Wednesday, 12 August 2026

டாஸ்மாக் கொடுத்த தைரியமும், ரேஷன் கார்டு கொடுத்த பயமும்!

டாஸ்மாக் கொடுத்த தைரியமும், 

ரேஷன் கார்டு கொடுத்த பயமும்!

திண்டுக்கல் அருகே நடந்த சம்பவம், நம் சமூகத்தின் மகத்தான அறிவுச் செறிவை மீண்டும் ஒருமுறை உரக்கப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.

பாவம் அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலரான ஆசிரியை!

அரசு சொன்ன பணியைச் செய்யப் அலைபேசியும் அடையாள அட்டையுமாகத் தெருவில் இறங்கியிருக்கிறார்.

"வீட்டில் எத்தனை பேர்? சொந்த வீடா?" என்று கேட்டதற்கு, எதிரே நின்ற ஒரு போதை ஞானிக்கு வந்த கோபத்தைப் பார்க்கையில், ஏதோ நாட்டின் உளவுத்துறை ரகசியத்தைத் திருட வந்த சர்வதேச உளவு அமைப்பைப் போல் அந்த ஆசிரியையைப் பார்த்திருக்கிறார்.

"நான் இந்தக் கட்சிக்காரன், என்னிடமே கேட்கிறாயா?" என்று பொங்கியவர், பிறகு காவல்துறையிடம் கைதாகும்போது "நான் அந்தக் கட்சிக்காரன், என்னையே கைது செய்கிறீர்களா?" என்று எகிறியிருக்கிறார்.

அந்தக் குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் வழக்கம் போல் "அவர் எங்கள் ஆளே இல்லை" என்று கையை விரித்துவிட்டார்கள். கடைசியில், அவர் எந்தக் கட்சிப் பிரமுகரோ இல்லையோ, டாஸ்மாக்கின் அதிதீவிரக் கடமை தவறாத தொண்டர் என்பது மட்டும் மிகத் தெளிவாகிறது.

இங்கே பிரச்சனை வெறும் கணக்கெடுப்பு அல்ல; மக்களின் ஆழ்மனப் பயம்.

"சொந்த வீடு இருக்கிறது என்று சொன்னால், ரேஷன் அரிசியை நிறுத்தி விடுவார்களோ? ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை இல்லாமல் செய்து விடுவார்களோ?" என்ற பயம்தான், ஓர் அரசாங்க ஊழியரின் முகத்தில் ஓங்கி அறையும் அளவுக்கு வீரத்தை வளர்க்கிறது.

அறிவையும் தெளிவையும் வளர்க்கத் தவறிய சமூகம், சந்தேகத்தையும் பயத்தையும் மட்டும் மிக நேர்த்தியாகப் பராமரித்து வருகிறது.

அரசாங்கம் இனி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன், "ஐயா சாமி! இந்த கேள்விக்கும் உங்கள் ரேஷன் கார்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று ஊர் ஊராகத் தண்டோரா போட வேண்டும் போலிருக்கிறது.

அல்லது, ஆசிரியர்களுக்குக் கணக்கெடுப்புக் கருவிகளோடு சேர்த்து, தற்காப்புக் கலைச் சான்றிதழையும், தலையில் போடுவதற்கு ஒரு ஹெல்மெட்டையும் வழங்க வேண்டும் போலிருக்கிறது.

அரசியல் அடையாளம், மதுபோதை, ரேஷன் கார்டு பயம் என இந்த மூன்றும் சேரும்போது பிறக்கும் அறியாமை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. இந்தச் சமூகத்திற்கு இப்போது தேவை கணக்கெடுப்பு மட்டுமல்ல, கொஞ்சம் அடிப்படை நாகரிகமும், தெளிவும்தான்.

*****

மூவாயிரம் வீடுகளும் ஒரு லட்சம் கேள்விகளும்!

மூவாயிரம் வீடுகளும் ஒரு லட்சம் கேள்விகளும்!

கூகுள் மேப் என்பதே ஒரு சுவாரஸ்யமான கலைப்படைப்புதான்.

அந்த மேப்பைக் கையில் வைத்துக்கொண்டு "இன்னும் 50 மீட்டரில் வலது பக்கம் திரும்பவும்" என்று அந்தச் செயலி வழிகாட்டும்போது, நாம் ஒரு சாக்கடை அடைப்புக்குள் இறங்க வேண்டியிருக்கும்.

ஆனால், அந்த நவீனத் தொழில்நுட்பத்தை அப்படியே தூக்கிக் கொண்டுவந்து மக்கள்தொகை கணக்கெடுப்பில் சொருகினால் என்னவாகும் என்பதற்குத் தற்போதைய களநிலவரமே சாட்சி.

அப்படித்தான் தாம்பரம் பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர் கையில் மொபைலோடு தவித்து நின்று கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3,000 வீடுகள்!

சாதாரணமாக ஒரு கணக்கெடுப்பாளருக்கு 200 முதல் 300 வீடுகள் ஒதுக்குவதுதான் உலக வழக்கு.

ஆனால், கூகுள் மேப் தனது பரந்த வான்வழிப் பார்வையால் மேலே இருந்து பார்த்திருக்கிறது. செயற்கைக்கோளுக்கு மேலிருந்து பார்க்கும்போது அடுக்குமாடி குடியிருப்பு என்பது வெறும் ஒரு சதுரப் பெட்டிதானே?

அட, ஒரே ஒரு கட்டிடம்தானே என்று அதை ஓர் அலுவலருக்கு ஒதுக்கி விட்டார்கள். ஆனால் அந்த ஒற்றைப் பெட்டிக்குள் 25 பிளாக்குகள், ஆயிரக்கணக்கான மனிதர்கள், லட்சக் கணக்கான கேள்விகள் ஒளிந்திருப்பது கூகுள் மேப்பிற்கு எப்படித் தெரியும்?

ஒரு வீட்டிற்கு 33 கேள்விகள் கேட்க வேண்டும். வீட்டின் கூரை என்ன பொருள்? சுவர் என்ன பொருள்? கழிப்பறை இருக்கிறதா? டிவி, இணையதளம், வண்டி இருக்கிறதா? என்று அதன் பட்டியல் பெரிது. அத்துடன் 34 ஆவது கேள்வியாக அலைபேசி எண்ணைப் பெற வேண்டும். ஆக மொத்தம் 34 கேள்விகள்.

மூவாயிரம் வீடுகளுக்கு இந்தக் கேள்விகளைப் பெருக்கிப் பார்த்தால், மொத்தம் ஒரு லட்சத்து இரண்டாயிரம் பதில்களைச் சேகரிக்க வேண்டும்.

இதை மனதிற்குள் கணக்குப் போட்டுப் பார்ப்பதற்கே தலைச்சுற்றல் வந்துவிடும்.

தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை எளிதாக்க வேண்டும் என்பார்கள். ஆனால், நமது ஊரில் தொழில்நுட்பம் என்பது இப்படித்தான் ஒற்றை அலுவலருக்கு 3000 வீடுகளை ஒதுக்குகின்றன.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.08.2026

1) அரசுப் பள்ளிகளில் தினமும் இருமுறை தூய்மைப் பணி மேற்கொள்ளுவதற்கு 86.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2) இன்று முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

3) மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிரான மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

4) டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக அதன் தலைவர் என். சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

5) நாட்டின் சில்லரைப் பணவீக்கம் சூலை மாதத்தில் 4.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Education & GK News

1) Funds amounting to Rs. 86.84 crore have been allocated for carrying out cleaning operations twice daily in government schools.

2) Counseling for MBBS and BDS courses begins today.

3) A resolution opposing the delimitation of Lok Sabha constituencies was unanimously passed in the Tamil Nadu Legislative Assembly.

4) Tata Sons Chairman N. Chandrasekaran has announced that he will step down from his position.

5) The country's retail inflation rose to 4.45 percent in July.

அமானுஷ்யங்களின் தலைநகரமாக இருந்த அடையாறு!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 51

அமானுஷ்யங்களின் தலைநகரமாக இருந்த அடையாறு!

சென்னை அடையாறு ஆலமரத்துக்கு மட்டும் புகழ்பெற்றது அன்று, அமானுஷ்யங்களுக்கும் புகழ்பெற்றது. அந்த வரலாற்றைத்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். கருணாகரனுக்கான விளக்கமும் இதில்தான் இருக்கிறது.

1900களின் தொடக்கம்.

லண்டனிலும் நியூயார்க்கிலும் மின்சார விளக்குகளும் டெலிகிராபும் புதிதாக வரத் தொடங்கிய காலம். ஒரு பக்கம் அறிவியல் வேகமாக வளர்ந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் மேலைநாட்டினர் அறிவியலுக்கு அப்பாற்பட்ட ரகசியம் என்ன? என்று தேடத் தொடங்கினார்கள். அந்தத் தேடலின் உச்சகட்ட விளைவுதான் பிரம்மஞான சபை எனும் தியோசபிகல் சொசைட்டி.

இதன் பின்னணியில் இருந்தவை இரண்டு மாஸ்டர்மைண்ட்கள்.  ஒருவர் மேடம் பிளவாட்ஸ்கி மற்றொருவர் அன்னி பெசண்ட் அம்மையார். இவர்களின் மெனுபாக்சரிங்குகளில் ஒன்றுதான் கருணாகரன் தனக்கு நடந்ததாகச் சொன்ன ஆஸ்ட்ரல் டிராவல்.

மேலைநாட்டினருக்கு எப்போதும் கிழக்கத்திய தேசங்கள் மீது ஒரு மர்மமான ஈர்ப்பு உண்டு. சாதுக்கள், இமயமலை, யோகா, மறுபிறப்பு, கர்மா போன்ற இவற்றையெல்லாம் ஏதோ ஒரு பெரிய ரகசியக் குறியீடு போலப் பார்த்தார்கள்.

மேடம் பிளவாட்ஸ்கி அந்த ஈர்ப்பைச் சரியாகக் கணித்தார். "உங்களுக்குத் தெரியாத பல ரகசியங்கள் இமயமலைச் சித்தர்களிடம் இருக்கின்றன. அதை உங்களுக்கு நாங்கள் கடத்துகிறோம்" என்றபோது, ஐரோப்பாவும் அமெரிக்காவும் அப்படியே சொக்கிப்போயின.

இன்றைக்கு நம்மூர் ஐடி கம்பெனிகள் கிளவுட் நெட்வொர்க் பற்றிப் பேசுவது போல, அன்று அவர்கள் ஆஸ்ட்ரல் டிராவல், டெலிபதி மற்றும் ஆரா பற்றிப் பேசினார்கள். கர்மா என்பது ஏதோ ஒரு தண்டனைச் சட்டம் அல்ல; அது ஓர் ஆன்மீக இயற்பியல் விதி என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள்.

நியூட்டனின் மூன்றாவது விதிக்கு ஆன்மீக வடிவம் கொடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் அவர்களது கர்மா கோட்பாடு இருந்தது.

இங்குதான் ஒரு பெரிய ட்விஸ்ட். இந்த உலகளாவிய ஆன்மீக நெட்வொர்க்கின் மெயின் சர்வர் எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா? லண்டனிலோ, பாரிஸிலோ இல்லை. நம் ஊர் சென்னை அடையாற்றில்!

அடையாறு ஆற்றங்கரையில், மர அடர்த்தி நிறைந்த அந்த அமைதியான நிலப்பரப்பு, உலகளாவிய பிரம்மஞான இயக்கத்தின் தலைமையகமாக மாறியது. லண்டன் உயர்குடி பிரபுக்கள், அமெரிக்கத் தத்துவவாதிகள், ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் சென்னை நோக்கி படையெடுத்தார்கள். அப்போது தபால்கள், டெலிகிராம்கள், ரகசியக் கடிதங்கள் என அனைத்தும் அடையாற்றை மையமாக வைத்தே உலகமெங்கும் சுழன்றன.

அன்னி பெசண்ட் அம்மையார் சென்னைக்கு வந்தபிறகு, இந்த இயக்கம் ஆன்மீகத்தைத் தாண்டி அரசியல் மற்றும் கல்வித் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது தனிக் கதை. ஒருவகையில், அன்றைய சென்னைதான் உலகின் ஈஸோடெரிக் தலைநகரம்.

அறிவியலின் வேகமும், ஆன்மீகத்தின் மர்மமும் ஒன்றாகச் சந்தித்த அந்த 1900களில், அடையாறு ஆலமரத்தின் நிழலில் உட்கார்ந்துகொண்டு, உலகத்தையே தங்கள் ஆன்மீகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் இந்த இரு பெண்கள்.

மனித மனம் எப்போதும் விளக்க முடியாத ரகசியங்களைத்தானே தீவிரமாகக் காதலிக்கிறது! கருணாகரன் படித்ததெல்லாம் அவர்களுடைய ஆஸ்ட்ரல் டிரவல் பற்றி எழுதப்பட்டிருந்த இணையப் பதிவுகளைத்தான். இப்போது உங்களுக்கு எல்லாம் புரிந்திருக்குமே.

அப்புறம் என்ன? நெக்ஸ்ட் அட்ரஸ்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

TNPSC Group 2 & 2A அறிவிப்பு

TNPSC Group 2 & 2A அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 & 2ஏ பிரிவிற்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரங்களைக் கீழே காண்க.

*****

Tuesday, 11 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.08.2026

1) 821 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

2) எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது.

3) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

4) தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களில் 15 டி.எம்.சி காவிரி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்குக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

5) வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.




Education & GK News

1) The Tamil Nadu Public Service Commission has released the notification for the Group 2 and 2A examinations, covering 821 vacancies.

2) Counseling for MBBS and BDS courses is set to begin tomorrow.

3) Original mark sheets for Class 10 students are being distributed at schools starting today.

4) The Cauvery Water Management Authority has ordered Karnataka to release 15 TMC of Cauvery water to Tamil Nadu over the next 15 days.

5) The President has given his assent to the bill making the disrespect of the 'Vande Mataram' song a punishable offense.

ஷார்ட் சர்க்யூட் மூளையும் ஆன்மாவின் கூகுள் மேப்பும்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 50

ஷார்ட் சர்க்யூட் மூளையும் ஆன்மாவின் கூகுள் மேப்பும்!

கொரடாச்சேரி அருகே பத்தூர்.

கருணாகரனின் தலை டஜன் கணக்கில் ஒயர்கள் ஒட்டப்பட்டு, இ.இ.ஜி மெஷினோடு இணைக்கப்பட்டிருந்தது. எதிரே அன்பு கணேஷ். கற்பித்தல் தொழில்நுட்பத்தில் நிபுணன், கூடவே உளவியல் மற்றும் நரம்பியல் ஆய்வுகளில் அதீத ஆர்வத்தைச் செலுத்தி வரும் டெக்னிக்கல் ஆய்வாளன் மற்றும் நவீன ஆசிரியன். கணேஷ் தன் லேப்டாப் ஸ்கிரீனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கருணா, நேத்து ராத்திரி உனக்கு ஆன்மா உடம்பை விட்டு வெளியே போச்சுல்ல? அதுக்கு இப்போ சயின்ஸ் ஆபரேஷன் பண்ணப் போறேன். ரெடியா?" கணேஷ் சிரித்தான்.

"கணேஷ்! நான் நிஜமாவே பறந்தேம்ப்பா! ஹெட்மாஸ்டர் வீட்டுக்கெல்லாம் போனேன்ப்பா! நீயும் உன் ப்ரெண்ட் விஜயராமன் மாதிரி என்னை நம்ப மாட்டேங்றீயேப்பா!" கருணாகரன் எகிறினான்.

"சரி, ஆரம்பிக்கலாம். பாயிண்ட் நம்பர் ஒன். டெம்போரோபெரைட்டல் ஜங்ஷன்."

கருணாகரன் புருவத்தை உயர்த்தினான். "அப்படின்னா? எனக்கு திருவாருர் ஜங்ஷன், தஞ்சாவூர் ஜங்ஷன்தான் ப்பா தெரியும். இதென்ன புதுசா வாயில நொழையாத மாதிரி ஒரு ஜங்ஷன்?"

"உன் மூளைக்குள்ள கூகுள் மேப்ஸ் மாதிரி ஒரு பகுதி இருக்கு. அதுதான் நீ உட்கார்ந்திருக்கியா, படுத்திருக்கியா, உன் கை கால் எங்க இருக்குன்னு உன் உடம்போட பொசிஷனை டிராக் பண்ணும். நேத்து ராத்திரி நீ தூங்க முயன்றப்போ, அந்த மூளையோட ஜங்ஷன் பகுதிக்கு போக வேண்டிய சிக்னல் கட் ஆயிடுச்சு. உடனே உன் மூளை கன்பியூஸ் ஆகி, அடடே, நாம உடம்புக்குள்ள இல்ல போலன்னு நினைச்சு, உன்னை கூரையில மிதக்க விட்டு வேடிக்கை பார்க்க வச்சுடுச்சு. இதுக்குப் பேர்தான்டா கருணா ஆட்டோஸ்கோபி பேன்டசி!"

"யோவ் கணேஷ்! அப்போ நான் கீழே என் உடம்பைப் பார்த்தது?"

"சிம்பிள்! மூளை தன் நினைவகத்துல இருக்குற உன் சொந்த உருவத்தை வச்சு ஒரு முப்பரிமாண மாடலை கிரியேட் பண்ணி உன் கண்ணு முன்னாடி காட்டியிருக்கு. நீ வெளிய இருந்து பார்க்கல, மூளைக்குள்ள இருந்து பார்த்திருக்க!"

கருணாகரன் லேசாக அசைந்தான். "சரி, அப்போ அந்த ஹெட்மாஸ்டர் டைரியில என்னோட லோ பெர்மான்ஸ் மேட்டரைப் பார்த்தேனே, அது?"

"அது உன் ஆழ்மனசு பண்ணின பிராங்க்!" கணேஷ் லேப்டாப் கீபோர்டைத் தட்டினான். "உன் ஸ்கூல்ல உனக்குச் சரியா வேலை செய்யலைன்னு மனசுக்குள்ள ஒரு பயம் இருந்துட்டே இருக்கு. அந்த பயம்தான் கனவுல அப்படி அவதாரம் எடுத்திருக்கு. இது ஆன்மா போய்ப் பார்த்த செய்தி இல்லை, உன் ஆழ்மனசோட அவுட்புட்!"

"அப்போ என் நெஞ்சுல டைகர் பூனை உக்காந்துச்சு. என்னால நகரவே முடியலையே?"

"அங்கேதான் வருது ஸ்லீப் பேராலிசிஸ்" கணெஷ் நிமிர்ந்து பார்த்தான். "தூக்கத்துல ரெம் அதாவது ரேபிட் ஐ மூவ்மெண்ட் கட்டத்துல இருக்கும்போது, கனவுல நீ ஓடும்போது நிஜத்துல உன் கால் ஓடக்கூடாதுன்னு மூளை உன் தசைகளை எல்லாம் தற்காலிகமா லாக் பண்ணிடும். அதாவது கனவுல நாய் துரத்தும் போது கால்கள் அப்படியே தரையோட பச்சக்ன்னு ஒட்டிக்கிட்டு ஓடமுடியாத மாதிரி தவிப்போம்ல, அப்படி. நீ திடீர்னு முழிச்சப்போ, மூளை விழிச்சிருச்சு, ஆனா தசைகளோட லாக் ரிலீஸ் ஆகல. அந்த உடம்பு பாரத்தைத்தான் உன் மூளை நெஞ்சு மேல பூனை உட்கார்ந்திருக்குன்னு கற்பனை பண்ணியிருக்கு."

கருணாகரன் கொஞ்ச நேரம் அமைதியானான். தலையில் இருந்த ஒயர்களைத் தொட்டுப் பார்த்தான்.

"அப்போ ஆன்மா, நுண் உடல், காற்றுல பறத்தல் இதெல்லாம்?"

"எல்லாமே உன் மூளையோட நியூரான்கள் அடிச்ச கூத்து! சில மில்லி விநாடிகள் வேதியியல் மாற்றம் கெட்டுப்போனா, மூளை எந்தக் கதையை வேணாலும் உருவாக்கும். சுருக்கமா சொன்னா, உன் ஆன்மா மிதக்கல கருணா, உன் மூளையோட நியூரான்கள் ஷார்ட் சர்க்யூட் ஆயிருக்கு!'"

கருணாகரன் பெருமூச்சு விட்டான். "அப்போ உண்மையிலேயே நான் பறக்கலையா?"

"அப்ஸொலிட்டிலி நாட்!" கணேஷ் தன் லேப்டாப்பை மூடினான்.

கருணாகரன் அந்த சோதனை நாற்காலியிலிருந்து இருந்து எழுந்திருந்தான். அவனுக்குச் சந்தேகம் இன்னும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை.

"இதுக்கு மேலயும் உனக்கு டவுட் கிளியர் ஆகலைன்னா, நாளைக்கு விஜயராமன் அவனோட பிளாக்ஸ்பாட்டுல எழுதுற அமானுஷ்யத்தின் அட்ரஸ் நெக்ஸ்ட் சாப்டரைப் படித்துப் பாருடா! " என்று சொல்லி விட்டுச் சிரித்தான் அன்பு கணேஷ்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****