Monday, 31 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.09.2026

1) மேட்டூர் அணையை இன்று பாசனத்துக்காகத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்.

2) தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் சாகுபடி பரப்பு 1.22 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது.

3) நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளது.

4) இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல் – சூன் காலாண்டில் 7.8 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

5) அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது.




Education & GK News

1) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay is opening the Mettur Dam for irrigation today.

2) The area under paddy cultivation in Tamil Nadu has decreased by 1.22 lakh hectares compared to last year.

3) The death toll from the floods in Nepal has risen to 939.

4) The Indian economy grew by 7.8 percent in the April–June quarter.

5) Conflict has reignited between the United States and Iran.

பேய் பொம்மை

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 70

பேய் பொம்மை

ஆவணி மாதத்து வெயிலின் வெக்கையும், மழையை எதிர்பார்த்துப் புழுங்கிக் கொண்டிருக்கும் ஏமாற்றமும் கலந்த இரவு நேரம். மின்விசிறி காற்றுக்குப் பதில் அனலை ஹால் எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது.

தமிழரசன் தன் மடிக்கணினியை மூட முயன்றபோது, கோவிந்த் கையில் ஒரு பழைய துணிப் பொம்மையை வைத்து உருட்டிக்கொண்டிருந்தான். அது பிளாஸ்டிக் பொம்மையல்ல; தையல்கள் பிரிந்த, செம்பட்டை தலைமுடி கொண்ட, கண்கள் மட்டும் சற்று விசித்திரமாகத் தைக்கப்பட்ட ஒரு அமானுஷ்ய தன்மை கொண்ட பேய் பொம்மை.

"என்ன இது கோவிந்த்?"  என்றான் தமிழரசன்.

"அன்னபெல், தமிழரசன். போன வாரம் மன்னார்குடி, அரிசிகடைச் சந்தில் இருக்குற பழைய பேப்பர் கடையில் அஞ்சு ரூபாய்க்கு வாங்குனேன். ஆனா, இது சும்மா பொம்மை இல்ல." கோவிந்த் குரலைத் தாழ்த்தினான். "இதுக்குள்ள ஓர் ஆவி இருக்கு!"

தமிழரசன் சலிப்புடன் கோவிந்தைப் பார்த்தான். "விஜயராமனோட சேர்ந்து இந்த ஆவி பிடிக்கிற பழக்கம் உனக்கும் வந்துட்டு. கோவிந்த், 1970கள்ல அமெரிக்காவில் எட், லோரேன் வாரன் தம்பதி பண்ணின அதே ஏமாற்று வேலை. ஆவி, பேய் எல்லாமே மனித மூளையோட ஐடியாமோட்டார் விளைவுதான். இது ஒரு வெறும் பஞ்சு அடைச்ச துணி."

"அப்படியில்லை தமிழரசன்! நேத்து நைட் இதை டேபிள் மேல வச்சுட்டுத் தூங்கினேன். காலையில பாத்தா என் கட்டிலுக்கு அடியில கிடக்கு. பக்கத்துல 'எனக்கு பசிக்குது'ன்னு தமிழ்ல ஒரு பேப்பர் குறிப்பு!" கோவிந்தின் முகத்தில் லேசான வேர்வை.

தமிழரசன் புன்னகைத்தான். "நியூட்டனின் முதல் விதிப்படி புறவிசை இல்லாமல் ஒரு பொருள் நகர முடியாது. நீ தூக்கத்துல நடக்குற ஆள் கோவிந்த். சரி, உன் திருப்திக்கு ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணுவோம்."

தமிழரசன் அந்தப் பொம்மையை ஹாலில் இருந்த ஒரு மர நாற்காலியில் அமர வைத்தான். அதைக் சுற்றி மெல்லிய லேசர் டிடெக்டர் அலாரத்தைப் பொருத்தினான். "இனி இந்த பொம்மை ஒரு மைக்ரோ மீட்டர் நகர்ந்தாலும் அலாரம் அடிக்கும். அறிவியல் பொய் சொல்லாது."

இரவு 1:15.

திடீரென வீட்டின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஹாலில் இருந்து மெல்லிய அலாரம் ஒலி எழுப்பியது.

கோவிந்த் பாய்ந்து எழுந்து தமிழரசனின் தோளைப் பிடித்தான். "தமிழரசன்! அலாரம் அடிக்குது!"

இருவரும் எமர்ஜென்ஸி லைட்டுடன் ஹாலுக்கு வந்தார்கள். லேசர் அலைவரிசை துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாற்காலியில் பொம்மை இல்லை!

"பாத்தியா! நான் சொன்னேன்ல!" கோவிந்த் நடுங்கினான்.

தமிழரசன் எமர்ஜென்ஸி லைட்டின் வெளிச்சத்தை நாற்காலியின் கீழே அடித்தான். பொம்மை அங்கே தலைகீழாகக் கிடந்தது. தமிழரசன் அதை உற்றுப் பார்த்தான். பொம்மையின் துணி தையலில் ஒரு சிறிய இரும்பு அதிர்வுச் சில்லு மற்றும் ரிமோட் கண்ட்ரோல் ரிசீவர் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது!

"கோவிந்த், இது ஆவியும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை. 5ஜி ரிமோட் சிப் வச்சு உன்னை யாரோ ஏமாத்துறாங்க." என்று தமிழரசன் சொல்லி முடிப்பதற்குள், அவர்களது மொபைல் போன்கள் இரண்டிலும் ஒரே நேரத்தில் ஒரு மெசேஜ் வந்தது.

அனுப்பியவர் அன்னபெல்.

மெசேஜைப் படித்தான் தமிழரசன். "சிப் இருப்பது உண்மைதான் தமிழரசன். ஆனால், அந்தச் சிப்பை அங்கே வைத்த ஆள் போன வாரமே ஒரு கார் விபத்தில் இறந்து விட்டான்!"

அடுத்த நொடி. வீட்டின் மின்சாரம் மீண்டும் வந்தது. நாற்காலியில் கிடந்த பொம்மை, மெதுவாகத் தன் தலையை 180 டிகிரி திருப்பி, தமிழரசனைப் பார்த்து பகபகவெனச் சிரித்தது!

தமிழரசனின் கையில் இருந்த எமர்ஜென்ஸி லைட் கீழே விழுந்து நொறுங்கியது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Sunday, 30 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.08.2026

1) நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 788 ஆக அதிகரித்துள்ளது.

2) பிரதமர் நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

3) டெல்டா மாவட்டங்களின் நீர் பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ளது.

4) தமிழக அரசு கல்லூரிகளில் 6000 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

5) ரஷ்யாவுக்கு அதிகம் சுத்தகரிக்கப்பட்ட பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.


Education & GK News

1) The death toll from the massive floods in Nepal has risen to 788.

2) Prime Minister Narendra Modi has been conferred with Uzbekistan's highest award.

3) The Mettur Dam is set to be opened tomorrow for irrigation in the Delta districts.

4) The recruitment examination to fill 6,000 lecturer posts in Tamil Nadu government colleges will be conducted in three phases.

5) India has emerged as a major exporter of refined petrol to Russia.

இறந்த பிறகும் ஏமாற்றாத ஒரே மனிதன்!

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் – 69

இறந்த பிறகும் ஏமாற்றாத ஒரே மனிதன்

பேய்கள் இருக்கிறதா இல்லையா என்பது தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்ட இன்று கூட விவாதத்திற்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இருக்கிறது என்று சொல்லி கல்லா கட்டிய கூட்டத்தை 1920களில் ஒரு மனிதர் புரட்டி எடுத்தார்.

அந்த மனிதரின் பெயர் ஹாரி ஹூடினி.

உலகப் புகழ்பெற்ற மாயாஜாலக்காரர்.

கைகளில் விலங்கு மாட்டி, பூட்டிய இரும்புப் பெட்டிக்குள் போட்டு, சமுத்திரத்தின் அடியில் தூக்கிப் போட்டாலும், அடுத்த ஐந்தாவது நிமிடம் கம்பீரமாக வெளியே வந்து சிரிக்கும் மேஜிக் சூப்பர் ஸ்டார்.

ஹூடினிக்கு அறிவியல் மீது பெரிய பித்து இருந்தது. ஆனால் அதைவிட பெரிய ரணம் ஒன்று அவருக்குள் இருந்தது. அது என்னவென்றால், அவர் தாய் சிசிலியாவின் மறைவு.

அக்காலத்தில் லண்டனிலும் நியூயார்க்கிலும் ஸ்பிரிச்சுவாலிசம் கொடிகட்டிப் பறந்தது.

"உங்கள் செத்துப் போன தாத்தாவிடம் பேச வேண்டுமா? 5 டாலர் கொடுங்கள், கூப்பிடுகிறேன்" என்று மூலைக்கு மூலை போலி மீடியம்கள் கடை விரித்திருந்தார்கள்.

தாயின் பிரிவால் துயருற்ற ஹூடினியும், "உண்மையிலேயே ஆவிகளோடு பேச முடியுமா?" என்ற ஏக்கத்தில் இந்த மீடியம்களைத் தேடிப் போனார்.

போன இடத்தில் அவருக்குக் கிடைத்ததெல்லாம் ஏமாற்றம்.

இருட்டு அறையில் டேபிள் ஆடுவது, காற்றில் மிதக்கும் மணி, சுவரில் தட்டும் ஓசை என இவை அனைத்துமே மிகச் சாதாரணமான, அவர் மேடையில் செய்யும் மேஜிக் டிரிக்ஸ்கள்தான் என்பதை ஒரு நொடியில் கண்டுபிடித்தார்.

தாயின் துயரத்தை வியாபாரமாக்கிய அந்தப் போலி கும்பல் மீது ஹூடினிக்கு அளவுகடந்த கோபம் வந்தது.

விளைவு?

ஹூடினி டிரான்ஸ்பார்ம் ஆனார். மேஜிக் ஷோக்களைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, போலி ஆவி நிபுணர்களை அம்பலப்படுத்தும் புதிய வேட்டையில் இறங்கினார்.

அவரது வேட்டை ஸ்டைலே தனி.

தாடி வைத்து, வேற்று உடையில், சாதாரண ஆளாக உருமாறிக் கொண்டு ஆவி அழைக்கும் இருட்டு அறைகளுக்குள் நுழைவார். அவர்கள் டேபிளைத் தட்டும் போது, "லைட்டைப் போடு!" என்று கத்துவார்.

பிறகு அங்கே என்ன நடக்கும்?

மீடியம்கள் காலின் கட்டைவிரலால் டேபிளைத் தட்டுவது, ரப்பர் பூட்ஸ் வைத்து மேசையை உயர்த்துவது, மெல்லிய நூலில் மணிகளைக் கட்டுவது என அவர்களின் அனைத்து தில்லுமுல்லுகளையும் அணுவணுவாகப் பிடித்து, செய்தியாளர்களை வைத்து அம்பலப்படுத்துவார்.

இதில் உச்சக்கட்ட காமெடி என்னவென்றால், ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதிய பிரபல எழுத்தாளர் சர் ஆர்தர் கோனன் டாய்ல், ஹூடினியின் நெருங்கிய நண்பர். டாய்ல் ஆவி உலகத்தை தீவிரமாக நம்பியவர்.

டாய்ல் ஹூடினியிடம், "ஹூடினி, நீ மேடையில் செய்யும் தப்பியோடும் வித்தைகள் சாதாரண மேஜிக் இல்லை. உனக்கு உண்மையிலேயே ஏதோ ஆவி உலகம் தந்த சக்தி இருக்கிறது. அதை மறைக்கத்தான் நீ மற்ற மீடியம்களைப் போலி என்கிறாய்!" என்று சீரியஸாக வாதித்தார்.

ஹூடினி தலையில் அடித்துக் கொண்டார். "யோவ் டாய்ல்! நான் செய்வதெல்லாம் வெறும் கைச்சலக்கம், அறிவியல், பிஸிக்ஸ்! எந்த ஆவியும் எனக்கு உதவவில்லை!" என்று கத்தியும் டாய்ல் நம்பவே இல்லை.

அறிவியலை எழுதும் எழுத்தாளர் மூடநம்பிக்கையில் மூழ்கிப்போக, மேஜிக் செய்யும் மாயாஜாலக்காரர் அறிவியலின் பக்கம் நின்ற விசித்திர நாடகம் அது!

அமெரிக்க நாடாளுமன்றம் வரை சென்று, இந்த போலி மீடியம்களைத் தடை செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றப் போராடினார் ஹூடினி.

அது மட்டுமல்ல, அவர் இறந்தபோதும் ஓர் இறுதிப் பரிசோதனையைச் செய்து விட்டுப்போனார். தன் மனைவி பெஸ்ஸிடம் ஒர் இரகசியக் குறியீட்டு வார்த்தையைச் சொல்லிவிட்டு, "நான் இறந்த பிறகு எவனாவது என் ஆவியைக் கூப்பிடுவதாகச் சொன்னால், அவனிடம் இந்த வார்த்தையைச் சொல்லச் சொல். அப்படிச் சொன்னால் மட்டுமே அது என் ஆவி. இல்லையென்றால், அவன் ஏமாற்றுக்காரன்!" என்றார்.

ஹூடினி இறந்து பல ஆண்டுகள் வரை பல மீடியம்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் ஒருவராலும் அந்த இரகசிய வார்த்தையைச் சொல்ல முடியவில்லை.

இறந்த பிறகும் கூட, போலி ஆவி உலகத்தின் முகத்திரையைக் கிழித்து ஜெயித்துக் காட்டினார் ஹூடினி!

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல, செத்தும் நிரூபித்தார் ஹூடினி!

ஆக, இனி உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம், ஆவி இருக்கிறதா இல்லையா என்று.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 29 August 2026

ஆவிகளின் ஒளிவிலகல்

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் - 68

ஆவிகளின் ஒளிவிலகல்

காரின் கதவுகள் தாழ்ப்பாளிட்டுக்கொள்ள, பின்புறக் கண்ணாடியில் நெடுமாறனின் முகம் புன்னகைக்க, இளவழகனின் இதயத் துடிப்பு 140ஐத் தொட்டது.

மூளை 'பயம்' என்ற ரசாயனத்தை ரத்தத்தில் பாய்ச்சியது. ஆனால், இளவழகனின் இயற்பியல் பயிற்சி பெற்ற மூளை, பயத்தையும் தாண்டி யோசிக்கத் தொடங்கியது.

"இளவழகன்! என் டிரிக்ஸைக் கண்டுபிடி பாப்போம்!" குரல் மீண்டும் கேட்டது.

இளவழகன் மூச்சை ஆழ்ந்து இழுத்துவிட்டான். அவனது கை மெதுவாகத் தன் சட்டைப் பையில் இருந்த சிறிய லேசர் பாயிண்டரை நோக்கியும், லேப்டாப்பின் விசைப்பலகையை நோக்கியும் நகர்ந்தது.

அவன் கண்ணாடியை நேரடியாகப் பார்க்காமல், அதன் ஒளியியல் பிம்பத்தைக் கவனித்தான்.

''நெடுமாறனின் முகம். ஆனால் அதன் விளிம்புகளில் லேசான சிவப்பு மற்றும் நீல நிற விளிம்புப் பிறழ்ச்சி தெரிகிறது. நிஜ ஆவி என்றால் ஒளிவிலகல் எப்படி நிகழும்?''

இளவழகன் உரக்கச் சிரித்தான்.

"பிரமாதமான டிரிக் சுவாமிஜி! அல்லது சுவாமிஜியின் ஆட்களா?"

பின் சீட்டில் இருந்த உருவம் லேசாக அசைந்தது.

"நான் நெடுமாறன்டா!" குரல் கரகரத்தது.

"இல்லை!" இளவழகன் சட்டென்று லேசர் பாயிண்டரை ஆன் செய்து, பின் சீட்டை நோக்கி அடித்தான்.

லேசர் ஒளி பின் சீட்டின் குளிர் காற்றில் இருந்த பனிப்புகையின் மீது பட்டு, ஒரு முப்பரிமாணக் கூம்பாக விரிந்தது. அது சீட்டின் மீது படாமல், நடுவானில் மிதந்த ஒரு மெல்லிய, ஒளிப்புகும் ஹோலோகிராமிக் திரை மீது விழுந்தது.

"பிசிக்ஸ் டிரிக்!" இளவழகன் வேகமாகக் கத்தினான்.

"மிஸ்டர் சுவாமிஜி! நீங்கள் போகும்போது என் காரின் பின் சீட் தலைப்பகுதியில் ஒரு சிறிய மினியேச்சர் புரஜெக்டர் அப்புறம் ஒரு ஸ்பீக்கரைப் பொருத்திவிட்டுப் போயிருக்கிறீர்கள்தானே? காரின் ஏசியை புளூடூத் மூலம் ஹேக் செய்து, குளிர்ச்சியை அதிகப்படுத்தி, பெப்சி பாட்டிலில் அடைக்கப்பட்ட உலர் பனிக்கட்டியை காரின் பின் சீட்டின் அடியில் உருக வைத்திருக்கிறீர்கள்தானே? அது உருவாக்கிய புகையில்தான் இந்த முப்பரிமாண பிம்பம் தெரிகிறது இல்லையா?"

காரின் கதவுகள் இன்னும் பூட்டியே இருந்தன.

"சரி இளவழகன்! பிம்பத்தையும் ஒலியையும் கண்டுபிடிச்சிட்ட. ஆனா கார் கதவு எப்படிப் பூட்டுச்சு? எஞ்சின் ஏன் ஆப் ஆச்சு? அதுக்கும் பிசிக்ஸ் இருக்கா?" குரல் இப்போது பிராஜெக்டர் ஸ்பீக்கரில் இருந்து தெளிவாகக் கேட்டது.

"ஓ அதுவா?" இளவழகன் லேப்டாப்பில் ஒரு கமாண்டை டைப் செய்தான்.

"ஓ மை மிஸ்டர் சுவாமிஜி! என் கார் சாதாரண கார் இல்லை. இது டெஸ்லா பாணி ஸ்மார்ட் கார்! காரின் கம்ப்யூட்டரை யாரோ வெளியில் இருந்து மொபைல் ஆப் மூலமாக ஹேக் பண்ணியிருக்கீங்க. அதான் எஞ்சின் ஆப் ஆகி கதவு பூட்டிருச்சு. ஆனா நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க!"

"என்ன?"

"என் லேப்டாப் என் காரின் மெயின்பிரேமுடன் வைபை மூலம் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கு. நீங்க அனுப்பிய ஹேக்கிங் சிக்னலை என் லேப்டாப் பயர்வால் மூலம் பிளாக் பண்ணிடுச்சு. நான் இப்போ மெனுவல் ஓவர்ரைடு தர்றேன்!"

இளவழகன் லேப்டாப்பில் என்டரைத் தட்டினான்.

'கிளிக்!'

காரின் கதவுகள் திறந்துகொண்டன. எஞ்சின் மீண்டும் 'கர்ர்ர்' என்று கர்ஜித்துக்கொண்டு உயிர்பெற்றது. காரின் உள்புற விளக்குகள் பளிச்சென்று எறிந்தன.

பின் சீட்டில் இருந்த ஹோலோகிராம் பிம்பம் மறைந்தது. உலர்பனிப் புகை காரின் ஜன்னல் வழியே வெளியேறியது.

பின் சீட்டின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய பிராஜெக்டரும், ஸ்பீக்கரும், சுவாமிஜியின் ஆள் அதை இயக்கப் பயன்படுத்திய டிரான்ஸ்மிட்டரும் இளவழகனின் கைக்கு வந்தன.

இளவழகன் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்து, கியரை மாற்றி பெரியகொத்தூர் சாலையைக் கடந்து, இடது புறம் திரும்பி, கோட்டூர் சாலையில் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்ட ஆரம்பித்தான்.

அமானுஷ்யம் என்பது நம் மூளைக்குள் இருக்கும் அறியாமையேயன்றி வேறில்லை. அறிவியலைச் சரியாகப் புரிந்து கொண்டால், அவை அனைத்தும் அறிவியல் ட்ரிக்தான் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

இளவழகனின் கார் இப்போது இருட்டைக் கிழித்துக் கொண்டு ஆவி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Friday, 28 August 2026

பின் இருக்கையில் ஒருவன்

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் - 67

கணினி காலத்துப் பேய்கள்

மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த ஒரு வெள்ளிக்கிழமை நள்ளிரவு.

பெரியகொத்தூரில் இருந்த அந்தப் பழைய பங்களாவின் முதல் தளத்தில், மெழுகுவர்த்தி வெளிச்சம் நடுங்கிக்கொண்டிருந்தது.

அறையின் நடுவே ஒரு பெரிய டேபிள். அதைச் சுற்றி மூவர்.

முதலாவதாக, கதிரேசன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். ஆறு மாதத்திற்கு முன் விபத்தில் இறந்த தன் ஒரே மகன் நெடுமாறனின் ஆவியோடு பேசத் துடித்துக் கொண்டிருந்தார்.

இரண்டாவதாக, சுவாமிஜி அக்னீஸ்வரர். கழுத்து நிறைய ருத்ராட்சம், தாடி, கைகளில் பெரிய பெரிய மோதிரங்கள்.

மூன்றாவதாக, இளவழகன். இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவன், ஆனால் கையில் எப்போதும் ஒரு லேப்டாப்பும், நக்கலும் இருக்கும். கதிரேசனின் அண்ணன் மகன்.

"சுவாமிஜி! நிஜமாவே என் பையன் வருவானா?" கதிரேசன் குரல் நடுங்கியது.

"சந்தேகப்படாதீர்கள் கதிரேசன் அவர்களே! பிரபஞ்ச சக்திகளை இந்த மெழுகுவர்த்திச் சுடரில் ஆவாஹனம் செய்திருக்கிறேன். நெடுமாறனின் ஆவி இந்த அறையில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது." சுவாமிஜி கண்ணை மூடி முணுமுணுத்தார்.

இளவழகன் தன் லேப்டாப்பைப் பார்த்தபடியே சிரித்தான். "சுவாமிஜி, நீங்க கத்துவதைக் கொஞ்சம் மெதுவா கத்துனா நல்லா இருக்கும். ஏன்னா, உங்க ஷூவுக்கு அடியில இருக்கிற அந்த புளூடூத் பிரஷர் பேடை நீங்க மிதிக்கும்போதுதான், டேபிளுக்கு அடியில இருக்கிற மினியேச்சர் மோட்டார் அதிர்ந்து சத்தம் உண்டாக்குது. சவுண்ட் கொஞ்சம் அதிகமா வருது!"

சுவாமிஜியின் கண் சட்டென்று திறந்தது.

லேசான அதிர்ச்சி.

"என்னடா தம்பி விளையாடுறியா?" என்றார் கதிரேசன்.

"விளையாட்டு இல்ல சித்தப்பா!" இளவழகன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய ஸ்பெக்ட்ரம் அனலைசரைக் காட்டினான்.

"அமைதியா இருங்க. இந்த சுவாமிஜி பண்ணுறது எல்லாமே பிசிக்ஸ் டிரிக். அறையில திடீர்னு குளிர்ற மாதிரி இருக்கிறதுக்குக் காரணம், அவர் பின்னாடி மறைச்சு வச்சிருக்கிற திரவ நைட்ரஜன் ஸ்ப்ரே. டேபிள் தானா ஆடுறதுக்குக் காரணம், மேஜை கால்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின்காந்தச் சுருள்கள். அந்தச் சுவரில் தெரியுற நிழல். அது வெறும் போர்ட்டபிள் புரொஜெக்டர் லேசர்!"

இளவழகன் லேப்டாப்பில் ஒரு பொத்தானை அழுத்த, அறையின் விளக்குகள் பளிச்சென்று எரிந்தன.

சுவாமிஜியின் முகத்தில் வியர்வை அரும்பியது. இளவழகன் எழுந்து போய், மேஜையின் அடியில் இருந்த கம்பிகளையும், சுவாமிஜியின் பாக்கெட்டில் இருந்த ரிமோட்டையும் வெளியே எடுத்து மேஜை மேல் போட்டான்.

"சுவாமிஜி, ஆவி உலகத்தோடு பேசுறது இருக்கட்டும். முதல்ல இந்த போர் டொன்ட்டி டிரிக்ஸை நிறுத்துங்க. சித்தப்பா, இவருக்கு நீங்க கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாயை வாங்கிட்டு இவரை வெளியே அனுப்புங்க. ஆவியாவது, ஒண்ணாவது. எல்லாமே வெறும் மூடநம்பிக்கை!" என்றான் இளவழகன் அலட்சியமாக.

சுவாமிஜி அமைதியாகத் தன் பையை எடுத்துக்கொண்டார். போகும்போது இளவழகனைப் பார்த்து ஒரு மாதிரி சிரித்தார். "தம்பி! அறிவியல் எல்லாத்தையும் விளக்கிடும்னு நினைக்கிறீங்க. நல்லது. ஆனா, சில கேள்விகளுக்குப் பதிலை அறிவியல் சொல்லாம இருக்குறதுதான் மனித குலத்துக்கு நல்லது" என்று சொல்லிவிட்டுப் படியேறி இறங்கி மறைந்தார்.

கதிரேசன் ஏமாற்றத்துடன் தலைகுனிந்தார். இளவழகன் தன் லேப்டாப்பை மூடிப் பையில் வைத்தான்.

"சரி சித்தப்பா! நான் கிளம்புறேன். மழை விட்டுருச்சு." என்று சொல்லிவிட்டு, தன் காரை நோக்கி நடந்தான்.

அப்போது மணி நள்ளிரவு 1:15.

பெரியகொத்தூர் கிராமமே ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போயிருந்தது. கார் அமைதியாகக் கப்பி பெயர்ந்து, படுபாதாள பள்ளங்கள் நிறைந்த சாலையில் ஓடிக்கொண்டிருக்க, இளவழகன் மியூசிக் பிளேயரைப் போட்டான். பாட்டுக்குப் பதிலாக வெறும் ஹிஸ்ஸ்ஸ் என்ற எலக்ட்ரானிக் இரைச்சல் மட்டுமே வந்தது.

"ச்சைய் இது வேற!" என்று ப்ளேயரை ஆப் செய்யப் போனான்.

திடீரென்று காரின் ஏசி வெப்பநிலை தானாகக் குறையத் தொடங்கியது.

24°C... 18°C... 10°C... 0°C.

காருக்குள் இளவழகனின் மூச்சுக்காற்று பனியாக உறைந்து வெளியே வந்தது.

இளவழகன் திடுக்கிட்டான். "என்ன இது? ஏசி கம்ப்ரஸர் கோளாறா?"

அவன் டேஷ்போர்டைத் தொடுவதற்குள், காரின் ஸ்டீயரிங் வீல் தானாக இடப்பக்கம் திரும்பியது. கார் சாலையின் ஓரத்தில் சட்டென்று நின்று, எஞ்சின் ஆப் ஆனது.

இளவழகனுக்குள் முதன்முறையாக லேசான பயம் ஊடுருவியது. பாக்கெட்டில் இருந்த ஸ்பெக்ட்ரம் அனலைசரை எடுத்தான். அதன் டிஜிட்டல் திரையில் மின்காந்த அலைகளின் அளவு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டு எர்ரர்  என்று காட்டியது.

"இட்ஸ் இம்பாசிபிள்! எந்தச் சாதனமும் இல்லாம இவ்வளவு பெரிய மின்காந்தப் புலம் உருவாக முடியாது!" இளவழகன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

அப்போது, காரின் ரிவர் வியூ மிர்ரர் மெதுவாக இறங்கியது.

பின் சீட்டில் ஏதோ ஓர் உருவம் உட்கார்ந்திருப்பது போன்ற பாரம். கார் பின்னால் லேசாகத் தாழ்ந்தது.

இளவழகனின் முதுகுத்தண்டில் ஒரு குளிர்ந்த காற்று உரசிச் சென்றது. காரின் பக்கவாட்டு அமைதிக்கு நடுவே, அவன் காதுக்கு மிக அருகில் ஒரு குரல் கேட்டது.

மிகவும் மெல்லிய, பனி படர்ந்த குரல்.

"இளவழகா! சுவாமிஜி சொன்ன டிரிக்ஸ் எல்லாம் கண்டுபிடிச்சியே. இப்போ என் டிரிக்ஸைக் கண்டுபிடி பாப்போம்!"

இளவழகன் மெதுவாகத் தலையைத் திருப்பி பின் சீட்டைப் பார்த்தான்.

அங்கே...

ஆறு மாதங்களுக்கு முன் விபத்தில் சிதைந்து போன நெடுமாறனின் முகம், மிகத் தெளிவாக, வெளிச்சத்தைக் கக்கியபடி புன்னகைத்துக் கொண்டிருந்தது.

காரின் நான்கு கதவுகளும் வெளியே இருந்து பூட்டிக்கொண்டன.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Thursday, 27 August 2026

தேடல் எண் 7302

தேடல் எண் 7302

எண்களுக்கு இரக்கமில்லை. சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பில் இப்போது 7,302 என்றோர் எண் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அது வெறும் எண்ணல்ல; சீருடை அணியாத, புத்தகப் பையைக் கழற்றி வைத்த, காலையில் பள்ளி மணியடிக்கும் போது வீட்டின் வாசற்படியில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் குழந்தைகளின் கூட்டுத்தொகை.

திருவான்மியூர் குப்பம், எழில் நகர், கண்ணகி நகர் என இந்த ஊர்ப் பெயர்களை வரைபடத்தில் பார்ப்பது எளிது. ஆனால், அங்குள்ள குறுகலான சந்துகளில் நடந்துபோனால் வறுமை எந்தச் சத்தமும் இல்லாமல் கதவை அடைப்பதைப் பார்க்கலாம்.

ஒரு குழந்தையைப் பள்ளியிலிருந்து வெளியேற்ற பெரிய காரணங்கள் தேவையில்லை; அப்பாவுக்கு வேலை இல்லாமல் போனால் போதும், வீட்டில் அடுப்பு எரியாவிட்டால் போதும். கல்வி என்பது வயிற்றுப்பசிக்கு அடுத்தபடியாகவே நினைவுக்கு வருகிறது.

அரசு இப்போது தரவுகளைத் தோண்டுகிறது. EMIS தரவுக்குள் இத்தனை பெயர்கள் விடுபட்டிருக்கின்றன. ஏற்கனவே 1,200 பேரைத் தேடிக் கண்டுபிடித்து வகுப்பறைக்குத் திருப்பியனுப்பியிருக்கிறார்கள். 130 பேர் விலகத் தயாராக நின்றிருந்தபோது கைபிடித்துத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். மீதமிருக்கும் 7,302 பேரைத் தேட 96 களப்பணியாளர்கள் வீதி வீதியாகப் புறப்படுகிறார்கள்.

களப்பணியாளர்கள் வீடுகளின் கதவுகளைத் தட்டுவார்கள். "ஏன் பள்ளிக்கு வரவில்லை?" என்று கேட்பார்கள். ஒரு குழந்தையின் பதில் ஒருபோதும் எளிமையானதாக இருக்காது. "நிதிச்சிக்கல்" என்பது அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் பயன்படும் ஒரு மென்மையான சொல். அதன் உண்மையான அர்த்தம், "இன்றைய சோற்றுக்கே வழியில்லை, நாளைய படிப்பைப் பற்றி எப்படி யோசிப்பது?" என்பதுதான்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்திருக்கிறார். நாள்காட்டியில் ஒரு தேதியை வட்டமிட்டுவிட்டால் மனித வாழ்வின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்துவிடுமா? தெரியவில்லை. ஆனால், கதவைத் தட்டுவது ஒரு நல்ல தொடக்கம்.

பள்ளி என்பது நான்கு சுவர்களும் ஒரு கரும்பலகையும் கொண்ட கட்டிடம் மட்டுமல்ல; அது ஒரு குழந்தையின் எதிர்காலத்தை வறுமையின் பிடியிலிருந்து மீட்டுப் பத்திரப்படுத்தும் இடம்.

7,302 குழந்தைகளில் ஒவ்வொரு குழந்தையாக மீண்டும் பள்ளிக்குத் திரும்பும்போது, ஒரு பெரிய நாகரிக சமூகம் தன் கூட்டு குற்ற உணர்ச்சியைச் சற்று குறைத்துக்கொள்ளக்கூடும்.

காலக்கெடு நெருங்குகிறது. கதவுகள் தட்டப்படுகின்றன. குழந்தைகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அக்குழந்தைகள் பள்ளியை நோக்கி வருவார்கள் என்று நம்புவோம். நம்பிக்கையே நல்லது. ஒவ்வொரு குழந்தைக்கும் இங்கு கல்விக்கான வாய்ப்பு உள்ளது.

*****