Wednesday 18 November 2020

ஆவணங்கள் தொலைந்தால் யாரை அணுகுவது?

ஆவணங்கள் தொலைந்தால் யாரை அணுகுவது?

வ.

எண்

ஆவணத்தின் பெயர்

யாரை அணுகுவது & அணுகுமுறை விவரம்

1.

ஆயுள் காப்பீட்டுப் பத்திரம்

(இன்ஷ்யூரன்ஸ் பிரிமியம்)

காப்பீட்டை விநியோகம் செய்த கிளையை அணுக வேண்டும்.

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் காப்பீடு செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல் போன்றவற்றைப் புதிய காப்பீட்டு பத்திர நகலைப் பெறுவதற்கான ஆவணங்களாகத் தர வேண்டும்.

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75/- கட்ட வேண்டும். இது தவிர கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். 

இதற்கான நடைமுறையாக நகல் பத்திரம் கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் வழங்கப்படும். அதில் ஒரு ஆவணத்தைப்  பத்திரத்தில் தட்டச்சு செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பத்திரம் தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும். அதைப் பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.  

2.

மதிப்பெண் பட்டியல்

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியை அணுக வேண்டும்.

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், நகல் மதிப்பெண் பட்டியல் கோருவதற்கான கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை ஆவணங்களாகச் சமர்பிக்க வேண்டும்.

இதற்கான கட்டண விவரம் : உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) = ரூ.105/-
மேல்நிலை பொதுத்தேர்வு (+2) = ரூ.505/-

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள் வரை நகல் மதிப்பெண் பட்டியலைப் பெற ஆகும்.

இதற்கான நடைமுறையாகக்  காவல்துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடிய வில்லை’ என சான்றிதழ் வாங்கிய பிறகு, முன்பு படித்த பள்ளி / நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதைப் பூர்த்திசெய்து வட்டாட்சியரிடம் கையொப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு விண்ணப்பக் கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.

தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்குரிய மதிப்பெண் பட்டியலுக்குச் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களை அணுக வேண்டும்.

3.

குடும்ப அட்டை

(ரேஷன் கார்டு)

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலரையும் நகர்ப்பகுதிகளில் உணவு ப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். 

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையை நகல் குடும்ப அட்டை பெறுவதற்கான ஆவணமாக வழங்க வேண்டும்.
இதற்கான கட்டணமாகப் புதிய குடும்ப அட்டை வாங்கும்போது ரூ.10/- கட்ட வேண்டும்.

விண்ணப்பம் அளித்த  45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைக்கும்.

இதற்கான நடைமுறையாகச் சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும். உரிய விசாரணைக்குப் பிறகு புதிய குடும்ப அட்டை  அனுப்பி வைக்கப்படும்.

4.

ஓட்டுநர் உரிமம்

(டிரைவிங் லைசென்ஸ்)

மாவட்டப் போக்குவரத்து அதிகாரியை அணுக வேண்டும்.

பழைய ஒட்டுநர் உரிம நகல் அல்லது ஒட்டுநர் உரிம  எண்ணை புதிய நகல் ஓட்டுநர் உரிமம் பெற வழங்க வேண்டும்.

இதற்கான கட்டணம் ரூ.315/- (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

விண்ணப்பம் செய்த பிறகு அதிகபட்சமாக ஒரு வாரத்திற்குள் புதிய நகல் உரிமம் வழங்கப்படும்.

இதற்கான நடைமுறையாகக் காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

5.

வருமான வரி அட்டை

(பான் கார்டு)

வருமான வரி அட்டை பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அல்லது வருமான வரித்துறையை அணுக வேண்டும்.

கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்) இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள் ஆகியவற்றைப் புதிய வருமான வரி அட்டை பெற ஆவணங்களாக வழங்க வேண்டும்.

இதற்கான கட்டணம் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ. 96/-

விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்களில் புதிய வருமான வரி அட்டை கிடைக்கும் .

இதற்கான நடைமுறையாக வருமான வரி அட்டை திருத்தத்திற்கான விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.  

6.

பங்குச் சந்தை ஆவணம்

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளரை அணுக வேண்டும்.

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஆவண எண் ஆகியவற்றை புதிய நகல் ஆவணத்தைப் பெற வழங்க வேண்டும். 

இதற்காகத் தனியாகக் கட்டணம் கட்டத்தேவையில்லை. பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள் புதிய நகல் ஆவணம் கிடைக்கும்.

இதற்கான நடைமுறையாக முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குக் கடிதம் எழுத வேண்டும். அதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் பெற வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித் தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.

கிரயப் பத்திரம்

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளரை அணுக வேண்டும்.

காவல் துறைக்கு அளிக்கப்பட்ட புகார் கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள் ஆகியவற்றைப் புதிய நகல் பத்திரத்தைப் பெறுவதற்காக வழங்க வேண்டும்.

ஆவணக் கட்டணம் ரூ. 100/- இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ. 20/-

விண்ணப்பித்த ஒரு சில நாட்களில் புதிய நகல் பத்திரம் கிடைக்கக்கூடும்.

இதற்கான நடைமுறையாகக் கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் பெற  வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு சார் பதிவாளர் அலுவலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

8.

வங்கி அட்டைகள்

(டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு முதலியன)

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுக வேண்டும்.

கணக்குத் தொடர்பான விவரங்களைப் புதிய அட்டை பெறுவதற்காக வழங்க வேண்டும்.

இதற்கான கட்டணம் ரூ.100/-

வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிக பட்சம் 15 நாட்களுக்குள் புதிய அட்டை கிடைக்கும்.

இதற்கான நடைமுறையாக வங்கி அட்டை தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக் கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தி புதிய அட்டை வழங்குமாறு கோர வேண்டும்.

9.

மனைப்பட்டா

வட்டாட்சியரை அணுகி நகல் பட்டா கோரும் விண்ண ப்பத்தைத் தர வேண்டும்.

இதற்கான கட்டணம் ரூ.20/-

விண்ணப்பித்த ஒரு சில நாட்களில் புதிய மனைப்பட்டா கிடைக்கக்கூடும்.

இதற்கான நடைமுறையாக முதலில் வட்டாட்சியரிடம் மனு தர வேண்டும். அவரது பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைக்கும்.

10.

கடவுச் சீட்டு

(பாஸ்போர்ட்)

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களை அணுக வேண்டும்.

காவல் துறை சான்றிதழ், பழைய கடவுச்சீட்டின் நகல், 20 ரூபாய் முத் திரைத்தாளில் விண்ணப்பம் ஆகியவற்றை நகல் கடவுச்சீட்டுப் பெறுவதற்காக வழங்க வேண்டும்.

இதற்கான கட்டணம் ரூ.4,000/-

இந்தியாவில் தொலைத் திருந்தால் நகல் கடவுச்சீட்டு பெற 35 - 40 நாட்களும் வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலமும் எடுக்கும்.

இதற்கான நடைமுறையாகக் கடவுச்சீட்டு தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் பெற வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.

 

No comments:

Post a Comment