Tuesday 17 November 2020

பத்திரம் பிழை திருத்தல் தொடர்பான 20 தகவல்கள்

பத்திரம் பிழை திருத்தல் தொடர்பான 20 தகவல்கள்

1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்ய பிழை திருத்தல் பத்திரம் போடப்படுகிறது. அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் (RECTIFICATION DEED) என்பர்.

2. கிரயம், ஒப்பந்தம், பாகப்பிரிவினை, உயில் சாசனம், உரிமை பத்திரம், அடமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களுக்கும் பிழை திருத்தல் பத்திரம் போடலாம்.

3. சாதாரணப் பிழை திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழை திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழை திருத்தல்கள் உண்டு.

4. திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள் ஆகும்.

5. பட்டாவையும் பத்திரத்தையும் காணும்போது பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழை திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.

6. செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது, பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் உள்ள எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, பெயரின் முன்னெழுத்து, தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது, கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது போன்றவையும் சாதாரண பிழைகள் ஆகும்.

7. கிரயப் பத்திரத்தில் வரைபடம் விடுபட்டுவிடுவது, மின் இணைப்பு எண் மாற்றி எழுதி விடுவது, தெருப்பெயர் மாற்றி எழுதி விடுவது,திசைகள் மற்றும் எல்லைகளை எழுதுவதில் நேரும் தவறுதல்கள் போன்றவையும் சாதாரணப் பிழை திருத்தல்கள் ஆகும்.

8. சாதாரணப் பிழை திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 100/- ஆகும். அதற்கான மொத்தச் செலவும் ரூ. 500/- க்குள் முடியும்.

9. உரிமை மாற்றம் பிழை திருத்தலுக்குச் சான்றாக 2 ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்திருப்பதைக் குறிப்பிடலாம். இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

10. மேற்படி பிழை திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை மதிப்பை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தி உரிமை மாறும் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

11. குறைவான சதுர அடி நிலத்தை அதிக சதுர அடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையைத் திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.

12. சொத்து விற்ற நபர் பிழை திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழை திருத்தல் பத்திரம் போடலாம்.

13. விற்ற நபருக்கு வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம் பிழை திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும்.

14. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார். ஆனால் பிழை திருத்தம் போட வர மறுக்கிறார் என்றாலும் நீதிமன்றத்தை நாடியே அதனைத் தீர்க்க இயலும்.

15. சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள் என அனைத்துமே பிழையாக இருந்தால் பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.

16. சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளைப் (சர்வே எண், மனை எண், முன்னெழுத்து போன்ற தவறுகள்) பத்திரப் பதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப்பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ அல்லது ஒயிட்னர் வைத்தோ நீங்களே திருத்தி விடுவது தவறாகும்.

17. மனை எண் 10 ஐ மனை எண் 11 என்று தவறாகத் தட்டச்சு செய்து இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்குப் பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில் 11 என்றே இருக்கும்.

18. மேற்படித் திருத்தம் சட்ட விரோதத் திருத்தமே ஆகும். இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாராது. எனவே இதுபோன்ற நிலைகளில் நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

19. ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ, குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.

20. சொத்து விபரம், சர்வே எண் போன்றவற்றைத் திருத்தி இருந்து அதற்கான சான்றொப்பம் வாங்காமல் இருந்தால் அந்தப் பதிவை நீதி மன்றம் செல்லாது என்றே தீர்ப்பளிக்கும்.

No comments:

Post a Comment