Monday, 14 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.09.2026

இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாள்.

1) இன்று 9 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

2) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.07 அடியாகச் சரிந்துள்ளது.

3) ஆகஸ்ட் மாத சில்லரைப் பணவீக்கம் 4.82 சதவீதமாக உயர்ந்துள்ளது.

4) செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



Education & GK News

Today marks the 118th birth anniversary of Perarignar Anna.

1) There is a possibility of heavy rain in nine districts today.

2) The water level at Mettur Dam has dropped to 88.07 feet.

3) Retail inflation for August has risen to 4.82 percent.

4) US President Donald Trump has stated that there is no need to curb the development of artificial intelligence.

மனிதனின் பேராசையே மகா பேய்!

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் – 84

மனிதனின் பேராசையே மகா பேய்!

கணேசும் தமிழரசனும் திருத்துறைப்பூண்டி, கோவிந்த் நகர் அருகே டூவீலரை நிறுத்தும்போது மணி இரவு ஒன்பது.

கோவிந்த் ஒரு மூலையில் நடுங்கியபடியே நின்றுகொண்டிருந்தான். கண்களில் தூக்கமின்மையும் கடன்காரர்களின் பயமும் ஓடிக்கொண்டிருந்தது.

"சரி கோவிந்த்! நடக்குறதைச் சுருக்கமா சொல்லு. என்னதான்யா உன் நகர்ல பிரச்சனை?" கணேஷ் டூவீலரை சைடு ஸ்டாண்ட் போட்டபடியே கேட்டான்.

"யாரும் சிரிக்கக் கூடாது. நள்ளிரவு ஆனா போதும், ரங்கநாதன் வீட்ல சங்கிலி சத்தம் கேட்குது. பாத்ரூம்ல ஐந்தடி பேய் சிரிக்குது. புக்கிங் பண்ணின எல்லாரும் அட்வான்ஸைத் தூக்கிட்டு ஓடிட்டாங்க. நான் ரோட்டுக்கு வந்துட்டேன் கணேஷ்!" என்று கோவிந்த் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான்.

தமிழரசன் சுற்றியிருந்த இருட்டைக் கூர்ந்து கவனித்தபடி சொன்னான், "கோவிந்த், அழுகுறதை நிறுத்து. பேய் மேல கேஸ் போட முடியாது, ஆனா இதைச் செஞ்சவன் மேல போடலாம். டேய் கணேஷ், உனக்கு என்ன தோணுது?"

கணேஷ் தன் லேப்டாப்பை எடுத்து டூவீலரின் மேல் வைத்து திறந்தான். "இங்க குமாரசாமிங்ற ஒருத்தர், கோயம்புத்தூர்ல இருக்குற அட்வான்ஸ்டு எலெக்ட்ரானிக்ஸ் டீலரான ஏடுஇசட்லேர்ந்து நெறைய அட்வான்ஸ்டு சவுண்ட் என்ஜினியரிங் அன்ட் ஆப்டிக்கல் மெட்டீரியல்ஸ், ரிமோட் கன்ட்ரோல்ஸ் அப்புறம் வெர்ச்சுவல் ஸ்பீக்கர்ஸை தன்னோட கடை ஜிஎஸ்டி நம்பர்ல ஆர்டர் போட்டு வாங்கியிருக்காரு.  அதோட டீடெய்ல்ஸை இங்கப் பாரு. இதெல்லாம் கருணாகரன் வொர்க் பண்ணி எடுத்தது." கணேஷ் லேப்டாப்பைக் காட்டினான்.

"ரொம்ப சரி கணேஷ்! கால்வாசி மனைகள் விற்றுவிட்டன, மீதி முக்கால்வாசி மனைகள்தான் இன்னும் விற்கப்பட வேண்டியிருக்கிறது. இந்தச் சமயத்தில் கோவிந்த் அடிபட்டு விழுந்தால் அங்கே லாபம் அடையப் போவது யார்? கோவிந்தின் எதிரியும், பக்கத்து லே அவுட் ஓனருமான அந்த குமாரசாமிதான்!"

"அவன் மட்டுமில்லை தமிழ்! அந்த வீட்டுக்குள்ள இருந்து சத்தம் வரதுக்குத் தொழில்நுட்பமும் அதை இயக்குறதுக்கு ஆளும் தேவைப்படுது. வா, கோவிந்த் நகருக்குள்ள ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்."

மூவரும் டூவீலரிலேயே கோவிந்த் நகரை ஒரு ரவுண்ட் அடித்தனர். அந்தப் பகுதி முழுவதும் விளக்குகள் எரியாமல் வெறிச்சோடிக் கிடந்தது. ரங்கநாதன் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்தனர்.

வீட்டிற்குள் எங்கு பார்த்தாலும் ஓர் அச்சுறுத்தும் அமைதி. சமையலறையின் வழியே போகும்போது, திடீரென ஒரு ஐந்தடி உயர உருவம் சுவரின் பின்னால் மறைவது போல் நிழலாடியது.

"டேய் கணேஷ், டேய் தமிழ்! பேய்!" கோவிந்த் பின்னாலிருந்து கத்தினான்.

தமிழரசன் தன்னிடமிருந்து ஜெர்மனி தயாரிப்பான ஹை பவர் டார்ச் லைட்டை அந்தப் பக்கம் பாய்ச்சினான். அங்கே ஒரு சின்ன எலெக்ட்ரானிக்ஸ் மோட்டாரும், அதன் அருகில் ரிமோட்டால் இயங்கும் சவுண்ட் பிக்சரும் சுவரில் பொருத்தப்பட்டிருந்தது. மறைந்திருந்த உருவம் வேறு யாருமில்லை; குமாரசாமியின் ஆள். கூலிக்கு அமர்த்தப்பட்ட லோக்கல் எலக்ட்ரீஷியன் ஜம்புலிங்கம்!

ஐம்புலிங்கம் மாட்டிக்கொண்டவுடன் கைகூப்பிக் கத்தினான், "சார்! என்னை விட்டுடுங்க! குமாரசாமி அண்ணாதான் ராத்திரி இந்த ரிமோட் பட்டனை அமுக்கி சத்தம் போடச் சொன்னாரு. பேய் வர்ற மாதிரி மியூசிக்கை பிளே பண்ணச் சொன்னாரு. நான் ஒன்னும் அறியாதவன் சாமி! ஏதோ காசுக்கு ஆசைப்பட்டுப் பண்ணிட்டேன்."

கணேஷ் சிரித்தான். "பார்த்தியா கோவிந்த்? உன் நகரில் வலம் வந்தது எந்த உலகத்து ஆவியும் அல்ல; குமாரசாமியின் காசுக்கு விலைபோன இந்த ஜம்புதான்."

மறுநாள் காலை, திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் குமாரசாமியும் அவனது ஆட்களும் கம்பி எண்ணிக்கொண்டிருந்தனர்.

கோவிந்தின் முகம் மலர்ந்திருந்தது.

கணேஷ் டூவீலரை ஸ்டார்ட் செய்தபடி தமிழரசனிடம் சொன்னான், "மனிதனின் பயமும் பேராசையும்தான் உலகத்தில் இருக்கிறதிலேயே மிகப்பெரிய பேய் தமிழரசன். அதைத் தெரிஞ்சுகிட்டா போதும், வாழ்க்கையில் எந்தப் பேய்க்கும் நடுங்கத் தேவையில்லை கோவிந்த்!"

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Sunday, 13 September 2026

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 15

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 15

குரூப் மற்றும் ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

பேய்களுக்கும் ப்ளாட் வாங்கும் ஆசை வரும்!

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் – 83

பேய்களுக்கும் ப்ளாட் வாங்கும் ஆசை வரும்!

திருத்துறைப்பூண்டியில், மன்னார்குடி செல்லும் சாலை மார்க்கத்தில், கோவிந்த் நகர் லே அவுட்டைப் போட்டுவிட்டு, பலகையைப் பலமாக நட்டிருந்தான் கோவிந்த். சதுர அடி ஆயிரம். விளம்பரத்தில் ஊரே மிரண்டு போயிருந்தது.

மனைகள் விற்பனையாகத் தொடங்கின. மனை வாங்கிய ஆறே மாதத்தில் சிலர் வீடு கட்டிக் குடியும் புகுந்து விட்டனர். கால்வாசி மனைகள் விற்பனையாகி விட்டன. மீதியிருந்த முக்கால்வாசி மனைகளும் அட்வான்ஸ் புக்கிங்கில் முன்னேறிக் கொண்டிருந்தன.

கோவிந்த் தன் கோவிந்த் நகர் ஆபீஸ் நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் உட்கார்ந்து கொண்டு, அன்றாடம் வசூலாகும் அட்வான்ஸ் தொகையை எண்ணிப் பார்த்துக்கொண்டிருக்க, ஒவ்வொரு நாளும் மணி மணியாகப் போய்க் கொண்டிருந்தது.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

முதல் ஆளாக வந்து அங்கே குடிபெயர்ந்த ரங்கநாதன், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குக் கோவிந்தின் வீட்டு வாசலில் வந்து நின்றான். சட்டை பட்டன்கள் கழன்று, முகம் வெளிறிப் போய், நடுங்கிக்கொண்டிருந்தான்.

"கோவிந்த்! நீ வித்த பிளாட்ல இருக்கவே முடியலப்பா!" ரங்கநாதன் அலறினான்.

"என்ன அண்ணே உளறுறீங்க? வாஸ்து பார்த்துத்தானே வீடு கட்டிக் கொடுத்தேன்?" கோவிந்த் நக்கலாகச் சிரித்தான்.

"வாஸ்து இல்லப்பா. சாவு! நேத்து ராத்திரி பத்தே காலுக்கு ஹால்ல உக்காந்து டிவி பாத்துட்டு இருந்தேன். திடீர்னு வீட்டுக்குள் சங்கிலி கிண்கிணி சத்தம். ஜன்னல் கதவு தன்னிச்சையா திறந்துகிட்டு மூடிச்சு. சமையலறையில யாரோ அழற மாதிரி முனகல் சத்தம். இதோட விட்டானா? பாத்ரூம்ல இருந்து வெளிய வந்த ஐந்தடி உயரமான ஒரு உருவம், நேரா என்னைப் பார்த்துப் பேய்க் குரல்ல சிரிச்சது! என் பொண்டாட்டி பயத்துல மயங்கி விழுந்துட்டா."

கோவிந்துக்கு ஆரம்பத்தில் கோபம் வந்தது. "இதெல்லாம் ஏதோ லோக்கல் திருடனா இருக்கும். போய் தூங்குங்க அண்ணே!" என்று துரத்திவிட்டான்.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இதே மாதிரி புகார்கள் நால்வரிடமிருந்து வந்தன.

இரவு நேரத்தில் கோவிந்த் நகரின் காலி வீடுகளுக்குள்ளிருந்து பேய்க் குரல்கள் கேட்டன. காற்றில் பறக்கும் வெள்ளைத் துணிகள், ஜன்னல் கண்ணாடிகளை யாரோ பலமாகத் தட்டும் சத்தங்கள், மரங்களுக்குப் பின்னால் நின்றுகொண்டு ஊதப்பட்ட விசில்கள் என்று அந்த லே அவுட்டே ஒரு சுடுகாடு போல மாறத் தொடங்கியது.

செய்தி காட்டுத் தீ மாதிரி திருத்துறைப்பூண்டி முழுவதும் பரவியது. "கோவிந்த் வச்சிருக்கிற லே அவுட் சாபம் பிடிச்ச இடம்! அங்கே முன்னாடி கொள்ளைக்காரங்க தூக்கிலிடப்பட்டிருக்காங்க. ராத்திரியானா ஆவிகள் குத்தாட்டம் போடும்!" என்று ஊரே கொந்தளித்தது.

அவ்வளவுதான்! கோவிந்த் கையில் வைத்திருந்த லே அவுட் போர்டு அப்படியே காற்றில் பறந்தது. மீதமிருந்த முக்கால்வாசி மனைகளுக்கு முன்பதிவு செய்திருந்த அத்தனை பேரும் ஓடிவந்து அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கேட்டார்கள். கொடுத்த பணத்தைத் திருப்பித் தர முடியாமல், கந்துவட்டிக்காரன்களும் பேங்க்காரன்களும் கழுத்தை நெரிக்க, கோவிந்த் தன் ஆபீஸ் மேஜையில் தலையை வைத்துக் கைபிசைந்து உட்கார்ந்தான்.

"ஐயோ! பிளாட் விற்று நாலு காசு பார்க்கலாம்னு பார்த்தா, இந்த ஊர்ல பேய் வந்து என்னை வச்சு செய்யுதே! நான் என்னப்பா பண்ணுவேன்?" என்று தமிழரசனுக்குப் போனைப் போட்டுப் புலம்பினான் கோவிந்த்.

"கவலைப்படாதே கோவிந்த்! நானும் கணேசும் உடனே அங்க வர்றோம்."  கோவிந்தைத் தைரியப்படுத்தினான் தமிழரசன்.

"விஜயராமன் வரலையா?"

"அவனுக்கு ஏதோ பேய்க்கதை எழுத வேண்டிய வேலை இருக்காம்!"

"என்ன தமிழரசன்? இங்க நடக்குறதும் பேய்க் கதைதானே. அதுவும் ஒரிஜினல். ஹன்ட்ரட் பெர்சன்ட் ரியலிஸ்டிக்."

"அவன் வந்தாலும் வேலைக்கு ஆக மாட்டான். அந்த இருட்டுக்குள்ள எங்காச்சும் கொஞ்சம் வெளிச்சம் கிடைச்சா போதும், அங்க உக்காந்து கதை எழுத ஆரம்பிச்சிடுவான். பிறகு அவன் எங்க உக்காந்து எழுதிகிட்டு இருக்காங்கறதைத் தேடிக் கண்டுபிடிக்கிறதே பெரிய வேலையா போயிடும். நாங்க ரெண்டு பேருமே போதும்."

"சீக்கிரம் கணேசோட வா தமிழரசன்! அட்வான்ஸைத் திருப்பிக் கேட்குறவனுங்க, உடனே திருப்பித் தரலைன்னா, போலீஸ்ல எப்.ஐ.ஆர் போடப் போறோம், கோர்ட்டுல கேஸ் போடப் போறோம்ன்னு ரொம்பவே மிரட்டுறானுங்க. கையில பைசா காசு இல்ல. பயமா இருக்கு தமிழரசன்! ஒரு பக்கம் பேய் பயம். இன்னொரு பக்கம் இந்த மனுஷங்களோட பயம்."

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 14

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 14

குரூப் மற்றும் ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.  

*****

Saturday, 12 September 2026

பேய்களைக் காட்டிப் பிழைத்தல்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 82

பேய்களைக் காட்டிப் பிழைத்தல்!

மனிதர்கள் பரப்பும் பெரும்பாலான அமானுஷ்ய பேய்க் கதைகளின் பின்னே மூளையின் டெம்போரல் லோப் கோளாறுகளும், இயற்பியல் மற்றும் வேதியியல் தில்லாலங்கடிகளும் அத்துடன் உளவியல் ரீதியான பயங்களுமே உள்ளன.

அப்படி ஒரு கதைதான் ஸ்மெர்ல் குடும்ப அமானுஷ்யம்.

1986 இல் பென்சில்வேனியாவில் வாழக் கிடைத்த ஸ்மெர்ல் குடும்பத்திற்கு வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு மனிதன் தன் வீட்டுச் சாக்கடை நாற்றத்தையும், மூளைக் கோளாறையும் வைத்துக்கொண்டு மீடியாவுக்கு பேட்டி கொடுக்க மாட்டான்.

ஜாக் ஸ்மெர்ல் திடீரென ஒருநாள் கத்தினார், "என் வீட்ல பேய் இருக்கு ஐயா! அது என் வீட்டை ஆக்கிரமித்து விட்டது, கதவைத் தட்டுது, சாக்கடை நாற்றம் அடிக்குது, என் நாய் காத்துல பறக்குது!"

சாக்கடை நாற்றம் அடித்தால் எந்த ஒரு சராசரி மனிதனும் பிளம்பரைத்தான் கூப்பிடுவான். ஆனால் ஜாக், பேய் நிபுணர்களான வாரன் தம்பதியைக் கூப்பிட்டார். ஏனென்றால், பிளம்பர் காசு கேட்பான்; வாரன் தம்பதி பேயைக் காட்டிப் பணம் பண்ணித் தருவார்கள்!

உடனே வாரன் தம்பதி லேண்ட் ஆனார்கள். வழக்கமான தங்கள் பிசினஸ் கார்டை இறக்கினார்கள். "இது சாதாரண பேய் இல்ல ஐயா! நாலு பிசாசு சேர்ந்து குத்தகைக்கு எடுத்திருக்கும் மகா மெகா பேய்!" என்றார்கள்.

இங்கேதான் நீங்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். உலகத்தில் எந்தப் பேயும் ஏழை வீட்டில் குடியிருப்பதில்லை. எப்போதும் மீடியா வெளிச்சம் உள்ள, புத்தகம் எழுத வசதியான வீடுகளில்தான் பேய்களுக்குப் பாஸ்போர்ட் அதாவது, குடிவரவு அனுமதி கிடைக்கிறது.

பின்னாள்களில் டாக்டர்கள் வந்து பரிசோதித்துப் பார்த்தபோதுதான் பல உண்மைகள் தெரிய வந்தன. ஜாக் ஸ்மெர்லுக்கு இருந்தது மூளைக் கோளாறு. டெம்போரல் லோப் எபிலெப்சி. இந்த நோய் உள்ளவர்களுக்கு இல்லாத ஒலிகள் கேட்கும், கண்ணுக்குப் புலப்படாத உருவங்கள் தெரியும், மூக்குக்கு துர்நாற்றம் வீசும்.

அவர் பயந்த பயத்தில் குடும்பத்தினரும் சேர்ந்து பயந்து, "ஆமாம்! நாறுகிறது!" என்று கதறியிருக்கிறார்கள். இதற்குப் பெயர் உளவியலில் கூட்டு லூசுத்தனம். அதாவது, வீட்டின் தலைவன் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக நம்பும்போது, பயத்தின் காரணமாகக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அதே போன்ற பிரமைகள் தோன்றத் தொடங்கும்.

ஆனால், அந்த வீட்டில் சாக்கடை நாற்றம் இருந்தது உண்மை. அது அந்த வீட்டின் கழிவுநீர்க் குழாயில் லீக்கேஜ்ஜால் ஏற்பட்டது! பேய்களால் ஏற்பட்டது அல்ல. ஒரு பிளம்பரால் சரிசெய்யப்பட வேண்டிய சாதாரண பிரச்சனை, பேய், பிசாசு என்று விஸ்வரூபம் எடுக்கப் போய் அதை நிரூபிக்க பெரிய பெரிய மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அங்கு வந்து போக வேண்டியதாயிற்று. அவ்வளவுதான் மேட்டர்.

ஆனால், இந்தச் சாக்கடை லீக்கேஜை வைத்துக்கொண்டு அவர்கள் எழுதிய தி ஹாண்டட் என்ற புத்தகம் அதிரிபுதிரி ஹிட் அடித்ததுதான் சுவாரசியமான ட்விஸ்ட். அடுத்து இந்தப் புத்தகத்தை வைத்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடரும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததுதான் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட். மொத்தத்தில் அதிநவீன அறிவியலின் உலக மையம் என்ற சொல்லப்பட்ட அமெரிக்காவில் ஸ்மெர்ல் குடும்ப அமானுஷ்யத்தைப் படித்தும் பார்த்தும் மக்கள் டாலர்களை மழையாகப் பொழிந்தார்கள்.

இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். மனிதன் இருட்டைக் கண்டு பயந்த காலம் போய், தன் மூளைக் கோளாறைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டான் இல்லையா?

 பயம் என்பது ஓர் அற்புதமான வியாபாரம். அதைச் சரியாகப் பாக்கெட் செய்து விற்கத் தெரிந்தால், உங்கள் வீட்டுச் சாக்கடை அடைப்பு கூட ஒரு ஹாலிவுட் த்ரில்லர் படம்தான்!

சுருக்கமாகச் சொன்னால், அமிட்டிவில் போல, அங்கே வாழ்ந்தது பிசாசு அல்ல; மனிதனின் லேசான மூளைக் கோளாறும், அதை வைத்து கல்லா கட்டிய மீடியாவின் பேராசையும்தான்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 13

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 13

குரூப் மற்றும் ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****