Saturday, 25 July 2026

பயத்தின் அதிர்வெண் 20 ஹெர்ட்ஸ்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 32

பயத்தின் அதிர்வெண் 20 ஹெர்ட்ஸ்!

சுப்பிரமணியம் மற்றும் ராகவனுக்கு நேர்ந்த அமானுஷ்யங்களைத் தாண்டி, இதன் பின்னாலிருக்கும் அறிவியலையும், வரலாற்றுப் பக்கங்களையும் புரட்டினால் சில சுவாரஸ்யமான உண்மைகள் ஆவிகளைப் போல அணிவகுக்கின்றன.

சுப்பிரமணியம் சொன்ன பர்மா காட்டுச் சம்பவம் புதிதல்ல. சரியாக 1914 ஆம் ஆண்டு, முதல் உலகப்போரின் போது பெல்ஜியத்தில் உள்ள மான்ஸ் என்ற இடத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்ததாகப் பதிவாகியுள்ளது.

முதல் உலகப்போர் அப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. பெல்ஜியத்தில் உள்ள மான்ஸ் என்ற ஊரில் பிரிட்டிஷ் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் பயங்கர மோதல்.

பிரிட்டிஷ் ராணுவத்தின் எண்ணிக்கை வெறும் 80,000.

எதிரே வந்த ஜெர்மன் படைகளோ 1,60,000.

சுருக்கமாகச் சொன்னால், இரண்டுக்கு ஒன்று.

தப்பிக்க வழியே இல்லை. பிரிட்டிஷ் வீரர்கள் கொத்து கொத்தாக மடியத் தொடங்கினார்கள். இனி அவ்வளவுதான், இன்றுடன் கதை முடிந்தது என்று நினைத்த தருணத்தில் ஓர் அதிசயம் நடந்தது!

வானத்தில் திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி. அதில் 1415 ஆம் ஆண்டு அஜின்கோர்ட் போரில் மடிந்த பழங்கால வில்லாளிகளின் ஆவிகள் வில்லும் அம்பும் ஏந்தி ஜெர்மன் படைகளை முன்னோக்கி வரவிடாமல் தடுத்ததாகவும் செய்திகள் பரவின.

ஜெர்மன் குதிரைகள் மிரண்டு ஓடினவாம். பிரிட்டிஷ் வீரர்கள் பாதுகாப்பாகப் பின்வாங்கி உயிர் தப்பினார்களாம்.

ஆனால் இதன் பின்னணியில் இருந்த கப்சா அக்மார்க் திருநெல்வேலி அல்வா.

அது என்ன என்கிறீர்களா?

ஆத்தர் மேச்சன் என்ற எழுத்தாளர், தி போமன் என்ற தலைப்பில் ஒரு புனைகதையை லண்டன் பத்திரிகை ஒன்றில் எழுதினார்.

போரின் பேரழிவாலும், பயத்தாலும் உறைந்துபோய் இருந்த மக்களுக்கு இந்தக் கதை ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. "இது கதை இல்லை, உண்மையில் நடந்தது" என்று மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.

கதையில் இருந்த வில்லாளிகள், நாளடைவில் சிறகு முளைத்த தேவதைகளாக மாறினார்கள்! அவர்களை மான்ஸ் தேவதைகள் என்றே மக்கள் கதைகளைப் பரப்பத் தொடங்கினார்கள்.

ஒருபுனைகதை நடந்த சம்பவம் போலவே மாறி விட்டது.

பர்மா காட்டில் சுப்பிரமணியத்தின் குழுவிற்கும், ஜிம்கானா கிளப்பில் ராகவனுக்கும் நடந்த சம்பவங்களுக்கு பின்னணியிலும் அதே சாத்தியக்கூறுகள்தான் உள்ளன.

மனிதக் காதுகளால் 20 ஹெர்ட்சுக்குக் கீழே உள்ள ஒலிகளைக் கேட்க முடியாது. ஆனால், உடலாலும் மூளையாலும் அதை உணர முடியும்.

பர்மா காட்டின் நில அதிர்வு அல்லது புயல் காற்றினால் உருவான 18Hz முதல் 19Hz வரையிலான இன்ப்ராசவுண்ட், மனிதக் கண் விழிகளைச் லேசாக அதிரச் செய்யும்.

இது பார்வையின் ஓரங்களில் நீல நிற ஒளிரும் பிம்பங்கள் போன்ற தோற்ற மயக்கத்தை உருவாக்கும்.

மேலும், இது இதயத் துடிப்பை எகிற வைத்து, உச்சகட்ட பயத்தையும், தீவிரமான சந்தர்ப்பங்களில் மாரடைப்பையும் உண்டாக்கும். ஜப்பானிய வீரர்கள் ரத்தக் காயமின்றி இறந்து கிடந்ததற்கு இதுவே முக்கிய காரணம்.

காடுகளில் அழுகும் தாவரங்கள் மற்றும் எலும்புகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் மற்றும் பாஸ்பைன் வாயுக்கள் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து எரியும்போது நீல நிறத்தில் ஒளிரும்.

பயத்தின் உச்சத்திலிருந்த 18 வீரர்களில் ஒருவருக்கு சிப்பாய் கலக உருவங்கள் தோன்றியிருக்கலாம். அதை அவர் அலறிய போது, மரண பயத்திலிருந்த மற்ற வீரர்களின் மூளையும் அதே பிம்பத்தைப் பிரதிபலித்திருக்கலாம். மனநல மருத்துவத்தில் இதை கூட்டு மனநோய் என்பார்கள்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக இது சுப்பிரமணியம் வாயால் சுட்ட வடையாகவும் இருக்கலாம். அந்த வடையைக் காக்கா தூக்கிப் போகாமல், ராகவன் தூக்கிக் கொண்டு போவாரா என்று கூட அவர் எதிர்பார்த்திருக்கலாம்.

அப்படியென்றால் ராகவன் கண்ணெதிரே சுப்பிரமணியம் மறைந்தது எப்படி?

ஜன்னலுக்கு வெளியே மின்னிய ஏதோ ஒரு பலத்த மின்சார வெளிச்சம் ராகவனின் விழித்திரையில் சுப்பிரமணியத்தின் நிழலைச் சில நொடிகள் உறைந்து போகச் செய்திருக்கலாம்.

அந்த இடைவெளியில் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் இருட்டில் வெளியேறி இருக்கலாம்.

வெளியே கேட்ட மிலிட்டரி பூட்ஸ் சத்தம்? அது மெட்ராஸ் கடற்கரைச் சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப் ராணுவத்தின் நிஜமான அணிவகுப்பாகவும் இருந்திருக்கலாம்.

ஆக, எல்லாவற்றையும் தொகுத்துச் சொன்னால், இயற்கை அமானுஷ்யமானது அல்ல; மனித மூளைதான் உலகிலேயே மிகச் சிறந்த மாயாஜாலக்காரன். பயம், எதிர்பார்ப்பு, காட்டின் வாயுக்கள் மற்றும் அதிர்வுகள் அல்லது கற்பனைகளும் கப்சாக்களும் சேர்ந்து எழுதிய ஒரு நாடகமே ஆவிகளின் அணிவகுப்பு.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Friday, 24 July 2026

ஆவிகளின் அணிவகுப்பு!

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் - 31

ஆவிகளின் அணிவகுப்பு!

1944 ஆம் வருடம்.

கடிகாரத்தின் வினாடி முள் நகர மறுத்தது. இரவு மணி 2:15.

மெட்ராஸ் ஜிம்கானா கிளப்பின் லைப்ரரி அறையில் பேன் மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது. எதிரே உடலெங்கும் வியர்க்க, பதற்றத்தில் நடுகங்களுக்கிடையே உட்கார்ந்திருந்தார் கமாண்டர் சுப்பிரமணியம். அவருக்கு எதிரே டாக்டர் ராகவன்.

"ராகவா, நான் சொல்றத நீ நம்ப மாட்ட. சைக்காலஜிக்கலா இது மாஸ் ஹலூசினேஷன்னு நீ ஈஸியா சொல்லிருவ. ஆனா…"

"சுப்பிரமணியம், பர்ஸ்ட் ரிலாக்ஸ்," என்றான் ராகவன். அவரே தொடர்ந்தார், "இப்போ ரெண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருக்கு. பர்மா பார்டர்ல ஜப்பான்காரன் பிச்சியெடுக்கறான். நீங்க ஆளுங்களை இழந்துட்டு இங்க மெட்ராஸுக்கு வந்திருக்கீங்க. ஸ்ட்ரெஸ் அதிகமா இருந்தா மூளை என்ன வேணா பிம்பத்தை உருவாக்கும். அதான் சயின்ஸ்."

"சயின்ஸாவது மண்ணாங்கட்டியாவது!" சுப்பிரமணியம் கத்தினார். "அன்னைக்கு இரவு பர்மா காட்டில் நடந்தது என்ன தெரியுமா?"

ராகவன் சுப்பிரமணியத்தின் கன்னத்தில் தட்டிக் கொடுத்து விட்டு, தன் டிரேட்மார்க் புன்னகையோடு பார்த்தார். "சொல்லுங்க, கேட்டுடுவோம்."

"மழை கொட்டிக் கொண்டிருந்தது. காட்டின் அடர்த்தி வெளிச்சத்தை முற்றிலும் விழுங்கியிருந்தது. என்னையும் சேர்த்து பிரிட்டிஷ் இந்தியப் படையில் எஞ்சியிருந்தது வெறும் 18 வீரர்கள் மட்டுமே. எதிரே ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜப்பானியப் படைப்பிரிவு எங்களை வளைத்துவிட்டது. எங்ககிட்ட அம்யூனிஷன் தீர்ந்து போச்சு ராகவன். சாகறதைத் தவிர வேற வழி இல்லை. நாங்க எல்லாரும் துப்பாக்கியைக் கீழே வச்சிட்டு எங்க குலதெய்வத்தை கும்பிட ஆரம்பிச்சிட்டோம்."

"அப்புறம்?"

"திடீர்னு காட்டுக்குள் ஓர் அசாதாரணமான அமைதி. மழை நின்ன மாதிரி ஒரு பீலிங். அப்புறம் ஓர் ஒளி. நிலா வெளிச்சத்தை விட ஆயிரம் மடங்கு அதிகமா ஒரு நீல நிற வெளிச்சம் மரங்களுக்கு நடுவுல பாய்ஞ்சுது."

ராகவன் நிமிர்ந்து உட்கார்ந்தார். "பிலமென்ட் எஃபெக்ட்டா? அல்லது ஏதேனும் பாஸ்பரஸ் பாம்?"

"இல்லை!" சுப்பிரமணியத்தின் குரல் நடுங்கியது. "அந்த வெளிச்சத்துக்குள்ள இருந்து உருவங்கள் வெளிப்பட்டன. ஒண்ணு ரெண்டு இல்லை, நூற்றுக்கணக்கான உருவங்கள். அவங்க உடம்புல சாதாரண துணி இல்லை. 1857 சிப்பாய் கலகத்துல செத்துப் போன இந்திய வீரர்களின் சீருடை! கையில பழைய ரகத் துப்பாக்கிகள். அவங்க உடம்பு வழியா மரம், செடி எல்லாம் ஊடுருவித் தெரிஞ்சது!"

"வாட்?"

"ஆமா! அந்த ஆவிகள் முன்னாடி நகர்ந்து போனது. ஜப்பானிய வீரர்கள் அலறி அடிச்சுட்டு துப்பாக்கியால் சுட்டாங்க. ஆனா குண்டுகள் அந்த ஆவிகள் உடம்பைத் தாண்டிப் போய் மரத்துல பாய்ஞ்சுது. அடுத்த பத்தே நிமிஷம். எந்த ஆயுதமும் இல்லாம, வெறும் அந்த ஆவிகளின் பிரசன்னத்தாலயே ஜப்பானியப் படை பயந்து, ஒருத்தரையொருத்தர் மிதிச்சுட்டு ஓடிப்போய்ட்டாங்க. அத்தனை பேரையும் அந்த ஆவிகள் துரத்திட்டுப் போய் காட்டுக்குள்ள மறைஞ்சுது."

ராகவன் அமைதியாக யோசித்தார். "எல்லாம் தீவிரமான மரண பயத்தில் மூளை உருவாக்கும் கூட்டு பிரமை"

"அதுக்கு அப்புறம் அந்தச் சம்பவத்தால அன்னைக்கு செத்துப் போன 30 ஜப்பானிய பிணங்களை நான் என் கண்ணால பார்த்தேனே ராகவன்? அவங்க உடம்புல ஒரு காயமும் இல்லை. பயத்துல இதயமே வெடிச்சு செத்திருந்தாங்க! அது எப்படி?"

ராகவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்தார்.

"நீங்க சொல்றது சுவாரஸ்யமா இருக்கு சுப்பிரமணியம். நோட் பண்ணிக்கிறேன். ஆனா சயின்ஸ்ல இன்ப்ராஸவுண்ட் ஒன்னு இருக்கு. 20 ஹெர்ட்ஸ்க்கு கீழே உள்ள சப்தம். அதை மனுஷனால கேட்க முடியாது. ஆனா மூளை உணரும். அது பயத்தை, மாய பிம்பங்களை, ஏன், ஹார்ட் அட்டாக்கைக் கூட உண்டாக்கும். பர்மா காட்டுல இருந்த ஏதோ ஓர் எரிமலை வாயு அல்லது நில அதிர்வு அந்தச் சப்தத்தை உருவாக்கியிருக்கலாம்."

சுப்பிரமணியம் விரக்தியாகச் சிரித்தார். "நீ நம்ப மாட்ட ராகவன். எனக்குத் தெரியும்."

"சரி, அந்த ஆவிகள் உங்ககிட்ட ஏதாச்சும் பேசுச்சா?"

சுப்பிரமணியம் ராகவனின் கண்களை நேராகப் பார்த்தார்.

"ஒரே ஒரு வார்த்தை ராகவன். அந்தப் படையின் முன்னாடி நின்ன தளபதி உருவம் என்னை திரும்பிப் பார்த்து, நாம்ம மெட்ராஸில் சந்திப்போம்னு தமிழ்ல சொன்னுச்சு."

லைப்ரரியின் மின்சாரம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது.

அறை இருளில் மூழ்கியது.

ஜிம்கானா கிளப்பின் ஜன்னல்கள் பலமாக அதிரத் தொடங்கின. மெட்ராஸில் மழை பெய்யாத அந்த நள்ளிரவில், ஜன்னலுக்கு வெளியே ஒரு நீல நிற ஒளி படர ஆரம்பித்தது.

ராகவன் டார்ச் லைட்டை அடித்தார்.

சுப்பிரமணியத்தின் இருக்கை காலியாக இருந்தது!

ஆனால், அறையின் மூலையில்,. பழைய 1857 ஆம் ஆண்டின் சீருடை அணிந்த ஒரு கம்பீரமான உருவம் நின்று கொண்டிருந்தது. அதன் கண்கள் நிலா வெளிச்சத்தைப் போல மின்னின.

ராகவனின் கையில் இருந்த டார்ச் லைட் நடுக்கத்தில் கீழே விழுந்தது.

அந்த உருவம் ராகவனைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தது.

"டாக்டர் ராகவன்! சயின்ஸ் எல்லாத்துக்கும் பதில் சொல்லிரும்னு நினைக்காதீங்க!"

அவ்வளவுதான்.

மின்சாரம் மீண்டும் வந்தது.

அறையில் ராகவன் மட்டுமே தனியாக நின்று கொண்டிருந்தார்.

வெளியேயிருந்து மிலிட்டரி பூட்ஸ் சப்தம் டக் டக் என மொத்த மெட்ராஸ் நகரத்தின் வான்வெளியிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது!

சுப்பிரமணியம் சொன்னது உண்மைதானா?

இப்போது அதைச் சொன்ன சுப்பிரமணியம் எங்கே?

ராகவனுக்கு நடந்த அமானுஷ்யங்கள் நிஜம்தானா?

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Thursday, 23 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.07.2026

1) நீட் வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

2) நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடர்ந்து நாள்காவது நாளாகவும் நாடாளுமன்றம் முடங்கியது.

3) நீண்ட தூர இலக்கைத் தாக்கும் குஷா ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

4) 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் 1.83 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

5) தமிழகத்தின் வெப்பநிலை இன்று 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.

Education & GK News

1) Prime Minister Narendra Modi has announced that fast-track courts will be set up to investigate the NEET question paper leak.

2) Parliament remained stalled for the fourth consecutive day over the NEET exam irregularities.

3) The long-range 'Kusha' missile was successfully test-fired.

4) 1.83 lakh people lost their lives in road accidents in 2025.

5) Temperatures in Tamil Nadu are likely to rise by 2 to 4 degrees Celsius today.

மிஸ்டர் ஆவியின் கால்விரல் குறிப்புகள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 30

மிஸ்டர் ஆவியின் கால்விரல் குறிப்புகள்!

1848 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஹைடேஸ்வில் என்ற சிறிய கிராமத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.

அது ஒரு பழைய வீடு.

இரவு நேரத்தில் சுவரில் இருந்து டக்... டக்... என்று சத்தம் கேட்டது. சாதாரண மனிதராக இருந்தால், எலியாக இருக்கும் என்று சுவரில் ஒரு தட்டு தட்டிவிட்டுத் தூங்கச் சென்றிருப்பார்கள்.

ஆனால், அங்கு இருந்த கேத்ரின், மார்கரெட் என்ற பாக்ஸ் சகோதரிகள் அதை விட்டுவிடவில்லை.

"வணக்கம் திரு. ஆவி. நான் இரண்டு முறை தட்டுகிறேன், நீ மூன்று முறை தட்டு" என்று அதை வைத்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.

அதிசயம்!

அந்தச் சத்தமும் பதில் பேசியது.

அவ்வளவுதான்!

இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

"இறந்தவர்களுடன் பேசலாம், அவர்கள் சுவரில் தட்டிச் செய்தி அனுப்புகிறார்கள்!" என்று அமெரிக்காவே பரபரப்பானது. அமெரிக்கா மட்டும் ஆவிகளுக்கு விதிவிலக்கா என்ன? நம் மன்னார்குடி போன்றுதான் அங்கும் நடந்தது.

இதற்கு அந்தப் பாக்ஸ் சகோதரிகள் ஸ்பிரிச்சுவலிசம் என்று ஒரு பெயர் வைத்தார்கள். பாக்ஸ் சகோதரிகள் ஊர் ஊராகச் சென்று மேடை அமைத்து ஆவிகளை வரவழைத்து, சுவரில் தட்ட வைத்து, பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். பெரிய அறிஞர்களும் எழுத்தாளர்களும் வரிசையில் நின்றார்கள்.

சரி, அந்தச் சத்தம் உண்மையிலேயே ஆவி எழுப்பியதுதானா?

சில காலம் கழித்து, அந்தச் சகோதரிகளே உண்மையை வெளிப்படுத்தினார்கள். "அப்படி எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் கால் விரல் மூட்டுகளை நொடித்துத்தான் அந்தச் சத்தத்தை வரவழைத்தோம்!" என்று மேடையிலேயே செய்து காட்டி உண்மையை உடைத்தார்கள்.

ஆனால், இங்குதான் ஒரு சுவாரசியமான மனித உளவியல் இருக்கிறது!

அவர்களே "நாங்கள் ஏமாற்றினோம்" என்று ஒப்புக்கொண்ட பிறகும், மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. "இல்லை. அவர்கள் ஆவிகளுடன் பேசுவதை மறைப்பதற்காகவே இப்போது பொய் சொல்கிறார்கள்!" என்று மக்கள் வாதிட்டார்கள்.

ஏனென்றால், அந்த காலத்தில் ஒரு சின்னக் காயம் பட்டால் கூடத் தொற்று ஏற்பட்டு மரணம் நிச்சயம். குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம். இறந்தவர்களுடன் எப்படியாவது பேசிவிட மாட்டோமா என்கிற அந்த சென்டிமென்ட்தான் ஆவிகளுக்கான மார்க்கெட்டை அன்று தக்க வைத்தது.

அன்று தொடங்கிய அந்த ஆவி வணிகம், இன்று வரை தட்டச்சுப் பொறி, ஓய்ஜா போர்டு, மீடியம் என்று பல்வேறு வடிவங்களில் வளர்ந்து நிற்கிறது.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், மனித மூளைக்கு ஒரு குணம் உண்டு. தனக்கு நெருக்கமானவர்கள் இறந்துவிட்டால், அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவர்கள் எங்கேனும் இருப்பார்கள், நம்மிடம் பேசுவார்கள் என்று நம்பத் தோன்றும். இந்த நம்பிக்கை விருப்பத்தைத்தான் இந்த ஆவி வியாபாரிகள் மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்.

அமானுஷ்யம் என்பது வெளியில் இல்லை; அது நம் பயத்திலும், ஏமாறத் தயாராக இருக்கும் மனத்திலும்தான் இருக்கிறது. சுவரில் தட்டும் சத்தத்தைக் கேட்டுப் பயப்படுவதை விட, வீட்டிற்குள் எலி இருக்கிறதா என்று விளக்கைப்போட்டுப் பார்ப்பதே எப்பொழுதும் புத்திசாலித்தனம்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

டக் டக் பேய்கள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 29

டக் டக் பேய்கள்!

மன்னார்குடி அருகே அந்தக் காலத்து பழைய வீடு.

நேரம் இரவு 10:30.

அந்த வீட்டு ஹாலில் நாற்பது பேர் மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். நடுவில் பதினான்கு வயது திவ்யாவும், பன்னிரண்டு வயது ரம்யாவும் மரப் பலகையில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தார்கள்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இரண்டு அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் அவர்களின் நிழல் சுவரில் பிரம்மாண்டமாக ஆடியது.

"தாத்தா. வந்திருக்கீங்களா? வந்திருந்தா ஒரு தட்டு தட்டுங்க." என்றாள் திவ்யா, கண்களை மூடிக்கொண்டு.

அடுத்த நொடி,

டக்!

விட்டத்திலிருந்தோ, சுவரிலிருந்தோ அந்தச் சத்தம் தெளிவாகக் கேட்டது. கூட்டத்தில் ஒரு சிலிர்ப்பு.

"ஒரு தட்டுன்னா 'ஆமா' ரெண்டு தட்டுன்னா 'இல்லை'. இப்ப யாரு கேள்வி கேட்கறீங்க?"

கூட்டத்தில் இருந்த ஆடிட்டர் சுந்தரம் முன்னால் வந்தார். வேர்த்து விறுவிறுக்க, "என் பொண்ணுக்கு இந்த வருஷம் கல்யாணம் நடக்குமா?" என்றார்.

டக்!

ஆடிட்டர் சுந்தரம் கண்ணீரோடு ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை அங்கே இருந்த தட்டில் வைத்தார். கூட்டம் பரவசத்தில் மூழ்கியது.

அந்த இரவு நேரத்திலும் மூலையில் அமர்ந்து சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராமராஜன் ஒரு பயோ மெடிக்கல் என்ஜினீயர். அவனுக்கு இந்த ஆவி ஆட்டம் சுத்தமாக மூடநம்பிக்கையாகப் பட்டது.

அடுத்த நாள் மதியம்.

திவ்யாவும் ரம்யாவும் திண்ணையில் உட்கார்ந்து நொங்கு தின்று கொண்டிருந்தார்கள். ராமராஜன் மெதுவாக அவர்களிடம் போனான்.

"ஏய் திவ்யா. நேத்து நைட்டு தாத்தா உண்மையாவே வந்தாரா?"

திவ்யா சுற்றும் முற்றும் பார்த்தாள். குறும்புச் சிரிப்பு சிரித்தாள். "அண்ணே... தாத்தாவாவது, தம்பியாவது! எல்லாம் ஒரு ட்ரிக்!"

"ட்ரிக்கா? எப்படிடி? சுவரில் ஸ்பீக்கர் எதுவும் வெச்சிருக்கீங்களா? நான் நேத்து ராத்திரி புல்லா செக் பண்ணிட்டேன், ஒயர் எதுவும் இல்லையே!"

ரம்யா சத்தமாகச் சிரித்தாள். "ஒயராவது, கத்தரிக்காயாவது! இதோ பாரு அண்ணே."

அவள் தன் கால் பெருவிரலை லேசாக வளைத்து சுடக்கு எடுத்தாள்.

டக்!

அதே சத்தம்! மரத் தரையில் அவள் பெருவிரல் எலும்பு முட்டி அந்தச் சத்தத்தை உருவாக்கியது. பலகையில் கால் வைத்திருப்பதால் அந்தச் அதிர்வு சுவரில் இருந்து வருவது போல எதிரொலிக்கும்.

ராமராஜன் ஆச்சரியப்பட்டுப்போனான். "அடப்பாவிங்களா! பெருவிரல் சுடக்கை வெச்சுக்கிட்டா ஊரையே ஏமாத்துறீங்க?"

திவ்யா அப்ஸெட்டானாள். "அண்ணே. தயவுசெஞ்சு அப்பாக்கிட்ட சொல்லிடாதீங்க. நாங்க சும்மா விளையாட்டுக்கு ஆரம்பிச்சது. அப்புறம் ஊர்க்காரனுங்க காசு தர ஆரம்பிச்சதும் அப்பாவே இதை பிசினஸ் ஆக்கிட்டாரு!"

"நான் யார் கிட்டயும் சொல்லல. ஆனா இன்னைக்கு நைட்டு உண்மையைப் புரிய வைக்கிறேன்" என்றான் ராமராஜன்.

அன்று இரவு. அதே கூட்டம். ஆடிட்டர் சுந்தரம் மீண்டும் வந்திருந்தார்.

ராமராஜன் சட்டென்று எழுந்து, "எல்லாரும் நிறுத்துங்க! இது ஆவியும் இல்லை, பேயும் இல்லை! இந்த ரெண்டு பொண்ணுங்களும் காலில் இருக்குற விரலை சுடக்கு எடுத்து உங்களை ஏமாத்துறாங்க!" என்று கத்தினான்.

திவ்யாவும் ரம்யாவும் பயந்துபோய், "ஆமா. நாங்க ஏமாத்திட்டோம். எங்களை மன்னிச்சுடுங்க" என்று உண்மையைக் கதறி அழுதே சொல்லிவிட்டார்கள்.

கூட்டம் ஒரு நிமிடம் அமைதியானது. பிரகாஷ் வெற்றிப் புன்னகையோடு பார்த்தான்.

ஆடிட்டர் சுந்தரம் மெதுவாக எழுந்தார். பிரகாஷைப் பார்த்து எரிச்சலாக, "தம்பி! நீ சும்மா இருப்பா. பொண்ணுங்க பயத்துல ஏதோ உளறுதுங்க. நேத்து இது டக்னு ஒரு தட்டு தட்டுன அப்புறம்தான் எனக்குப் பொண்ணு பார்க்க வரேன்னு போன் வந்துச்சு! இது தாத்தாவோட ஆசிர்வாதம் இல்லாம வேற என்ன?" என்றார்.

பக்கத்தில் இருந்த இன்னொருவர், "ஆமாப்பா. ஆவிங்க சில சமயம் இந்த மாதிரி பொண்ணுங்க உடம்புல இறங்கித்தான் உண்மை பேசும். நீ சின்னப் பையன், உனக்கு இதெல்லாம் புரியாது. தள்ளிப்போ!" என்றார்.

அடுத்த பத்து நிமிடத்தில் ராமராஜன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டான்.

ராமராஜன் தெருவில் நடந்து வந்தான். பின்னால் அதே டக்... டக்... சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. தட்டில் காசுகளும் விழுந்து கொண்டுதான் இருந்தன.

மனிதனுக்கு உண்மை தேவையில்லை. தன் நம்பிக்கைக்கு சாதகமான ஒரு பொய் மட்டுமே தேவைப்படுகிறது!

ஆனால், இந்த மன்னார்குடி மேட்டருக்கு ஒன்றே முக்கால் நூற்றாண்டு வரலாறு இருக்கிறது. ஆனால், அது நாளைக்கு.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Wednesday, 22 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.07.2026

1) பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்துக்குக் காமராஜர் பெயர் சூட்டப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

2) அரசுப் பள்ளிகளில் நீர் எழில் பள்ளித் திட்டத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்.

3) நீட் வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

4) தமிழகத்தில் இன்று இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்.

5) பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்டோருக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Education & GK News

1) The Tamil Nadu government has announced that the school breakfast scheme will be named after Kamarajar.

2) School Education Minister Rajmohan inaugurated the 'Neer Ezhil Palli' scheme in government schools.

3) The Central Government has announced its readiness to discuss the NEET question paper leak in Parliament.

4) Temperatures in Tamil Nadu are expected to rise above normal levels today.

5) A ban on social media usage has been imposed on individuals under the age of 15 in France.

Tuesday, 21 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.07.2026

1) சூலை 30 முதல் +2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

2) ஆகஸ்ட் 5 இல் தமிழக பட்ஜெட் தாக்கலாகிறது.

3) குடியரசு துணைத்தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகிறார்.

4) எதிர்க்கட்சிகளின் அமளியால் இரண்டாவது நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடங்கியது.

5) அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழைக்கு 21 பேர் பலியாகியுள்ளனர்.

Education & GK News

1) Original mark sheets will be issued to Class 12 students starting July 30.

2) The Tamil Nadu budget will be presented on August 5.

3) Vice President C.P. Radhakrishnan is visiting Coimbatore today.

4) Parliament was stalled for the second consecutive day yesterday due to the uproar caused by opposition parties.

5) Twenty one people have lost their lives due to heavy rains in Assam.