Wednesday, 1 July 2026

ஆபரேஷன் சுடுகாடு

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 8

ஆபரேஷன் சுடுகாடு

நம்மூரில் நள்ளிரவு 12 மணிக்கு சுடுகாட்டுக்குப் போகச் சொன்னால், பகுத்தறிவு பேசுகிற பப்பரப்பாக்களுக்குக்கூட அடிவயிற்றில் ஜில்லென்று ஐஸ் வைப்பது போல் இருக்கும்.

ஆனால், இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. 2500 வருஷங்களுக்கு முன்பே ஓர் ஆள் இதையெல்லாம் லோக்கலாக டீல் செய்திருக்கிறார். அவர் பெயர் டெமாக்ரிடஸ்.  கிரேக்க நாட்டுத் தத்துவஞானி. நம் அட்ரஸ் தேடும் படலத்தைக் கொஞ்சம் கிரேக்கம் நோக்கித் திருப்புவோம்.

டெமாக்ரிடஸ்க்கு ஒரு சின்ன சந்தேகம். இந்த உலகமே அணுக்களால் ஆனது என்று உலகத்திலேயே முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்ன விஞ்ஞானி அவர். அப்படிப்பட்டவருக்கு இந்த பேய், பிசாசு, சுருளி, மாடன் கதைகள் மேல் பயங்கரக் கடுப்பு.

“பேயாவது, பிசாசாவது. எல்லாம் உங்க மண்டைக்குள் இருக்கும் மேட்டர்!” என்று சவால் விட்டார்.

சொன்னதோடு நிறுத்தவில்லை மனுஷன். ஒரு நாள் நைட்டோடு நைட்டாகத் தன் பாயைச் சுருட்டிக் கொண்டு நேரே சுடுகாட்டுக்கே போய்விட்டார். அங்கிருந்த ஒரு பழைய கல்லறையைத் தேர்ந்தெடுத்து, அதற்குள் படுத்துக் கொண்டார்.

சுற்றிலும் ஒரே இருட்டு. நரிகள் ஊளையிடுகின்றன. எவனோ ஒருத்தன் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறான்.

டெமாக்ரிடஸ் இரவு முழுவதும் படுத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினார்! அப்புறம் பகல் நேரத்தில் அங்கேயே உட்கார்ந்து கொண்டு, அணுக்களைப் பற்றிப் புத்தகம் எழுத ஆரம்பித்து விட்டார்.

டெமோக்ரிடஸின் லாஜிக் ரொம்ப சிம்பிள்:

“உலகத்தில் அணுக்களையும், வெற்று இடத்தையும் தவிர வேறு எதுவுமே இல்லை. அப்படியிருக்கும்போது இந்த பேய்கள் எங்கே இருந்து வரும்? அதுகளுக்கு ஏது அணுக்கள்?”

விஷயம் இதோடு முடியவில்லை. சுடுகாட்டைத் தாண்டிப் போகும் ஊர்க்காரர்கள் சிலர் இவரைப் பார்த்துவிட்டு, “அய்யோ... பேய்... அமானுஷ்யம்...” என்று அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்.

உடனே டெமோக்ரிடஸ் கல்லறையிலிருந்து எழுந்து வந்து, ஓடுகிறவனைச் சட்டையைப் பிடித்து நிறுத்தினார்.

“யோவ், நில்லு! இதெல்லாம் வெறும் மனப்பிரமை. உன் கண்ணோட லென்ஸ் வழியா லைட் பாஸ் ஆகும்போது, இருட்டுல மூளை பண்ற கெமிக்கல் லோச்சா இது. உட்காரு, உனக்கு ஆட்டம் தியரி பத்தி கிளாஸ் எடுக்குறேன்” என்று சுடுகாட்டிலேயே டியூஷன் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

பேய்களுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டு, பேயே இல்லை என்று பகுத்தறிவு பேசிய முதல் ஆள் அநேகமாக இவராகத்தான் இருக்கும்!

நம்மூர் சினிமாக்காரர்கள் மட்டும் டெமாக்ரிடஸ் காலத்தில் இருந்திருந்தால், குறிப்பாக சுந்தர்.சி அல்லது ராகவா லாரான்ஸ் அல்லது ராம நாராயணனோ இருந்திருந்தால், அவரையே ஒரு பேய் பட கேரக்டராக மாற்றியிருப்பார்கள். பார்ட் 1, பார்ட் 2 என்று பார்ட்டுகள் பேய்த்தனமாக வெளிவந்திருக்கும். நல்லவேளை, அவர் தப்பித்தார்.

விஞ்ஞானமும் பகுத்தறிவும் ஏதோ நேற்று வந்த ஐடி கம்பெனி மாதிரி நாம் நினைக்கிறோம். ஆனால், அன்றைக்கே ஒரு கிரேக்கக் கிழவன் சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு டார்ச் அடித்து நிரூபித்திருக்கிறார்.

பயம் என்பது வெளியில் இல்லை, நம் மண்டைக்குள் இருக்கிறது!

-          அட்ரஸ்களைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment