டாஸ்மாக் கொடுத்த தைரியமும்,
ரேஷன் கார்டு கொடுத்த பயமும்!
திண்டுக்கல்
அருகே நடந்த சம்பவம், நம் சமூகத்தின் மகத்தான அறிவுச் செறிவை
மீண்டும் ஒருமுறை உரக்கப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.
பாவம்
அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலரான ஆசிரியை!
அரசு
சொன்ன பணியைச் செய்யப் அலைபேசியும் அடையாள அட்டையுமாகத் தெருவில்
இறங்கியிருக்கிறார்.
"வீட்டில்
எத்தனை பேர்? சொந்த வீடா?" என்று
கேட்டதற்கு, எதிரே நின்ற ஒரு போதை ஞானிக்கு வந்த கோபத்தைப்
பார்க்கையில், ஏதோ நாட்டின் உளவுத்துறை
ரகசியத்தைத் திருட வந்த சர்வதேச உளவு அமைப்பைப் போல் அந்த ஆசிரியையைப்
பார்த்திருக்கிறார்.
"நான் இந்தக் கட்சிக்காரன், என்னிடமே கேட்கிறாயா?"
என்று பொங்கியவர், பிறகு காவல்துறையிடம்
கைதாகும்போது "நான் அந்தக் கட்சிக்காரன், என்னையே கைது
செய்கிறீர்களா?" என்று எகிறியிருக்கிறார்.
அந்தக்
குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் வழக்கம் போல் "அவர் எங்கள் ஆளே இல்லை"
என்று கையை விரித்துவிட்டார்கள். கடைசியில், அவர் எந்தக்
கட்சிப் பிரமுகரோ இல்லையோ, டாஸ்மாக்கின் அதிதீவிரக் கடமை
தவறாத தொண்டர் என்பது மட்டும் மிகத் தெளிவாகிறது.
இங்கே
பிரச்சனை வெறும் கணக்கெடுப்பு அல்ல; மக்களின் ஆழ்மனப் பயம்.
"சொந்த
வீடு இருக்கிறது என்று சொன்னால், ரேஷன் அரிசியை நிறுத்தி
விடுவார்களோ? ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை இல்லாமல் செய்து
விடுவார்களோ?" என்ற பயம்தான், ஓர்
அரசாங்க ஊழியரின் முகத்தில் ஓங்கி அறையும் அளவுக்கு வீரத்தை வளர்க்கிறது.
அறிவையும்
தெளிவையும் வளர்க்கத் தவறிய சமூகம், சந்தேகத்தையும்
பயத்தையும் மட்டும் மிக நேர்த்தியாகப் பராமரித்து வருகிறது.
அரசாங்கம்
இனி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன், "ஐயா
சாமி! இந்த கேள்விக்கும் உங்கள் ரேஷன் கார்டுக்கும் எந்தச் சம்பந்தமும்
இல்லை" என்று ஊர் ஊராகத் தண்டோரா போட வேண்டும் போலிருக்கிறது.
அல்லது, ஆசிரியர்களுக்குக் கணக்கெடுப்புக் கருவிகளோடு சேர்த்து, தற்காப்புக் கலைச் சான்றிதழையும், தலையில்
போடுவதற்கு ஒரு ஹெல்மெட்டையும் வழங்க வேண்டும் போலிருக்கிறது.
அரசியல்
அடையாளம், மதுபோதை, ரேஷன் கார்டு பயம்
என இந்த மூன்றும் சேரும்போது பிறக்கும் அறியாமை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு
இந்தச் சம்பவமே சாட்சி. இந்தச் சமூகத்திற்கு இப்போது தேவை கணக்கெடுப்பு மட்டுமல்ல,
கொஞ்சம் அடிப்படை நாகரிகமும், தெளிவும்தான்.
*****











