Saturday 5 August 2017

V.O.C. - A Thirukural Researcher

வ.உ.சி. - திருக்குறள் ஆய்வாளர்
            வ.உ.சிதம்பரம் (பிள்ளை) அவர்களை சுதந்திரப் போராட்ட வீரராக நாடறியும். திலகரின் வழியில் நின்ற வீரர். அவர் சிறந்த தமிழறிஞரும் கூட. சிறந்த பேச்சாளர்.
            வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு இப்படிச் சொல்கிறது, 'சிதம்பரம் பிள்ளையின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்.'
            திருக்குறளுக்கு அவர் எழுதிய உரை கவனிக்கத்தக்கது. அவருக்கு பரிமேலழகர் உரையில் ஈடுபாடில்லை. மணக்குடவரின் உரையே வ.வ.சி.யை கவர்கிறது. மணக்குடவர் உரையைத் தேடி முதலில் பதிப்பத்தவரும் அவரே. திருக்குறளுக்கு முதல் உரை செய்தவராக மணக்குடவர் குறிப்பிடப்படுகிறார்.
            ஜேம்ஸ் ஆலனின் தன்முன்னேற்ற நூல்கள் நான்கையிம் வ.உ.சி. மொழியாக்கம் செய்துள்ளார். இந்நூல் அக்காலத்தே கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட சிறப்பைப் பெற்றிருக்கிறது. மகாகவி பாரதி அவர்களும், 'இது மொழிபெயர்ப்பு என்று பிள்ளையவர்கள் சொல்லாவிடில் நாம் இதனைத் திருக்குறளில் சில பகுதிகளுக்கு விரிவுரையென்று கொண்டிருப்போம்' என்கிறார். மொழியாக்க நூல்களிலும் அவரது திருக்குறளின் வீச்சும், தாக்கமும் வியப்பிற்குரியது.
            திருக்குறளுக்கு உரை கண்ட வகையிலும், திருக்குறள் மணக்குடவர் உரையைப் பதிப்பித்த வகையிலும், திருக்குறளை ஆய்ந்து மெய்யறம் என்று நூலை எழுதிய வகையிலும் வ.உ.சி. அவர்கள் திருக்குறள் ஆர்வலராகவும், திருக்குறள் ஆய்வாளராகவும் கொள்ளத்தக்கவர்.
                                                                                                - பா.விஜயராமன்
*****


No comments:

Post a Comment