Sunday, 6 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.09.2026

1) டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

2) தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் நவம்பர் 1க்குள் பெயர்ப்பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3) புதிய உலக வரைபடத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

4) சூப்பர் எல் நினோ விளைவால் இந்தியாவில் மழை குறையவும் வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

5) வியட்நாமில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில், டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா 2026 ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றார்.









Education & GK News

1) Water was released from the Kallanai Dam today for Delta irrigation.

2) The High Court has ordered that nameboards in Tamil must be displayed at shops across Tamil Nadu by November 1st.

3) The United Nations has approved a new world map.

4) The 'Super El Niño' phenomenon is likely to lead to reduced rainfall and rising temperatures in India.

5) Johairy Mola from the Dominican Republic won the 'Miss World' title for the year 2026 at the pageant held in Vietnam.

Saturday, 5 September 2026

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 7

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 7

குரூப் மற்றும் ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

என்பீல்ட் போல்டர்கீஸ்ட் - பயத்தின் இயற்பியல்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 75

என்பீல்ட் போல்டர்கீஸ்ட் - பயத்தின் இயற்பியல்

1977, லண்டன்.

என்பீல்டில் உள்ள கிரீன் வீதியில் ஒரு சாதாரண வீடு.

பெக்கி ஹாட்சன் என்ற ஒற்றைத் தாய், தன் நான்கு குழந்தைகளுடன் வசிக்கிறார். ஒரு நாள் இரவு, கட்டில்கள் தானாக நகர்கின்றன. சுவர்களில் யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. லண்டன் போலீஸ் வருகிறது.

ஒரு பெண் போலீஸ் அதிகாரி தன் கண்ணெதிரே நாற்காலி ஒன்று தரையில் நான்கு அங்குலம் நகர்வதைப் பார்க்கிறார். ரிப்போர்ட்டில் அதை எழுதுகிறார்.

அவ்வளவுதான்.

இங்கிலாந்து முழுவதும் ''பேய்... பேய்... ' என்று அலறத் தொடங்கியது.

குறிப்பாக, 11 வயது சிறுமி ஜேனட் காற்றில் மிதப்பதாகவும், அவளுக்குள் பில் வில்கின்ஸ் என்ற இறந்துபோன 72 வயது கிழவனின் ஆவி புகுந்து கொண்டு தொண்டை அடைத்த குரலில் பேசுவதாகவும் புகைப்படங்களும் ஆடியோக்களும் வெளியாகின. 'தி கான்ஜுரிங் – 2'  படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்தக் கதை அள்ளும்.

ஆனால், இதன் பின்னால் இருக்கும் நிஜமான இயற்பியல் மற்றும் உளவியல் என்ன என்கிறீர்களா?

போல்டர்கீஸ்ட் என்ற ஜெர்மன் வார்த்தைக்கு சத்தம் போடும் ஆவி என்று அர்த்தம். ஆனால், அமானுஷ்ய ஆராய்ச்சிகளின் வரலாற்றில் போல்டர்கீஸ்ட் சம்பவங்கள் எங்கு நடந்தாலும், அங்கே கண்டிப்பாக 11 முதல் 15 வயதுக்குட்பட்ட டீனேஜ் குழந்தைகள் இருப்பார்கள்.

ஏன்?

அது ஆவியின் சக்தி அல்ல; ஹார்மோன்களின் சக்தி.

பருவமடைதலின் போது ஏற்படும் தீவிரமான மன அழுத்தம், கவன ஈர்ப்புத் தேவை ஆகியவை குழந்தைகளை அறியாமலேயே விசித்திரமாக நடந்து கொள்ள வைக்கின்றன.

அப்புறம் ஜேனட் காற்றில் மிதப்பதாகக் காட்டும் புகைப்படங்களை உற்றுப் பார்த்தால் உண்மை விளங்கும். அவள் கட்டிலில் இருந்து மேலே குதிக்கும் போது எடுக்கும் ஹை ஸ்பீட் புகைப்படங்கள் அவை. கால்கள் மடிந்திருக்கும், கை விரிந்திருக்கும். இயற்பியலின் புவிஈர்ப்பு விதியை மீறி எந்த மனிதனும் காற்றில் மிதக்க முடியாது. அது லேவியேஷன் அல்ல; வெறும் ஹை ஜம்ப்.

அடுத்ததாக ஜேனட் பேசிய அந்தப் பயங்கரமான குரல்?

அது வென்ட்ரிலோக்விசம். தொண்டையின் பின்புற த சதைகளைப் பயன்படுத்தி குரலை மாற்றிப் பேசுவது. இதைச் சில மணிநேரப் பயிற்சியிலேயே யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும்.

இங்கிலாந்தின் எஸ்.பி.ஆர், அதாவது சொசைட்டி பார் சைக்கிக்கிள் ரிசர்ச் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்த வீட்டில் ரகசியக் கேமராக்களைப் பொறுத்தினார்கள். கேமராக்கள் ஓடாத சமயங்களில், ஜேனட்டும் அவள் சகோதரியும் ஸ்பூன்களை வளைப்பதையும், பொம்மைகளைத் தூக்கி எறிவதையும் கண்டுபிடித்தார்கள்.

பின்னாள்களில் ஜேனட்டே ஒப்புக்கொண்டார், "நாங்கள் 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை பொய் சொன்னோம். ஏனென்றால், பத்திரிகையாளர்களும் ஆய்வாளர்களும் எங்களை ஏமாற்றத்துடன் பார்க்கக் கூடாது என்பதற்காக!"

அன்னபெல்லுக்கு ஒரு துணிப் பொம்மை தேவைப்பட்டது. என்பீல்ட் போல்டர்கீஸ்ட்டிற்கு ஒரு 11 வயதுச் சிறுமியின் கவன ஈர்ப்புத் தேவைப்பட்டது. அவ்வளவுதான் விசயம்.

பயம் என்பது மனித மூளையின் மிக பலவீனமான ஒரு வேதியியல் மாற்றம். அதில் கொஞ்சம் ஊடக வெளிச்சத்தையும் சேர்த்துவிட்டால், அது மிகப்பெரிய பிசினஸாக மாறிவிடும்.

என்பீல்டில் வீசியது அமானுஷ்யக் காற்று அல்ல; மனிதக் கற்பனையின் புழுதிப் புயல்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Friday, 4 September 2026

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 6

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 6

குரூப் மற்றும் ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

கேஸ் ட்ரபுள்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 74

கேஸ் ட்ரபுள்

"தமிழ்! டேய் தமிழ்! கண்ணைத் திற தமிழ்!"

யாரோ அவனது கன்னத்தில் தட்டுவது உணர்ந்து தமிழரசன் மெதுவாகக் கண் விழித்தான்.

மருதவனப் பங்களாவின் கதவுகள் அகலத் திறக்கப்பட்டிருந்தன. உள்ளே வெளிச்சமும் புத்தம் புதிய காற்றும் வீசின. அவனருகே கோவிந்தும், திருவாரூர் மாவட்டத்தின் டெக்னிக்கல் ஜாம்பவான் ஆசிரியர் கணேசும் நின்று கொண்டிருந்தார்கள்.

"கோவிந்த்! நான் நான் உயிரோட இருக்கேனா?" தமிழரசன் தன் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான். ஆப்பிள் வாட்ச் இயல்பாக இதயத் துடிப்பின் அளவை 82 என்று காட்டியது.

"நீ உயிரோடதான் இருக்கே தமிழ்! நான் காரை ஸ்டார்ட் பண்ணிட்டு போகும்போதுதான் கவனிச்சேன். இந்த பங்களாவோட காற்றோட்ட அமைப்பைப் பத்தி யோசிச்சப்போ எனக்கு பொறி தட்டிச்சு. உடனே விஜயராமனுக்குப் போன் பண்ணி, விஜயராமன் மூலமா கணேஷைக் கான்டாக்ட் பண்ணிக் கூட்டிட்டுத் திரும்ப வந்தேன். நல்லவேளை, நீ மயக்கத்துலதான் இருந்தே!" என்றான் கோவிந்த்.

கணேஷ் தன் கையில் இருந்த கேஸ் டிடெக்டர் கருவிக் காட்டிய அளவீடுகளைத் தமிழரசனிடம் காண்பித்தான்.

"தமிழ், நீ பயந்தது பேயைப் பார்த்து இல்லை. கார்பன் மோனாக்சைடு  வாயுவை சுவாசிச்சதால! மருதவனத்தில் நேற்று பெய்த மழையால், இந்த 80 வருட பழைய பங்களாவின் அடியில் மக்கிக்கொண்டிருந்த மரக் கழிவுகளில் இருந்து நச்சு வாயு வெளியாகியிருக்கு. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் அறை முழுவதும் கார்பன் மோனாக்சைடு நிரம்பியிருக்கிறது. இந்த வாயுவை சுவாசித்தால் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறையும். அதனால் கடுமையான மனப்பிராந்தி, பிரமை, நெஞ்சு அடைப்பு மற்றும் சுயநினைவிழப்பு ஏற்படும். இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சதுதான். இருந்தாலும் இதெல்லாம் உனக்கே நடக்கும் போது கொஞ்சம் தடுமாறிப் போயிட்டே. மொபைல் திரையில் எழுத்துக்கள் தெரிந்தது எல்லாமே உன் மூளை உருவாக்கிய பிரமை!"

"அந்தக் கடிகாரம் அடித்ததற்கும், பித்தளைத் தட்டு விழுந்ததற்கும் காரணம் புரியலையே!" என்றான் தமிழரசன்.

"நேற்று வீசிய காற்றால் உருவான காற்றழுத்த மாறுபாடு, நிலத்தடிப் பாறைகளில் ஏற்பட்ட சிறிய பைசோ எலெக்ட்ரிக் அதிர்வுகள்தான் அதுக்குக் காரணம். கடிகாரத்தின் பெண்டுலத்தை அந்த அதிர்வுதான் ஆட வைத்திருக்கிறது."

தமிழரசன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். காபி ப்ளாஸ்க்கைத் திறந்து கோவிந்த் அவனுக்குச் சூடான காபியைக் கொடுத்தான்.

"அப்போ பயமும், கார்பன் மோனாக்சைடும் சேர்ந்து என் மூளையை வச்சு ஒரு த்ரில்லர் படமே ஓட்டியிருக்கு!" தமிழரசன் சிரித்தான்.

"எக்ஸாக்ட்லி!" என்றான் கோவிந்த்.

"மனித மூளைங்கிறது உலகத்திலேயே மிகச் சிறந்த கற்பனை மெஷின். அதுக்குக் கொஞ்சம் பயத்தையும், கொஞ்சம் ஆக்ஸிஜன் குறைபாட்டையும் கொடுத்தா போதும். இல்லாத பேயைக் கூடக் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திடும்!" என்று சிரித்தான் கணேஷ்.

"அது சரி! இந்தப் பங்களாவை ஏன் விக்கணும்? பேய் பங்களான்னு போர்டு மாட்டி பார்க்க வர்றவங்ககிட்டெ பைசா வசூலிச்சா பிசினஸ் பிய்ச்சுக்கிட்டுப் போகாதா?" என்று கோவிந்த் தனது பிசினஸ் மூளையைக் காட்டினான்.

"பேய் இல்லை, பிசாசு இல்லை, பூதம் இல்லைன்னு சொல்ற நாமளே இப்படி ஒரு பிசினஸ் பண்ணா நல்லவா இருக்கும்?" என்றான் தமிழரசன்.

"அதுக்கில்லப்பா! நம்மோட ரியல் எஸ்டெட் பிசினஸ் இப்போ கொஞ்சம் டல்லா இருக்கு. அதான் இப்படி மாறிடலாம்ன்னு ஒரு ரூட் போட்டேன்." என்று கோவிந்த் சொல்ல, "இந்த ரூட்டையெல்லாம் பாரின்ல எப்பவோ போட்டுட்டானுங்க. அதோட அடுத்த சாப்டரில் அதைப் பத்திதான் விஜயராமன் எழுதப் போறான். படிச்சுப் பார்த்துத் தெரிஞ்சுக்கோ கோவிந்த்!" என்றான் கணேஷ்.

"பாரின்ல எல்லாம் பண்ண முடியுது. இங்கத்தான் பண்ண முடியல. அதுக்குக் காரணமே நீங்கதான். நீங்க கொடுக்குற அவர்னெஸ்ல இனிமே ஒருத்தனுக்கும் பேய், பிசாசு பயமே இருக்காது போல இருக்கு!" என்று கோவிந்த சொல்ல, இப்போது மூவரும் சிரித்தபடியே மருதவனத்துப் பங்களாவை விட்டு வெளியேறினார்கள். காலை வெயில் அவர்கள் மேல் கதகதப்பாக விழுந்தது.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Thursday, 3 September 2026

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 5

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 5

குரூப் மற்றும் ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****


பேய் பங்களா

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 73

பேய் பங்களா

தமிழரசன் தன் அலைபேசியை ஒரு முறை பார்த்து விட்டு சட்டைப் பையில் போட்டான்.

மருதவனத்தில் இருக்கும் அந்த எண்பது வருட பழைய பங்களாவுக்கு வெளியே மழை பிடித்துக்கொண்டது. ஜன்னல் கதவுகள் பலமாக அடித்துக் கொண்டன.

"என்ன தமிழ்! இன்னைக்கு நைட் இங்கேயே தங்கிடலாம்னு முடிவா?"  காரின் சாவியை விரலில் சுழற்றியபடி கேட்டான் கோவிந்த்.

"ஆமாம் கோவிந்த்! மருதவனத்துல இருக்கிற இந்த பங்களாவை விக்கணும்னா, முதல்ல பேய் பங்களாங்கிற இந்தப் போலி பிம்பத்தை உடைக்கணும். ஆட்கள் வர பயப்படுறாங்க. நான் ஒரு வாரம் இங்க தங்கி, எல்லாம் கட்டுக்கதைன்னு இந்த உலகத்துக்குக் காட்டப் போறேன்."

"டேய் தமிழ்! 1988ல இந்த வீட்டில் இருந்த சோமசுந்தரம் குடும்பமே ஒரே ராத்திரியில காணாம போச்சுன்னு ஊர்ல எல்லாரும் பேசிக்கிறாங்க!"

தமிழரசன் சிரித்தான். "கோவிந்த்! என்பீல்ட் போல்டர்கீஸ்ட் பத்தி படிச்சிருக்கியா? 1977ல லண்டன்ல ஒரு பொண்ணு காற்றில் மிதந்தான்னு அம்புட்டுப் பேரும் அலறினாங்க. அப்புறம் பார்த்தா அது வெறும் ஹை ஜம்ப்! மனுஷ மூளை பயத்துல தனக்குத் தானே பண்ணிக்கிற தந்திரம்தான் பேய். இங்கயும் அதேதான்."

"சரி உன் சயின்ஸ் உன்னைக் காப்பாத்தட்டும். நான் கிளம்புறேன்!"  கோவிந்த் கதவைத் திறந்து மழையில் இறங்கி மறைந்தான்.

மருதவனத்தின் அந்தப் பழைய வீட்டில் அமைதி பரவியது.

இரவு 1:40.

தமிழரசன் ஹாலில் இருந்த பழைய மர நாற்காலியில் அமர்ந்து விஜயராமனின் பிளாக்ஸ்பாட்டை தன் மொபைலில் படித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று, சமையலறையிலிருந்து 'டங்... டங்...' என்று சத்தம்.

தமிழரசன் தன் ஆப்பிள் வாட்சைப் பார்த்தான். ஹார்ட் ரேட் 72. இயல்பாக இருந்தது. மொபைல் டார்ச்சை ஆன் செய்துகொண்டு கிச்சனுக்குள் நுழைந்தான்.

அங்கே, ஒரு பழைய பித்தளைத் தட்டு தரையில் உருண்டு கொண்டிருந்தது.

"காற்றின் வேகம். ஜன்னல் இடைவெளி வழியா வர்ற காற்று அழுத்தம்." உரக்கப் தனக்குத் தானே பேசிக் கொண்டான். பயத்தை விட அறிவியல் ஜெயிக்க வேண்டும் என்று.

அப்போது, ஹாலில் இருந்த கடிகாரம் இரண்டு முறை அடித்தது. 'டாங்... டாங்...'

தமிழரசன் மீண்டும் ஹாலுக்கு வந்தான். மொபைலின் டார்ச் வெளிச்சத்தை அந்தப் பழைய சுவர் கடிகாரத்தின் மீது அடித்தான்.

அங்கே அவன் பார்த்த காட்சி, அவன் மூளையின் செல்களை அப்படியே உறைய வைத்தது.

அந்தக் கடிகாரத்தில் பேட்டரியே இல்லை! சாவி கொடுக்கும் கம்பியும் அறுத்தெறியப்பட்டிருந்தது.

"இதுக்கு வாய்ப்பே இல்லை!" தமிழரசன் முணுமுணுத்தான். "இது ஐடியா மோட்டார் விளைவு இல்லை. என் மூளை இதை உருவாக்கல. கடிகாரம் உண்மையிலேயே அடிச்சிருக்கு."

அவன் இதயத் துடிப்பு இப்போது 110ஐத் தொட்டது.

திடீரென்று அவனது மொபைல் திரை தானாக வெளிச்சமானது.

அதில் மெசேஜ் பாக்ஸ் ஓப்பனாகி தானாகவே டைப்ரைட்டர் போல எழுத்துக்கள் விழத் தொடங்கின.

"தமிழரசன்! 1988 இல் மருதவனத்தின் சோமசுந்தரம் குடும்பம் காணாமல் போகவில்லை. அவர்கள் இந்த வீட்டின் தரையின் அடியில்தான் இருக்கிறார்கள்."

தமிழரசன் நடுங்கும் விரல்களால் மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்தான். ஆனால் மொபைல் ஆப் ஆகவும் இல்லை, மொபைலில் டைப்பிங்கும் நிற்கவில்லை!

"அறிவியல் எல்லாவற்றையும் விளக்கிவிடும் என்று நினைக்கிறாயா? உன் பரேடோலியா விதியும், போல்டர்கீஸ்ட் தியரியும் சுவரில் இருக்கும் கடிகாரத்தை நிறுத்தாது."

தமிழரசன் பயத்தின் உச்சத்திற்குச் சென்று அலறினான். "யார் அது? மொபைலை ஹேக் பண்றியா? கோவிந்த் நீதானே அது?"

மொபைல் திரையில் இருந்து நீல நிற வெளிச்சம் வீச்சாக அடித்து, மருதவனப் பங்களாவின் முழு அறையையும் ஆக்கிரமித்தது.

ஹால் மூலையில் இருந்த அந்த பழைய மர நாற்காலி மெதுவாக தரையிலிருந்து 2 அடி உயரத்திற்கு காற்றில் மிதக்கத் தொடங்கியது.

தமிழரசன் தன் ஆப்பிள் வாட்சைப் பார்த்தான்.

திரையில் கண்கள் நம்ப முடியாத செய்தி வந்தது. இதயத் துடிப்பு பூஜ்ஜியம் எனக் காட்டியது.

அவன் உறைந்துபோய் நின்று கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு முன்னால், அதே நாற்காலியில், அதே மொபைலைப் பார்த்தபடி தமிழரசனின் உடல் சாய்ந்து கிடந்தது!

இப்போது மொபைல் திரையில் அடுத்த வரி டைப் ஆனது.

"வெல்கம் டு த பேமிலி, தமிழரசன்!"

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****