Sunday, 19 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.07.2026

1) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

2) ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று புறப்பட்டார்.

3) ஐம்மு காஷ்மீரில் பெய்த கனமழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.

4) ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.

5) பேட்மின்டனில் ஜப்பான் ஓப்பன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார் பி.வி. சிந்து.


Education & GK News

1) The Monsoon Session of Parliament begins today.

2) President Droupadi Murmu left yesterday for a three-day state visit to European countries.

3) Twelve people have lost their lives due to heavy rains in Jammu and Kashmir.

4) The United States is intensifying its attacks on Iran.

5) P.V. Sindhu became the first Indian to win the Japan Open badminton title.

டுபாக்கூர் பேயின் மரண வாக்குமூலம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 26

டுபாக்கூர் பேயின் மரண வாக்குமூலம்!

அந்தக் காக் லேன் தெருவில் பத்தாயிரம் பேர் கூடியிருந்தார்கள். விஞ்ஞானிகள், அறிஞர்கள், ஏன், புகழ்பெற்ற எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் வரை எல்லாரும் அந்த வீட்டு வாசலில் தவம் கிடந்தார்கள்.

லண்டன் நகரமே ஸ்தம்பித்தது.

சீப் இன்ஸ்பெக்டர் தாமஸ், புகழ்பெற்ற புலனாய்வளார் ஜான் எலியட்டின் தற்காலிக அலுவலக அறைக்குள் நுழைந்தார்.

"ஜான், லண்டன் மாநகரமே நடுங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் கணவனைக் கைது செய்யச் சொல்லி மேயர் வரை அழுத்தம் கொடுக்கிறார்கள். என்ன செய்யப் போகிறாய்?"

ஜான் தன் பைப் புகையை மெதுவாக ஊதினார். சிறு புன்னகையை உதிர்த்தார்.

"தாமஸ், ஆவிகள் கிரிமினல் கேஸ் போடுவதை நான் நம்ப மாட்டேன். ஆத்மாவுக்கு ஆர்சனிக் வேதியியல் தெரியாது. இங்கே ஏதோ ஹியூமன் எரர் நடக்கிறது."

"அப்படின்னா?" என்றார் தாமஸ் புரியாமல்.

"இன்று இரவு இறுதி ஆட்டம். வாருங்கள்." என்றார் ஜான்.

அதே அறை.

நள்ளிரவு.

இம்முறை எலிசபெத்தின் கைகள் படுக்கையோடு சேர்த்து இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தன. வாயில் துணி அடைக்கப்பட்டிருந்தது. அவள் அசையக் கூட முடியாது.

"இப்போது சத்தம் வரட்டும், பார்ப்போம்," என்றார் இன்ஸ்பெக்டர் ஜான்.

நேரம் நகரத் தொடங்கியது.

12:00...

12.05…

12:10...

12.15…

12.20…

12.25…

12:30…

… … …

… … …

அறையில் நிசப்தம்.

எந்தச் சத்தமும் இல்லை.

"பார்த்தீர்களா இன்ஸ்பெக்டர்? எலிசபெத் அசையவில்லை என்றால் பேயும் வராது. பிகாஸ், த கேர்ள் இஸ் எலிசபெத்!" ஜான் புன்னகைத்தார்.

"ஆனால் ஜான், அவள் கைகள் கட்டப்பட்டிருந்த போது கூட கடந்த வாரம் சத்தம் வந்ததே?" எமிலி கேட்டாள்.

"அங்குதான் அந்தத் தவறு நடந்தது எமிலி. தாமஸ், அந்தப் பெண்ணின் படுக்கையைத் தூக்குங்கள்."

தாமஸ் படுக்கையைத் தூக்கினார். மெத்தைக்கு அடியில், எலிசபெத் உடுத்தியிருந்த மேலங்கியின் உள்பகுதியில் ஒரு தடிமனான, ஆறு இன்ச் மரக்கட்டை கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.

ஜான் அதைத் கையில் எடுத்தார். "சிம்பிள் மெக்கானிக்ஸ் எமிலி. கைகள் கட்டப்பட்டிருந்தாலும், அவள் தன் கால்களாலும் இடுப்பாலும் இந்த மரக்கட்டையைக் கட்டிலில் உரசி, தட்டி சத்தம் எழுப்பியிருக்கிறாள். ஒரு தேர்ந்த தட்டச்சு செய்பவள் போல. இதைத் துல்லியமாகச் செய்திருக்கிறாள்."

"எதற்காக?" தாமஸ் கேட்டார்.

இப்போது அறையின் மூலையில் நின்றுகொண்டிருந்த எலிசபெத்தின் தந்தை ரிச்சர்ட் பார்சன்ஸ் நடுங்கத் தொடங்கினான்.

"அவள் அப்பாவுக்காக!" ஜான் பார்சன்ஸை முறைத்தார்.

"பிரான்சிஸ் லின்க்ஸுக்கும் இவனுக்கும் பணத் தகராறு. அவனைப் பழிவாங்க, தன் மகளையே பேயாக மாற்றியிருக்கிறான் இந்த அயோக்கியன்."

பார்சன்ஸ் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு நியூகேட் சிறைக்குக் கூட்டிக்கொண்டு போகப்பட்டான்.

எமிலி ஜானைப் பார்த்துக் கேட்டாள். "ஜான், ஒரு நிமிடம் நான் நிஜமாகவே பேய் என்று பயந்துவிட்டேன். பேய்களுக்குக் கூட எவ்வளவு கிரிமினல் மூளை பார்த்தீர்களா?"

ஜான் லேசாகச் சிரித்தார்.

"பேய்களுக்கு மூளை கிடையாது எமிலி, ஏன்னா அவை இல்லவே இல்லை. ஆனால், பேய்களை உருவாக்கும் மனிதர்களுக்கு இருக்கிறதே. அது அக்மார்க் கிரிமினல் மூளை. விஞ்ஞானம் இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை ஒரு மரக்கட்டையை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த லண்டன் நகரத்தையே மிரட்டும். இனி அது முடியாது. கேஸ் குளோஸ்டு!"

இப்போது அந்தக் காக் லேன் தெருவில் ஈ, காக்கா கூட இல்லை, ஏன்… பேயும் இல்லை.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 18 July 2026

பேயின் பைனரி கோட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 25

பேயின் பைனரி கோட்!

அட்ரஸ் எதுவென்றால், லண்டனின் காக் லேன் பகுதி.

வருடம் 1762.

நேரம் இருள் போர்த்திய நள்ளிரவு.

அப்பகுதியே பனியில் உறைந்திருந்தது.

அந்த வீட்டிற்குள் நுழைந்தால், ஒரு விசித்திரமான சத்தம் கேட்டது. ஏதோ ஒரு பூனை சுவரை நகத்தால் பிறாண்டுவது போன்ற ‘கீச் கீச்’ சத்தம். அப்புறம் ‘டக் டக்’ என்று தட்டும் சத்தம்.

அந்தக் காலத்து லண்டன்வாசிகளுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லை. டிவி கிடையாது, நெட்பிளிக்ஸ் கிடையாது. உடனே பேய்... பேய்... என்று கிளம்பி விட்டார்கள்.

அந்தப் பேய் வீட்டின் அறையில் இப்போது மொத்தம் நான்கு பேர் இருந்தார்கள். புகழ்பெற்ற புலனாய்வாளர் டாக்டர் ஜான் எலியட் தன் பாக்கெட் கடிகாரத்தைப் பார்த்தார்.

நள்ளிரவு 12:05.

அவருக்குப் பக்கத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கண்கள் சொருகப் படுத்திருந்தாள் பதினொரு வயது சிறுமி எலிசபெத். அவள் முகத்தில் ஒரு விசித்திரமான அமைதி.

"ஜான், எனக்குப் பயமாக இருக்கிறது" என்றாள் எமிலி. அவள் ஜானின் இளம் உதவியாளர்.

"பயப்படாதே எமிலி. பயம் என்பது ஒரு ரசாயன விபத்து. அட்ரினலின் சுரக்கிறது, அவ்வளவுதான். கவனி." ஜான் தன் ஸ்டெதாஸ்கோப்பைத் தயார் செய்தார்.

திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது.

கீச்... கீச்... ஸ்க்ராட்ச்...

யாரோ சுவரை நகத்தால் பிறாண்டுவது போன்ற சத்தம். மிக அருகில்.

அடுத்த நொடி, டக்... டக்... டக்...

அறையின் வெப்பநிலை சட்டென்று குறைந்தாற் போல் ஒரு பிரமை. எமிலி ஜானின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

"யார் அது?" ஜான் குரலை உயர்த்திக் கேட்டார்.

மறுபடி டக்... டக்...

"இங்க பார், நீ மனிதனாக இருந்தால் ஒருமுறை தட்டு. ஆவியாக இருந்தால் இருமுறை தட்டு." ஜான் ஒரு பைனரி கோடை உருவாக்கினார்.

டக்... டக்....

எமிலிக்கு மூச்சுத் திணறியது. "ஜான்... இது... இது ஏதோ சொல்ல வருது!"

"கேட்போம். உனக்கு என்ன வேண்டும்?"

சுவரில் இருந்து சத்தம் எக்கோ அடித்தது போலக் கேட்டது. ஒரு குறிப்பிட்ட தாள லயத்தில் தட்டல்கள் விழுந்தன. ஜான் தன் டைரியில் அதை டிகோட் செய்யத் தொடங்கினார். ஒரு தட்டல் 'ஏ', இரண்டு தட்டல் 'பி'...

ஐந்து நிமிட மௌனத்திற்குப் பின் ஜான் டைரியைப் பார்த்தார். அவர் நெற்றியில் வேர்வை துளிர்த்தது.

"என்ன எழுதியிருக்கிறது ஜான்?" எமிலி பதற்றமானாள்.

ஜான் டைரியைக் காட்டினார். அதில் இருந்த ஆங்கில வார்த்தைகள்:

'NOT SMALLPOX... ARSENIC... HUSBAND... MURDER'

"மை காட்! இது பிரான்சிஸ் லின்க்ஸ் என்பவரின் மனைவி பானி. சில மாதங்களுக்கு முன்னால் சின்னம்மை வந்து இறந்ததாகச் சொல்லப்பட்டவள். அவளுடைய ஆவிதான் இது!" எமிலி கத்தினாள்.

நான்கு பேரில் ஒருவராக இருந்த இன்ஸ்பெக்டர் தாமஸ் வெலவெலத்துப் போனார்.

"அப்படின்னா, பிரான்சிஸ்ஸின் வொய்ப் சின்னம்மை வந்து சாகல. அவரு கொடுத்த ஆர்சனிக்கலதான் இறந்திருக்கா. ஸோ, மர்டர். இப்போ என்ன பண்றது ஜான்?" என்றார் படபடப்பாக.  

தாமஸின் அதே கேள்விதான் நமக்கும்.

இப்போது என்ன செய்வது?

பேய் கொடுத்திருக்கும் ஸ்டேட்மென்டை வைத்து பிரான்சிஸ்ஸைத் தூக்கி ஜெயிலில் போட்டு, பிறகு தூக்கில் போடுவதா? இதெல்லாம் கப்சா என்று கேஸை மூடுவதா?

தாமஸ் என்ன செய்யப் போகிறார்? ஜான் என்ன சொல்லப் போகிறார்?

நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Friday, 17 July 2026

எலிசபெத் ராணியின் டெக்னோ மந்திரவாதிகள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 24

எலிசபெத் ராணியின் டெக்னோ மந்திரவாதிகள்!

விஞ்ஞானத்துக்கும் அஞ்ஞானத்துக்கும் நடுவே எப்போதும் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. சில சமயம் அந்த கோடு மொத்தமாக அழிந்துபோய்விடுகிறது. பதினாறாம் நூற்றாண்டு லண்டனில் அப்படித்தான் நடந்தது.

அங்கே இரண்டு பேர் இருந்தார்கள்.

ஒருவர் ஜான் டீ .

இன்னொருவர் எட்வர்ட் கெல்லி.

இதில் ஜான் டீ சாதாரண ஆள் இல்லை. எலிசபெத் மகாராணியின் ஆஸ்தான ஜோதிடர், கணிதவியலாளர், வானியலாளர்.

இன்னும் சொல்லப்போனால், ராணிக்கு ரகசியத் தகவல்களை அனுப்பும்போது தன் பெயருக்குப் பதில் '007' என்று கையெழுத்திட்ட நிஜமான ஜேம்ஸ் பாண்ட் இவர்தான்!

ஆனால், இவர்களுக்குள் இருந்த சயின்டிஸ்ட் திடீரென ரூட் மாறி, டெக்னோ மந்திரவாதிகளாக அவதாரம் எடுத்த கதைதான் சுவாரசியமானது.

ஜான் டீக்கு ஒரு விசித்திரமான ஆசை இருந்தது. பிரபஞ்சத்தின் ரகசியங்களை தேவதைகளிடமும், இறந்தவர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதற்குத்தான் நெக்ரோமன்சி எனப்படும் ஆவி வித்தைக்குள் இறங்கினார்.

ஆனால், அவருக்கு ஆவிகளுடன் நேரடியாகப் பேசும் ஆண்டெனா கிடைக்கவில்லை. அதற்குத்தான் எட்வர்ட் கெல்லி என்பவரைத் தன் மீடியம் ஆகத் துணைக்குச் சேர்த்துக்கொண்டார்.

கெல்லியிடம் ஒரு விசேஷமான நிலக்கரி போன்ற கிரிஸ்டல் கல் இருந்தது.

இந்தக் கிரிஸ்டல் கண்ணாடியை உற்றுப் பார்த்து, இறந்தவர்களின் ஆவிகளையும் தேவதைகளையும் கெல்லி ஆன்லைனுக்கு தட் மீன்ஸ் பேசுவதற்குக் கொண்டு வருவார்.

ஆவிகள் பேசிய விசித்திரமான மொழியை கெல்லி மொழிபெயர்க்க, ஜான் டீ அதை நோட்டுப் புத்தகத்தில் பரபரப்பாக எழுதிக் கொள்வார். இது ஏதோ இன்று நாம் பயன்படுத்தும் ஜூம் கால் போலத்தான்!

இவர்களின் ஆராய்ச்சி இத்துடன் நிற்கவில்லை. பழைய கிரேக்கம் மற்றும் ரோம் நாகரிகங்களின் ரகசிய மந்திரப் புத்தகங்களைத் தூசு தட்டினார்கள்.

அறிவியல் என்பது நாம் தேடும் உண்மை. மந்திரம் என்பது நாம் நம்ப விரும்பும் உண்மை.

பேய்களை நேரில் வரவழைக்க முடியும் என்று நம்பிய இவர்கள், கணிதக் குறியீடுகளையும், வேதியியல் சமன்பாடுகளையும் பயன்படுத்திப் பேய்களை வரவழைக்க அல்காரிதம் எழுதும் அளவுக்குப போய் விட்டார்கள். இப்படி அறிவியல் அறிவையும், மாந்திரீகத்தையும் மிக்ஸ் செய்ததால்தான் இவர்களை நாம் டெக்னோ மந்திரவாதிகள் என்கிறோம்.

அவர்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று நீங்கள் கேட்கலாம். இன்றைக்கு நமக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் கூகுள் செய்கிறோம். அன்று ஜான் டீக்கும் கெல்லிக்கும் பிரபஞ்சத்தின் ரகசியங்களை உடனடியாகத் தெரிந்துகொள்ள ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் தேவைப்பட்டது. அவர்கள் தேர்ந்தெடுத்த சர்வர்தான் அந்த ஆவிகள்!

விளைவு?

காலப்போக்கில் கெல்லியின் தில்லாலங்கடி வேலைகள் அம்பலமாகின. ஜான் டீயின் புகழும் மங்கியது.

இன்று நாம் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனின் திரையும் அன்று கெல்லி கையில் வைத்திருந்த கிரிஸ்டல் கல்லும் பார்க்க ஒன்றுபோலவே இருக்கின்றன. இரண்டுமே உலகத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகின்றன. வித்தியாசம் என்னவென்றால், கெல்லி பார்த்தது ஆவிகளை, நாம் பார்ப்பதோ ரீல்ஸை!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான சுய கணக்கெடுப்பு விவரங்களைப் பதிவு செய்ய…

மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான சுய கணக்கெடுப்பு விவரங்களைப் பதிவு செய்ய…

சுதந்திர இந்தியாவின் 8 ஆவது மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள்  இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் துவங்க உள்ளன. அதற்கு முன்பாகவே இன்றிலிருந்து உங்கள் வீட்டுக் கணக்கெடுப்பு குறித்த விவரங்களை நீங்களே சுயமாக இணையதளத்தில் பதிவு செய்யலாம்.  இதில் கேட்கப்படும் 33 கேள்விகளுக்கு உங்கள் பதில்களைப் பதிவேற்றம் செய்து, அதைத் தொடர்ந்து உங்களது அலைபேசி எண்ணைத் தந்து பதிவேற்றத்தை நிறைவு செய்ய வேண்டும். முடிவில் உங்களுக்கு வழங்கப்படும் 11 இலக்க SE அடையாள எண்ணைக் கணக்கெடுப்பு பணியின் போது நீங்கள் வழங்கினால், நீங்கள் வழங்கிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும்.  உங்கள் சுய விவரப் பதிவைச் செய்வதற்குக் கீழே உள்ள இணையதளத்திற்குச் செல்லவும்.

 https://se.census.gov.in/

*****

Thursday, 16 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.07.2026

1) தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதல் கட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு துவங்குகிறது.

2) மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான விவரங்களைப் பொதுமக்கள் சுயமாக இன்று முதல் இணையத்தின் மூலம் வழங்கலாம்.

3) தமிழகத்தில் ரசாயன நிறமூட்டி கலந்த அப்பளம் மற்றும் வற்றல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

4) நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாயின.

5) நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

Education & GK News

1) The first phase of the census in Tamil Nadu begins on August 1.

2) Starting today, the public can voluntarily provide census details online.

3) A ban has been imposed in Tamil Nadu on dried fritters containing chemical coloring agents.

4) The results of the NEET re-examination have been released.

5) Prime Minister Narendra Modi is inaugurating the country's first hydrogen train today.

கருப்புப் பளிங்கின் கடைசி அத்தியாயம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 23

கருப்புப் பளிங்கின் கடைசி அத்தியாயம்!

இப்போது நாம் போகப் போகும் அட்ரஸ் எதுவென்றால், லண்டன்

இருள்.

மரணத்தின் உறைபனி வாசம் அறையை நிரப்பியது.

நொடி முட்கள் நகரும் சத்தம் கூட இல்லை.

காலமே உறைந்துவிட்டது போன்ற அமானுஷ்ய அமைதி.

ஜான் டீயின் நெஞ்சு ஏதோ ஒரு பயத்தில் பிழியப்பட்டது. தன் பாக்கெட்டில் இருந்த தீக்குச்சிப் பெட்டியைத் தட்டி, நடுக்கத்துடன் ஒரு குச்சியை உரசினார்.

சுரீரென்று வெளிச்சம் எழுந்தது. அவர் மேஜை மீதிருந்த மெழுகுவர்த்தியைப் பற்றவைத்தார்.

மஞ்சள் வெளிச்சம் அறையெங்கும் பரவியது.

அங்கே, கதவருகே ஓர் உருவம் நின்றிருந்தது.

அதன் முகத்தைப் பார்த்த ஜான் டீயின் கையில் இருந்த மெழுகுவர்த்தி நழுவித் தரையில் விழுந்தது. அவர் உடம்பின் மொத்த ரத்தமும் உறைந்துபோனது.

ஏனெனில், அங்கே நின்றிருந்தது அவரேதான்!

அதே நீண்ட தாடி, அதே தீட்சண்யமான கண்கள், அதே உடலமைப்பு. ஆனால், அந்த முகத்தில் ஒரு அசுரத்தனமான, குரூரமான புன்னகை இருந்தது.

"நீ... நீ யார்?" ஜான் டீயின் குரல் தொண்டைக்குள்ளேயே செத்தது.

கதவருகே நின்ற இன்னொரு ஜான் டீ பேசவில்லை. மெதுவாக நடந்து வந்து, மேஜை மீது கிடந்த பேனாவைத் தன் கையில் எடுத்தது.

நிஜ ஜான் டீக்கு மூச்சு முட்டியது. பயத்தில் தன் கைகளைப் பார்த்தார்.

அங்கே கைகள் இல்லை!

அவரது விரல்கள் மெதுவாகக் காற்றோடு காற்றாகக் கரைந்து, காற்றில் மிதக்கும் புகை போலத் தெரிந்தன. தன் உடம்பை அவராலேயே தொட முடியவில்லை. எந்த உணர்ச்சியும் இல்லை.

அப்போதுதான் அவருக்கு அந்தப் படுபயங்கரமான உண்மை உறைத்தது.

அவர் பதற்றத்துடன் நாற்காலியில் அமர்ந்திருந்த கெல்லியைப் பார்த்தார்.

கெல்லி இன்னும் அப்படியேதான் அமர்ந்திருந்தான். ஆனால், அவனுடைய முகத்தில் சதை இல்லை. கண்கள் இரண்டும் எப்போதோ வறண்டுபோய்க் குழியாகக் கிடந்தன. அவன் இறந்து பல வாரங்கள் ஆகியிருக்க வேண்டும்! அவனது மண்டை ஓட்டின் மீது தோல் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது.

ஜான் டீக்கு இப்போது எல்லாமே புரிந்தது.

அவர்கள் அந்தக் கிரிஸ்டல் கல்லை முதன்முதலில் தொட்டபோதே, எட்வர்ட் கெல்லி இறந்துவிட்டான். இத்தனை நாட்களாகத் தன் பக்கத்தில் அமர்ந்து, ஆவிகளுடன் பேசுவதாக நடித்தது கெல்லியே அல்ல! அந்தக் கிரிஸ்டல் கல்லுக்குள் இருந்த ஏதோ ஓர் அமானுஷ்ய சக்தி, கெல்லியின் பிணத்தை ஒரு பொம்மை போல இயக்கி அவரிடம் நாடகமாடியிருக்கிறது.

தன் சொந்த ரத்தத்தைக் கொடுத்து அந்தப் பளிங்குத் திரையைத் திறந்ததன் மூலம், ஜான் டீயின் ஆன்மாவையும் அது உறிஞ்சித் தனக்குள் இழுத்துக் கொண்டுவிட்டது.

அசல் ஜான் டீ இப்போது அந்த அக்வமேரின் கருப்புக் கண்ணாடிக்குள்ளே சிறைபிடிக்கப்பட்டுவிட்டார்!

வெளியே,

ஜான் டீயின் உடலைக் கைப்பற்றிய அந்தப் புதிய அமானுஷ்ய சக்தி, கண்ணாடிக்கு முன்னால் வந்து நின்றது. கண்ணாடியின் ஆழத்தில் சிறு புள்ளி போல உறைந்து கிடந்த நிஜ ஜான் டீயைப் பார்த்து நக்கலாகச் சிரித்தது.

பிறகு மேஜையில் இருந்த காகிதத்தை இழுத்து, பேனாவை மையில் நனைத்து எழுதத் தொடங்கியது:

"அமானுஷ்யங்களின் அட்ரஸை அவ்வளவு சீக்கிரம் எவனாலும் கண்டுபிடிக்க முடியாது மிஸ்டர் விஜயராமன்! இதைப் படிக்கும் ஒவ்வொருவரையும் நான் என் ஆவி உலகிற்கு இழுக்கப் போகிறேன்."

கண்ணாடிக்குள்ளே இருந்து நிஜ ஜான் டீ தன் முழு பலம்கொண்டு அலறினார், "ப்ளீஸ் விஜயராமன்! விடாதே. அந்த அட்ரஸை வெளியில் கொண்டு வந்து விடு. இதைப் படிக்கும் இந்த வலைப்பூவின் வாசகர்களைக் காப்பாற்றி விடு!" ஆனால், சத்தம் வெளியே வரவில்லை. அது வெறும் ஒரு கல்லின் பிம்பம் மட்டுமே!

இப்போது உங்களுக்குக் கேள்விகள் எழுகிறதா?

யாரிந்த ஜான் டீ?

யாரந்த எட்வர்ட் கெல்லி?

இந்த கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் வேண்டுமா? அல்லது ஆவிகளின் உலகில் சிக்கிக் கொள்ளாமல் நீங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டுமா?

எதுவாக இருந்தாலும் நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****