Tuesday 28 May 2024

புதிய பொருளாதாரக் கொள்கையும் கல்வித் துறையும்!

புதிய பொருளாதாரக் கொள்கை 1991 இல் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன்சிங்.

புதிய பொருளாதாரக் கொள்ளை உலகமயமாக்கல், தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகிய கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. அதன் தாக்கம் நாட்டின் பல்வேறு துறைகளிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு 35 ஆம் ஆண்டை நெருங்கும் வேளையில் பல்வேறு அரசுத் துறைகளிலும் நிரந்தர தொழிலாளர்கள் குறைந்து ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர்.

குறிப்பாகக் கல்வித் துறையில் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு முன்பு நாடு முழுவதும் அரசு கல்வி நிறுவனங்களே அதிகம் இருந்தன. தற்போது தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் அரசு கல்வி நிறுவனங்களை விட அதிகதித்து விட்டன.

உதாரணத்திற்குக் கூற வேண்டும் என்றால் 1980களில் தமிழ்நாட்டில் 51 அரசுக் கல்லூரிகள் இருந்தன. அப்போது சுயநிதிக் கல்லூரிகளே இல்லை. 2023 ஆம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கையானது 163 அரசுக் கல்லூரிகள் என்ற எண்ணிக்கையையும் 633 சுயநிதிக் கல்லூரிகள் என்ற எண்ணிக்கையையும் எட்டியுள்ளது. கிட்டதட்ட அரசு கல்லூரிகளை விட சுயநிதிக் கல்லூரிகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன.

கல்வித் துறைகளில் நிரந்தரப் பணியிடங்களாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் இன்று ஒப்பந்த முறையிலும் தற்காலிக முறையிலும் மாற்றம் பெற்றிருக்கின்றன. குறிப்பாகக் கல்லூரிகளில் பணி நிரந்தரம் பெற்று பணியாற்றும் பணியாளர்களை விட கௌரவ (அதென்ன கௌரவமோ?) விரிவுரையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறையிலும் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஆசிரியர்களின் எண்ணிக்கை இனி வரும் ஆண்டுகளில் பணி நிரந்தரம் பெற்ற ஆசிரியர்கள் எண்ணிக்கையை விட அதிகரிக்கக் கூடும்.

மேலும் இதன் தாக்கமானது பணி பாதுகாப்பிலும் எதிர்மறையாகப் பிரதிபலித்துள்ளது. அரசு பணியாளர்கள் ஓய்வூதியப் பலன்களை இழந்து புதிய ஓய்வூதிய முறையில் இணைக்கப்படுகின்றனர். கல்வித் துறையை மட்டுமல்லாது இதன் தாக்கம் ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை. இராணுவத்திலும் ஒப்பந்த அடிப்படையில் அக்னிவீரர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் வகையில் புதிய பொருளாதாரக் கொள்ளை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment