Wednesday, 16 September 2026

ஜீரோ சதவீத பேட்டரி!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 86

ஜீரோ சதவீத பேட்டரி!

கொரடாச்சேரி, பத்தூர் அருகே உள்ள அபிவிருத்தீஸ்வர மலையின் தென்மேற்குப் பகுதி. நெடிதுயர்ந்த மரங்கள் கொண்ட அடர்ந்த காட்டுப் பிரதேசம் அது. அங்கே ஒரு பழைய பங்களா.

"டேய் தமிழரசன்! கேமராவின் பேட்டரி சார்ஜ் முப்பது பர்சண்ட்தான் இருக்கு. சொல்லிட்டேன்." கணேஷ் லேப்டாப்பில் எதையோ தட்டச்சு செய்துகொண்டே சொன்னான்.

தமிழரசன் சிரித்துக்கொண்டே ஸ்டாண்டைச் சரிசெய்தான். "இன்னும் பத்து நிமிஷத்துல ஷூட்டிங் முடிஞ்சிரும் கணேஷ். கோவிந்த் இன்னும் அந்தப் பாழடைந்த பங்களாவுல இருந்து வெளியே வரலையே? என்ன பண்றான் உள்ளே?"

கோவிந்த் வெளியே வந்தான். முகம் வெளிறிப் போய், கைகள் லேசாக நடுங்கின. அவன் கையில் இருந்த பழைய டேப்ரிக்கார்டர் விசித்திரமான சத்தத்தை எழுப்பியது.

"அங்கேயும் மனித குரல்கள் கேக்குதுடா. நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன். இது வெறும் காற்றோ எதிரொலியோ இல்லை. யாரோ நம்மைக் கூப்பிடுறாங்க." என்றான் கோவிந்த் குரல் தழும்ப.

தமிழ்ப் புன்னகைத்தான். "அடேய் கோவிந்த், நீயும் இந்த இன்டர்நெட் பேய்க்கதை லெஜண்ட்ஸ் படிச்சிட்டுக் கிளம்பிடுறதா? சவுண்ட் எபெக்ட்ஸ் எக்கோ அடிக்கிறதுக்குக் காரணம், அந்தப் பங்களாவோட பழைய கான்கிரீட் அமைப்பு. சயின்ஸ் தெரிஞ்சா பயம் இருக்காது."

யூடியூப்பில் தங்கள் சேனலை வைரலாக்க இந்த மூவரும் ஒரு பிளான் போட்டிருந்தனர். மேரிலேண்ட் காடுகளில் நடந்த பிளேர் விட்ச் தந்திரத்தைப் போல, தமிழ்நாட்டில் உள்ள இந்த அபிவிருத்தீஸ்வர மலைப்பகுதியில் காணாமல் போனதாக ஒரு கதையைச் செட்டப் செய்து வீடியோ வெளியிடத் திட்டமிட்டனர்.

"மக்கள் நம்பணும். நாம கேமராவை ஆட்டிக்கிட்டே பயந்த மாதிரி ஓடணும். காட்டில் தொலைஞ்சுட்டோம்னு அவர்களாகவே கமெண்ட் பண்ணனும்" என்று கணேஷ் தன் லேப்டாப்பில் அந்தத் திட்டத்தைக் விவரித்தான்.

ஆனால், அந்தப் பழைய பங்களாவைச் சுற்றியுள்ள காடு நிஜமாகவே ஒரு வித்தியாசமான அதிர்வெண்ணில் இயங்குவதை அவர்கள் அப்போது உணரவில்லை.

நள்ளிரவு பன்னிரண்டு மணி.

காட்டின் நடுவே ஒளிரும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மூவரும் நடந்துகொண்டிருந்தனர். கேமரா ஓடிக்கொண்டிருந்தது.

"நண்பர்களே! நாம இப்ப எந்த இடத்துல இருக்கோம்னு தெரியல. ஜீப் நின்ன இடத்திலிருந்து மூணு மணி நேரம் நடந்துட்டோம்." என்று கேமராவைப் பார்த்துக் கலக்கமான நடிப்பைக் கொடுத்தான் தமிழரசன். அது வெறும் நடிப்புதான்; ஆரம்பத்தில்.

திடீரென காட்டின் நடுவிலிருந்து ஒரு விசில் சத்தம் கேட்டது.

கோவிந்த் நின்றுவிட்டான். "டேய் இது நாம செட் பண்ண சவுண்ட் இல்லைடா. கேமரா ஆப் பண்ணுங்க!"

கணேஷ் கோபப்பட்டான். "பயப்படற மாதிரி ஓவர் ஆக்ட் பண்ணாத கோவிந்த். கேமரா ஓடிட்டிருக்கு. வியூஸ் அள்ளப் போகுது."

ஆனால், அந்தச் சத்தம் காட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குத் துல்லியமாகக் கடத்தப்பட்டது. மரங்களின் நிழல்கள் விசித்திரமான வடிவங்களில் நகர்வது போலத் தோன்றியது.

"கணேஷ்! லேப்டாப்பைப் பாரு" என்று தமிழரசன் அலறினான்.

இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்த அவர்களின் லைவ் ஸ்ட்ரீமிங் லேப்டாப்பில், கமெண்ட் செக்சன் தானாகவே வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் யாருமே லைவ் செய்யவில்லை என்றாலும், அந்தச் சேனலில் ஒரு வீடியோ ஓடிக்கொண்டிருந்தது.

அந்த வீடியோவில், தற்போது அவர்கள் நின்றுகொண்டிருக்கும் அதே இடத்தின் நேரலை ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், அந்த கேமராவில் இவர்களுக்குப் பின்னால் ஒரு நீண்ட நிழல் உருவம் நிற்பது தெளிவாகத் தெரிந்தது.

"நாம இன்னும் அந்தப் பங்களாவை விட்டு வெளியே வரலையா? இல்ல, நாம சுத்தி சுத்தி ஒரே இடத்துக்கே வந்துட்டோமா?" கோவிந்த் மூச்சுத் திணறிக் கீழே விழுந்தான்.

கணேஷ் நடுங்கியபடியே கேமராவை அந்த நிழல் நின்ற திசையை நோக்கித் திருப்பினான்.

அங்கே யாரோ ஒருவர் கையில் ஒரு பழமையான கேமராவைப் பிடித்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அடுத்த நொடி, லேப்டாப் ஸ்கிரீன் கறுத்துப் போனது. கேமரா பேட்டரி முற்றிலுமாகச் செத்தது. காடு முழுவதும் ஒரு நிசப்தம் கவ்வியது.

மறுநாள் காலையில், அந்த அடர்ந்த காட்டின் நடுவே ஒரு கேமரா மட்டும் அநாதையாகக் கிடந்தது. தமிழரசன், கணேஷ், கோவிந்த் மூவரின் நிழல்கள்கூட அங்கே மிச்சமில்லை. இன்டர்நெட்டில் வெளியான அந்த கடைசி வீடியோ மட்டும் லட்சக்கணக்கில் வியூஸ்களை அள்ளிக் கொண்டிருந்தது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

SMC (2026 – 28) மறுகட்டமைப்பிற்கான பார்வையாளர் படிவம்

SMC (2026 – 28) மறுகட்டமைப்பிற்கான பார்வையாளர் படிவம்

பள்ளி மேலாண்மைக் குழு (2026 – 2028) மறுகட்டமைப்பிற்குத் தேவையான பார்வையாளர் படிவத்தைக் கீழே காண்க




*****

SMC (2026 – 28) மறுகட்டமைப்பிற்கான அழைப்பிதழ்

SMC (2026 – 28) மறுகட்டமைப்பிற்கான அழைப்பிதழ்

பள்ளி மேலாண்மைக் குழு (2026 – 2028) மறுகட்டமைப்பிற்குத் தேவையான அழைப்பிதழைக் கீழே காண்க

*****

SMC (2026 – 28) மறுகட்டமைப்பிற்கான சான்றிதழ்

SMC (2026 – 28) மறுகட்டமைப்பிற்கான சான்றிபிதழ்

பள்ளி மேலாண்மைக் குழு (2026 – 2028) மறுகட்டமைப்பிற்குத் தேவையான சான்றிதழைக் கீழே காண்க

*****

Tuesday, 15 September 2026

தேசியப் பணிக்குக் கூலி கேட்பது தேசத் துரோகமா என்ன?

தேசியப் பணிக்குக் கூலி கேட்பது தேசத் துரோகமா என்ன?

நம் ஊரில் ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடம் எடுப்பதைத் தவிர வேறு எல்லா வேலைகளையும் கொடுப்பார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். குடும்ப கட்டுபாட்டுக்கு ஆள் பிடிப்பதில் ஆரம்பித்து, தேர்தல் பணி வரை சகலமும் அவர்கள் தலையில்தான். இப்போது புதிய வரவு, 2027க்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி.

போன ஆகஸ்ட் மாம் முழுவதும், கொளுத்தும் வெயிலில் ஊர் ஊராகச் சென்று, "உங்க வீட்டில் எத்தனை பேர், தொலைக்காட்சி இருக்கிறதா, அலைபேசி இருக்கிறதா, இன்னும் வானொலியில்தான் செய்தி கேட்கிறீர்களா?" என்று நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு கணக்கெடுத்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இப்போது ஒரு சின்னஞ்சிறு கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.

"ஐயா, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணி பார்த்தோமே, அதற்கான மதிப்பூதியத்தைக் கொஞ்சம் தாருங்கள்!"

ஆனால், நமது அதிகார வர்க்கம் எப்படிப்பட்ட பதிலைச் சொல்கிறது தெரியுமா? "பொறுமையா இருங்கப்பா.  அக்கவுண்ட் டீடெயில்ஸ் எல்லாம் பலமுறை செக் பண்ணிட்டு இருக்கோம்."

கேட்கவே புல்லரிக்கிறது! மாதா மாம் அரசாங்க சம்பளம் எந்த வங்கிக் கணக்குக்குப் போகிறதோ, அதே வங்கிக் கணக்குக்குத்தான் இந்தப் பணமும் வரப்போகிறது. இதற்கு எதற்குப் 'பலமுறை' செக்கிங்? என்ன செக் செய்கிறார்கள்? அக்கவுண்ட்டில் ஓட்டை விழுந்து பணம் கீழே ஒழுகி விடும் என்றா? அல்லது டிஜிட்டல் இந்தியாவில், கூகுள் பேயில் டீ குடிக்கிற காலத்தில், பணம் வேறு எங்காவது பயணம் செய்து விடும் என்றா?

இதில் ஆசிரியர்கள் தரப்பில் சொல்லப்படும் ஒரு தர்க்கம், நெஞ்சை உலுக்குகிறது. "ஐயா, இதுவே தேர்தல் பணி என்றால், ஓட்டுப்பதிவு இயந்திரங்களைத் தூக்கும் போதே பணத்தைக் கையில் கொடுத்து விடுவார்கள். இதில் மட்டும ஏன் இந்த இழுத்தடிப்பு?" என்று பரிதாபமாகக் கேட்கிறார்கள்.

அட பெருமூச்சு விடுகிற ஆசிரியப் பெருமக்களே! உங்களுக்கு உலக நடப்பே புரியவில்லையே! தேர்தல் என்றால் அங்கே பதிவாகப்போவது அரசியல்வாதிகளின் தலையெழுத்து. எனவே, அங்கே பட்டுவாடா படுவேகமாக நடக்கும். ஆனால், சென்சஸ் என்பது வெறும் தலைகளை எண்ணும் வேலை. இந்தியாவில் தலைகளுக்கு என்ன மரியாதை இருக்கிறது?

பயிற்சிப் படியாக ஒரு நாளைக்கு 600 ரூபாய் என்று அறிவித்துவிட்டு, அதில் 200 ரூபாயைச் செலவினம் என்று அவர்களே கழித்துக்கொண்டு, மிச்சமிருக்கும் பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. மொத்தம் ஒரு லட்சம் பேருக்குச் தர வேண்டிய தொகை சுமார் 102 கோடி ரூபாய். இந்த 102 கோடியும் இப்போது எந்த வட்டிக் கணக்கில், என்ன வட்டி விகிதத்தில், யாருடைய கண்காணிப்பில் பத்திரமாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது என்பது அந்தப் பரமசிவனுக்குத்தான் வெளிச்சம்.

ஆசிரியர்களைப் படுத்தும் பாடு இதோடு முடியவில்லை. உள்ளூரில் இருக்கும் ஆசிரியரை உள்ளூரிலேயே கணக்கெடுக்க விட்டால் அவர் பாட்டுக்கு வேலையை முடித்துவிடுவார் அல்லவா? அது நிர்வாக இயந்திரத்துக்குப் பிடிக்காது. தஞ்சாவூரில்  இருக்கும் ஆசிரியரைத் திருவாரூருக்குப் போய் கணக்கெடுக்கச் சொல்வார்கள். இது ஒருவகை மன உறுதி வளர்க்கும் பயிற்சிக் களம். பெண்கள் படும் அவஸ்தையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தேசியக் கடமை என்று கணக்கெடுத்து முடித்தால், கடைசியில் 'ங்கள் பேங்க் அக்கவுண்ட்டை நாங்கள் இன்னும் செக் பண்ணி முடிக்கல' என்று பதில்கொடுக்கிறார்கள்.

கணக்கெடுப்பு எடுத்த ஆசிரியர்களுக்குக் கிடைக்க வேண்டிய ரூபாய் விரைவில் கிடைத்துவிட்டால் சரி. இல்லையென்றால், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணியின்போது, வீட்டுக்காரர்கள் ஆசிரியர்களைப் பார்த்து, "ஐயா! போன முறை வந்தீர்களே! அதற்கான பணம் கிடைத்து விட்டதா?" என்று கேட்கும் நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

இதுதான் இந்தியா!

*****

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 17

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 17

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.09.2026

1) மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு நாளை நடைபெற உள்ளது.

2) வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைக்கான கட்டண முறை அக்டோபர் 15 முதல் அமலாகிறது.

3) யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணம் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் 22,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

4) எதிரிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள விண்வெளியில் ஆயுதங்களை நிறுவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

5) கச்சா எண்ணெயின் விலை உயர்வு உலகப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.




Education & GK News

1) The consecration ceremony of the Madurai Meenakshi Amman Temple is scheduled to take place tomorrow.

2) The fee structure for business-related UPI transactions comes into effect on October 15.

3) The government is expected to generate an annual revenue of Rs. 22,000 crore from UPI transaction fees.

4) The United States has announced that it has deployed weapons in space to counter threats from adversaries.

5) The rise in crude oil prices has caused a sharp decline in global stock markets.