Showing posts with label அனுபவ மொழிகள். Show all posts
Showing posts with label அனுபவ மொழிகள். Show all posts

Wednesday, 28 December 2022

இலங்கைவேந்தனின் அனுபவ மொழிகள்

இலங்கைவேந்தனின் அனுபவ மொழிகள்

இலங்கை வேந்தனான இராவணன் லட்சுமணனுக்குச் சொன்னதாக ஒரு பகிர்வை புலனத்திலும் முகநூலிலும் பார்க்க நேர்ந்தது. வாழ்க்கைக்குப் பயன்படும் பல நல்ல அறிவுரைகள் கொண்ட அந்த அனுபவ மொழிகள் பலருக்கும் பயன்தரக் கூடியவை. அனைவரும் பயன்பெற எனக்கு அதைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி சொல்லி அனைவரும் பயன்பெற பகிர்கிறேன்.

இதோ அந்தப் பகிர்வு,

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன்; ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.

லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று, “இலங்கேஸ்வரா! உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும். எனவே எனக்கு உபதேசியுங்கள்.” என்று வேண்டி நின்றான்.

லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.

“லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம்.

அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது,

1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி. அது பலன் தரும்.

2. தீய செயலைத் தள்ளிப் போடு. தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.

4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை” என்று சொல்லி முடித்தான் ராவணன்.

அனைவருக்கும் பயன்படக் கூடிய எத்தனையோ அனுபவங்கள் இப்பகிர்வில் இருக்கின்றதுதானே!

*****

Tuesday, 27 December 2022

அடக்கம் குறித்த கவிஞர் வாலியின் 4 பதிவுகள்

அடக்கம் குறித்த கவிஞர் வாலியின் 4 பதிவுகள்

கவிஞர் வாலி பதிவு செய்ததாக முகநூலிலும் புலனத்திலும் வந்த இந்தப் பகிர்வின் பதிவை நீங்கள் படித்திருக்கக் கூடும். மனதைக் கனக்கச் செய்த பகிர்வுப்பதிவு இது. அடிக்கடி நாம் படித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதும் மனதில் பதிவு செய்து கொள்ள வேண்டியதுமான பதிவு என்றும் இதனைச் சொல்லலாம்.

"அடக்கமாகும் வரை, அடக்கமாக இரு" என்று தொடங்குகிறது இப்பதிவு. இப்பதிவில் நான்கு நபர்கள் காட்டப்படுகிறார்கள். அதன் பிறகுதான் அந்த நான்கு நபர்களும் யார் என்பது சொல்லப்படுகிறது. முதலில் வாலி குறிப்பிடும் அந்த நான்கு நபர்களைப் பார்த்து விடுவோம்.

1) முதல் நபர் :

 “தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம். இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்!” - இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும்போதெல்லாம் வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்! அவருக்கா இப்படியொரு சிரமம்!

2) இரண்டாவது நபர் :

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’ செய்து கொண்டு இருந்தபோது, கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர், "ஹாய் வாலி!" என்று இறங்கி வருகிறார். சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555. அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே!'' எவ்வளவு பெரிய நடிகர்! எம்.ஜி.ஆர்,

சிவாஜி படங்களில் நடித்த போது அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?!

3) மூன்றாவது நபர் :

என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது. ஒரு நடிகை. ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகின் முடிசூடா அரசி. பல பெரிய தயாரிப்பாளர்கள் அவரிடம் கால்ஷீட் கேட்டு, வருடக்கணக்கில்  காத்திருந்த காலம் உண்டு. என்னைப்பார்க்க வந்தவர், '"வாலி சார்! எனக்கு ஒரு நாடகம் எழுதிக்கொடுங்க. ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்'" என்று மெல்லிய குரலில் சொன்னார்.

4) நான்காவது நபர் :

சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத்தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன். ஓடிப்போய் அவரருகே சென்று,  "நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்கினேன். “ஓ நீங்கதான்  வாலியா?” என்று என் கைகளை பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போனேன். அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில் நிலையத்தில், ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ, அதே ரயில் நிலையத்தில், இன்று கவனிக்க ஆளில்லாமல், தனியாக  அமர்ந்திருந்த அவரது நிலையைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன். காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையைக் காட்டுகிறது. அந்தப் பழைய நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கிறேன்.

இப்படி அந்த நான்கு நபர்கள் பற்றியும் எழுதி விட்டு அந்த நான்கு நபர்கள் யார் என்பதை வாலி சொல்கிறார். அந்த நான்கு நபர்கள் யாரென்றால்,

1)  கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகப்புகழ் உரையாடல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் திரு இளங்கோவன்.

2) வாலியிடம் சிகரெட் கேட்டவர் திரு சந்திரபாபு.

3) நாடகம் எழுதித்தரக் கேட்டவர்  நடிகையர் திலகம் திருமதி சாவித்திரி.

4) எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

“இவர்களை விடவா நான் மேலானவன்? ஆகவே அடக்கமாகும் வரை அடக்கமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்று வாலி எழுதுகிறார்.

ஒரு நல்ல பகிர்வுப் பதிவு அல்லவா! மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் இப்பதிவைப் பகிரலாம். படித்துப் பயன் பெறலாம்தானே!

*****