Monday 19 June 2023

கோடிகள் இருந்தால் கோடீஸ்வரராக முடியுமா?

கோடிகள் இருந்தால் கோடீஸ்வரராக முடியுமா?

பெரும் பணக்காரர்களாக இருந்து கடன்காரர்களாகவும் ஓட்டாண்டிகளாகவும் போனவர்கள் நிறைய பேர். உலகளவில் இதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

மைக்கேல் ஜாக்சன். இவர் பாப் பாடகராக இருந்தவர்.

டெரல் ஓவன்ஸ். இவர் அமெரிக்க கால் பந்து வீரர்.

யுலிஸஸ் கிரான்ட். இவர் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்தவர்.

மைக் டைசன். இவர் குத்துச் சண்டை வீரராக இருந்தவர்.

இவர்கள் எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சம்பாதித்தார்கள். அதே போல யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கடன்காரர்களாகவும் ஆனார்கள்.

அமெரிக்காவில் ESPN என்கிற தொலைக்காட்சி Broke என்ற நிகழ்ச்சி மூலமாக இப்படிப்பட்டவர்களைக் காட்சிபடுத்துகிறது.

தமிழ்நாட்டிலும் இப்படி சிலர் இருந்திருக்கிறார்கள்.

தியாகராஜ பாகதவர்

சந்திரபாபு

சாவித்ரி

குரோர்பதி நிகழ்வில் ஐந்து கோடி பணத்தை வென்ற ஒரு பால்காரர் சில வருடங்களில் பணத்தையெல்லாம் இழந்து மீண்டும் பால்காரராக நேர்ந்த கதையும் நடந்திருக்கிறது.

பணமிருந்தால் மட்டும் பணக்காரர்களாக வாழ்ந்து விட முடியாது. பணத்தை சரியாக நிர்வகிக்கும் திறன் வேண்டியிருக்கிறது. செலவிற்கு ஓர் அளவு இருக்கிறது. ஆடம்பரத்திற்கு ஓர் எல்லை இருக்கிறது. ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டியிருக்கிறது. குந்தித் தின்றாலும் குன்றும் மாளுகிறது.

“ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை.”                         (குறள், 478)

என்ற குறளையும் கூடவே அடுத்த குறளாக இருக்கும்

“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.”               (குறள், 479)

என்ற குறளையும் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இத்தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment