Thursday, 13 August 2026

வகுப்பறை சியர்ஸ்!

வகுப்பறை சியர்ஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி. சாதாரண பள்ளிக்கூடம் அல்ல; நீட், கியூட், ஜே.இ.இ போன்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும் பெரிய போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி அளிக்கும் அறிவு ஆலயம்!

அங்கே வழக்கம் போல சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மாணவர்கள் அனைவரும் மூளையைக் கசக்கிப் படித்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டுள்ளனர்.

ஆனால், ஒரு சில மாணவிகளுக்கு மட்டும், "படிப்பை முடித்தவுடன் உடனே வீட்டிற்குச் சென்றால் என்ன சுவாரசியம்?" என்று தோன்றியிருக்கிறது போல!

வகுப்பறை காலியானதும், "சரி, வாருங்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வோம்" என்று திட்டம் தீட்டியுள்ளனர்.

வெளியிலிருந்து சூடான அசைவ உணவுப் பார்சல்.

கூடவே, டாஸ்மாக் கடையில் இருந்து ஒரு நண்பர் அன்பாக வாங்கிவந்து கொடுத்த சிறப்பு பானம்!

வகுப்பறையே உணவகமாகவும், மேஜைகளே பார் ஆகவும் மாறியுள்ளன.

"நாம் செய்வதை யார் பார்க்கப்போகிறார்கள்?" என்று நினைக்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது.

அங்கு இருந்த ஒரு சக மாணவி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தைத் தனது கைபேசியில் காணொளி எடுத்துவிட்டார்.

அந்தக் காணொளியில்,

மது பாட்டில்களை நண்பர் டாஸ்மாக் கடையிலிருந்து வாங்கித் தந்தது பற்றிய சுவாரசிய உரையாடல்கள்,

உணவைச் சுவைத்துக்கொண்டே கெத்தாகப் பருகும் காட்சிகள்

அவ்வளவுதான்!

அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, காட்டுத்தீயை விட வேகமாகப் பரவத் தொடங்கிவிட்டது.

ஊர் மக்கள் அனைவரும், "அடடா, போட்டித் தேர்வுக்குப் படிக்கும் வயதில் என்ன மாதிரியான பயிற்சி நடக்கிறது பாருங்கள்!" என்று கொதிப்படைந்துவிட்டனர்.

காட்டுத்தீ அத்தோடு நிற்கவில்லை.

மாவட்ட ஆட்சியர் வரை போய் விட்டது.

விசாரணை தீவிரமடைந்தது. 

அடுத்த கணமே, பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியருக்குத் தண்டனை! பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோருக்குக் கவலை! ஆனால், எல்லாவற்றிற்கும் நடுவில், டாஸ்மாக் பணப்பெட்டி மட்டும் எப்போதும் போல கலகலவென்றுதான் இருக்கிறது!

வாழ்க்கையில் எந்தக் கதவை நோக்கி ஓட வேண்டும் என்று பயிற்சி கொடுக்கும் இடத்தில், டாஸ்மாக் கதவை நோக்கி ஓடும் புத்தி வந்தது உண்மையிலேயே வேதனைக்குரியதுதான்.

ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற பிசிக்ஸில் திரவ இயக்கவியல், கெமிஸ்ட்ரியில் கரைசல்கள் பற்றிப் படிக்க வேண்டும் என்பார்கள்.

அந்த மாணவிகள் அதைத் தியரியாகப் படிக்காமல், ப்ராக்டிகலாக செய்து பார்த்திருக்கிறார்கள். பாவம் தலைமையாசிரியர் அதனால் காரண காரியத் தொடர்பு  தெரியாமல் டிரான்ஸ்பர் ஆகிவிட்டார்.

மாணவிகளுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ளலாம்: நுழைவுத் தேர்வில் பாஸ் செய்வதை விட, வாழ்க்கை எனும் தேர்வில் லிவர் கெடாமல் பாஸ் செய்வது முக்கியம்.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள், வாழ்க்கைப் போட்டியில் தோற்றுவிடக் கூடாது என்பதுதான் எல்லோரின் ஒரே ஆதங்கம்!

*****

ரீல்ஸ் பூதம் குடித்த மாணவ ரத்தம்!

ரீல்ஸ் பூதம் குடித்த மாணவ ரத்தம்!

பதினாறு வயது மாணவன் ரிதன்.

கிருஷ்ணகிரி பக்கம் ஒரு கிராமம்.

கோயில் திருவிழாவுக்குப் போன இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் பண்ணியிருக்கிறான்.

எப்படித் தெரியுமா?

இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வது போல வேகமாக வந்து, கடைசி விநாடியில் பிரேக் அடிப்பது!

சினிமா ஸ்டண்ட்.

சுவாரசியமான கான்செப்ட்.

இன்ஸ்டாகிராமில் குறைந்தது ஒரு லட்சம் லைக்குகள் தேறும்.

கடைசி விநாடியில் ரிதன் பைக்கிலிருந்து எகிறிக் குதிக்கிறான்.

துரதிர்ஷ்டவசமாக, அதே மில்லி செகண்டில் எதிரே ஒரு அரசுப் பேருந்து வந்துவிட்டது.

ரீடேக் இல்லாத நிஜ வாழ்க்கை அது.

அப்புறம் நடந்து எல்லாம் விபரீதம்.

பஸ் சக்கரம்.

ரத்தம்.

ஸ்பாட் அவுட்.

எனக்குத் தெரிந்து மனித குல வரலாற்றிலேயே, மற்றவன் நம்மைக் கைதட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தன் உயிரைப் பணயம் வைக்கும் ஒரே ஜீவன் மனிதன் மட்டும்தான்.

ஒரு நாயோ, பூனையோ அப்படிச் செய்வதில்லை.

ஒரு தெரு நாய் இன்னொரு நாயைப் பார்த்து, "மச்சான், நான் இந்த ஓடும் லாரிக்கு அடியில பூந்து வாரேன், நீ வீடியோ எடு, டிக்டாக்ல போடலாம்" என்று சொல்வதில்லை. அதற்கு மூளை குறைவு; ஆனால் பிழைத்துக் கொள்ளும் அறிவு அதிகம்.

மனிதனுக்குதான் மூளை அதிகம்; இதுபோன்ற விசயங்களைக் கேள்விபடுகையில் அறிவு கம்மிதான் என்று தோன்றுகிறது.

இன்றைய பதின்ம வயதுச் சிறுவர்களின் உலகம் ரொம்பவே விசித்திரமானது. அவர்களுக்கு பேஸ்புக் என்பது பாட்டி காலத்து மேட்டர். இன்ஸ்டாகிராமும், டிக்டாக்கும்தான் வாழ்க்கை. அதில் வரும் 15 செகண்ட் வீடியோவில் கிடைக்கிற அந்த டிஜிட்டல் கைதட்டல் இருக்கிறதே, அது ஒருவிதமான போதை.

வியூஸ் கவுண்ட் ஏறும். அந்த எண்கள் தரும் கிளர்ச்சிக்கு முன்னால், மரணம் கூட ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.

டெக்னாலஜி வளர்கிறது. 5G வந்துவிட்டது. ஆனால், அதைப் பயன்படுத்தும் மனிதனின் பக்குவம் 1G அளவிலேயே நிற்கிறது. கேமரா கைக்கு வந்துவிட்டதால் எல்லோரும் ஸ்பீல்பெர்க் ஆகிவிட முடியாது என்பதுதான் ஏற்றுக்கொள்ள இயலாத கசப்பான எதார்த்தம்.

பாவம், அந்தப் பஸ் டிரைவர். ஏதோ வேலையை முடித்துவிட்டு மனைவியைப் பார்க்க, பிள்ளைகளைப் பார்க்க வீட்டுக்குக் கிளம்பியிருப்பார். வழியில் யாரோ ஒரு சிறுவன் லைக்குகளுக்காகத் தன் பஸ் சக்கரத்தின் கீழ் வந்து விழுவான் என்று அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். இப்போது அவர் போலீஸ் கேஸ், கோர்ட், கேஸ் என்று அவர் அலைந்து கொண்டிருப்பார்.

விசயம் அத்தோடு முடியவில்லை. ரிதனின் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? ஐந்து நொடிக் கைதட்டலுக்காகத் தன் பதினாறு வருட உழைப்பையும், கனவையும் ரோட்டில் வீசிவிட்டுப் போய்விட்டான் மகன். லைக்குகளின் விலை 16 வருடங்கள்தான் போலும்.

ஸ்மார்ட்போன் கையிலிருக்கும் ஒவ்வொரு சிறுவனுக்கும் ஒன்று புரிய வேண்டும்:

திரையில் தெரியும் லைக்குகள் எல்லாமே வெறும் பிக்சல்கள். ஆனால், ரோட்டில் வருவது உண்மை பஸ்!

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.08.2026

1) 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

2) சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3) நாடாளுமன்றத்தில் நேற்று முதன் முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.

4) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது.

5) நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Education & GK News

1) President Droupadi Murmu will address the nation tonight at 7 PM ahead of the 80th Independence Day.

2) More than one lakh police personnel have been deployed for security duties across Tamil Nadu in connection with Independence Day.

3) The 'Vande Mataram' song was played in Parliament for the first time yesterday.

4) The Monsoon Session of Parliament concluded yesterday.

5) The Meteorological Department has announced the likelihood of heavy rain in the Nilgiris and Theni districts.

தலைகீழாகத் தொங்கும் மனிதன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 51

தலைகீழாகத் தொங்கும் மனிதன்!

குடவாசல், கோணேஸ்வரர் கோயில் தெரு, அந்தப் பழைய காலனித்துவ பாணி வீட்டின் முதல் மாடி.

ஸ்ரீராம் தன் மடிக்கணினியில் புளூடூத் எலக்ட்ரோமேக்னடிக் சென்சார் கருவியை இணைத்துக்கொண்டிருந்தான்.

"பாஸ்கர், இது எல்லாமே முட்டாள்தனம். பிரிட்டிஷ்காரன் விட்டுட்டுப் போன விக்டோரியன் காலத்து மூடநம்பிக்கை. இதிலென்ன கபாலா, மாந்திரீகம்?" என்றான் ஸ்ரீராம், தன் வழக்கமான கேலிப் புன்னகையுடன்.

பாஸ்கர் மேஜை மீது இருந்த அந்தப் பழைய புத்தகங்களைத் தடவிக் கொடுத்தான். "சும்மா இல்ல ஸ்ரீராம். லண்டன் கோல்டன் டான் அமைப்போட குடவாசல் கிளை இது. அப்போதைய வைஸ்ராய் காலத்துல இங்க ரகசியமா ஏதோ ஒரு டைம் ஷிப்ட் பரிசோதனை நடந்திருக்குனு லாக் புக்ல இருக்கு."

மேஜை மேல் 1904 இல் பயன்படுத்தப்பட்ட அதே தாரோ கார்டுகள் பரப்பப்பட்டிருந்தன. பக்கத்தில் ஒரு பழைய கிராமபோன்.

ஸ்ரீராம் தன் லேப்டாப்பில் ஒரு கோடைத் தட்டினான். "சரி, ஓர் அல்காரிதம் எழுதிப் பார்ப்போம். இந்த ஹீப்ரு எழுத்துக்களை பைனரி கோடா மாத்துனா என்ன வருதுன்னு பாக்கலாம். சைன்ஸ்ல எல்லாமே ப்ரீக்வென்சிதான்."

அவன் என்டர் தட்டிய விநாடி, அறையில் இருந்த இன்வெர்ட்டர் பிளாஸ்ட் ஆகி, விளக்குகள் அணைந்தன.

லேப்டாப் ஸ்கிரீன் மட்டும் ஒருவித ரத்தச் சிவப்பு நிறத்தில் மினுமினுத்தது.

அறையின் வெப்பநிலை திடீரென ப் பனிப்பிரதேசம் போலக் குறைந்தது. மூச்சுக்காற்று ஆவியாக வெளிவரும் அளவுக்குக் உறைபனி நிலவியது.

"ஸ்ரீராம்! ஏசி ஆப்ல இருக்கு. அப்புறம் எப்படி இந்த டெம்ப்ரேச்சர் குறையுது?" என்றான் பாஸ்கர்.

ஸ்ரீராம் பதில் சொல்லவில்லை. அவன் லேப்டாப் ஸ்கிரீனைப் பார்த்தான். அவன் எழுதிய கோடுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல், ஸ்கிரீனில் தமிழ் எழுத்துக்கள் தாமாகவே டைப் ஆகின,

"உடல்கள் மட்டுமே மாறுகின்றன. ஆவாஹனம் நிறைவடைந்தது."

திடீரென அறையின் நாலாபுறமும் இருந்து மாமிசம் கிழியும் சத்தமும், எலும்புகள் நொறுங்கும் அதிர்வும் கேட்டது.

ஸ்ரீராம் பயத்துடன் தன் கைகளைப் பார்த்தான். அவனது கைகளில் தோல்கள் மெல்ல சுருங்கி, கைவிரல் நகங்கள் கருகி, 120 வருடத்துப் பிணத்தின் கைகளைப் போல மாறத் தொடங்கின!

"பாஸ்கர்! என் உடம்புக்கு என்ன ஆகுது?!" ஸ்ரீராம் அலறினான்.

ஆனால் பாஸ்கரனால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் வாயிலிருந்து ரத்தம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. பாஸ்கரின் கண்களின் கருவிழிகள் மேல்நோக்கிச் செருகி, வெறும் வெள்ளை விழி மட்டுமே தெரிய, அவன் கழுத்து 180 டிகிரி தலைகீழாகத் திரும்பியது!

அவனது வாய் மனுஷக் குரலில் இல்லாமல், பல நூறு பிரேதாத்மாக்கள் ஒன்றுசேர்ந்து கத்துவது போன்ற பயங்கரமான கரகரப்புடன் பேசியது.

"1904 இல் கோல்டன் டான் அமைப்பினர் உடலை இழந்து இந்த நிலவறையின் அலைவரிசையில் காத்திருந்தார்கள். 120 வருடம் கழித்து உங்கள் உடல்களை எங்களுக்குத் தந்ததற்கு நன்றி!"

ஸ்ரீராம் தப்பி ஓட கதவை நோக்கிப் பாய்ந்தான். ஆனால் கதவுக்குப் பதில் அங்கே வெறும் செங்கல் சுவர் மட்டுமே இருந்தது.

எதிரில் இருந்த பெரிய சுவர்க் கண்ணாடியில் ஸ்ரீராமின் உருவம் தெரியவில்லை. மாறாக, 1904 இல் இறந்த ஒரு பிரிட்டிஷ் மாந்திரீகனின் முகம். அந்த மாந்திரீகன் ஸ்ரீராமின் உடலுக்குள்ளிருந்து வெளியே வரத் துடிப்பது போலத் தெரிந்தது!

ஸ்ரீராமின் தொண்டையிலிருந்து வந்த கடைசி அலறல் சத்தம், அந்த அறையின் சுவர்களுக்குள் அடங்கியது.

மேஜை மேல் இருந்த தி ஹேங் மேன் தாரோ கார்டில், இப்போது தலைகீழாகத் தொங்கும் மனிதனாக ஸ்ரீராமின் முகம் தத்ரூபமாக அச்சடிக்கப்பட்டிருந்தது.

வெளியே கோணேஸ்வரர் கோயில் தெரு அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அறையின் கதவு இனி என்றென்றும் திறக்கப்படாது.

இனி,

பாஸ்கர்?!

ஸ்ரீராம்?!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Wednesday, 12 August 2026

டாஸ்மாக் கொடுத்த தைரியமும், ரேஷன் கார்டு கொடுத்த பயமும்!

டாஸ்மாக் கொடுத்த தைரியமும், 

ரேஷன் கார்டு கொடுத்த பயமும்!

திண்டுக்கல் அருகே நடந்த சம்பவம், நம் சமூகத்தின் மகத்தான அறிவுச் செறிவை மீண்டும் ஒருமுறை உரக்கப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.

பாவம் அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலரான ஆசிரியை!

அரசு சொன்ன பணியைச் செய்யப் அலைபேசியும் அடையாள அட்டையுமாகத் தெருவில் இறங்கியிருக்கிறார்.

"வீட்டில் எத்தனை பேர்? சொந்த வீடா?" என்று கேட்டதற்கு, எதிரே நின்ற ஒரு போதை ஞானிக்கு வந்த கோபத்தைப் பார்க்கையில், ஏதோ நாட்டின் உளவுத்துறை ரகசியத்தைத் திருட வந்த சர்வதேச உளவு அமைப்பைப் போல் அந்த ஆசிரியையைப் பார்த்திருக்கிறார்.

"நான் இந்தக் கட்சிக்காரன், என்னிடமே கேட்கிறாயா?" என்று பொங்கியவர், பிறகு காவல்துறையிடம் கைதாகும்போது "நான் அந்தக் கட்சிக்காரன், என்னையே கைது செய்கிறீர்களா?" என்று எகிறியிருக்கிறார்.

அந்தக் குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் வழக்கம் போல் "அவர் எங்கள் ஆளே இல்லை" என்று கையை விரித்துவிட்டார்கள். கடைசியில், அவர் எந்தக் கட்சிப் பிரமுகரோ இல்லையோ, டாஸ்மாக்கின் அதிதீவிரக் கடமை தவறாத தொண்டர் என்பது மட்டும் மிகத் தெளிவாகிறது.

இங்கே பிரச்சனை வெறும் கணக்கெடுப்பு அல்ல; மக்களின் ஆழ்மனப் பயம்.

"சொந்த வீடு இருக்கிறது என்று சொன்னால், ரேஷன் அரிசியை நிறுத்தி விடுவார்களோ? ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை இல்லாமல் செய்து விடுவார்களோ?" என்ற பயம்தான், ஓர் அரசாங்க ஊழியரின் முகத்தில் ஓங்கி அறையும் அளவுக்கு வீரத்தை வளர்க்கிறது.

அறிவையும் தெளிவையும் வளர்க்கத் தவறிய சமூகம், சந்தேகத்தையும் பயத்தையும் மட்டும் மிக நேர்த்தியாகப் பராமரித்து வருகிறது.

அரசாங்கம் இனி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன், "ஐயா சாமி! இந்த கேள்விக்கும் உங்கள் ரேஷன் கார்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று ஊர் ஊராகத் தண்டோரா போட வேண்டும் போலிருக்கிறது.

அல்லது, ஆசிரியர்களுக்குக் கணக்கெடுப்புக் கருவிகளோடு சேர்த்து, தற்காப்புக் கலைச் சான்றிதழையும், தலையில் போடுவதற்கு ஒரு ஹெல்மெட்டையும் வழங்க வேண்டும் போலிருக்கிறது.

அரசியல் அடையாளம், மதுபோதை, ரேஷன் கார்டு பயம் என இந்த மூன்றும் சேரும்போது பிறக்கும் அறியாமை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. இந்தச் சமூகத்திற்கு இப்போது தேவை கணக்கெடுப்பு மட்டுமல்ல, கொஞ்சம் அடிப்படை நாகரிகமும், தெளிவும்தான்.

*****

மூவாயிரம் வீடுகளும் ஒரு லட்சம் கேள்விகளும்!

மூவாயிரம் வீடுகளும் ஒரு லட்சம் கேள்விகளும்!

கூகுள் மேப் என்பதே ஒரு சுவாரஸ்யமான கலைப்படைப்புதான்.

அந்த மேப்பைக் கையில் வைத்துக்கொண்டு "இன்னும் 50 மீட்டரில் வலது பக்கம் திரும்பவும்" என்று அந்தச் செயலி வழிகாட்டும்போது, நாம் ஒரு சாக்கடை அடைப்புக்குள் இறங்க வேண்டியிருக்கும்.

ஆனால், அந்த நவீனத் தொழில்நுட்பத்தை அப்படியே தூக்கிக் கொண்டுவந்து மக்கள்தொகை கணக்கெடுப்பில் சொருகினால் என்னவாகும் என்பதற்குத் தற்போதைய களநிலவரமே சாட்சி.

அப்படித்தான் தாம்பரம் பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர் கையில் மொபைலோடு தவித்து நின்று கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3,000 வீடுகள்!

சாதாரணமாக ஒரு கணக்கெடுப்பாளருக்கு 200 முதல் 300 வீடுகள் ஒதுக்குவதுதான் உலக வழக்கு.

ஆனால், கூகுள் மேப் தனது பரந்த வான்வழிப் பார்வையால் மேலே இருந்து பார்த்திருக்கிறது. செயற்கைக்கோளுக்கு மேலிருந்து பார்க்கும்போது அடுக்குமாடி குடியிருப்பு என்பது வெறும் ஒரு சதுரப் பெட்டிதானே?

அட, ஒரே ஒரு கட்டிடம்தானே என்று அதை ஓர் அலுவலருக்கு ஒதுக்கி விட்டார்கள். ஆனால் அந்த ஒற்றைப் பெட்டிக்குள் 25 பிளாக்குகள், ஆயிரக்கணக்கான மனிதர்கள், லட்சக் கணக்கான கேள்விகள் ஒளிந்திருப்பது கூகுள் மேப்பிற்கு எப்படித் தெரியும்?

ஒரு வீட்டிற்கு 33 கேள்விகள் கேட்க வேண்டும். வீட்டின் கூரை என்ன பொருள்? சுவர் என்ன பொருள்? கழிப்பறை இருக்கிறதா? டிவி, இணையதளம், வண்டி இருக்கிறதா? என்று அதன் பட்டியல் பெரிது. அத்துடன் 34 ஆவது கேள்வியாக அலைபேசி எண்ணைப் பெற வேண்டும். ஆக மொத்தம் 34 கேள்விகள்.

மூவாயிரம் வீடுகளுக்கு இந்தக் கேள்விகளைப் பெருக்கிப் பார்த்தால், மொத்தம் ஒரு லட்சத்து இரண்டாயிரம் பதில்களைச் சேகரிக்க வேண்டும்.

இதை மனதிற்குள் கணக்குப் போட்டுப் பார்ப்பதற்கே தலைச்சுற்றல் வந்துவிடும்.

தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை எளிதாக்க வேண்டும் என்பார்கள். ஆனால், நமது ஊரில் தொழில்நுட்பம் என்பது இப்படித்தான் ஒற்றை அலுவலருக்கு 3000 வீடுகளை ஒதுக்குகின்றன.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.08.2026

1) அரசுப் பள்ளிகளில் தினமும் இருமுறை தூய்மைப் பணி மேற்கொள்ளுவதற்கு 86.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2) இன்று முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

3) மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிரான மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

4) டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக அதன் தலைவர் என். சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

5) நாட்டின் சில்லரைப் பணவீக்கம் சூலை மாதத்தில் 4.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Education & GK News

1) Funds amounting to Rs. 86.84 crore have been allocated for carrying out cleaning operations twice daily in government schools.

2) Counseling for MBBS and BDS courses begins today.

3) A resolution opposing the delimitation of Lok Sabha constituencies was unanimously passed in the Tamil Nadu Legislative Assembly.

4) Tata Sons Chairman N. Chandrasekaran has announced that he will step down from his position.

5) The country's retail inflation rose to 4.45 percent in July.