மெல்ல மெல்ல ஒரு வாழ்வியல் கையேடு!
ஸ்லோ லிவ்விங் என்று நாம் இதுவரை பார்த்ததைத்
தொகுத்தால், நீங்கள் வாழ்க்கையில் சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
நம் காலை அலாரம் அடித்ததும் ஸ்னூஸ் பட்டனைத்
தட்டிவிட்டு, தாமதமாக எழுந்து, கையில் கிடைத்ததை வாயில் திணித்துக் கொண்டு ஓடுவதாகவும்,
முடிவே இல்லாத வோர்க் லிஸ்ட்டுடன் மல்லுக்கட்டிவிட்டு, இரவு வீட்டுக்கு வந்து மொபைலை
நோண்டியபடி ஒரு தூக்கமில்லா இரவைக் கழிப்பதாகவும் இருக்கிறது.
வாழ்க்கை என்பது ஒரு ரன்னிங் ரேஸ் அல்ல, நீங்கள்
வாழ்க்கையில் கொஞ்சம் நிதானமாக இருப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பெயர்தான்
ஸ்லோ லிவிங்.
ஒரே நேரத்தில் நான்கு வேலைகளைச் செய்வதால்
நீங்கள் புத்திசாலி என்று நினைக்காதீர்கள். உண்மையில், உங்கள் மூளை ஒரு டாஸ்க்கிலிருந்து
இன்னொன்றுக்குத் தாவும்போது அதன் திறன் குறைகிறது. போன் பேசிக்கொண்டே மெயில் தட்டாதீர்கள்.
போன் வந்தால் வேலையை நிறுத்திவிட்டுப் பேசுங்கள்.
ஒரு வேலையில் முழு மூச்சாக இறங்கும்போது மூளை
ஒருவித தனித்த நிலைக்குச் செல்லும். அதுதான் உங்கள் உற்பத்தித் திறனையும், படைப்பாற்றலையும்
எகிற வைக்கும்.
கம்ப்யூட்டரில் அல்லது மொபைலில் ஒரு ரிமைண்டர்
செட் செய்யுங்கள். ஒரு நிமிடம். வெறும் ஒரு நிமிடம் மட்டும் அமைதியாக இருங்கள். இதை
ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் மூன்று முறையேனும் செய்து பாருங்கள். அதிகபட்சம் பத்து
முறைகளுக்கு மேல் கூட போகலாம். உங்களின் எனர்ஜி ரீசார்ஜ் மெத்தெட் இது.
பதற்றமான பரபரப்பான நேரங்களில் ஐந்து முறை
ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து விடுங்கள். இது உங்கள் உடலின் ரிலாக்ஸேஷன் ரெஸ்பான்ஸைத்
தட்டி எழுப்பும்.
அவ்வப்போது எழுந்து கைகளை நீட்டி நிமிருங்கள்.
தசைகளில் தேங்கியிருக்கும் ஸ்ட்ரெஸ்ஸை அது ரிலீஸ் செய்யும். அவசரம் அவசரமாக எடுக்கும்
முடிவுகள் எப்போதுமே ரேஷனல் ஆக இருப்பதில்லை. ஸோ, அவசரத்துக்கு ஒரு குட்பை, நிதானத்துக்கு
ஒரு வெல்கம் போர்டை எப்போதும் உங்கள் மனக்கண் முன் வைத்திருங்கள்.
ஒவ்வொரு முறை நீங்கள் வேலையை நிறுத்திவிட்டு
மெயிலைச் செக் செய்யும்போதும், உங்கள் மூளை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப 64 வினாடிகள்
ஆகிறதாம். இது ஓர் ஆய்வு முடிவு. ஒரு வாரத்தில் எத்தனை மணிநேரம் இப்படி வேஸ்ட் ஆகிறது
என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.
மற்றுமொரு ஆய்வு முடிவின்படி, அடிக்கடி டிஸ்ட்ராக்சன்
ஆகும் ஊழியர்களின் ஐக்யூ லெவல், கஞ்சா புகைப்பவர்களை
விடவும் மோசமாகக் குறைகிறதாம்!
நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது,
திடீரென்று வேறு ஏதாவது ஞாபகம் வந்தால், அதை ஒரு பேப்பரில் குறித்து வைத்துவிட்டு உங்கள்
வேலையைத் தொடருங்கள். சைட் ட்ராக் ஆகாதீர்கள்.
எதையும் ஒரு திறந்த மனதுடன் அணுகுங்கள். எல்லாம்
எனக்குத் தெரியும் என்கிற அகந்தையைத் தூக்கிப் போட்டுவிட்டு, ஒரு குழந்தையின் ஆர்வத்துடன்
உலகைப் பாருங்கள்.
வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத கியூ கிடையாது.
நாம் எதற்காக ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். உணவைச் சுவைப்பது,
நிம்மதியாகத் தூங்குவது, இயற்கையோடு கனெக்ட் ஆவது போன்றவைதான் வாழ்க்கையின் சோர்ஸ்
கோட்.
பேசும்போது மற்றவர் பேசுவதைக் குறுக்கிடாமல்
முழுமையாகக் கேளுங்கள். ஆக்டிவ் லிசனிங் என்பது ஒரு பெரிய கலை. அது உங்கள் உறவுகளைச்
சீரமைக்கும்.
இவை எல்லாம் நாம் முன்பே பார்த்தவைதான். முன்பே
பார்த்தவற்றை ஏன் மீண்டும் இங்கே தொகுக்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். அவசர அவசரமாக
இயங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் என்னதான் நிதானத்தைப் பற்றிப் பேசினாலும், நினைத்துக்
கொண்டிருந்தாலும் அதை அடிக்கடி மறந்துவிடுகிறோம். அந்த அளவுக்கு அவசரமும் பரபரப்பும்
நமக்குப் பழக்கமாக இருக்கிறது. ஆகவே, இப்படி மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும்
போதுதான் நிதானம் பழக்கமாகும்.
நாம் அடிக்கடி சொல்வதுதான். இருந்தாலும் ஒவ்வொரு
நாளும் இதைச் செய்து பாருங்கள்.
இன்று காலையோ, மாலையோ உங்கள் போனை ஒரு அரை
மணி நேரம் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பாருங்கள். உலகம்
மெதுவாக இயங்குவதைப் பார்ப்பதே ஒரு சுகமான அனுபவம்.
உங்கள் ஸ்லோ லிவிங் பயணம் தினசரி அங்கிருந்து
தொடங்கட்டும்!
*****









