Monday, 13 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.07.2026

1) வீரியமிக்க கொரோனோ பரவல் தமிழகத்தில் இல்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2) கவிஞர் வைரமுத்துவுக்கு நேற்று ஞானபீட விருது வழங்கப்பட்டது.

3) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79.

4) ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்காக 20 சதவீத வரி வசூலிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

5) இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய மகளிர் அணி வென்றது.


Education & GK News

1) The Department of Public Health has stated that there is no spread of a virulent strain of coronavirus in Tamil Nadu.

2) Poet Vairamuthu was presented with the Jnanpith Award yesterday.

3) Tamil writer and Sahitya Akademi Award winner Poomani has passed away; he was 79.

4) US President Donald Trump has announced that a 20 percent levy will be charged for the security of ships passing through the Strait of Hormuz.

5) The Indian women's team won the Test cricket match against England.

பேய்க்கு ஓர் என்ஓசி சர்டிபிகேட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 20

பேய்க்கு ஓர் என்ஓசி சர்டிபிகேட்!

அட்ரஸ் என்று பார்த்தால், இங்கிலாந்தின் பைலேண்ட் அபே.

காலம் பதினைந்தாம் நூற்றாண்டு.

அங்கே ஒரு துறவி இருந்தார். அவருக்குத் தினமும் தியானம் செய்து மோட்சம் அடைவதை விட, சுத்துப்பட்டு ஊர்களில் நடக்கும் பேய் கதைகளைக் கேட்டு டைரியில் எழுதி வைப்பதில்தான் அலாதி பிரியம். அவர் கைப்பட எழுதிய அந்தப் பழைய டைரியிலிருந்து ஒரு கதை.

சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கிறது?

அதுவும் பேயோடு நடந்த ஒரு சண்டையில் சட்டை கிழிந்தால்… அதுதான் இந்த கதை.

ஒரு விவசாயி.

அவனது முதலாளியுடன் வயல்வெளியில் அமைதியாக நடந்து போய்க்கொண்டிருந்தான்.

வானிலை அநேகமாக மேகமூட்டத்துடன் இருந்திருக்க வேண்டும்.

திடீரென்று, புதருக்குள்ளிருந்து ஒரு பேய் எகிறி குதித்து வந்தது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, நேராக அந்த விவசாயியின் மேல் பாய்ந்து, அவனது சட்டையைக் கிழித்து, துவம்சம் செய்தது.

சண்டையில் லாஜிக்கே இல்லை என்று கமென்ட் அடிக்காதீர்கள்.

கூட வந்த முதலாளி பயந்து ஓடிவிட, விவசாயிக்குக் கோபம் வந்தது.

ஏற்கனவே வறுமை, இதில் சட்டை வேறு கிழிகிறதே என்ற ஆத்திரம்.

அந்த விவசாயி பயப்படாமல் அந்தப் பேயைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். பிறகு, தனக்குத் தெரிந்த அரைகுறை லத்தீன் மொழியில் கான்ஜூர் செய்தான். அதாவது, மிரட்டி கிராஸ் எக்ஸாமினேஷன் செய்தான்.

"ஏன்டா பேயே எதற்காகடா என் சட்டையைக் கிழிச்ச? உனக்கு என்னதான் வேணும்?"

பேய் உடனே அவ்வ் என்று வடிவேலு பாணியில் அழத் தொடங்கியது.

"தம்பி, நான் சாதாரண ஆள் இல்லை. இந்த அபேயில் பாதிரியாராக இருந்தவன். உயிரோடு இருந்தபோது பேராசை பிடித்து, சில வெள்ளி ஸ்பூன்களைத் திருடி ஓர் இடத்தில் ஒளித்து வைத்துவிட்டேன். அந்தப் பாவம் என் காலைப் பிடித்து இழுக்கிறது. செத்த பிறகும் மோட்சத்துக்குப் போக முடியாமல் இங்கேயே அலைகிறேன்."

இப்போது சட்டை கிழிந்து போன கவலை மறைந்து, விவசாயிக்குச் சிரிப்பு வந்தது.

செத்த பிறகும் மனிதன் தன் பாவத்துக்கு ஏதோ செட்டில்மென்ட் அல்லது லஞ்சம் கொடுத்துத் தப்பித்துவிடலாம் என்று நினைப்பதுதான் காலத்தின் ஆகச்சிறந்த காமெடி.

அந்தப் பேய்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமே.

விவசாயி அந்தப் பேய் சொன்ன இடத்துக்குப் போய், ஒளித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளி ஸ்பூன்களைத் தேடிக் கண்டுபிடித்தான்.

அதை முறைப்படி சர்ச்சுக்கோ அல்லது உரியவர்களிடமோ ஒப்படைத்தான். பாவக் கணக்கு நேர் செய்யப்பட்டது.

அதன் பிறகுதான் அந்தப் பாதிரியார் பேய்க்கு மேலோகத்திலிருந்து நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட் கிடைத்தது. அது நிம்மதியாகக் காற்றோடு காற்றாகக் கரைந்து மோட்சம் போனது.

துறவியின் டைரி அங்கே முடிகிறது. பாவம், அந்த விவசாயிக்குக் கிழிந்த சட்டைக்கு யார் துட்டு கொடுத்தார்கள் என்று அவர் எழுதவே இல்லை!

 அதே கதை இப்போது நடந்தால் எப்படி இருக்கும்? யோசித்து வையுங்கள். அதையும் தேடுவோமே.

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

Sunday, 12 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.07.2026

1) பள்ளிகளுக்கான உடற்கல்வி வழிகாட்டிப் பாடப்புத்தகம் தயார் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.

2) ஆல்கஹால் கலந்த மருந்துகளை விற்பனை செய்வதற்கு புதிய கட்டுபாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

3) ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்.

4) வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த ஏற்பட்ட விபத்தில் 10 தமிழர்கள் உயிரிழந்தனர்.

5) மறைந்த பின்னணி பாடகி எஸ். ஜானகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Education & GK News

1) Physical education guidebook for schools has been prepared and will be distributed soon.

2) The Central Government has imposed new regulations on the sale of alcohol-based medicines.

3) Iran has closed the Strait of Hormuz once again.

4) Ten Tamils ​​lost their lives in an accident where a tourist boat capsized in Vietnam.

5) The mortal remains of the late playback singer S. Janaki were cremated with full state honors.

வைல்ட் ஹன்ட் – அந்தக் காலத்து நெட்பிளிக்ஸ் கதை!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 19

வைல்ட் ஹன்ட் – அந்தக் காலத்து நெட்பிளிக்ஸ் கதை!

இடைக்கால ஐரோப்பியர்களின் ஒன் ஆப் தி மோஸ்ட் பேவரிட் பயம் வைல்ட் ஹன்ட். திடீரென்று வானத்தில் ஒரு பேய்க்கூட்டம் வேட்டைக்குக் கிளம்பும். இதற்குப் பின்னால் ஒரு செம மார்க்கெட்டிங் மற்றும் அரசியல் கலந்த பேண்டஸி இருக்கிறது.

இதன் ஒரிஜினல் வெர்ஷன் நார்ஸ் மிதாலஜி. தலைவன் வோடன். இவர்தான் இந்த வேட்டைக்கு கேப்டன். பழைய காலத்து பவர்புல் கடவுள். கையில் ஈட்டி, பறக்கும் குதிரை என்று செம கெத்தாக வலம் வந்தவர்.

காலம் மாறியது. ஐரோப்பாவில் கிறிஸ்தவம் உள்ளே நுழைந்தது. பழைய கடவுள்களை அப்படியே விட்டால் பிசினஸ் ஆகாது என்று நினைத்தார்களோ என்னவோ, இந்த வோடன் கடவுளை ஒரே ராத்திரியில் வில்லனாக, அதாவது பயங்கரமான பேயாக மாற்றிவிட்டார்கள்.

அப்படித்தான் வோடன் வைல்ட் ஹன்டின் தலைவரானார்.

வோடன் தலைமையில் இந்த பேய்க்கூட்டம் சும்மா ஜாலியாக வாக்கிங் போகாது. அதற்கு என்று ஒரு டார்கெட் இருந்தது.

அந்த டார்கெட்தான் பாவம் செய்தவர்களின் ஆன்மாக்கள். "நீ போன வாரம் பக்கத்து வீட்டுக்காரன் கோழியைத் திருடினேதானே?" என்று கணக்குப்பார்த்து தூக்குவார்கள்.

பாவம், பிறந்து சில வாரங்களே ஆன குழந்தைகளுக்குக் கூட இந்த பேய் லிஸ்ட்டில் இடம் உண்டு. கொஞ்சம் ஓவர்தான் என்கிறீர்களா?

அப்புறம் முக்கிய எச்சரிக்கை என்னவென்றால், இந்த வேட்டை நடக்கும்போது தப்பித்தவறி யாரும் குறுக்கே போய்விடக் கூடாது. போனால், உங்களையும் ஒரு பேயாக்கி, குதிரையின் பின்னால் கட்டி இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

இன்றைய தேதியில் இதைப் படித்தால் உங்களுக்கு சிரிப்பு வரலாம். விஞ்ஞானம் வளராத காலத்தில், ராத்திரியில் அடித்த பலத்த காற்றையும் புயல் சத்தத்தையும் பார்த்து பயந்து, இப்படி ஒரு கதையை பில்டப் செய்திருக்கிறார்கள் என்று ஈஸியாகச் சொல்லிவிடலாம்.

ஆனாலும் யோசித்துப் பாருங்கள். தியேட்டரே இல்லாத அந்தப் பழைய காலத்தில், நடுங்கும் குளிரில், நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு, பெரியவர்கள் இந்தக் கதையைச் சொல்லும்போது, கேட்கும் குழந்தைகளுக்கு எப்படி இருந்திருக்கும்? நெட்பிளிக்ஸ் த்ரில்லர் வெப் சீரிஸை விட செம த்ரில்லிங்காக இருந்திருக்கும் இல்லையா?

ஏன் இப்படி கதையைக் கிளப்பி விடுகிறார்கள் என்பதுதான் இதில் உள்ள சுவாரசியம்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. இரவு நேரத்தில் நெருப்பை மூட்டி, சுற்றியமர்ந்து கதை பேசுவது அவனது மரபணுவிலேயே இருக்கிறது.

அப்படிப் பேசும்போது சும்மா தத்துவம் பேசினால் தூக்கம் வரும். அதனால் கொஞ்சம் பேய், கொஞ்சம் ரத்தம், கொஞ்சம் த்ரில்லர் கலந்து வைல்ட் ஹன்ட் போன்ற கதைகளை உருவாக்கினார்கள். தலைமுறை தலைமுறையாக இந்தத் தகவல்கள் கடத்தப்படும்போது, அதுவே ஒரு கட்டத்தில் உண்மை போன்ற நம்பிக்கையாக மாறி விடுகிறது.

மனித மூளை ஒரு விசித்திரமான மெஷின். அதற்கு காரணம் தெரியாமல் இருக்கவே பிடிக்காது. அறிவியல் வளராத காலத்தில், சுற்றியிருந்த இயற்கை நிகழ்வுகளுக்கு விளக்கம் தேட மனிதன் உருவாக்கிய ஷார்ட் கட்கள்தான் இந்த நம்பிக்கைகள் மற்றும் அதைச் சுற்றிப் பின்னப்பட்ட இது போன்ற அமானுஷ்ய கதைகள்.

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 11 July 2026

இன்ப்ராசவுண்ட் கடத்தல்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 18

இன்ப்ராசவுண்ட் கடத்தல்!

தாமஸின் குழந்தையை வோடன் கடத்தி விட்டாரா?

நிச்சயமாக இல்லை. அவருக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை.

அப்படியானால் குழந்தை எங்கே?

அதற்கு முன் நாம் சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்?

அங்கே இயற்கை நிகழ்வுகளும், மனிதக் குறைபாடும் கச்சிதமாக இணைந்து மாயையை உருவாக்கியிருக்கின்றன.

ஆல்ப்ஸ் மலைப் பள்ளத்தாக்குகளில் குளிர்காலத்தில் வீசும் சூறாவளிக் காற்று, மரங்களுக்கும் மலை இடுக்குகளுக்கும் நடுவே புகுந்து வரும்போது காதுகளுக்குக் கேட்காத, ஆனால் உடலால் உணரக்கூடிய இன்ப்ராசவுண்ட் அலைகளை உருவாக்கும்.

இந்த அதிர்வுகள் மனித மூளையைத் தாக்கும்போது பயங்கரமான பிரமைகள், கண்கள் காற்றில் ஏதோ மிதப்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன், மற்றும் குதிரைகள் ஓடுவது போன்ற சத்தத்தைக் கேட்க வைக்கும்.

தாமஸும் அவன் மனைவியும் அந்த ஒலியியல் அழுத்தத்தால் தாங்கள் கண்டதை உண்மை என்று நம்பியிருக்கிறார்கள். இது வோடனின் படை வருகைக்கு ஓ.கே.

அந்தக் குழந்தை எங்கே போனது?

காற்றில் மர உத்திரங்கள் நடுங்கியபோது, அதிர்வில் வீட்டின் பின் பக்கத்து பலவீனமான மர ஜன்னல் ஒன்று உடைந்து திறந்திருக்கிறது.

குளிர்காலத்தில் பசியால் வாடும் காட்டு ஓநாய்கள் உணவைத் தேடி மனித நடமாட்டம் உள்ள பகுதிக்கு வருவது வழக்கம்.

காற்றில் கதவு, ஜன்னல் உடைந்த சத்தமும், காற்றின் இரைச்சலும் தாமஸ் தம்பதியினரை நிலைகுலைய வைத்த அந்தச் சில நொடிகளில், பசியோடு இருந்த ஒரு காட்டு ஓநாய் ஜன்னல் வழியே உள்ளே புகுந்திருக்கிறது.

காட்டின் கடும் குளிரில் தொட்டிலில் இருந்த குழந்தை ஏற்கனவே ஹைபோதெர்மியா எனும் உடல் வெப்பம் மிகக் குறைதல் எனும் நிலைக்குச் சென்று, அழும் திறனை இழந்து மயக்கத்தில் இருக்க, ஓநாய் குழந்தையைக் கவ்விக்கொண்டு அதே ஜன்னல் வழியே வெளியேறியிருக்கிறது.

மறுநாள் காலை தாமஸ் வாசலில் பார்த்த தடங்கள் குதிரையுடையது அல்ல; அவை காட்டின் பெரிய ஓநாய்களின் காலடித்தடங்கள். பனிப்பொழிவு மிகத் தீவிரமாக இருந்ததால், ஓநாய் ஓடிய தடங்கள் சில மீட்டர்களுக்குப் பின் புதிய பனியால் மூடப்பட்டு மறைந்திருந்தன.

கீழே தடங்கள் மறைந்துபோனதை, பதற்றத்தில் இருந்த தாமஸ் தன் மூளையில் இருந்த வைல்ட் ஹன்ட் கதையோடு பொருத்திப் பார்த்து, "தடங்கள் அப்படியே ஆகாயத்துக்குப் போய்விட்டன" என்று தவறாகப் புரிந்து கொண்டான்.

ஆக, அங்கே வந்தது வோடனும் இல்லை, அவனது பேய்ப் படையும் இல்லை. வந்தது பசியோடு வந்த ஒரு காட்டு ஓநாயும், மனித மூளையை ஏமாற்றிய இன்ப்ராசவுண்ட் காற்றும் மட்டும்தான்.

ஆனால், இடைக்கால ஐரோப்பாவில் அறிவியல் என்கிற விளக்கு எரியாததால், அந்த ஓநாயின் எச்சிலை அவர்கள் வைல்ட் ஹன்ட் என்று நம்பி நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

பாவம் தாமஸ்!

அதென்ன வைல்ட் ஹன்ட் என்கிறீர்களா?

நாளை வரை வெயிட் ப்ளீஸ்.

-  அட்ரஸைத் தேடுவோம்!

******

Friday, 10 July 2026

காற்றில் கரையும் குளம்பொலி!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 17

காற்றில் கரையும் குளம்பொலி!

குளிர்காலத்து இருட்டுக்கு ஒரு விசித்திரமான குணம் உண்டு. அது ஒலிகளைப் பெருக்கி, மனிதர்களின் ஆதிப் பயங்களை நினவாக்கும்.

ஆல்ப்ஸ் மலை அடிவாரத்துக் கிராமத்தின் அந்தச் சின்னஞ்சிறு மரவீட்டில், புகைபோக்கியின் வழியே கசிந்த புகையை விடவும் அடர்த்தியாகப் பயம் சூழ்ந்திருந்தது.

தாமஸ் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். மரங்கள் இலைகளற்று, காற்றில் எலும்புக்கூடுகளாய் நின்றன. அன்று மாலைதான் அவனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஆனால், இன்னும் அதற்கு ஞானஸ்நானம் செய்விக்கப்படவில்லை. பாதிரியார் அடுத்த வாரம்தான் மலை ஏறி வர வேண்டும்.

திடீரென்று, காட்டிலிருந்து அந்தச் சத்தம் கேட்டது.

விர்ர்ர்... விர்ர்ர்...

அது வெறும் காற்றின் சீறல் அல்ல. அதில் ஆயிரக்கணக்கான குதிரைகளின் குளம்படிச் சத்தமும், வேட்டை நாய்களின் வெறித்தனமான குரைப்பும் கலந்திருந்தன.

வைல்ட் ஹன்ட் கிளம்பிவிட்டது!

மேகக் கூட்டங்களைக் கிழித்துக் கொண்டு, காற்றில் மிதந்து வந்தது அந்தப் பேய்க் கூட்டம்.

முன்னால், ஒற்றைக் கண்ணும் எரியும் தாடியும் கொண்ட வோடன் கருப்பு நிறப் பெருங்குதிரையில் பாய்ந்து வந்தான். அவனது கையில் இருந்த ஈட்டி மின்னலைப் போல ஒளிர, பின்னால் கண்கள் இல்லாத அமானுஷ்ய உருவங்கள் பின்தொடர்ந்தன.

"தாமஸ், ஜன்னலை மூடு!" அவனது மனைவி தொட்டிலை அணைத்தபடி கதறினாள்.

அவர்கள் வீட்டின் கூரைக்கு மேலே அந்த வேட்டைக்கூட்டம் கடந்து சென்றபோது, வீட்டின் மர உத்திரங்கள் பலமாக நடுங்கின.

வோடனின் வேட்டை நாய்கள் வீட்டின் வாசலை மோப்பம் பிடித்தன. ஞானஸ்நானம் பெறாத அந்தக் பிஞ்சு ஆன்மாவின் வாசனை அவற்றுக்கு எட்டியிருந்தது.

வாசற்கதவின் கீழ் இருந்த இடுக்கின் வழியே ஒரு கருப்புப் புகை உள்ளே நுழைய முயன்றது.

தாமஸ் நடுங்கும் கரங்களால், மேசையின் மேல் இருந்த புனித நீரை எடுத்து வாசலில் தெளித்தான். சத்தம் சட்டென்று விலகி, ஆகாயத்தை நோக்கி நகர்ந்தது.

அப்பாடா என்று தாமஸ் மூச்சுவிடுவதற்குள், தொட்டிலில் இருந்த குழந்தையின் அழுகுரல் திடீரென நின்றது.

மனைவி மயங்கி விழுந்து கிடந்தாள்.

பயத்துடன் ஓடிச்சென்று பார்த்த தாமஸின் ரத்தம் உறைந்தது. தொட்டில் காலியாக இருந்தது! ஜன்னல் கதவு காற்றில் தானாகத் திறந்து மூடியது.

வெறிபிடித்தவனாகத் தாமஸ் கதவைத் திறந்து கொண்டு பனிப்பொழிவில் ஓடினான். தூரத்தில், மேகங்களுக்கு நடுவே வோடனின் குதிரைப்படை மறைந்து கொண்டிருந்தது.

அந்தப் பேய்க் கூட்டத்தின் நடுவே, ஓர் அமானுஷ்ய உருவத்தின் கைகளில் அவனது குழந்தை காற்றில் மிதந்தபடி அழுதுகொண்டே சென்றது. வோடன் தன் ஒற்றைக் கண்ணால் தாமஸைத் திரும்பிப் பார்த்து கொடூரமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு இடிமுழக்கமாய் ஒலித்தது.

மறுநாள் காலை, பனி படர்ந்த காட்டின் தரையில் குதிரைக் குளம்புகளின் தடங்கள் இருந்தன. ஆனால், அவை தாமஸின் வீட்டின் வாசலில் தொடங்கி, அப்படியே ஆகாயத்தை நோக்கி மறைந்திருந்தன.

இடைக்கால ஐரோப்பாவின் ஆகாயம், இன்னும் ஒரு புனிதமற்ற ஆன்மாவைத் தன்னுள் ஜீரணித்திருந்தது.

தாமஸ், காட்டின் நடுவே உறைந்த பனியாய் சிலையாக நின்றிருந்தான்.

என்னதான் ஆனது தாமஸின் குழந்தைக்கு?

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Thursday, 9 July 2026

ஐம்பதாயிரம் பேரைப் பரலோகம் அனுப்பிய புத்தகம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 16

ஐம்பதாயிரம் பேரைப் பரலோகம் அனுப்பிய புத்தகம்

நெருப்பு, சக்கரம் போன்ற கண்டுபிடிப்புகளுக்கு அடுத்தப்படியாக உலகை மாற்றிய கண்டுபிடிப்பு புத்தகம்தான்.

புத்தகங்கள் உலகையே புரட்டிப் போடும் நெம்புகோல்கள்.

அமானுஷ்யங்களின் அட்ரஸில் திடீரென ஏன் புத்தகம் வருகிறது என்கிறீர்களா? நேற்று சொன்ன கதையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

ஒரு புத்தகம் அப்படி அமானுஷ்யத்தால் ஐம்பதாயிரம் பெண்களைப் பரலோகம் அனுப்பியிருக்கிறது.

1487 இல் ஜெர்மனியில் ஒரு புத்தகம் ரிலீஸ் ஆனது. அதன் பெயர் மாலியஸ் மாலிபிகாரம்

இதற்கு லத்தீன் மொழியில் சுத்தியல் என்று பொருள். ஆனால், இது சாதாரண சுத்தியல் இல்லை; பேய்கள் மற்றும் சூனியக்காரிகளை நசுக்கும் சுத்தியல்.

நம்மூர் டூரிஸ்ட் கைடு மாதிரி, அந்த காலத்து ஐரோப்பாவில் பேய் ஓட்டுபவர்களுக்கும், சூனியக்காரர்களை கண்டுபிடிக்க நினைத்தவர்களுக்கும் இதுதான் அதிகாரப்பூர்வமான கைடு புத்தகம்.

ஹைரிச் க்ரேமர் என்ற ஒரு பாதிரியார்தான் இதை எழுதினார். மனிதருக்கு பெண்கள் என்றாலே அலர்ஜி போலிருக்கிறது. பெண்களுக்குத்தான் புத்திசாலிப்படியும், உடல்ரீதியாகவும் பலவீனம் அதிகம். அதனால் பிசாசுகள் அவர்களைத்தான் சீக்கிரம் கார்னர் செய்யும், என்று பக்கம்பக்கமாக அள்ளிவிட்டிருந்தார்.

இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருந்தது என்கிறீர்களா?

புத்தகத்தை மூன்று பாகங்களாகப் பிரித்திருந்தார் க்ரேமர்.

பாகம் 1: பேய்களும் பிசாசுகளும் நிஜமாகவே இருக்கின்றன. அதை நம்பாதவன் நாத்திகன், துரோகி.

பாகம் 2: சூனியக்காரிகள் எப்படியெல்லாம் மந்திரம் செய்கிறார்கள்? அதாவது, ஆண்களை எப்படி ஏமாற்றுகிறார்கள், மாடுகளின் பாலை எப்படி வற்ற வைக்கிறார்கள் என்ற ஏகப்பட்ட லிஸ்ட்!

பாகம் 3: இவர்களை எப்படிக் கண்டுபிடித்து, எப்படி கோர்ட்டில் விசாரித்து, எப்படி முடிக்க வேண்டும்?

அவ்வளவுதான்! இந்த புத்தகம் வந்ததும், ஐரோப்பாவே ஒரு காட்டுமிராண்டித்தனமான விட்ச் ஹன்ட் மோடுக்கு மாறியது.

சட்டம், ஒழுங்கு எல்லாம் காலி!

இந்த கைடு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, ஊருக்குள் யாராவது ஒரு பெண் கொஞ்சம் விசித்திரமாக நடந்துகொண்டாலோ, அல்லது யாருக்காவது பிடிக்காத பெண்ணாக இருந்தாலோ போதும். "அவள் சூனியக்காரி!" என்று முத்திரை குத்திவிடுவார்கள்.

அப்புறம் விசாரணை.

அந்த விசாரணை முறை எப்படித் தெரியுமா?

ஒரு பெண்ணின் கைகால்களைக் கட்டி ஆற்றில் தூக்கிப் போடுவார்கள். அவள் தண்ணீரில் மூழ்கி இறந்தால், "அவள் நல்லவள், பாவம்" என்று அத்தோடு விட்டுவிடுவார்கள்.

ஒருவேளை தப்பித்து மேலே வந்தால்,

"பார்த்தீர்களா! பிசாசுதான் இவளைக் காப்பாற்றியிருக்கிறது" என்று சொல்லி, தீயிலிட்டு கொளுத்திவிடுவார்கள்! எப்படிப் பார்த்தாலும் மரணம் நிச்சயம்!

ஓர் இருண்ட காலம் அது. சுமாராக 50,000 அப்பாவிப் பெண்கள் இந்த ஒற்றைப் புத்தகத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்று வரலாறு சொல்கிறது.

சுருக்கமாகச் சொன்னால்,

மனிதனின் மூடநம்பிக்கையும், அதிகார வெறியும், ஒரு தவறான புத்தகத்தோடு கைகோர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த 1487 இல் வந்த அந்தச் சுத்தியல் புத்தகம் ஒரு ரத்த சாட்சி. அறிவியலும், பகுத்தறிவும் இல்லாத ஒரு சமூகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் ஒரு வரலாற்றுப் பிழை அது!

நல்லவேளை, அப்போது வாட்ஸ்அப் இல்லை. இருந்திருந்தால் ஐரோப்பாவே காலியாகியிருக்கும்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****