கடல் அலை, காற்றின் திசை ஆகியவற்றை அறிந்து மீன்பிடித் தொழிலை வழிநடத்தும் நிபுணரைத்தான் அப்படி அழைப்பார்களாம். அதாவது, ஜி.பி.எஸ் கருவி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் இருந்த கூகுள் மேப்ஸ் மனிதர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். ராமநாதபுரம் வெயிலில் கஷ்டப்பட்டுப் படமாக்கியிருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தில் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் துல்லியமாக இருக்கிறதாம். மீன் கிடைக்குதோ இல்லையோ, ஹிட் கிடைக்குதா என்று பார்ப்போம்.

சினிமா உலகில் ஒரு நடிகை பிசியாக நடிப்பதைக் கண்டாலே, வீட்டில் இருப்போர் சரி, போதும், ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைப்போம், என்று கிளம்பிவிடுவது வழக்கம். 30 வயதான சம்யுக்தா மேனனுக்கும் இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அவர் சுயம்பு உள்ளிட்ட படங்களில் பிசியாக இருந்தாலும், குடும்பத்தினர் ரகசியமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்களாம். அவரோ, என் கவனம் முழுவதும் நடிப்பில்தான், என்று வழக்கமான டயலாக்கைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் ஸ்டன்னிங் புகைப்படங்களைப் பார்த்தால், ரசிகர்களின் கவனம் முழுவதும் வேறு பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ராக்கா படத்தில், அவர் மூன்று வேடங்களில் நடிக்கிறாராம்.

1. போலீஸ்.

2. ராட்சசன்.

3. அப்பா.

இதில் எது ராட்சசன், எது அப்பா என்பது படம் பார்த்தால்தான் தெரியும்.

தீபிகா படுகோனுக்கு பாலிவுட்டே அதிரும் அளவுக்குச் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ராஷ்மிகா முதல்முறையாக வில்லியாக நடிக்கிறாராம். படத்தில் லாஜிக் இருக்குமோ இல்லையோ, பட்ஜெட்டும் சம்பளமும் நிச்சயமாகப் பான் இந்தியா அளவில் மிரட்டலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உலகநாயகனின் புதல்வி ஸ்ருதிஹாசன் ஒரு ஆன்மிக அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஏதோ ஒரு சின்ன வாராஹி அம்மன் கோவிலுக்குப் போனாராம். அங்கே வி.ஐ.பி தரிசனம் இல்லை, டொனேஷன் தொல்லை இல்லை. கடவுளுக்கே ஆச்சரியமாக இருந்திருக்கும்! நாம மட்டும் கடவுளைத் தேடல, கடவுளும் நம்மளத் தேடுறாரு, என்று ஒரு தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார். அந்தத் தரிசனத்திற்குப் பிறகு அவருக்குப் பயம் போய்த் தெளிவு கிடைத்துவிட்டதாம். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகிறது. ஸ்ருதிஹாசன் பாடிய சைக்கோ பாடல்களைக் கேட்ட ரசிகர்களுக்கும் அந்தத் தெளிவு கிடைத்தால் சரிதான்! அப்பா பக்கா நாத்திகர். மகள் பக்கா ஆத்திகர்.

*****

Saturday, 25 April 2026

டைம் பாஸ் செய்திகள் – 26.04.2026

டைம் பாஸ் செய்திகள் – 26.04.2026

விஷ்ணு எடவன் என்றோர் இளைஞர். லோகேஷ் கனகராஜின் ஸ்கூலில் படித்தவராம். நயன்தாரா – கவின் நடிக்கும் ஹலோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் குரலில் ஒரு பாட்டை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். கன்னக்குழியா புதைகுழியா? என்று அவர் பாட, நெட்டிசன்களோ கன்னக்குழி ஓகே, ஆனா அது புதைகுழி ஆகாம இருந்தா சரி, என்று கமெண்ட் அடிக்கிறார்கள். நயன் - கவின் கெமிஸ்ட்ரியை விட, இந்தப் படத்தில் இருக்கும் 7 ஸ்க்ரீன், ரவுடி பிக்சர்ஸ் எனத் தயாரிப்பு நிறுவனங்களின் லிஸ்ட்தான் நீளமாக இருக்கிறது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சிந்து வாசுதேவன் என்றொரு பாடகி இப்போது தமிழுக்கு வந்திருக்கிறார். 15 மொழிகளில் பாடுவாராம். பார்க்க அச்சு அசலாக நித்யா மேனன் போலவே இருக்கிறார். நித்யா மேனனுக்கே இது தெரியுமா என்று தெரியவில்லை. ஏ.ஆர்.ரகுமான் மேல் தீராத காதல் கொண்ட இவர், டி. இமான் இசையில் ஒரு மெலடி பாடிவிட்டாராம். இயக்குநர்கள் இவரைப் பார்த்ததும் பாட வந்தது இருக்கட்டும், ஹீரோயின் ஆகிறீர்களா? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அமெரிக்காவிலிருந்து பாட்டுப் பாட வந்தவரை கால்ஷீட் கேட்டு பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிரசாந்த் நீல் என்றால் சும்மாவா? திரையில் எதையாவது கறுப்பு மையால் அடித்து, அதில் ஒரு ஹீரோவை மாஸாகக் காட்டுவதுதான் அவர் ஸ்டைல். என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மே 20 இல் ஒரு கிளிம்ப்ஸ், அதாவது படத்தில் ஒன்றுமே புரியாத ஒரு பத்து செகண்ட் காட்சி வரப்போகிறதாம். 2027இல்தான் படம் வருமாம். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை ரசிகர்கள் அந்தப் போஸ்டரில் இருக்கும் என்.டி.ஆரின் தாடியை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

உப்பு புளி காரம் என்று ருசியாகத் தொடர் எடுத்தவர்கள், அடுத்து பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று குடும்ப உறவுகளைப் பிழிய வருகிறார்கள். போஸ் வெங்கட் இதில் ஒரு டெக்ஸ்டைல் ஷோரூம் ஓனர். வீட்டில் எப்போதும் ஒரு கட்டுப்பாடான முகத்துடன் அலைவாராம். மே மாதம் ஓடிடிஇல் இது ரிலீஸ் ஆகிறது. நான்கு உடன்பிறந்தவர்களின் கதையாம். சொந்த அண்ணன் தம்பிகளுடன் சண்டை போடவே நேரம் இல்லாத நமக்கு, அடுத்த வீட்டுச் சண்டையைப் பார்க்க நேரம் இருக்கத்தான் செய்கிறது.

*****