Sunday, 2 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.08.2026

1) கபினி அணையிலிருந்து 25000 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் நாளை தமிழகம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2) எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3) சூலை மாதத்தில் இந்தியாவின் ஜி.எஸ்.டி வசூல் 2.11 லட்சம் கோடியாக உள்ளது.

4) நேற்று ஒரே நாளில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 8 தங்கங்களை வென்று அசத்தியுள்ளது.

5) காமன்வெல்த் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Education & GK News

1) 25,000 cubic feet of water is being released into the Cauvery River from the Kabini Dam; this water is expected to reach Tamil Nadu tomorrow.

2) Medical counseling for MBBS and BDS courses is expected to begin on August 13.

3) India's GST collection for the month of July stands at Rs. 2.11 lakh crore.

4) India put up a spectacular performance by winning eight gold medals in a single day at the Commonwealth Games yesterday.

5) India has moved up to fourth place in the Commonwealth Games medal tally.

ஆன்மாக்கள் அழைப்பாளர்களா, காப்பாற்றுபவர்களா?

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 40

ஆன்மாக்கள் அழைப்பாளர்களா, காப்பாற்றுபவர்களா?

கார்த்திக் – ரமேஷ் – பிரகாஷ் கதைகளை விஞ்சும் கதைகள் நம் நாட்டை விட வெளிநாடுகளில் அதிகம்.

வில் பேர்ட் என்ற கனடிய வீரர் சொல்லும் கதை இது. அவர் சொல்கிறார், "போர்க்களத்தில் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்த என் அண்ணன் ஸ்டீவ் ஆவியாக வந்து என் கையைப் பிடித்து இழுத்தான். எழுந்திருடா! என்றான். நான் வெளியே ஓடி வந்த அடுத்த நிமிடம், நான் தூங்கிய இடத்தை ஒரு குண்டு தரைமட்டமாக்கியது!"

அடடா, என்ன ஒரு அண்ணன் தம்பி பாசம்! கூகுள் மேப் கூடக் கண்டுபிடிக்க முடியாத ஓர் ஆபத்தை, பரலோகத்திலிருந்து வந்து எச்சரித்திருக்கிறார் அண்ணன் ஸ்டீவ்.

அதே நேரத்தில், இன்னொரு பிரிட்டிஷ் வீரரின் கதை இப்படி இருக்கிறது, "அதோ என் அம்மா நிற்கிறாள். என்னை அழைக்க வந்துவிட்டாள்!" சொல்லி முடித்த அடுத்த விநாடி அவர் உயிர் பிரிகிறது.

இங்கேதான் ஒரு பெரிய கேள்வி பிறக்கிறது. பேய்கள் அல்லது ஆவிகள் என்பவை உயிரைக் காக்கும் லைப் ஜாக்கெட்டா? அல்லது உயிரைக் குடிக்கும் எமதர்மன்களா?

நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். போர்க்களம் என்பது சாதாரண இடம் அல்ல. அங்கே மரண பயம், தூக்கமின்மை, பசி, அட்ரினலின் ரஷ், ரத்த அழுத்தம் என எல்லாமே உச்சத்தில் இருக்கும்.

நமது மூளை ஒரு பயங்கரமான கம்ப்யூட்டர். மிகக் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும்போது, மூளை சில சமயம் ஹாலுசினேஷன் எனப்படும் மாயத்தோற்றங்களை உருவாக்கும்.

அப்படியானால் வில் பேர்டின் விசயத்தில் நடந்து என்ன?

வில் பேர்டின் ஆழ்மனம் தூக்கத்தில் ஏதோ ஓர் ஆபத்தை அதாவது, குண்டு வரும் சத்தத்தையோ அல்லது அதிர்வையோ உணர்ந்திருக்கலாம். மூளை உடனடியாக அவரை விழித்தெழச் செய்ய, அவருக்கு மிகவும் பிடித்த, நம்பிக்கையான அண்ணன் ஸ்டீவின் உருவத்தை ஓர் அலாரம் போலப் பயன்படுத்தியிருக்கலாம்.

அடுத்து அந்தப் பிரிட்டிஷ் வீரரின் விசயத்தில் என்ன நடந்திருக்கும்?

மரணத்தின் விளிம்பில், இதயத்தின் இயக்கம் குறையும்போது, மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அந்த நேரத்தில் அமைதியைத் தேடும் மனம், உலகிலேயே பாதுகாப்பான இடமான அம்மாவின் நினைவை வரைந்து காட்டுகிறது.

மனித மனம் ரொம்பவே சுவாரசியமானது. நமக்கு அசாதாரணமான ஒரு விஷயம் நடக்கும்போது, அதற்கு ஓர் அற்புதச் சாயம் பூசவே நாம் விரும்புவோம்.

"என் ஆழ்மனதின் அதிர்வு எச்சரித்தது" என்று சொல்வதை விட, "என் இறந்த அண்ணன் வந்து காப்பாற்றினான்" என்று சொல்வதில் ஒரு கவித்துவமும், ஆறுதலும் இருக்கிறது அல்லவா?

அதேபோல, "என் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மயக்கமடைந்தேன்" என்பதை விட, "அம்மா கூப்பிட வந்துட்டா" என்று சொல்வது மரணத்தின் பயத்தைக் குறைக்கிறது.

ஆவிகள் உண்மையிலேயே வந்து காப்பாற்றுகின்றனவா அல்லது எமனாக மாறுகின்றனவா?

உண்மையில், அங்கே வருவது அண்ணனோ, அம்மாவோ அல்ல. நமது சொந்த மூளைதான்! ஆபத்து காலத்தில் அது நம்மை ஓட வைக்கும் தேவதையாகவும் மாறுகிறது; மரணத்தின் தருணத்தில் வலியைக் குறைக்க அமைதியைத் தரும் அன்னையாகவும் மாறுகிறது.

இயற்கையின் இந்த கெமிஸ்ட்ரி மாயாஜாலம், எந்தப் பேய்க் கதையை விடவும் சுவாரசியமானதுதானே?

இப்போது கார்த்திக் – ரமேஷ் – பிரகாஷ் கதையில் என்ன நடந்திருக்கும்?

அதைச் சரியாகக் கமென்ட் பாக்ஸில் சொல்பவர்களுக்கு, அமானுஷ்யங்களின் அட்ரஸ் புத்தகமாக வெளியாகும் போது அதன் முதல் பிரதி பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 1 August 2026

மிஸ்டர் எமன் பிரம் மெயின்ரோடு!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 39

மிஸ்டர் எமன் பிரம் மெயின்ரோடு!

இரவு பன்னிரண்டு மணி.

திருவாரூர் – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அந்த எலெக்ட்ரிக் கார் சத்தமின்றி ஜரூராகச் சென்று கொண்டே சென்றது. காரை ஓட்டிக்கொண்டிருந்தான் கார்த்திக்.

மழை கொட்டிக்கொண்டிருந்தது. வைப்பர் கீச் கீச் சென்று கண்ணாடியைத் துடைத்தாலும், முன்னால் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த ரமேஷ், பயத்தில் கை நகங்களைக் கடித்துக்கொண்டிருந்தான்.

"டேய் கார்த்திக்.! இந்த ரூட்ல வேண்டாம்டா. நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இங்க ஓர் ஆக்சிடென்ட்ல உங்க அண்ணன் பிரகாஷ் இறந்துபோன இடம் இது. இன்னைக்கு அமாவாசை வேற" ரமேஷ் குரல் நடுங்கியது.

"லூசு மாதிரி பேசாத ரமேஷ். பேய், பிசாசு எல்லாம் மூடநம்பிக்கை. அண்ணன் இறந்தது ஒரு பேட் லக். மூளையோட அட்ரினலின் லெவல் ஏறும்போது வர்ற மாயத்தோற்றம்தான் பேய். விஜயராமனோட பிளாக்ஸ்பாட்டுல படிச்சதில்ல?"  கார்த்திக் உச்சந்தலையைக் கொஞ்சம் சொரிந்து கொண்டான்.

திடீரென காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ஓர் உருவம் தோன்றி மறைந்தது!

கார்த்திக் பதறிப்போய் பிரேக்கை மிதித்தான். கார் வீல் கீச்சென்ற சத்தத்துடன் ரோட்டின் ஓரத்தில் நின்று கிளாமர் நடிகையைப் போல ஒரு குலுங்கு குலுங்கியது.

எதிரே ரோட்டின் நடுவே அந்த உருவம் மழையில் நனைந்தபடி, கையை நீட்டி காரை நோக்கி வந்தது.

ரமேஷ் அலறினான், "டேய்! பிரகாஷ் அண்ணன்டா! அதே முகம்! அன்றைக்குப் போட்டிருந்த அதே சட்டை! செத்துப்போன உங்க அண்ணன் கனவுல நமீதா வர்றதப்  போல வந்துட்டான்டா!"

கார்த்திக் உறைந்துபோய் பார்த்தான். ஆமாம், அது பிரகாஷ்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் லாரி மோதி இறந்த அதே அண்ணன்.

பிரகாஷின் உருவம் காரின் விண்ட்ஸ்கிரீனை தட்டியது.

டக்... டக்... டக்...

"கார்த்திக்! காரை விட்டு வெளியே வா! சீக்கிரம் வா!" பிரகாஷின் குரல் தெளிவில்லாமல், ஏதோ ஒரு தொலைதூரத்தில் இருந்து வருவது போலக் கேட்டது.

கார்த்திக்கிற்கு மூளை வேலை செய்யவில்லை. செத்துப் போன அண்ணன் எப்படி வருவான்? இது என் ஆழ்மனதின் ஹாலுசினேஷனா? அல்லது உண்மையிலேயே ஆன்மாவா வந்திருக்கானா?'

"கார்த்திக், சீக்கிரம் இறங்குடா! கார் வெடிக்கப் போகுது!" ஆவி பிரகாஷ் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான்.

பயத்தில் கார்த்திக்கும் ரமேஷும் கதவைத் திறந்து கொண்டு வெளியே குதித்து, ரோட்டின் ஓரத்திற்கு ஓடினார்கள்.

அவர்கள் இறங்கிய அடுத்த ஐந்தாவது விநாடி.

டமால் என்ற சத்தம், அப்புறம் கார் தீப்பிடித்துக் கொண்டது.

அத்துடன் பின்னாலிருந்து அதிவேகமாக வந்த ஒரு லாரி, ஓரமாக நின்றிருந்த காரின் மீது பயங்கரமாக மோதியது. கார் அப்பளமாக நசுங்கித் தரைமட்டமானது.

கார்த்திக் மூச்சிரைக்கக் கீழே விழுந்தான்.

"கண்டேன் சீதையைங்றது போல, கண்டேன்டா ஆவியை. பேய் இருக்குடா கார்த்திக்! உங்க அண்ணன் ஆவியா வந்து நம்ம உயிரைக் காப்பாத்திருக்கான்!" என்று ரமேஷ் நடுங்கியபடி கத்தினான்.

கார்த்திக் மெல்ல எழுந்து நின்றான். மழைத் துளிகள் அவன் முகத்தில் அடித்தன. காப்பாற்றிய அண்ணனைத் தேடிச் சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை.

பேய்கள் இருப்பது உண்மையா?

அப்படி இருந்தால் அவை காப்பாற்றுவது உண்மையா?

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Friday, 31 July 2026

அறிவியலின் உச்சமும் ஆவியின் மிச்சமும்!

அமானுஷ்யங்களிள் அட்ரஸ்

அட்ரஸ் – 38

அறிவியலின் உச்சமும் ஆவியின் மிச்சமும்!

இருபதாம் நூற்றாண்டு என்பது ஒரு விசித்திரமான காலகட்டம். ஒரு பக்கம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவத்தை உடைத்துக் கொண்டிருக்கிறார்; இன்னொரு பக்கம் லேபரட்டரியில் ராக்கெட்டுகளும், அணுவை உடைக்கும் சோதனைகளும் படுஜோராக நடந்து கொண்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், இருபதாம் நூற்றாண்டு என்பது அறிவியலின் உச்சம்.

ஆனால், அதே கையோடு மனிதன் தனக்குத்தானே தோண்டிக்கொண்ட சுடுகாட்டின் உச்சமும் அதுதான்.

காரணம் முதல் உலகப்போர், மற்றும் அதன் பின் ஏற்பட்ட இரண்டாம் உலகப்போர்தான்.

உலகப் போருக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள். திரும்பி வரவில்லை. துப்பாக்கிகளும், ரசாயனக் குண்டுகளும் லட்சக்கணக்கான உயிர்களை நொடியில் காற்றில் கரைத்தன.

"என் மகன் எங்கிருக்கிறான்?",

"என் கணவன் உயிரோடு இருக்கிறானா?" என்ற கதறல் ஐரோப்பாவின் ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் எதிரொலித்தது.

அறிவியல் எல்லாவற்றிற்கும் பதில் சொன்னது, போருக்குப் போனவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பதைத் தவிர!

இங்கேதான் மீடியம் என்றழைக்கப்படும் ஆவி தொடர்பாளர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

1891 இல் அமெரிக்காவில் ஓய்ஜா போர்டு அறிமுகமாகியிருந்தது. எலிஜா பாண்ட் என்பவர் இதை காப்புரிமை செய்தபோது, அது ஒரு சாதாரண, ஜாலியான இன்டோர் கேம் என்றுதான் உலகம் நினைத்தது. குடும்பத்தினர் மாலை வேளையில் டீ, காபி சாப்பிட்டபடியே, "எனக்கு இந்த வருஷம் கல்யாணம் ஆகுமா? பரீட்சையில் பாஸ் ஆவேனா?" என்று கேட்டு விளையாடும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகத்தான் அது ஆரம்பத்தில் இருந்தது.

ஆனால், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது போர்க்களத்தில் இருந்து செய்திகள் வராமல், வீடுகள் இருண்டபோது, இந்த மரப்பலகை ஒரு விளையாட்டாகத் தோன்றவில்லை. மரணத்தின் அட்ரஸ் தேடும் வாசலாகத் தோன்றியது.

ஒரு மெழுகுவர்த்தி, நாலைந்து பேரதிர்ச்சியடைந்த மனிதர்கள், நடுவில் அந்த ஓய்ஜா போர்டை வைத்துக் கொண்டு, விரலை அந்த பிளான்செட் மீது வைப்பார்கள்.

"மகனே! நீ உயிரோடு இருக்கிறாயா?" என்பார்கள்.

அந்தக் கண்ணாடித் துண்டு அல்லது மரத் துண்டு மெதுவாக நகரும். 'N-O' அல்லது 'Y-E-S' என ஏதோ ஒன்றாக.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இது ஐடியோமோட்டார் விளைவு. அதாவது, நமது ஆழ்மனதின் ஆசையும் பயமும், நமக்குத் தெரியாமலேயே விரல் தசையில் மிகச்சிறிய அசைவை உண்டாக்கும். பிளான்செட் நகர்வது ஆவியால் அல்ல, நமது சொந்தத் தசைப் பிடிப்பால்!

ஆனால், தன் மகனைப் பறிகொடுத்த ஒரு தாய்க்கு அறிவியல் விளக்கம் தேவையில்லை; ஒரு "ஆம்" என்ற வார்த்தை மட்டுமே தேவைப்பட்டது. "அவன் செத்துட்டான்" என்று அரசு அனுப்பும் ஒரு துண்டு காகிதத்தை விட, "நான் நல்லா இருக்கேன்ம்மா" என்று அந்தப் பலகை சொன்ன பொய்யை மனித மனம் நம்ப விரும்பியது.

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பரிய முரண் இதுதான். ரேடியோ வந்தாயிற்று, டெலிகிராப் வந்தாயிற்று, தொலைபேசியும் வந்தாயிற்று. ஆனால் இறந்தவர்களோடு பேச மனிதன் தேர்ந்தெடுத்தது ஒரு மரப்பலகையையும் சில எழுத்துக்களையும்தான்.

சோகம் என்னவென்றால், அறிவியலின் உச்சத்தில் இருந்த மனித குலத்தை, போரின் கொடூரம் மீண்டும் பழைய அறியாமைக்கே விரட்டியடித்தது.

நம்பிக்கைதான் மனிதனின் மிகப்பெரிய பலம். சில நேரங்களில் அதுவே அவன் ஏமாறத் தயார் செய்யும் மிகப்பெரிய பலவீனமும் கூட!

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் சுந்தரத்துக்குக் கணபதி கொண்டு வந்த ஒய்ஜா போர்டு காட்டிய அமானுஷ்யம் எப்படி நடந்தது என்று. அது முழுக்க முழுக்க ஐடியாமோட்டாரின் விளைவுதான்.

ஆனால், இந்த நூற்றாண்டிலும் இந்த ஒய்ஜா போர்டு விளையாட்டுகள் உலகெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றால், நீங்கள் மனித மனத்தையும் மனித அறிவையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மனித அறிவை மனித மனம் எப்படியோ வென்று விடுகிறது. மனித மனத்தின் ஆதிக்கத்திலேயே மனித அறிவு செயல்படுகிறது!

*****

Thursday, 30 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.07.2026

1) எல் நினோ விளைவுகளை ஆராய தமிழக அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது.

2) இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் முதலிடத்தில் உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரண்டாம் இடத்தில் உள்ளார். தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் மூன்றாமிடத்தில் உள்ளார்.

3) தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

4) வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

5) அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது.

Education & GK News

1) The Tamil Nadu government has constituted an expert committee to examine the effects of El Nino.

2) Karnataka Chief Minister D.K. Shivakumar tops the list of India's wealthiest Chief Ministers. Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu ranks second, while Tamil Nadu Chief Minister C. Joseph Vijay holds the third spot.

3) A bill classifying the disrespect of the national song 'Vande Mataram' as a punishable offense has been passed in Parliament.

4) The deadline for filing income tax returns ends today.

5) The US Federal Reserve has announced that there will be no change to its interest rates.

மெட்ராஸில் இறக்குமதி செய்யப்பட்ட ஆவிகள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 37

மெட்ராஸில் இறக்குமதி செய்யப்பட்ட ஆவிகள்!

1942, சென்னை அப்போது மெட்ராஸ்.

இரண்டாம் உலகப்போர் படுஜோராக நடந்துகொண்டிருந்த காலம்.

மெட்ராஸ் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசக்கூடும் என்ற பயத்தில் ஊரே பிளாக்அவுட் செய்யப்பட்டு, இருளில் மூழ்கியிருந்தது.

மயிலாப்பூர் மாட வீதியில் இருந்த அந்தப் பழமையான வீட்டின் திண்ணையில், உட்கார்ந்திருந்தார் சுந்தரம். அவர் கையில் ஒரு காகிதம். அவரது ஒரே மகன் ரகுபதி, இந்திய ராணுவத்தில் சேர்ந்து பர்மியப் போர்க்களத்திற்குச் சென்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

கடைசியாக வந்த தபால், தந்தி அல்ல, ஒரு மெளனம்.

சுந்தரத்தின் நண்பர் கணபதி, வீட்டின் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தார். அவர் கையில் ஒரு சதுர மரப்பலகை இருந்தது.

"என்ன கணபதி இது? ஏதோ புதுசா இருக்கு?"

"இதுக்கு பேரு ஒய்ஜா போர்டு சுந்தரம். மவுண்ட் ரோடு சாமிகண்ணு செட்டியார் கடையில அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான விளையாட்டுப் பொருள்னு விக்கிறான். ஆனா இது விளையாட்டு மட்டும் இல்லை!" கணபதியின் குரல் தாழ்ந்தது.

"அப்படின்னா?"

"இதைக் வச்சு ஆவிகளோட பேசலாம். போர்க்களத்துல இருக்கிற உன் பையன் சௌக்கியமா இருக்கானான்னு இந்த ஆவிங்ககிட்டயே கேட்டுடலாம்!"

சுந்தரத்திற்கு அறிவியல் பிடிக்கும். விவேகசிந்தாமணியும், அறிவியல் புத்தகங்களும் படித்தவர்.

"என்ன கணபதி லூசுத்தனம்! ஒரு மரப்பலகை எப்படி இறந்தவங்களோடவோ, தூரத்துல இருக்கிறவனோடவோ பேசும்?" என்றார்.

"ட்ரை பண்ணிப் பாப்பாமே. உனக்கு உன் பையனைப் பத்தின கவலை இல்லையா?" கணபதியின் கேள்வி சுந்தரத்தின் அறிவியல் வாதத்தை அடக்கியது. மகனின் முகம் கண்ணீராகக் கலங்கியது.

இரவு 10 மணி.

மெட்ராஸே இருட்டில் மூழ்கியிருக்க, அந்த அறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்தது.

நடுவே பலகை. அதில் A to Z எழுத்துக்கள், கீழே 'ஆம்', 'இல்லை'.

அந்தச் சிறிய முக்கோணக் கண்ணாடித் துண்டின் மீது இருவரும் ஆள்காட்டி விரலை வைத்தார்கள்.

"யாராவது ஆவி இருந்தா உள்ளே வரலாம்." கணபதி மந்திரம் போலச் சொன்னார்.

சுந்தரத்தின் இதயம் படபடவென அடித்தது. "இது சும்மா ஏமாற்று வேலை" என்று மூளை சொன்னாலும், "ரகுபதி சௌக்கியமா இருக்கான்னு ஒரு வார்த்தை வராதா?" என்று இதயம் ஏங்கியது.

திடீரென, அந்த பிளான்செட் நகரத் தொடங்கியது!

சுந்தரம் திடுக்கிட்டார். "கணபதி! நீ நகர்த்தறியா?"

"இல்ல சுந்தரம்! நான் சும்மாதான் விரலை வச்சிருக்கேன். நீ நகர்த்தறியா?"

பிளான்செட் வேகமாக நகர்ந்து எழுத்துக்களைத் தொட்டது.

R... A... G... H... U...

சுந்தரத்தின் உடம்பில் ஒரு மின்சாரம் பாய்ந்தது. "என் பையன் பேரு! கணபதி! அவன் நல்லா இருக்கானான்னு கேள்!"

பிளான்செட் மீண்டும் நகர்ந்தது.

S... A... F... E...

"அவன் பாதுகாப்பா இருக்கானாம்!" கணபதி கத்தினார்.

சுந்தரத்தின் கண்ணிலிருந்து நீர் வழிந்தது. அந்த நொடியில், அவருக்கு ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவமும் நினைவில்லை, நியூட்டனின் விதிகளும் நினைவில்லை. ஒரு மரப்பலகை கொடுத்த ஆறுதல், எந்த அறிவியலாலும் தர முடியாததாக இருந்தது சுந்தரத்துக்கு.

மறுநாள் காலை.

சுந்தரம் காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, வீட்டு வாசலில் தபால்காரர் மணி அடித்தார்.

ஒரு தந்தி.

சுந்தரத்தின் கைகள் நடுங்கின. நேற்றைய ஒய்ஜா போர்டு நினைவுக்கு வந்தது. பதற்றத்துடன் பிரித்துப் படித்தார்:

"ராணுவ முகாமிலிருந்து தந்தி : ரகுபதி பர்மியப் போரில் காயமின்றி தப்பித்து, தற்போது கல்கத்தா ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பாக உள்ளார்."

சுந்தரத்திற்கு மூச்சு திணறியது. நேற்றைய பிளான்செட் சொன்னது உண்மைதானா? அப்படியானால் உண்மையிலேயே ஆவிகள் இருக்கின்றனவா?

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Wednesday, 29 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.07.2026

1) +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

2) நாடாளுமன்றத்தில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா நிறைவேறியது.

3) தமிழகத்துக்குக் காவிரி நீர் வழங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மேல்முறையீடு செய்ய உள்ளது.

4) மேற்காசியாவில் மீண்டும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் மோதல் வெடித்துள்ளது.

5) ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

Education & GK News

1) Original Class 12 mark sheets are being issued at schools starting today.

2) The bill to curb examination malpractices has been passed in Parliament.

3) Karnataka is set to appeal to the Supreme Court against the release of Cauvery water to Tamil Nadu.

4) Conflict has once again erupted between the US and Iran in West Asia.

5) Eighteen people have lost their lives in an earthquake in Japan.