Thursday, 7 May 2026

சிரிப்பு – ஒரு சூப்பர் பவர் மருந்து!

சிரிப்பு – ஒரு சூப்பர் பவர் மருந்து!

ஆஸ்பத்திரி என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த நீல நிறப் போர்வைகள், டெட்டால் வாசனை, அப்புறம் பரபரப்பாக இருக்கும் நர்ஸ்கள். சீரியசான டாக்டர் முகம். இப்படிப்பட்ட சூழலில், உள்ளே ஒரு கோமாளி எனும் கிளவுன் நுழைந்தால்?

இடுப்பில் ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதில் ஒரு பிளாஸ்டிக் தக்காளி. கையில் ஊசிக்குப் பதில் ஒரு பலூன். இதைப் பார்ப்பதற்கே ஒரு தெரபி வேண்டும். இதற்குப் பெயர்தான் மெடிக்கல் கிளவுனிங்.

இந்த விசித்திரமான ஐடியாவை முதலில் ஆரம்பித்தவர் டாக்டர் ஹண்டர் பேட்ச் ஆடம்ஸ்.

சிரிப்புதான் மிகச்சிறந்த மருந்து, என்று சும்மா பழமொழி சொல்லாமல், ஆடம்ஸ் நிஜமாகவே ஒரு சிகப்பு மூக்கை மாட்டிக்கொண்டு வார்டுக்குள் நுழைந்தார். இன்று இது ஓர் அங்கீகரிக்கப்பட்ட புரொபஷனல் படிப்பு.

இந்தத் துறையின் இன்னொரு விவிஐபி மைக்கேல் கிறிஸ்டென்சன். குழந்தைகள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியவர்கள் அல்ல, கோமாளிகளும் அப்படித்தான், என்பது அவர் லாஜிக்.

நாங்கள் அங்கே போய் சைக்காலஜி பேசப்போவதில்லை, ஒரு குழந்தையின் கண்களில் இருக்கும் அந்தச் சிறு ஆச்சரியப் பொறியைப் பிடித்துப் பெரிதாக்குகிறோம், அவ்வளவுதான், என்கிறார் மனிதர்.

சும்மா சிரிப்புக்காகச் சொல்லவில்லை, இதில் பியூர் சயின்ஸ் இருக்கிறது.

எப்படி என்கிறீர்களா?

ஆராய்ச்சிகளின் படி, தூங்குவதற்கு முன் இந்த கிளவுன் டாக்டர்களுடன் விளையாடும் குழந்தைகளுக்குத் தூக்கம் பிரமாதமாக வருகிறதாம்.

சிரிக்கும்போது மூளையில் எண்டார்பின் சுரக்கிறதாம். இது வலியைக் குறைக்கும் ஒரு இயற்கை அனஸ்தீசியா.

இஸ்ரேலில் உள்ள எல்லாப் பெரிய ஆஸ்பத்திரிகளிலும் 100க்கும் மேற்பட்ட கிளவுன்கள் இருக்கிறார்கள். அங்கே குழந்தைகள் டாக்டரைத் தேடுவதில்லை, இந்த ஜோக்கர்களைத்தான் தேடி ஓடுகிறார்கள்.

அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் யாரோ ஒருத்தர் கோமாளி போல டிரஸ் பண்ணிக்கொண்டு வந்து குதிப்பது கிளவுனிங் ஆகாது. இதற்குப் பயங்கரமான டிரெய்னிங் உண்டு. கடுமையான ஆடிஷன், இன்டர்ன்ஷிப், நூற்றுக்கணக்கான மணிநேர மெடிக்கல் புரோட்டோகால் வகுப்புகள் என்ற இது பக்கா புரொபஷனல்.

ஒரு சீரியஸான பேஷண்ட்டிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதோடு, அந்த மருத்துவ அறையின் வைப் என்ன என்பதை அவர்கள் துல்லியமாக உணர்ந்திருக்க வேண்டும். இவர்கள் தங்களது சிரிப்பு மூலம் பெரிய சிகிச்சைகளைக் கூட ஒரு விளையாட்டாக மாற்றிவிடுவார்கள்.

மருந்துகள் உடலைக் குணப்படுத்தும். ஆனால், சிரிப்பு மனதைக் குணப்படுத்தும். அடுத்த முறை ஆஸ்பத்திரியில் யாராவது சிகப்பு மூக்கோடு அலைந்தால் கிண்டல் செய்யாதீர்கள். அவர் ஓர் உயிர்காக்கும் கோமாளி!

எல்லா நோய்களுக்கும் சிரிப்பு ஒரு நல்ல மருந்து என்பார்கள் நம் முன்னோர்கள். திருவள்ளுவரும் இடுக்கண் வருங்கால் நகுக என்பார். இப்போது ஆஸ்பத்திரிகளிலும் அதையே கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

*****

Wednesday, 6 May 2026

கம்பிக்கு பின்னே ஒரு ராகம் – சிறைச் சாலைகளின் புதிய முகம்!

கம்பிக்கு பின்னே ஒரு ராகம் – சிறைச் சாலைகளின் புதிய முகம்!

ஒரு பள்ளி திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது, என்றார் விக்டர் ஹியூகோ.

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது, என்றார் விவேகானந்தர்.

இவற்றையும் மீறி சிறைச்சாலைக்குள் சென்றவர்களை மீட்பதற்கு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா?

இருக்கின்றன என அடித்துச் சொல்கின்றன சில மனிதநேய முன்னெடுப்புகள்.

ஆம், சிறைச்சாலை என்றாலே நம் ஊர் சினிமாக்களில் காட்டப்படும் அந்த இருட்டு அறைகளும், கஞ்சி வாளிகளும் அல்ல. இப்போது அங்கே மியூசிக் ஆல்பங்களும், மாரத்தான் ஓட்டப்பந்தயங்களும் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன. குற்றவாளி என்ற லேபிளைத் தாண்டி மனிதன் என்ற அடையாளத்தை மீட்டெடுக்கும் ஒரு மனிதாபிமான முயற்சி இது.

லண்டனின் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் ஒரு விசித்திரம். வாராவாரம் அங்கே கைதிகளும், தன்னார்வலர்களும் சேர்ந்து பாடுகிறார்கள். சுமார் 2,500 கைதிகள், 200 ரிகர்சல்கள் என லண்டன் அதிர்கிறது.

அந்த ரிகர்சல் அறையில் இருக்கும் இரண்டு மணி நேரம் நான் ஒரு கைதி அல்ல, நான் ஒரு மனிதன், என்கிறார் அங்குள்ள கைதி ஒருவர். இதில் ஒரு சைக்காலஜி இருக்கிறது. குழுவாகப் பாடும்போது மூளையில் எண்டார்பின் சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, நல்லுணர்வைத் தருகிறது.

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஈஸ்ட் ஹில்ஸ் சிங்கர்ஸ் என்றொரு குரூப். இவர்களின் கதையை கன்டக்டிங் ஹோப் என்று ஆவணப்படமாகவே எடுத்திருக்கிறார்கள்.

ஓஹியோவில் ஹார்மனி ப்ராஜெக்ட் மூலம் வாரம் 1,000 பேருக்கும் மேல் அங்குள்ள சிறைச்சாலையில் பாடுகிறார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், சில சமயம் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களே வந்து இவர்களுடன் உரையாடுகிறார்கள். இது ஒரு ஹீலிங் பிராசஸ்.

பாட்டை விட ஒரு படி மேலே போய் கைதிகளுக்கு மராத்தான்களும் நடத்தப்படுகின்றன. கலிபோர்னியாவின் சான் குவென்டின் சிறை. மிகவும் ஆபத்தான கைதிகள் இருக்கும் இடம். அங்கே ஒரு ரன்னிங் கிளப்பை ஆரம்பித்தார்கள்.

சிறை மைதானத்தைச் சுற்றி 105 முறை ஓடினால் ஒரு முழு மாரத்தான் அதாவது, 26.2 மைல்கள் அல்லது 42.1 கி.மீ.

வாராவாரம் திங்கட்கிழமை மாலை ட்ரைனிங்.

இது ஆரம்பித்து பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன. இன்று மூன்று மணி நேரத்திற்குள் மாரத்தானை முடிக்கும் அக்மார்க் அத்லெட்டுகளை இந்தச் சிறை உருவாக்கியிருக்கிறது. கைதிகள் இப்போதெல்லாம் தங்கள் எனர்ஜியை வன்முறைக்குப் பதில் ஓடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள்!

எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறது?

சிறை என்பது தண்டனைக்கான இடம் மட்டுமல்ல, அது ஒரு ரீ-புரோகிராமிங் சென்டர்.

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

கைதிகளில் பெரும்பாலானோர் சமூகப் பின்னணி மற்றும் வறுமையால் உள்ளே வந்தவர்கள். இதுபோன்ற மியூசிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் புரோகிராம்களில் பங்கேற்கும் கைதிகள், விடுதலையான பிறகு மீண்டும் குற்றம் செய்து சிறைக்குத் திரும்பும் விகிதம்  பெருமளவு குறைகிறதாம்.

ஒருமுறை பிரிட்டன் மன்னர் சார்லஸ் டார்ட்மூர் சிறைக்குச் சென்றபோது கைதிகளின் பாடலைக் கேட்டு நெகிழ்ந்து போனார். கம்பிக்கு வெளியே இருப்பவர்களுக்கும், உள்ளே இருப்பவர்களுக்கும் இடையே இசை ஒரு பாலத்தை அமைக்கிறது.

வாழ்க்கை ஒரு வட்டம். சில சமயம் அந்த வட்டம் 105 லேப்களைக் கொண்ட மாரத்தான் ட்ராக்காகவும் இருக்கலாம். அங்கே இசையால் நிரம்பும் அறைகளும் இருக்கலாம். மார்க்ஸ் சொன்னது போல, இந்த உலகில் மாற்றம் மட்டுமே மாறாதது. கொஞ்சம் மனிதநேயத்தோடு அணுகினால் இந்த உலகில் மாறாதது எது?

*****

Tuesday, 5 May 2026

யான் பாம்பிங் – கம்பளிப் புரட்சி!

யான் பாம்பிங் – கம்பளிப் புரட்சி!

தெருவோரக் கலை என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்ப்ரே பெயிண்ட்டும், சுவர்களில் கிறுக்கப்பட்டிருக்கும் விசித்திரமான எழுத்துக்களும்தான். ஆனால், டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் ஒரு பெண் யோசித்தார். அவர் கையில் பெயிண்ட் டப்பா இல்லை, கம்பளி நூலும் ஊசியும்தான் இருந்தது.

அவர் பெயர் மாக்டா சேயக். தன் துணிக்கடையின் வாசலில் இருந்த அந்த மொக்கையான இரும்பு கைப்பிடிக்கு ஓர் அழகான உறையைப் பின்னி மாட்டினார். அவ்வளவுதான், உலகமே இன்று இந்த மென்மையான கலையில் கிறங்கிக் கிடக்கிறது. இதற்குப் பெயர் யான் பாம்பிங்.

இக்கலை சாதாரண கிராபிட்டி போலச் சுவரைப் பாழாக்காது. பிடிக்கவில்லையா? கத்தரிக்கோலால் ஒரு கட் கொடுத்தால், பழைய இரும்பு கம்பியே வந்துவிடும்.

யான் பாம்பிங் இத்தோடு நின்று விட வில்லை. அது,

மரங்களுக்கு ஸ்வெட்டர் போடுவது,

சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு ரெயின்போ கோட் மாட்டுவது,

பூங்கா பெஞ்சுகளுக்கு கம்பளி மெத்தை தைப்பது என்று நீள்கிறது.

இதுதான் இந்த ஆர்ட்டின் பாணி.

ஒரு ஸ்டாப் சிக்னல் போஸ்ட் கம்பளி ஆடை உடுத்தியிருப்பதைப் பார்க்கும்போது நமக்கும் அதற்குமான ஒரு விசித்திரமான கனெக்சன் உருவாகிறது பாருங்கள். அதுதான் இதன் மேஜிக்!

சில சமயம் இது ஒரு மாபெரும் திருவிழாவாக மாறிவிடுகிறது.

பிட்ஸ்பர்க்கில் இருக்கும் ஆண்டி வார்ஹோல் பாலத்தையே கம்பளியால் போர்த்தினார்கள். இதுதான் உலகிலேயே பெரிய யான் பாம்.

நியூயார்க்கில் ஒரு பெட்ரோல் பங்கையே 600 யார்டு துணிகளால் அலங்கரித்து ஒரு மியூசியம் போல மாற்றினார்கள்.

இங்கே தனிமனிதர் முக்கியமில்லை, ஒரு குழுவாக அமர்ந்து மாதக்கணக்கில் பின்னி, ஒரே நாளில் ஓர் ஊரையே கலர்புல் ஆக்குவதில் இருக்கும் அந்தத் திரில்தான் ஹைலைட்.

இது வெறும் அலங்காரம் மட்டும் அல்ல, ஒரு போராட்டக் கருவியாகவும் கூட பயன்படுகிறது. எப்படி என்கிறீர்களா?

மரங்களை வெட்டப் போகிறார்களா? அந்த மரத்திற்கு அழகான கம்பளி சட்டையைப் போடுங்கள். அப்படி, டெக்சாஸின் மாண்ட்ரோஸ் பகுதியில் முதிர்ந்த ஓக் மரங்களை வெட்ட எதிர்ப்புத் தெரிவித்து அவற்றை யான் பாம்பிங் மூலம் காப்பாற்றப் போராடியிருக்கிறார்கள். கம்பளி பின்னுவது ஏதோ பாட்டிகளுக்கு உரிய வேலை என்று நினைத்தவர்களுக்கு, இது ஒரு புரட்சிக்கலை என்று நிரூபித்துவிட்டார்கள் அந்தக் கலைஞர்கள்.

சிமெண்ட் காடுகளுக்குள் நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை, ஒரு நூலால் மீட்டெடுக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய ஆச்சரியம்!

உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் கம்பம் இன்று காலையில் திடீரென கலர்புல் ஸ்வெட்டர் போட்டிருந்தால் ஆச்சரியப்படாதீர்கள். அது ஒரு மென்மையான யுத்தம்!

இதற்காகப் புதிய துணிகளை, புதுப்புது நூல்களை வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. பழைய பயன்படாத துணிகளைக் கூட மீளுருவாக்க முறையில் பயன்படுத்தலாம். கொஞ்சம் மூளையைத் தட்டி விட்டால் ஐடியாவுக்கா பஞ்சம்?

ஒரு சின்ன கலை உலகையும் மனதையும் மாற்றுமானால், அதை முயன்று பார்ப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது? முயன்று பாருங்களேன். உங்கள் ஊரிலும் ஒரு புரட்சியோ, மாற்றமோ உருவாகட்டும்.

*****

Monday, 4 May 2026

சந்தோஷம் – எக்ஸ்பெக்ட் தி அன்எக்ஸ்பெக்டட்!

சந்தோஷம் – எக்ஸ்பெக்ட் தி அன்எக்ஸ்பெக்டட்!

வாழ்க்கை ஒரு விசித்திரமான லாட்டரி. நாம் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களிலும், விலையுயர்ந்த பார்ட்டிகளிலும் தேடிக்கொண்டிருக்கும் ஹேப்பினஸ், உண்மையில் ஒரு பழைய சந்தின் மூலையிலோ அல்லது அழுக்கு படிந்த நடைபாதையிலோ நமக்காகக் காத்திருக்கலாம்.

சந்தோஷம் என்பது ஒரு ஹைடெக் மென்பொருள் அல்ல, அது நம் அன்றாட வாழ்வின் துணிகளில் தைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு கிழிசல் வழியே எட்டிப்பார்க்கும் சூரிய ஒளி.

மொட்டை மரங்களுக்கு யாரோ ஒருவர் ஆசையாகப் பின்னிய கம்பளி சட்டையை மாட்டி விடுகிறார். ஒரு சலிப்பான சிட்டி சாலை, சட்டென்று ஒரு ஆர்ட் கேலரியாக மாறுகிறது. இதை யான் பம்பிங் என்கிறார்கள். இதைப் பற்றி நாளை விரிவாகவே பார்ப்போம்.

கல் சுவர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்கள் இசையால் கரைகின்றன. அங்கே ராகம் தாளம் பார்க்கத் தேவையில்லை, உணர்வு போதும். அந்த இடமே மகிழ்ச்சியால் நிரம்புகிறது. இதையும் விரிவாக நாளை மறுநாள் பார்ப்போம்.

வாழ்க்கையில் சில சமயம் நாம் எடுக்கும் ராங் ரூட் தான் நம்மைச் சரியான இடத்திற்கு இட்டுச் செல்கிறது. இது ஓர் அபத்தம் போன்று தொன்றினாலும், சில நேரங்களில் சந்தோஷத்திற்குச் சரியாக செட் ஆகிறது.

அப்படித்தான், ரயில் நிலையத்தில் எதேச்சையாகச் சந்திக்கும் ஒரு முன்பின் தெரியாத நபர், அடுத்த இருபது வருடங்களுக்கு உங்கள் உற்ற நண்பராக மாறுகிறார். ரயில் சிநேகிதம் என்று இதைச் சாதாரணமாகக் கூறி விட முடியாது.

உலகம் முழுக்க இதுபோன்ற சின்னஞ்சிறு அற்புதங்கள் நிறைய சிதறிக் கிடக்கின்றன.

ஆஸ்பத்திரி வாசனையும் ஊசிப் பயமும் நிறைந்த வார்டுகளில், ஒரு ஜோக்கரின் சிரிப்பு மருந்தை விட வேகமாக வேலை செய்கிறது.

உடைந்து போன மண் பாண்டத்தை தங்கத்தால் ஒட்ட வைக்கும் ஜப்பானியக் கலையானது விரிசல்கள் பலவீனம் அல்ல, அவை அழகின் அடையாளம் என்பதைச் சொல்கிறது. மனதுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

அண்டர்கிரவுண்ட் மெட்ரோவில் முகம் தெரியாத மனிதர்கள் சட்டென்று கைகோர்த்து ஆடும் அந்தத் தன்னிச்சையான நடனம் மகிழ்ச்சியைக் கொப்புளிக்கச் செய்கிறது.

இப்படி நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பற்றி ஒவ்வொரு நாளாகப் பார்ப்போம்.

ஆக, விசயம் என்னவென்றால், வாழ்க்கை என்பது ஒரு ப்ரோக்ராம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் அல்ல. அது ஓர் அழகான குழப்பம். நீங்கள் எப்போது மிகச் சோர்வாக, இனி அவ்வளவுதான், என்று நினைக்கிறீர்களோ, அப்போதுதான் மேஜிக் உங்கள் கதவைத் தட்டும்.

கதவைத் திறந்து வையுங்கள். சந்தோஷம் எதிர்பாராத நேரத்தில் வரும்!

அது எப்படியெல்லாம் வருகிறது என்பதை ஒவ்வொரு நாளாகப் பார்ப்போம்.

*****

Sunday, 3 May 2026

சோலார் மாமாக்களும் இருட்டை விரட்டும் பாட்டிகளும்!

சோலார் மாமாக்களும் இருட்டை விரட்டும் பாட்டிகளும்!

கிராமப்புறங்களில் கரண்ட் போனால் நாம் இன்வெர்ட்டரைத் தேடுகிறோம். ஆனால், உலகெங்கும் 700 மில்லியன் பேருக்கு இன்னும் ஸ்விட்ச் என்பது வெறும் பிளாஸ்டிக் துண்டுதான். அழுத்தினாலும் விளக்கு எரியாது. இந்த இருட்டுப் பக்கத்தில்தான் ஒரு அமைதியான புரட்சி நடக்கிறது.

நடத்துவது யார்? கோட் சூட் போட்ட இன்ஜினியர்கள் அல்ல, படிக்காத, கிராமத்துத் தாய்மார்களும் பாட்டிகளும்தான். இவர்களை அன்போடு சோலார் மாமாக்கள் என்று அழைக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவின் ஜான்சிபார் தீவில் மட்டும் 65 பெண்கள் சோலார் இன்ஜினியர்களாக மாறியிருக்கிறார்கள். ரிசல்ட்? 29 கிராமங்களில் உள்ள 1,900 வீடுகளில் இன்று விளக்கு எரிகிறது.

இதே கதைதான் மத்திய அமெரிக்காவின் பெலிஸ் நாட்டிலும். பழங்குடியினப் பெண்கள் வெறும் சோலார் பேனல்களை மாட்டுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அதில் வரும் ரிப்பேர்களைச் சரி செய்கிறார்கள், மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுவரை உலகம் முழுக்க 1,75,000 சோலார் சிஸ்டம்களை இந்த மாமாக்கள் பொருத்தியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

இந்தியாவிலும் இந்த மேஜிக் நடந்துள்ளது. இராஜஸ்தானில் உள்ள பாரேபூட் கல்லூரியில் சோலார் பவர் தொடர்பாகத் தொடங்கப்பட்ட நிறுவனம், இப்போது 93 நாடுகளில் கிளை பரப்பியுள்ளது.

இங்கே பயிற்சி முறை ரொம்பவே டிபரண்ட்.

மொழி தெரியாவிட்டால் என்ன? எழுத்து வாசனையே இல்லாவிட்டால் என்ன?

எலக்ட்ரானிக் பார்ட்ஸ்கள் எல்லாவற்றையும் நிறங்கள் மற்றும் வடிவங்கள் மூலமாகவே அடையாளம் காணக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

சர்க்கியூட் போர்டில் எந்தக் கலர் வயரை எங்கே இணைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும்.

எங்கள் கிராமத்து குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய வெளிச்சம் வேண்டும், அதுதான் எங்கள் லட்சியம், என்கிறார்கள் சூரிய மின்சாரத்துக்காகச் சூரியன் போலப் பாடுபடும் இவர்கள்.

இந்தத் திட்டத்தின் ஒரு முக்கியமான ட்விஸ்ட் பாட்டிகள்தான். இந்தத் திட்டத்துக்காக இதற்கான முனைவோர்கள் தேடிப் பிடிப்பது நடுத்தர வயதுப் பெண்களையும் பாட்டிகளையும் மட்டும்தான்.

ஏன் என்கிறீர்களா?

பெண்கள் என்றால் பிள்ளைகளை வளர்க்கப் பிறந்தவர்கள் மட்டுமே, என்கிற முட்டாள்தனமான மைண்ட்செட்டை உடைக்க இது ஒரு வழி.

இளைஞர்கள் படித்தால் உடனே நகரத்திற்கு ஓடிவிடுவார்கள். ஆனால் பாட்டிகள் அப்படியல்ல, அவர்கள் தன் மண்ணை விட்டு எங்கும் போகமாட்டார்கள். சமூக சேவைக்கு அவர்கள் தான் பெஸ்ட் பெட்.

வெறும் சோலார் மட்டும் போதாது என்று அவர்களுக்கு டிஜிட்டல் அறிவு, வங்கிப் பரிவர்த்தனை போன்ற மற்ற விஷயங்களையும் கூட சொல்லிக் கொடுக்கிறார்கள்.

தொழில்நுட்பம் என்பது வெறும் மேலைநாட்டு ஏகபோகம் அல்ல. அது ஒரு பாட்டியின் கையில் இருக்கும் ஸ்க்ரூ டிரைவரிலும் இருக்கிறது. இருட்டு விலகிக் கொண்டிருக்கிறது!

நம் தமிழகத்துக் கிராமங்களும் இதை டிரை பண்ணலாம். இப்போதே மின்வெட்டு பத்து நிமிஷம், அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பாட்சா காட்ட ஆரம்பித்து விட்டது.

நமக்கும் சோலார் மாமாக்களும் சோலார் பாட்டிகளும் தேவைதானே!

*****

Saturday, 2 May 2026

இலாபம் + இலட்சியம் = உலகை மாற்றும் மேஜிக்!

இலாபம் + இலட்சியம் = உலகை மாற்றும் மேஜிக்!

உலகம் ஓடிக்கொண்டிருப்பது லாபத்திற்காக மட்டும்தான் என்று நினைத்தால் நீங்கள் அவுட் ஆப் டேட். இப்போது மார்க்கெட்டில் புது வரவுதான் சமூக தொழில் முனைவோர். காசு பார்ப்பது ஒரு கண் என்றால், சமூகத்திற்கு நல்லது செய்வது இன்னொரு கண்.

அர்ஜென்டினாவிற்குச் சுற்றுலா சென்ற பிளேக் மைகோஸ்கி அங்கிருந்த குழந்தைகளின் வெறும் கால்களைப் பார்த்தார். அவருக்குத் தோன்றியது ஓர் ஐடியா. ஒரு ஜோடி ஷூ வாங்கினால், இன்னொரு ஜோடி ஏழை குழந்தைக்கு இலவசம். பிசினஸில் இது ஒன் பார் ஒன் மாடல். ஓர் அபார்ட்மெண்டில் ஆரம்பித்த இந்த ஐடியா, இன்று 625 மில்லியன் டாலர் சாம்ராஜ்யம். லாபமும் நோக்கமும் கை கோர்த்தால் நடக்கும் அற்புதம் இது.

இதற்கெல்லாம் முன்பே பங்களாதேஷில் ஓர் அமைதிப் புரட்சி நடந்தது. முகமது யூனுஸ் ஏழைகளுக்கு லோன் கொடுக்க அடமானமே வேண்டாம், என்றார். வங்கி அதிகாரிகள் சிரித்தார்கள். ஆனால் அவர் ஒரு சின்ன குழுவிற்கு தன் கைக்காசான 27 டாலரைக் கடனாகக் கொடுத்தார். இன்று கிராமீன் வங்கி 10 மில்லியன் பேருக்கு 37 பில்லியன் டாலர் கடன் கொடுத்திருக்கிறது. 2006 இல் இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது ஒன்றும் ஆச்சரியமில்லை.

யூனுஸின் ஐடியாவை இன்டர்நெட்டுக்குக் கொண்டு வந்தவர் ஜெசிகா ஜாக்லி. அவர் ஆரம்பித்த கிவா இணையதளத்தில் யாரிடமும் கேட்கத் தேவையில்லை. உங்கள் கையில் 25 டாலர் இருந்தால் போதும், உலகின் ஏதோ ஒரு மூலையில் தொழில் தொடங்கக் காத்திருக்கும் ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுக்கலாம். இது தானம் இல்லை, கடன். அவர் திருப்பித் தரும்போது உங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் பாருங்கள், அதுதான் கிவா மற்றும் உங்கள் மகிழ்ச்சிக்கான அல்வா!

அன்பு என்பது சளி பிடிப்பது மாதிரி என்கிறார்கள் அன்பின் அனுபவவாதிகள். ஆனால் இது பாசிட்டிவ் வைரஸ். அதன் ரிசல்ட் எப்படியெல்லாம் இருக்கிறது தெரியுமா?

யாராவது நமக்கு ஒர் உதவி செய்தால், மூளையில் ஆக்ஸிடாசின் மற்றும் டோபமைன் சுரக்கும்.

அன்பு ஒரு செயின் ரியாக்சன் போலப் பரவும்.

ஒரு நற்செயலை நீங்கள் நேரில் பார்த்தால் கூட உங்கள் எனர்ஜி லெவல் எகிறும். அடுத்தவருக்கு உதவத் தோன்றும்.

அன்பினால் உதவி செய்து அப்படி ஹீரோவானவர்கள் நிறைய பேர். இவர்கள் ரீல் ஹீரோக்கள் அல்ல, ரியல் ஹீரோக்கள். யார் அவர்கள் என்கிறீர்களா?

முதலாமவர் பில் டிரேட்டன். இவர்தான் சோஷியல் ஆன்டர்ப்ரனர் என்ற வார்த்தையையே கண்டுபிடித்தவர். அசோகா அமைப்பு மூலம் உலகெங்கும் உள்ள ஐடியாவாதிகளுக்குத் தூணாக இருக்கிறார்.

இரண்டாமவர் மார்க் கோஸ்கா. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கே1 சிரிஞ்சை கண்டுபிடித்தார். மாசுபட்ட ஊசிகளால் பரவும் நோய்களிலிருந்து 10 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

மூன்றாமவர் ரேச்சல் பிராதென். வெறும் யோகா வீடியோக்கள் மட்டும் போடாமல், சமூக வலைத்தளம் மூலம் யோகா கேர்ள் அறக்கட்டளை தொடங்கி அருபா தீவின் பெண்களுக்கு உதவுகிறார்.

இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். உங்கள் ஊரிலும் இருப்பார்கள்.

அன்பு என்பது ஒரு ஸ்பார்க். அது ஓர் அறையையே வெளிச்சமாக்கும் சக்தி கொண்டது. அறையை மட்டுமல்ல, உலகையையேயும்தான்.

பிசினஸ் மூளையும், சமூக அக்கறையும் சேர்ந்தால் உலகம் இன்னும் அழகாகும். அடுத்த முறை யாரிடமாவது அன்பாக இருக்கும்போது நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பெரிய சங்கிலியின் முதல் கன்னி!

திருவள்ளுவரும் அதையேத்தானே சொல்கிறார், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று.

*****

Friday, 1 May 2026

நீலம் காத்து நிலம் காப்போம்!

நீலம் காத்து நிலம் காப்போம்!

உலகின் முதல் உயிர் கடலில்தான் சூல் கொண்டது. கடலே உயிர்களின் அடிப்படை. கடலையும் அதில் வாழும் உயிர்களையும் பாதுகாப்பது உலகின் ஒவ்வொரு உயிர்களையும் பாதுகாப்பது போன்றது.

கடல் இந்தப் பூமியின் முக்கால்வாசிப் பரப்பு. ஆனால் மனிதன் அதை வெறும் மீன் தொட்டியாகவே பார்த்தான். பிடித்துச் சாப்பிடலாம் அல்லது விற்றுப் பணம் பார்க்கலாம்.

இப்போது சீன் மாறுகிறது.

நேற்று வரை வலையோடு அலைந்தவர்கள் இன்று கேமராவோடும் கொள்கைகளோடும் அலைகிறார்கள். வேட்டைக்காரர் காவல்காரர் ஆகும் விந்தை இது. இவர்களால் கடலும் அங்கும் வாழும் உயிர்களும் பாதுகாக்கப்படுகிறது. ஆம், பூமியும் பாதுகாக்கப்படுகிறது.

ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ் படத்தில் வரும் கேப்டன் குவின்ட் ஞாபகம் இருக்கிறதா? நிஜ வாழ்க்கையில் அவருக்கு இன்ஸ்பிரேஷன் பிராங்க் முண்டஸ்.

50 வருஷமாக மாண்டாக் கடலில் ராட்சத சுறாக்களை வேட்டையாடியவர். ஆனால் கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட். தன் வாழ்நாளின் இறுதியில் அவர் சுறாக்களைக் காக்கப் போராடினார்.

தூண்டில் முள்ளை மாற்றுங்கள், சுறாக்களைக் கொல்லாதீர்கள், எனப் பிரச்சாரம் செய்தார். ஆக்ரோஷமான ஒரு வேட்டைக்காரர் ஆக்கபூர்வமான ஒரு பாதுகாவலராக மாறிய முதல் புள்ளி அவர்.

மடகாஸ்கரின் வெஸோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் மிஷெல் ஸ்ட்ரோகோப். படிப்பு கிடையாது, கடல் தான் எல்லாமே. சுறாக்களையும் கடல் ஆமைகளையும் வேட்டையாடித் தள்ளியவர், இன்று ஒரு வைல்ட் லைப் பிலிம் மேக்கர். வலைக்குப் பதில் லென்ஸ். கடல் இல்லாவிட்டால் நம் எதிர்கால சந்ததிக்கு எதுவுமே மிஞ்சாது, என்கிறார் மனிதர். பாயிண்ட் சரிதான்.

இந்த மாற்றம் உலகெங்கும் ஒரு வைரஸ் போலப் பரவுகிறது.

இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் நேற்றைய சுறா வேட்டைக்காரர்கள் இன்றைய கடல்சார் ஆசிரியர்கள்.

இத்தாலியின் புக்லியா பகுதியில் மீனவர்களே சேர்ந்து ஒரு கடல் காப்பகத்தை உருவாக்கினார்கள். ஆச்சரியம் என்னவென்றால், பாதுகாப்பு அதிகரித்ததும் அவர்களின் மீன்பிடி வருமானமும் கூடியது. இந்தக் கடல் எங்களுடையது, நாங்கள் தான் இதன் காவலர்கள், என்கிறார் மீனவர்கள்.

செயிண்ட் பார்தலெமி தீவைச் சேர்ந்தவர் டிடியர் லாப்லேஸ். 2011 இல் ஒரு படகு விபத்தில் சாவையும் வாழ்வையும் தொட்டுவிட்டு வந்தவர், தன் வாழ்க்கையை கோரல் எனப்படும் பவளப்பாறைகளை மீட்க அர்ப்பணித்தார். ஹோட்டல்கள், சொகுசுப் படகுகள் என எல்லோரிடமும் போய் கடலை நேசியுங்கள், என்று பாடம் எடுக்கிறார்.

கடலைப் பற்றி ஏட்டுச் சுரைக்காய் படிக்கும் விஞ்ஞானிகளை விட, கடலோடு வாழ்ந்த இந்த மீனவர்களுக்குத் தான் அதன் பல்ஸ் தெரியும். அவர்கள் தான் பாலங்கள். வணிகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நடுவே இருக்கும் பாலங்கள்.

பச்சை ஆமை அழகானது. ஆனால், அதன் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் நாம் அதை அழித்துக் கொண்டிருக்கிறோம். கடல் நேசகர்கள் மற்றும் காவலர்கள் செய்யும் மாற்றம் மற்றவர்களுக்கும் வந்தால் தான் கடல் பிழைக்கும். நாமும் பிழைப்போம்.

கடலையும் கடல் வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பது அவற்றை மட்டும் பாதுகாப்பதல்ல, நம்மையே நாம் பாதுகாப்பதாகும்.

கடல் இல்லையேல் பூமி உயிர்க்கோளமாக இருக்க வாய்ப்பில்லை. பூமி உயிர்க்கோளமாக இல்லையேல், நமக்கும் இந்தப் பூமியில் வேலையில்லை.

உங்களால் முடிந்தது, கடலுக்கு ஒரு பாலிதீனை அனுப்பாமல் இருங்களேன். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பாலிதீனும் கால்வாய்கள், ஆறுகள் என்று அடித்துச் செல்லப்பட்டுக் கடைசியில் கடலில்தான் சங்கமமாகின்றன.

ஒரே ஒரு பாலிதீன் உங்களால் இந்தக் கடலுக்குப் போகாமல் இருந்தால், நீங்களும் கடலின் பாதுகாவலர்தான். ஆம், நிலத்தில் இருந்து கொண்டும் உங்களால் கடலின் பாதுகாவலராக இருக்க முடியும்.

*****