Tuesday, 18 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.08.2026

1) சென்னையில் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

2) மருத்துவர்களுக்குத் தனித்துவ அடையாள எண் வழங்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.

3) அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது மகப்பேற்றுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83 அடியாக உயர்ந்துள்ளது.

5) இந்திய தேர்தல் முறையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.


Education & GK News

1) A conference of Chief Ministers from southern states, chaired by Union Home Minister Amit Shah, is scheduled to be held in Chennai tomorrow.

2) The National Medical Commission plans to issue unique identification numbers to doctors.

3) It has been announced that female government employees will be granted one year of maternity leave for their third child as well.

4) The water level in the Mettur Dam has risen to 83 feet.

5) US President Donald Trump has praised India's electoral system.

உலகின் மிகக் கெட்ட மனிதன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 56

உலகின் மிகக் கெட்ட மனிதன்!

அலெஸ்டர் குரோலி  1900களின் தொடக்கத்தில் உலகம் கண்ட மிக விசித்திரமான, சர்ச்சைக்குரிய மனிதன். "உலகின் மிகக் கெட்ட மனிதன்" என்று அன்றைய ஆங்கிலேயப் பத்திரிகைகளால் வர்ணிக்கப்பட்டவன். இவர் உருவாக்கிய 'தெலேமா'  கோட்பாடும், அதற்கு அவன் பயன்படுத்திய பாலியல் தந்திர முறைகளும் இன்றளவும் அமானுஷ்ய வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்.

1904 ஆம் ஆண்டு, கெய்ரோ நகரில் உள்ள ஒரு ஹோட்டல் அறை. வெளியே எகிப்தியக் காற்று வீசிக்கொண்டிருக்க, உள்ளே தீவிரமான தியான நிலையில் உட்கார்ந்திருந்த அலெஸ்டர் குரோலி அமானுஷ்யக் குரலில் சொன்ன விஷயங்கள்தான் பின்னாளில் 'தி புக் ஆப் தி லா'  என்ற உலகப் புகழ்பெற்ற நூலானது. அங்கிருந்துதான் பிறந்தது 'தெலேமா'.

கிரேக்க மொழியில் 'தெலேமா' என்றால் விருப்பம் என்று பொருள். குரோலி சொன்ன ஒரே தர்மம் இதுதான், "உனக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்! அதுவே உனக்கான விதி."

கேட்பதற்கு மிக எளிமையாகவும், கொஞ்சம் ஆபத்தான சுதந்திரமாகவும் இருக்கிறதல்லவா? அதுதான் குரோலியின் ஸ்டைல்.

ஆன்மீகத்தையும் அமானுஷ்யத்தையும் அடைவதற்குப் பழங்காலத்தில் பல வழிகள் இருந்தன. தவம், தியானம், சடங்குகள், ரசாயனப் பரிசோதனைகள். ஆனால் குரோலி யோசித்தது வேறு வழி.

மனித உடலின் உச்சகட்ட ஆற்றல் மற்றும் உணர்ச்சிப் பெருக்கு எப்போது நிகழ்கிறது? என்று யோசித்த குரோலி அது பாலியல் உறவின் போது மட்டுமே எனக் கருதிக் கொண்டான்.

பாலியல் உறவின் போது உருவாகும் அந்த மகத்தான மனக் குவியலையும், ஆற்றலையும், சாதாரணமான உடல் விருப்பங்களுக்குப் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட இலக்கை அல்லது அமானுஷ்ய சக்தியை நோக்கித் திருப்ப முடியும் என்பதுதான் குரோலியின் வாதம். அதுதான் அவன் குறிப்பிடும் பாலியல் தந்திரம்.

இது தந்திர சாஸ்திரமா என்றால், 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். எகிப்திய சடங்குகள், மேலைநாட்டு அமானுஷ்ய முறைகள் மற்றும் இந்தியாவின் 'தந்திரா'  கோட்பாடுகள் ஆகியவற்றின் கலவைதான் இது.

இதன் நோக்கம் என்று பார்த்தால், மனிதனின் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் சுய விருப்பத்தை விழிப்படையச் செய்து, பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்புகொள்ளச் செய்வது. நீங்கள் அமானுஷ்யத்தின் அட்ரஸ் தொடரைத் தொடர்ந்து படிப்பவராக இருந்தால், இதெல்லாம் சுத்த ஹம்பக் என்பது இந்நேரம் உங்களுக்குச் சொல்லாமலே புரிந்திருக்கும்.

அது சரி, குரோலி ஏன் இப்படி மாறினான்?

இங்கிலாந்தின் பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த குரோலி, சாதாரண வாழ்க்கையை வெறுத்தான். போதைப்பொருள் பயன்பாடும், இரகசிய அமைப்புகளில் பங்கேற்பும் குரோலியைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தன.  அதன் பிறகு இத்தாலியில் அவன் அமைத்த செபாலு அபே ஆசிரமம் என அவன் தொட்டதெல்லாம் சர்ச்சையானது.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், குரோலி செய்தது உளவியல் சார்ந்த ஓர் அமானுஷ்ய விளையாட்டு. மனிதனின் ஆழ்மன ஆற்றலை வெளிக்கொண்டுவர அவன் பாலியல் மற்றும் சடங்குகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினான்.

சுருக்கமாகச் சொன்னால், அலெஸ்டர் குரோலி என்பவன் தன் காலத்திற்கு மிகவும் முந்திய, கட்டற்ற சுதந்திரத்தை விரும்பிய, சற்று அதித விலகல் கொண்ட ஓர் அமானுஷ்ய மனிதன்.

நவீன உளவியல் ரீதியாகப் பார்த்தால், குரோலி செய்தது என்பது, மனிதனின் ஆழ்மன உந்துதலை ஒரு குறிப்பிட்ட எண்ணத்தின் மீது தீவிரமாகக் குவித்து, அதை நிறைவேற்ற முயன்ற ஒரு மைண்ட் கேம். ஆனால், அன்றைய 1900களின் சமூகத்திற்கு இது பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் தந்ததால் அவன் "சாத்தானின் அடியாள்" என்றும் முத்திரை குத்தப்பட்டான்.

ஒரு தனிமனிதன் நினைத்தாலும் அயோக்கியத்தனங்களை அமானுஷ்யங்கள் என்ற பெயரில் அரங்கேற்ற முடியும் என்பதற்கு அலெஸ்டர் குரோலி ஒரு மகத்தான வரலாற்று உதாரணம்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Monday, 17 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.08.2026

1) தமிழகத்துக்குத் தொடர்ந்து காவிரி நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2) தமிழகத்தில் 75,000 ரூபாய் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3) நெட் தேர்வில் 3 பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

4) தமிழகத்தில் ஐடிஐ படிப்பில் சேர்வதற்கான கால அவகாசம் இம்மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

5) அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைப் பரிசோதிக்குமாறு தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Education & GK News

1) The Supreme Court has ordered Karnataka to continue releasing Cauvery water to Tamil Nadu.

2) It has been announced that agricultural loans of up to Rs. 75,000 will be waived in Tamil Nadu.

3) The National Testing Agency has announced that a re-examination will be conducted for three subjects in the NET exam.

4) The deadline for admission to ITI courses in Tamil Nadu has been extended until the 31st of this month.

5) The Directorate of Elementary Education has instructed that the authenticity of certificates held by government school teachers be verified.

டெம்போரல் லோப்பும் ஒரு கப் டீயும்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 55

டெம்போரல் லோப்பும் ஒரு கப் டீயும்!

பிரசாந்த் சுவரோரம் அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தான்.

அறையின் வளிமண்டலத்தில் இருந்த பயமும், அந்த 1900களின் லண்டன் குரலும் அவனை மரண பீதியில் ஆழ்த்தியிருந்தன. ஆனால், அவனுள் இருந்த பி.இ பட்டதாரி மெதுவாக விழித்துக்கொண்டான்.

"வெயிட்." பிரசாந்த் தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டான்.

அவன் தன் கைகடிகாரத்தைப் பார்த்தான். டிஜிட்டல் முள் 12:05 என்று காட்டியது. அவன் பாக்கெட்டில் இருந்த ஸ்மார்ட்போனை வெளியே எடுத்தான். அதன் திரையில் மின்காந்தப் புலத்தைக் கண்டறியும் ஆப் சடாரென 'ரெட் மார்க்' காட்டி எகிறிக் கொண்டிருந்தது.

பிரசாந்த் மெதுவாகச் சிரிக்கத் தொடங்கினான்.

சுசித்ராவின் உடலுக்குள் இருப்பதாகச் சொன்ன அந்தக் குரல் சட்டென்று நிறுத்தியது. ராகவன் தொண்டையைக் கீறிக்கொண்டே நிமிர்ந்து, குழப்பத்துடன் பிரசாந்தைப் பார்த்தான்.

"டேய் ராகவா!" பிரசாந்த் உரக்கக் கூப்பிட்டான். "1900ல குரோலி ஏமாந்ததுல ஆச்சரியமில்லை. ஆனா 2026ல பி.டெக் படிச்ச நீயுமாடா இந்த பயோ கெமிக்கல் டிராப்ல விழுவே?"

சுசித்ராவின் முகத்தில் இருந்த அந்த அமானுஷ்ய பாவனை லேசாக மாறத் தொடங்கியது.

"பிரசாந்த்! வாட் ஆர் யூ?" சுசித்ரா தடுமாறினாள். அவளது சொந்தக் குரல் மெதுவாகத் திரும்பி வந்தது.

"சுசித்ரா, முதல்ல உன் தொண்டையை லூஸ் பண்ணு!" பிரசாந்த் முன்னால் வந்தான்.

"நீ பேசினது பழைய ஆங்கிலக்காரனோட குரல் இல்ல. ராகவன் கடந்த ஒரு வாரமா உன் மூளையில குரோலி, அய்வாஸ்னு சொல்லிச் சொல்லி ஒரு ஆழ்மனப் பிம்பத்தை  உருவாக்கி வச்சிருக்கான். இப்போ இந்த அறையில நடந்த ஹார்மோனல் அட்ரினலின் ஸ்பைக்ல உன் மூளையோட டெம்போரல் லோப் கொஞ்ச நேரம் கன்ட்ரோலை இழந்துடுச்சு. குரல் நரம்பு சுருங்குனதுனாலதான் அந்த பேஸ் வாய்ஸ்!"

ராகவன் தரையிலிருந்து மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். "மச்சான்! அப்போ அந்த தாமிரத் தகடு? தீயில சுட்ட மாதிரி அந்தக் குறியீடு விழுந்ததே?"

"அட லூசு பய மவனே!" பிரசாந்த் தாமிரத் தகட்டைத் தட்டிக் காட்டினான். "அது இந்தக் கடல் காற்று, அதில் இருக்குற உப்பு மூலக்கூறுகள் தாமிரத்தோட ஆக்சைடு அடுக்குல் ரியாக்சன் பண்ண, அந்த நேரத்துல, எரிஞ்சுகிட்டு இருந்த மெழுகுவர்த்தி அப்படியே அதன் மேல விழுந்ததும் உண்டான எபெக்டில் ஏற்பட்டது!"

சுசித்ரா தன் தலைமுடியைக் கோதி விட்டபடி மூச்சு வாங்கினாள். அவளது கண்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தன. "அப்போ, அந்த மெயின் சுவிட்ச் ட்ரிப் ஆனது? கதவு சாத்துனது?"

"நம்ம தமிழ்நாட்டுல வழக்கமா ஏற்படுற கரண்ட் கட் அன்ட் கரண்ட் பிராப்ளத்தின் எபெக்ட். அப்புறம், வெளியே கடல் காத்து வேகமாக வீசும்போது, அறையோட டெம்பரேச்சர் திடீர்னு குறைந்ததால உருவான பிரஷர் டிபரன்ஸ் கதவை மூடியிருக்கு. அவ்வளவுதான்!"

பிரசாந்த் ஓடிச்சென்று மெயின் பாக்ஸைக் கையால் தூக்கிவிட்டான்.

பண்ணை வீடு முழுவதும் வெளிச்சம் வெள்ளமாய் பாய்ந்தது. லைட்டுகள் சிமிட்டிக் கொண்டு எரிந்தன. மூலையில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த லேப்டாப், சிகப்பு லைட் எரிந்த மெயின் சுவிட்ச், தரையில் கிடந்த சாதாரண தாமிரத் தகடு, எல்லாமே தங்களின் இயல்பான அறிவியல் வடிவத்திற்குத் திரும்பின.

ராகவன் தன் கைகளைப் பார்த்துக்கொண்டான். "அப்போ குரோலி செஞ்சது அமானுஷ்யமே இல்லையா?"

"அமானுஷ்யம்தான்!" பிரசாந்த் லேப்டாப்பை மூடினான். "ஆனா அது பேய் பிசாசு இல்லை. மனித மூளையோட எல்லைகளை அறிவியலே இல்லாம ரசாயனங்களாலயும், உணர்ச்சிகளாலயும் தூண்டி விளையாடுன ஓர் ஆபத்தான உளவியல் விளையாட்டு. குரோலி அதை பாலியல் மாயாஜாலம்ன்னு கூப்பிட்டான். நாம அதை நரம்புகளோட மின்காந்த ஒத்திசைவுன்னு சொல்றோம்."

சுசித்ரா மெதுவாகச் சிரித்தாள். அவளது பயம் முற்றிலுமாக விலகியிருந்தது.

பிரசாந்த் தன் காரின் சாவியை விரலில் சுழற்றினான். "வாங்கப்பா. மணி பனிரெண்டரை ஆகுது. அப்படியே ஈசிஆர் வழியா போனோம்ன்னா அருமையான சூடான டீ கிடைக்கும். இந்தப் பயோ கெமிக்கல் மூளையை முதல்ல நார்மல் பண்ணுவோம்!"

மூவரும் பண்ணை வீட்டை விட்டு வெளியே வர, கடல் அலைகள் வழக்கமான இரவின் அமைதியோடு கரை தட்டிக் கொண்டிருந்தன.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Sunday, 16 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.08.2026

1) கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதற்குத் தமிழகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2) ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11000 ஏரிகள் மற்றும் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள் இன்று முதல் தொடங்குகின்றன.

3) எல்பிஜி உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உற்பத்தியை முடுக்கி விட உத்தரவிட்டுள்ளது.

4) ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 9000 கன அடியாக அதிகரித்துள்ளது.

5) இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.


Education & GK News

1) Tamil Nadu leaders have strongly condemned the shooting deaths of three Tamils ​​in Karnataka.

2) Work to desilt 11,000 lakes and canals in Tamil Nadu under the rural employment scheme begins today.

3) The Central Government has set production targets for Indian LPG manufacturers and ordered them to ramp up output.

4) Water inflow into Hogenakkal has increased to 9,000 cubic feet per second.

5) The death toll from the earthquake in Indonesia has risen to 51.

பரியங்க யோகமும் குரோலியின் மேஜிக்கும்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 54

பரியங்க யோகமும் குரோலியின் மேஜிக்கும்!

இரவு பதினொரு மணி. பிரதாமராமபுரம் பிரதான சாலையில் மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்தது.

பிரசாந்த் தனக்கு எதிரே அமர்ந்திருந்த ராகவனைப் பார்த்தான். ராகவன் கைபேசியில் ஏதோ ஒரு பழைய பிடிஎப் புத்தகத்தைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தான்.

"என்ன ராகவன், ரொம்ப சீரியஸா இருக்கே?"

ராகவன் நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன. "பிரசாந்த், நீ அலெஸ்டர் குரோலியைப் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?"

"அந்தப் பாலியல் தந்திரன்தானே? 1900ல லண்டனை அலறவிட்டவன். இப்போ எதுக்கு அவனைப் பத்தி கேக்குற?"

"அவன் சொன்னது சும்மா கதை இல்லை பிரசாந்த். மனிதனோட ஆல்பா மூளை அலைகளும், உடலோட உச்சக்கட்ட எனர்ஜியும் ஒரே புள்ளியில சேரும்போது பிரபஞ்சத்தோட பிரீக்வென்ஸியை நாம டியூன் பண்ண முடியும். அதைத்தான் குரோலி 'தெலெமா' அப்படின்னு சொன்னான். அதை ஏன் நம்ம தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏத்த மாதிரி மாத்திப் பார்க்கக் கூடாது?"

பிரசாந்த் சிரித்தான். "ராகவன், நீ பி.டெக் முடிச்சவன். குரோலி செஞ்சது அறிவியல் கலந்து போர்த்தப்பட்ட ஒரு மாயை. அதையும் நம்ம ஊரு தந்திர சாஸ்திரத்தையும் போட்டு குழப்பிக்காத."

ராகவன் அவசர அவசரமாகத் தன் லேப்டாப்பைத் திறந்தான். "இல்லை பிரசாந்த்! நான் ஒரு மேத் மாடல் ரெடி பண்ணியிருக்கேன். குரோலி சொன்ன 'கார்டினல் எனர்ஜி', நம்ம ஊரு திருமந்திரத்துல வர்ற 'பரியங்க யோகம்' இரண்டையும் கம்பைன் பண்ணி, மனசோட இன்டென்சிட்டியை நூறு சதவீதம் ஒரு புள்ளி மேல குவிக்கும்போது, குவாண்டம் அளவில் ஒரு மாற்றம் நடக்கும். நாளைக்கு பௌர்ணமி. நான் ஓர் எக்ஸ்பெரிமெண்ட் பண்ணப்போறேன்."

"என்னது எக்ஸ்பெரிமெண்ட்டா? எங்கே?"

"வேளாங்கண்ணி கடற்கரையோரம் ஒரு பண்ணை வீடு. என் பிரெண்ட் சுசித்ராவும் வர்றா."

பிரசாந்துக்கு லேசாகப் பொறி தட்டியது. "ராகவன், பாலியல் ஆற்றலை அமானுஷ்ய சக்தியா மாத்துறேன்னு சொல்லி நூறு வருஷத்துக்கு முன்னாடி லண்டன்ல ஆரம்பிச்ச விளையாட்டு இது. அன்னைக்கு அதுக்கு பேரு 'பாலியல் ஜாலம்'. இன்னைக்கு நாம அதை ஹார்மோன்களின் ஜாலம்ன்னு வேணா சொல்லலாம். ஆனா ஆபத்து ஒன்னுதான். மனசு தட்டுத்தடுமாறினா, அமானுஷ்ய சக்தி வரலைனாலும், மனித மூளை பைத்தியமாயிடும்!"

ராகவன் அதைக்கேட்கும் நிலையில் இல்லை. "நாளைக்கு நைட் 12 மணிக்கு வா பிரசாந்த். நீயே கண்ணால பாரு."

அடுத்த நாள் இரவு 11:45.

வேளாங்கண்ணி கடற்கரை காற்றில் உப்பின் வாசனை பலமாக இருந்தது.

பண்ணை வீட்டின் நடுவே ராகவனும் சுசித்ராவும் அமர்ந்திருந்தனர்.

அறையைச் சுற்றி விசித்திரமான குறியீடுகள், தாமிரத் தகடுகள், மற்றும் லேப்டாப்பில் ஓடிக் கொண்டிருந்த பிரிக்வென்சி அலைவரிசை ஒலிகள்.

பிரசாந்த் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்தான்.

ராகவனின் கண்கள் தியானத்தின் உச்ச நிலையில் இருந்தன. அவன் சுசித்ராவின் கைகளைப் பிடித்து, மனதின் மொத்த ஆற்றலையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிக்கத் தொடங்கினான். குரோலியின் கோட்பாடுப்படி, உடலின் உச்சகட்ட உணர்ச்சியின் போது எழும் ஆற்றலைத் தூய்மையான மன உருவகமாக மாற்றும் முயற்சி அது.

திடீரென அறையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

லேப்டாப்பில் இருந்த அலைவரிசை மீட்டர் எகிறியது. அறையின் வெப்ப நிலை சடாரெனக் குறைந்தது. காற்றில் கடல் அலைகளின் சத்தம் நின்றுபோய், ஏதோ ஒரு விசித்திரமான அதிர்வு அறைக்குள் பரவியது.

சுசித்ரா திடீரென மிக அமைதியானாள். அவளது கண்கள் முற்றிலுமாகக் கருப்பாக மாறி, விழித்திரையே தெரியாமல் போயின.

ராகவன் மூச்சுத் திணறித் தரையில் விழுந்தான்.

பிரசாந்த் பதறியடித்துக்கொண்டு ஓடிச்சென்று மெயின் சுவிட்சைப் போட்டான். விளக்குகள் எரியவில்லை. மாறாக, அறையின் மூலையில் இருந்த மெழுகுவர்த்தி தீப்பிழம்பு மட்டும் இரத்தச் சிவப்பாக மாறியது.

அங்கே, தாமிரத் தகட்டில் ராகவன் மனதால் நினைத்த அந்த விசித்திரக் குறியீடு, தீயினால் சுடப்பட்டது போல் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், திகில் அதுவல்ல.

சுசித்ரா மெதுவாக நிமிர்ந்து பிரசாந்தைப் பார்த்தாள். அவள் வாயிலிருந்து வெளிவந்த குரல் அவளுடையது அல்ல. அது 1900களின் தடிமனான ஆங்கில உச்சரிப்புடன் கூடிய அமானுஷ்யமான ஓர் ஆண் குரலாக ஒலித்தது.

அதே வினாடி, தரையில் விழுந்து கிடந்த ராகவனின் உடல் அதிவேகமாக வலிப்பு வந்தது போல் துடித்தது. அவன் தன் நகங்களால் தன் தொண்டையைக் கீறிக்கொண்டே, அதே ஆங்கிலக் குரலில் சிரிக்கத் தொடங்கினான்.

பிரசாந்த் பயத்தில் உறைந்துபோய் பின்வாங்கிச் சுவரில் சாய்ந்தான். கதவு தானாகப் படீரென மூடிக்கொண்டது.

சுசித்ரா சட்டென்று பிரசாந்தை நோக்கி மெதுவாக நடந்து வந்தாள். அவள் கண்கள் இமைக்கவே இல்லை. வாய் அசைந்தது.

"குரோலி செஞ்சது வெறும் மேஜிக் இல்லை பிரசாந்த். அது ஒரு கதவு. அதைத் திறக்கத்தான் இந்த ராகவன் எங்களுக்குத் தேவைப்பட்டான்!"

வெளியே கடல் அலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பிரம்மாண்டமாக அவ்வளவு வேகமாக முன்னோக்கிப் பாய்ந்து கர்ஜித்து பண்ணை வீட்டின் சுவர்களில் மோதின. அறையின் இருளுக்குள்ளிருந்து பல்லாயிரக்கணக்கான குரல்கள் ஒரே நேரத்தில் முணுமுணுக்கத் தொடங்கின.

பிரசாந்துக்கு அப்போதுதான் புரிந்தது, அவர்கள் பிரபஞ்ச ஆற்றலைத் தூண்டவில்லை. நூறு வருடங்களாகக் கதவுக்கு வெளியே காத்திருந்த ஏதோ ஒரு பயங்கரமான அமானுஷ்யத்தை உள்ளே அழைத்துவிட்டார்கள்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 15 August 2026

கோல்டன் டானின் அட்டகாசங்கள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 53

கோல்டன் டானின் அட்டகாசங்கள்!

1900களின் விடியல்.

ஒரு பக்கம் தொழிற்புரட்சி, நீராவி எஞ்சின்கள், மின்சார விளக்குகள் என்று அறிவியல் உலகம் க்ளிக் அடித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மனிதனின் தொன்மையான பயங்களும், இருட்டு அறைகளின் மர்மங்களும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சத்தமில்லாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன.

விஞ்ஞானம் எல்லாவற்றிற்கும் விடை சொல்லிவிடும் என்று மனிதன் நினைத்தபோதே, ஆன்மா எங்கே போகிறது? பிரபஞ்சத்தின் ரகசிய சாவி யாரிடம் இருக்கிறது? என்பன போன்ற கேள்விகள் மனித மூளையின் ஏதோ ஒரு மூலையில் அரிப்பு எடுக்க வைத்தன. அந்த அரிப்பின் விளைவுதான் ஹெர்மெடிக் ஆர்டர் ஆப் தி கோல்டன் டான்.

சுருக்கமாகச் சொன்னால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லண்டனில் இயங்கிய ஹை டெக் மாந்திரீகக் கிளப் மற்றும் லண்டனின் அமானுஷ்யக் கூடம்.

லண்டன் வீதிகளில் பனிப்புகை மண்டிக் கிடக்கும் மாலை நேரங்களில், கருப்பு அங்கி அணிந்த சிலர் ஒரு ரகசிய அறையில் கூடுவார்கள். அங்கே, மேஜை மீது தாரோ கார்டுகள், எகிப்திய குறியீடுகள், யூதர்களின் கபாலா வரைபடங்கள் இருக்கும்.

அங்கே என்ன நடந்தது தெரியுமா?

சாமானிய மக்களுக்கு இது வெறும் பில்லி சூனியம் அல்லது மாந்திரீகம். ஆனால், அவர்களுக்கு அது ஓர் அறிவியல். பிரபஞ்ச ஆற்றலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி. எகிப்தியக் கடவுள்களை அழைப்பது, மனதைக் கொண்டு தூரத்திலிருக்கும் பொருள்களை அசைப்பது, எதிர்காலத்தைக் கணிப்பது எனத் தங்களின் ஆராய்ச்சிகளை அங்கே நடத்தினார்கள்.

இந்தக் கிளப்பின் விஐபி உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா?

இந்த அமைப்பின் சுவாரசியமே அதில் அங்கத்தினராக இருந்த நபர்கள்தான். ஏதோ வேலைவெட்டி இல்லாதவர்கள் கூடிய இடமல்ல இது. அக்காலகட்டத்தின் ஆகச்சிறந்த அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் இதில் மூழ்கியிருந்தார்கள்.

நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து கவிஞர் யேட்ஸ். இவர் வெறும் பார்வையாளர் இல்லை; இந்த அமைப்பின் உயர்நிலைப் பயிற்சியாளர்! இவரது கவிதைகளில் வரும் பல குறியீடுகள் இந்த ரகசிய கூட்டங்களில் கற்றுக் கொண்டவைதான்.

டிராகுலா நாவலை எழுதி உலகை மிரட்டியவர் ப்ராம் ஸ்டோக்கர். கோல்டன் டான் அமைப்பின் இருண்ட அறைகளில் அவர் கண்ட காட்சிகளும், கேட்ட மாந்திரீகக் கதைகளும்தான் இவரது டிராகுலா உருவாக முக்கியக் காரணியாக இருந்தன.

"உலகின் மிக மோசமான மனிதர்" என்று பத்திரிகைகளால் வர்ணிக்கப்பட்டவர் ஆலிஸ்டர் க்ரௌலி. பின்னாளில் இந்த அமைப்பை உடைத்து, தன் சொந்த மாந்திரீகப் பிரிவைத் தொடங்கிய கலகக்காரர். இவரும் இந்த அமைப்பின் ஓர் உறுப்பினர்.

ஏன் இப்படி என்கிறீர்களா?

அறிவியல் வளர வளர மனிதனுக்கு மர்மங்களின் மீதான மோகம் குறைய வேண்டும், இல்லையா? ஆனால் நடந்தது தலைகீழ். அறிவியல் தரும் தெளிவை விட, அமானுஷ்யம் தரும் அந்த சஸ்பென்ஸ் மனித மூளைக்குப் பிடித்திருந்தது.

அப்புறம் அந்த

அமானுஷ்ய பாடத்திட்டம்

அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

கோல்டன் டான் சும்மா மந்திரம் மட்டும் ஓதவில்லை. அவர்களுக்கு என்று ஒரு தெளிவான பாடத்திட்டம் இருந்தது!

அப்பாடத்திட்டம் என்னவென்றால்,

தாரோ கார்டுகள் எனும் 78 கார்டுகளில் இருக்கும் குறியீடுகளை வைத்து மனித மனத்தின் ஆழத்தையும், பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் பகுப்பாய்வு செய்வது.

கபாலா என்பது யூதர்களின் பண்டைய ஆன்மீகக் குறியீட்டு முறை. ஜீவ விருட்சம் என்ற வரைபடம் மூலம் கடவுளையும் மனிதனையும் இணைக்கும் பாதையைத் தேடுவது.

ஆஸ்ட்ரல் டிராவல் எனப்படும் உடலை விட்டு உயிரை வெளியேற்றி, வேறு உலகங்களுக்குப் பயணம் செய்யும் பயிற்சிகள்.

அடுத்து,

முடிவும் ரகசியங்களின் அழிவும்

அதாவது இந்த அமைப்பின் என்ட் கார்டு.

எந்த ஒரு ரகசிய அமைப்பிலும் ஈகோ நுழைந்தால் என்ன ஆகுமோ, அதுதான் கோல்டன் டானுக்கும் நடந்தது. உறுப்பினர்களுக்குள் யார் பெரிய ஆள் என்ற மோதல், ஆலிஸ்டர் க்ரௌலியின் அத்துமீறல்கள், அமைப்பின் ரகசிய ஏடுகள் வீதிக்கு வந்தது என 1900களின் தொடக்கத்திலேயே அமைப்பு சிதறத் தொடங்கியது.

ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற தடம் இன்னமும் அழியவில்லை. இன்றைக்கு நாம் ஹாலிவுட் படங்களில் பார்க்கும் சூனியக்காரர்கள், ரகசியச் சின்னங்கள், தாரோ கார்ட் ஜோசியம் என எல்லாவற்றிற்கும் வித்திட்டது இந்த கோல்டன் டான்தான்.

இப்போது மட்டும் என்ன மாறிவிட்டது?

தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும்கூட, கூகுளில் ஹௌ டூ ஜாய்ன் கோல்டன் டான்? என்று தேடும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக மொத்தத்தில் மனித மனம் எப்போதும் ஒரு ரகசியத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****