Tuesday, 28 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.07.2026

1) தமிழகத்திற்கு 15 நாட்களுக்குத் தினமும் 3500 கன அடி நீரைத் திறந்து விடுமாறு காவிரி ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2) மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று முதல்வர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

3) விவசாயத்தில் யூரியாவுக்குப் பதில் அம்மோனியாவைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

4) கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் குண்டு எறிதலில் ஷர்மிளா தங்கம் வென்றுள்ளார்.

5) தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கக் கூடும்.

Education & GK News

1) The Cauvery Water Regulation Committee has ordered the release of 3,500 cubic feet of water daily to Tamil Nadu for 15 days.

2) Chief Minister C. Joseph Vijay has written a letter urging the Prime Minister to intervene in the Mekedatu dam issue.

3) The Central Government has granted permission to use ammonia instead of urea in agriculture.

4) Sharmila has won the gold medal in the shot put event at the Glasgow Commonwealth Games.

5) Temperatures are likely to rise in Tamil Nadu over the next three days.

கடைசி டாக் டைம்!

அமானுஷ்யங்களின் முகவரி

அட்ரஸ் – 35

கடைசி டாக் டைம்!

அன்று வடபாதிமங்கலம் வி.எஸ்.டி. காலனியில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

சுந்தராம்பாள் அம்மாளின் கணவர் சுந்தரேசன் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. ஆனால், சுந்தராம்பாள் அணிந்திருந்த சுங்கடிப் புடவையிலிருந்து மனது வரை துக்கத்தின் கருமை நிறம் இன்னும் மாறவில்லை. சுந்தரேசன் மறைந்ததிலிருந்து அவர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.

காலையில் அஞ்சப்பர் அசல் அக்மார்க் சாம்பிராணி வாசம், மாலையில் ஸ்பிரிச்சுவலிசம் எனப்படும் ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் பயிற்சி என சுந்தராம்பாள் வாழ்க்கை மாறி விட்டது.

அந்தக் காலத்தில் வடபாதிமங்கலம் பகுதியில் ஜோதிடம், ஆவி உலகம், கர்ம மோட்சம் எனப் பெரிய வியாபாரமே நடந்து வந்தது.

சுந்தராம்பாளின் துக்கம் எந்த அளவுக்கு உச்சக்கட்டத்தில் இருந்ததென்றால், அவர் எப்போதும் ஆவிகளோடு பேசிக்கொண்டுதான் இருப்பார்.

"ஏண்டி வசந்தா, அந்த டீத்தூள் டப்பாவைக் கொஞ்சம் நகர்த்தி வை," என்று யாருடனும் சொல்ல மாட்டார்.

"சுந்தரேசா. அந்தத் தேயிலைத் தூள் டப்பா உங்கள் கைக்கு அருகில் தானே இருக்கும், கொஞ்சம் அசைத்து வையுங்களேன்," என்று காலியான காற்றைப் பார்த்துத்தான் பேசுவார்.

இந்தக் கூத்துகளையெல்லாம் பக்கத்து வீட்டு பஞ்சாபகேசன் வெகுநாட்களாகக் கவனித்துக் கொண்டே இருந்தார்.

பஞ்சாபகேசனுக்கு உடல்நலம் குன்றியது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கூடவே முதிய வயதில் வரும் அனைத்து நோய்களும் சேர்ந்து, "இனிமேல் ஆளை விடுங்கள்" என்ற அளவிற்குப் போக, பஞ்சு திருவாரூர் டிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அனைவரும் கைவிரித்து விட்டார்கள்.

இன்னும் இரண்டு மணி நேரம்தான் என இறுதி நேரம் கணிக்கப்பட்டது.

ஊர் மக்கள் அனைவரும் பஞ்சாபகேசனைப் பார்க்க மருத்துவமனையில் வரிசை கட்டி நின்றார்கள்.

இந்தச் செய்தி சுந்தராம்பாள் அம்மாளின் காதுக்கும் எட்டியது. உடனே அவரும் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாரானார்.

செய்தி பஞ்சாபகேசனின் காதுக்கு எட்டியது. ஆக்சிஜன் முகமூடி அணிந்திருந்தவர், அருகில் நின்ற தன் மகன் செந்திலின் கையைப் பிடித்து இழுத்தார்.

"டேய் செந்தில்!"  அவர் குரல் த தடுமாறியது.

"சொல்லுங்கப்பா. சுந்தராம்பாள் அத்தெ உங்களப் பார்க்க வருகிறாராம். கடைசி நேரத்தில ஆசீர்வாதம் வாங்கணுமாம்."

பஞ்சாபகேசன் பதறிப்போய்க் கண்களை உருட்டினார். ஆக்சிஜன் முகமூடியைக் கழற்றிப் போட்டுவிட்டு, "வேண்டாம்டா சாமி! அவளை உள்ளே விட்டுடாதீங்க!" என்று கத்த முயன்றார்.

"ஏன்ப்பா? அத்தெ உங்களப் பார்த்து நாலு நல்ல வார்த்தைகள் சொல்லிட்டுப் போகட்டுமே?"

"அடேய் அவள் உள்ளே வந்து என்னைப் பார்த்து ஆறுதல் சொல்ல மாட்டாள்டா! பஞ்சு, நீ எப்படியும் இன்னும் அரை மணி நேரத்தில மேலோகத்திற்குப் போயிடுவே. அங்கெ சுந்தரேசனைப் பார்த்தா, அவரிடம் இந்தத் தாம்பூலப் பையையும், போறப்ப மறந்துட்டுப்போன இந்த மியாமி குஷன் செப்பலையும் கொடுத்துடு. அப்புறம் நான் இன்னைக்குச் செய்த வத்தக்குழம்பு நல்லா இருந்துச்சான்னு கேட்டு எனக்குக் கனவில வந்து சொல்லுன்னு எங்கிட்டெ பார்சல் கொடுத்து அனுப்புவாள்டா! நான் அங்கப் போய் நிம்மதியா இருக்க முடியாது. அங்கேயும் என்னை அவ புருஷனுக்குக் கூரியர் பாயா மாத்திடுவாள்டா. எனக்கு அந்தக் கூரியர் பாய் வேலை வேண்டாம்டா. கதவைப் பூட்டுங்கடா முதலில்!" என்று கூறிவிட்டு, பஞ்சாபகேசன் தன் கடைசி மூச்சை விட்டு உயிர் நீத்தார்.

மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த சுந்தராம்பாள் அம்மாள், "அடடா பஞ்சு போய்ட்டானா? இரு, உடனே சுந்தரேசனை ஓய்ஜா போர்டு வெச்சு கூப்புட்டு, பஞ்சு அங்க நல்ல விதமா போய்ச் சேர்ந்துட்டானான்னு கேட்போம்." எனக் கூற, பஞ்சாபகேசனின் ஆவி அந்த இடத்திலிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தது!

சுந்தராம்பாள் சாதாரண மனுஷிதானே. அதில் ஒன்றும் தப்பில்லை என்கிறீர்களா? சாதாரண மனுஷி, அசாதாரண அரசி என்றெல்லாம் இந்த விசயத்தில் எந்த வேறுபாடும் இல்லை. பிரிட்டனின் ராணியே இந்த ஆவி மேட்டரில் அப்படித்தான் நடந்திருக்கிறார். அது என்ன என்கிறீர்களா? அதுவும் ஒரு சுவாரசியமான கதை மட்டுமல்ல, உண்மையில் நடந்த வரலாறு. அது நாளைக்கு.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

மருத்துவக் காப்பீட்டிற்கான குடும்ப உறுப்பினர்கள் விவரப் படிவம்

மருத்துவக் காப்பீட்டிற்கான குடும்ப உறுப்பினர்கள் விவரப் படிவம்

ஆசிரியர்கள் மாதந்தோறும் தங்கள் ஊதியத்திலிருந்து செலுத்தும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரப் படிவத்தைக் கீழே காண்க.

*****

Monday, 27 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.07.2026

1) கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது.

2) தமிழக அரசின் வருவாயைப் பெருக்க மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

3) தமிழக முதல்வரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

4) அமைதி வழியில் போராடும் உரிமையை மறுக்க முடியாது என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

5) காமன்வெல்த் பளு தூக்குப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Education & GK News

1) The High Court has set aside the government jobs granted to the families of those who lost their lives in the Karur incident.

2) A committee headed by Montek Singh Ahluwalia has been constituted to boost the Tamil Nadu government's revenue.

3) The Tamil Nadu Chief Minister's office is being shifted to the tenth floor of the Namakkal Kavignar Maligai.

4) The Supreme Court has stated that the right to protest peacefully cannot be denied.

5) Raja Muthupandi from Tamil Nadu won a silver medal in the Commonwealth weightlifting competition.

சாம்பார், சாவு மற்றும் பெஸ்ட் செல்லர்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 34

சாம்பார், சாவு மற்றும் பெஸ்ட் செல்லர்!

மறுமலர்ச்சிக் காலம் என்று கூறியதும் நமக்கு என்ன நினைவுக்கு வரும்? மைக்கேல் ஆஞ்சலோவின் சிற்பங்கள், டாவின்சியின் மோனாலிசா புன்னகை, கலிலியோவின் தொலைநோக்கி, அத்துடன் பூமி உருண்டை என்று உலகிற்குச் சொன்ன அறிவியல் அறிஞர்கள்.

"கடவுள் படைத்தார், நாம் வாழ்கிறோம்" என்று அமைதியாக இருந்த மனிதர்கள் அனைவரும், திடீரென்று விழித்துக் கொண்டு "ஏன்?", "எதற்கு?", "எப்படி?" என்று கேள்வி கேட்கத் தொடங்கிய காலம் அது. அறிவியலும் கலையும் சிறந்து விளங்கின.

ஆனால், இவ்வளவு அறிவு வளர்ந்த பிறகும் மனிதனுக்கு ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை. அதுதான் மரண பயம்!

பூமி சூரியனைச் சுற்றுகிறதா அல்லது சூரியன் பூமியைச் சுற்றுகிறதா என்று ஆராய்ச்சி செய்தவன் கூட, "நாம் இறந்த பிறகு அடுத்து என்னவாகும்?" என்று யோசிக்கும்போது லேசாக நடுங்கித்தான் போயிருக்கிறான். அதுதான் மனித இயல்பு. அறிவு வளர வளர பயமும் புதிது புதிதாக வடிவம் எடுக்கும்.

அப்போதுதான் அந்த ஐரோப்பியப் புத்தக வியாபாரிகளுக்கு ஒரு விசித்திரமான யோசனை தோன்றியிருக்கிறது.

"கேள்வி கேட்கும் மக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது. சரி, இவர்களுக்கு மரண பயத்தைக் காட்டி ஒரு வணிகம் செய்தால் என்ன?"

அப்படி உருவானதுதான்  "எப்படிச் சாவது?" என்பதை ஒரு கலையைப் போல எடுத்துச் சொன்ன புத்தகங்கள். அதில் ஒன்றுதான் "Ars Moriendi" புத்தகம்.

மற்றபடி நீடாமங்கலத்தில் நீங்கள் தேடிப் பார்த்தாலும் டிமான்டி காலனியும் இருக்காது, அந்தப் பதின்மூன்றாம் குறுக்குத் தெருவையும் காண முடியாது. எனக்கு நீடாமங்கலத்தில் மார்த்தாண்டம் என்ற பெயரில் நண்பரும் யாரும் இல்லை.

யோசித்துப் பாருங்கள், இன்றைக்குக் கடைகளுக்குச் சென்றால் "எப்படிப் பணக்காரன் ஆவது?", "எப்படி வெற்றி பெறுவது?" என்று சுயமுன்னேற்றப் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதேபோல பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் பெஸ்ட் செல்லராக இருந்தது இந்த "எப்படிச் சாவது?" ரகப் புத்தகங்கள்தான்!

அப்போது அச்சுக்கூடம் புதிதாக வந்திருந்த நேரம். பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக அச்சிடப்பட்டவை இந்தப் புத்தகங்கள்தான். மக்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிப் படித்திருக்கிறார்கள்.

புத்தகத்தில் அப்படி என்னதான் இருந்தது என்கிறீர்களா?

ஒருவர் சாவுப் படுக்கையில் கிடக்கும்போது, அவரது ஆத்மாவைப் பிடிக்கப் பிசாசும் தேவதையும் சண்டை போடுமாம். சாவுகின்ற போதும் சண்டையா? என்று கேட்காதீர்கள்.

பிசாசு வந்து, "நீ வாழ்க்கையில் செய்த தவறெல்லாம் நினைவிருக்கிறதா? உனக்கு நரகம்தான்!" என்று பயமுறுத்துமாம்.

உடனே தேவதை வந்து, "பயப்படாதே, கடைசி நிமிடத்தில் கடவுளை நம்பு, சொர்க்கத்திற்குச் சென்றுவிடலாம்" என்று அறிவுரை கூறுமாம்.

இந்தக் கடைசி நேரப் போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி? நிதானமாக உயிரை விடுவது எப்படி? அழுது புலம்பாமல், கண்ணியமாக உயிரைத் துறப்பது எப்படி? என்று ஸ்டெப் பை ஸ்டெப் கெயிடன்ஸ் அன்ட் கௌன்சிலிங் மேட்டர்களைத்தான் எப்படிச் சாவது வகையறா புத்தகங்களில் கதை அளந்தார்கள்.

சொல்லப்போனால், அது அக்காலகட்டத்தின் "மரணத்திற்கான பயனர் கையேடு"

மனிதனின் மிகப்பெரிய பலவீனமே அவனது பயம்தான். அந்தப் பயத்தை வைத்து வணிகம் செய்வது இன்று நேற்று வந்த கலை அன்று. மறுமலர்ச்சிக் காலத்திலேயே அது மிக நேர்த்தியாக நடந்திருக்கிறது.

அறிவியல் வளர்ந்து எல்லாவற்றையும் கேள்வி கேட்ட காலத்திலும், மரணம் என்ற அந்த ஒரே ஒரு விடை தெரியாத கேள்விக்கு முன்னால் மனிதன் கை கட்டித்தான் நின்றான். "வாழும்போது எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்தாலும், சாகும்போது ஒழுங்காகச் செத்துவிட வேண்டும்" என்ற மனநிலைக்கு வந்து விட்டான்.

அந்தக் கால கட்டங்களில் ரோஜர் பேக்கனும், டெகார்ட்டும் தத்துவம் பேசியிருக்கலாம். ஆனால், இரவில் தூங்கச் செல்லும்போது "நாளைக் காலை விடியும்போது கண் விழிக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று நினைத்துப் பார்த்து, அந்தப் புத்தகத்தைப் புரட்டிய சராசரி மனிதன்தான் அன்று உலகில் பெரும்பான்மையாக இருந்தான்.

அறிவியல் இவ்வளவு தூரம் வளர்ந்து, செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் இந்த நூற்றாண்டில் நாம் மட்டும் மாறிவிட்டோமா என்ன?

இன்றைக்கும் "100 ஆண்டுகள் வாழ வைக்கும் மாத்திரை", "ஆயுளை நீட்டிக்கும் உணவு முறை" என்று எத்தனையோ புதிய விஷயங்கள் வந்துகொண்டுதானே இருக்கின்றன.

அன்று "எப்படிச் சாவது?" என்று புத்தகம் படித்தான்.

இன்று "எப்படிச் சாகாமல் இருப்பது?" என்று கூகுளில் தேடுகிறான்.

வடிவம் தான் மாறியிருக்கிறது. மனிதனின் அந்தப் பயம்? அது அப்படியேதான் இருக்கிறது! அது இருக்கும் வரை அமானுஷ்யத்திற்குக் குஷியோ குஷிதான்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Sunday, 26 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.07.2026

1) நாடாளுமன்றத்தில் தேர்வு முறைகேடுகள் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

2) நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார்.

3) புதிய மத்திய கல்வி அமைச்சராகப் பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்றுக் கொண்டார்.

4) தமிழகத்தில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு வெப்பம் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

5) காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் தங்கம் வென்றார். ரிஷிகாந்த் வெள்ளி வென்றார்.


Education & GK News

1) A bill addressing examination irregularities is being tabled in Parliament today.

2) Union Education Minister Dharmendra Pradhan resigned, taking responsibility for the NEET exam paper leak.

3) Pralhad Joshi has assumed office as the new Union Education Minister.

4) Temperatures in Tamil Nadu are likely to rise by up to four degrees Celsius over the next four days.

5) India's Mirabai won gold and Rishikant won silver at the Commonwealth Weightlifting Championship.

மரணத்தின் பாஸ்வேர்ட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 33

மரணத்தின் பாஸ்வேர்ட்!

நீடாமங்கலம், டிமாண்டி காலனி, பதின்மூன்றாம் குறுக்குத் தெரு.

நேரம் நள்ளிரவு 1:30.

மார்த்தாண்டம் தன் லேப்டாப் திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது காபிக் கோப்பை குளிர்ந்து போய் பல மணி நேரமாகியிருந்தது. அவன் ஒரு தொல்பொருள் ஆய்வாளன், அதைவிட முக்கியமாக, தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கும் சுபாவம் கொண்டவன்.

ஜெர்மனியில் உள்ள ஒரு பழைய புத்தக சேகரிப்பாளரிடமிருந்து அவனுக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் அச்சிடப்பட்ட அசல் "Ars Moriendi" புத்தகத்தின் ஓர் அரிய பிரதி. தமிழில் சொல்வதென்றால், புத்தகத்தின் தலைப்பு எப்படிச் சாவது?

புத்தகத்தைப் புரட்டியபோது, கடைசிப் பக்கத்தில் ஒரு விசித்திரமான லத்தீன் வாசகமும், அதற்குக் கீழே மரக்கட்டையில் செதுக்கப்பட்ட ஓர் ஓவியமும் இருந்தது. சாவுப் படுக்கையில் இருக்கும் ஒரு மனிதன், அவனைச் சுற்றித் தேவதைகளும் பிசாசுகளும். ஆனால், உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அந்தப் பிசாசின் கையில் இருப்பது ஒரு விசித்திரமான வடிவியல் வடிவம்.

"என்ன இது? கூகுள்ல கூட இந்த இமேஜ் இல்லையே?" மார்த்தாண்டம் தனக்குள் முணுமுணுத்தான்.

திடீரென்று, அறையின் வெப்பநிலை சட்டென்று குறைந்தது. ஏசியின் கூலிங் அதிகரித்தது போல அல்ல, ஒரு மயானத்தின் குளுமை.

அவனது மொபைல் போன் திரையில் தானாக ஒரு மெசேஜ் டைப் ஆகத் தொடங்கியது.

"புத்தகத்தைப் படித்தாயா, மார்த்தாண்டம்?"

மார்த்தாண்டம் திடுக்கிட்டு எழுந்து நின்றான். "யார் அது? ஹேக் பண்ணிட்டியா?"

மொபைலில் அடுத்த மெசேஜ்:

"பதினைந்தாம் நூற்றாண்டில் எப்படிச் சாவது என்று புத்தகம் எழுதினார்கள். ஆனால், அந்தப் புத்தகத்தின் 13 ஆவது அத்தியாயத்தில் என்ன இருந்தது என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால், அதை வாசித்த எவனும் உயிரோடு இருந்ததில்லை!"

மார்த்தாண்டத்திற்கு முதுகுத்தண்டில் ஒரு குளிர்ச்சி பரவியது.

"இது ஏதோ பாட் செய்யும் வேலை" மார்த்தாண்டம் தன்னைத் தேற்றிக்கொண்டு, லேப்டாப்பில் அந்த ஓவியத்தை ஜூம் செய்தான். அந்த வடிவியல் வடிவத்தின் நடுவே, சிறிய எழுத்துக்களில் தமிழ் போன்ற ஒரு வரி!

"மரணத்திற்குப் பின் என்ன இருக்கிறது என்று அறியும் ஆர்வம் உனக்கு இருக்கிறதா?"

அடுத்த கணம், அறையின் விளக்குகள் படபடவென மின்னத் தொடங்கின. லேப்டாப் திரையில் இருந்து ஒரு விசித்திரமான அதிர்வெண் ஒலி கேட்கத் தொடங்கியது. அது காதுகளில் ஒலிக்கவில்லை. நேரடியாக மூளையின் நியூரான்களில் அதிர்ந்தது!

மார்த்தாண்டத்தின் கைகள் நடுங்கின. அவன் அந்த Ars Moriendi புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை மீண்டும் பார்த்தான். அதில் இருந்த பிசாசின் கண்கள் பளிச்சிடுவது போல் அவனுக்குத் தோன்றியது.

அப்போது அவனது வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ பைல் வந்தது. அனுப்பியவர் Unknown.

அதை ப்ளே செய்தான்.

ஒரு குரல் மனிதக் குரல் போல இல்லை, டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட அமானுஷ்யக் குரல்,

"மறுமலர்ச்சிக் காலத்தில் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியபோது, மரண பயத்தைப் பயன்படுத்தி ஒரு கதையை உருவாக்கினோம். எப்படிச் சாவது என்பது புத்தகத்தின் தலைப்பு மட்டும் அல்ல மார்த்தாண்டம். அது ஒரு சங்கேத குறியீடு அந்தப் பக்கத்தைப் பார்த்த அடுத்த 10 நிமிடங்களில், மனித மூளையின் கார்டெக்ஸ் பகுதி செயலிழக்கத் தொடங்கும்!"

மார்த்தாண்டம் தன் கைகளைப் பார்த்தான். லேசாக மரத்துப் போகத் தொடங்கியிருந்தது!

"இல்லை. இது பயத்தால் ஏற்படும் பேனிக் அட்டாக்." மார்த்தாண்டம் அறிவியலைத் துணைக் கூப்பிட்டான்.

"அப்படியும் இருக்கலாம்." பின்னாடியிருந்து ஒரு குரல் கேட்டது!

மார்த்தாண்டம் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தான். அறையின் மூலையில், நிழல்கள் திரண்டு ஒரு மனித உருவம் போல் வடிவமெடுத்தன. அதன் கையில். அதே 15 ஆம் நூற்றாண்டுப் புத்தகம்!

"நீ மறுமலர்ச்சிக் காலத்தின் அறிவியலை நம்புகிறாய். ஆனால் மரணம் என்பது அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கின் பாஸ்வேர்ட்தான் இந்தப் புத்தகம். அதைத் திறந்துவிட்டாய்!"

மார்த்தாண்டத்தின் மூச்சுத் திணறியது. கண்கள் இருண்டன. லேப்டாப் திரையில் அந்த வடிவியல் வடிவம் இப்போது வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது.

அவன் தன் கடைசி முயற்சியாக மொபைலை எடுத்து, தன் நண்பன் விஜயராமனுக்கு ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினான்:

"Ars Moriendi புத்தகத்தைத் திறக்காதே!"

திறக்காதே என்று சொன்னால் திறப்பதுதானே மனித குணம்.

நாளை திறப்போம் அந்தப் புத்தகத்தை.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****