Friday, 8 May 2026

தொலைந்து போதல் – ஒரு சக்ஸஸ் பார்முலா!

தொலைந்து போதல் – ஒரு சக்ஸஸ் பார்முலா!

நாமெல்லாம் ஜிபிஎஸ் யுகத்தில் வாழ்கிறோம். ஓர் அடி எடுத்து வைக்க வேண்டுமானாலும் நமக்கெல்லாம் இப்போது கூகுள் மேப் வேண்டும். ஆனால், வாழ்க்கையில் சில சமயம் ரூட் தெரியாமல் தொலைந்து போவதுதான் உங்களை சரியான இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் என்கிறது வாழ்வியல்.

சில ஆய்வுகளின்படி, தெரியாத இடங்களுக்குச் செல்வதும், குழப்பத்தில் இருப்பதும் நம் மூளையின் கவனிக்கும் திறனை அதிகப்படுத்துகிறதாம். மூளை ஒரு ஸ்ட்ரெஸ் ரெஸ்பான்ஸ் மூலம் புது தகவல்களை வேகம் வேகமாகச் சேமிக்கத் தொடங்குகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், வழி தெரியாமல் திகைக்கும்போது உங்கள் மூளை இன்னும் ஷார்ப் ஆகிறது!

இதை உலகை மாற்றிய பெரிய ஜாம்பவான்களின் வாழ்வியல் அப்படியே நிரூபிக்கிறது.

ரீட் கல்லூரியிலிருந்து டிராப் அவுட் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ், சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு கலிகிராபி வகுப்பில் போய் உட்கார்ந்தார். இதெல்லாம் என் வாழ்க்கையில் எங்கே பயன்படப்போகிறது? என்று அவரே அப்போது நினைத்தார்.

ஆனால், 10 வருடங்கள் கழித்து முதல் மேகிண்டோஷ் கம்ப்யூட்டரை டிசைன் செய்தபோது, அந்த எழுத்துருக்கள்தான் புரட்சியை ஏற்படுத்தின. ஜாப்ஸ் அன்று அந்த வகுப்பில் தொலையாமல் இருந்திருந்தால், இன்று கணினியில் இத்தனை அழகான எழுத்துக்கள் இருந்திருக்காது.

3M நிறுவனத்தின் விஞ்ஞானி ஸ்பென்சர் சில்வர் ஒரு சூப்பர் ஸ்ட்ராங் பசையைத் தயாரிக்க முயன்றார். ஆனால் வந்தது என்னவோ ஒரு மொக்கையான, ஒட்டவே ஒட்டாத பசை. வேஸ்ட் என்று அவர் நினைத்த அந்தத் தோல்விதான், பின்னாளில் போஸ்ட் இட் நோட்ஸாக மாறியது. இன்று வருஷத்திற்கு 50 பில்லியன் நோட்கள் விற்பனையாகின்றன. ஒரு தவறான திருப்பம், பில்லியன் டாலர் பிசினஸாக மாறிய விந்தை இது.

ஓப்ரா வின்ப்ரேவை அப்போது திடீரென நியூஸ் ஆங்கர் வேலையிலிருந்து தூக்கினார்கள். டிவி செய்திகளுக்கு நீங்கள் லாயக்கில்லை, என்றார் ஒரு புரொடியூசர். அவமானப்பட்டு நின்ற ஓப்ராவுக்குக் கிடைத்தது ஒரு பகல் நேர டாக் ஷோ. அதுதான் அவர் வாழ்க்கையின் டர்னிங் பாயிண்ட். இன்று அவர் ஒரு மீடியா பேரரசி. அன்று அந்த வேலையிலிருந்து அவர் நீக்கப்படாமல் இருந்திருந்தால், ஒரு சாதாரண செய்தி வாசிப்பாளராகவே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார்.

ஜென் ஸ்காலியா என்ற பெண்மணிக்கு விவாகரத்து ஆகி, கையில் காசில்லாமல் தன் பெற்றோருடன் வந்து தங்கியபோது, தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தார். ஆனால், அந்த ராக் பாட்டம் அதாவது அந்த மிக மோசமான நிலைதான் அவரை மாற்றியது. மில்லியன் டாலர் மாம்மி என்ற நிறுவனத்தைத் தொடங்கி, இரண்டே வருடத்தில் 5 லட்சம் டாலர் சம்பாதித்தார். என் விவாகரத்துதான் நான் எடுத்த சிறந்த பிசினஸ் முடிவு, என்கிறார் அவர்.

எம்மா கேட்வுட் என்ற 67 வயதுப் பாட்டி, ஒருநாள் வீட்டில், சும்மா ஒரு நடை போயிட்டு வர்றேன், என்று சொல்லிவிட்டு கிளம்பினார். சாதாரண கேன்வாஸ் ஷூக்களைப் போட்டுக் கொண்டு, 2,190 மைல் நீளமுள்ள அப்பலேசியன் ட்ரெயில்  பாதையைத் தனியாகக் கடந்து சாதனை படைத்தார். பலமுறை வழிதவறித் தொலைந்து போனார், ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னைப்பற்றிய புதிய ரகசியங்களைக் கண்டறிந்தார்.

ஆக, விசயம் இதுதான். வாழ்க்கை என்பது ஒரு ப்ரீ பிளான்ட் டூர் அல்ல. அது ஒரு அட்வென்ச்சர். சில சமயம் தவறான ரயிலில் ஏறுவதும், தவறான பாதையில் திரும்புவதும், உங்களுக்கான மேஜிக் உலகைக் காட்டுகின்றன.

எனவே, தொலைந்து போவதைத் தாராளமாகக் கொண்டாடுங்கள்! ஆம், அதை அவநம்பிக்கையோடு பார்ப்பதற்கோ, அதை அபசகுனமாகக் கருதுவதற்கோ அதில் எதுவும் இல்லை. அது உங்களுக்கு ஒரு டர்னிங் பாய்ண்டாகி, உங்கள் புதிய நட்சத்திரம் உதிப்பதற்கான ரூட் மேப்பாகவும் அது அமையக் கூடும்.

*****

Thursday, 7 May 2026

+2 தேர்வு முடிவுகள் 2026 – புள்ளி விவரப் பகுப்பாய்வு

+2 தேர்வு முடிவுகள் 2026 – புள்ளி விவரப் பகுப்பாய்வு

2026 ஆம் ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (08.05.2026) வெளியாகியுள்ளன. இதன் புள்ளி விவரப் பகுப்பாய்வினைக் கீழே காண்க.





*****

சிரிப்பு – ஒரு சூப்பர் பவர் மருந்து!

சிரிப்பு – ஒரு சூப்பர் பவர் மருந்து!

ஆஸ்பத்திரி என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த நீல நிறப் போர்வைகள், டெட்டால் வாசனை, அப்புறம் பரபரப்பாக இருக்கும் நர்ஸ்கள். சீரியசான டாக்டர் முகம். இப்படிப்பட்ட சூழலில், உள்ளே ஒரு கோமாளி எனும் கிளவுன் நுழைந்தால்?

இடுப்பில் ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதில் ஒரு பிளாஸ்டிக் தக்காளி. கையில் ஊசிக்குப் பதில் ஒரு பலூன். இதைப் பார்ப்பதற்கே ஒரு தெரபி வேண்டும். இதற்குப் பெயர்தான் மெடிக்கல் கிளவுனிங்.

இந்த விசித்திரமான ஐடியாவை முதலில் ஆரம்பித்தவர் டாக்டர் ஹண்டர் பேட்ச் ஆடம்ஸ்.

சிரிப்புதான் மிகச்சிறந்த மருந்து, என்று சும்மா பழமொழி சொல்லாமல், ஆடம்ஸ் நிஜமாகவே ஒரு சிகப்பு மூக்கை மாட்டிக்கொண்டு வார்டுக்குள் நுழைந்தார். இன்று இது ஓர் அங்கீகரிக்கப்பட்ட புரொபஷனல் படிப்பு.

இந்தத் துறையின் இன்னொரு விவிஐபி மைக்கேல் கிறிஸ்டென்சன். குழந்தைகள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியவர்கள் அல்ல, கோமாளிகளும் அப்படித்தான், என்பது அவர் லாஜிக்.

நாங்கள் அங்கே போய் சைக்காலஜி பேசப்போவதில்லை, ஒரு குழந்தையின் கண்களில் இருக்கும் அந்தச் சிறு ஆச்சரியப் பொறியைப் பிடித்துப் பெரிதாக்குகிறோம், அவ்வளவுதான், என்கிறார் மனிதர்.

சும்மா சிரிப்புக்காகச் சொல்லவில்லை, இதில் பியூர் சயின்ஸ் இருக்கிறது.

எப்படி என்கிறீர்களா?

ஆராய்ச்சிகளின் படி, தூங்குவதற்கு முன் இந்த கிளவுன் டாக்டர்களுடன் விளையாடும் குழந்தைகளுக்குத் தூக்கம் பிரமாதமாக வருகிறதாம்.

சிரிக்கும்போது மூளையில் எண்டார்பின் சுரக்கிறதாம். இது வலியைக் குறைக்கும் ஒரு இயற்கை அனஸ்தீசியா.

இஸ்ரேலில் உள்ள எல்லாப் பெரிய ஆஸ்பத்திரிகளிலும் 100க்கும் மேற்பட்ட கிளவுன்கள் இருக்கிறார்கள். அங்கே குழந்தைகள் டாக்டரைத் தேடுவதில்லை, இந்த ஜோக்கர்களைத்தான் தேடி ஓடுகிறார்கள்.

அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் யாரோ ஒருத்தர் கோமாளி போல டிரஸ் பண்ணிக்கொண்டு வந்து குதிப்பது கிளவுனிங் ஆகாது. இதற்குப் பயங்கரமான டிரெய்னிங் உண்டு. கடுமையான ஆடிஷன், இன்டர்ன்ஷிப், நூற்றுக்கணக்கான மணிநேர மெடிக்கல் புரோட்டோகால் வகுப்புகள் என்ற இது பக்கா புரொபஷனல்.

ஒரு சீரியஸான பேஷண்ட்டிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதோடு, அந்த மருத்துவ அறையின் வைப் என்ன என்பதை அவர்கள் துல்லியமாக உணர்ந்திருக்க வேண்டும். இவர்கள் தங்களது சிரிப்பு மூலம் பெரிய சிகிச்சைகளைக் கூட ஒரு விளையாட்டாக மாற்றிவிடுவார்கள்.

மருந்துகள் உடலைக் குணப்படுத்தும். ஆனால், சிரிப்பு மனதைக் குணப்படுத்தும். அடுத்த முறை ஆஸ்பத்திரியில் யாராவது சிகப்பு மூக்கோடு அலைந்தால் கிண்டல் செய்யாதீர்கள். அவர் ஓர் உயிர்காக்கும் கோமாளி!

எல்லா நோய்களுக்கும் சிரிப்பு ஒரு நல்ல மருந்து என்பார்கள் நம் முன்னோர்கள். திருவள்ளுவரும் இடுக்கண் வருங்கால் நகுக என்பார். இப்போது ஆஸ்பத்திரிகளிலும் அதையே கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

*****

Wednesday, 6 May 2026

கம்பிக்கு பின்னே ஒரு ராகம் – சிறைச் சாலைகளின் புதிய முகம்!

கம்பிக்கு பின்னே ஒரு ராகம் – சிறைச் சாலைகளின் புதிய முகம்!

ஒரு பள்ளி திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது, என்றார் விக்டர் ஹியூகோ.

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது, என்றார் விவேகானந்தர்.

இவற்றையும் மீறி சிறைச்சாலைக்குள் சென்றவர்களை மீட்பதற்கு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா?

இருக்கின்றன என அடித்துச் சொல்கின்றன சில மனிதநேய முன்னெடுப்புகள்.

ஆம், சிறைச்சாலை என்றாலே நம் ஊர் சினிமாக்களில் காட்டப்படும் அந்த இருட்டு அறைகளும், கஞ்சி வாளிகளும் அல்ல. இப்போது அங்கே மியூசிக் ஆல்பங்களும், மாரத்தான் ஓட்டப்பந்தயங்களும் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன. குற்றவாளி என்ற லேபிளைத் தாண்டி மனிதன் என்ற அடையாளத்தை மீட்டெடுக்கும் ஒரு மனிதாபிமான முயற்சி இது.

லண்டனின் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் ஒரு விசித்திரம். வாராவாரம் அங்கே கைதிகளும், தன்னார்வலர்களும் சேர்ந்து பாடுகிறார்கள். சுமார் 2,500 கைதிகள், 200 ரிகர்சல்கள் என லண்டன் அதிர்கிறது.

அந்த ரிகர்சல் அறையில் இருக்கும் இரண்டு மணி நேரம் நான் ஒரு கைதி அல்ல, நான் ஒரு மனிதன், என்கிறார் அங்குள்ள கைதி ஒருவர். இதில் ஒரு சைக்காலஜி இருக்கிறது. குழுவாகப் பாடும்போது மூளையில் எண்டார்பின் சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, நல்லுணர்வைத் தருகிறது.

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஈஸ்ட் ஹில்ஸ் சிங்கர்ஸ் என்றொரு குரூப். இவர்களின் கதையை கன்டக்டிங் ஹோப் என்று ஆவணப்படமாகவே எடுத்திருக்கிறார்கள்.

ஓஹியோவில் ஹார்மனி ப்ராஜெக்ட் மூலம் வாரம் 1,000 பேருக்கும் மேல் அங்குள்ள சிறைச்சாலையில் பாடுகிறார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், சில சமயம் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களே வந்து இவர்களுடன் உரையாடுகிறார்கள். இது ஒரு ஹீலிங் பிராசஸ்.

பாட்டை விட ஒரு படி மேலே போய் கைதிகளுக்கு மராத்தான்களும் நடத்தப்படுகின்றன. கலிபோர்னியாவின் சான் குவென்டின் சிறை. மிகவும் ஆபத்தான கைதிகள் இருக்கும் இடம். அங்கே ஒரு ரன்னிங் கிளப்பை ஆரம்பித்தார்கள்.

சிறை மைதானத்தைச் சுற்றி 105 முறை ஓடினால் ஒரு முழு மாரத்தான் அதாவது, 26.2 மைல்கள் அல்லது 42.1 கி.மீ.

வாராவாரம் திங்கட்கிழமை மாலை ட்ரைனிங்.

இது ஆரம்பித்து பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன. இன்று மூன்று மணி நேரத்திற்குள் மாரத்தானை முடிக்கும் அக்மார்க் அத்லெட்டுகளை இந்தச் சிறை உருவாக்கியிருக்கிறது. கைதிகள் இப்போதெல்லாம் தங்கள் எனர்ஜியை வன்முறைக்குப் பதில் ஓடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள்!

எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறது?

சிறை என்பது தண்டனைக்கான இடம் மட்டுமல்ல, அது ஒரு ரீ-புரோகிராமிங் சென்டர்.

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

கைதிகளில் பெரும்பாலானோர் சமூகப் பின்னணி மற்றும் வறுமையால் உள்ளே வந்தவர்கள். இதுபோன்ற மியூசிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் புரோகிராம்களில் பங்கேற்கும் கைதிகள், விடுதலையான பிறகு மீண்டும் குற்றம் செய்து சிறைக்குத் திரும்பும் விகிதம்  பெருமளவு குறைகிறதாம்.

ஒருமுறை பிரிட்டன் மன்னர் சார்லஸ் டார்ட்மூர் சிறைக்குச் சென்றபோது கைதிகளின் பாடலைக் கேட்டு நெகிழ்ந்து போனார். கம்பிக்கு வெளியே இருப்பவர்களுக்கும், உள்ளே இருப்பவர்களுக்கும் இடையே இசை ஒரு பாலத்தை அமைக்கிறது.

வாழ்க்கை ஒரு வட்டம். சில சமயம் அந்த வட்டம் 105 லேப்களைக் கொண்ட மாரத்தான் ட்ராக்காகவும் இருக்கலாம். அங்கே இசையால் நிரம்பும் அறைகளும் இருக்கலாம். மார்க்ஸ் சொன்னது போல, இந்த உலகில் மாற்றம் மட்டுமே மாறாதது. கொஞ்சம் மனிதநேயத்தோடு அணுகினால் இந்த உலகில் மாறாதது எது?

*****

Tuesday, 5 May 2026

யான் பாம்பிங் – கம்பளிப் புரட்சி!

யான் பாம்பிங் – கம்பளிப் புரட்சி!

தெருவோரக் கலை என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்ப்ரே பெயிண்ட்டும், சுவர்களில் கிறுக்கப்பட்டிருக்கும் விசித்திரமான எழுத்துக்களும்தான். ஆனால், டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் ஒரு பெண் யோசித்தார். அவர் கையில் பெயிண்ட் டப்பா இல்லை, கம்பளி நூலும் ஊசியும்தான் இருந்தது.

அவர் பெயர் மாக்டா சேயக். தன் துணிக்கடையின் வாசலில் இருந்த அந்த மொக்கையான இரும்பு கைப்பிடிக்கு ஓர் அழகான உறையைப் பின்னி மாட்டினார். அவ்வளவுதான், உலகமே இன்று இந்த மென்மையான கலையில் கிறங்கிக் கிடக்கிறது. இதற்குப் பெயர் யான் பாம்பிங்.

இக்கலை சாதாரண கிராபிட்டி போலச் சுவரைப் பாழாக்காது. பிடிக்கவில்லையா? கத்தரிக்கோலால் ஒரு கட் கொடுத்தால், பழைய இரும்பு கம்பியே வந்துவிடும்.

யான் பாம்பிங் இத்தோடு நின்று விட வில்லை. அது,

மரங்களுக்கு ஸ்வெட்டர் போடுவது,

சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு ரெயின்போ கோட் மாட்டுவது,

பூங்கா பெஞ்சுகளுக்கு கம்பளி மெத்தை தைப்பது என்று நீள்கிறது.

இதுதான் இந்த ஆர்ட்டின் பாணி.

ஒரு ஸ்டாப் சிக்னல் போஸ்ட் கம்பளி ஆடை உடுத்தியிருப்பதைப் பார்க்கும்போது நமக்கும் அதற்குமான ஒரு விசித்திரமான கனெக்சன் உருவாகிறது பாருங்கள். அதுதான் இதன் மேஜிக்!

சில சமயம் இது ஒரு மாபெரும் திருவிழாவாக மாறிவிடுகிறது.

பிட்ஸ்பர்க்கில் இருக்கும் ஆண்டி வார்ஹோல் பாலத்தையே கம்பளியால் போர்த்தினார்கள். இதுதான் உலகிலேயே பெரிய யான் பாம்.

நியூயார்க்கில் ஒரு பெட்ரோல் பங்கையே 600 யார்டு துணிகளால் அலங்கரித்து ஒரு மியூசியம் போல மாற்றினார்கள்.

இங்கே தனிமனிதர் முக்கியமில்லை, ஒரு குழுவாக அமர்ந்து மாதக்கணக்கில் பின்னி, ஒரே நாளில் ஓர் ஊரையே கலர்புல் ஆக்குவதில் இருக்கும் அந்தத் திரில்தான் ஹைலைட்.

இது வெறும் அலங்காரம் மட்டும் அல்ல, ஒரு போராட்டக் கருவியாகவும் கூட பயன்படுகிறது. எப்படி என்கிறீர்களா?

மரங்களை வெட்டப் போகிறார்களா? அந்த மரத்திற்கு அழகான கம்பளி சட்டையைப் போடுங்கள். அப்படி, டெக்சாஸின் மாண்ட்ரோஸ் பகுதியில் முதிர்ந்த ஓக் மரங்களை வெட்ட எதிர்ப்புத் தெரிவித்து அவற்றை யான் பாம்பிங் மூலம் காப்பாற்றப் போராடியிருக்கிறார்கள். கம்பளி பின்னுவது ஏதோ பாட்டிகளுக்கு உரிய வேலை என்று நினைத்தவர்களுக்கு, இது ஒரு புரட்சிக்கலை என்று நிரூபித்துவிட்டார்கள் அந்தக் கலைஞர்கள்.

சிமெண்ட் காடுகளுக்குள் நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை, ஒரு நூலால் மீட்டெடுக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய ஆச்சரியம்!

உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் கம்பம் இன்று காலையில் திடீரென கலர்புல் ஸ்வெட்டர் போட்டிருந்தால் ஆச்சரியப்படாதீர்கள். அது ஒரு மென்மையான யுத்தம்!

இதற்காகப் புதிய துணிகளை, புதுப்புது நூல்களை வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. பழைய பயன்படாத துணிகளைக் கூட மீளுருவாக்க முறையில் பயன்படுத்தலாம். கொஞ்சம் மூளையைத் தட்டி விட்டால் ஐடியாவுக்கா பஞ்சம்?

ஒரு சின்ன கலை உலகையும் மனதையும் மாற்றுமானால், அதை முயன்று பார்ப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது? முயன்று பாருங்களேன். உங்கள் ஊரிலும் ஒரு புரட்சியோ, மாற்றமோ உருவாகட்டும்.

*****

Monday, 4 May 2026

சந்தோஷம் – எக்ஸ்பெக்ட் தி அன்எக்ஸ்பெக்டட்!

சந்தோஷம் – எக்ஸ்பெக்ட் தி அன்எக்ஸ்பெக்டட்!

வாழ்க்கை ஒரு விசித்திரமான லாட்டரி. நாம் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களிலும், விலையுயர்ந்த பார்ட்டிகளிலும் தேடிக்கொண்டிருக்கும் ஹேப்பினஸ், உண்மையில் ஒரு பழைய சந்தின் மூலையிலோ அல்லது அழுக்கு படிந்த நடைபாதையிலோ நமக்காகக் காத்திருக்கலாம்.

சந்தோஷம் என்பது ஒரு ஹைடெக் மென்பொருள் அல்ல, அது நம் அன்றாட வாழ்வின் துணிகளில் தைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு கிழிசல் வழியே எட்டிப்பார்க்கும் சூரிய ஒளி.

மொட்டை மரங்களுக்கு யாரோ ஒருவர் ஆசையாகப் பின்னிய கம்பளி சட்டையை மாட்டி விடுகிறார். ஒரு சலிப்பான சிட்டி சாலை, சட்டென்று ஒரு ஆர்ட் கேலரியாக மாறுகிறது. இதை யான் பம்பிங் என்கிறார்கள். இதைப் பற்றி நாளை விரிவாகவே பார்ப்போம்.

கல் சுவர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்கள் இசையால் கரைகின்றன. அங்கே ராகம் தாளம் பார்க்கத் தேவையில்லை, உணர்வு போதும். அந்த இடமே மகிழ்ச்சியால் நிரம்புகிறது. இதையும் விரிவாக நாளை மறுநாள் பார்ப்போம்.

வாழ்க்கையில் சில சமயம் நாம் எடுக்கும் ராங் ரூட் தான் நம்மைச் சரியான இடத்திற்கு இட்டுச் செல்கிறது. இது ஓர் அபத்தம் போன்று தொன்றினாலும், சில நேரங்களில் சந்தோஷத்திற்குச் சரியாக செட் ஆகிறது.

அப்படித்தான், ரயில் நிலையத்தில் எதேச்சையாகச் சந்திக்கும் ஒரு முன்பின் தெரியாத நபர், அடுத்த இருபது வருடங்களுக்கு உங்கள் உற்ற நண்பராக மாறுகிறார். ரயில் சிநேகிதம் என்று இதைச் சாதாரணமாகக் கூறி விட முடியாது.

உலகம் முழுக்க இதுபோன்ற சின்னஞ்சிறு அற்புதங்கள் நிறைய சிதறிக் கிடக்கின்றன.

ஆஸ்பத்திரி வாசனையும் ஊசிப் பயமும் நிறைந்த வார்டுகளில், ஒரு ஜோக்கரின் சிரிப்பு மருந்தை விட வேகமாக வேலை செய்கிறது.

உடைந்து போன மண் பாண்டத்தை தங்கத்தால் ஒட்ட வைக்கும் ஜப்பானியக் கலையானது விரிசல்கள் பலவீனம் அல்ல, அவை அழகின் அடையாளம் என்பதைச் சொல்கிறது. மனதுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

அண்டர்கிரவுண்ட் மெட்ரோவில் முகம் தெரியாத மனிதர்கள் சட்டென்று கைகோர்த்து ஆடும் அந்தத் தன்னிச்சையான நடனம் மகிழ்ச்சியைக் கொப்புளிக்கச் செய்கிறது.

இப்படி நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பற்றி ஒவ்வொரு நாளாகப் பார்ப்போம்.

ஆக, விசயம் என்னவென்றால், வாழ்க்கை என்பது ஒரு ப்ரோக்ராம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் அல்ல. அது ஓர் அழகான குழப்பம். நீங்கள் எப்போது மிகச் சோர்வாக, இனி அவ்வளவுதான், என்று நினைக்கிறீர்களோ, அப்போதுதான் மேஜிக் உங்கள் கதவைத் தட்டும்.

கதவைத் திறந்து வையுங்கள். சந்தோஷம் எதிர்பாராத நேரத்தில் வரும்!

அது எப்படியெல்லாம் வருகிறது என்பதை ஒவ்வொரு நாளாகப் பார்ப்போம்.

*****

Sunday, 3 May 2026

சோலார் மாமாக்களும் இருட்டை விரட்டும் பாட்டிகளும்!

சோலார் மாமாக்களும் இருட்டை விரட்டும் பாட்டிகளும்!

கிராமப்புறங்களில் கரண்ட் போனால் நாம் இன்வெர்ட்டரைத் தேடுகிறோம். ஆனால், உலகெங்கும் 700 மில்லியன் பேருக்கு இன்னும் ஸ்விட்ச் என்பது வெறும் பிளாஸ்டிக் துண்டுதான். அழுத்தினாலும் விளக்கு எரியாது. இந்த இருட்டுப் பக்கத்தில்தான் ஒரு அமைதியான புரட்சி நடக்கிறது.

நடத்துவது யார்? கோட் சூட் போட்ட இன்ஜினியர்கள் அல்ல, படிக்காத, கிராமத்துத் தாய்மார்களும் பாட்டிகளும்தான். இவர்களை அன்போடு சோலார் மாமாக்கள் என்று அழைக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவின் ஜான்சிபார் தீவில் மட்டும் 65 பெண்கள் சோலார் இன்ஜினியர்களாக மாறியிருக்கிறார்கள். ரிசல்ட்? 29 கிராமங்களில் உள்ள 1,900 வீடுகளில் இன்று விளக்கு எரிகிறது.

இதே கதைதான் மத்திய அமெரிக்காவின் பெலிஸ் நாட்டிலும். பழங்குடியினப் பெண்கள் வெறும் சோலார் பேனல்களை மாட்டுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அதில் வரும் ரிப்பேர்களைச் சரி செய்கிறார்கள், மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுவரை உலகம் முழுக்க 1,75,000 சோலார் சிஸ்டம்களை இந்த மாமாக்கள் பொருத்தியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

இந்தியாவிலும் இந்த மேஜிக் நடந்துள்ளது. இராஜஸ்தானில் உள்ள பாரேபூட் கல்லூரியில் சோலார் பவர் தொடர்பாகத் தொடங்கப்பட்ட நிறுவனம், இப்போது 93 நாடுகளில் கிளை பரப்பியுள்ளது.

இங்கே பயிற்சி முறை ரொம்பவே டிபரண்ட்.

மொழி தெரியாவிட்டால் என்ன? எழுத்து வாசனையே இல்லாவிட்டால் என்ன?

எலக்ட்ரானிக் பார்ட்ஸ்கள் எல்லாவற்றையும் நிறங்கள் மற்றும் வடிவங்கள் மூலமாகவே அடையாளம் காணக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

சர்க்கியூட் போர்டில் எந்தக் கலர் வயரை எங்கே இணைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும்.

எங்கள் கிராமத்து குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய வெளிச்சம் வேண்டும், அதுதான் எங்கள் லட்சியம், என்கிறார்கள் சூரிய மின்சாரத்துக்காகச் சூரியன் போலப் பாடுபடும் இவர்கள்.

இந்தத் திட்டத்தின் ஒரு முக்கியமான ட்விஸ்ட் பாட்டிகள்தான். இந்தத் திட்டத்துக்காக இதற்கான முனைவோர்கள் தேடிப் பிடிப்பது நடுத்தர வயதுப் பெண்களையும் பாட்டிகளையும் மட்டும்தான்.

ஏன் என்கிறீர்களா?

பெண்கள் என்றால் பிள்ளைகளை வளர்க்கப் பிறந்தவர்கள் மட்டுமே, என்கிற முட்டாள்தனமான மைண்ட்செட்டை உடைக்க இது ஒரு வழி.

இளைஞர்கள் படித்தால் உடனே நகரத்திற்கு ஓடிவிடுவார்கள். ஆனால் பாட்டிகள் அப்படியல்ல, அவர்கள் தன் மண்ணை விட்டு எங்கும் போகமாட்டார்கள். சமூக சேவைக்கு அவர்கள் தான் பெஸ்ட் பெட்.

வெறும் சோலார் மட்டும் போதாது என்று அவர்களுக்கு டிஜிட்டல் அறிவு, வங்கிப் பரிவர்த்தனை போன்ற மற்ற விஷயங்களையும் கூட சொல்லிக் கொடுக்கிறார்கள்.

தொழில்நுட்பம் என்பது வெறும் மேலைநாட்டு ஏகபோகம் அல்ல. அது ஒரு பாட்டியின் கையில் இருக்கும் ஸ்க்ரூ டிரைவரிலும் இருக்கிறது. இருட்டு விலகிக் கொண்டிருக்கிறது!

நம் தமிழகத்துக் கிராமங்களும் இதை டிரை பண்ணலாம். இப்போதே மின்வெட்டு பத்து நிமிஷம், அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பாட்சா காட்ட ஆரம்பித்து விட்டது.

நமக்கும் சோலார் மாமாக்களும் சோலார் பாட்டிகளும் தேவைதானே!

*****