அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 53
கோல்டன் டானின் அட்டகாசங்கள்!
1900களின் விடியல்.
ஒரு பக்கம் தொழிற்புரட்சி, நீராவி எஞ்சின்கள், மின்சார விளக்குகள்
என்று அறிவியல் உலகம் க்ளிக் அடித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மனிதனின் தொன்மையான
பயங்களும், இருட்டு அறைகளின் மர்மங்களும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சத்தமில்லாமல்
கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன.
விஞ்ஞானம் எல்லாவற்றிற்கும் விடை சொல்லிவிடும் என்று மனிதன்
நினைத்தபோதே, ஆன்மா
எங்கே போகிறது? பிரபஞ்சத்தின் ரகசிய சாவி யாரிடம் இருக்கிறது? என்பன
போன்ற கேள்விகள் மனித மூளையின் ஏதோ ஒரு மூலையில் அரிப்பு எடுக்க வைத்தன. அந்த அரிப்பின்
விளைவுதான் ஹெர்மெடிக் ஆர்டர் ஆப் தி கோல்டன் டான்.
சுருக்கமாகச் சொன்னால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லண்டனில்
இயங்கிய ஹை டெக் மாந்திரீகக் கிளப் மற்றும் லண்டனின் அமானுஷ்யக் கூடம்.
லண்டன் வீதிகளில் பனிப்புகை மண்டிக் கிடக்கும் மாலை நேரங்களில்,
கருப்பு அங்கி அணிந்த சிலர் ஒரு ரகசிய அறையில் கூடுவார்கள். அங்கே, மேஜை மீது தாரோ
கார்டுகள், எகிப்திய குறியீடுகள், யூதர்களின் கபாலா வரைபடங்கள் இருக்கும்.
அங்கே என்ன
நடந்தது தெரியுமா?
சாமானிய மக்களுக்கு இது வெறும் பில்லி சூனியம் அல்லது மாந்திரீகம்.
ஆனால், அவர்களுக்கு அது ஓர் அறிவியல். பிரபஞ்ச ஆற்றலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்
முயற்சி. எகிப்தியக் கடவுள்களை அழைப்பது, மனதைக் கொண்டு தூரத்திலிருக்கும் பொருள்களை
அசைப்பது, எதிர்காலத்தைக் கணிப்பது எனத் தங்களின் ஆராய்ச்சிகளை அங்கே நடத்தினார்கள்.
இந்தக் கிளப்பின்
விஐபி உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா?
இந்த அமைப்பின் சுவாரசியமே அதில் அங்கத்தினராக இருந்த நபர்கள்தான்.
ஏதோ வேலைவெட்டி இல்லாதவர்கள் கூடிய இடமல்ல இது. அக்காலகட்டத்தின் ஆகச்சிறந்த அறிவுஜீவிகளும்
எழுத்தாளர்களும் இதில் மூழ்கியிருந்தார்கள்.
நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து கவிஞர் யேட்ஸ். இவர் வெறும் பார்வையாளர்
இல்லை; இந்த அமைப்பின் உயர்நிலைப் பயிற்சியாளர்! இவரது கவிதைகளில் வரும் பல குறியீடுகள்
இந்த ரகசிய கூட்டங்களில் கற்றுக் கொண்டவைதான்.
டிராகுலா நாவலை எழுதி உலகை மிரட்டியவர் ப்ராம் ஸ்டோக்கர். கோல்டன்
டான் அமைப்பின் இருண்ட அறைகளில் அவர் கண்ட காட்சிகளும், கேட்ட மாந்திரீகக் கதைகளும்தான்
இவரது டிராகுலா உருவாக முக்கியக் காரணியாக இருந்தன.
"உலகின் மிக மோசமான மனிதர்" என்று பத்திரிகைகளால்
வர்ணிக்கப்பட்டவர் ஆலிஸ்டர் க்ரௌலி. பின்னாளில் இந்த அமைப்பை உடைத்து, தன் சொந்த மாந்திரீகப்
பிரிவைத் தொடங்கிய கலகக்காரர். இவரும் இந்த அமைப்பின் ஓர் உறுப்பினர்.
ஏன் இப்படி
என்கிறீர்களா?
அறிவியல் வளர வளர மனிதனுக்கு மர்மங்களின் மீதான மோகம் குறைய
வேண்டும், இல்லையா? ஆனால் நடந்தது தலைகீழ். அறிவியல் தரும் தெளிவை விட, அமானுஷ்யம்
தரும் அந்த சஸ்பென்ஸ் மனித மூளைக்குப் பிடித்திருந்தது.
அப்புறம் அந்த
அமானுஷ்ய பாடத்திட்டம்
அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
கோல்டன் டான் சும்மா மந்திரம் மட்டும் ஓதவில்லை. அவர்களுக்கு
என்று ஒரு தெளிவான பாடத்திட்டம் இருந்தது!
அப்பாடத்திட்டம் என்னவென்றால்,
தாரோ கார்டுகள் எனும் 78 கார்டுகளில் இருக்கும் குறியீடுகளை
வைத்து மனித மனத்தின் ஆழத்தையும், பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் பகுப்பாய்வு செய்வது.
கபாலா என்பது யூதர்களின் பண்டைய ஆன்மீகக் குறியீட்டு முறை.
ஜீவ விருட்சம் என்ற வரைபடம் மூலம் கடவுளையும் மனிதனையும் இணைக்கும் பாதையைத் தேடுவது.
ஆஸ்ட்ரல் டிராவல் எனப்படும் உடலை விட்டு உயிரை வெளியேற்றி,
வேறு உலகங்களுக்குப் பயணம் செய்யும் பயிற்சிகள்.
அடுத்து,
முடிவும் ரகசியங்களின்
அழிவும்
அதாவது இந்த அமைப்பின் என்ட் கார்டு.
எந்த ஒரு ரகசிய அமைப்பிலும் ஈகோ நுழைந்தால் என்ன ஆகுமோ, அதுதான்
கோல்டன் டானுக்கும் நடந்தது. உறுப்பினர்களுக்குள் யார் பெரிய ஆள் என்ற மோதல், ஆலிஸ்டர்
க்ரௌலியின் அத்துமீறல்கள், அமைப்பின் ரகசிய ஏடுகள் வீதிக்கு வந்தது என 1900களின் தொடக்கத்திலேயே
அமைப்பு சிதறத் தொடங்கியது.
ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற தடம் இன்னமும் அழியவில்லை. இன்றைக்கு
நாம் ஹாலிவுட் படங்களில் பார்க்கும் சூனியக்காரர்கள், ரகசியச் சின்னங்கள், தாரோ கார்ட்
ஜோசியம் என எல்லாவற்றிற்கும் வித்திட்டது இந்த கோல்டன் டான்தான்.
இப்போது மட்டும்
என்ன மாறிவிட்டது?
தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும்கூட,
கூகுளில் ஹௌ டூ ஜாய்ன்
கோல்டன் டான்? என்று தேடும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக மொத்தத்தில்
மனித மனம் எப்போதும் ஒரு ரகசியத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை!
- அட்ரஸைத் தேடுவோம்!
*****








