Tuesday, 12 May 2026

கின்ட்சுகி – விரிசல்களுக்கு ஒரு கோல்டன் டச்!

கின்ட்சுகி – விரிசல்களுக்கு ஒரு கோல்டன் டச்!

வாழ்க்கையில் ஏதாவது ஒன்று உடைந்து போனால் நாம் என்ன செய்வோம்? வேஸ்ட் என்று குப்பையில் போடுவோம். அல்லது பெவிகால் போட்டு ஒட்டிவிட்டு, அந்தத் தழும்பு தெரியாமல் இருக்கப் பெயிண்ட் அடிப்போம்.

ஆனால், ஜப்பானியர்கள் விசித்திரமானவர்கள். அவர்கள் உடைந்து போனதை மறைப்பதில்லை. மாறாக அதைத் தங்கத்தால் கொண்டாடுகிறார்கள். இதற்குப் பெயர் கின்ட்சுகி. ஜப்பானிய மொழியில் இதற்கு தங்கத்தால் இணைத்தல் என்று அர்த்தம்.

இந்தக் கின்ட்சுகி பற்றி அறிய நாம் பதினைந்தாம் நூற்றாண்டு ஜப்பானுக்குள் ஒரு காலப் பயணம் செய்ய வேண்டும்.

ஜப்பானின் பெரிய தளபதி ஒருவர், தான் ஆசையாக வைத்திருந்த சீனத் தேநீர்க் கோப்பை உடைந்ததும், அதைச் சரி செய்யச் சீனாவுக்கு அனுப்பினார். அவர்கள் அதை ஒரு மொக்கையான இரும்பு கம்பி வைத்து, எப்படியோ ஒட்டி அனுப்பினார்கள். அதைப் பார்த்த அந்தத் தளபதிக்குக் கோபம் வரவில்லை, ஓர் ஐடியா வந்தது.

அங்கேதான் உருஷி மரத்தின் பிசினையும், தங்கம் அல்லது வெள்ளிப் பொடியையும் கலந்து ஒட்டும் கலை பிறந்தது. உடைசல் என்பது அசிங்கமல்ல, அது அந்தப் பொருளின் வரலாற்றில் ஒரு முக்கியமான ஈவென்ட் என்று அவர்கள் கருதினார்கள்.

இதன் பின்னால் ஒரு பெரிய பிலாசபி இருக்கிறது. அதற்குப் பெயர் வாபி சாபி. அதன்படி,

உலகம் பெர்ஃபெக்ட் கிடையாது.

எதுவும் நிரந்தரம் கிடையாது.

குறைகள்தான் அழகு.

இன்று இன்ஸ்டாகிராமில் பில்டர் போட்டு நம் குறைகளை மறைத்துக் கொண்டிருக்கும் டிஜிட்டல் யுகத்தில், இந்த வாபி சாபி ஒரு முக்கியமான மெசேஜ் சொல்கிறது. உடைந்து போனதைச் சரி செய்வது என்பது அதன் பழைய வடிவத்தை மீட்டெடுப்பது அல்ல, ஒரு புதிய வடிவத்தை உருவாக்குவது.

இதை வைத்து தத்துவ அறிஞர்கள் ஒரு விசயத்தைச் சொல்கிறார்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கிற தோல்விகளும், மனக்காயங்களும் கின்ட்சுகி மாதிரிதான். சிதறிப்போன துண்டுகளை எடுத்து மீண்டும் ஒட்டும்போது, அந்தத் தழும்புகள் தங்கம் போல மின்னும் என்கிறார்கள். அதாகப்பட்டது, தழும்புதான் அழகு என்கிறார்கள்.

இன்று இந்த நுட்பத்தை மனநல மருத்துவர்களும், டிசைனர்களும் ஒரு தெரபியாகப் பயன்படுத்துகிறார்கள். நம் வாழ்வின் விரிசல்களைச் சரி செய்ய முயலாமல், அவற்றை ஒரு புதிய படைப்பாகப் பார்க்கத் பழகினால் அதுவே ஒரு பெரிய ஹீலிங் என்பதுதான் இதன் பின்னுள்ள தத்துவம்.

இனிமேல் உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் பார்த்து அழாதீர்கள். உங்களிடம் கொஞ்சம் தங்கமும் அதாவது நம்பிக்கையும், உருஷி பிசினும் அதாவது பொறுமையும் இருந்தால், நீங்கள் பழையதை விட அழகான ஒரு புதிய மனிதராக மாற முடியும்.

ஆக, விசயம் இதுதான். தழும்புகளை மறைக்காதீர்கள். அவை உங்கள் வெற்றியின் அடையாளங்கள்!

*****

Monday, 11 May 2026

மூவிங் மெடிடேஷன் – பாத்திரம் கழுவினாலும் ஒரு பரவசம்!

மூவிங் மெடிடேஷன் – பாத்திரம் கழுவினாலும் ஒரு பரவசம்!

தவம் செய்ய இமயமலைக்குப் போக வேண்டும் அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கண்ணை மூடிக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் பழைய மாடல். இப்போது டிரெண்டில் இருப்பது மெடிடேஷன் இன் மோஷன். அதாவது, நடந்துகொண்டே, வேலை செய்துகொண்டே செய்யும் தியானம்.

நீங்கள் வாசலில் பேப்பர் எடுக்க நடக்கும்போது அல்லது அடுக்களையில் பாத்திரம் கழுவும்போது கூட உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

ஆற்றங்கரையில் அமர்ந்து ஆற்றில் இலைகள் மிதந்து போவதைப் பார்ப்பது போல, உங்கள் எண்ணங்களை ஓட விடுங்கள். அந்த எண்ணத்தோடு நீங்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்படாமல், கரையில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதுதான் மைண்ட்புல்னஸ் என்கிறார்கள்.

இதில் மூளைக்குள் நடக்கும் கெமிஸ்ட்ரி என்ன தெரியுமா?

அறிவியல் ரீதியாக, நீங்கள் கவனத்துடன் ஒரு வேலையைச் செய்யும்போது உங்கள் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் அமைப்புகள் மாறுகின்றன. மூளையின் ஒர்க்கிங் மெமரி கூடுகிறது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் சரண்டர் ஆகின்றன.

உண்மை என்னவென்றால், உங்கள் மூடை மாற்ற வேண்டுமா? உங்களுக்கு உடனே உற்சாகம் வேண்டுமா?

5 நிமிடம் போதும்!

இந்தச் சின்ன டெக்னிக்குகளைப் பண்ணிப் பாருங்கள்:

எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு உங்கள் பாதங்களைக் கவனியுங்கள். தரையில் பாதம் படும் உணர்வை ரசியுங்கள். விரல்களை லேசாக அசைத்துப் பாருங்கள். கவனம் பாதத்திற்கு மாறும்போது, மூளை தானாகவே ரிலாக்ஸ் மோடுக்கு மாறிவிடும்.

4 விநாடி மூச்சை உள்ளே இழுங்கள். 7 விநாடி நிறுத்துங்கள். 8 விநாடி மெதுவாக வெளியே விடுங்கள். இது உங்கள் நரம்பு மண்டலத்தை ரீசெட் செய்யும் சுவிட்ச்.

காலையில் காபி குடிக்கும்போது வெறும் 30 விநாடி, அந்த சூடு, மணம், நாக்கில் படும் சுவை என இதை மட்டும் கவனியுங்கள்.

மனம் அலைபாயும்போது உங்களை நிகழ்காலத்திற்கு கொண்டு வர இது ஒரு சூப்பர் பார்முலாவும் இருக்கிறது. அது இதுதான்,

5 விஷயங்களைப் பாருங்கள்.

4 விஷயங்களைத் தொட்டு உணருங்கள்.

3 சத்தங்களைக் கேளுங்கள்.

2 வாசனைகளை நுகருங்கள்.

1 சுவையை உணருங்கள்.

இந்த சிம்பிள் பயிற்சி உங்கள் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் பகுதிகளை ஆக்டிவேட் செய்கிறது.

ஒரு நாளைக்கு வெறும் 10 நிமிடம் மைண்ட்புல்லாக இருந்தால் போதும், டிப்ரஷன் ஓடிவிடும். நீங்கள் எவ்வளவு நேரம் செய்கிறீர்கள் என்பதை விட, எவ்வளவு தொடர்ச்சியாக செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

மைண்ட்புல்னஸில் கொஞ்சம் கிரியேட்டிவிட்டியைக் கலந்தால் அது ஒரு பழக்கமாகவே மாறிவிடும் என்கிறார்கள். உங்களிடம் கிரியேட்டிவிட்டிக்கா பஞ்சம்?

பாத்திரம் கழுவும்போது சோப்பு நுரை கையில் படும் உணர்வையோ அல்லது நடக்கும்போது காற்று முகத்தில் படும் சிலிர்ப்பையோ கவனிக்கத் தொடங்குங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு பெரிய ஓட்டம் அல்ல. அது சின்னச் சின்னத் தருணங்களின் தொகுப்பு.

10 நிமிடம் தியானம் செய்ய நேரமில்லை என்று சொல்பவர்களுக்காகவே இந்த மூவிங் மெடிடேஷன். எனவே, பாத்திரம் கழுவுவது இனி பாரமல்ல, அது ஒரு பரவசம்!

*****

Sunday, 10 May 2026

அண்டர்கிரவுண்ட் ஆர்ட் – டிக்கெட் தேவையில்லாத மியூசியங்கள்!

அண்டர்கிரவுண்ட் ஆர்ட் – டிக்கெட் தேவையில்லாத மியூசியங்கள்!

நமக்குத் தெரிந்த சுரங்கப்பாதைகள் எல்லாம் எப்படி இருக்கும்? கச்சடா வாசனை, கசகசப்பான கூட்டம், சுவர்களில் யாராவது கரியால் கிறுக்கி வைத்திருக்கும் ஆபாச வசனங்கள். ஆனால், உலகின் சில மூலைகளில் தரைக்கு அடியில் ஒரு கலாச்சாரப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.

அங்கே நீங்கள் ரயிலுக்காகக் காத்திருக்க வேண்டாம், ஓவியங்களைப் பார்க்கவே ரயிலைத் தவற விடலாம்!

ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் மெட்ரோ சிஸ்டம்தான் இதற்கு பெஞ்ச்மார்க். அங்கே இருக்கும் 100 ஸ்டேஷன்களில் 90க்கும் மேற்பட்டவை கலைக்கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. சுமார் 150 கலைஞர்கள் இந்தச் சுரங்கச் சுவர்களைத் தங்கள் கேன்வாஸாக மாற்றி வருகிறார்கள். மியூசியத்திற்குள் காலடி எடுத்து வைக்காத பாமரனுக்கும் கலை போய்ச் சேர வேண்டும் என்பதுதான் இதன் லாஜிக்.

நியூயார்க் மெட்ரோவிலும் ஓர் ஆர்ட்ஸ் மற்றும் டிசைன் புரோகிராம் இருக்கிறது. அங்கே மேஸ்ட்ரான்சிஸ்கோப் என்றொரு மேஜிக் உண்டு. ரயில் ஒரு பழைய கைவிடப்பட்ட ஸ்டேஷனைக் கடக்கும்போது, ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒரு சினிமா ஓடுவது போலத் தெரியும். ஜோட்ரோப் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

மேன்ஹாட்டன் தெரு ஸ்டேஷனில் செதுக்கப்பட்டிருக்கும் 680 சதுர அடி பறவை மொசைக்கைப் பார்த்தால், நீங்கள் ஒரு கான்கிரீட் காட்டில் இருக்கிறீர்கள் என்பதே மறந்து போகும்.

மாஸ்கோவின் நோவோஸ்லோபோட்ஸ்கயா ஸ்டேஷனில் இருக்கும் 32 வண்ணக் கண்ணாடி ஓவியங்கள் உங்களை ஏதோ ஒரு பழைய கதீட்ரல் தேவாலயத்திற்குள் இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கும்.

இத்தாலியின் டொலிடோ ஸ்டேஷன் ஓர் அண்டர்வாட்டர் அனுபவம். அங்கே இருக்கும் நீல நிற மொசைக்குகளும், ஒளி அமைப்புகளும் நீங்கள் கடலுக்கு அடியில் இருப்பதாக உணர வைக்கும். இது வெறும் மியூசியம் அல்ல, நம் காலத்தின் சாட்சி என்கிறார் இதன் கலை ஒருங்கிணைப்பாளர்கள்.

நார்வேயில் இருக்கும் பதினைந்து மைல் நீளமுள்ள லேர்டல் சுரங்கப் பாதையில் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் களைப்பையும், க்ளாஸ்ட்ரோபோபியா எனும் மூடிய இடத்தைக் கண்டால் வரும் பயம் மற்றும் மனக்கவலையையும் போக்க விசேஷமான லைட் ஆர்ட் வைத்திருக்கிறார்கள்.

பாரிஸில் இருக்கும் ஒரு ஸ்டேஷனோ முழுதாகச் செப்புத் தகடுகளால் வேயப்பட்டு, ஏதோ ஒரு சயின்ஸ் பிக்சன் நாவலுக்குள் இருப்பது போன்ற ஸ்டீம்பங்க் அழகியலில் மின்னுகிறது.

கலை என்பது வெறும் வெள்ளைச் சுவர்களுக்குள் மாட்டப்பட்டிருக்கும் விலை உயர்ந்த சட்டங்கள் அல்ல. அது சராசரி மனிதனின் அன்றாடப் பயணத்தை அழகாக்கும் ஒரு கருவி. இப்போது நம் நாட்டிலும் இது போன்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடுத்த முறை நீங்கள் ஏதோ ஒரு சுரங்கப்பாதையில் செல்லும்போது சுவர்களைக் கவனியுங்கள். அங்கே ஒரு கலைஞன் உங்களுக்காகக் காத்திருக்கலாம்!

*****

Saturday, 9 May 2026

ஜஸ்ட் லைக் தட் – ஒரு சந்திப்பு ஒரு சரித்திரம்!

ஜஸ்ட் லைக் தட் – ஒரு சந்திப்பு ஒரு சரித்திரம்!

வாழ்க்கை என்பது ஒரு ரயில்வே ஸ்டேஷன் மாதிரி. அங்கே நீங்கள் யாரை சந்திக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கிறது. தற்செயல் என்று நாம் சாதாரணமாகச் சொல்லும் ஒரு ஹலோ, பின்னாளில் ஒரு ட்ரில்லியன் டாலர் கம்பெனியாகவோ அல்லது ஒரு உலகப் புகழ்பெற்ற நாவலாகவோ மாறக்கூடும்.

வரலாற்றின் சுவாரஸ்யமான சில கோயின்சிடன்ஸ் கதைகளைப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.

அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா?

அது ஜெனிவா ஏரிக்கரை. மேரி ஷெல்லி என்பவர் அங்கே சுற்றுலா சென்றிருந்தார். அங்கே தற்செயலாக லார்ட் பைரன் அறிமுகமானார். ஒரு மழை பெய்த அந்த போரடிக்கும் இரவில், யார் நல்ல பேய் கதை எழுதுகிறார்கள் என்று பார்ப்போம், என ஒரு போட்டி நடத்தினார்கள்.

ரிசல்ட் என்ன தெரியுமா?

மேரி ஷெல்லி எழுதியதுதான் உலகப்புகழ் பெற்ற பிராங்கென்ஸ்டைன்.

அதே இரவில் பைரனின் டாக்டர் ஜான் பொலிடோரி எழுதியதுதான் முதல் நவீன வாம்பயர் கதை. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலாவுக்கெல்லாம் 80 வருடம் சீனியர் இது!

லண்டன் டார்ட்போர்ட் ரயில் நிலையம். பதினெட்டு வயது மிக் ஜாக்கர்  ரயிலுக்காகக் காத்திருந்தார். அங்கே பழைய பள்ளி நண்பன் கீத் ரிச்சர்ட்ஸை எதேச்சையாகச் சந்தித்தார். இருவருக்கும் மியூசிக் என்றால் உயிர். அந்த ரயில் பிளாட்பார்ம் உரையாடல்தான் பின்னாளில் உலகையே அதிர வைத்த தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு பிறக்கக் காரணம்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு சீனியர் மாணவர், புதுசாக வந்த ஒரு பையனுக்கு கேம்பஸைச் சுற்றிக் காட்டிக்கொண்டிருந்தார். சீனியர் பெயர் செர்ஜி பிரின். ஜூனியர் பெயர் லாரி பேஜ்.

ஆச்சரியம் என்னவென்றால், அந்த டூரில் அவர்கள் இருவரும் எதற்கு எடுத்தாலும் விவாதம் செய்தார்கள், சண்டை போட்டார்கள். அந்த மோதல்தான் ஒரு பார்ட்னர்ஷிப்பாக மாறியது. ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்த அந்தச் சந்திப்பு இன்று கூகுள் எனும் ட்ரில்லியன் டாலர் சாம்ராஜ்யம்!

ஹென்றி போர்டு ஒரு சாதாரண இன்ஜினியராகத் தாமஸ் ஆல்வா எடிசனை ஒரு மீட்டிங்கில் சந்தித்தார். பெட்ரோலில் ஓடும் கார் பற்றிய போர்டின் ஐடியாவைக் கேட்டு எடிசன் உற்சாகமாக மேஜையைத் தட்டிப் பாராட்டினார். உங்க ஐடியா சூப்பர், பண்ணுங்க! என்றார் எடிசன். அந்த ஒரு ஊக்கம் தான் போர்டு மோட்டார் கம்பெனி உருவாகவும், உலகமே கார்களில் பறக்கவும் அச்சாரம் போட்டது.

அடுத்த முறை நீங்கள் ஒரு பேருந்துக்காகவோ அல்லது ரயிலுக்காகவோ காத்திருக்கும்போது, பக்கத்தில் இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லுங்கள். யார் கண்டது? நீங்கள் ஒரு புதிய உலகத்தையே உருவாக்கப் போகும் ஒருவரைச் சந்திக்கக்கூடும்!

இது போன்ற கதைகள் ஏராளம். காத்திருங்கள்.

*****

Friday, 8 May 2026

தொலைந்து போதல் – ஒரு சக்ஸஸ் பார்முலா!

தொலைந்து போதல் – ஒரு சக்ஸஸ் பார்முலா!

நாமெல்லாம் ஜிபிஎஸ் யுகத்தில் வாழ்கிறோம். ஓர் அடி எடுத்து வைக்க வேண்டுமானாலும் நமக்கெல்லாம் இப்போது கூகுள் மேப் வேண்டும். ஆனால், வாழ்க்கையில் சில சமயம் ரூட் தெரியாமல் தொலைந்து போவதுதான் உங்களை சரியான இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் என்கிறது வாழ்வியல்.

சில ஆய்வுகளின்படி, தெரியாத இடங்களுக்குச் செல்வதும், குழப்பத்தில் இருப்பதும் நம் மூளையின் கவனிக்கும் திறனை அதிகப்படுத்துகிறதாம். மூளை ஒரு ஸ்ட்ரெஸ் ரெஸ்பான்ஸ் மூலம் புது தகவல்களை வேகம் வேகமாகச் சேமிக்கத் தொடங்குகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், வழி தெரியாமல் திகைக்கும்போது உங்கள் மூளை இன்னும் ஷார்ப் ஆகிறது!

இதை உலகை மாற்றிய பெரிய ஜாம்பவான்களின் வாழ்வியல் அப்படியே நிரூபிக்கிறது.

ரீட் கல்லூரியிலிருந்து டிராப் அவுட் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ், சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு கலிகிராபி வகுப்பில் போய் உட்கார்ந்தார். இதெல்லாம் என் வாழ்க்கையில் எங்கே பயன்படப்போகிறது? என்று அவரே அப்போது நினைத்தார்.

ஆனால், 10 வருடங்கள் கழித்து முதல் மேகிண்டோஷ் கம்ப்யூட்டரை டிசைன் செய்தபோது, அந்த எழுத்துருக்கள்தான் புரட்சியை ஏற்படுத்தின. ஜாப்ஸ் அன்று அந்த வகுப்பில் தொலையாமல் இருந்திருந்தால், இன்று கணினியில் இத்தனை அழகான எழுத்துக்கள் இருந்திருக்காது.

3M நிறுவனத்தின் விஞ்ஞானி ஸ்பென்சர் சில்வர் ஒரு சூப்பர் ஸ்ட்ராங் பசையைத் தயாரிக்க முயன்றார். ஆனால் வந்தது என்னவோ ஒரு மொக்கையான, ஒட்டவே ஒட்டாத பசை. வேஸ்ட் என்று அவர் நினைத்த அந்தத் தோல்விதான், பின்னாளில் போஸ்ட் இட் நோட்ஸாக மாறியது. இன்று வருஷத்திற்கு 50 பில்லியன் நோட்கள் விற்பனையாகின்றன. ஒரு தவறான திருப்பம், பில்லியன் டாலர் பிசினஸாக மாறிய விந்தை இது.

ஓப்ரா வின்ப்ரேவை அப்போது திடீரென நியூஸ் ஆங்கர் வேலையிலிருந்து தூக்கினார்கள். டிவி செய்திகளுக்கு நீங்கள் லாயக்கில்லை, என்றார் ஒரு புரொடியூசர். அவமானப்பட்டு நின்ற ஓப்ராவுக்குக் கிடைத்தது ஒரு பகல் நேர டாக் ஷோ. அதுதான் அவர் வாழ்க்கையின் டர்னிங் பாயிண்ட். இன்று அவர் ஒரு மீடியா பேரரசி. அன்று அந்த வேலையிலிருந்து அவர் நீக்கப்படாமல் இருந்திருந்தால், ஒரு சாதாரண செய்தி வாசிப்பாளராகவே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார்.

ஜென் ஸ்காலியா என்ற பெண்மணிக்கு விவாகரத்து ஆகி, கையில் காசில்லாமல் தன் பெற்றோருடன் வந்து தங்கியபோது, தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தார். ஆனால், அந்த ராக் பாட்டம் அதாவது அந்த மிக மோசமான நிலைதான் அவரை மாற்றியது. மில்லியன் டாலர் மாம்மி என்ற நிறுவனத்தைத் தொடங்கி, இரண்டே வருடத்தில் 5 லட்சம் டாலர் சம்பாதித்தார். என் விவாகரத்துதான் நான் எடுத்த சிறந்த பிசினஸ் முடிவு, என்கிறார் அவர்.

எம்மா கேட்வுட் என்ற 67 வயதுப் பாட்டி, ஒருநாள் வீட்டில், சும்மா ஒரு நடை போயிட்டு வர்றேன், என்று சொல்லிவிட்டு கிளம்பினார். சாதாரண கேன்வாஸ் ஷூக்களைப் போட்டுக் கொண்டு, 2,190 மைல் நீளமுள்ள அப்பலேசியன் ட்ரெயில்  பாதையைத் தனியாகக் கடந்து சாதனை படைத்தார். பலமுறை வழிதவறித் தொலைந்து போனார், ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னைப்பற்றிய புதிய ரகசியங்களைக் கண்டறிந்தார்.

ஆக, விசயம் இதுதான். வாழ்க்கை என்பது ஒரு ப்ரீ பிளான்ட் டூர் அல்ல. அது ஒரு அட்வென்ச்சர். சில சமயம் தவறான ரயிலில் ஏறுவதும், தவறான பாதையில் திரும்புவதும், உங்களுக்கான மேஜிக் உலகைக் காட்டுகின்றன.

எனவே, தொலைந்து போவதைத் தாராளமாகக் கொண்டாடுங்கள்! ஆம், அதை அவநம்பிக்கையோடு பார்ப்பதற்கோ, அதை அபசகுனமாகக் கருதுவதற்கோ அதில் எதுவும் இல்லை. அது உங்களுக்கு ஒரு டர்னிங் பாய்ண்டாகி, உங்கள் புதிய நட்சத்திரம் உதிப்பதற்கான ரூட் மேப்பாகவும் அது அமையக் கூடும்.

*****

Thursday, 7 May 2026

+2 தேர்வு முடிவுகள் 2026 – புள்ளி விவரப் பகுப்பாய்வு

+2 தேர்வு முடிவுகள் 2026 – புள்ளி விவரப் பகுப்பாய்வு

2026 ஆம் ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (08.05.2026) வெளியாகியுள்ளன. இதன் புள்ளி விவரப் பகுப்பாய்வினைக் கீழே காண்க.





*****

சிரிப்பு – ஒரு சூப்பர் பவர் மருந்து!

சிரிப்பு – ஒரு சூப்பர் பவர் மருந்து!

ஆஸ்பத்திரி என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த நீல நிறப் போர்வைகள், டெட்டால் வாசனை, அப்புறம் பரபரப்பாக இருக்கும் நர்ஸ்கள். சீரியசான டாக்டர் முகம். இப்படிப்பட்ட சூழலில், உள்ளே ஒரு கோமாளி எனும் கிளவுன் நுழைந்தால்?

இடுப்பில் ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதில் ஒரு பிளாஸ்டிக் தக்காளி. கையில் ஊசிக்குப் பதில் ஒரு பலூன். இதைப் பார்ப்பதற்கே ஒரு தெரபி வேண்டும். இதற்குப் பெயர்தான் மெடிக்கல் கிளவுனிங்.

இந்த விசித்திரமான ஐடியாவை முதலில் ஆரம்பித்தவர் டாக்டர் ஹண்டர் பேட்ச் ஆடம்ஸ்.

சிரிப்புதான் மிகச்சிறந்த மருந்து, என்று சும்மா பழமொழி சொல்லாமல், ஆடம்ஸ் நிஜமாகவே ஒரு சிகப்பு மூக்கை மாட்டிக்கொண்டு வார்டுக்குள் நுழைந்தார். இன்று இது ஓர் அங்கீகரிக்கப்பட்ட புரொபஷனல் படிப்பு.

இந்தத் துறையின் இன்னொரு விவிஐபி மைக்கேல் கிறிஸ்டென்சன். குழந்தைகள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியவர்கள் அல்ல, கோமாளிகளும் அப்படித்தான், என்பது அவர் லாஜிக்.

நாங்கள் அங்கே போய் சைக்காலஜி பேசப்போவதில்லை, ஒரு குழந்தையின் கண்களில் இருக்கும் அந்தச் சிறு ஆச்சரியப் பொறியைப் பிடித்துப் பெரிதாக்குகிறோம், அவ்வளவுதான், என்கிறார் மனிதர்.

சும்மா சிரிப்புக்காகச் சொல்லவில்லை, இதில் பியூர் சயின்ஸ் இருக்கிறது.

எப்படி என்கிறீர்களா?

ஆராய்ச்சிகளின் படி, தூங்குவதற்கு முன் இந்த கிளவுன் டாக்டர்களுடன் விளையாடும் குழந்தைகளுக்குத் தூக்கம் பிரமாதமாக வருகிறதாம்.

சிரிக்கும்போது மூளையில் எண்டார்பின் சுரக்கிறதாம். இது வலியைக் குறைக்கும் ஒரு இயற்கை அனஸ்தீசியா.

இஸ்ரேலில் உள்ள எல்லாப் பெரிய ஆஸ்பத்திரிகளிலும் 100க்கும் மேற்பட்ட கிளவுன்கள் இருக்கிறார்கள். அங்கே குழந்தைகள் டாக்டரைத் தேடுவதில்லை, இந்த ஜோக்கர்களைத்தான் தேடி ஓடுகிறார்கள்.

அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் யாரோ ஒருத்தர் கோமாளி போல டிரஸ் பண்ணிக்கொண்டு வந்து குதிப்பது கிளவுனிங் ஆகாது. இதற்குப் பயங்கரமான டிரெய்னிங் உண்டு. கடுமையான ஆடிஷன், இன்டர்ன்ஷிப், நூற்றுக்கணக்கான மணிநேர மெடிக்கல் புரோட்டோகால் வகுப்புகள் என்ற இது பக்கா புரொபஷனல்.

ஒரு சீரியஸான பேஷண்ட்டிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதோடு, அந்த மருத்துவ அறையின் வைப் என்ன என்பதை அவர்கள் துல்லியமாக உணர்ந்திருக்க வேண்டும். இவர்கள் தங்களது சிரிப்பு மூலம் பெரிய சிகிச்சைகளைக் கூட ஒரு விளையாட்டாக மாற்றிவிடுவார்கள்.

மருந்துகள் உடலைக் குணப்படுத்தும். ஆனால், சிரிப்பு மனதைக் குணப்படுத்தும். அடுத்த முறை ஆஸ்பத்திரியில் யாராவது சிகப்பு மூக்கோடு அலைந்தால் கிண்டல் செய்யாதீர்கள். அவர் ஓர் உயிர்காக்கும் கோமாளி!

எல்லா நோய்களுக்கும் சிரிப்பு ஒரு நல்ல மருந்து என்பார்கள் நம் முன்னோர்கள். திருவள்ளுவரும் இடுக்கண் வருங்கால் நகுக என்பார். இப்போது ஆஸ்பத்திரிகளிலும் அதையே கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

*****