Tuesday, 14 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.07.2026

1) தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

2) மதுரையில் அதிகபட்சமாக 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது.

3) பருவமழை தாமத்ததால் இந்தியாவில் காரீப் சாகுபடி பணிகள் தாமதமாகி உள்ளன.

4) ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழந்தார். இதற்கு இந்தியா தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

5) இந்தியா பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலாகிறது.

Education & GK News

1) Temperatures exceeding 100 degrees Fahrenheit have been recorded in several parts of Tamil Nadu.

2) A maximum temperature of 108.5 degrees Fahrenheit was recorded in Madurai.

3) Kharif cultivation activities in India have been delayed due to the late arrival of the monsoon.

4) An Indian sailor lost his life in an attack carried out by Iran in the Strait of Hormuz; India has expressed its condemnation of the incident.

5) The trade agreement between India and Britain comes into effect today.

மரணத்துக்குப் பின் ஓர் ஓடிபி

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 21

மரணத்துக்குப் பின் ஓர் ஓடிபி

பைலேண்ட் அபேயில் நடந்த கதை இப்போது நடந்தால் எப்படி இருக்கும்?

அட்ரஸ் : சென்னையின் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு.

நள்ளிரவு இரண்டு மணி.

கணேஷ் தன் லேப்டாப்பில் உலகத்தை உலுக்கும் ஏதோ ஒரு மொக்கையான கோடிங் செய்துகொண்டிருந்தான்.

திடீரென ஏசி குளிர்காற்று நின்றது. ஓசியில் வந்த கரண்ட் கட் இல்லை. அறையின் மூலையில், ரேடியம் வாட்ச் டயல் போல லேசான நீல ஒளியுடன் ஒரு நபர் சப்பணம் கட்டி அமர்ந்திருந்தார்.

கணேஷ் பயப்படவில்லை. ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவனுக்குப் பேயைப் பார்த்து பயப்படும் அளவுக்கு ரத்த ஓட்டம் இருப்பதில்லை.

"யார்? மாசக் கடைசியில் திருட வந்தீங்களா? அக்கவுண்ட்ல மினிமம் பேலன்ஸ்தான் இருக்கு. பேங்க்லேயே தேடிட்டு இருக்காங்க."

"நான் திருடன் இல்லை, பேய்" என்றது அந்த உருவம், விப்ரோவில் அப்ரைசல் வாங்கிய நபர் போலச் சோகமாக.

"அப்படியென்றால் என் சட்டையைக் கிழிக்கப் போகிறாயா? பதினைந்தாம் நூற்றாண்டு கதை போல?"

"இல்லை தம்பி. நான் போன வாரம் கார்டியாக் அரெஸ்ட்டில் செத்த பக்கத்து பிளாட் சுந்தரம். சாகும்போது நாலு கிரெடிட் கார்டில் மினிமம் டியூ கட்டாமல் செத்துவிட்டேன். இப்போது மேலோகத்தில் என் சிபில் ஸ்கோர் பூஜ்ஜியமாக இருக்கிறது. எமலோக வாசலில் லோன் ரிஜெக்ட் ஆனவன் போல நிக்க வச்சிருக்காங்க. மோட்சத்துக்கு விசா கிடைக்கவில்லை."

"நான் என்ன செய்ய வேண்டும்? பாவம் புண்ணியம் என்று பேசினால் எனக்குப் பிடிக்காது."

"பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை. என் டெஸ்க்டாப்பில் ஒன்டைம் பாஸ்வேர்ட் வரும். கொஞ்சம் கூகுள் பேயில் அந்த இரண்டு லட்சத்தைக் கட்டிவிடு தம்பி. சிபில் ஸ்கோர் ஏறிவிடும். அந்த வெள்ளி ஸ்பூன் கதையெல்லாம் உனக்குத் தெரியும்தானே? அன்று ஸ்பூன், இன்று கார்டு."

கணேஷ் லேப்டாப்பை மூடினான். முகம் எந்தச் சலனமும் இன்றி அமிதாப் பச்சன் போல இருந்தது.

"முடியாது. அடுத்த மாசம் லே ஆப் வரப்போகிறது. நானே கார்டு கட்ட முடியாமல் பேயாகப் போகிறேன். இரண்டு பேரும் பேயாக எமலோக வாசலில் சந்திப்போம். அங்கே பேசிக்கொள்ளலாம்."

பேய் பெருமூச்சுவிட்டது.

கலிகாலத்தில் யாரிடமும் இரக்கமில்லை என்று நினைத்திருக்கலாம். அது அப்படியே காற்றோடு காற்றாக, தன் ஓடிபியோடு மறைந்தது.

கணேஷ் மீண்டும் கோடிங் செய்ய ஆரம்பித்தான்.

இப்படித்தான் எழுத வேண்டும் அந்தக் கதையை. ஏன் இப்படி கதை விடுகிறார்கள் என்று விளக்குவதை விட, இப்படி ஒரு கதையை உருவாக்கிக் காண்பித்து விட்டால், அதற்கு அப்புறம், அதற்கு மேலும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை பாருங்கள். அதற்காகத்தான் கதைக்கு மேல் இந்தக் கதை. இனி நீங்களும் பேய்க் கதையை உருவாக்கலாம்தானே?

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

Monday, 13 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.07.2026

1) வீரியமிக்க கொரோனோ பரவல் தமிழகத்தில் இல்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2) கவிஞர் வைரமுத்துவுக்கு நேற்று ஞானபீட விருது வழங்கப்பட்டது.

3) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79.

4) ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்காக 20 சதவீத வரி வசூலிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

5) இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய மகளிர் அணி வென்றது.


Education & GK News

1) The Department of Public Health has stated that there is no spread of a virulent strain of coronavirus in Tamil Nadu.

2) Poet Vairamuthu was presented with the Jnanpith Award yesterday.

3) Tamil writer and Sahitya Akademi Award winner Poomani has passed away; he was 79.

4) US President Donald Trump has announced that a 20 percent levy will be charged for the security of ships passing through the Strait of Hormuz.

5) The Indian women's team won the Test cricket match against England.

பேய்க்கு ஓர் என்ஓசி சர்டிபிகேட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 20

பேய்க்கு ஓர் என்ஓசி சர்டிபிகேட்!

அட்ரஸ் என்று பார்த்தால், இங்கிலாந்தின் பைலேண்ட் அபே.

காலம் பதினைந்தாம் நூற்றாண்டு.

அங்கே ஒரு துறவி இருந்தார். அவருக்குத் தினமும் தியானம் செய்து மோட்சம் அடைவதை விட, சுத்துப்பட்டு ஊர்களில் நடக்கும் பேய் கதைகளைக் கேட்டு டைரியில் எழுதி வைப்பதில்தான் அலாதி பிரியம். அவர் கைப்பட எழுதிய அந்தப் பழைய டைரியிலிருந்து ஒரு கதை.

சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கிறது?

அதுவும் பேயோடு நடந்த ஒரு சண்டையில் சட்டை கிழிந்தால்… அதுதான் இந்த கதை.

ஒரு விவசாயி.

அவனது முதலாளியுடன் வயல்வெளியில் அமைதியாக நடந்து போய்க்கொண்டிருந்தான்.

வானிலை அநேகமாக மேகமூட்டத்துடன் இருந்திருக்க வேண்டும்.

திடீரென்று, புதருக்குள்ளிருந்து ஒரு பேய் எகிறி குதித்து வந்தது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, நேராக அந்த விவசாயியின் மேல் பாய்ந்து, அவனது சட்டையைக் கிழித்து, துவம்சம் செய்தது.

சண்டையில் லாஜிக்கே இல்லை என்று கமென்ட் அடிக்காதீர்கள்.

கூட வந்த முதலாளி பயந்து ஓடிவிட, விவசாயிக்குக் கோபம் வந்தது.

ஏற்கனவே வறுமை, இதில் சட்டை வேறு கிழிகிறதே என்ற ஆத்திரம்.

அந்த விவசாயி பயப்படாமல் அந்தப் பேயைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். பிறகு, தனக்குத் தெரிந்த அரைகுறை லத்தீன் மொழியில் கான்ஜூர் செய்தான். அதாவது, மிரட்டி கிராஸ் எக்ஸாமினேஷன் செய்தான்.

"ஏன்டா பேயே எதற்காகடா என் சட்டையைக் கிழிச்ச? உனக்கு என்னதான் வேணும்?"

பேய் உடனே அவ்வ் என்று வடிவேலு பாணியில் அழத் தொடங்கியது.

"தம்பி, நான் சாதாரண ஆள் இல்லை. இந்த அபேயில் பாதிரியாராக இருந்தவன். உயிரோடு இருந்தபோது பேராசை பிடித்து, சில வெள்ளி ஸ்பூன்களைத் திருடி ஓர் இடத்தில் ஒளித்து வைத்துவிட்டேன். அந்தப் பாவம் என் காலைப் பிடித்து இழுக்கிறது. செத்த பிறகும் மோட்சத்துக்குப் போக முடியாமல் இங்கேயே அலைகிறேன்."

இப்போது சட்டை கிழிந்து போன கவலை மறைந்து, விவசாயிக்குச் சிரிப்பு வந்தது.

செத்த பிறகும் மனிதன் தன் பாவத்துக்கு ஏதோ செட்டில்மென்ட் அல்லது லஞ்சம் கொடுத்துத் தப்பித்துவிடலாம் என்று நினைப்பதுதான் காலத்தின் ஆகச்சிறந்த காமெடி.

அந்தப் பேய்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமே.

விவசாயி அந்தப் பேய் சொன்ன இடத்துக்குப் போய், ஒளித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளி ஸ்பூன்களைத் தேடிக் கண்டுபிடித்தான்.

அதை முறைப்படி சர்ச்சுக்கோ அல்லது உரியவர்களிடமோ ஒப்படைத்தான். பாவக் கணக்கு நேர் செய்யப்பட்டது.

அதன் பிறகுதான் அந்தப் பாதிரியார் பேய்க்கு மேலோகத்திலிருந்து நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட் கிடைத்தது. அது நிம்மதியாகக் காற்றோடு காற்றாகக் கரைந்து மோட்சம் போனது.

துறவியின் டைரி அங்கே முடிகிறது. பாவம், அந்த விவசாயிக்குக் கிழிந்த சட்டைக்கு யார் துட்டு கொடுத்தார்கள் என்று அவர் எழுதவே இல்லை!

 அதே கதை இப்போது நடந்தால் எப்படி இருக்கும்? யோசித்து வையுங்கள். அதையும் தேடுவோமே.

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

Sunday, 12 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.07.2026

1) பள்ளிகளுக்கான உடற்கல்வி வழிகாட்டிப் பாடப்புத்தகம் தயார் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.

2) ஆல்கஹால் கலந்த மருந்துகளை விற்பனை செய்வதற்கு புதிய கட்டுபாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

3) ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்.

4) வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த ஏற்பட்ட விபத்தில் 10 தமிழர்கள் உயிரிழந்தனர்.

5) மறைந்த பின்னணி பாடகி எஸ். ஜானகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Education & GK News

1) Physical education guidebook for schools has been prepared and will be distributed soon.

2) The Central Government has imposed new regulations on the sale of alcohol-based medicines.

3) Iran has closed the Strait of Hormuz once again.

4) Ten Tamils ​​lost their lives in an accident where a tourist boat capsized in Vietnam.

5) The mortal remains of the late playback singer S. Janaki were cremated with full state honors.

வைல்ட் ஹன்ட் – அந்தக் காலத்து நெட்பிளிக்ஸ் கதை!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 19

வைல்ட் ஹன்ட் – அந்தக் காலத்து நெட்பிளிக்ஸ் கதை!

இடைக்கால ஐரோப்பியர்களின் ஒன் ஆப் தி மோஸ்ட் பேவரிட் பயம் வைல்ட் ஹன்ட். திடீரென்று வானத்தில் ஒரு பேய்க்கூட்டம் வேட்டைக்குக் கிளம்பும். இதற்குப் பின்னால் ஒரு செம மார்க்கெட்டிங் மற்றும் அரசியல் கலந்த பேண்டஸி இருக்கிறது.

இதன் ஒரிஜினல் வெர்ஷன் நார்ஸ் மிதாலஜி. தலைவன் வோடன். இவர்தான் இந்த வேட்டைக்கு கேப்டன். பழைய காலத்து பவர்புல் கடவுள். கையில் ஈட்டி, பறக்கும் குதிரை என்று செம கெத்தாக வலம் வந்தவர்.

காலம் மாறியது. ஐரோப்பாவில் கிறிஸ்தவம் உள்ளே நுழைந்தது. பழைய கடவுள்களை அப்படியே விட்டால் பிசினஸ் ஆகாது என்று நினைத்தார்களோ என்னவோ, இந்த வோடன் கடவுளை ஒரே ராத்திரியில் வில்லனாக, அதாவது பயங்கரமான பேயாக மாற்றிவிட்டார்கள்.

அப்படித்தான் வோடன் வைல்ட் ஹன்டின் தலைவரானார்.

வோடன் தலைமையில் இந்த பேய்க்கூட்டம் சும்மா ஜாலியாக வாக்கிங் போகாது. அதற்கு என்று ஒரு டார்கெட் இருந்தது.

அந்த டார்கெட்தான் பாவம் செய்தவர்களின் ஆன்மாக்கள். "நீ போன வாரம் பக்கத்து வீட்டுக்காரன் கோழியைத் திருடினேதானே?" என்று கணக்குப்பார்த்து தூக்குவார்கள்.

பாவம், பிறந்து சில வாரங்களே ஆன குழந்தைகளுக்குக் கூட இந்த பேய் லிஸ்ட்டில் இடம் உண்டு. கொஞ்சம் ஓவர்தான் என்கிறீர்களா?

அப்புறம் முக்கிய எச்சரிக்கை என்னவென்றால், இந்த வேட்டை நடக்கும்போது தப்பித்தவறி யாரும் குறுக்கே போய்விடக் கூடாது. போனால், உங்களையும் ஒரு பேயாக்கி, குதிரையின் பின்னால் கட்டி இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

இன்றைய தேதியில் இதைப் படித்தால் உங்களுக்கு சிரிப்பு வரலாம். விஞ்ஞானம் வளராத காலத்தில், ராத்திரியில் அடித்த பலத்த காற்றையும் புயல் சத்தத்தையும் பார்த்து பயந்து, இப்படி ஒரு கதையை பில்டப் செய்திருக்கிறார்கள் என்று ஈஸியாகச் சொல்லிவிடலாம்.

ஆனாலும் யோசித்துப் பாருங்கள். தியேட்டரே இல்லாத அந்தப் பழைய காலத்தில், நடுங்கும் குளிரில், நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு, பெரியவர்கள் இந்தக் கதையைச் சொல்லும்போது, கேட்கும் குழந்தைகளுக்கு எப்படி இருந்திருக்கும்? நெட்பிளிக்ஸ் த்ரில்லர் வெப் சீரிஸை விட செம த்ரில்லிங்காக இருந்திருக்கும் இல்லையா?

ஏன் இப்படி கதையைக் கிளப்பி விடுகிறார்கள் என்பதுதான் இதில் உள்ள சுவாரசியம்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. இரவு நேரத்தில் நெருப்பை மூட்டி, சுற்றியமர்ந்து கதை பேசுவது அவனது மரபணுவிலேயே இருக்கிறது.

அப்படிப் பேசும்போது சும்மா தத்துவம் பேசினால் தூக்கம் வரும். அதனால் கொஞ்சம் பேய், கொஞ்சம் ரத்தம், கொஞ்சம் த்ரில்லர் கலந்து வைல்ட் ஹன்ட் போன்ற கதைகளை உருவாக்கினார்கள். தலைமுறை தலைமுறையாக இந்தத் தகவல்கள் கடத்தப்படும்போது, அதுவே ஒரு கட்டத்தில் உண்மை போன்ற நம்பிக்கையாக மாறி விடுகிறது.

மனித மூளை ஒரு விசித்திரமான மெஷின். அதற்கு காரணம் தெரியாமல் இருக்கவே பிடிக்காது. அறிவியல் வளராத காலத்தில், சுற்றியிருந்த இயற்கை நிகழ்வுகளுக்கு விளக்கம் தேட மனிதன் உருவாக்கிய ஷார்ட் கட்கள்தான் இந்த நம்பிக்கைகள் மற்றும் அதைச் சுற்றிப் பின்னப்பட்ட இது போன்ற அமானுஷ்ய கதைகள்.

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 11 July 2026

இன்ப்ராசவுண்ட் கடத்தல்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 18

இன்ப்ராசவுண்ட் கடத்தல்!

தாமஸின் குழந்தையை வோடன் கடத்தி விட்டாரா?

நிச்சயமாக இல்லை. அவருக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை.

அப்படியானால் குழந்தை எங்கே?

அதற்கு முன் நாம் சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்?

அங்கே இயற்கை நிகழ்வுகளும், மனிதக் குறைபாடும் கச்சிதமாக இணைந்து மாயையை உருவாக்கியிருக்கின்றன.

ஆல்ப்ஸ் மலைப் பள்ளத்தாக்குகளில் குளிர்காலத்தில் வீசும் சூறாவளிக் காற்று, மரங்களுக்கும் மலை இடுக்குகளுக்கும் நடுவே புகுந்து வரும்போது காதுகளுக்குக் கேட்காத, ஆனால் உடலால் உணரக்கூடிய இன்ப்ராசவுண்ட் அலைகளை உருவாக்கும்.

இந்த அதிர்வுகள் மனித மூளையைத் தாக்கும்போது பயங்கரமான பிரமைகள், கண்கள் காற்றில் ஏதோ மிதப்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன், மற்றும் குதிரைகள் ஓடுவது போன்ற சத்தத்தைக் கேட்க வைக்கும்.

தாமஸும் அவன் மனைவியும் அந்த ஒலியியல் அழுத்தத்தால் தாங்கள் கண்டதை உண்மை என்று நம்பியிருக்கிறார்கள். இது வோடனின் படை வருகைக்கு ஓ.கே.

அந்தக் குழந்தை எங்கே போனது?

காற்றில் மர உத்திரங்கள் நடுங்கியபோது, அதிர்வில் வீட்டின் பின் பக்கத்து பலவீனமான மர ஜன்னல் ஒன்று உடைந்து திறந்திருக்கிறது.

குளிர்காலத்தில் பசியால் வாடும் காட்டு ஓநாய்கள் உணவைத் தேடி மனித நடமாட்டம் உள்ள பகுதிக்கு வருவது வழக்கம்.

காற்றில் கதவு, ஜன்னல் உடைந்த சத்தமும், காற்றின் இரைச்சலும் தாமஸ் தம்பதியினரை நிலைகுலைய வைத்த அந்தச் சில நொடிகளில், பசியோடு இருந்த ஒரு காட்டு ஓநாய் ஜன்னல் வழியே உள்ளே புகுந்திருக்கிறது.

காட்டின் கடும் குளிரில் தொட்டிலில் இருந்த குழந்தை ஏற்கனவே ஹைபோதெர்மியா எனும் உடல் வெப்பம் மிகக் குறைதல் எனும் நிலைக்குச் சென்று, அழும் திறனை இழந்து மயக்கத்தில் இருக்க, ஓநாய் குழந்தையைக் கவ்விக்கொண்டு அதே ஜன்னல் வழியே வெளியேறியிருக்கிறது.

மறுநாள் காலை தாமஸ் வாசலில் பார்த்த தடங்கள் குதிரையுடையது அல்ல; அவை காட்டின் பெரிய ஓநாய்களின் காலடித்தடங்கள். பனிப்பொழிவு மிகத் தீவிரமாக இருந்ததால், ஓநாய் ஓடிய தடங்கள் சில மீட்டர்களுக்குப் பின் புதிய பனியால் மூடப்பட்டு மறைந்திருந்தன.

கீழே தடங்கள் மறைந்துபோனதை, பதற்றத்தில் இருந்த தாமஸ் தன் மூளையில் இருந்த வைல்ட் ஹன்ட் கதையோடு பொருத்திப் பார்த்து, "தடங்கள் அப்படியே ஆகாயத்துக்குப் போய்விட்டன" என்று தவறாகப் புரிந்து கொண்டான்.

ஆக, அங்கே வந்தது வோடனும் இல்லை, அவனது பேய்ப் படையும் இல்லை. வந்தது பசியோடு வந்த ஒரு காட்டு ஓநாயும், மனித மூளையை ஏமாற்றிய இன்ப்ராசவுண்ட் காற்றும் மட்டும்தான்.

ஆனால், இடைக்கால ஐரோப்பாவில் அறிவியல் என்கிற விளக்கு எரியாததால், அந்த ஓநாயின் எச்சிலை அவர்கள் வைல்ட் ஹன்ட் என்று நம்பி நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

பாவம் தாமஸ்!

அதென்ன வைல்ட் ஹன்ட் என்கிறீர்களா?

நாளை வரை வெயிட் ப்ளீஸ்.

-  அட்ரஸைத் தேடுவோம்!

******