Thursday, 27 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.08.2026

1) நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது. 1500 பேரை மீட்கும் பணி தீவிரமாகியுள்ளது.

2) நேபாள வெள்ளத்திற்குப் பெரும் பனிப்பாறை சரிவே காரணம் என்று முதல் கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3) எம்.எட் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

4) தமிழக வரலாற்றில் நேற்று முதல் முறையாக சட்டப் பேரவை எவ்வித இடைவேளையும் இன்றி 9.43 மணி நேரம் நடைபெற்று உள்ளது.

5) 2026 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டள்ளது.




Education & GK News

1) The death toll from the floods in Nepal has risen to 392; rescue operations to save 1,500 people have intensified.

2) Preliminary studies indicate that a massive glacier collapse is the cause of the floods in Nepal.

3) The application registration period for M.Ed. admissions has been extended until September 10.

4) For the first time in Tamil Nadu's history, the Legislative Assembly session was held yesterday for 9 hours and 43 minutes without any break.

5) India's Gross Domestic Product (GDP) is projected to stand at 6.4 percent in the 2026 fiscal year.

மிக மோசமான பேய் வீடு!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 66

மிக மோசமான பேய் வீடு!

பேய்கள் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்விக்கு ஆண்டிப்பட்டி அப்புசாமி முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை ஆளுக்கொரு பதில் வைத்திருப்பார்கள். ஆனால் 1920களில் லண்டனில் ஒரு மனிதர் இருந்தார். பெயர் ஹாரி ப்ரைஸ்.

கையில் கேமரா, தெர்மோமீட்டர், அகச்சிவப்பு கதிர்கள், நூலால் கட்டப்பட்ட தராசு என்று ஒரு மினி லேபாரட்டரியையே தூக்கிக்கொண்டு அலைந்த ஆள். அறிவியலையும் ஆவிகளையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க வைக்க முயன்ற ஒரு விசித்திரமான கேரக்டர்.

அந்தக் காலத்தில் லண்டனில் ஸ்பிரிச்சுவாலிசம் ரொம்ப பிரபலம். இருட்டு அறையில் உட்கார்ந்து கொண்டு, "ஆவியே வா!" என்று கூப்பிட்டு, டேபிளைத் தட்டி, ஆவிகளுடன் பேசுவதாகச் சொல்லும் மீடியம் ஆட்களுக்குப் பஞ்சமில்லை.

ஹாரி ப்ரைஸுக்கு ஒரு விசித்திரமான இரட்டை முகமுண்டு. அவர் பேய்கள், ஆவிகள் உண்மையிலேயே இருக்கலாம் என்று தீவிரமாக நம்பினார். ஆனால், ஆவி உலகத்தோடு பேசுகிறேன் என்று ஏமாற்றும் போலி ஆட்களைக் கண்டால் அவருக்குக் வயிறு எரியும். அவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்தால்தான் நிம்மதி.

அவர் அமைத்த தேசிய மனநல ஆராய்ச்சி ஆய்வகம் ஒரு நவீன அறிவியல் கூடம். ஆவி அழைக்கும் போலி மீடியங்களை அந்த லேப்புக்கு அழைப்பார். அறையில் அகச்சிவப்பு கேமராக்கள் வைப்பார். அவர்களின் கை, கால்களில் மின்சார கம்பிகளைக் கட்டி, சின்ன அசைவு நடந்தாலும் கண்டுபிடிக்கும்படி செய்துவிடுவார். பல "ஆவி நிபுணர்கள்" இவரிடம் மாட்டிக்கொண்டு, "ஐயோ சாமி, ஆவியாவது ஒண்ணாவது, எல்லாம் மேஜிக் ட்ரிக்தான்!" என்று அலறி அடித்து ஓடினார்கள். 'ஜாதகக் காரர்களின் கைவரிசையை' அம்பலப்படுத்தும் தீவிர விஞ்ஞானியாகவே பத்திரிகைகள் அவரைப் பார்த்தன.

ஆனால், 1929 இல் கதை ஒரு பெரிய யு டர்ன் எடுத்தது.

போர்லி ரெக்டரி என்பது எஸெக்ஸ் பகுதியில் இருந்த ஒரு பழைய மதகுருவின் வீடு. "அங்கே இரவில் மணி அடிக்கிறது, சுவரில் தானாக எழுத்துக்கள் தோன்றுகின்றன, தலை இல்லாத கன்னியாஸ்திரி நடமாடுகிறாள்" என்று செய்திகள் வந்தன. ஹாரி ப்ரைஸ் அங்கே விரைந்தார்.

அந்த வீட்டை ஒரு வருடம் வாடகைக்கு எடுத்தார். நாற்பதுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை, ஆராய்ச்சியாளர்களை உள்ளே இறக்கினார். சுவர்களில் பாதரசத் துளிகள், வெப்பநிலையைக் அளக்கும் கருவிகள், தரைப்பகுதியில் சீல் வைக்கப்பட்ட கதவுகள் என அந்த வீடே ஒரு பெரிய பரிசோதனைக்கூடமாக மாறியது.

பத்திரிகைகளுக்கு இது அல்வா சாப்பிடுவது போல இருந்தது. டெய்லி மெயில் இதழில் தினமும் போர்லி ரெக்டரி பற்றிய பரபரப்புச் செய்திகள். "பிரிட்டனின் மிக மோசமான பேய் வீடு" என்று அந்த இடத்திற்குப் பிரமாண்ட பிராண்ட் இமேஜ் உருவாக்கிக் கொடுத்தவர் ஹாரி ப்ரைஸ்தான்.

அங்கே நிஜமாகவே பேய் இருந்ததா?

ப்ரைஸ் எழுதிய புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. அவர் ஒரு மீடியா சூப்பர் ஸ்டாரானார். ஆனால் அவரது காலத்திற்குப் பிறகு, சக ஆராய்ச்சியாளர்கள் அந்த ஆதாரங்களைச் சோதித்துப் பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது.

போர்லி ரெக்டரியில் நடந்த பல விசித்திர நிகழ்வுகள், ஹாரி ப்ரைஸே சொந்தமாக உருவாக்கிய "ஸ்பெஷல் எபெக்ட்ஸ்" என்பதும், செய்தித்தாள் விளம்பரத்துக்காக அவர் செய்த சிறுபிள்ளைத்தனமான வேலைகள் என்பதும் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தன.

ஹாரி ப்ரைஸ் ஒரு தீர்க்க முடியாத புதிர். அவர் அறிவியலை வைத்துப் பேயைத் தேடினாரா, அல்லது பேயை வைத்துத் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டாரா? என்பது விடை காண முடியாத கேள்வி.

ஒன்று மட்டும் நிச்சயம். அறிவியல் உலகமும் ஆவி உலகமும் சந்திக்கும் புள்ளியை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பிரபலமானவர் யார் என்று கேட்டால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கைநிறைய கேமராக்களோடு நின்றுகொண்டிருந்த ஹாரி ப்ரைஸைச் சுட்டிக்காட்டலாம்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

உலக்கை அடியும் மிளகாய்ப் பொடியும்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 65

உலக்கை அடியும் மிளகாய்ப் பொடியும்

தமிழரசனால் நடந்ததை நம்ப முடியவில்லை. வீட்டிற்கு வந்தும் தன் கருவிகளைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மொபைல் போன் அதிர்ந்தது. விஜயராமன் என்ற பெயர் திரையில் மின்னியது.

தமிழரசன் அழைப்பை ஏற்று, "டேய்! என்னை ஆபத்துல சிக்க வைக்கிறதே உனக்கு வேலையா போயிடுச்சுல்ல. உசுரோட போனா பொணமா திரும்புற இடத்துக்கு யாராவது தன் நண்பனை அனுப்புவானா? உனக்கு நண்பனை விட, ஆராய்ச்சி முக்கியமா போயிடுச்சுல்ல." என்று கோபத்துடன் பேசத் தொடங்கினான்.

மறுமுனையில் விஜயராமனின் சிரிப்பொலி மெலிதாகக் கேட்டது. "தமிழ்ப்பிரியன் தமிழரசன்! உன் உயிரை அப்படிப் பொக்குன்னு போக விட்டுருவோமா? நீ பண்ண வேண்டிய ஆவி ஆராய்ச்சி இன்னும் நிறைய இருக்கு. நீ அங்க போறதுக்கு முன்னாடியே அந்தப் பண்ணை வீட்டுல ஹிட்டன் வயர்லெஸ் ஸ்பெக்ட்ரம் கேமரா செட் பண்ணியாச்சு. நீ நேத்து ராத்திரி பார்த்த குப்பாயியை நாங்க இங்க ஸ்கிரீன்ல லைவ்வா பார்த்தாச்சு!"

தமிழரசன் திகைத்துப்போனான். "நீ பாத்தீயா? அப்போ அது நிஜமான ஆவிதானா?"

"ஆவியாவது, பிசாசாவது! அந்த லைவ் வீடியோவைக் கம்ப்ளீட் டேட்டா அனாலிஸ் பண்ணியிச்சு. அது ஆவி இல்ல. அது ஒரு பியூர் ஹைடெக் டிராமா!"

"என்னடா சொல்றே? இந்த மாதிரி டிராமா எழுதுறதெல்லாம் உன்னோட வேலையாச்சே. அங்க எவன் உக்காந்து டிராமா எழுதினான்?"

"அதுக்கு பின்னாடி ஒரு மல்டி நேஷனல் டிரக் மாபியாவே இருக்கு. சுந்தர் சி-யோ, ராகவா லாரன்ஸோ எடுக்க இது காமெடி ஹாரர் ஸ்கிரிப்ட் இல்லடா! லோகேஷ் கனகராஜ் எடுக்க வேண்டிய எல்.சி.யூடா இது."

தமிழரசன் ஜன்னலைப் பார்த்துக்கொண்டே, "அட பாவிகளா! ஆவிகிட்ட மாட்டுனா கூட, போனா போறான் இந்தத் தமிழ்க்கிறுக்கன்னு விட்டுடும். டிரக் மாபியாகிட்டெ மாட்டுனா எங்கதி என்னாவுறது? என் குடும்பம் என்னாவுறது? அது இருக்கட்டும். நான் பார்த்த அந்த அக்மார்க் வெள்ளைப் புடவை பொண்ணு? எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்கு!" என்றான்.

"அங்கே வச்ச கேமரால பதிவான அலைநீளத்தை வச்சு கண்டுபிடிச்சிட்டோம். அந்த அறையோட வடகிழக்கு மூலையில ஒரு சிறிய மைக்ரோ ஹோலோகிராபிக் ப்ரொஜெக்டர் மறைச்சு வைக்கப்பட்டிருக்கு. அதுல டைமர் செட் பண்ணி, பன்னிரண்டு மணிக்கு 3டி ஹோலோகிராம் பிம்பத்தை காத்துல காட்டியிருக்காங்க. அதனாலதான் நீ அடிச்ச லேசர் ஒளி அது வழியா ஊடுருவிப் போனது!"

"அப்போ அந்தப் பெண் குரல்?"

"சுவற்றுக்குள்ள பீஸோ எலக்ட்ரிக் ஸ்பீக்கர் புதைச்சு வச்சிருக்காங்க. அது அதிர்வுகளை உருவாக்கும்போது, அறையோட சுவர்களே சவுண்ட் போர்டு மாதிரி வேலை செய்யும். அதனாலதான் 3டி ஸ்பேஷியல் ஆடியோ எபெக்ட்ல அந்த குரல் நாலா பக்கமும் கேட்டிருக்கு."

தமிழரசன் வியப்பின் எல்லைக்கே சென்றான். "ஆனா, இதையெல்லாம் இவ்வளவு தொழில்நுட்பத்தோடு யாருடா பண்ணிருப்பாங்க?"

"அதுதான் மெயின் மேட்டர்! உனக்கே தெரியாமா அங்க வெச்ச நம்மோட கேமரா அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு அடியில இருக்குற தரைப்பகுதியைத் தெர்மல் இமேஜிங்  முறையில ஸ்கேன் பண்ணிடுச்சு. உலக நாயகன் கமலஹாசன் நடிப்புல லோகேஷ் கனகராஜோட 'விக்ரம்' படத்துல வருமே, அதே மாதிரி இந்த பண்ணை வீட்டுக்கு அடியில மிகப்பெரிய பரப்பளவுல ஒரு நிலத்தடி போதைப்பொருள் தயாரிப்புக் கூடம் இயங்கிக்கிட்டு இருக்கு! மெத்தம்பெட்டமைன், எல்.எஸ்.டி, கேட்டமைன்னு ரொம்ப பெரிய வேலைகளப் பண்ணிக்கிட்டு இருக்காங்க."

"என்னது! நிலத்தடி போதைப்பொருள் தயாரிப்புக் கூடமா?" தமிழரசன் அதிர்ந்தான்.

"ஆமா! அந்த நார்கோடிக் லேப்ல கெமிக்கல்ஸ் சுத்திகரிக்கும் போது உருவாகுற எக்ஸாஸ்ட் பேன் சத்தமும், கெமிக்கல் புகையும் வெளியே தெரியாம இருக்கவும், யாராவது தப்பித்தவறி இந்தப் பக்கம் வந்தா மிரண்டு ஓடணும்ங்கிறதுக்காகவும்தான் இந்த ஹைடெக் குப்பாயி பேய் நாடகத்தையே அவங்க ஆடியிருக்காங்க. அந்தப் பகுதி பக்கமே யாரும் வராம இருக்கத்தான் 'இங்கே போனா பிணம்தான் வரும்'னு ஊருக்குள்ள கதையைக் கட்டி விட்டிருக்காங்க!"

"டேய் என்ன வேலைடா பண்ணி வெச்சிருக்கீங்க. என் வீடு என்ன விக்ரம் கமல் வீடா? ஏஜென்ட் ருத்ரன், ஏஜென்ட் லாரன்ஸ், ஏஜென்ட் டீனான்னு என் வீட்டுல யாருமே இல்லையேடா. இந்த மேட்டர் தெரிஞ்சு, அந்த டிரக் மாபியா என்னோட வீட்டைச் சுத்தி வளைச்சா நான் என்ன பண்றது?" தமிழரசன் அதிர்ந்தான்.

"அய்யனார் கோயில் சந்துல இருக்குற அய்யனார் உன்னைக் காப்பாத்தாமலா போயிடுவார்?"

"டேய் விளையாடாதே. வீட்டுல நான், ஜெயந்தி, அப்புறம் ஜெயந்தியோட அப்பா மூணு பேரும் இருக்கோம். நல்ல வேளையா கபிலனை என்ஜினியரிங் காலேஜ்ல அட்மிஷன் போட்டுட்டு அங்கேயே விட்டுட்டு வந்திருக்கோம்."

"நீ ஒன்னும் பயப்பட தேவையில்லை. அங்க செட் பண்ணியிருக்கிற தெர்மல் இமேஜிங் கேமரா, ஆட்டமேடிக்கா அது பாட்டுக்கு ஆதாரங்களோட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸுக்குத் தகவல் அனுப்பிட்டே இருக்கும். அப்படி ஓர் அல்காரிதம் செட் பண்ணிருக்கிறோம். இந்நேரத்துக்கு போலீஸ். அவங்க என்கவுண்டர் டீமோட கிளம்பி அங்கே வேலையை ஆரம்பிச்சிருப்பாங்க!" விஜயராமன் சொல்லி முடிப்பதற்குள், தமிழரசன் வீட்டின் வாசலில் ஒரு ஜீப் வந்து அலறியபடி நின்றது.

தமிழரசன் பயத்தில் நடுங்கிக் கொண்டே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.

ஜீப்பில் இருந்து இறங்கியது தமிழரசனைப் பாராட்டுவதற்காக வந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் இல்லை; மாறாக, லோகேஷ் கனகராஜ் பட பாணியில் முகமூடி அணிந்த நாலைந்து பேரைக் கொண்ட துப்பாக்கி ஏந்திய கும்பல்! டிரக் மாபியாவின் ரவுடி நெட்வொர்க்.  விஜயராமனின் ஹேக்கிங்கைச் சற்றே மோப்பம் பிடித்துவிட்டு, தமிழரசன் வீட்டைச் சுற்றி வளைத்திருந்தது.

"டேய் விஜயராமன்! நீ பண்ண காரியத்தாலே ரோலக்ஸ் அனுப்புன டீம் என் வீட்டு வாசல்ல நிக்குதுடா!" என்று தமிழரசன் கதறினான்.

மறுமுனையில் விஜயராமன் அமைதியாக, "தமிழ்ப்பிரியன் தமிழரசன்! பதறாதே. விக்ரம் படத்துல ஏஜென்ட் டீனா சமையலறை கரண்டியை வச்சே சண்டை போடுவாங்கள்ல? அதே மாதிரி உன் வீட்லயும் ஓர் ஏஜென்ட் இருக்கார்." என்றான்.

"யாருடா? என் மாமனாரா?!"

அடுத்த நொடி, தமிழரசனின் மாமனாரான ஜெயந்தியின் அப்பா கையில் ஒரு பெரிய மர உலக்கையோடும், காதில் இயர்பட்ஸ் உடனும் ஹாலுக்குள் வந்தார். கதவு திறந்ததும், துப்பாக்கியை நீட்டியபடி உள்ளே நுழையப் பார்த்த முதல் ரவுடியின் மண்டையிலேயே "டமாங்!" என உலக்கையால் ஒரு போடு போட்டார்.

சமையலறையில் இருந்த மிளகாய்ப் பொடி டப்பாவை எடுத்து வந்த ஜெயந்தி, அடுத்த இரண்டு ரவுடிகளின் கண்ணில் அள்ளித் தெளித்தாள்.

அங்கே ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவியது. தமிழரசன் பயத்தில் பேசிக் கொண்டிருந்த போனைத் தூக்கித் தூர எறிந்து விட்டு, சோபாவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டான்.

அவன் மாமனார் வெறியோடு உலக்கையைச் சுழற்றிக் கொண்டிருந்தார்.

சரியாக அதே நேரத்தில், வீதி முனையிலிருந்து சைரன் ஒலியுடன் என்.சி.பி போலீஸின் என்கவுண்டர் டீம் வந்து இறங்கியது.

கையில் துப்பாக்கியுடன் உள்ளே பாய்ந்த என்.சி.பி அதிகாரி, வீட்டில் நடப்பதைப் பார்த்து அப்படியே உறைந்து போய் நின்றார்.

ரவுடிகள் அனைவரும் கண்ணில் மிளகாய்ப் பொடியோடு அலறிக்கொண்டு, "சார்! எங்களைக் காப்பாத்துங்க சார்! போலீஸ் லாக்கப்ல அடிக்கிற அடியைக் கூட தாங்கிடுவோம். ஆனா இந்த உலக்கை தாத்தா அடிக்கிற அடியைத் தாங்க முடியாது சார்! எங்களை உடனே ஜெயில்ல அடைச்சுடுங்க!" என்று போலீஸின் கால்களில் விழுந்து கெஞ்சினார்கள்.

என்.சி.பி அதிகாரி தமிழரசனைப் பார்த்து, "சார், நீங்கதான் ஏஜென்ட் தமிழ்மித்ரனா? என்ன ஒரு பக்காவான பிளானிங்! எந்த ஆயுதமும் இல்லாம மாபியாவையே சரணடைய வச்சிட்டீங்களே!" என்று பாராட்டிவிட்டு ரவுடிகளைக் கைது செய்து கூட்டிச் சென்றார்.

தமிழரசன் பெருமூச்சு விட்டுக்கொண்டே தூக்கிப் போட்டிருந்த போனை எடுத்தான்.

"டேய் விஜயராமன்! என் மாமனாரோட உலக்கையும் என் பொண்டாட்டியோட மிளகாய்ப் பொடியும் இல்லன்னா என்னோட கதி, நெனைச்சுப் பார்க்கவே பயமா இருக்குடா!"

"நன்றி தமிழ்ப்பிரியன் தமிழரசன்! அடுத்த சாப்டருக்கு ரெடியா இரு!"

"ஆளை விடுடா சாமி! இனிமே நான் ஆவி ஆராய்ச்சியும் பண்ணல, அறிவியல் த்ரில்லருக்கும் வரல. பேசாம இப்படியே பிள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குற ஆசிரியராவே காலத்தைக் கழிச்சிடுறேன்!" என்று சொல்லிவிட்டுத் தமிழரசன் போனைத் துண்டித்தான்.

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

Wednesday, 26 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.08.2026

1) நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 157 பேர் உயிரிழந்துள்ளனர். 750 பேர் மாயமாகி உள்ளனர்.

2) செப்டம்பர் 1 இல் பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.

3) சர்க்கரை விலை வியர்வால் இனிப்புப் பண்டங்களின் விலை 20 முதல் 25 சதவீதம் வரை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

4) தமிழகத்தில் 1558 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5) 15 கோடி இஸட் தலைமுறை இளைஞர்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வு வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

6) அமெரிக்காவில் உயர்கல்வியில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது.


Education & GK News

1) 157 people have lost their lives and 750 are missing following flash floods in Nepal.

2) The Mettur Dam is set to be opened for irrigation purposes on September 1.

3) Due to the rise in sugar prices, the cost of sweets has increased by 20 to 25 percent in Tamil Nadu.

4) 1,558 people in Tamil Nadu have been affected by swine flu.

5) The Election Commission plans to raise electoral awareness among 15 crore youths belonging to Generation Z.

6) The number of Indian students enrolling in higher education in the United States has dropped by 15 percent.

Tuesday, 25 August 2026

கள்ளிக்காடு கெஸ்ட் ஹவுஸ்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 64

கள்ளிக்காடு கெஸ்ட் ஹவுஸ்

"நீங்கதான் விஜயராமன் சொல்லி வந்திருக்கிற…"

ஆம் என்பது போல அவன் தலையசைத்தான்.

"சார், இது கள்ளிக்காடு கெஸ்ட் ஹவுஸ். இதோட வரலாறு…"

"வரலாறு வேணாம் கணேசன். ஆவி, பிசாசு, தலை இல்லாத பொண்ணு. இதெல்லாம் நான் ஆசிரியர் பயிற்சி படிக்கிற காலத்திலேயே பாக்கெட் நாவல்கள்ல படிச்சுட்டேன். பண்ணை வீட்டோட சாவி கொடு."

கணேசன் நடுங்கும் கையால் சாவியைக் கொடுத்தான். "சார், இதுவரைக்கும் யாரும் இந்த கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு ராத்திரி முழுசா இருந்தது இல்ல. ராத்திரிக்கு உள்ளே போனா காலையில பொணம்தான்."

"நாளைக்கு எல்லாமே மாறி இருக்கும். நான்தான் ஆசிரியர் தமிழரசன். பேய், பிசாசையெல்லாம் என் வீட்டுல சோதனைக் குழாய்ல அடைச்சு வச்சிருக்கேன்," என்று சொல்லி சிரித்தான். அந்த சிரிப்பு இருட்டில் பயங்கரமாக எதிரொலித்தது.

தமிழரசன் உள்ளே சென்றான். பழைய பர்னிச்சர், ஒட்டடை படிந்த சுவர்கள், காற்றில் ஆடும் ஜன்னல்கள். எல்லாம் ஒரு த்ரில்லர் படத்துக்கான செட்டிங் போல இருந்தன. தமிழரசன் பையைக் கீழே வைத்தான். உள்ளிருந்து கேமராக்கள், வெப்பநிலையை அளக்கும் கருவிகள், இன்னும் பல விசித்திரமான எலக்ட்ரானிக் சாதனங்கள் வெளியே வந்தன.

"இனி ஆரம்பிக்கட்டும் அந்தப் பேய் படம்!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு கருவிகளை செட் செய்தான். வேலை முடிந்ததும் பயணக் களைப்பில் லேசாகக் கண்ணயர்ந்தான்.

மணி பன்னிரண்டை நெருங்கியது.

திடீரென, அறையின் வெப்பநிலை குறையத் தொடங்கியது. கருவிகள் பீப் என்று ஒலியெழுப்பின. தமிழரசன் டக்கென்று விழித்துக் கொண்டு கேமராவைப் பார்த்தான். "ஆவி, பிசாசுன்னு ஆராய்ச்சி பண்ற இந்த விஜயராமனால ராத்திரி முழுக்க தூங்க முடியாம வேலை பார்க்க வேண்டியிருக்கே! இவனோடு ஆராய்ச்சி என்றைக்கு முடியுறதோ? நான் என்றைக்கு நிம்மதியா தூங்குறதோ?" என்று முணுமுணுத்துக் கொண்டான்.

ஒரு மூலையில், மங்கலான உருவம் தெரிந்தது.

ஒரு பெண் உருவம்.

பழைய பாணி பேய்களுக்கே உரிய அக்மார்க் வெள்ளைப் புடவை அணிந்திருந்தது.

தமிழரசன் சிரித்தான். "ஆகா அருமை! நல்ல செய்நேர்த்தி. ஆனா என் கருவிகள ஏமாத்த முடியாது."

அவன் ஒரு லேசர் பாயிண்டரை எடுத்தான். அந்த உருவத்தின் மேல் அடித்தான். லேசர் ஒளி அந்த உருவத்தின் வழியாக ஊடுருவிச் சென்றது.

தமிழரசனின் சிரிப்பு சட்டென்று நின்றது.

"இது ஏமாத்து வேலை மாதிரி தெரியல." என்று முணுமுணுத்தான்.

அடுத்த நிமிடம், அறையின் விளக்குகள் அணைந்தன.

இருள் சூழ்ந்தது.

தமிழரசனின் கருவிகள் அனைத்தும் செயலிழந்தன.

"யார்? யார் அங்கே?" தமிழரசனின் குரலில் பயம் தெரிந்தது.

இருளில் ஒரு கை அவன் தோளைத் தொட்டது. அது ஜில்லிட்டு இருந்தது.

"என் கதையக் கேளு!" ஒரு குரல் கேட்டது.

அது பெண்ணின் குரல். தீனமாக, ஆனால் தெளிவாக இருந்தது.

தமிழரசன் திரும்பினான். அந்தப் பெண் உருவம் இப்போது அவன் முன்னால் நின்றது. அதன் கண்கள் இருட்டில் மின்னின.

"நான் குப்பாயி. இந்த கெஸ்ட் ஹவுஸ்ல வேலை செஞ்சேன். இந்த ஊர் பெரிய மனுஷன்..." அவள் பேசப் பேச, அறைக்குள் குளிர்ந்த காற்று வீசியது.

தமிழரசனின் உடல் நடுங்கியது.

அவள் தன் கதையைச் சொன்னாள். துரோகம், பழிவாங்கல், மரணம் என எல்லாமே அந்த பண்ணை வீட்டின் அவனிருந்த அறையில் நடந்திருந்தது.

"எனக்கு நீதி வேணும். என் ஆவி இங்கேயே அலைஞ்சுட்டு இருக்கு."

தமிழரசன் அப்படியே உறைந்து போயிருந்தான். அவனால் பேச முடியவில்லை. நகர முடியவில்லை.

காலை வெளிச்சம் வந்தது.

கணேசன் அறைக் கதவைத் திறந்தான்.

தமிழரசன் தரையில் மயங்கிக் கிடந்தான். அவனது கருவிகள் சிதறிக் கிடந்தன.

கணேசன் அவனை எழுப்பினான். "சார், என்ன ஆச்சு? பேய் ஏதாவது வந்துச்சா?"

தமிழரசன் மெதுவாகக் கண் திறந்தான். "பேய்... குப்பாயி..." என்று முணுமுணுத்தான்.

கணேசன் குழப்பத்துடன் பார்த்தான். "நான்தான் சொன்னேன்ல சார்!"

தமிழரசன் குப்பாயியின் கதையைச் சொன்னான். கணேசன் அதிர்ச்சியுடன் கேட்டான்.

"ஆனா, நீங்க உசுரோட இருக்குறதுதான் ஆச்சரியமா இருக்கு. வெளியே போஸ்ட் மார்டம் பண்றதுக்கு போலீஸ் கூட ரெடியா இருக்கு!"

தமிழரசன் அதிர்ந்தான். "அடப் பாவிகளா? ஒரு மனுஷனை உள்ளே அனுப்பிச்சிட்டு மறுநாள் பாடை கட்டுற வரைக்குமாடா தயாரா இருப்பீங்க?"

கணேசன் சிரித்தான். "சார், நீங்களாத்தான் விருப்பப்பட்டு ஏதோ ரிசர்ச் பண்றேன்னு உள்ளே வந்தீங்க. சரி நீங்களாவது ஏதாச்சும் கண்டுபிடிப்பீங்கன்னு பார்த்தா, நைட்டு பூரா நாலு புல்லை ஏத்துனவன் மயங்கிக் கிடக்குறாப்புல மயங்கிக் கிடக்குறீங்க."

அதற்கு மேல் கணேசன் பேசுவதைக் கேட்கப் பொறுமையில்லாமல், தமிழரசன் தன் கருவிகளைப் பார்த்தான். கேமரா பதிவுகள் அனைத்திலும், அந்த உருவம் தெளிவாகத் தெரிந்தது.

"கனவா?" தமிழரசன் நினைத்துக் கொண்டான். "ஆனால், இந்தக் கருவிகள் பொய் சொல்லாதே!"

"சார்! இந்த உண்மையை வெளியே சொல்லுங்க. உலகத்துக்குத் தெரியட்டும்." என்றான் கணேசன்.

அவன் கள்ளிக்காடு கெஸ்ட் ஹவுஸை விட்டு வெளியேறினான். அவனது மனதிற்குள் அந்தப் பெண் உருவத்தின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பேய் அதுவாக வந்து கேமராவுக்குள் அகப்பட்டுக் கொண்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி எந்தப் பேய் வந்து அதுவாக வாண்டட் ஆக மாட்டிக் கொள்ளும் என்று யோசனையாக இருந்தது. இதை அப்படியோ ஷார்ட்ஸாகவோ, ரீல்ஸாகவோ போட்டால் வியூஸ் மில்லியனில் அல்ல பில்லியன் டிரில்லயனில் பிய்த்துக் கொள்ளும்.

ஒருவேளை ஓவர் நைட்டில் பாப்புலர் ஆக ஆசைப்படும் பேயாக அது இருக்குமோ என்ற சந்தேகம் வேறு அவனை வாட்டியது.

அதுமட்டுமில்லாமல், இதை வெளியே சொன்னால் சுந்தர் சியோ ராகவா லாரன்ஸோ அடுத்த படத்திற்கான ஸ்கிரீன் ப்ளே பண்ணி விடுவார்களோ என்ற பயமும் இருந்தது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Monday, 24 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.08.2026

1) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் ‘தமிழ்நாடு – அறிவுப் பாடத்திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

2) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய விளையாட்டு உடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

3) ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்துக்குக் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயு உருளைகள் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

4) அக்டோபர் 2 முதல் புறநகர் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் எனத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

5) பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

6) வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த நாசிக்கிலிருந்து விரைவுத் தொடர்வண்டிகள் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கும் வெங்காயம் அனுப்பப்பட்டு வருகிறது.




Education & GK News

1) The ‘Tamil Nadu – Knowledge Curriculum’ is set to be introduced in all government schools across Tamil Nadu starting from the next academic year.

2) School Education Minister Rajmohan has announced that new sports uniforms will be provided to government school students.

3) Tamil Nadu Chief Minister S. Joseph Vijay has announced that three free LPG cylinders per year will be provided to families with an annual income of less than Rs. 2.5 lakh.

4) The Chief Minister has announced that women will be able to travel free of charge on mofussil buses starting October 2.

5) The Chief Minister has announced the cancellation of the Parandur airport project.

6) To curb the rise in onion prices, onions are being transported from Nashik to various parts of the country via express trains.

அறிவியலையே அமானுஷ்யங்களுக்குக் கேடயமாக்கிய வரலாறு!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 63

அறிவியலையே அமானுஷ்யங்களுக்குக் கேடயமாக்கிய வரலாறு!

அறிவியல் ரொம்பச் சுவாரஸ்யமானது. அதைவிடச் சுவாரஸ்யமானது, மனிதர்கள் அறிவியலைத் தங்கள் பயங்களுக்கும், ஆசைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எப்படிப் பயன்படக்கூடிய வாதங்களாக மாற்றிக் கொள்கிறார்கள் என்பதுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி என்பது, உலகம் அதுவரை கண்டிராத ஒரு மாபெரும் தொழில்நுட்பப் பாய்ச்சலுக்குள் மெல்லக் காலெடுத்து வைத்த காலம். மனித குலத்திற்குத் திடீரென்று பார்வை விரிவடைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுவரை மனிதன் தன் அறிவின் எல்லையாக எதை நினைத்துக் கொண்டிருந்தான் தெரியுமா?

"நான் கண்ணால் பார்ப்பதுதான் உலகம். என் காதால் கேட்பதுதான் உண்மை."

ஆனால், அந்தப் பெருமிதத்தை மிக அசாத்தியமாக உடைத்து நொறுக்கின அந்த அறிவியல் கண்டுபிடிப்புகள்!

1895 ஆம் ஆண்டு. ஜெர்மனியில் தன் ஆய்வகத்தில் உட்கார்ந்துகொண்டு, கேதோடு கதிர்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார் வில்ஹெல்ம் ராண்ட்ஜன். தற்செயலாக ஓர் அதிசயத்தைக் கண்டார். இருட்டறையில், ஒரு தடிமனான அட்டையைக் கூட ஊடுருவிச் சென்று, அங்கே இருந்த திரையில் ஒளி வீசியதுது ஒரு கதிர்!

அதற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் எக்ஸ் கதிர் என்று பெயரிட்டார். தன் மனைவியின் கையை அந்தச் சோதனையில் வைத்தார். அடுத்த சில நிமிடங்களில், சதைகள் எல்லாம் மறைந்து, எலும்பும் கல்யாண மோதிரமும் மட்டும் அச்சு பிசகாமல் படமாக விழுந்தன. உலகமே ஸ்தம்பித்துப் போனது.

அதே காலகட்டம். 1890களின் மத்தியில் இத்தாலியில் மார்க்கோனியும், ஜெர்மனியில் ஹெர்ட்ஸும் ரேடியோ அலைகளைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். கம்பியே இல்லாமல், காற்றில் செய்திகள் பறந்தன. ஒரு பக்கத்தில் இருக்கும் பொத்தானை அழுத்தினால், நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் மணி அடித்தது!

அதுவரை மனிதனின் மூளைக்குப் பழகியிருந்த "தொட்டுப் பார்க்கும்" இயற்பியல் விதிகள் எல்லாம் தலைகீழாக மாறின.

மனிதனுக்கு ஒரே ஆச்சரியம்! அதைவிடப் பெரிய குழப்பம்!

திடீரென்று தன் கண்கள் தங்களுக்குப் பொய் சொல்கின்றன என்பதை உணர்ந்தவுடன், மனித மூளை சும்மா இருக்குமா? தனக்குச் சாதகமாக யோசிக்கத் தொடங்கியது.

"அடடா! கண்ணுக்குத் தெரியாத அலைகள் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, ஏன் கண்ணுக்குத் தெரியாத பேய்களும் ஆவிகளும் அதே காற்றில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது?"

அவ்வளவுதான்! ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஸ்பிரிச்சுவலிசம் எனும் ஆவி இயக்கம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 1880களில் சிறு தீயாக இருந்த இந்த இயக்கம், எக்ஸ்ரே மற்றும் ரேடியோ அலைகளின் வருகைக்குப் பின் ஒரு காட்டுத்தீயாக மாறியது.

அன்றைய மனிதர்களின் அப்போதைய லாஜிக்குகள் ரொம்பவே எளிமையானவை, ஆனால் ஆபத்தானவை.

எக்ஸ்ரே சுவரை ஊடுருவிப் பார்க்கிறது அல்லவா? அப்படியானால் ஆவிகளும் சுவரை ஊடுருவி வரும் என்பதில் என்ன சந்தேகம்? இது முதல் லாஜிக்.

ரேடியோ அலைகள் மூலம் கம்பியில்லாமல் தூரத்தில் இருப்பவருடன் பேச முடிகிறதே? அப்படியானால் தந்தி மிஷின் போல ஒரு கருவியைச் செய்து, செத்துப் போன தாத்தாவிடம் பேச முடியாதா என்ன? இது இரண்டாவது லாஜிக்.

காற்றில் அலைகள் செல்லும்போது நமக்குத் தெரியவில்லை, ஆனால் ரிசீவர் வைத்தவுடன் சத்தம் கேட்கிறது. அதேபோலத்தான் ஆவிகளும் காற்றில் இருக்கின்றன; ஒரு மீடியம் கிடைக்கும் போது ஆவிகள் பேசாதா என்ன? இது மூன்றாவது லாஜிக்.

கேட்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன இந்த லாஜிக்குகள்?

இப்படித்தான் அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளைத் தங்களின் பழைய பயங்களுக்குச் சான்றாக மாற்றிக் கொண்டார்கள் அன்றைய மனிதர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஏதோ விவரமறியாத பொதுமக்கள் மட்டும் இதை நம்பவில்லை. அன்றைய தலைசிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஏன் சில அறிவியலாளர்கள் கூட இந்த மாயையில் விழுந்தார்கள்.

புகழ்பெற்ற எழுத்தாளர் சர் ஆர்தர் கோனன் டாய்ல் உலகிலேயே மிகச் சிறந்த தர்க்க அறிவும், பகுத்தறிவும் கொண்ட 'ஷெர்லாக் ஹோம்ஸ்' என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியவர்! அவர் ஆவிகள் உலகத்தைப் பைத்தியக்காரத்தனமாக நம்பத் தொடங்கினார். தன் மகனும் சகோதரனும் போரில் இறந்த பிறகு, அவர்களின் ஆவியுடன் பேசுவதற்காகக் கூட்டங்கள் நடத்தினார். "எக்ஸ்ரே இருக்கும் போது ஆவிகள் இருக்க சாத்தியமுண்டு" என்பதுதான் அவரது பிரதான வாதமாக இருந்தது.

இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்றவர் சர் வில்லியம் க்ரூக்ஸ். இவர் தான் எக்ஸ்ரே கண்டுபிடிப்புக்கு மூல காரணமான க்ரூக்ஸ் டியூபைக் கண்டுபிடித்தவர்! அவரே ஆவிகளுடன் பேசும் மீடியம் கூட்டங்களில் கலந்து கொண்டு, ஆவிகள் உண்மையிலேயே இருக்கின்றன என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.

திசைகாட்டி காந்த ஊசியை கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு புலம் திருப்புகிறது என்றால், அறையில் இருக்கும் ஆவியும் அதைத் திருப்பலாம்தானே? என்பதுதான் அன்றைய அறிஞர்களின் சயின்டிபிக் லாஜிக்.

தந்தி மிஷினில் சில மேம்பாடுகளைச் செய்த தாமஸ் ஆல்வா எடிசன் கூடத் தனது வாழ்நாளின் இறுதியில் "இறந்தவர்களுடன் பேசுவதற்கான ஒரு மின்னணு சாதனத்தை உருவாக்க முயல்கிறேன்." என்று பேட்டி கொடுத்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

ஆனால், இதில் ஒரு சிறிய, மிக நுட்பமான வித்தியாசம் இருந்தது. அன்றைய மக்கள் அதை வேண்டுமென்றே கவனிக்கத் தவறினார்கள் அல்லது கவனிக்க விரும்பவில்லை.

அது என்னவென்றால், எக்ஸ்ரே கண்ணுக்குத் தெரியாதுதான். ஆனால், அதன் விளைவு துல்லியமானது. நீங்கள் எத்தனை முறை எக்ஸ்ரே எடுத்தாலும், அது ஒரே மாதிரி எலும்பைத்தான் காட்டும். அதை புகைப்படத் தகடில் பதிவு செய்ய முடியும். எந்த ஆய்வகத்திலும் அதைத் திரும்பச் செய்து நிரூபிக்க முடியும்.

ரேடியோ அலைகளும் அப்படியே. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் சிக்னல் அனுப்பினால், உலகத்தில் எந்தக் மூலையில் இருக்கும் ரிசீவரும் அந்தச் சிக்னலைப் பிடிக்கும்.

ஆனால் ஆவிகள்?

அது மூட் இருக்கும்போது மட்டும் வரும்! வெளிச்சம் போட்டால் ஓடிவிடும்! கேமரா வைத்தல் வேலை செய்யாது! சந்தேகப்பட்டால் ஆவி கோபித்துக் கொண்டு பேசாது!

அறிவியல் என்பது தெரியாததைச் சோதித்து, நிரூபித்து, தெரிந்துகொள்ளும் பாதை. மனித மனமோ தெரியாத வெற்றிடத்தில் தனக்கு விருப்பமான பயங்களையும் ஆசைகளையும் நிரப்பும் பாத்திரம்.

ரேடியோ அலைகளும் எக்ஸ்ரேக்களும் மின் காந்த ஸ்பெக்ட்ரமின் இயற்பியல் பகுதிகள்.

ஆவிகள் என்பவை மனித விருப்பங்களின், மன மாயைகளின் மனோவியல் ஸ்பெக்ட்ரம்!

சரி, இதெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் முடிந்துவிட்டதா என்றால், நிச்சயமாக இல்லை!

இன்றைக்கும் நாம் புதுப் புது தொழில்நுட்பங்கள் வரும்போதெல்லாம், நமது பழைய மூடநம்பிக்கைகளுக்குப் புதிய அறிவியல் சாயத்தைப் பூசிக் கொண்டுதானே இருக்கிறோம்?

தொழில்நுட்பங்கள் மாறுகின்றன. ஆனால் மனிதனின் அடிப்படை மனநிலை மாறவே இல்லை.

மனிதன் எப்போதும் தன் அஞ்ஞானத்தை மறைக்க, அன்றைய அதிநவீன அறிவியலையே அமானுஷ்யங்களுக்கு ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறான்.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், எக்ஸ்ரேயும் ரேடியோ அலைகளும் மனிதனின் உடலையும் தொடர்பையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன. ஆனால் மனித மனமோ, அந்த அலைகளின் மீதேறித் தன் பழங்கால பேய்களுடனும் ஆவிகளுடனும் பயணம் செய்யவே ஆசைப்பட்டது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****