Saturday, 5 April 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (06.04.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (06.04.2025)

1)  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 101 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன.

2)  போக்குவரத்து அபராதங்களைக் கட்ட தவறுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்வதற்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

3)  தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

4)  மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,700 ஆக அதிகரித்துள்ளது.

5)  கும்பகோணம் வெற்றிலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் தயாரிக்கப்படும் மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

6)  தங்கத்தின் விலை சவரனுக்கு 68 ஆயிரத்தைக் கடந்தது.

7)  நாடாளுமன்றத்தில் வக்ஃப் மசோதா நிறைவேறியது.

8)  காலநிலை மாற்றம் காரணமாகக் கண் அழற்சி நோயான ‘மெட்ராஸ் ஐ’ வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகமாகப் பரவி வருகிறது.

9)  இரண்டு நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்று வந்தார்.

10)  மூன்று நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்று வந்தார்.

11)  செயற்கை நுண்ணறிவுத் துறையில் 11900 கோடி முதலீட்டுடன் இந்தியா 10 ஆவது இடத்தில் உள்ளது.

12)  18 ஆண்டுகளுக்குப் பிறகு பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 262 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

13)  இந்தியப் பொருட்களுக்கு 27 சதவீத இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Education & GK News

1) 101 liver transplants have been successfully performed at Chennai Stanley Hospital.

2) The central government is set to introduce a scheme to temporarily cancel the driving licenses of those who fail to pay traffic fines.

3) 1.17 lakh students have been admitted to Tamil Nadu government schools in the last one month.

4) The death toll in the Myanmar earthquake has increased to 2,700.

5) The Kumbakonam betel leaf and Kanyakumari district Thovalai gem necklace has been given a geographical indication.

6) The price of gold has crossed 68 thousand per sovereign.

7) The Waqf bill has been passed in Parliament.

8) Due to climate change, the eye inflammation disease ‘Madras Eye’ is spreading 30 percent more than usual.

9) Prime Minister Narendra Modi was on a two-day official visit to Thailand.

10) Prime Minister Narendra Modi was on a three-day official visit to Sri Lanka.

11) India is ranked 10th with an investment of Rs 11900 crore in the field of artificial intelligence.

12) After 18 years, Bharat Sanchar Nigam Limited (BSNL) has made a profit of Rs 262 crore.

13) US President Donald Trump has ordered a 27 percent import duty on Indian goods.

ஏன் வேண்டும் மருத்துவக் காப்பீடு?

ஏன் வேண்டும் மருத்துவக் காப்பீடு?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றார்கள் நம் முன்னோர்கள்

எத்தனை சத்தியமான வாக்கியம் அது.

இன்று நோய்களுடன் போராடி மருத்துவமனை மற்றும் மருந்துகளுக்காகச் செலவிடும் தொகையை ஒப்பு நோக்கும் போது நம் முன்னோர்கள் சொன்னது எவ்வளவு தீர்க்கமானது என்பது புரிகிறது அல்லவா!

மகாத்மா காந்தியடிகளும், “ஆரோக்கியமே உண்மையான செல்வம், தங்கம் மற்றும் வெள்ளி அல்ல.” என்கிறார்.

மாரடைப்பு, பக்கவாதம், விபத்து போன்ற அவசர சிகிச்சை நிலைகளை நினைத்துப் பாருங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலை, மருத்துவ பரிசோதனைகளுக்காகத் திக் திக் என்று காத்திருக்கும் நேரம், முடிவில் எவ்வளவு என்று தெரியாத மருத்துவச் செலவை எதிர்கொள்ளும் நிலை என்று அந்நிலைகள் எவ்வளவு சோதனையானவை!

எந்த நோயிலும் நோயின் பாதிப்பு உடனடியாகத் தெரிவதில்லை. நோய் முற்றிய நிலையிலேயே தெரிகிறது. இது திடீரென நிகழ்வதால் அப்போது ஏற்படும் மருத்துவ பேரிடர் நிலையை எதிர்கொள்ள முடியாமல் பலர் நிலைகுழைந்து போய் விடுகின்றனர். நோயிலிருந்து மீண்டவர்கள் கூட மருத்துவச் செலவைப் பார்த்து மீண்டும் நோய்வாய்ப் படுகின்றனர்.

இதற்கு ஒரு தீர்வாக மருத்துவ காப்பீடு எடுப்பது பயன் தரும்.

எடுக்கும் மருத்துவக் காப்பீடு ஒருங்கிணைந்ததாக தீவிர நோய் பாதிப்பு மற்றும் தனிநபர் விபத்து போன்றவற்றையும் உள்ளடக்கிய முழுமையான காப்பீடாக இருக்க வேண்டும்.

மருத்துவ காப்பீட்டிற்காக சில ஆயிரங்களைச் செலவு செய்ய யோசித்தால், பின்னர் லட்ச கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு குடும்பத்தினருக்குத் தேவையான அளவுக்கு மருத்துவ காப்பீடு எடுப்பதும், நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொள்வதும் தற்போதைய சூழ்நிலையில் நலமாகும் என்கின்றனர் குடும்ப நிதி ஆலோசர்கள்.

வள்ளுவரும்,

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்” (குறள், 948)

என்கிறார். இன்றைய கால கட்டத்தில் இது மருத்துவக் காப்பீட்டிற்கும் பொருந்தும்.

*****

Friday, 4 April 2025

காளைச் சந்தையும் கரடிச் சந்தையும்!

காளைச் சந்தையும் கரடிச் சந்தையும்!

பங்குச் சந்தை ஒன்றுதான். அதில் இரண்டு விதமான சந்தைகள் இருப்பதாகக் கூறுவார்கள். ஒன்று காளைச் சந்தை. மற்றொன்று கரடிச் சந்தை. முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் சந்தையைக் காளைச் சந்தை என்பார்கள். பின்னோக்கி விழுந்து கொண்டிருக்கும் சந்தையைக் கரடிச் சந்தை என்பார்கள்.

இந்த இரண்டுச் சந்தையிலும் என்ன நடக்கும்?

இவ்விரு சந்தையிலும் முதலீட்டாளர்களும், பங்கு வர்த்தகர்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை இங்கே காண்போம்.

காளைச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாக நினைத்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில், கரடிச் சந்தையில் தங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்று புலம்புகிறார்கள்.

காளைச் சந்தையில் பங்குகளை முக்கியமான சொத்துகள் என்பவர்கள், கரடிச் சந்தையில் பங்குச் சந்தையைத் சூதாட்டக் களமாகக் கூறுகிறார்கள்.

காளைச் சந்தையில் சந்தையின் சிறப்பான செயல்பாட்டுக்குத் தானே காரணம் என ஆளும் அரசு சொல்லும். கரடிச் சந்தையில் சந்தை வீழ்ச்சிக்குக் காரணம் சர்வதேச காரணங்கள் என்று சொல்லும்.

காளைச் சந்தையில் பங்குகளை வாங்குபவர்கள் மட்டுமே இருப்பார்கள். கரடிச் சந்தையில் பங்குகளை விற்பவர்கள் மட்டுமே இருப்பார்கள்.

காளைச் சந்தையில் எல்லாரும் தங்களை நீண்ட கால முதலீட்டாளர்கள் என்பார்கள். கரடிச் சந்தையில் அப்படி சொன்னவர்களைக் காண முடியாது.

காளைச் சந்தையின் போது பலவித விருந்துகள் நடக்கும். கரடிச் சந்தையில் சிங்கிள் டீக்கே சிங்கிஅடிக்கும் நிலை காணப்படும்.

காளைச் சந்தையில் அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்குவார்கள். கரடிச் சந்தையில் குறைந்த விலை என்றாலும் பங்குகளை வாங்க மாட்டார்கள்.

காளைச் சந்தையில் இரட்டை இலக்கத்தில் லாப சதவீதம் இருக்கும். கரடிச் சந்தையில் இரட்டை இலக்கத்தில் நட்ட சதவீதம் இருக்கும்.

காளைச் சந்தையில் கடன் வாங்கியாவது முதலீடு செய்வார்கள். கரடிச் சந்தையில் கையில் காசு இருந்தாலும் முதலீடு செய்ய மாட்டார்கள்.

இப்படித்தான் இரவு – பகல், இன்பம் – துன்பம், பிறப்பு – இறப்பு என்பது போல பங்குச் சந்தையில் காளைச் சந்தையும் கரடிச் சந்தையும் இரண்டு துருவங்களாக இருக்கின்றன. இதை நன்கு புரிந்து கொள்பவர்கள் பங்குச் சந்தையில் நீடித்து நிற்கிறார்கள். புரிந்து கொள்ளாமல் தவிப்பவர்கள் பங்குச் சந்தையால் பாதிக்கப்பட்டு விடுகிறார்கள்.

*****

Thursday, 3 April 2025

எட்டாம் வகுப்பு இயல் – 9 - திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 9

திருப்புதல்

1) மனிதர்களின் இயல்புகளாகக் கன்னிப்பாவை கூறுவன யாவை?

1)  அன்பு

2)  அறிவு

3)  கருணை

4)  இரக்கம்

5)  பொறுமை

6)  ஊக்கம்

7)  ஆராய்ந்து தெளிதல்

ஆகியவற்றை மனிதர்களின் இயல்புகளாகக் கன்னிப்பாவை கூறுகின்றது.

 

2) தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?

1)  உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் ஒருவர் மாறினால் தோல்வியும் தூண்டுகோலாகும்.

2)  தோல்வி தூண்டுகோலாகும் போது வெற்றி உருவாகி வாழ்வில் ஒளியேற்றும்.

 

3) அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக் கொண்டார்?

1)  மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர் அம்பேத்கர் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார்.

2)  தம் ஆசிரியர் மீது கொண்ட அன்பினாலும் மதிப்பினாலும் தம் பெயரை அம்பேத்கர் என மாற்றிக் கொண்டார்.

 

4) இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?

1)  1947 ஆகஸ்ட் 15 இல் நம் நாடு விடுதலை பெற்றது. அம்பேத்கர் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2)  அம்பேத்கர் அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

3)  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

4)  அம்பேத்கர் பல நாடுகளின் அரசியலமைப்புகளை நன்கு ஆராய்ந்து இந்திய அரசியலமைப்பை உருவாக்கினார்.

5)  அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு மிகச் சிறந்த சமூக ஆவணமாகப் போற்றப்படுகிறது.

 

5) பிறிது மொழிதல் அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

1)  உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது பிறிது மொழிதல் அணியாகும்.

2)  (எ.கா)   கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

 

6) தான், தாம் என்பதன் வேறுபாடு யாது?

1)  தான் என்பது ஒருமையைக் குறிக்கும்.

2)  தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

*****

எட்டாம் வகுப்பு - இயல் – 8 - திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 8

திருப்புதல்

1) ஒன்றே குலம் – மனப்பாடப் பகுதி

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும் கதியில்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே

 

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

 

2) குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?

1)  இறைவன் மேலான பரம்பொருளாய் உள்ளத்தில் விளங்க வேண்டும்.

2)  தீய எண்ணங்களை அழித்து அறிவு ஒளியை வழங்க வேண்டும்.

3)  பணத்தின் மீதுள்ள ஆசையை அறுத்திட உதவிட வேண்டும்.

4)  உண்மை அறிவை இறைவன் உணர்த்திட வேண்டும்.

5)  ஐம்புலன்களை அடக்கி ஆளும் படிப்பைத் தர வேண்டும்.

 

3) அயோத்திதாசரின் ஐந்து பண்புகள் யாவை?

1)  நல்ல சிந்தனை

2)  சிறப்பான செயல்

3)  உயர்வான பேச்சு

4)  உவப்பான எழுத்து

5)  பாராட்டத்தக்க உழைப்பு

 

4) அரசியல் விடுதலை பற்றி அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?

1)  அரசியல் விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமன்று.

2)  அரசியல் விடுதலை என்பது மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஆகும்.

3)  சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக் கூடாது.

4)  சுயராஜ்ஜியம் என்பது மக்கள் வாழ்வில் சமூக பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டும்.

5)  மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டால்தான் நாடு முன்னேறும்.

 

5) பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பா நான்கு வகைப்படும். அவையாவன,

1)  வெண்பா

2)  ஆசிரியப்பா

3)  கலிப்பா

4)  வஞ்சிப்பா

 

6) நண்பர்களின் இயல்பை அளந்து காட்டும் அளவுகோல் யாது?

1)  நமக்கு வரும் துன்பத்திலும் ஒரு நன்மை உண்டு.

2)  துன்பமே நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.

*****

மூன்றாம் பருவ வினாத்தாள் கட்டணத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழ்

மூன்றாம் பருவ வினாத்தாள் கட்டணத்திற்கான

பயன்பாட்டுச் சான்றிதழ்

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ வினாத்தாள் நகலெடுக்க வழங்கப்படும் தொகைக்கான பயன்பாட்டுச் சான்றிதழ் மாதிரியைக் கீழே காண்க.

Wednesday, 2 April 2025

தூய்மைப் பணியாளர் ஊதியப் பட்டுவாடா படிவம்

தூய்மைப் பணியாளர் ஊதியப் பட்டுவாடா படிவம்

பள்ளியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளருக்கான ஊதிய பட்டுவாடா படிவத்தின் மாதிரியைக் கீழே காண்க.