Friday, 7 August 2026

ஆவி கேமரா ஆக்சன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 45

ஆவி கேமரா ஆக்சன்!

கோனேரிராஜபுரத்தின் பழமையான அந்த வீட்டின் அறையின் காற்றில் ஒருவித ஈரமான மரத்தின் வாசனை. டேபிளின் நடுவே ஒரு வெள்ளைச் காகிதம், அதன் மேல் பளபளக்கும் ஒரு பவுண்டைன் பேனா.

நேரம் நள்ளிரவு 12:15.

எதிரில் அமர்ந்திருந்த வினோத் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தான். "மனோ! வேணாம்டா. ஆட்டோமேட்டிக் ரைட்டிங் பண்ணி ஆவியை வரவழைக்கறது ஆபத்து. உண்மையிலேயே ஏதோ ஆவி வந்துடுச்சுனா என்ன பண்றது?"

மனோகர் லேசாகச் சிரித்தான். "பயப்படாத வினோத்! ஆவியும் இல்லை, பேயும் இல்லை. நம்ம மூளையோட ஐடியோ மேட்டர் என்கிற ஒரு மனோதத்துவ விளையாட்டுதான் இது," என்றபடி, டேபிளின் ஓரத்தில் தன் ஹை டெக் கேமராவை ஆன் செய்து ஸ்டாண்டில் பொருத்தினான்.

இருவரும் கைகளை லேசாகப் பிடித்துக்கொண்டு, ஆள்காட்டி விரலை மட்டும் பேனாவின் மீது வைத்தார்கள்.

"ஆவி கேமரா ஆக்சன். யாராவது ஆவி இருந்தா, தயவுசெய்து இந்த பேனா மூலமா எழுதுங்க." வினோத் குரல் தழுதழுத்தது.

அறையில் ஏசி சத்தம் தவிர வேறு சத்தமில்லை.

ஐந்து நிமிடங்கள் அமைதி.

பிறகு அது நடந்தது.

பேனா லேசாக அதிர்ந்தது. காகிதத்தின் மீது கோடுகள் நகரத் தொடங்கின. வினோத்தின் கண்கள் விரிந்தன. அவனது கை அவனையும் அறியாமல் பேனா பிடித்து எழுதத் தொடங்கியது. அது எழுதியது,  நா-ரா-ய-ண-ன்.

"இது என் தாத்தாவோட பேருடா! 1998ல இறந்துட்டார்!" வினோத் கத்தினான்.

பேனா நிறுத்தாமல் தொடர்ந்து எழுதியது. "நாராயணன் ஒரு கொலையாளி. அவன் இப்போது அறைக்குள்ளேயே உன்னைக் கொல்லப் போகிறான்."

வினோத் அலறி அடித்துக்கொண்டு கையைப் பின்னுக்கு இழுத்தான். பேனா கீழே விழுந்தது.

மனோகர் லேப்டாப்பைத் திறந்து சாவதானமாக கூறினான். "ரிலாக்ஸ் வினோத். உன் ஆழ்மனசுல உன்னோட தாத்தா பத்தின ஏதோ ஒரு பயம் இருக்கு. அதான் உன் விரல்கள் உனக்கே தெரியாம நுட்பமா அசைஞ்சு அப்படி எழுதியிருக்கு. ஆவி வெளியில இருந்து வரல, உன் மூளைக்குள்ள இருந்து வந்திருக்கு. அதான் சயின்ஸ். அவ்ளோதான். வா கிளம்பலாம்."

மனோகர் கேமராவை ஆப் செய்யப் போனவன், திருப்திக்காக அதில் பதிவான வீடியோவை ப்ளே செய்து பார்த்தான்.

அடுத்த நொடி, மனோகரின் உடம்பில் ரத்தம் உறைந்துபோனது.

கேமரா ஜூமில் தெளிவாகத் தெரிந்தது, பேனா எழுதிய அந்த ஐந்து நிமிடங்களும், வினோத்தின் விரல்கள் காகிதத்தை விட இரண்டு அங்குலம் உயரத்தில், காற்றில் அசைவேயில்லாமல் நின்றுகொண்டிருந்தன.

வினோத்தின் கைகள் பேனாவைத் தொடவே இல்லை! பேனா மட்டுமே தானாக இயங்கியிருந்தது.

மனோகரின் தலை மெதுவாக நிமிர்ந்தது. எதிரில் வினோத் அமைதியாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் முற்றிலும் கருப்பாக மாறியிருந்தன. அவனது குரல் ஒரு 80 வயதுக் கிழவனின் கம்பீரமான குரலாக மாறியிருந்தது.

"ஐடியோமோட்டர் எபெக்ட். நல்ல தியரிதான் மனோகர். ஆனா, உன் நண்பன் வினோத்தோட ஆழ்மனசுக்கு நாராயணன் யாருன்னு தெரியாதே? ஏன்னா, அவன் தாத்தா பேரு விஸ்வநாதன்! 1950ல இந்த அறையில ஒருத்தனைக் கொலை பண்ணின நாராயணன் நான்தான்!"

மனோகர் அதிர்ச்சியில் பேச்சற்று நிற்க, அறையின் கதவு தானாக டப்பென்று பூட்டிக்கொண்டது.

சுவரில் இருந்த மின்விளக்குகள் விட்டு விட்டு எரியத் தொடங்கின.

கீழே கிடந்த அந்தப் பேனா, மீண்டும் மெதுவாகக் காற்றில் உயர்ந்து நிமிர்ந்து நின்றது.

எழுத்தாளர்கள் பேனா பிடிப்பது ஊரறிந்த கதை. ஆனால், ஆவிகள் பேனா பிடிப்பது?

கன்பார்மாக வந்தது ஆவிதானா? அல்லது இதுவும் ஒரு டுபாக்கூர் மூவிதானா?

அப்புறம், ஆவிகள் இப்படியெல்லாம் கையெழுத்து பயிற்சி எடுத்துக் கொள்வது ஏன்?

நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment