Tuesday 20 February 2024

ஒரு சூப்பர் ஸ்டாரின் சூப்பரான முடிவின் பின்னணி!

ஒரு சூப்பர் ஸ்டாரின் சூப்பரான முடிவின் பின்னணி!

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவரது படங்கள் சரியாக ஓடவில்லை.

அவர் மேற்கொண்ட வியாபார முயற்சிகளும் சரியான பலனளிக்கவில்லை.

அவர் பெரும் கடன்காரராகிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில்தான் அவருக்கு ‘கோன் பனேகா குரோர்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு வந்தது.

ஒரு சூப்பர் ஸ்டார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதா என்ற கேள்வியை இப்போது அமிதாப் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது என பலர் கருத்து தெரிவித்தனர். அவரைத் தடுத்தும் பார்த்தனர்.

ஆனால் அமிதாப் பச்சன் தொலைக்காட்சி மூலமாக நிறைய மக்களைச் சந்திக்க முடியும் என்பதில் உறுதியாக நம்பினார். அவர் ‘கோன் பனேகா குரோர்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதென முடிவெடுத்தார்.

அவரது முடிவு மிகச் சரியாக அமைந்தது. அமிதாப் அந்த நிகழ்ச்சி மூலமாகப் பலரைச் சென்றடைந்தார். அபாரமாகச் சம்பாதித்தார். கடனையெல்லாம் அடைத்தார். அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பிறகு திரைத்துறையிலும் அட்டகாசமாக முன்னேறினார்.

அவரது கருத்துப்படி ஊடகம் எது என்பது முக்கியம் கிடையாது. பார்வையாளர்களுக்கு எது தேவையோ அதை நிறைவு செய்வதுதான் முக்கியம். அந்த ஊடகம் தொலைக்காட்சியாக இருக்கலாம், திரைப்படமாக இருக்கலாம். பார்வையாளர்களின் தேவையை நிறைவு செய்தால் எந்த ஊடகமாக இருந்தாலும் அந்த ஊடகத்தில் சூப்பர் ஸ்டாராகத் திகழ முடியும் என்பதை அமிதாப் நிரூபித்தார். திரைத்துறையில் மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தான் ஒரு சூப்பர் ஸ்டார்தான் என்பதை இந்த உலகுக்குக் காட்டினார்.

ஆக ஒருவரது பதவிக் குறைவோ, தகுதிக் குறைவோ ஒரு செயலில் முக்கியமில்லை. அந்தப் பதவி அல்லது தகுதி எதிர்பார்க்கும் தேவையை நிறைவு செய்தால் அந்தப் பதவியின் உச்சத்தை அதாவது அந்தத் தகுதியின் உச்சத்தை நீங்கள் அடையலாம். இதை அமிதாப் பச்சனின் முடிவு உணர்த்துகிறது அல்லவா.

இது போன்ற பயனுள்ள செய்திகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். பயனுள்ள செய்திகளை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment