Thursday 11 May 2023

ஏன் அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும்? - வலுவான காரணங்கள் 27

ஏன் அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும்?

-         வலுவான காரணங்கள் 27

இப்போது குழந்தைகளைச் சேர்ப்பதில் தனியார் பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் ஒரு பெரும் போட்டியே நடக்கிறது. இரு தரப்பினரும் பள்ளி வயதுப் பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதில் மாபெரும் முன்னெடுப்பை மேற்கொள்கிறார்கள். கல்வியில் இது ஓர் ஆரோக்கியமான செயல்பாடுதான்.

அரசுப் பள்ளிகளில் ஏன் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இக்காரணங்கள் தனியார் பள்ளிகளைக் குறை கூறுபவையோ குறைத்து மதிப்பிடுபவையோ அல்ல. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான காரணங்களை வலுவாகக் கூறுபவை.

இக்காரணங்களைப் பார்ப்பதற்கு முன் வேறு ஒரு வலுவான முதன்மையான ஒரு காரணத்தையும் கூற முடியும்.

நீங்கள் அரசுப் பள்ளியில் குழந்தையைச் சேர்த்து விட்டுத் தனியார் பள்ளியில் சேர்த்ததாகக் கருதிக் கொண்டு அந்தக் கல்விக் கட்டணத்தைக் குழந்தையின் பெயரில் செல்வமகன் / செல்வமகள் திட்டத்தில் வருடா வருடமோ அல்லது மாதா மாதமோ போட்டு வந்தால் உங்கள் குழந்தை பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது அது ஒரு பெரும் தொகையாக மாறியிருக்கும். இந்தத் தொகை அவர்களின் உயர்கல்வி செலவினத்தைக் கல்விக்கடன் வாங்காமல் தொடர பெரிதும் உதவும். இதுதான் நான் சொல்லும் வலுவான காரணம்.

மற்ற காரணங்களைக் கீழே பார்ப்போம்.

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றால்,

1)      கட்டணமில்லாக் கல்வி

2)      ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில் 20% முன்னுரிமை இட ஒதுக்கீடு

3)      ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை , சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில 7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு

4)      கல்லூரி விடுதி கட்டணம் மற்றும் விடுதி உணவு கட்டணம் உட்பட இலவசம்

5)      பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை உதவித்தொகை

6)      6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி

7)      மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 உதவித்தொகை

8)      நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 உதவித்தொகை

9)      விலையில்லாப் புத்தகங்கள்

10)  விலையில்லாக்  குறிப்பேடுகள்

11)  விலையில்லாச் சீருடைகள் 4 செட்

12)  விலையில்லாப் புத்தகப்பை

13)  விலையில்லாக் காலணிகள்

14)  விலையில்லா வண்ண பென்சில்கள்

15)  விலையில்லாக் கணித உபகரணப் பெட்டி

16)  விலையில்லாப் புவியியல் வரைபட நூல்

17)  தினந்தோறும் காலைச் சிற்றுண்டி

18)  முட்டையுடன் கூடிய மதியச் சத்துணவு

19)  இலவச பேருந்து பயண அட்டை

20)  போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா

21)  அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு திறன் வளர்க்க தேன்சிட்டு மாத இதழ்

22)  விலையில்லா மிதிவண்டி

23)  விலையில்லா மடிக்கணினி

24)  அறிவியல் கணிதத் திறன் வளர்ப்புக்கான வானவில் மன்றச் செயல்பாடுகள்

25)  இலக்கிய மன்றச் செயல்பாடுகள் மற்றும் ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிகள்

26)  உயர்கல்விக்கான வழிகாட்டல் முன்னெடுப்புகள்

27)  பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒருங்கிணைந்த அணுகுமுறை

இப்படி ஏராளமான வசதிகளும் வாய்ப்புகளும் அரசுப் பள்ளிகளில் இருக்கின்றன. இவற்றை ஆழமாக யோசித்து அத்துடன் மேலே சொல்லப்பட்ட வலுவான முதன்மையான காரணத்தையும் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கலாம்.

அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான கீழ்காணும் முழக்கத்தையும் பெற்றோர்கள் கருத்தில் கொள்ளலாம்.

‘அரசுப்பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்’

ஆகவே, அன்பு பெற்றோர்களே! தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பீர்! அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடுவீர்!

இத்தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு நாளை இதே வலைப்பூவில் சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment