Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Sunday, 22 September 2024

வேட்டையன் சொன்ன ரகசியம்!

வேட்டையன் சொன்ன ரகசியம்!

தமிழ்த் திரையுலகின் வசூல் வேட்டையன் ரஜினி.

அவரது ‘வேட்டையன்’ திரைப்படம் விரைவில் வெளி வர இருக்கிறது.

இந்நிலையில் ரஜினி சொன்ன ஒரு செய்தி தோல்விகளையும், தடைகளையும் கண்டு துவளாது இருக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறது?

ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி, தளபதி, முள்ளும் மலரும் போன்ற படங்கள் எப்போதும் பார்ப்பதற்கான அற்புத படங்கள்.

அது போன்ற படங்களைப் பற்றி வேட்டையன் பட இயக்குநர் ஞானவேல் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.

உடனே ரஜினி அப்படங்களின் போது நடந்த பின்னணி உண்மைகளை உடைத்துச் சொல்லியிருக்கிறார்.

தளபதி படத்தில் ஒரு காட்சியைச் சரியாக எடுப்பதற்குள் பல முறை நடித்திருக்கிறார் ரஜினி. அதாவது திரைமொழியில் சொல்ல வேண்டுமானால் பல டேக்குகள் வாங்கியிருக்கிறார்.

முள்ளும் மலரும் படத்தில் அப்படி தன்னைச் சிரமப்பட்டு நடிக்க வைத்தவர்கள் மகேந்திரனும் பாலு மகேந்திராவுமும்தான் என்ற உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.

ஆறிலிருந்து அறுபது வரை என்ற படத்திலிருந்து பாதியிலிருந்து வெளியேறிய அவரை எல்லாரும் பேசி ஆற்றுப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படம் பெரிதாகப் போகாது என்று ரஜினியே நினைத்திருக்கிறார். ஆனால் அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

புவனா ஒரு கேள்விக்குறியில் 11 பக்க வசனத்தைப் பேசக் கொடுத்த போது ரஜினி மிரண்டிருக்கிறார். அப்போது முத்துராமன்தான் தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

இப்படி பல தடைகளைக் கடந்திருக்கிறார் அவர். முடியாது என்று நினைத்துப் பின்வாங்கியிருக்கிறார். வெற்றி பெறாது என்று நினைத்துச் சோர்ந்து போயிருக்கிறார். ஒரு காட்சி சரியாக வர வேண்டும் என்பதற்காகப் பல முறை நடித்திருக்கிறார்.

பல தடைகள், சோர்வுகள், தளர்ச்சிகளை வெற்றிகரமாக எதிர்கொண்டே அவர் இன்று திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஆகியிருக்கிறார்.

வெற்றி பெற்றுச் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ரஜினி சொன்ன இந்த விசயங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது.

தடைகளைத் தாண்டித்தான் ஆக வேண்டும்.

அப்படித் தாண்டும் போது தடுமாறியும் விழ வேண்டியிருக்கும்.

ஒரு சிறு வெற்றிக்காகப் பல முறை முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

அப்படி முயற்சி செய்யும் போது பின்வாங்கவும் நேரிடும்.

எல்லாவற்றையும் எதிர்கொள்வதன் மூலமாகத்தான் ஒரு மனிதர் வெற்றி எனும் கனியின் ருசியை ரசிக்க முடியும்.

சூப்பர் ஸ்டாருக்கே அப்படி என்றால், சுமாரான ஸ்டார்களான நமக்கு நேர்வதெல்லாம் பிரச்சனைகளா என்ன?

*****