Sunday, 2 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.08.2026

1) கபினி அணையிலிருந்து 25000 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் நாளை தமிழகம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2) எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3) சூலை மாதத்தில் இந்தியாவின் ஜி.எஸ்.டி வசூல் 2.11 லட்சம் கோடியாக உள்ளது.

4) நேற்று ஒரே நாளில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 8 தங்கங்களை வென்று அசத்தியுள்ளது.

5) காமன்வெல்த் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Education & GK News

1) 25,000 cubic feet of water is being released into the Cauvery River from the Kabini Dam; this water is expected to reach Tamil Nadu tomorrow.

2) Medical counseling for MBBS and BDS courses is expected to begin on August 13.

3) India's GST collection for the month of July stands at Rs. 2.11 lakh crore.

4) India put up a spectacular performance by winning eight gold medals in a single day at the Commonwealth Games yesterday.

5) India has moved up to fourth place in the Commonwealth Games medal tally.

ஆன்மாக்கள் அழைப்பாளர்களா, காப்பாற்றுபவர்களா?

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 40

ஆன்மாக்கள் அழைப்பாளர்களா, காப்பாற்றுபவர்களா?

கார்த்திக் – ரமேஷ் – பிரகாஷ் கதைகளை விஞ்சும் கதைகள் நம் நாட்டை விட வெளிநாடுகளில் அதிகம்.

வில் பேர்ட் என்ற கனடிய வீரர் சொல்லும் கதை இது. அவர் சொல்கிறார், "போர்க்களத்தில் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்த என் அண்ணன் ஸ்டீவ் ஆவியாக வந்து என் கையைப் பிடித்து இழுத்தான். எழுந்திருடா! என்றான். நான் வெளியே ஓடி வந்த அடுத்த நிமிடம், நான் தூங்கிய இடத்தை ஒரு குண்டு தரைமட்டமாக்கியது!"

அடடா, என்ன ஒரு அண்ணன் தம்பி பாசம்! கூகுள் மேப் கூடக் கண்டுபிடிக்க முடியாத ஓர் ஆபத்தை, பரலோகத்திலிருந்து வந்து எச்சரித்திருக்கிறார் அண்ணன் ஸ்டீவ்.

அதே நேரத்தில், இன்னொரு பிரிட்டிஷ் வீரரின் கதை இப்படி இருக்கிறது, "அதோ என் அம்மா நிற்கிறாள். என்னை அழைக்க வந்துவிட்டாள்!" சொல்லி முடித்த அடுத்த விநாடி அவர் உயிர் பிரிகிறது.

இங்கேதான் ஒரு பெரிய கேள்வி பிறக்கிறது. பேய்கள் அல்லது ஆவிகள் என்பவை உயிரைக் காக்கும் லைப் ஜாக்கெட்டா? அல்லது உயிரைக் குடிக்கும் எமதர்மன்களா?

நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். போர்க்களம் என்பது சாதாரண இடம் அல்ல. அங்கே மரண பயம், தூக்கமின்மை, பசி, அட்ரினலின் ரஷ், ரத்த அழுத்தம் என எல்லாமே உச்சத்தில் இருக்கும்.

நமது மூளை ஒரு பயங்கரமான கம்ப்யூட்டர். மிகக் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும்போது, மூளை சில சமயம் ஹாலுசினேஷன் எனப்படும் மாயத்தோற்றங்களை உருவாக்கும்.

அப்படியானால் வில் பேர்டின் விசயத்தில் நடந்து என்ன?

வில் பேர்டின் ஆழ்மனம் தூக்கத்தில் ஏதோ ஓர் ஆபத்தை அதாவது, குண்டு வரும் சத்தத்தையோ அல்லது அதிர்வையோ உணர்ந்திருக்கலாம். மூளை உடனடியாக அவரை விழித்தெழச் செய்ய, அவருக்கு மிகவும் பிடித்த, நம்பிக்கையான அண்ணன் ஸ்டீவின் உருவத்தை ஓர் அலாரம் போலப் பயன்படுத்தியிருக்கலாம்.

அடுத்து அந்தப் பிரிட்டிஷ் வீரரின் விசயத்தில் என்ன நடந்திருக்கும்?

மரணத்தின் விளிம்பில், இதயத்தின் இயக்கம் குறையும்போது, மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அந்த நேரத்தில் அமைதியைத் தேடும் மனம், உலகிலேயே பாதுகாப்பான இடமான அம்மாவின் நினைவை வரைந்து காட்டுகிறது.

மனித மனம் ரொம்பவே சுவாரசியமானது. நமக்கு அசாதாரணமான ஒரு விஷயம் நடக்கும்போது, அதற்கு ஓர் அற்புதச் சாயம் பூசவே நாம் விரும்புவோம்.

"என் ஆழ்மனதின் அதிர்வு எச்சரித்தது" என்று சொல்வதை விட, "என் இறந்த அண்ணன் வந்து காப்பாற்றினான்" என்று சொல்வதில் ஒரு கவித்துவமும், ஆறுதலும் இருக்கிறது அல்லவா?

அதேபோல, "என் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மயக்கமடைந்தேன்" என்பதை விட, "அம்மா கூப்பிட வந்துட்டா" என்று சொல்வது மரணத்தின் பயத்தைக் குறைக்கிறது.

ஆவிகள் உண்மையிலேயே வந்து காப்பாற்றுகின்றனவா அல்லது எமனாக மாறுகின்றனவா?

உண்மையில், அங்கே வருவது அண்ணனோ, அம்மாவோ அல்ல. நமது சொந்த மூளைதான்! ஆபத்து காலத்தில் அது நம்மை ஓட வைக்கும் தேவதையாகவும் மாறுகிறது; மரணத்தின் தருணத்தில் வலியைக் குறைக்க அமைதியைத் தரும் அன்னையாகவும் மாறுகிறது.

இயற்கையின் இந்த கெமிஸ்ட்ரி மாயாஜாலம், எந்தப் பேய்க் கதையை விடவும் சுவாரசியமானதுதானே?

இப்போது கார்த்திக் – ரமேஷ் – பிரகாஷ் கதையில் என்ன நடந்திருக்கும்?

அதைச் சரியாகக் கமென்ட் பாக்ஸில் சொல்பவர்களுக்கு, அமானுஷ்யங்களின் அட்ரஸ் புத்தகமாக வெளியாகும் போது அதன் முதல் பிரதி பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 1 August 2026

மிஸ்டர் எமன் பிரம் மெயின்ரோடு!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 39

மிஸ்டர் எமன் பிரம் மெயின்ரோடு!

இரவு பன்னிரண்டு மணி.

திருவாரூர் – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அந்த எலெக்ட்ரிக் கார் சத்தமின்றி ஜரூராகச் சென்று கொண்டே சென்றது. காரை ஓட்டிக்கொண்டிருந்தான் கார்த்திக்.

மழை கொட்டிக்கொண்டிருந்தது. வைப்பர் கீச் கீச் சென்று கண்ணாடியைத் துடைத்தாலும், முன்னால் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த ரமேஷ், பயத்தில் கை நகங்களைக் கடித்துக்கொண்டிருந்தான்.

"டேய் கார்த்திக்.! இந்த ரூட்ல வேண்டாம்டா. நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இங்க ஓர் ஆக்சிடென்ட்ல உங்க அண்ணன் பிரகாஷ் இறந்துபோன இடம் இது. இன்னைக்கு அமாவாசை வேற" ரமேஷ் குரல் நடுங்கியது.

"லூசு மாதிரி பேசாத ரமேஷ். பேய், பிசாசு எல்லாம் மூடநம்பிக்கை. அண்ணன் இறந்தது ஒரு பேட் லக். மூளையோட அட்ரினலின் லெவல் ஏறும்போது வர்ற மாயத்தோற்றம்தான் பேய். விஜயராமனோட பிளாக்ஸ்பாட்டுல படிச்சதில்ல?"  கார்த்திக் உச்சந்தலையைக் கொஞ்சம் சொரிந்து கொண்டான்.

திடீரென காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ஓர் உருவம் தோன்றி மறைந்தது!

கார்த்திக் பதறிப்போய் பிரேக்கை மிதித்தான். கார் வீல் கீச்சென்ற சத்தத்துடன் ரோட்டின் ஓரத்தில் நின்று கிளாமர் நடிகையைப் போல ஒரு குலுங்கு குலுங்கியது.

எதிரே ரோட்டின் நடுவே அந்த உருவம் மழையில் நனைந்தபடி, கையை நீட்டி காரை நோக்கி வந்தது.

ரமேஷ் அலறினான், "டேய்! பிரகாஷ் அண்ணன்டா! அதே முகம்! அன்றைக்குப் போட்டிருந்த அதே சட்டை! செத்துப்போன உங்க அண்ணன் கனவுல நமீதா வர்றதப்  போல வந்துட்டான்டா!"

கார்த்திக் உறைந்துபோய் பார்த்தான். ஆமாம், அது பிரகாஷ்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் லாரி மோதி இறந்த அதே அண்ணன்.

பிரகாஷின் உருவம் காரின் விண்ட்ஸ்கிரீனை தட்டியது.

டக்... டக்... டக்...

"கார்த்திக்! காரை விட்டு வெளியே வா! சீக்கிரம் வா!" பிரகாஷின் குரல் தெளிவில்லாமல், ஏதோ ஒரு தொலைதூரத்தில் இருந்து வருவது போலக் கேட்டது.

கார்த்திக்கிற்கு மூளை வேலை செய்யவில்லை. செத்துப் போன அண்ணன் எப்படி வருவான்? இது என் ஆழ்மனதின் ஹாலுசினேஷனா? அல்லது உண்மையிலேயே ஆன்மாவா வந்திருக்கானா?'

"கார்த்திக், சீக்கிரம் இறங்குடா! கார் வெடிக்கப் போகுது!" ஆவி பிரகாஷ் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான்.

பயத்தில் கார்த்திக்கும் ரமேஷும் கதவைத் திறந்து கொண்டு வெளியே குதித்து, ரோட்டின் ஓரத்திற்கு ஓடினார்கள்.

அவர்கள் இறங்கிய அடுத்த ஐந்தாவது விநாடி.

டமால் என்ற சத்தம், அப்புறம் கார் தீப்பிடித்துக் கொண்டது.

அத்துடன் பின்னாலிருந்து அதிவேகமாக வந்த ஒரு லாரி, ஓரமாக நின்றிருந்த காரின் மீது பயங்கரமாக மோதியது. கார் அப்பளமாக நசுங்கித் தரைமட்டமானது.

கார்த்திக் மூச்சிரைக்கக் கீழே விழுந்தான்.

"கண்டேன் சீதையைங்றது போல, கண்டேன்டா ஆவியை. பேய் இருக்குடா கார்த்திக்! உங்க அண்ணன் ஆவியா வந்து நம்ம உயிரைக் காப்பாத்திருக்கான்!" என்று ரமேஷ் நடுங்கியபடி கத்தினான்.

கார்த்திக் மெல்ல எழுந்து நின்றான். மழைத் துளிகள் அவன் முகத்தில் அடித்தன. காப்பாற்றிய அண்ணனைத் தேடிச் சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை.

பேய்கள் இருப்பது உண்மையா?

அப்படி இருந்தால் அவை காப்பாற்றுவது உண்மையா?

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****