Thursday, 30 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.07.2026

1) எல் நினோ விளைவுகளை ஆராய தமிழக அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது.

2) இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் முதலிடத்தில் உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரண்டாம் இடத்தில் உள்ளார். தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் மூன்றாமிடத்தில் உள்ளார்.

3) தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

4) வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

5) அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது.

Education & GK News

1) The Tamil Nadu government has constituted an expert committee to examine the effects of El Nino.

2) Karnataka Chief Minister D.K. Shivakumar tops the list of India's wealthiest Chief Ministers. Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu ranks second, while Tamil Nadu Chief Minister C. Joseph Vijay holds the third spot.

3) A bill classifying the disrespect of the national song 'Vande Mataram' as a punishable offense has been passed in Parliament.

4) The deadline for filing income tax returns ends today.

5) The US Federal Reserve has announced that there will be no change to its interest rates.

மெட்ராஸில் இறக்குமதி செய்யப்பட்ட ஆவிகள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 37

மெட்ராஸில் இறக்குமதி செய்யப்பட்ட ஆவிகள்!

1942, சென்னை அப்போது மெட்ராஸ்.

இரண்டாம் உலகப்போர் படுஜோராக நடந்துகொண்டிருந்த காலம்.

மெட்ராஸ் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசக்கூடும் என்ற பயத்தில் ஊரே பிளாக்அவுட் செய்யப்பட்டு, இருளில் மூழ்கியிருந்தது.

மயிலாப்பூர் மாட வீதியில் இருந்த அந்தப் பழமையான வீட்டின் திண்ணையில், உட்கார்ந்திருந்தார் சுந்தரம். அவர் கையில் ஒரு காகிதம். அவரது ஒரே மகன் ரகுபதி, இந்திய ராணுவத்தில் சேர்ந்து பர்மியப் போர்க்களத்திற்குச் சென்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

கடைசியாக வந்த தபால், தந்தி அல்ல, ஒரு மெளனம்.

சுந்தரத்தின் நண்பர் கணபதி, வீட்டின் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தார். அவர் கையில் ஒரு சதுர மரப்பலகை இருந்தது.

"என்ன கணபதி இது? ஏதோ புதுசா இருக்கு?"

"இதுக்கு பேரு ஒய்ஜா போர்டு சுந்தரம். மவுண்ட் ரோடு சாமிகண்ணு செட்டியார் கடையில அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான விளையாட்டுப் பொருள்னு விக்கிறான். ஆனா இது விளையாட்டு மட்டும் இல்லை!" கணபதியின் குரல் தாழ்ந்தது.

"அப்படின்னா?"

"இதைக் வச்சு ஆவிகளோட பேசலாம். போர்க்களத்துல இருக்கிற உன் பையன் சௌக்கியமா இருக்கானான்னு இந்த ஆவிங்ககிட்டயே கேட்டுடலாம்!"

சுந்தரத்திற்கு அறிவியல் பிடிக்கும். விவேகசிந்தாமணியும், அறிவியல் புத்தகங்களும் படித்தவர்.

"என்ன கணபதி லூசுத்தனம்! ஒரு மரப்பலகை எப்படி இறந்தவங்களோடவோ, தூரத்துல இருக்கிறவனோடவோ பேசும்?" என்றார்.

"ட்ரை பண்ணிப் பாப்பாமே. உனக்கு உன் பையனைப் பத்தின கவலை இல்லையா?" கணபதியின் கேள்வி சுந்தரத்தின் அறிவியல் வாதத்தை அடக்கியது. மகனின் முகம் கண்ணீராகக் கலங்கியது.

இரவு 10 மணி.

மெட்ராஸே இருட்டில் மூழ்கியிருக்க, அந்த அறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்தது.

நடுவே பலகை. அதில் A to Z எழுத்துக்கள், கீழே 'ஆம்', 'இல்லை'.

அந்தச் சிறிய முக்கோணக் கண்ணாடித் துண்டின் மீது இருவரும் ஆள்காட்டி விரலை வைத்தார்கள்.

"யாராவது ஆவி இருந்தா உள்ளே வரலாம்." கணபதி மந்திரம் போலச் சொன்னார்.

சுந்தரத்தின் இதயம் படபடவென அடித்தது. "இது சும்மா ஏமாற்று வேலை" என்று மூளை சொன்னாலும், "ரகுபதி சௌக்கியமா இருக்கான்னு ஒரு வார்த்தை வராதா?" என்று இதயம் ஏங்கியது.

திடீரென, அந்த பிளான்செட் நகரத் தொடங்கியது!

சுந்தரம் திடுக்கிட்டார். "கணபதி! நீ நகர்த்தறியா?"

"இல்ல சுந்தரம்! நான் சும்மாதான் விரலை வச்சிருக்கேன். நீ நகர்த்தறியா?"

பிளான்செட் வேகமாக நகர்ந்து எழுத்துக்களைத் தொட்டது.

R... A... G... H... U...

சுந்தரத்தின் உடம்பில் ஒரு மின்சாரம் பாய்ந்தது. "என் பையன் பேரு! கணபதி! அவன் நல்லா இருக்கானான்னு கேள்!"

பிளான்செட் மீண்டும் நகர்ந்தது.

S... A... F... E...

"அவன் பாதுகாப்பா இருக்கானாம்!" கணபதி கத்தினார்.

சுந்தரத்தின் கண்ணிலிருந்து நீர் வழிந்தது. அந்த நொடியில், அவருக்கு ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவமும் நினைவில்லை, நியூட்டனின் விதிகளும் நினைவில்லை. ஒரு மரப்பலகை கொடுத்த ஆறுதல், எந்த அறிவியலாலும் தர முடியாததாக இருந்தது சுந்தரத்துக்கு.

மறுநாள் காலை.

சுந்தரம் காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, வீட்டு வாசலில் தபால்காரர் மணி அடித்தார்.

ஒரு தந்தி.

சுந்தரத்தின் கைகள் நடுங்கின. நேற்றைய ஒய்ஜா போர்டு நினைவுக்கு வந்தது. பதற்றத்துடன் பிரித்துப் படித்தார்:

"ராணுவ முகாமிலிருந்து தந்தி : ரகுபதி பர்மியப் போரில் காயமின்றி தப்பித்து, தற்போது கல்கத்தா ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பாக உள்ளார்."

சுந்தரத்திற்கு மூச்சு திணறியது. நேற்றைய பிளான்செட் சொன்னது உண்மைதானா? அப்படியானால் உண்மையிலேயே ஆவிகள் இருக்கின்றனவா?

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Wednesday, 29 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.07.2026

1) +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

2) நாடாளுமன்றத்தில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா நிறைவேறியது.

3) தமிழகத்துக்குக் காவிரி நீர் வழங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மேல்முறையீடு செய்ய உள்ளது.

4) மேற்காசியாவில் மீண்டும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் மோதல் வெடித்துள்ளது.

5) ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

Education & GK News

1) Original Class 12 mark sheets are being issued at schools starting today.

2) The bill to curb examination malpractices has been passed in Parliament.

3) Karnataka is set to appeal to the Supreme Court against the release of Cauvery water to Tamil Nadu.

4) Conflict has once again erupted between the US and Iran in West Asia.

5) Eighteen people have lost their lives in an earthquake in Japan.

அரசிக்கும் உண்டு ஆவி நம்பிக்கை!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 36

அரசிக்கும் உண்டு ஆவி நம்பிக்கை!

இங்கிலாந்து ராணி விக்டோரியா என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த கம்பீரமான கறுப்பு உடை, இறுகிய முகம், அப்புறம் சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்கிற பில்டப். ஆனால், அந்த இரும்புக் தலைவிக்குள்ளும் ஒரு பயங்கரமான ஆவி நம்பிக்கை ஒளிந்திருந்தது என்பதுதான் வரலாறு நமக்குத் தரும் சுவாரஸ்யமான ட்விஸ்ட்.

காரணம்?

அவர் புருஷன் ஆல்பர்ட்!

1861 இல் ஆல்பர்ட் டைபாய்டு காய்ச்சலில் இறந்தார். அவ்வளவுதான், விக்டோரியா மேடத்தின் உலகமே ஸ்தம்பித்துப் போனது. கணவர் இறந்த துக்கத்தில், அடுத்த நாற்பது வருஷத்துக்கு மேல் கறுப்பு டிரெஸ்ஸைத் தவிர வேறெதையும் அவர் தொடவே இல்லை.

இங்கேதான் சுவாரஸ்யம் ஆரம்பிக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லண்டனில் ஸ்பிரிச்சுவலிசம்  என்கிற ஆவி உலக ஆராய்ச்சி செம பேமஸ். மேஜையைத் தட்டுவது, விளக்கை அணைப்பது, "ஆவியே வா! ஆவியே வா!" என்று சொம்பு வைத்து அழைப்பது என ஊரே பிஸியாக இருந்தது.

நிலைமை அப்படியிருக்க, என்னதான் இருந்தாலும் பிரிட்டனின் அரசியும் சும்மா இருப்பாரா?

"ஆல்பர்ட் அங்க நல்லா இருக்காரா? என்னைப் பத்தி என்ன நினைக்கிறார்?" என்று ஆவிகளோடு பேசுபவர்களை அரண்மனைக்கே வரவழைத்து ஆவி கான்பரன்ஸ் நடத்தும் அளவுக்குப் போய் விட்டார்.

அதையும் தாண்டி ஜான் பிரவுன் என்ற வேலைக்காரர் மூலமாக ஆல்பர்ட்டின் ஆவி கூடவே இருப்பதாகவே நம்பி வாழ்ந்தார். சுருக்கமாகச் சொன்னால், விக்டோரியாவுக்கு ஆல்பர்ட் ஒரு கணவர் மட்டும் இல்லை, ஓர் எடர்னல் ஆப்ஸெஷனும் கூட.

இந்தக் கதையிலேயே மாஸ்டர் பீஸ் சீன் எது தெரியுமா? இங்கிலாந்தின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி செத்துக்கொண்டிருந்த தருணம்தான்!

டிஸ்ரேலிக்கு அரசியைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும். ராணியின் இந்த ஆவி மயக்கத்தை வைத்துத்தான் அவர் அரசியலில் பல காய்களை நகர்த்தியிருந்தார். ஆனால், 1881 இல் டிஸ்ரேலி தனது மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, ராணி விக்டோரியா அவரை நேரில் வந்து பார்க்க ஆசைப்பட்டார்.

சாதாரண ஆளாக இருந்தால் "அய்யோ, மகாராணியே வர்றாங்களா!" என்று நெஞ்சம் நெகிழ்ந்து, இதயம் மகிழ்ந்து போயிருப்பான்.

ஆனால், டிஸ்ரேலி ஓர் அல்டிமேட் ஸ்டார் அஜித்தைப் போல. அவர் மெதுவாகத் தலைநிமிர்ந்து, பக்கத்தில் இருந்தவர்களிடம் சொன்னாராம், "வேண்டாம்ப்பா. ராணியை என்னை வந்து பார்க்க வேண்டாம்னு சொல்லிடுங்க. வந்தா கண்டிப்பா அப்படியே ஆல்பர்ட்டைப் பார்த்தா இந்த மெசேஜைச் சொல்லிடு டிஸ்ரேலின்னு ஏதாச்சும் லெட்டர் குடுத்து அனுப்புவார்! செத்த பின்னும் என்னால சேவகம் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது"

மரணத்தின் வாசலில் நின்று கொண்டு, இங்கிலாந்து ராணியையே இந்த அளவுக்குக் நக்கலடிக்க ஒரு தனித் தைரியம் வேண்டும்!

ஆக விசயம் இதுதான்.

அரசியோ, சாமானியனோ காதல் அளவுக்கு மிஞ்சினால் அது ஆவி உலக ஆராய்ச்சி வரை கொண்டு போய்விடும் என்பதற்கு விக்டோரியாவே சாட்சி.

டிஸ்ரேலி மட்டும் அந்த மெசேஜைக் கொண்டு போய் ஆல்பர்ட்டிடம் கொடுத்திருந்தால், ஆல்பர்ட் கண்டிப்பாக, "யோவ் டிஸ்ரேலி. அங்கதான் நிம்மதி இல்லைன்னு இங்க வந்தா, இங்கேயும் மெசேஜ் அனுப்பி என் தூக்கத்தைக் கெடுக்குறாளா உங்க ராணி?" என்றுதான் கதறியிருப்பார்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Tuesday, 28 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.07.2026

1) தமிழகத்திற்கு 15 நாட்களுக்குத் தினமும் 3500 கன அடி நீரைத் திறந்து விடுமாறு காவிரி ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2) மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று முதல்வர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

3) விவசாயத்தில் யூரியாவுக்குப் பதில் அம்மோனியாவைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

4) கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் குண்டு எறிதலில் ஷர்மிளா தங்கம் வென்றுள்ளார்.

5) தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கக் கூடும்.

Education & GK News

1) The Cauvery Water Regulation Committee has ordered the release of 3,500 cubic feet of water daily to Tamil Nadu for 15 days.

2) Chief Minister C. Joseph Vijay has written a letter urging the Prime Minister to intervene in the Mekedatu dam issue.

3) The Central Government has granted permission to use ammonia instead of urea in agriculture.

4) Sharmila has won the gold medal in the shot put event at the Glasgow Commonwealth Games.

5) Temperatures are likely to rise in Tamil Nadu over the next three days.

கடைசி டாக் டைம்!

அமானுஷ்யங்களின் முகவரி

அட்ரஸ் – 35

கடைசி டாக் டைம்!

அன்று வடபாதிமங்கலம் வி.எஸ்.டி. காலனியில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

சுந்தராம்பாள் அம்மாளின் கணவர் சுந்தரேசன் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. ஆனால், சுந்தராம்பாள் அணிந்திருந்த சுங்கடிப் புடவையிலிருந்து மனது வரை துக்கத்தின் கருமை நிறம் இன்னும் மாறவில்லை. சுந்தரேசன் மறைந்ததிலிருந்து அவர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.

காலையில் அஞ்சப்பர் அசல் அக்மார்க் சாம்பிராணி வாசம், மாலையில் ஸ்பிரிச்சுவலிசம் எனப்படும் ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் பயிற்சி என சுந்தராம்பாள் வாழ்க்கை மாறி விட்டது.

அந்தக் காலத்தில் வடபாதிமங்கலம் பகுதியில் ஜோதிடம், ஆவி உலகம், கர்ம மோட்சம் எனப் பெரிய வியாபாரமே நடந்து வந்தது.

சுந்தராம்பாளின் துக்கம் எந்த அளவுக்கு உச்சக்கட்டத்தில் இருந்ததென்றால், அவர் எப்போதும் ஆவிகளோடு பேசிக்கொண்டுதான் இருப்பார்.

"ஏண்டி வசந்தா, அந்த டீத்தூள் டப்பாவைக் கொஞ்சம் நகர்த்தி வை," என்று யாருடனும் சொல்ல மாட்டார்.

"சுந்தரேசா. அந்தத் தேயிலைத் தூள் டப்பா உங்கள் கைக்கு அருகில் தானே இருக்கும், கொஞ்சம் அசைத்து வையுங்களேன்," என்று காலியான காற்றைப் பார்த்துத்தான் பேசுவார்.

இந்தக் கூத்துகளையெல்லாம் பக்கத்து வீட்டு பஞ்சாபகேசன் வெகுநாட்களாகக் கவனித்துக் கொண்டே இருந்தார்.

பஞ்சாபகேசனுக்கு உடல்நலம் குன்றியது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கூடவே முதிய வயதில் வரும் அனைத்து நோய்களும் சேர்ந்து, "இனிமேல் ஆளை விடுங்கள்" என்ற அளவிற்குப் போக, பஞ்சு திருவாரூர் டிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அனைவரும் கைவிரித்து விட்டார்கள்.

இன்னும் இரண்டு மணி நேரம்தான் என இறுதி நேரம் கணிக்கப்பட்டது.

ஊர் மக்கள் அனைவரும் பஞ்சாபகேசனைப் பார்க்க மருத்துவமனையில் வரிசை கட்டி நின்றார்கள்.

இந்தச் செய்தி சுந்தராம்பாள் அம்மாளின் காதுக்கும் எட்டியது. உடனே அவரும் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாரானார்.

செய்தி பஞ்சாபகேசனின் காதுக்கு எட்டியது. ஆக்சிஜன் முகமூடி அணிந்திருந்தவர், அருகில் நின்ற தன் மகன் செந்திலின் கையைப் பிடித்து இழுத்தார்.

"டேய் செந்தில்!"  அவர் குரல் த தடுமாறியது.

"சொல்லுங்கப்பா. சுந்தராம்பாள் அத்தெ உங்களப் பார்க்க வருகிறாராம். கடைசி நேரத்தில ஆசீர்வாதம் வாங்கணுமாம்."

பஞ்சாபகேசன் பதறிப்போய்க் கண்களை உருட்டினார். ஆக்சிஜன் முகமூடியைக் கழற்றிப் போட்டுவிட்டு, "வேண்டாம்டா சாமி! அவளை உள்ளே விட்டுடாதீங்க!" என்று கத்த முயன்றார்.

"ஏன்ப்பா? அத்தெ உங்களப் பார்த்து நாலு நல்ல வார்த்தைகள் சொல்லிட்டுப் போகட்டுமே?"

"அடேய் அவள் உள்ளே வந்து என்னைப் பார்த்து ஆறுதல் சொல்ல மாட்டாள்டா! பஞ்சு, நீ எப்படியும் இன்னும் அரை மணி நேரத்தில மேலோகத்திற்குப் போயிடுவே. அங்கெ சுந்தரேசனைப் பார்த்தா, அவரிடம் இந்தத் தாம்பூலப் பையையும், போறப்ப மறந்துட்டுப்போன இந்த மியாமி குஷன் செப்பலையும் கொடுத்துடு. அப்புறம் நான் இன்னைக்குச் செய்த வத்தக்குழம்பு நல்லா இருந்துச்சான்னு கேட்டு எனக்குக் கனவில வந்து சொல்லுன்னு எங்கிட்டெ பார்சல் கொடுத்து அனுப்புவாள்டா! நான் அங்கப் போய் நிம்மதியா இருக்க முடியாது. அங்கேயும் என்னை அவ புருஷனுக்குக் கூரியர் பாயா மாத்திடுவாள்டா. எனக்கு அந்தக் கூரியர் பாய் வேலை வேண்டாம்டா. கதவைப் பூட்டுங்கடா முதலில்!" என்று கூறிவிட்டு, பஞ்சாபகேசன் தன் கடைசி மூச்சை விட்டு உயிர் நீத்தார்.

மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த சுந்தராம்பாள் அம்மாள், "அடடா பஞ்சு போய்ட்டானா? இரு, உடனே சுந்தரேசனை ஓய்ஜா போர்டு வெச்சு கூப்புட்டு, பஞ்சு அங்க நல்ல விதமா போய்ச் சேர்ந்துட்டானான்னு கேட்போம்." எனக் கூற, பஞ்சாபகேசனின் ஆவி அந்த இடத்திலிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தது!

சுந்தராம்பாள் சாதாரண மனுஷிதானே. அதில் ஒன்றும் தப்பில்லை என்கிறீர்களா? சாதாரண மனுஷி, அசாதாரண அரசி என்றெல்லாம் இந்த விசயத்தில் எந்த வேறுபாடும் இல்லை. பிரிட்டனின் ராணியே இந்த ஆவி மேட்டரில் அப்படித்தான் நடந்திருக்கிறார். அது என்ன என்கிறீர்களா? அதுவும் ஒரு சுவாரசியமான கதை மட்டுமல்ல, உண்மையில் நடந்த வரலாறு. அது நாளைக்கு.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

மருத்துவக் காப்பீட்டிற்கான குடும்ப உறுப்பினர்கள் விவரப் படிவம்

மருத்துவக் காப்பீட்டிற்கான குடும்ப உறுப்பினர்கள் விவரப் படிவம்

ஆசிரியர்கள் மாதந்தோறும் தங்கள் ஊதியத்திலிருந்து செலுத்தும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரப் படிவத்தைக் கீழே காண்க.

*****