Monday, 13 July 2026

பேய்க்கு ஓர் என்ஓசி சர்டிபிகேட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 20

பேய்க்கு ஓர் என்ஓசி சர்டிபிகேட்!

அட்ரஸ் என்று பார்த்தால், இங்கிலாந்தின் பைலேண்ட் அபே.

காலம் பதினைந்தாம் நூற்றாண்டு.

அங்கே ஒரு துறவி இருந்தார். அவருக்குத் தினமும் தியானம் செய்து மோட்சம் அடைவதை விட, சுத்துப்பட்டு ஊர்களில் நடக்கும் பேய் கதைகளைக் கேட்டு டைரியில் எழுதி வைப்பதில்தான் அலாதி பிரியம். அவர் கைப்பட எழுதிய அந்தப் பழைய டைரியிலிருந்து ஒரு கதை.

சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கிறது?

அதுவும் பேயோடு நடந்த ஒரு சண்டையில் சட்டை கிழிந்தால்… அதுதான் இந்த கதை.

ஒரு விவசாயி.

அவனது முதலாளியுடன் வயல்வெளியில் அமைதியாக நடந்து போய்க்கொண்டிருந்தான்.

வானிலை அநேகமாக மேகமூட்டத்துடன் இருந்திருக்க வேண்டும்.

திடீரென்று, புதருக்குள்ளிருந்து ஒரு பேய் எகிறி குதித்து வந்தது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, நேராக அந்த விவசாயியின் மேல் பாய்ந்து, அவனது சட்டையைக் கிழித்து, துவம்சம் செய்தது.

சண்டையில் லாஜிக்கே இல்லை என்று கமென்ட் அடிக்காதீர்கள்.

கூட வந்த முதலாளி பயந்து ஓடிவிட, விவசாயிக்குக் கோபம் வந்தது.

ஏற்கனவே வறுமை, இதில் சட்டை வேறு கிழிகிறதே என்ற ஆத்திரம்.

அந்த விவசாயி பயப்படாமல் அந்தப் பேயைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். பிறகு, தனக்குத் தெரிந்த அரைகுறை லத்தீன் மொழியில் கான்ஜூர் செய்தான். அதாவது, மிரட்டி கிராஸ் எக்ஸாமினேஷன் செய்தான்.

"ஏன்டா பேயே எதற்காகடா என் சட்டையைக் கிழிச்ச? உனக்கு என்னதான் வேணும்?"

பேய் உடனே அவ்வ் என்று வடிவேலு பாணியில் அழத் தொடங்கியது.

"தம்பி, நான் சாதாரண ஆள் இல்லை. இந்த அபேயில் பாதிரியாராக இருந்தவன். உயிரோடு இருந்தபோது பேராசை பிடித்து, சில வெள்ளி ஸ்பூன்களைத் திருடி ஓர் இடத்தில் ஒளித்து வைத்துவிட்டேன். அந்தப் பாவம் என் காலைப் பிடித்து இழுக்கிறது. செத்த பிறகும் மோட்சத்துக்குப் போக முடியாமல் இங்கேயே அலைகிறேன்."

இப்போது சட்டை கிழிந்து போன கவலை மறைந்து, விவசாயிக்குச் சிரிப்பு வந்தது.

செத்த பிறகும் மனிதன் தன் பாவத்துக்கு ஏதோ செட்டில்மென்ட் அல்லது லஞ்சம் கொடுத்துத் தப்பித்துவிடலாம் என்று நினைப்பதுதான் காலத்தின் ஆகச்சிறந்த காமெடி.

அந்தப் பேய்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமே.

விவசாயி அந்தப் பேய் சொன்ன இடத்துக்குப் போய், ஒளித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளி ஸ்பூன்களைத் தேடிக் கண்டுபிடித்தான்.

அதை முறைப்படி சர்ச்சுக்கோ அல்லது உரியவர்களிடமோ ஒப்படைத்தான். பாவக் கணக்கு நேர் செய்யப்பட்டது.

அதன் பிறகுதான் அந்தப் பாதிரியார் பேய்க்கு மேலோகத்திலிருந்து நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட் கிடைத்தது. அது நிம்மதியாகக் காற்றோடு காற்றாகக் கரைந்து மோட்சம் போனது.

துறவியின் டைரி அங்கே முடிகிறது. பாவம், அந்த விவசாயிக்குக் கிழிந்த சட்டைக்கு யார் துட்டு கொடுத்தார்கள் என்று அவர் எழுதவே இல்லை!

 அதே கதை இப்போது நடந்தால் எப்படி இருக்கும்? யோசித்து வையுங்கள். அதையும் தேடுவோமே.

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment