Thursday, 20 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.08.2026

1) நதி நீர் பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

2) தீபாவளி முதல் ரேஷன் கடைகளில் தரமான சன்ன ரக அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3) மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

4) கேட் நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 27 முதல் விண்ணப்பிக்கலாம்.

5) வங்க தேசத்தின் புதிய அதிபராக மிர்சா பக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Education & GK News

1) Union Home Minister Amit Shah has stated that river water disputes should be resolved through negotiations.

2) It has been announced that high-quality fine-variety rice will be distributed at ration shops starting from Diwali.

3) The Supreme Court has advised that students should not be subjected to any pressure regarding the three-language policy.

4) Applications for the GATE entrance exam can be submitted starting August 27.

5) Mirza Fakhrul Islam Alamgir has been selected as the new President of Bangladesh.

பேயை உருவாக்கும் கலை!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

பேயை உருவாக்கும் நான்கு விஷயங்கள்!

அட்ரஸ் – 58

விக்டர் ஹியூஸின் ஆன்மா தன் சொந்த உடலைப் பார்த்து அலறிக்கொண்டிருந்த அதே நொடியில்,

கிளிக்!

திடீரென நூலக அறையின் பிரம்மாண்டமான விளக்குகள் அனைத்தும் பிரகாசமாக எரிந்தன. உறைபனி போன்ற குளிர் விநாடியில் மாயமாய் மறைந்தது.

நாற்காலியில் சாய்ந்துகிடந்த விக்டரின் பிணம் மெதுவாகக் கண்ணைத் திறந்து, சோம்பல் முறித்து எழுந்தது. தன் கையில் இருந்த டைரியை மூடியது.

மிதந்துகொண்டிருந்த விக்டரின் ஆவி அதிர்ச்சியில் உறைந்தது. "வாட் தி ஹெல். நான் இறக்கவில்லையா? அப்படியானால் என் முன்னால் நிற்பது யார்? நான் யார்?"

அப்போது ஜமீன்தார் ராஜராஜேஸ்வரன் உரக்கச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் எந்த அமானுஷ்யமும் இல்லை; ஓர் இயற்பியல் ஆர்வலரின் பரிகாசம் மட்டுமே இருந்தது!

ஜமீன்தார் பக்கத்தில் இருந்த சுவரில் கை வைத்து ஒரு சுவிட்சை அழுத்தினார். அறையின் மூலைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பெரிய பித்தளைக் குழாய்களில் இருந்து ஹம்மிங் சத்தம் நின்றுபோனது.

"மிஸ்டர் விக்டர்! பயத்தில் உங்கள் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 140ஐத் தொட்டு விட்டது. போதும், உங்கள் ஆவி வேஷத்தைக் கலைத்து விட்டுக் கீழே இறங்குங்கள்!" என்றார் ஜமீன்தார்.

விக்டர் மெதுவாகத் தரையில் கால்களை ஊன்றினான். அவன் உடல் ஒளி புகும் தன்மையுடன் இல்லை; அது முற்றிலும் சாதாரண மனித உடல்தான்!

"இது எப்படி சாத்தியம்? என் கால்கள் தரையில் படவில்லையே? நான் என் உடலையே வெளியே நின்று பார்த்தேனே?" விக்டர் குழப்பத்தின் உச்சத்தில் தன் தலையைப் பிடித்துக்கொண்டான்.

ஜமீன்தார் சிரித்துக்கொண்டே நூலக மேஜையின் அடியிலிருந்த ஒரு விசித்திரமான ஸ்பீக்கர் போன்ற கருவியைக் காட்டினார்.

"எஸ்.பி.ஆர்காரர்களான நீங்கள்தான் பெரிய விஞ்ஞானிகளா? இந்தியாவில் எங்களுக்கு அறிவியல் தெரியாதா? விக்டர், நீங்கள் உணர்ந்த அந்த பயம், உடல் மிதக்கும் உணர்வு மற்றும் சுவரில் பார்த்த நிழல்கள் இவை அனைத்தும் இந்தச் சிறிய கருவி செய்த மாயம்தான்!"

"என்ன கருவி இது?"

"இன்ப்ரா சவுண்ட் ஜெனரேட்டர்! மனித காதுகளால் 20 ஹெர்ட்ஸ்க்குக் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலியைக் கேட்க முடியாது. இந்தச் சாதனம் சரியா 18.9 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் ஒலி அலைகளை வெளியிடுகிறது. 19 ஹெர்ட்ஸ் அதிர்வு மனித மூளையை எட்டும்போது, மூளையின் அமைக்டாலா பகுதி கடுமையான பயத்தை உருவாக்கும். அதைவிட முக்கியம். மனிதக் கண் உருண்டைகளின் இயற்கையான அதிர்வெண் சரியாக 18.9 ஹெர்ட்ஸ்! இந்தக் கருவி இயங்கும்போது உங்கள் கண் உருண்டைகள் நுண்ணிய அளவில் அதிரத் தொடங்கும். அப்போது, உங்கள் பார்வைப்புலத்தில் இல்லாத நிழல்கள் இருப்பது போலவும், அவை நகர்வது போலவும் மூளை ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும்!"

விக்டர் திகைத்தான். "அப்படியானால் சுவரில் நகர்ந்த நிழல்?"

"உங்கள் சொந்தக் கண் இமையின் நிழல்தான் அது! அதிர்வினால் அது சுவரில் மாபெரும் ஆவியாக உங்களுக்குத் தெரிந்தது!"

"சரி, கதவு பூட்டப்பட்டிருந்ததே? நான் என் உடலை வெளியே நின்று பார்த்தேனே? அது?" விக்டர் அடுத்த கேள்வியை வீசினான்.

ஜமீன்தார் நூலகத்தின் ரகசிய ஜன்னலைத் திறந்துவிட்டார். உள்ளே குளிர்ந்த வெளிக்காற்று வீசியது.

"அது கார்பன் மோனாக்சைடு மற்றும் ஆட்டோஸ்கோபி பண்ணிய மாயம்!" என்றார் ஜமீன்தார்.

"இந்த அறையின் அடியில் ஒரு பழைய நிலவறை இருக்கிறது. அதில் இருந்து மிகச் சிறிய அளவில் கார்பன் மோனாக்சைடு வாயுவை உள்ளே செலுத்தினேன். கார்பன் மோனாக்சைடு மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனைக் குறைக்கும். இதனால் மனிதனுக்குத் கடுமையான ஹாலுசினேஷன் ஏற்படும். நீங்கள் கண்டது பேயை அல்ல. உங்கள் மூளையின் தற்காலிகச் செயலிழப்பை!"

விக்டர் தன் நெற்றியைத் துடைத்துக்கொண்டான். "அப்படியானால் மிதந்த நாற்காலி? கேமராவில் விழுந்த வெளிச்சம்?"

ஜமீன்தார் சுவரில் இருந்த ஒரு பெரிய பிரேம் செய்யப்பட்ட கண்ணாடியைத் திருப்பிக் காட்டினார். அது சாதாரண கண்ணாடி அல்ல; 45 டிகிரி கோணத்தில் சாய்வாகப் பொருத்தப்பட்ட அரை பிரதிபலிப்பு கண்ணாடி.

"லண்டன் நாடகங்களில் பயன்படுத்தப்படும் பெப்பர்ஸ் கோஸ்ட் நுட்பம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா விக்டர்? 45 டிகிரி கண்ணாடியில், கீழே மறைவாக இருக்கும் அறையின் பிம்பத்தைப் பிரதிபலிக்க வைக்க முடியும். அறைக்கு அடியில் மற்றொரு சிறிய மாதிரி அறை உள்ளது. அதில் நாற்காலியை ஒரு காந்தக் கம்பியால் உயரே தூக்கினேன். கண்ணாடியின் பிரதிபலிப்பால், இந்த அறையில் நாற்காலி மிதப்பது போல உங்களுக்குத் தெரிந்தது. உங்கள் கேமராவின் பிளாஷ் பவுடர் வெடித்தபோது, அந்த வெளிச்சம் கண்ணாடியில் பட்டு உங்களுக்கே எதிரொலித்து, உங்கள் பிம்பத்தையே உங்களுக்குக் காட்டியது. நீங்கள் இறந்துவிட்டதாக நினைத்தது முழுவதும் உங்கள் மூளை உங்களுக்குச் செய்த துரோகம்!"

விக்டர் அதிர்ச்சியில் உறைந்துபோய் அமர்ந்தான்.

"ஜமீன்தார்! நீங்கள் ஏன் இதையெல்லாம் செய்தீர்கள்? எஸ்.பி.ஆர் அமைப்பை அவமானப்படுத்தவா?"

ஜமீன்தார் மெதுவாக விக்டரின் அருகே வந்தார். அவனது தோளைத் தொட்டார்.

"இல்லை விக்டர்! நீங்கள் லண்டனிலிருந்து வந்து இங்கே பேய் இருக்கிறது என்று பொய் அறிக்கை எழுதியிருந்தால், இந்தியாவில் மூடநம்பிக்கை இருக்கிறது என்று மேற்குலகம் எங்களைப் பரிகாசம் செய்திருக்கும். அதனால் நான் அறிவியலைக் கொண்டு அறிவியலையே வென்றேன்! பேய்கள் என்பவை மனிதனுக்கு வெளியே இல்லை; மனிதனின் மூளைக்குள்ளே இருக்கின்றன! அதிர்வு, வாயு, ஒளியியல், மூளையின் தற்காலிக செயலிழப்பு என இந்த நான்கையும் சரியான விகிதத்தில் கலந்தால், உலகத்தின் மிகப்பெரிய விஞ்ஞானியையும் 'நான் பேயாகிவிட்டேன்' என்று நம்பவைத்துவிட முடியும்!"

விக்டர் மெதுவாகத் தன் லெதர் பேக்கை எடுத்தான். அவனது கை இன்னும் லேசாக நடுங்கிக்கொண்டுதான் இருந்தது.

"ஜமீன்தார்! இதையெல்லாம் உங்கள் லண்டன் எஸ்.பி.ஆர் அமைப்பிற்கு அறிக்கையாக அனுப்பினால் என்ன நடக்கும் தெரியுமா?"

"தெரியும்." ஜமீன்தார் புன்னகைத்தார். "அவர்கள் உன்னை ஒரு பைத்தியக்காரன் என்று சொல்லி வேலையை விட்டுத் தூக்குவார்கள். அல்லது 'பேயைப் பார்த்த விஞ்ஞானி' என்று மனநல மருத்துவமனையில் அடைப்பார்கள்!"

விக்டர் பங்களாவை விட்டு வெளியேறினான்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் புகைக்கரியைக் கக்கிக்கொண்டு நின்றிருந்தது. விக்டர் தன் பாக்கெட் டைரியை எடுத்தான். 'அமானுஷ்ய ஆய்வு - சென்னை' என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருந்த அனைத்துப் பக்கங்களையும் கிழித்து, ரயிலின் தண்டவாளத்தில் வீசினான்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Wednesday, 19 August 2026

பள்ளி மாணவர்களுக்கான படிப்புதவித் தேர்வுகள்

பள்ளி மாணவர்களுக்கான படிப்புதவித் தேர்வுகள்

எட்டாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் படிப்புதவித் தேர்வுகள் குறித்த விவரங்களைக் கீழே காண்க.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.08.2026

1) ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்திற்கு இன்று முதல் கருத்து தெரிவிக்கலாம்.

2) முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு வரம்பு 5 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

3) தமிழகத்தில் பால் கொள்முதல் விலை மூன்று ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை நவம்பரில் வெளியாக உள்ளது.

5) தமிழகத்தில் ஆகஸ்ட் 25 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Education & GK News

1) Feedback on the new curriculum developed for Classes 6 to 10 can be submitted starting today.

2) The coverage limit under the Chief Minister's medical insurance scheme is being raised from Rs. 5 lakh to Rs. 25 lakh.

3) It has been announced that the milk procurement price in Tamil Nadu will be increased by three rupees.

4) The autobiography written by Congress leader Sonia Gandhi is set to be released in November.

5) There is a possibility of rain in Tamil Nadu until August 25.

நிழலின் நிழல்

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் – 57

நிழலின் நிழல்

1908 ஆம் ஆண்டின் மெட்ராஸ் குளிர்காலம். எழும்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் நின்றிருந்த விக்டர் ஹியூஸின் கைகளில் இருந்த சொசைட்டி பார் பிசிக்கல் ரிசர்ச், சுருக்கமாகச் சொல்வதென்றால் எஸ்.பி.ஆர் அமைப்பின் பித்தளை முத்திரை பதித்த லெதர் பேக், அவனது மன அழுத்தத்தை விடக் கனமாக இருந்தது.

லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் இளம் ஆராய்ச்சியாளனாக இருந்த விக்டரை, எஸ்.பி.ஆரின் தலைவர்களில் ஒருவரான சர் வில்லியம் பிளெட்சர் பாரெட்தான் மெட்ராஸுக்கு அனுப்பி வைத்தார். காரணம், தென்னிந்தியாவின் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பொய்யுண்டார்கோட்டை சமஸ்தானத்தின் ஒரு பழைய பங்களாவில் நடப்பதாகச் சொல்லப்பட்ட அமானுஷ்ய நிகழ்வுகள்.

ஜமீன்தார் ராஜராஜேஸ்வரன், லண்டன் எஸ்.பி.ஆர் அமைப்பிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார், "என் தந்தை இறந்த பிறகு, இந்த பங்களாவின் நூலக அறையில் நடு இரவில் நாற்காலிகள் தானாக நகர்கின்றன. சுவர்களில் யாரோ நடப்பது போன்ற நிழல்கள் தெரிகின்றன. இதை மூடநம்பிக்கை என்று என் ஆங்கிலேய நண்பர்கள் சிரிக்கிறார்கள். அறிவியல் கருவிகளோடு வாருங்கள். உண்மை என்னவென்று எனக்கு நிரூபியுங்கள்."

விக்டர் சிரித்துக்கொண்டேதான் மெட்ராஸுக்கு வந்தான். லண்டனில் நூற்றுக்கணக்கான ஆவி தொடர்பாளர்களை அவனும் அவனது குழுவும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். எக்டோபிளாசம் என்ற பெயரில் சீஸ் துணியையும் உருளைக்கிழங்கு மாவையும் வாயில் ஒளித்து வைத்து ஆவி என்று ஏமாற்றியவர்களைத் தெர்மாமீட்டர், அகச்சிவப்பு கேமராக்கள் மூலம் பிடித்து ஜெயிலுக்கு அனுப்பிய அனுபவம் அவனுக்கு உண்டு. "பேய்கள் என்பது மனித மூளையின் பயம் மற்றும் தந்திரமான ஏமாற்று வேலைகளின் கூட்டுக்கலவை" என்பதுதான் விக்டரின் ஆழமான நம்பிக்கை.

பங்களா, பொய்யுண்டார்கோட்டையின் எல்லையில் அடர்ந்த ஆலமரங்களுக்கு நடுவே பிரம்மாண்டமாக நின்றிருந்தது. விக்டருக்கு ஒதுக்கப்பட்ட அறை, ஆய்வுக்குரிய நூலக அறைக்கு நேர் எதிரே இருந்தது.

அன்றைய இரவே விக்டர் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினான். அவனது பையில் இருந்து கருவிகள் வெளியே வந்தன. அறையின் வெப்பநிலையைக் துல்லியமாகக் காட்டும் பாதரச தெர்மாமீட்டர்கள், சுவர்களில் ஏதேனும் அதிர்வுகள் இருக்கிறதா என்று பார்க்க கால்வானோமீட்டர்கள், தரையில் எவராவது காலடி வைத்தால் மின்சுற்று பூர்த்தியாகி மணி அடிக்கும் மின்சார வயர்கள், இருட்டிலும் நிழற்படம் எடுக்கும் சிறப்பு கேமராக்கள்.

இரவு 11:30 மணி.

பங்களாவே அமைதியில் உறைந்திருந்தது. ஜமீன்தாரும் அவரது காரியஸ்தரும் விக்டருக்குத் துணையாக வெளிச்சம் உள்ள வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். விக்டர் நூலக அறையின் நடுவே ஒரு மர நாற்காலியைப் போட்டு அமர்ந்துகொண்டான். கையில் டைரியும், பாக்கெட் கடிகாரமும் இருந்தன.

அறை முழுவதும் மின்சார வயர்கள் பரப்பப்பட்டிருந்தன. நாற்காலியின் நான்கு கால்களையும் சுற்றி மெல்லிய பித்தளை கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. சிறு அசைவு இருந்தாலும் விக்டரின் கையில் இருக்கும் கருவி அலறும்.

நள்ளிரவு 12:00 மணி.

திடீரென அறையின் வெப்பநிலை சட்டென்று குறையத் தொடங்கியது. விக்டர் தன் கையில் இருந்த தெர்மாமீட்டரைப் பார்த்தான். 78 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்த பாதரசம், வேகமாகக் கீழே இறங்கி 52 டிகிரியைத் தொட்டது! அறையின் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. வெளியே காற்று வீசவில்லை. ஆனால், அறையின் உள்ளே ஒரு பனிக்கட்டி பெட்டிக்குள் இருப்பது போன்ற குளிரை விக்டர் உணர்ந்தான்.

"சுவாரசியமானது. ஏதோ ஓர் இயற்பியல் மாற்றம் நிகழ்கிறது," என்று டைரியில் குறித்துக்கொண்டான்.

12:15 மணி.

அறையின் மூலைப்பகுதியில் இருந்த பிரம்மாண்டமான புத்தக அலமாரியின் நிழல், மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்கு எதிராக அசையத் தொடங்கியது! மெழுகுவர்த்தி நிலையாக எரிந்துகொண்டிருந்தது, ஆனால் சுவரில் விழுந்த நிழல் மட்டும் சுயநினைவோடு நகர்வது போலச் சுவரில் ஊர்ந்து வந்தது.

விக்டர் உடனே தன் கேமராவைத் திருப்பிப் பிளாஷ் பவுடரைக் கொளுத்தினான். பளீச் என்ற வெளிச்சமும் புகையும் அறையை நிரப்பியது.

கேமரா படம் பிடித்துவிட்டது. ஆனால், விக்டருக்குள் இருந்த விஞ்ஞானி அலாரமிட்டான். "இது ஏதேனும் ஒளியியல் மாயையா? ஜன்னல் இடுக்கின் வழியாக வரும் வெளிச்சத்தின் பிரதிபலிப்பா?"

அவன் எழுந்து சுவரை நோக்கிச் சென்றான். தன் கையால் அந்த நிழலைத் தொட்டுப் பார்க்க முயன்றான். அவன் கை சுவரைத் தொட்டபோது, அந்தச் சுவர் பகுதி மட்டும் உறைந்த பனிக்கட்டியைப் போலக் குளிர்ந்து இருந்தது! கால்வானோமீட்டர் ஊசி பைத்தியக்காரத்தனமாக இடமும் வலமும் ஆடியது. அங்கு ஏதோ ஒரு மின்காந்தப்புலம் தீவிரமாக உருவாவதைச் சுட்டிக்காட்டியது.

அப்போது, அறையின் நடுவே இருந்த கனமான தேக்கு மர நாற்காலி, மெதுவாகப் பின்னோக்கி நகர்ந்தது. தரையில் பரப்பப்பட்டிருந்த வயர்கள் உரசின. ஆனால், மணி அடிக்கவில்லை! வயர்கள் துண்டிக்கப்படவில்லை, மாறாக நாற்காலி தரையைத் தொடாமல், சில மில்லிமீட்டர் உயரத்தில் மிதந்தபடி நகர்ந்தது!

விக்டரின் நெற்றியில் குளிர்ந்த வேர்வை அரும்பியது. லண்டனில் அவன் பார்த்ததெல்லாம் கயிறுகளாலும், லீவர்களாலும் நகர்த்தப்பட்ட நாற்காலிகள். ஆனால் இங்கே எந்தக் கயிறும் இல்லை. எந்த மனிதனும் இல்லை. அவனது கருவிகள் அனைத்தும் அங்கே ஏதோ ஒரு சக்தி இருப்பதை உறுதிசெய்தன.

விக்டர் உரக்கக் கேட்டான், "யார் அது? நீங்கள் ஒரு மனித ஆற்றலா அல்லது இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்ட ஏதேனும் அலைவரிசையா?"

அறையில் எந்தச் சத்தமும் கேட்கவில்லை. ஆனால், விக்டரின் மூளைக்குள் ஒரு குரல் கேட்டது. அது காதால் கேட்ட சத்தம் அல்ல; அவனது நரம்புகளுக்குள் நேரடியாகப் பாய்ந்த ஓர் எண்ண அலை!

"விக்டர்"

விக்டர் அதிர்ந்துபோனான். அவனது பெயர் அங்கு ஜமீன்தாரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

"நீ உண்மையைத் தேடி வந்தாயா, அல்லது உன் அறிவியலின் செருக்கை நிலைநாட்ட வந்தாயா?" குரல் மீண்டும் அவனது மூளைக்குள் எதிரொலித்தது.

இதுதான் டெலிபதியா? மனித மனங்களுக்கு இடையே மட்டுமே நடக்கும் என்று எஸ்.பி.ஆர் நினைத்த எண்ணப் பரிமாற்றம், பருப்பொருள் அல்லாத ஒரு அமைப்போடு நடக்குமா?

12:45 மணி.

விக்டர் தன் பயத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தன் கையில் இருந்த கால்வானோமீட்டர் மற்றும் வோல்ட்மீட்டர் கருவிகளை நோக்கினான். அந்தச் சக்தி கருவிகளின் வழியே தன் மின்சாரத்தைச் செலுத்துவது போல, கருவிகளின் ஊசிகள் சுழன்றன.

விக்டருக்கு ஒரு விஷயம் புரிந்தது. "இங்கு இருப்பது பேய் அல்ல. இது ஓர் ஆற்றல்! ஒரு மனிதன் இறந்த பிறகு, அவனது நினைவுகளும் மூளையின் மின்காந்த அலைகளும் அழியாமல் இந்த அறையின் சுவர்களில், வளிமண்டலத்தில் உறைந்துபோய் இருக்கின்றன. குவாண்டம் அளவில் ஏதோ ஒன்று நிகழ்கிறது!"

அவன் மகிழ்ச்சியில் சிரித்தான். "நான் கண்டுபிடித்துவிட்டேன்! இது அமானுஷ்யம் அல்ல. இது அறிவியலின் அடுத்த கட்டம்! பருப்பொருளாக இல்லாத ஆற்றலின் வடிவம்!" என்று கத்தினான்.

அவன் டைரியை எடுத்து வேகமாக எழுதத் தொடங்கினான். தான் கண்ட அனுபவங்கள், கருவிகளின் அளவீடுகள், வெப்பநிலைக் குறைவு என அனைத்தையும் துல்லியமாகக் குறித்துக்கொண்டான். எஸ்.பி.ஆர் அமைப்பிற்குத் தான் சமர்ப்பிக்கப் போகும் இந்தக் கட்டுரை, உலக அறிவியல் வரலாற்றையே மாற்றப்போகிறது என்று எண்ணியபோது அவனுக்குப் பெருமிதமாக இருந்தது.

இரவு 1:00 மணி.

அறையின் குளிரும், நிழலின் அசைவும் மெல்ல மறையத் தொடங்கின. வெப்பநிலை இயல்பு நிலைக்கு வந்தது. கருவிகள் அமைதியாயின.

விக்டர் பெருமூச்சு விட்டான். தன் பேக்கைப் பூட்டினான். ஜமீன்தாரிடம் சென்று, "உங்கள் பங்களாவில் இருப்பது பேய் அல்ல, அது ஒரு மின்காந்த நினைவலை. அதை எப்படிச் சமன் செய்வது என்று நான் லண்டன் சென்றதும் எழுதி அனுப்புகிறேன்" என்று சொல்வதற்காகக் கதவை நோக்கி நடந்தான்.

நூலக அறையின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. விக்டர் கைப்பிடியைத் திருப்பினான். கதவு திறக்கவில்லை.

"ஜமீன்தார்! கதவைத் திறங்கள்!" என்று கத்தினான். வெளியிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.

அப்போது, அவனுக்குப் பின்னால், அந்த மேஜையின் மீது இருந்த மெழுகுவர்த்தி தானாக அணைந்தது. அறை முழு இருளில் மூழ்கியது.

விக்டர் தன் பாக்கெட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்து, ஒரு குச்சியை உராய்ந்தான். சடசடவெனத் தீப்பற்றி எறிந்த அந்தச் சிறிய வெளிச்சத்தில், அவன் எதிரே இருந்த கண்ணாடியைப் பார்த்தான்.

கண்ணாடியில் விக்டரின் உருவம் தெரிந்தது. ஆனால், கண்ணாடியில் இருந்த விக்டரின் கையில் தீக்குச்சி எரியவில்லை! கண்ணாடியில் இருந்த விக்டர், இவனைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்துக்கொண்டிருந்தான்.

விக்டர் திடுக்கிட்டுத் தன் கையைப் பார்த்தான். அவன் கையில் தீக்குச்சியே இல்லை. அவனது கைகள் வெளிப்படையாக, கண்ணாடியைப் போல ஒளி புகும் தன்மையோடு மாறியிருந்தன! அவனால் தன் கை நரம்புகளையும், எலும்புகளையும் பார்க்க முடிந்தது!

அவன் அலறியபடி தரையைப் பார்த்தான். அவன் கால்கள் தரையைத் தொடவில்லை. தரைக்குச் சற்று மேலே மிதந்துகொண்டிருந்தான்!

அப்போது, அந்த அறையின் பூட்டப்பட்ட கதவு மெதுவாகத் திறந்தது.

வெளியே ஜமீன்தாரும், காரியஸ்தரும், அவர்களுடன் மற்றொரு விக்டரும் உள்ளே நுழைந்தார்கள்!

ஆம், கதவைத் திறந்து உள்ளே வந்தவன் விக்டர் ஹியூஸ்! அவன் கையில் லெதர் பேக் இருந்தது. அவன் ஜமீன்தாரிடம் பேசிக்கொண்டே வந்தான், "ஜமீன்தார் அவர்களே, இன்றிரவு 12:00 மணிக்கு எனது ஆராய்ச்சியை இந்த நூலக அறையில் தொடங்குகிறேன். என் கருவிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன."

மிதந்துகொண்டிருந்த விக்டர் திகைத்துப்போய், கதவைத் திறந்து உள்ளே வந்த தன்னைப் பார்த்தான்.

அப்போது அவன் தரையைப் பார்த்தான். நூலக அறையின் நடுவே, அந்தத் தேக்கு மர நாற்காலியில் ஓர் உடல் சாய்ந்து கிடந்தது. அது விக்டரின் உடல்! அவனது கையில் டைரியும், பாக்கெட் கடிகாரமும் உறைந்த நிலையில் இருந்தன. அவனது முகம் பயத்தில் உறைந்திருந்தது.

நள்ளிரவு 12:00 மணிக்கு வெப்பநிலை 52 டிகிரியாகக் குறைந்தபோதே, கடுமையான மாரடைப்பால் விக்டரின் இதயம் நின்றுவிட்டது! அவனது உயிர் எப்போதோ பிரிந்துவிட்டது!

கடந்த ஒரு மணி நேரமாக, கருவிகளை அளந்ததும், டைரியில் எழுதியதும், "நான் அறிவியலால் இதைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்று பெருமிதப்பட்டதும் விக்டரின் உடலை விட்டுப் பிரிந்த அவனது சொந்த ஆவிதான்!

தன் இறப்பை அறியாமல், தான் ஓர் ஆராய்ச்சியாளன் என்ற எண்ணத்திலேயே தன் சொந்த உடலையும், தன் மரணத்தையும்தான் அவன் இவ்வளவு நேரமாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்!

இப்போது, புதிதாக உள்ளே வந்த விக்டர், தன் பையில் இருந்து தெர்மாமீட்டரை எடுத்தான்.

மிதந்துகொண்டிருந்த விக்டரின் ஆவி, அலறியபடி அந்த உடலை நோக்கிப் பாய்ந்தது, "வேண்டாம்! கதவைத் திறங்கள்! நான் இறந்துவிட்டேன்! என் உடலைப் பாருங்கள்!" என்று கத்தியது.

ஆனால், அவனது குரல் எந்த மனிதனின் காதிலும் விழவில்லை. அது ஒரு மெல்லிய அலைவரிசையாக, அந்த விக்டரின் மூளைக்குள் மட்டும் கேட்டது.

உள்ளே வந்த விக்டர் தன் பாக்கெட் கடிகாரத்தைப் பார்த்தான். வெப்பநிலை 52 டிகிரியாகக் குறைந்திருந்தது. சுவரில் ஒரு நிழல் அசைவதைப் பார்த்து, தன் கேமராவைத் திருப்பினான்.

சுவரில் அசைந்துகொண்டிருந்த அந்த நிழல். வேறு யாருடையதும் அல்ல; தன் சொந்த மரணத்தை உணர்ந்து அலறிக்கொண்டிருந்த விக்டரின் ஆவியின் நிழல்தான்!

அறிவியலால் எல்லாவற்றையும் அளந்துவிட முடியும் என்று நம்பிய ஒரு மனிதன், இப்போது தனக்கான அளவீடுகள் எதுவுமற்ற ஓர் இருண்ட பரிமாணத்தில், தன் சொந்த நிழலாய் நிரந்தரமாகச் சிக்கிக்கொண்டான்!

உங்களுக்குப் புரிகிறதா, விக்டருக்கு என்ன நடந்தது, இனி என்ன நடக்கப் போகிறதென்று?

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Tuesday, 18 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.08.2026

1) சென்னையில் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

2) மருத்துவர்களுக்குத் தனித்துவ அடையாள எண் வழங்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.

3) அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது மகப்பேற்றுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83 அடியாக உயர்ந்துள்ளது.

5) இந்திய தேர்தல் முறையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.


Education & GK News

1) A conference of Chief Ministers from southern states, chaired by Union Home Minister Amit Shah, is scheduled to be held in Chennai tomorrow.

2) The National Medical Commission plans to issue unique identification numbers to doctors.

3) It has been announced that female government employees will be granted one year of maternity leave for their third child as well.

4) The water level in the Mettur Dam has risen to 83 feet.

5) US President Donald Trump has praised India's electoral system.

உலகின் மிகக் கெட்ட மனிதன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 56

உலகின் மிகக் கெட்ட மனிதன்!

அலெஸ்டர் குரோலி  1900களின் தொடக்கத்தில் உலகம் கண்ட மிக விசித்திரமான, சர்ச்சைக்குரிய மனிதன். "உலகின் மிகக் கெட்ட மனிதன்" என்று அன்றைய ஆங்கிலேயப் பத்திரிகைகளால் வர்ணிக்கப்பட்டவன். இவர் உருவாக்கிய 'தெலேமா'  கோட்பாடும், அதற்கு அவன் பயன்படுத்திய பாலியல் தந்திர முறைகளும் இன்றளவும் அமானுஷ்ய வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்.

1904 ஆம் ஆண்டு, கெய்ரோ நகரில் உள்ள ஒரு ஹோட்டல் அறை. வெளியே எகிப்தியக் காற்று வீசிக்கொண்டிருக்க, உள்ளே தீவிரமான தியான நிலையில் உட்கார்ந்திருந்த அலெஸ்டர் குரோலி அமானுஷ்யக் குரலில் சொன்ன விஷயங்கள்தான் பின்னாளில் 'தி புக் ஆப் தி லா'  என்ற உலகப் புகழ்பெற்ற நூலானது. அங்கிருந்துதான் பிறந்தது 'தெலேமா'.

கிரேக்க மொழியில் 'தெலேமா' என்றால் விருப்பம் என்று பொருள். குரோலி சொன்ன ஒரே தர்மம் இதுதான், "உனக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்! அதுவே உனக்கான விதி."

கேட்பதற்கு மிக எளிமையாகவும், கொஞ்சம் ஆபத்தான சுதந்திரமாகவும் இருக்கிறதல்லவா? அதுதான் குரோலியின் ஸ்டைல்.

ஆன்மீகத்தையும் அமானுஷ்யத்தையும் அடைவதற்குப் பழங்காலத்தில் பல வழிகள் இருந்தன. தவம், தியானம், சடங்குகள், ரசாயனப் பரிசோதனைகள். ஆனால் குரோலி யோசித்தது வேறு வழி.

மனித உடலின் உச்சகட்ட ஆற்றல் மற்றும் உணர்ச்சிப் பெருக்கு எப்போது நிகழ்கிறது? என்று யோசித்த குரோலி அது பாலியல் உறவின் போது மட்டுமே எனக் கருதிக் கொண்டான்.

பாலியல் உறவின் போது உருவாகும் அந்த மகத்தான மனக் குவியலையும், ஆற்றலையும், சாதாரணமான உடல் விருப்பங்களுக்குப் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட இலக்கை அல்லது அமானுஷ்ய சக்தியை நோக்கித் திருப்ப முடியும் என்பதுதான் குரோலியின் வாதம். அதுதான் அவன் குறிப்பிடும் பாலியல் தந்திரம்.

இது தந்திர சாஸ்திரமா என்றால், 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். எகிப்திய சடங்குகள், மேலைநாட்டு அமானுஷ்ய முறைகள் மற்றும் இந்தியாவின் 'தந்திரா'  கோட்பாடுகள் ஆகியவற்றின் கலவைதான் இது.

இதன் நோக்கம் என்று பார்த்தால், மனிதனின் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் சுய விருப்பத்தை விழிப்படையச் செய்து, பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்புகொள்ளச் செய்வது. நீங்கள் அமானுஷ்யத்தின் அட்ரஸ் தொடரைத் தொடர்ந்து படிப்பவராக இருந்தால், இதெல்லாம் சுத்த ஹம்பக் என்பது இந்நேரம் உங்களுக்குச் சொல்லாமலே புரிந்திருக்கும்.

அது சரி, குரோலி ஏன் இப்படி மாறினான்?

இங்கிலாந்தின் பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த குரோலி, சாதாரண வாழ்க்கையை வெறுத்தான். போதைப்பொருள் பயன்பாடும், இரகசிய அமைப்புகளில் பங்கேற்பும் குரோலியைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தன.  அதன் பிறகு இத்தாலியில் அவன் அமைத்த செபாலு அபே ஆசிரமம் என அவன் தொட்டதெல்லாம் சர்ச்சையானது.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், குரோலி செய்தது உளவியல் சார்ந்த ஓர் அமானுஷ்ய விளையாட்டு. மனிதனின் ஆழ்மன ஆற்றலை வெளிக்கொண்டுவர அவன் பாலியல் மற்றும் சடங்குகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினான்.

சுருக்கமாகச் சொன்னால், அலெஸ்டர் குரோலி என்பவன் தன் காலத்திற்கு மிகவும் முந்திய, கட்டற்ற சுதந்திரத்தை விரும்பிய, சற்று அதித விலகல் கொண்ட ஓர் அமானுஷ்ய மனிதன்.

நவீன உளவியல் ரீதியாகப் பார்த்தால், குரோலி செய்தது என்பது, மனிதனின் ஆழ்மன உந்துதலை ஒரு குறிப்பிட்ட எண்ணத்தின் மீது தீவிரமாகக் குவித்து, அதை நிறைவேற்ற முயன்ற ஒரு மைண்ட் கேம். ஆனால், அன்றைய 1900களின் சமூகத்திற்கு இது பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் தந்ததால் அவன் "சாத்தானின் அடியாள்" என்றும் முத்திரை குத்தப்பட்டான்.

ஒரு தனிமனிதன் நினைத்தாலும் அயோக்கியத்தனங்களை அமானுஷ்யங்கள் என்ற பெயரில் அரங்கேற்ற முடியும் என்பதற்கு அலெஸ்டர் குரோலி ஒரு மகத்தான வரலாற்று உதாரணம்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****