அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் - 37
மெட்ராஸில் இறக்குமதி செய்யப்பட்ட ஆவிகள்!
1942,
சென்னை அப்போது மெட்ராஸ்.
இரண்டாம்
உலகப்போர் படுஜோராக நடந்துகொண்டிருந்த காலம்.
மெட்ராஸ்
துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசக்கூடும் என்ற பயத்தில் ஊரே பிளாக்அவுட்
செய்யப்பட்டு, இருளில் மூழ்கியிருந்தது.
மயிலாப்பூர்
மாட வீதியில் இருந்த அந்தப் பழமையான வீட்டின் திண்ணையில், உட்கார்ந்திருந்தார் சுந்தரம்.
அவர் கையில் ஒரு காகிதம். அவரது ஒரே மகன் ரகுபதி, இந்திய ராணுவத்தில் சேர்ந்து பர்மியப்
போர்க்களத்திற்குச் சென்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.
கடைசியாக
வந்த தபால், தந்தி அல்ல, ஒரு மெளனம்.
சுந்தரத்தின்
நண்பர் கணபதி, வீட்டின் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தார். அவர் கையில் ஒரு சதுர மரப்பலகை
இருந்தது.
"என்ன
கணபதி இது? ஏதோ புதுசா இருக்கு?"
"இதுக்கு
பேரு ஒய்ஜா போர்டு சுந்தரம். மவுண்ட் ரோடு சாமிகண்ணு செட்டியார் கடையில அமெரிக்காவிலிருந்து
இறக்குமதியான விளையாட்டுப் பொருள்னு விக்கிறான். ஆனா இது விளையாட்டு மட்டும் இல்லை!"
கணபதியின் குரல் தாழ்ந்தது.
"அப்படின்னா?"
"இதைக்
வச்சு ஆவிகளோட பேசலாம். போர்க்களத்துல இருக்கிற உன் பையன் சௌக்கியமா இருக்கானான்னு
இந்த ஆவிங்ககிட்டயே கேட்டுடலாம்!"
சுந்தரத்திற்கு
அறிவியல் பிடிக்கும். விவேகசிந்தாமணியும், அறிவியல் புத்தகங்களும் படித்தவர்.
"என்ன
கணபதி லூசுத்தனம்! ஒரு மரப்பலகை எப்படி இறந்தவங்களோடவோ, தூரத்துல இருக்கிறவனோடவோ பேசும்?"
என்றார்.
"ட்ரை
பண்ணிப் பாப்பாமே. உனக்கு உன் பையனைப் பத்தின கவலை இல்லையா?" கணபதியின் கேள்வி
சுந்தரத்தின் அறிவியல் வாதத்தை அடக்கியது. மகனின் முகம் கண்ணீராகக் கலங்கியது.
இரவு
10 மணி.
மெட்ராஸே
இருட்டில் மூழ்கியிருக்க, அந்த அறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்தது.
நடுவே
பலகை. அதில் A to Z எழுத்துக்கள், கீழே 'ஆம்', 'இல்லை'.
அந்தச்
சிறிய முக்கோணக் கண்ணாடித் துண்டின் மீது இருவரும் ஆள்காட்டி விரலை வைத்தார்கள்.
"யாராவது
ஆவி இருந்தா உள்ளே வரலாம்." கணபதி மந்திரம் போலச் சொன்னார்.
சுந்தரத்தின்
இதயம் படபடவென அடித்தது. "இது சும்மா ஏமாற்று வேலை" என்று மூளை சொன்னாலும்,
"ரகுபதி சௌக்கியமா இருக்கான்னு ஒரு வார்த்தை வராதா?" என்று இதயம் ஏங்கியது.
திடீரென,
அந்த பிளான்செட் நகரத் தொடங்கியது!
சுந்தரம்
திடுக்கிட்டார். "கணபதி! நீ நகர்த்தறியா?"
"இல்ல
சுந்தரம்! நான் சும்மாதான் விரலை வச்சிருக்கேன். நீ நகர்த்தறியா?"
பிளான்செட்
வேகமாக நகர்ந்து எழுத்துக்களைத் தொட்டது.
R...
A... G... H... U...
சுந்தரத்தின்
உடம்பில் ஒரு மின்சாரம் பாய்ந்தது. "என் பையன் பேரு! கணபதி! அவன் நல்லா இருக்கானான்னு
கேள்!"
பிளான்செட்
மீண்டும் நகர்ந்தது.
S...
A... F... E...
"அவன்
பாதுகாப்பா இருக்கானாம்!" கணபதி கத்தினார்.
சுந்தரத்தின்
கண்ணிலிருந்து நீர் வழிந்தது. அந்த நொடியில், அவருக்கு ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவமும்
நினைவில்லை, நியூட்டனின் விதிகளும் நினைவில்லை. ஒரு மரப்பலகை கொடுத்த ஆறுதல், எந்த
அறிவியலாலும் தர முடியாததாக இருந்தது சுந்தரத்துக்கு.
மறுநாள்
காலை.
சுந்தரம்
காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, வீட்டு வாசலில் தபால்காரர் மணி அடித்தார்.
ஒரு
தந்தி.
சுந்தரத்தின்
கைகள் நடுங்கின. நேற்றைய ஒய்ஜா போர்டு நினைவுக்கு வந்தது. பதற்றத்துடன் பிரித்துப்
படித்தார்:
"ராணுவ
முகாமிலிருந்து தந்தி : ரகுபதி பர்மியப் போரில் காயமின்றி தப்பித்து, தற்போது கல்கத்தா
ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பாக உள்ளார்."
சுந்தரத்திற்கு
மூச்சு திணறியது. நேற்றைய பிளான்செட் சொன்னது உண்மைதானா? அப்படியானால் உண்மையிலேயே
ஆவிகள் இருக்கின்றனவா?
-
அட்ரஸைத் தேடுவோம்!
*****