Thursday 30 December 2021

கொற்றவை - படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

கொற்றவை

தமிழர்களின் பழந்தெய்வமாக அறியப்படும் கடவுள் கொற்றவை ஆவாள். அவளைப் பழையோள் என்றும் இலக்கியங்கள் குறிப்பிடும்..

பாலை நிலத் தெய்வமாக அறியப்பட்டாலும் அனைத்து திணை மக்களின் வெற்றிக் கடவுளாய்க் கொற்றவை போற்றப்படுகிறாள்.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் கொற்றவை நிலை “மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே” என்று சுட்டப்படுகிறது. போருக்குச் செல்லும் வீரர்கள் வெற்றிக்காக  கொற்றவையை வணங்கிச் செல்லும் நிலையே கொற்றவை நிலை ஆகும்.

அடர்ந்த காட்டில் உறைபவள் என்று கொற்றவைக் குறித்து "ஓங்கு புகழ் கானமர் செல்வி" என அகநானூறு குறிப்பிடுகிறது.

குறுந்தொகை கொற்றவையை "விரல் கெழு சூலி" என்கிறது.

கலித்தொகை கொற்றவையை "பெருங்காட்டு கொற்றவை" என்கிறது.

பரிபாடல்     "நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவை கோலங்கொண்டு" என்று கூறுகிறது.

திருமுருகாற்றுப்படை “கொற்றவை சிறுவ” எனக் கூறுவதன் மூலம் முருகனின் தாய் கொற்றவை என்கிறது. மேலும் “பழையோள் குழவி” என்றும் கொற்றவையின் பழமையைப் போற்றுகிறது. “வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ விழையணி சிறப்பிற் பழையோள் குழவி” என்பது திருமுருகாற்றுப்படையின் வரிகள்.

பெரும்பாணாற்றுப் படையானது சூரனை வதம் செய்த  முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களாடும்  கூத்தையும் அழகையும் உடைய செல்வி கொற்றவை என்பதை “கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி” எனும் வரிகளால் போற்றுகிறது.

சிலப்பதிகாரத்தில் கொற்றவைக் குறித்து ஏராளமான செய்திகள் காணப்படுகின்றன. மதுரைக்கு  வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் தங்குவதே  ஒரு கொற்றவை கோவிலில்தான். “விழிநுதற் குமரி, விண்ணோர் பாவைமையறு சிறப்பின் வான நாடி ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு  என்" எனும் வரிகளால் அச்செய்தியை அறியலாம்.

கொற்றவையின் தோற்றம், வழிபாடு, பெருமை,சிறப்பு குறித்துச் சிலப்பதிகாரம் மிக விரிவாகப் பேசுகிறது. மறவர்கள் வில்லையேந்திப் போருக்குச் செல்லும்போது   அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் என்றும் மறவர்கள்  தரும் அவிப்பலியை  ஏற்பவள் என்றும் பிறை சூடியவள், நெற்றிக் கண், பவள வாய், முத்துப் போன்ற சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பைக்கொண்ட மார்புக்கச்சு, வளைகள் அணிந்த கையில் சூலம்,  புலித்தோல் இடையாடை,  இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், கலைமானை ஊர்த்தியாகக் கொண்டவள் என்றும் வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கையை உடைய எருமைத்தலையின் மேல்  நிற்பவள் என்றும் அனைவரும் வணங்கும் குமரி என்றும் பலவாறாகக் கொற்றவையைச் சிலப்பதிகாரம் சிறப்பு செய்கிறது.

மேலும் சிலப்பதிகாரம் கொற்றவையின் பல்வேறு பெயர்களை பட்டியல் இடுகிறது.  கலையமர் செல்வி, நீலி,  அணங்கு, கொற்றவை, பாகம் ஆளுடையாள்.,அமரி, குமரி, கவுரி, சூலி,  ஐயை, கண்ணுதல்  திங்கள் வாழ்சடையாள், திருவமாற் கிளையாள் என்று சிலப்பதிகாரம் கொற்றவையின் பலவகைப் பெயர்களைத் தருகிறது.

புறப்பொருள் வெண்பாமாலையும் கொற்றவையின் தோற்றத்தைச் சிங்கக்கொடியும் பசுங்கிளியும் ஏந்தியவள், கலைமானை ஊர்தியாகக் கொண்டு வெற்றி தரும் சூலத்தை உடையவள் என்று சிறப்பித்துச் சுட்டுகிறது.

இவ்வாறாக கொற்றவை வழிபாடு பழங்காலம் தொட்டே தமிழர்களின் பாரம்பரியமாக இருந்தது. அவ்வகையில் ஆயுதங்களை கொற்றவைக்கு படையிலிட்டு வழிபடுவது தமிழர்களின் மரபாக இருந்திருக்கிறது. அம்மரபின் தொடர்ச்சியாக வெற்றி தரும் நாளாக தமிழர்களின் பாரம்பரிய விழாவாகக் கருவி பூசை எனும் ஆயுத பூஜை இருந்தது எனலாம்.

*****

No comments:

Post a Comment