Saturday, 19 September 2026

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 21

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 21

குரூப் மற்றும் ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

செயற்கை நுண்ணறிவின் வியக்க வைக்கும் பயணம்!

செயற்கை நுண்ணறிவின் வியக்க வைக்கும் பயணம்!

நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும், இந்த ரோபோ என்கிற வார்த்தை ஒரு நாடக மேடையில் இருந்துதான் குதித்து வந்தது என்று?

கதை என்னவென்றால், 1921 இல் காரெல் சாபெக் என்ற நாடக ஆசிரியர் எழுதிய நாடகத்தில்தான் ரோபோ என்ற பதம் முதன்முதலில் அறிமுகமானது. அப்போது யாருக்காவது தெரிந்திருக்குமா, அன்று ஒரு நாடகத்தில் விளையாட்டாகத் தூவப்பட்ட விதை, இன்று உலகத்தையே தன் கைக்குள் போட்டுக் கொள்ளும் என்று?

அங்கிருந்து தொடங்கியது பாருங்கள் ஒரு சரித்திரம். 1950 இல் ஆலன் டூரிங் என்ற மேதாவி, "இயந்திரங்கள் சிந்திக்குமா?" என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். மனிதனோடு உரையாடி, இது கணினியா இல்லை மனிதனா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சோதிக்கும் அந்த டூரிங் சோதனைதான் செயற்கை நுண்ணறிவின் அரிச்சுவடி.

அப்புறம் என்ன, 1956 இல் டார்ட்மவுத் ஆய்வுக் கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு  அதிகாரப்பூர்வமாகப் பிறந்தது.

1961 இல் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலைக்குள் யூனிமேட் ரோபோ நுழைந்து வேலை செய்ய ஆரம்பித்தது. மனிதனின் வேலையை இயந்திரம் செய்யத் தொடங்கிய முதல் அப்ளாஸ் அது!

எல்லா சாம்ராஜ்யத்திலும் ஒரு சறுக்கல் இருக்குமில்லையா?

1980களில் செயற்கை நுண்ணறிவு துறையில் எக்ஸ்பெர்ட் சிஸ்டம் வந்த வேகத்தில் மந்தமானது. நிதி உதவி நின்றுபோய், பலரும் இதை செயற்கை நுண்ணறிவின் உறைநிலை காலம் என்று மூட்டை கட்டி வைத்துவிட்டார்கள்.

ஆனால், சாம்பலிலிருந்து மீண்டெழும் பீனிக்ஸ் பறவை போல செயற்கை நுண்ணறிவு மீண்டும் மிரட்டலாகத் திரும்பியது.

1997 இல் ஐ.பி.எம்மின் டீப் ப்ளூ கணினி, உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவை வீழ்த்தி மிரள வைத்தது. "டேய், என்னோடயே மோதுறியா?" என்று செயற்கை நுண்ணறிவு மனித மூளையைச் செஸ் பலகையில் வியக்க வைத்த தருணம் அது.

2010களுக்குப் பிறகு காலம் சூடு பிடிக்க ஆரம்பவிட்டது.

2011இல் ஆப்பிள் சிரி போனில் வந்து நம்மிடம் பேச ஆரம்பித்தது.

2012 இல் ஆழமான கற்றல் மூலம் படங்களையும் குரல்களையும் அடையாளம் காணும் திறனைப் பெற்றது.

2020 & 2021 இல் ஜி.பி.டி3 மற்றும் டால்இ வருகையால், செயற்கை நுண்ணறிவு எழுதவும், வர்ணிக்கவும், சொல்லியபடியே அட்டகாசமான படங்களை வரையவும் கற்றுக்கொண்டது.

2022 இல் சாட் ஜி.பி.டி புரட்சி! பொதுமக்களின் அன்றாடத் தேநீர்க் கடைப் பேச்சு வரை செயற்கை நுண்ணறிவு ஊடுருவியது.

இன்று 2026 இல் வந்து நிற்கிறோம். இப்போது ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு வெறும் கேள்விக்கு பதில் சொல்லும் காலத்தில் இல்லை. ஏ.ஐ. ஏஜெண்டுகள் வடிவில், இணையத்தளங்களை நாமே தேடாமல், நமக்காக வேலைகளைச் செய்து முடிக்கும் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது.

காலம் வேகமாக ஓடுகிறது. நேற்றைய அறிவியல் புனைகதை, இன்றைய நிஜம்.

அடுத்து என்ன மாயம் செய்யப் போகிறது இந்த சிலிகான் மூளை?

பொறுத்திருந்து பார்ப்போம்!

*****

அப்பா வந்தார்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 89

அப்பா வந்தார்!

"ஜெயந்தி! அந்த போட்டோவுக்கு கீழே ரெண்டு இட்லி வச்சிட்டீயான்னு பாரு. அப்பாவுக்கு எல்லாத்தையும் கவனிச்சு வைக்கணும்."

ஹாலில் சோபாவில் உட்கார்ந்து தினமணி பேப்பர் படித்துக்கொண்டிருந்த தமிழரசன், அடுப்பறையை நோக்கிச் சத்தமிட்டான்.

சமையலறையிலிருந்து வந்த அவரது மனைவி ஜெயந்தி, "எல்லாம் வச்சாச்சுங்க. உங்க அப்பாவுக்கும் உங்களுக்கும் டீ கொண்டு வந்திருக்கேன். ஒரு டம்ப்ளரைப் போட்டோ பக்கத்துல வெச்சிடுறேன். இந்த டம்ப்ளரை நீங்க குடிங்க." என்று நீட்டினாள்.

அலுவலகத்திலிருந்து வந்த அவர்களின் மகன் கபிலன், டூவீலரை போர்டிக்கோவில் நிறுத்தி விட்டு, உள்ளே நுழைந்தான். அவன் முகத்தில் ஒருவித சோர்வு. லேப்டாப் பேக்கை சோபாவில் வீசிவிட்டு, டைனிங் டேபிளுக்குப் போனான். அங்கே தாத்தாவின் புகைப்படத்திற்கு முன்னால் இப்போது ஆவி பறக்கும் இட்லியும், காரசாரமான மிளகாய் சட்னியையும் கூடவே டீ டம்ப்ளரையும் பார்த்தான்.

கபிலன் தன் அப்பாவைப் பார்த்து, "அப்பா! என்ன இது? இன்னும் இந்த பழைய காலத்து மூடநம்பிக்கையெல்லாம் விடலையா? என் ஆபீஸ்ல பிரெண்ட்ஸ் எல்லாம் பாத்தா என்ன நினைப்பாங்க? டெக்னாலஜி வளர்ந்துட்ட இந்தக் காலத்திலேயும் தாத்தா வந்து சாப்பிடுவாருன்னு நம்புறீங்களா?" என்றான் எரிச்சலுடன்.

தமிழரசன் டீயை உறிஞ்சிக்கொண்டே அமைதியாகப் புன்னகைத்தான். "கபிலா! உட்காரு. உன் லேப்டாப்பில் பேட்டரி தீர்ந்து போனா என்ன செய்வ? சார்ஜ் போடுவே. அப்போதான் அது மறுபடியும் வேலை செய்யும். இந்த உலகத்தில் வாழ்கிற நமக்கு ஒவ்வொரு நாளும் சோகங்கள், தோல்விகள், மரண பயம்னு மனசுல பேட்டரி டவுன் ஆயிடுது. அப்போ நமக்கு யாரோடவாவது ஒரு கனெக்சன் தேவையா இருக்கு. அந்தக் கனெக்சன்தான் சார்ஜ்."

கபிலன் புருவங்களை உயர்த்தினான். "புரியல அப்பா."

"உனக்குத் தெரியுமா கபிலா? ரஷ்யாவில் ஈஸ்டர் முடிந்த சில நாட்களில், கல்லறைகளுக்குப் போய் தண்ணீரை ஊற்றி, செத்தவங்களுக்காகப் பிராத்தனை பண்ணி, அவங்களுக்குப் பிடித்த உணவைக் கொண்டு போய் வைப்பாங்க. ஏன் தெரியுமா? இறந்துபோன முன்னோர்கள் நம்மை விட்டுப் போகல, நம்மோடவே இருக்காங்க'ன்னு அவங்களுக்கு அவங்களே சொல்லிக்கிற ஆறுதல் அது.

இங்கேயும் அப்படித்தான். தாத்தா உயிரோடு இல்லைனு எனக்குத் தெரியும். ஆனால், அவர் எனக்குப் பிடித்த நல்ல மனிதர். அவர் நினைவுகள் தரும் தன்னம்பிக்கை இருக்கே, அதுவே பெரிய சார்ஜ் மாதிரி. செத்தவங்க திரும்பி வரமாட்டார்கள்தான். ஆனால், அவர்கள் ஞாபகங்கள் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் அல்லவா? அதான், வீட்டுல எதைச் செய்தாலும் தாத்தாவோட படத்துக்கு முன்னாடி கொஞ்சம் வெச்சிட்டுச் சாப்பிட்டாத்தான் எனக்கு ஒரு திருப்தி."

கபிலன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அவன் தன் அப்பாவின் தோளில் கைபோட்டுக் கொண்டு, "ஓகே அப்பா! தாத்தாவுக்குப் பிடிச்ச சட்னிதான் வைச்சிருக்கீங்க இல்ல? அப்போ சரி!" என்றான் லேசான சிரிப்புடன்.

ஜெயந்தி சமையலறைக் கதவின் ஓரத்தில் நின்று இவர்களைப் பார்த்து, "நல்ல அப்பா! நல்ல புள்ளை!" என்றபடியே  புன்னகைத்துக்கொண்டாள்.

இரவு மணி பன்னிரண்டு.

வீடு முழுதும் ஆழ்ந்த அமைதி. மின்விசிறியின் சத்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது.

திடீரென ஹாலில் ஒரு மெல்லிய சலசலப்பு. தட்டு கிண்ணங்கள் மோதும் சத்தம் கரகரப்பாகக் கேட்டது. லேசான விழிப்பு வந்த தமிழரசன், போர்வையை விலக்கிவிட்டு மெல்ல எழுந்து ஹாலுக்கு வந்தான். டைனிங் டேபிளை நோக்கி அவன் பார்வை சென்றது.

அங்கு, புகைப்படத்திற்குக் கீழே வைக்கப்பட்டிருந்த அந்த இட்லித் தட்டைச் சுற்றி ஒருவித நீல நிற வெளிச்சம் மங்கலாகப் பரவியிருந்தது. தட்டில் இருந்த இரண்டு இட்லிகளில் ஒன்று காணாமல் போயிருந்தது! மிளகாய் சட்னி லேசாகக் குழைக்கப்பட்டிருந்தது. அந்த இருளிலும், டேபிளுக்கு அருகில் யாரோ ஒருவர் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு எழுவது போன்ற ஒரு நிழல் உருவம் மங்கலாகத் தெரிந்து மறைந்தது.

தமிழரசனின் ரத்த ஓட்டம் ஒரு நிமிடம் நின்றுவிட்டது போல் இருந்தது. அவன் உடல் சிலிர்த்தது.

அப்போது, காற்றில் மிதந்து வருவது போல் ஒரு முதியவரின் கரகரத்த குரல் அவன் காதுகளில் கேட்டது, "டேய் தமிழரசா! சட்னி சூப்பரா அரைச்சிருக்காடா ஜெயந்தி. நேத்தி வெச்சதைவிட இன்னிக்குக் காரம் கொஞ்சம் தூக்கல்தான். ஆனா, அந்த டேஸ்ட் கொஞ்சம் கூட குறையலடா. பேரப்பையன் கபிலனுக்கு நீ சொன்ன மாதிரி, இந்த ரீசார்ஜ்தானே எதிர்பார்த்தது?  சந்தோஷம்தானடா உனக்கு?"

தமிழரசன் அதிர்ச்சியில் உறைந்துபோய், வார்த்தைகள் வராமல் கண் கலங்க நின்றான்.

இத்தனை நாள் நடக்காது ஒன்று, திடீரென்று இன்று மட்டும் எப்படி? இப்படியும் நடக்குமா என்ன? என்பன போன்ற கேள்விகள் அவன் மனதைக் குடைய ஆரம்பித்தன.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Friday, 18 September 2026

போட்டித்தேர்வுக்கு உதவும் பொதுத்தமிழ் குறிப்புகள்

போட்டித்தேர்வுக்கு உதவும் பொதுத்தமிழ் குறிப்புகள்

போட்டித்தேர்வுக்குத் தயார் செய்வோருக்கு உதவும் வகையிலான பொதுத்தமிழ் குறிப்புகளைக் கீழே காண்க

*****

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 20

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 20

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.09.2026

1) தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 12 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேக்கர் ஒப்புதல் அளித்துள்ளார்.

2) தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

3) டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

4) 45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று ஜப்பானில் தொடங்குகிறது.

5) ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் கோந்தால் என்ற மராத்திய திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Education & GK News

1) Tamil Nadu Governor R.V. Arlekar has granted assent to 12 bills passed by the Tamil Nadu Legislative Assembly.

2) A government order has been issued to establish seven new government nursing colleges in Tamil Nadu.

3) Hall tickets for the TNPSC Group 1 examination have been released online.

4) The Asian Games, featuring participation from 45 countries, begin today in Japan.

5) The Marathi film 'Gondhal' has been nominated as India's entry for the Oscars; notably, Ilaiyaraaja has composed the music for this film.

இணையத்தில் வளர்ந்த பேய்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 88

இணையத்தில் வளர்ந்த பேய்!

திருவாரூரில் சோழா தியேட்டரிலோ, தைலம்மை தியேட்டரிலோ, நடேஷ் தியேட்டரிலோ ஒரு படம் பார்க்கிறோம். படம் முடிந்ததும், "இது நிஜமாவே நடந்த சம்பவம் பாஸ்! அந்தப் பொண்ணு இன்னும் காடேறி மீளலை" என்று பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறவன் அடித்து விடுவான். நாம் நம்புவோம். ஆனால், உலகம் முழுவதையும் ஒரு படம் இப்படித்தான் ஏமாற்றியது என்றால் நம்ப முடிகிறதா?

1999ஆம் ஆண்டு. இணையம் இப்போது போல உலகம் முழுவதும் உள்ளங்கையில் இல்லை. மோடம் சத்தத்துடன், ஸ்லோவான கனெக்சனில் உலகைத் தேடிக்கொண்டிருந்த காலம். அப்போது இன்டர்நெட்டில் ஒரு வலைத்தளம் வைரலானது.

மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பில்கிஸ்டன் காடுகளுக்குள், உள்ளூர் பேயான பிளேர் விட்ச் என்ற சூனியக்காரியைப் பற்றி ஆவணப்படம் எடுக்கச் சென்ற மூன்று திரைப்பட மாணவர்களான ஹீதர் டொனாஹியூ, ஜோசுவா லியோனார்ட், மைக்கேல் சி வில்லியம்ஸ் ஆகியோர் திடீரென மாயமாகிவிட்டனர். பல மாத தேடுதலுக்குப் பின், அவர்கள் பயன்படுத்திய கேமரா மற்றும் வீடியோ கேசட்டுகள் மட்டுமே அந்த அடர்ந்த காட்டின் நடுவில் இருந்து மீட்கப்பட்டன. அந்த கேசட்டுகளில் பதிவானக் காட்சிகள்தான் இணையத்தில் வெளியிடப்பட்டன.

இதுதான் செய்தி. அசல் பார்மட்.

இன்டர்நெட்வாசிகள் இதைப் பார்த்துக் கிறங்கிப் போனார்கள். அப்போதுதான் பவுண்ட் புட்டேஜ் என்ற ஜானர் உலகத்திற்குப் பரிச்சயம். இது சினிமா இல்லை; நிஜம் என்று அடித்துச் சொன்னார்கள்.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, இந்தச் செய்தி காட்டுத்தீ போல பரவியது. இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் தளத்தில் அந்த மூன்று மாணவர்களின் பெயருக்கு எதிராகவும் காணாமல் போனவர்கள் மற்றும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என்று போடப்பட்டிருந்தது.

இதைக் பார்த்த மக்கள் பீதியில் உறைந்தார்கள். தியேட்டருக்குப் போனால் ஏதோ ஹார்ட்டு அட்டாக் வரப்போகிற மாதிரி ஒரு திரில். தியேட்டருக்கு வெளியே ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்தது போன்ற ஒரு பிரமை.

தி பிளேர் விட்ச் பிராஜெக்ட் திரைப்படம் திரையிடப்பட்ட போது, கேமரா தொடர்ச்சியாக ஆடிக்கொண்டே இருந்தது. கைகளில் வைத்திருக்கும் கேமராவை யாரோ பயத்துடன் ஓடிக்கொண்டே ஷூட் செய்தது போன்ற அந்தத் தரம், மக்களுக்கு அது நிஜம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொடுத்தது.

ஆனால், லாஜிக் ரீதியாக யோசித்தால், காட்டில் செத்தவர்களின் கேமரா எப்படி தியேட்டரில் ரிலீஸாகும்? இந்த எளிய கேள்வி அப்போது யாருடைய மூளைக்கும் எட்டவில்லை. காரணம், மனிதன் தனக்குத் தெரியாத, புரியாத அமானுஷ்யங்களை நம்புவதில் அலாதியான பிரியம் கொண்டவன்.

உண்மையில் என்ன நடந்தது?

இதன் பின்னணிதான் என்ன என்கிறீர்களா?

இதன் பின்னணியில் இந்த மாஸ்டர் மைண்ட் வேலையைச் செய்தவர்கள் எட் சான்செஸ் மற்றும் டேனியல் மைரிக் என்ற இரண்டு இளம் இயக்குநர்கள். கையில் காசு இல்லை. பெரிய ஸ்டுடியோக்களின் சப்போர்ட் இல்லை. ஆனால், மண்டையில் பயங்கரமான மூளை வேலை செய்தது.

அவர்கள் என்ன செய்தார்கள்? 25,000 டாலர் செலவில் ஒரு குறைந்த பட்ஜெட் படத்தை எடுத்தார்கள். நடிகர்களைக் காட்டில் தனித்தனியாக விட்டு விட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கும் உணவைக் குறைத்து, தினமும் இரவில் அவர்களை வேண்டுமென்றே பயமுறுத்தினர். கேமராவைக் கொடுத்துவிட்டு, "உங்களுக்குத் தோன்றுவதை நீங்களே ஷூட் செய்யுங்கள்" என்றனர். நடிகர்களின் முகத்தில் உண்மையான பயம் தெரிந்தது.

படம் முடிந்ததும், அதை ஒரு சினிமா மாதிரி விளம்பரப்படுத்தினால் எடுபடாது என்று யோசித்தனர். இணையம் என்ற புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்தனர். "இது நிஜமான வீடியோ" என்று ஒரு வெப்சைட்டை உருவாக்கினர். காணாமல் போன மாணவர்களின் போஸ்டர்களை ஒட்டினர். போலீஸ் விசாரணைக் குறிப்புகளைப் போலக் கட்டுரைகளை வெளியிட்டனர். உலகம் முழுவதும் உள்ள மீடியாக்கள் இதை நம்பி அடித்துப் பிடித்துச் செய்தி வெளியிட்டன.

படம் பாக்ஸ் ஆபிஸில் அள்ளிக் குவித்தது. உலக அளவில் சுமார் 250 மில்லியன் டாலர்களை வாரிக் குவித்தது. சினிமா வரலாற்றில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.

ஆனால், சிக்கல் வேறு இடத்தில் தொடங்கியது.

படம் பார்த்த மக்கள், அந்த மேரிலேண்ட் காடுகளுக்குத் தாங்களாகவே தேடிச் செல்லத் தொடங்கினார்கள். "நாமும் அந்தப் பேயைத் தேடுவோம்; காணாமல் போன மாணவர்களின் உடலைக் கண்டுபிடிப்போம்." என்று கூட்டம் கூட்டமாகக் காடுகளில் இறங்கினர். நிலைமை கைமீறிப் போனது. காடுகளுக்குள் சுற்றுலாப் பயணிகள் மாட்டிக்கொண்டு தவிக்க, போலீசாருக்கு வேலைப் பளு அதிகரித்தது.

கடைசியில், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட படக்குழு, "அடேய் மொக்கச்சாமிகளா! அது சினிமா பாஸ்! நாங்க நடிச்சுக் காட்டியது!" என்று உண்மை விளம்பரத்தை வெளியிட வேண்டியதாயிற்று.

சில ரசிகர்கள் இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஏமாற்றமடைந்தனர். "எங்களை ஏமாற்றிவிட்டார்கள்" என்று கோபப்பட்டனர். ஆனால், அதுதான் சினிமாவின் வெற்றி.

தி பிளேர் விட்ச் பிராஜெக்ட் நமக்குச் சொல்லித் தரும் பாடம் என்ன?

மனித மனம் அமானுஷ்யங்களை நம்புவதை எப்போதுமே விரும்புவதுதான். அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டாலும், நமது மூளை இன்னும் காடுகளிலும் பேய்களோடும் வாழ்வதில்தான் ஆர்வம் காட்டுகிறது.

இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், எதை நம்பலாம், எதை நம்பக்கூடாது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நம்முடைய லாஜிக்தான்.

அடுத்த முறை சமூக வலைத்தளங்களில் ஏதோ ஒரு மர்ம வீடியோவைப் பார்த்துவிட்டுப் பயந்து நடுங்கும்போது, பிளேர் விட்ச் மாணவர்களை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். திரைக்குப் பின்னால் ஒரு கேமராவும், அதை இயக்கும் மனித மூளையும் கண்டிப்பாக இருக்கும்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****