Thursday 22 February 2024

உடல் பருமன் குறித்து அறிய வேண்டிய அவசிய தகவல்கள்!

உடல் பருமன் குறித்து அறிய வேண்டிய அவசிய தகவல்கள்!

உடல் பருமனை அறிய பி.எம்.ஐ. குறியீடு ஒரு முக்கிய அளவீடாகக் கருதப்படுகிறது.

பி.எம்.ஐ. குறியீடானது 18.5க்கும் 24.9க்கும் இடையில் இருப்பதே சரியான உடல் எடையைக் குறிக்கும் அளவீடாகும்.

பி.எம்.ஐ. குறியீடு 30க்கு மேல் இருந்தால் அது உடல் பருமன் நிலையைக் குறிக்கும்.

பி.எம்.ஐ. குறியீடு 40க்கு மேல் இருந்தால் அது ஆபத்தான உடல் பருமன் நிலையைக் குறிப்பதாகும்.

மேலும் இடுப்புச் சுற்றளவைக் கொண்டும் உடல் பருமன் நிலையைத் தீர்மானிக்கலாம்.

ஆண்களின் இடுப்புச் சுற்றுளவு 88 சென்டி மீட்டருக்கு மேல் இருந்தால் அது உடல் பருமன் நிலையைக் குறிக்கும்.

பெண்களின் இடுப்புச் சுற்றளவு 80 சென்டி மீட்டருக்கு மேல் இருந்தால் அது உடல் பருமன் நிலையைக் குறிக்கும்.

உடல் பருமனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய், மாரடைப்பு, பக்கவாதம், குறட்டை, மூட்டுவலி, முதுகுவலி, தோள்வலி போன்ற நோய்கள் எளிதில் உண்டாகின்றன.

உலகம் முழுவதும் 260 கோடி மக்கள் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையானது 12 ஆண்டுகளில் 400 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டள்ளது.

உடல் பருமனால் அவதிப்படுவோர் உடல் எடையைக் குறைக்க மருந்து மாத்திரைகளை நாடுகின்றனர். இத்தகைய உடல் எடை குறைப்பு மருந்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு 49,000 கோடியாகும். இதன் மதிப்பு இன்னும் ஆறு ஆண்டுகளில் எட்டரை லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

உடல் பருமனைக் குறைப்பது மற்றும் ஆரோக்கியம் பேணுவது தொடர்பான அலைபேசி செயலிகள் அதிகம் உருவாக்கப்படுகின்றன. இது போன்ற செயலிகள் வேறெந்த நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இவற்றின் சந்தை மதிப்பு நான்காயிரம் கோடிக்கு மேலாகும்.

உடல் பருமனுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வோரும் தற்போது அதிகரித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் மட்டும் உடல் பருமனைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை 40,000க்கு மேல் செய்யப்பட்டுள்ளன.

உடல் பருமனால் அவதிப்படுவோர் எடை குறைப்புக்கான மாத்திரைகளையும் நாடுகின்றனர் என்பதை நாம் முன்பே பார்த்தோம் அல்லவா. அவர்கள் செமாகுளூட்டைடு என்ற சர்க்கரை நோய்க்கான மருந்தை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சர்க்கரை நோய்க்காக எடுத்துக் கொள்ளலாமே தவிர, உடல் பருமனைக் குறைப்பதற்கான மாத்திரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் உடல் பருமன் உடையோர் இதை பொருட்படுத்தாமல் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்கின்றனர். இதனால் இந்த மாத்திரைகள் அடங்கிய ஓர் அட்டையின் மதிப்பு கள்ள சந்தையில் பதினைந்தாயிரம் ரூபாய் வரை விலை போகிறது.

உடல் பருமன் உடைய சிலர் உடல் பருமனைக் குறைக்க உணவுத் திட்டத்தைப் பெறுதல், இயற்கை வைத்தியம் செய்தல், எடை குறைப்பு ஊசிகளைப் பயன்படுத்துதல் என்று வணிக நோக்கோடு வலை விரிப்போரின் மாய வலையில் சிக்கி பல்லாயிரம் ரூபாய் முதல் பல லட்ச ரூபாய் வரை செலவு செய்கின்றனர். இதனால் பண இருப்பு குறையலாமே தவிர, உடல் பருமன் குறையாது.

உடல் பருமன் என்பது ஒரு நாளில் உருவாகக் கூடியது அன்று. உணவுப் பழக்கத்தாலும் உணவு முறைகளாலும் போதிய உடல் உழைப்பு இன்மையாலும் பல நாட்களாக உருவாகக் கூடியது. ஆகவே உடல் பருமனைக் குறைக்க முயலும் போதும் அதை ஒரு சில நாட்களில் குறைத்து விட முடியாது. உணவுப் பழக்கம் மற்றும் போதிய உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி மூலமாக நீண்ட கால அளவிலேயே சரி செய்ய முடியும். இந்த உண்மையை மறுத்து விட்டு மருந்து மாத்திரைகள் மூலமாகவோ வேறு உடனடி உபாயங்கள் மூலமாகவோ உடல் பருமனைக் குறைக்க விரும்பினால் அதற்கான பக்க விளைவுகளையும் கூடுதலாக பண விரயத்தையும் சந்திக்க நேரிடும் என்பது பயமுறுத்தல் அல்ல, சரியான எச்சரிக்கையாகும்.

இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி! வணக்கம்!

*****

No comments:

Post a Comment