Wednesday, 15 July 2026

சாட்சி சொல்லும் சாத்தான்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 22

சாட்சி சொல்லும் சாத்தான்!

விஞ்ஞானம் வேகமெடுத்துக்கொண்டு ஓடும் கி.பி 2026 இல் இருந்து கொஞ்சம் ரிவர்ஸ் கியர் போடுங்கள்.

1681 ஆம் வருடம்.

அட்ரஸ் : லண்டன்.

ஜோசப் கிளான்வில் என்றொரு மேதாவி ஒரு புத்தகம் எழுதினார்.

புத்தகத்தின் பெயர் சடுசிஸ்மஸ் ட்ரையம்பேட்டஸ்.

லத்தீன் பெயர், பெயரைப் படிக்க நினைத்தால் கொஞ்சம் நாக்கு மடிக்கும்.

விஷயம் எளிது. "பேய்களை, பிசாசுகளை நம்பாதவன் ஒரு மகா முட்டாள்; அறிவிலி!" இதுதான் அந்தத் தலைப்பின் பொருள்.

இன்றைக்கு யாராவது இப்படிப் புத்தகம் எழுதினால், "ப்ரோ, கொஞ்சம் சைக்கியாட்ரிஸ்ட்டைப் போய் பாருங்க" என்று கமெண்ட் பாக்ஸில் கழுவி ஊற்றுவோம். ஆனால் அன்று அதுதான் சட்டம், அதுதான் அறிவியல்!

அப்போது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சூனியக்காரி வேட்டைகள் படு பிரபலம்.

ஒரு பெண்ணை சூனியக்காரி என்று நிரூபிக்க என்ன ஆதாரம் வேண்டும் தெரியுமா? டிஎன்ஏ கிடையாது, கைரேகை கிடையாது, சிசிடிவி புட்டேஜ் தேவையே இல்லை.

நீதிமன்றத்தில் கூண்டு ஏறும் ஒரு பத்து வயது சிறுமி, திடீரென்று நடுங்கி, கையை நீட்டி,

"அதோ அந்தப் பெண்ணின் தோள் மேல் ஒரு கருப்புப் பேய் உட்கார்ந்திருக்கிறது! எனக்கு மட்டும் அது தெரிகிறது!" என்று கத்தினால் போதும்.

முடிந்தது கதை. அந்தப் பெண்ணுக்கு அன்று மாலை மரண தண்டனை நிச்சயம்.

இதற்குப் பெயர் ஸ்பெக்ட்ரல் எவிடென்ஸ். அதாவது, கண்ணுக்குத் தெரியாத சாட்சியம்.

குற்றம் சாட்டப்பட்டவரின் உடலை விட்டு அவரது ஆன்மாவோ அல்லது ஒரு பேயோ வெளியே வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும் வடிவில் டார்ச்சர் செய்யும் என்பது அன்றைய கோர்ட் நம்பிய தியரி.

இங்கே லாஜிக்கே இல்லையே. அந்த லாஜிக் எங்கே போனது?

இங்கேதான் மனித மூளையின் ஆகச்சிறந்த முரண்பாடு ஒளிந்திருக்கிறது.

இப்போது கேள்வி என்னவென்றால், பேய் இருக்கிறதா என்று எப்படித் தெரியும்?

அதற்குப் பதில் என்னவென்றால், அந்தச் சிறுமி சொல்கிறாளே, அதுதான் சாட்சி என்பதே.

இப்போது கேள்வி என்னவென்றால், அந்தச் சிறுமி பொய் சொன்னால்?

அதற்கும் பதில் இருக்கிறது. பேய்களைப் பார்க்கும் சக்தி குழந்தைகளுக்குத்தான் இருக்கிறது என்று சடுசிஸ்மஸ் புத்தகம் சொல்கிறதே!

இதுதான் அந்த மரண தண்டனைக்கான லாஜிக். ரொம்ப கொடூரமாக இருக்கிறது என்கிறீர்களா? அப்படித்தான் இருந்தது அப்போது.

இப்படியெல்லாம், ஒரு கற்பனையான, கண்ணுக்குத் தெரியாத, நிரூபிக்க முடியாத ஒரு வஸ்துவை சாட்சியாக வைத்து, ரத்தமும் சதையுமான நிஜ மனிதர்களைக் கொன்று குவித்தார்கள் என்பது எவ்வளவு பெரிய சோகம்.

அறிவியலின் அடிப்படை என்பது காண்பது, சோதிப்பது, நிரூபிப்பது. ஆனால் அன்று, நம்பாதவன் அறிவிலி என்ற ஒற்றை வரியைக் கொண்டு லாஜிக்கை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து விட்டார்கள்.

இதையெல்லாம் படித்துவிட்டு "என்னடா முட்டாள்தனம்!" என்று நாம் சிரிக்கலாம். ஆனால், வாட்ஸ்அப் பார்வேர்டுகளையும், டீப் பேக் வீடியோக்களையும், யாரோ சொன்னார்கள் என்ற வதந்திகளையும் அப்படியே நிஜமென்று நம்பி இன்றும் நாம் செய்யும் ஆன்லைன் விச் ஹண்ட்களை யோசித்துப் பார்த்தால், நமக்கும் சடுசிஸ்மஸ் மனிதர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றுதான் தோன்றுகிறது.

அன்று பேய்கள் சாட்சி. இன்று பார்வேர்ட் மெசேஜ்கள் சாட்சி.

விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. மனிதன்? அதுதான் அமானுஷ்யங்களை இன்னமும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment