Thursday, 16 July 2026

கருப்புப் பளிங்கின் கடைசி அத்தியாயம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 23

கருப்புப் பளிங்கின் கடைசி அத்தியாயம்!

இப்போது நாம் போகப் போகும் அட்ரஸ் எதுவென்றால், லண்டன்

இருள்.

மரணத்தின் உறைபனி வாசம் அறையை நிரப்பியது.

நொடி முட்கள் நகரும் சத்தம் கூட இல்லை.

காலமே உறைந்துவிட்டது போன்ற அமானுஷ்ய அமைதி.

ஜான் டீயின் நெஞ்சு ஏதோ ஒரு பயத்தில் பிழியப்பட்டது. தன் பாக்கெட்டில் இருந்த தீக்குச்சிப் பெட்டியைத் தட்டி, நடுக்கத்துடன் ஒரு குச்சியை உரசினார்.

சுரீரென்று வெளிச்சம் எழுந்தது. அவர் மேஜை மீதிருந்த மெழுகுவர்த்தியைப் பற்றவைத்தார்.

மஞ்சள் வெளிச்சம் அறையெங்கும் பரவியது.

அங்கே, கதவருகே ஓர் உருவம் நின்றிருந்தது.

அதன் முகத்தைப் பார்த்த ஜான் டீயின் கையில் இருந்த மெழுகுவர்த்தி நழுவித் தரையில் விழுந்தது. அவர் உடம்பின் மொத்த ரத்தமும் உறைந்துபோனது.

ஏனெனில், அங்கே நின்றிருந்தது அவரேதான்!

அதே நீண்ட தாடி, அதே தீட்சண்யமான கண்கள், அதே உடலமைப்பு. ஆனால், அந்த முகத்தில் ஒரு அசுரத்தனமான, குரூரமான புன்னகை இருந்தது.

"நீ... நீ யார்?" ஜான் டீயின் குரல் தொண்டைக்குள்ளேயே செத்தது.

கதவருகே நின்ற இன்னொரு ஜான் டீ பேசவில்லை. மெதுவாக நடந்து வந்து, மேஜை மீது கிடந்த பேனாவைத் தன் கையில் எடுத்தது.

நிஜ ஜான் டீக்கு மூச்சு முட்டியது. பயத்தில் தன் கைகளைப் பார்த்தார்.

அங்கே கைகள் இல்லை!

அவரது விரல்கள் மெதுவாகக் காற்றோடு காற்றாகக் கரைந்து, காற்றில் மிதக்கும் புகை போலத் தெரிந்தன. தன் உடம்பை அவராலேயே தொட முடியவில்லை. எந்த உணர்ச்சியும் இல்லை.

அப்போதுதான் அவருக்கு அந்தப் படுபயங்கரமான உண்மை உறைத்தது.

அவர் பதற்றத்துடன் நாற்காலியில் அமர்ந்திருந்த கெல்லியைப் பார்த்தார்.

கெல்லி இன்னும் அப்படியேதான் அமர்ந்திருந்தான். ஆனால், அவனுடைய முகத்தில் சதை இல்லை. கண்கள் இரண்டும் எப்போதோ வறண்டுபோய்க் குழியாகக் கிடந்தன. அவன் இறந்து பல வாரங்கள் ஆகியிருக்க வேண்டும்! அவனது மண்டை ஓட்டின் மீது தோல் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது.

ஜான் டீக்கு இப்போது எல்லாமே புரிந்தது.

அவர்கள் அந்தக் கிரிஸ்டல் கல்லை முதன்முதலில் தொட்டபோதே, எட்வர்ட் கெல்லி இறந்துவிட்டான். இத்தனை நாட்களாகத் தன் பக்கத்தில் அமர்ந்து, ஆவிகளுடன் பேசுவதாக நடித்தது கெல்லியே அல்ல! அந்தக் கிரிஸ்டல் கல்லுக்குள் இருந்த ஏதோ ஓர் அமானுஷ்ய சக்தி, கெல்லியின் பிணத்தை ஒரு பொம்மை போல இயக்கி அவரிடம் நாடகமாடியிருக்கிறது.

தன் சொந்த ரத்தத்தைக் கொடுத்து அந்தப் பளிங்குத் திரையைத் திறந்ததன் மூலம், ஜான் டீயின் ஆன்மாவையும் அது உறிஞ்சித் தனக்குள் இழுத்துக் கொண்டுவிட்டது.

அசல் ஜான் டீ இப்போது அந்த அக்வமேரின் கருப்புக் கண்ணாடிக்குள்ளே சிறைபிடிக்கப்பட்டுவிட்டார்!

வெளியே,

ஜான் டீயின் உடலைக் கைப்பற்றிய அந்தப் புதிய அமானுஷ்ய சக்தி, கண்ணாடிக்கு முன்னால் வந்து நின்றது. கண்ணாடியின் ஆழத்தில் சிறு புள்ளி போல உறைந்து கிடந்த நிஜ ஜான் டீயைப் பார்த்து நக்கலாகச் சிரித்தது.

பிறகு மேஜையில் இருந்த காகிதத்தை இழுத்து, பேனாவை மையில் நனைத்து எழுதத் தொடங்கியது:

"அமானுஷ்யங்களின் அட்ரஸை அவ்வளவு சீக்கிரம் எவனாலும் கண்டுபிடிக்க முடியாது மிஸ்டர் விஜயராமன்! இதைப் படிக்கும் ஒவ்வொருவரையும் நான் என் ஆவி உலகிற்கு இழுக்கப் போகிறேன்."

கண்ணாடிக்குள்ளே இருந்து நிஜ ஜான் டீ தன் முழு பலம்கொண்டு அலறினார், "ப்ளீஸ் விஜயராமன்! விடாதே. அந்த அட்ரஸை வெளியில் கொண்டு வந்து விடு. இதைப் படிக்கும் இந்த வலைப்பூவின் வாசகர்களைக் காப்பாற்றி விடு!" ஆனால், சத்தம் வெளியே வரவில்லை. அது வெறும் ஒரு கல்லின் பிம்பம் மட்டுமே!

இப்போது உங்களுக்குக் கேள்விகள் எழுகிறதா?

யாரிந்த ஜான் டீ?

யாரந்த எட்வர்ட் கெல்லி?

இந்த கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் வேண்டுமா? அல்லது ஆவிகளின் உலகில் சிக்கிக் கொள்ளாமல் நீங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டுமா?

எதுவாக இருந்தாலும் நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment