Monday 29 May 2023

அரைக்கால், வீசம் போன்ற பின்ன அளவுகளை அறிவோமா?

அரைக்கால், வீசம் போன்ற பின்ன அளவுகளை அறிவோமா?

நம் முன்னோர்கள் அரைக்கால், வீசம், காணி, முந்திரி போன்ற பின்ன அளவுகளைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் குறிப்பிட்ட அந்த அளவுகள் எவ்வளவு அளவைக் குறிக்கும் என்பதை அறிவோமா?

¼

கால்

½

அரை

¾

முக்கால்

1/5

நாலுமா

1/8

அரைக்கால்

1/16

வீசம்

1/20

மா

1/32

அரை வீசம்

1/40

அரை மா

1/64

கால் வீசம்

1/80

காணி

1/160

அரைக்காணி

1/320

முந்திரி

*****

Thursday 25 May 2023

குழந்தைகளுக்குச் சேமிக்கவும் முதலீடு செய்யவும் கற்றுக் கொடுங்கள்!

குழந்தைகளுக்குச் சேமிக்கவும் முதலீடு செய்யவும் கற்றுக் கொடுங்கள்!

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க குழந்தைகள் பெயரில் முதலீட்டைத் தொடங்குங்கள்.

ஓர் அஞ்சலகக் கணக்கை அல்லது வங்கிக் கணக்கைக் குழந்தைகளின் பெயரில் தொடங்கி அவர்கள் சேமிக்கும் தொகை மற்றும் உறவினர்கள் தரும் அன்பளிப்புத் தொகைகளை அதில் போட்டு வைக்கப் பழக்குங்கள்.

குழந்தைகளின் பெயரில் ஒரு தொடர் வைப்பு (ஆர்.டி.) கணக்கை வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ தொடங்கி மாதா மாதம் சேமித்து வாருங்கள். குறைந்தபட்சம் மாதா மாதம் 10 ரூபாய் செலுத்தும் தொடர் வைப்புக் கணக்கைக் கூட நீங்கள் அஞ்சலகத்தில் தொடங்கலாம். பெருந்தொகையைத்தான் சேமிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. கையில் இருக்கும் தொகையைச் சேமிக்கப் பழக வேண்டும். இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்துப் பழக்கமாக்க வேண்டும்.

தொடர்ந்து சேமிக்கும் பணம் எப்படி மிகப்பெரிய தொகையாக மாறுகிறது என்பதை வார்த்தைகளில் விவரிப்பதை விட இது போல வாழ்க்கையில் ஒரு தொடர்வைப்புக் கணக்கைத் தொடங்கிச் சேமிக்கச் செய்வதன் மூலமாகக் குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்து விடலாம்.

தற்போது குழந்தைகளின் பெயரில் பரஸ்பர நிதியில் மாதம் தோறும் முதலீடு செய்யும் வாய்ப்புகளும் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தி இளம் வயதிலேயே முதலீட்டைத் தொடங்கும் அனுகூலத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

சிறுகச் சிறுக சேமிக்கும் பணத்தின் மூலமாக ஒரு கிராம், இரண்டு கிராம், 5 கிராம் என தங்க நாணயங்கள் வாங்கும் பழக்கத்தையும் குழந்தைகளிடம் உருவாக்குங்கள். ஒரு கிராம் தங்க நாணயம் வாங்குவதற்கான தொகையைச் சேமிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகிறது என்பதைக் குழந்தைகள் அனுபவத்தில் அறிந்து கொள்ள இந்தச் செயல்முறை உதவும். மந்திர ஜாலம் போல பணத்தைப் பெருக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவும் இந்த அனுபவம் பெரிதும் உதவும். பிற்காலத்தில் பாடுபட்டுச் சேர்த்த பணத்தாசையைத் தூண்டும் திட்டங்களில் கட்டி ஏமாறாமல் இருக்கவும் இந்த அனுபவம் கூடுதலாகத் துணை நிற்கும்.

குழந்தைகளுக்கு என்று அரசின் அற்புதமான திட்டங்கள் அவ்வபோது அறிவிக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு அது போன்ற திட்டங்களிலும் முதலீடு செய்து வாருங்கள். தற்போது பெண் குழந்தைகளுக்குச் செல்வமகள் திட்டமும், ஆண் குழந்தைகளுக்குத் தங்கமகன் திட்டமும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது போன்ற திட்டங்களில் அவசியம் உங்கள் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கைத் துவங்கி ஆண்டுதோறும் குறிப்பிட்டத் தொகையைச் சேமித்து வாருங்கள்.

குழந்தைகளின் வருங்காலப் பணத்தேவைக்கான பணத்தை ஒரே நாளில் உருவாக்கி விட முடியாது. சேமிப்பின் மூலமாகவும் முறையான முதலீட்டின் மூலமாகவும் ஒவ்வொரு நாளும் உருவாக்கலாம். அப்படி உருவாக்கினால் அவர்களின் திருமணம், உயர்கல்வி, சொந்த வீடு போன்றவற்றிக்கான செலவினங்களைக் கடனின்றி உருவாக்க நாம் கற்றுக் கொடுத்தவர்களாவோம்.

இந்தக் கற்றல் அவர்கள் மனதிலும் வாழ்க்கையிலும் நிலைத்து விட்டால் எந்தப் பொருளையும் அவர்கள் கடனுக்கு வாங்குவது பற்றி யோசிக்க மாட்டார்கள். அவர்கள் விரும்பும் பொருளுக்கான பணத்தைப் பொறுமையாகச் சேர்த்த பின்பே காத்திருந்து வாங்குவார்கள். சிறுக சிறுகச் சேமித்து பொருள் வாங்குபவர்கள் அநாவசியமான அல்லது ஆடம்பரமான பொருட்களை உணர்ச்சி வேகத்தில் வாங்கி விட மாட்டார்கள். அவர்கள் பணத்தின் மதிப்பையும் அருமையையும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

சரியான செலவினப் பழக்கம் உருவாகுவதற்கும், கடன் வாங்குவது ஒரு பழக்கமாக உருவாகாமல் இருப்பதற்கும் சேமிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு இளமையிலிருந்து கற்றுக் கொடுப்பதும் பழக்கப்படுத்துவதும் அவசியமாகும்.

மேற்படித் தகவலைச் சுருக்கமாகப் பார்க்குமிடத்துக் குழந்தைகளுக்காகப் பின்வரும் கணக்குகளில் உகந்தவற்றைப் பெற்றோர்கள் தொடங்கலாம்.

ü அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு (சேவிங்ஸ் அக்கௌண்ட்)

ü வங்கிச் சேமிப்புக் கணக்கு (சேவிங்ஸ் அக்கௌண்ட்)

ü அஞ்சலகத் தொடர் வைப்புக் கணக்கு (ஆர்.டி. அக்கௌண்ட்)

ü வங்கி தொடர் வைப்புக் கணக்கு (ஆர்.டி. அக்கௌண்ட்)

ü செல்வமகள் சேமிப்புத் திட்டம்

ü தங்கமகன் சேமிப்புத் திட்டம்

ü பரஸ்பர நிதித் திட்டம் (மியூட்சுவல் பண்ட்)

ü தங்க நாணயங்கள் வாங்குதல்

இத்தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

Wednesday 24 May 2023

30 ஆண்டுகள் கழித்து 10,000 ரூபாய் சம்பாதிப்பவர் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் தெரியுமா?!

30 ஆண்டுகள் கழித்து 10,000 ரூபாய் சம்பாதிப்பவர் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் தெரியுமா?!

சதவீதம் மற்றம் கூட்டுவட்டியின் பயன்பாட்டை நேற்று 100 ரூபாயை வைத்து தெரிந்து கொண்டோம். 100 ரூபாய் பணத்தாளின் மதிப்பானது பணவீக்கத்தால் எப்படி குறைந்து கொண்டே போகிறது என்பதையும், அந்தப் பணவீக்கத்தால் 100 ரூபாய் மதிப்புள்ள பொருளின் மதிப்பு எப்படி அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதையும் பார்த்தோம்.

இன்று நேற்றின் தொடர்ச்சியாக இன்னும் சில விவரங்களை அறிந்து கொள்வோம். மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பவர் 30 ஆண்டுகள் கழித்து எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் தெரியுமா?

10,000 ரூபாயை அப்படியே பணத்தாளாக வீட்டில் ஒருவர் வைத்திருந்தால் 30 ஆண்டுகள் கழித்து எவ்வளவு குறைந்திருக்கும் தெரியுமா?

இவற்றுக்கான விடை காண நாம் கீழே உள்ள அட்டவணையைக் காண்போம். இந்த அட்டவணையில் நாம் பணவீக்கத்தை 5% ஆக வைத்துக் கொள்வோம்.

ஆண்டுகள்

10,000 ரூபாய் பணத்தாளின் மதிப்புக் குறைதல்

10,000 ரூபாய்க்குச் சமமான மதிப்பு அதிகரித்தல்

துவக்கம்

10000

10000

5

7738

12763

10

5988

16289

15

4633

20789

20

3585

26533

25

2774

33864

30

2146

43220

அட்டவணையிலிருந்து 10,000 ரூபாய் 30 ஆண்டுகள் கழித்து 2,146 ஆக மதிப்பு குறைந்து விடும். தற்போது 10,000 ரூபாய் மாத ஊதியம் பெறும் ஒருவர் 30 ஆண்டுகள் கழித்து 43,220 ரூபாய் சம்பாதிக்க வேண்டும். மேலும் அட்டவணையிலிருந்து நீங்கள் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் பணத்தாளின் மதிப்பு பணவீக்கத்தால் எப்படி குறைகிறது என்பதையும் அதே மதிப்பில் செய்ய வேண்டிய சம்பாத்தியம் எப்படி அதிகரிக்கிறது என்பதையுக் காணலாம். இதெல்லாம் 5% பணவீக்கத்திற்கான கணக்கீடு.

பணவீக்கம் 7% ஆக இருந்தால் நிலைமை எப்படி இருக்கும் என்பதைக் கீழே உள்ள அட்டவணையில் பாருங்கள்.

ஆண்டுகள்

10,000 ரூபாய் பணத்தாளின் மதிப்புக் குறைதல்

10,000 ரூபாய்க்குச் சமமான மதிப்பு அதிகரித்தல்

துவக்கம்

10000

10000

5

6957

14026

10

4840

19672

15

3367

27591

20

2342

38698

25

1629

54276

30

1133

76125

இந்த அட்டவணைப்படி பார்க்கும் போது 10,000 ரூபாய் மதிப்பானது 30 ஆண்டுகள் கழித்து 1133 ஆகக் குறைந்து விடுகிறது. தற்போது மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பவர் 30 ஆண்டுகள் கழித்து 76,125 ரூபாய் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. இக்கணக்கீடு பணவீக்கம் 7% என்பதற்கான கணக்கீடு என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இதுவே பணவீக்கம் 8 சதவீதம், 9 சதவீதம், 10 சதவீதம் என்றால் 30 ஆண்டுகள் கழித்து அதன் பணமதிப்பு எவ்வளவு குறைந்திருக்கும், தற்போதும் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பவர் அப்போது எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்பதை நீங்களே கணக்கீட்டுப் பாருங்களேன். இப்போது உங்களுக்கு சதவீதத்தின் பயன்பாடு எவ்வளவு முக்கியமான என்பது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அத்துடன் பணவீக்கத்தின் தாக்கமும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பணவீக்கத்திற்கு ஏற்ப நமது சேமிப்பும் முதலீடும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். அதாவது பணவீக்கம் 5 சதவீதம் என்றால் நமது சேமிப்பும் முதலீடும் சொத்து மதிப்பும் 6 சதவீத அளவாவது உயர்ந்து கொண்டு போக வேண்டும்தானே.

சதவீதம் என்ற கணிதக் கருத்தாக்கம் இப்படியாக நமது பொருளாதாரம் பற்றியும் அறிந்து கொள்ளவும் திட்டமிட்டுக் கொள்ளவும் உதவுகிறது அல்லவா!

இத்தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு நாளை இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

Tuesday 23 May 2023

30 ஆண்டுகள் கழித்து 100 ரூபாய் எவ்வளவு ஆகும் தெரியுமா?!

30 ஆண்டுகள் கழித்து 100 ரூபாய் எவ்வளவு ஆகும் தெரியுமா?!

பணவீக்கம் எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொள்ள சதவீதம்தான் உதவுகிறது. சதவீதத்தைப் பயன்படுத்திதானே தனிவட்டி, கூட்டுவட்டி சார்ந்த கணக்குகளைப் போடுகிறோம். கூட்டுவட்டிக்கான கணக்கை எடுத்துக் கொண்டால் பணவீக்கம் எப்படி பணத்தின் மதிப்பைக் குறையச் செய்கிறது என்பதையும் செலவு செய்ய வேண்டிய தொகையை எப்படி உயர்த்துகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு 100 ரூபாயைக் கருத்திக் கொள்வோம். இந்த 100 ரூபாயின் மதிப்பு இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து இதே மதிப்புடன் இருக்குமா? அதாவது இன்றைய தேதியில் 100 ரூபாய் கொடுத்து வாங்கக் கூடிய பொருளை ஐந்து ஆண்டுகள் கழித்து அதே 100 ரூபாயைக் கொடுத்து வாங்க முடியுமா என்பதுதான் கேள்வி. அதெப்படி முடியும் என்கிறீர்களா? அப்படியானால் 100 ரூபாய்க்கு என்னவாகி விட்டது?

ஐந்து ஆண்டுகள் கழித்து 100 ரூபாயின் மதிப்பு குறைந்து விடுகிறது. பொருளின் மதிப்பு ஏறி விடுகிறது. எப்படி 100 ரூபாயின் மதிப்பு குறைகிறது? ஏன் குறைய வேண்டும்? பணவீக்கம்தான் காரணம்.

100 ரூபாய் மதிப்புள்ள பொருளின் விலை ஐந்தாண்டுகள் கழித்து ஏன் ஏறி விடுகிறது? ஏறுவதற்கு என்ன காரணம்? அதற்கும் பணவீக்கம்தான் காரணம்.

இப்போது நமக்கு ஒரு விசயம் புரிகிறது அல்லவா! பணவீக்கமானது பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது. பொருளின் மதிப்பை உயர்த்துகிறது. இந்தப் பணவீக்கத்தின் காரணமாகத்தான் நம்முடைய பாட்டனார்கள் ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய ஒரு பவுன் நகையை நாம் தற்போது ஐம்பதாயிரத்துக்கு மேல் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டும் பொருளின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதற்கும் காரணம் இந்தப் பணவீக்கம்தான்.

கடந்த காலத்திலிருந்து தற்காலம் வரை பணவீக்கம் பணத்தின் மதிப்பையும் பொருளின் மதிப்பையும் என்ன செய்திருக்கிறது என்பதை நாம் ஒரு பவுன் நகையை வைத்து மேலே பார்த்தோம் அல்லவா! இதே போல இந்தப் பணவீக்கம் நிகழ்காலத்திலிருந்து வருங்காலத்தில் எப்படி ரூபாயின் மதிப்பையும் ஒரு பொருளுக்கான செலவின மதிப்பையும் மாற்றும் என்பதைப் பார்க்கலாமா?

இப்படிப் பார்ப்பதற்குத்தான் நமக்குச் சதவீதமும் கூட்டுவட்டிக்கான சூத்திரமும் பயன்படுகிறது. உங்களுக்குத்தான் கூட்டுவட்டிக்கான சூத்திரம் தெரியுமே.

p(1+i)n என்பதுதானே அந்தச் சூத்திரம்.

p என்பது தொகை. அதாவது அசல்.

i என்பது வட்டி வீதம்.

n என்பது ஆண்டுக்கணக்கு.

இப்போது பணவீக்கத்தின் சதவீதத்தை நாம் 5% என வைத்துக் கொள்வோமே. ஏன் அதற்குக் கீழ் இருக்காதா? அல்லது அதற்கு மேல் இருக்காதா? இருக்கலாம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 5% க்குக் கீழ் இருக்க வாய்ப்புகள் குறைவு. மேலும் அது 7% வரை கூட அதிகரிக்கலாம். அதைத் தாண்டியும் அதிகரிக்கலாம். இருந்தாலும் 5% என்பதை நாம் சராசரி பணவீக்கமாகக் கொள்ளலாம். அதனால் இந்த 5% என்பதை முதலில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இந்தப் பணவீக்கம் 100 ரூபாயை எப்படியெல்லாம் மதிப்புக் குறைக்கிறது என்பதையும் ஒரு பொருளின் மதிப்பை எப்படி உயர்த்துகிறது என்பதையும் கீழே உள்ள அட்டவணையில் பார்ப்போம்.

ஆண்டுகள்

100 ரூபாய்  பணத்தாளின் மதிப்புக் குறைதல்

100 ரூபாய் மதிப்புள்ள பொருளின் மதிப்பு அதிகரித்தல்

துவக்கம்

100

100

5

77

128

10

60

163

15

46

208

20

36

265

25

28

338

30

22

431

மேலே உள்ள அட்டவணையிலிருந்து நீங்கள் பல விவரங்களைப் புரிந்து கொள்ள முடியும். ஐந்து ஆண்டுகள் கழித்து ஐந்து சதவீத பணவீக்கத்தால் 100 ரூபாய் 77 ஆகக் குறைகிறது. அதுவே 100 ரூபாய் இருந்து பொருளின் மதிப்பு ஐந்து ஆண்டுகள் கழித்து ஐந்து சதவீத பணவீக்கத்தால் 128 ஆகிறது. இப்படியே பத்தாண்டுகள் கழித்து ரூபாயின் மதிப்பு, பொருளின் மதிப்பு எப்படி ஆகிறது என்பதையும் பாருங்கள். 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என பார்த்துக் கொண்டே வந்து 30 ஆண்டுகள் கழித்து என்னவாகிறது என்று பாருங்கள். 100 ரூபாயின் மதிப்பு 22 ஆகி விடுகிறது. ஆனால் 100 ரூபாய்க்கு நாம் இன்று வாங்கும் பொருளை 30 ஆண்டுகள் கழித்து வாங்க 431 ரூபாய் தேவைப்படுகிறது. இதுதான் பணவீக்கம் செய்யும் மாயம்.

இப்போது பணவீக்கம் 7% ஆக இருந்தால் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் 100 ரூபாயின் மதிப்பும், 100 ரூபாயுள்ள பொருளின் மதிப்பும் எப்படியெல்லாம் மாறுகிறது அதாவது குறைகிறது மற்றும் அதிகரிக்கிறது என்பதைக் கீழே உள்ள அட்டவணையின் மூலமாகப் பார்ப்போமா?

ஆண்டுகள்

100 ரூபாய் பணத்தாளின் மதிப்புக் குறைதல்

100 ரூபாய் மதிப்புள்ள பொருளின் மதிப்பு அதிகரித்தல்

துவக்கம்

100

100

5

70

140

10

49

196

15

34

275

20

24

386

25

17

541

30

12

759

7% பணவீக்கம் என்றால் ஐந்தாண்டுகளில் 100 ரூபாயின் மதிப்பு 70 ஆகக் குறைந்து விடுகிறது. ஆனால் 100 ரூபாயுள்ள பொருளின் மதிப்பு 140 ஆகி விடுவதைப் பாருங்கள். இது இப்படியே ஐந்தாண்டுகளில் குறைவும் மற்றும் அதிமாகவும் ஆகி முப்பதாண்டுகள் கழித்து என்னவாகிறது பாருங்கள். முப்பதாண்டுகள் கழித்து உங்கள் 100 ரூபாயின் மதிப்பு 12 ஆகி விடுகிறது. ஆனால் 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளை அப்போது 759 கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. அதாவது ஐந்திலிருந்து ஏழு என்று இரண்டு சதவீதம் பணவீக்கம் அதிகரித்தால் முப்பதாண்டுகள் கழித்து 431க்கு வாங்கிய பொருளை 759 கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது அல்லவா!

இப்போது யோசித்துப் பாருங்கள், இந்தப் பணவீக்கம் 8%, 9%, 10% என அதிகரித்தால் என்னவாகும் என்று?

இந்தப் பணவீக்கக் கணக்குப் புரிந்தால் நீங்கள் சேமிக்கும் தொகை எத்தகைய வட்டி விகிதத்தில் வளர வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எப்படியும் பணவீக்கம் 5% க்கு மேல் இருக்கும் என்பதால் நீங்கள் சேமிக்கும் தொகைக்கான வட்டி விகிதம் அதை விட அதிகமாகக் கூட்டு வட்டியில் வளரும் விதத்தில் இருக்க வேண்டும்தானே!

நாளை இந்தப் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாதம் ரூபாய் 10,000 சம்பாதிக்கும் ஒருவர் ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் எவ்வளவு சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.

இத்தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு நாளை இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****