Sunday, 5 July 2026

கி.முவில் ஒரு ப்ளான்செட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 12

கி.முவில் ஒரு ப்ளான்செட்!

விஞ்ஞானத்துக்கும் அஞ்ஞானத்துக்கும் நடுவே ஒரு மெல்லிய கோடு எப்போதும் உண்டு. நமக்குத் தெரியாத, புரியாத விஷயங்களை அமானுஷ்யம் என்கிறோம். கொஞ்சம் லாஜிக் தெரிந்தால் சயன்ஸ் என்கிறோம்.

நள்ளிரவில் லைட்டை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நாணயம் அல்லது ஒரு மரப்பலகையை வைத்துக்கொண்டு, ஆவி இருக்கிறதா? இங்கே வா என்று ப்ளான்செட் விளையாடுகிறார்களே, இதற்கு ஒரு மிகப்பழைய, பைபிள்கால முப்பாட்டன் வரலாறு இருக்கிறது.

அட்ரஸ் எதுவென்றால், இஸ்ரவேல் நாடு.

காலம் என்று பார்த்தால், இன்றைக்கு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு.

சவுல் என்பவர். இஸ்ரவேலின் முதல் ராஜா. ஆள் உயரமானவர், அழகானவர், ஆரம்பத்தில் நல்லவர்தான். ஆனால், போகப்போக அதிகாரம் தலைக்கேறி, தன் இஷ்டத்துக்கு ஆடி, கடைசியில் மொத்த கிரேஸையும் இழந்துகொண்டிருந்தார்.

சவுல் மன்னனுக்கு ஒரு மிகப்பெரிய தலைவலி ஆரம்பமானது.

எதிரிகளான பெலிஸ்தியர்கள் பெரும் படையோடு போருக்கு வந்துவிட்டார்கள்.

சவுலுக்கு பயத்தில் கை, கால் நடுங்குகிறது. கடவுளிடம் கேட்கிறார், எந்தப் பதிலும் இல்லை. கனவிலும் பதில் இல்லை, தீர்க்கதரிசிகள் மூலமும் மெசேஜ் வரவில்லை. மொத்தத்தில், சவுல் அவுட் ஆப் கவரேஜ் ஏரியாவில் இருந்தார்.

வேறு வழியே இல்லாமல், சவுல் ஒரு விபரீதமான முடிவுக்கு வருகிறார். “இறந்துபோன தனது வழிகாட்டியான சாமுவேலைத் தொடர்புகொண்டு ஐடியா கேட்க வேண்டும்.”

ஆனால், ஒரு சிக்கல்.

சவுல் ராஜாவாக இருந்தபோது, நாட்டில் இருந்த ஆவி பிடிப்பவர்கள், மந்திரவாதிகள் எல்லாரையும் அடித்துத் துரத்தி, "இனிமேல் எவனாவது ஆவி, பேய் என்று சுற்றினால் மரண தண்டனை" என்று சட்டம் போட்டிருந்தார்.

இப்போது அவரே அந்தச் சட்டத்தை மீற வேண்டிய கட்டாயம்.

தன் ஊழியர்களிடம் ரகசியமாகக் கேட்கிறார்: "யாராவது ஆவி பிடிப்பவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா?"

ஊழியர்கள் மெதுவாகக் காதைக் கடித்தார்கள்.

"ஆமா மன்னா. எண்டோர் என்கிற ஊரில் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஆவிகளோடு பேசும் மீடியம் கலை தெரியும்."

சவுல் உடனே தன் ராஜ உடைகளைக் கழற்றிவிட்டு, சாதாரண மனிதனைப் போல வேடமிட்டு, நள்ளிரவில் இரண்டு ஆட்களுடன் கிளம்பினார்.

அன்றைய நள்ளிரவு அமானுஷ்யங்களுக்கு இதுவே ஆரம்பம்!

எண்டோர் ஊர் மந்திரவாதிப் பெண்ணின் வீடு. கதவு தட்டப்பட்டது.

சவுல் மாறுவேடத்தில் நின்று, "எனக்காக நீ ஒரு ஆவியை வரவழைக்க வேண்டும்" என்கிறார்.

அந்தப் பெண் பயந்துவிட்டாள். "யோவ், சவுல் ராஜா இந்த நாட்டில் ஆவி பிடிப்பவர்களைக் கொல்ல உத்தரவிட்டிருப்பது உனக்குத் தெரியாதா? என்னை ஏன் வம்பில் மாட்டிவிடுகிறாய்?" என்றாள்.

சவுல் அவளுக்குச் சத்தியம் செய்து தந்து, ஆவியை வரவழைக்கச் சொல்கிறார்.

"யாருடைய ஆவி வேண்டும்?"

"சாமுவேலின் ஆவி!"

அந்தப் பெண் தன் மந்திர தந்திர வேலைகளைத் தொடங்குகிறாள்.

இன்றைக்கு டேபிளில் விரலை வைத்துக்கொண்டு "ஆவியே வா" என்கிறார்களே, அதுதான் அன்றைய அவளது வித்தை.

திடீரென அந்தப் பெண் பயந்து அலறுகிறாள்!

ஏன்?

வந்திருப்பது சாதாரண ஆவி இல்லை; சாமுவேலின் கம்பீரமான தோற்றம்.

அதே சமயம், வந்திருப்பது சவுல் ராஜாதான் என்பதையும் அவள் கண்டுபிடித்துவிடுகிறாள்.

"ஏன் என்னை ஏமாற்றினாய்? நீதானே சவுல்!" என்று கத்துகிறாள்.

சவுல் தரையில் விழுந்து வணங்கி, "பெலிஸ்தியர் என்னை எதிர்க்கிறார்கள். கடவுள் என்னைவிட்டுப் போய்விட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதான் உங்களை வைத்துக் கூப்பிட்டேன்" என்கிறார்.

பூமிக்கு அடியில் இருந்து வந்த சாமுவேலின் ஆவி அல்லது குரல் என்ன சொன்னது தெரியுமா? எந்த ஒரு நல்ல ஆவியும் சொல்லும் க்ளிஷே பதில் தான், ஆனால் கொஞ்சம் காரமாக,

"கடவுளே உன்னைவிட்டு விலகி, உனக்கு எதிரியாகிவிட்ட பிறகு என்னிடம் ஏன் கேட்கிறாய்? நீ கடவுளின் பேச்சைக் கேட்கவில்லை. அதனால், நாளைக்கு நீயும் உன் மகன்களும் போரில் தோற்று, இறந்து, என்னோடு ஆவிகளின் உலகத்துக்கு வரப்போகிறீர்கள்!"

அவ்வளவுதான்! சவுல் அதிர்ச்சியில் அப்படியே தரையில் சுருண்டு விழுந்தார். பயத்திலும், அன்று முழுதும் சாப்பிடாத பசியிலும் ஆள் அப்படியே கிடந்தார்.

மறுநாள்.

சாமுவேல் சொன்னபடியே போரில் இஸ்ரவேல் தோற்றது, சவுலின் மகன்கள் இறந்தார்கள், சவுலும் தற்கொலை செய்துகொண்டார். கதை முடிந்தது.

இந்த எண்டோர் பெண் செய்தது நிஜமாகவே ஆவியை வரவழைத்ததா, அல்லது சவுலின் குற்ற உணர்ச்சியைப் பயன்படுத்தி அவள் செய்த வென்ட்ரிலோக்விசம்  மற்றும் மைண்ட் ரீடிங் தந்திரமா?

விஞ்ஞானிகள் இதை ஹாலுசினேஷன் அல்லது ஏமாற்று வேலை என்பார்கள். விசுவாசிகளோ அது கடவுளின் அனுமதி என்பார்கள்.

எது எப்படியோ, மனிதனுக்குத் தன் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ளும் ஆசையும், மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்கிற பயமும் இருக்கும் வரை, அன்று எண்டோர் பாட்டி, இன்று பிளான்செட், நாளைக்கு ஏதோ ஒரு டிஜிட்டல் ஆவி ஏஐ செயலி என பிசினஸ் நடந்துகொண்டேதான் இருக்கும்!

*****

ஒரு கவிஞனின் கணக்கு வழக்கு

ஒரு கவிஞனின் கணக்கு வழக்கு

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.

முதல் வகை, பிறருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு, தன் வீட்டின் கதவை ஜப்தி அதிகாரிகள் தட்டும் வரை காலம் மாறும் என்று காத்துக்கொண்டிருப்பவர்கள்.

இரண்டாம் வகை, அந்த ஜாமீன் கையெழுத்தை வாங்கிக்கொண்டு, நிம்மதியாகத் தூங்கச் செல்பவர்கள்.

கவியரசு கண்ணதாசன் இதில் முதல் வகையைச் சேர்ந்த பேராளுமை.

அவருடைய இதயம் எப்படிப்பட்டது என்றால், யாராவது வந்து கொஞ்சம் சென்டிமென்ட்டாகப் பேசினால் போதும், உடனே உருகிவிடும். உருகிய இதயம் கவிதையாக மாறினால் பரவாயில்லை; அது கடனுக்கான ஜாமீன் கையெழுத்தாக மாறும்போதுதான் பிரபஞ்சம் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்குகிறது.

பிறருக்காகக் கடன் பட்டு, அந்தக் கடனைத் தன் தோளில் சுமந்துகொண்டு, "அடுத்து என்ன செய்வது?" என்று அவர் சோகத்தின் விளிம்பில் நின்றபோதுதான், தமிழ் சினிமா பாவ மன்னிப்பு கேட்க அவருக்கு ஒரு வாய்ப்பளித்தது.

இயக்குநர் ஏ. பீம்சிங், கண்ணதாசனிடம் ஒரு விசித்திரமான சூழ்நிலையைக் கொடுத்தார்:

"ஹீரோ மகிழ்ச்சியையும் சோகத்தையும் கலந்து பாட வேண்டும்."

சினிமா ஹீரோவுக்கு மட்டுமாவது அது கலவையாக இருந்தது. ஆனால், நிஜ வாழ்க்கையில் கண்ணதாசனுக்கு அது சுத்தமான, கலப்படமில்லாத சோகமாக மட்டுமே இருந்தது.

காரணம், பாட்டு எழுதிக்கொண்டிருந்த அதே வினாடியில், கவிஞரின் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள்.

 ஒரு சராசரி மனிதனுக்கு வீடு ஜப்தியாகிறது என்றால் ரத்த அழுத்தம் ஏறும். ஆனால், ஒரு கவிஞனுக்கு வீடு ஜப்தியாகும்போது பல்லவி பிறக்கிறது.

அப்படிப் பிறந்ததுதான் அந்த வரிகள். "சிலர் சிரிப்பார்... சிலர் அழுவார்... நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்..."

வாழ்வின் ஆகப்பெரும் முரண் இதுதான். உலகம் உங்களைப் பார்த்துச் சிரிக்கும்போது, நீங்கள் உலகைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்; ஆனால் உள்ளுக்குள் அழுதுகொண்டிருக்க வேண்டும்.

கவிஞர் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்ளும் தத்துவமாக அடுத்த வரியை வைத்தார். "காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும்."

காலம் மாறியதோ இல்லையோ, அந்தப் பாட்டு தமிழ் சினிமாவின் காலத்தை மாற்றியது.

இந்தப் பாடலை எழுதி முடித்துவிட்டு, ஒரு சூறாவளியைப் போலக் கண்ணதாசன் பதற்றத்துடன் கிளம்பியபோது, அங்கிருந்த வித்வான்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

இசைக்கு மட்டுமன்றி, கவிஞனின் இதயத் துடிப்புக்கும் மெட்டமைக்கத் தெரிந்த எம்.எஸ். விஸ்வநாதன் மட்டும் காரை எடுத்துக்கொண்டு கவிஞரின் வீட்டுக்குப் பின்னாடியே ஓடினார்.

அங்கே கண்ட காட்சி. கவிஞரின் வீட்டு வாசலில் ஜப்தி அதிகாரிகள்.

"என்ன கவிஞரே! இப்படியொரு மரண சோகமான சூழ்நிலையிலா பாட்டு எழுத வந்தீர்கள்?" என்று எம்.எஸ்.வி கண்கள் பனிக்கக் கேட்டார்.

அதற்குக் கண்ணதாசன் சிரித்துக்கொண்டே சொன்ன பதில், மனித குலத்தின் ஆகச்சிறந்த சைக்கியாட்ரி தத்துவம்:

“கூட்டத்தில் இருக்கும்போது சிரிக்க வேண்டும்; தனிமையில் மட்டுமே அழ வேண்டும்.”

ஏனெனில், கூட்டத்தில் அழுதால் உலகம் அதை நடிப்பு என்று சொல்லும்.

தனிமையில் சிரித்தால், இந்த உலகம் உங்களை பைத்தியம் என்று முத்திரையிடும்.

மனிதன் என்பவன் ஒரு விசித்திரமான விலங்கு. அவன் தன் துக்கங்களை ஒளித்து வைக்கப் பழகிக்கொள்கிறான். ஏனென்றால், இந்தச் சமூகம் சோகத்தை ஒரு பலவீனமாகவும், தத்துவத்தை ஒரு பொழுதுபோக்காகவும் மட்டுமே பார்க்கிறது.

கண்ணதாசன் தன் சொந்த வீட்டின் கதவுகள் மூடப்படும் தருவாயில், ஒட்டுமொத்த மனித குலத்தின் மனக்கதவுகளையும் திறக்கக்கூடிய ஒரு தத்துவப் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

நாமும் இன்று காரிலோ, டூவீலரிலோ போகும்போது அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே, "என்ன வரிடா!" என்று சிலாகித்துவிட்டு, அடுத்த சிக்னலில் யாரிடமாவது சண்டை போடக் கிளம்பிவிடுகிறோம்.

வாழ்க்கை அப்படித்தான். சிலர் சிரிப்பார்கள், சிலர் அழுவார்கள். கவிஞர்கள் மட்டும்தான் இரண்டுக்கும் நடுவில் நின்று கவிதை எழுதுவார்கள்!

*****

Saturday, 4 July 2026

ஏதென்ஸ் நகரின் மிட்நைட் ஸ்பெஷல்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 11

ஏதென்ஸ் நகரின் மிட்நைட் ஸ்பெஷல்!

ஏதென்ஸ் நகரில் ஒரு பங்களா.

டார்க் வெப்பில் வரும் திகில் கதைகள் தோற்றுப்போகும் அளவுக்கு ஒரு மரணக் காம்பினேஷன்.

நடுராத்திரி.

கிறீச்... லொடலொட... என்று சங்கிலி இழுக்கும் சத்தம் கேட்கும்.

லோக்கல் ஏதென்ஸ்வாசிகள் பயந்து நடுங்கி, அந்தப் பக்கமே போவதை நிறுத்திவிட்டார்கள். ரியல் எஸ்டேட் மதிப்பு அதலபாதாளத்துக்குப் போய்விட்டது.

ஆனால், நம்ம தத்துவஞானி அதெனோடோரஸ் கொஞ்சம் வித்தியாசமான ஆள். "பேயாவது, பிசாசாவது... லாஜிக் இடிக்குதே!" என்று கையில் ஒரு விளக்கு, கொஞ்சம் எழுதுவதற்கான மெட்டிரியலுடன் அந்தப் பாழடைந்த வீட்டுக்குள் ஒற்றை ஆளாகக் குடியேறினார்.

மணி 12.00.

சுற்றுப்புறம் நிசப்தமாக இருந்தது. அதெனோடோரஸ் தனது தத்துவக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தார்.

திடீரென்று சத்தம்.

ஜல்... ஜல்... கரகர...

சத்தம் மெல்ல மெல்ல நெருங்கி, அவர் இருந்த அறைக்குள்ளேயே நுழைந்தது. நிமிர்ந்து பார்த்தார்.

அங்கே ஒரு கெஸ்ட்.

சாதாரண கெஸ்ட் இல்லை; சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ஒரு அக்மார்க் எலும்புக்கூடு!

நம்ம ஊர் ஆட்களாக இருந்தால் இந்நேரம் அலறி அடித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள். ஆனால் அதெனோடோரஸ் கூலாக, "ஒன் மினிட் பாஸ், இந்த சாப்டரை முடிச்சிட்டு வர்றேன்" என்பது போலச் சைகை காட்டிவிட்டுத் தொடர்ந்து எழுதினார்.

என்ன ஒரு நெஞ்சுரம்!

அந்த எலும்புக்கூடு கடுப்பாகி, தன் விரல்களால் சங்கிலியை ஆட்டி சத்தம் போட்டது. மெல்ல எழுந்து நின்ற தத்துவஞானி, விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு, "சரி, என்னதான் விஷயம்? லீட் பண்ணுங்க" என்றார்.

எலும்புக்கூடு முன்னால் நடக்க, அதெனோடோரஸ் பின்னால் போனார்.

வீட்டின் புழக்கடைத் தோட்டத்திற்குச் சென்ற அந்த உருவம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுவிட்டு திடீரென கற்பூரமாய் மறைந்தது.

பேய்கள் எங்கே மறைகிறதோ, அங்கே தான் க்ளைமாக்ஸுக்கான க்ளூ இருக்கும்!

அடுத்த நாள் காலை. அதெனோடோரஸ் சும்மா இருக்கவில்லை. லோக்கல் நகராட்சி ஆட்களைக் கூப்பிட்டு, அந்த இடத்தை தோண்டச் சொன்னார்.

அங்கே சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு மனித எலும்புக்கூடு இருந்தது!

யாரோ ஒரு துரதிர்ஷ்டசாலி, முறைப்படி அடக்கம் செய்யப்படாமல், சங்கிலியோடு புதைக்கப்பட்டிருக்கிறான்.

அவனது ஆன்மாதான் நோ அப்ஜெக்‌ஷன் சர்டிபிகேட் கிடைக்காமல் அலைந்துகொண்டிருந்தது.

அதெனோடோரஸ் உடனடியாக அந்த எலும்புகளுக்கு முறைப்படி செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்ய ஏற்பாடு செய்தார்.

மகாத்மாக்கள் முன்னிலையில் ஈமச்சடங்குகள் சுபமாக முடிந்தது.

அவ்வளவுதான்! அன்றோடு அந்த சங்கிலி சத்தமும் நின்றது,

எலும்புக்கூட்டின் விசிட்டிங்கும் நின்றது.

ஆன்மாவுக்கு மோட்சம் கிடைத்து, பேய் நிரந்தரமாக ஏதென்ஸை விட்டு எஸ்கேப்!

ஆசை, கோபம், அல்லது அநீதி என ஏதோ ஓர் அன்பினிஷ்ட் பிசினஸ்தான் மனிதனைப் பேயாக அலைக்கழிக்கிறது. அதைச் சரிசெய்துவிட்டால், பேயும் டாட்டா காட்டிவிட்டு கிளம்பிவிடும் போலிருக்கிறது.

*****

Friday, 3 July 2026

ஆவிகளுடன் ஒரு டீல்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 10

ஆவிகளுடன் ஒரு டீல்!

சீனர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலகத்திலேயே இரண்டு விஷயங்களுக்கு அவர்கள் ரொம்பப் பிரசித்தம்.

ஒன்று, எதைப்பார்த்தாலும் தின்றுவிடுவது அதாவது, நூடுல்ஸ் முதல் வௌவால் வரை.

இரண்டு, செத்துப் போன முன்னோர்களை ரொம்ப மதிப்பார்கள். அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என்று ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருப்பார்கள். அவர்களுக்கு மரியாதை செய்வதில் ஒரு சின்ன பிசிறு தட்டினாலும் சீனப் பேய்களுக்குக் கோபம் மூக்கின் மேல் வரும்.

அப்படித்தான் ஒரு சம்பவம்.

ஒரு சீனக் குடும்பம்.

அமைதியாகத்தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை.

திடீரென்று ஒரு நாள் வீட்டில் ஹாரர் சினிமா எபெக்ட்.

பாத்திரங்கள் உருள்கின்றன, விளக்குகள் அணைந்து எரிகின்றன.

பார்த்தால்...

ஒரு குட்டிப் பெண் பேய்!

குட்டிப் பேய் என்றாலும், டார்ச்சர் தாங்கவில்லை.

இரவெல்லாம் வீட்டில் ஒரே ரகளை.

அந்தக் குடும்பத் தலைவர் யோசித்தார். இதற்கெல்லாம் பயந்தால் காரியம் ஆகாது என்று ஒரு பிளான் போட்டார். ஒரு பெரிய சாக்குப்பையை எடுத்தார். அந்தப் பேயை எப்படியோ அமுக்கி, பைக்குள் போட்டு, சுருக்குக் கயிறு கட்டி, நேரே போய்க் கிணற்றில் ஒரு போடு போட்டார்.

அப்பாடா, தொல்லை தீர்ந்தது என்று கையைத் தட்டிக்கொண்டு வந்து படுத்தார்கள்.

மறுநாள் காலை.

சமையலறை.

அங்கே...

அதே சாக்குப்பை!

நனைந்த டவுசர் போல சொட்டச் சொட்ட நனைந்தபடி, ஹாயாக நின்றுகொண்டிருக்கிறது.

உள்ளே இருந்து ஹலோ சொல்கிறது அந்தப் பேய்.

கிணற்றில் போட்டது அப்படியே ரிட்டர்ன் பார்சல் ஆகியிருக்கிறது!

குடும்பத்திற்குப் புரிந்துவிட்டது.

இது சாதாரண கேஸ் இல்லை.

டெக்னிக்கலாகக் கையாள வேண்டும்.

சீனர்களின் அந்த முன்னோர் பாசம் அப்போதுதான் வேலை செய்தது.

இந்தப் பேய் ஏன் நம்மைத் துரத்துகிறது? இதற்கு என்ன வேண்டும்? என்று ஆராய்ந்தார்கள்.

அப்புறம்தான் மேட்டர் புரிந்தது.

அதற்குத் தேவை கொஞ்சம் அட்டென்ஷன், கொஞ்சம் மரியாதை!

உடனே ஒரு நல்ல மரக்கட்டையை எடுத்தார்கள். ஒரு தச்சர் கூட்டி வரப்பட்டார். அந்தப் பெண் பேயின் உருவத்தை அப்படியே தத்ரூபமாக அந்த மரக்கட்டையில் செதுக்கினார்கள். அதற்குப் பட்டுத் துணி உடுத்தி, மாலை போட்டு, ஊதுபத்தி ஏற்றி, அம்மா தாயே, நீயும் எங்கள் குடும்பத்து முன்னோர்களில் ஒருத்திதான் என்று பயபக்தியோடு கும்பிட்டார்கள்.

அவ்வளவுதான்!

மேடம் குஷியாகிவிட்டார்.

இதையல்லவா எதிர்பார்த்தேன்! என்பது போல ஒரு லுக் விட்டுவிட்டு, நிரந்தரமாக டிஸ்அப்பியர் ஆகிவிட்டாள்.

பேய்களுக்கும் மனிதர்களைப் போலத்தான் போலிருக்கிறது. கொஞ்சம் ஈகோ, நிறைய எதிர்பார்ப்பு. காசு, பணம் வேண்டாம்; நாலு பேர் மதித்து, ஒரு சிலை செதுக்கி மாலை போட்டால், பேயும் கூல் ஆகிவிடுகிறது!

*****

Thursday, 2 July 2026

புதிய வரி முறையில் கிடைக்கும் முக்கிய வரிச் சலுகைகள்!

புதிய வரி முறையில் கிடைக்கும் முக்கிய வரிச் சலுகைகள்!

புதிய வருமான வரி முறையில் கிடைக்கும் முக்கிய வரிச் சலுகைகள் குறித்த விவரங்களைக் கீழே காண்க.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.07.2026

1) மருத்துவம் மற்றும் போறியியல் சேர்க்கையில் நீட், ஜேஇஇ தேர்வு மதிப்பெண்களுடன் பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கும் 50 சதவீதம் முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

2) நீட் மறுதேர்வு முடிவுகள் சூலை 20 இல் வெளியாக உள்ளன.

3) தனியார் பள்ளிகள் உரிமம் பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

4) இந்தியாவில் ஜப்பானின் ஒத்துழைப்புடன் 1000 உயிரி எரிவாயு உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன.

5) மேற்காசியப் போரால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு 75,781 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டள்ளது.

Education & GK News

1) The Central Government is considering giving 50% weightage to public examination marks, alongside NEET and JEE scores, for admissions into medical and engineering courses.

2) The results of the NEET re-examination are scheduled to be released on July 20.

3) A new procedure requiring private schools to apply online for their licenses has come into effect.

4) 1,000 biogas production plants are set to be established in India with Japan's collaboration.

5) Indian oil companies have incurred a loss of Rs.75,781 crore due to the conflict in West Asia.

குளியலறைக்குள் ஒரு கொடூர சத்தம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 9

குளியலறைக்குள் ஒரு கொடூர சத்தம்!

பேய்க் கதைகள் நமக்கு புதிதல்ல. ஆனால், இன்றைக்கு நாம் பார்க்கப் போவது உலகப் புகழ்பெற்ற ஒரு கிளாசிக் ஹான்டிங்.

இதைச் சொன்னவர் சாதாரண ஆள் இல்லை. கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் புளூடார்க். அவர் வசித்த கேரோனியா  நகரத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

கதைக்குள் போவோம்.

டேமன்.

அவன்தான் கதையின் நாயகன்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரு கிரேக்கச் சிலை போல அத்தனை அழகு. துரதிர்ஷ்டவசமாக, அதே ஊரில் முகாம் இட்டிருந்த ஒரு ரோமானிய ராணுவ கேப்டனின் கழுகுப் பார்வை இவன் மேல் விழுந்தது.

அந்தக் கேப்டன் டேமனைத் தன் வழிக்குக் கொண்டு வர அநாகரிகமாக வற்புறுத்தினான். மிரட்டினான். அந்த பெடராஸ்டி மேட்டர்தான்.

டேமன் சாதாரண ஆள் இல்லை; அவனுக்குள் கோபக் கனல் கொழுந்துவிட்டு எரிந்தது.

போக்சோ சட்டங்கள் இல்லாத அந்த காலத்தில், தன் வயதொத்த சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டான்.

ஒரு நாள் நள்ளிரவு. ரோமானிய கேப்டன் தனியாக இருக்கும் சமயம் பார்த்து, டேமனும் அவன் நண்பர்களும் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு உள்ளே புகுந்தார்கள்.

கத்தி மின்னியது. ரத்தம் தெறித்தது. கேப்டன் அவுட்!

கொலை நடந்துவிட்டது. நகரம் கொந்தளித்தது.

ரோமானிய ராணுவத்தின் கோபத்திற்குப் பயந்து, கேரோனியா நகர மக்கள் டேமனையும் அவன் நண்பர்களையும் துரத்தினார்கள்.

டேமன் தப்பியோடி மறைந்து வாழ்ந்தான்.

நாட்கள் நகர்ந்தன.

ஊர் மக்கள் ஒரு தந்திரம் செய்தார்கள்.

"டேமன், நடந்தது நடந்துவிட்டது. உன்னை நாங்கள் மன்னித்துவிடுகிறோம். வா, சமாதானமாக ஆகி விடலாம்" என்று தூது அனுப்பினார்கள்.

அப்பாவி டேமன் அதை நம்பி ஊருக்குள் வந்தான்.

அன்று மாலை. அவன் அங்குள்ள ஒரு பொதுக் குளியலறையில் நிம்மதியாகக் குளித்துக் கொண்டிருந்தான்.

நீராவியும், வெந்நீரும் அவனைக் கிறங்கடித்திருக்க வேண்டும். திடீரென்று கதவுகள் உதைத்துத் திறக்கப்பட்டன.

கைகளில் ஆயுதங்களுடன் ஊர் மக்கள்!

நம்பிக்கைத் துரோகம்.

டேமன் தப்பிக்க வழியில்லாமல் அந்த ஈரமான தரையிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான். அவன் ரத்தம் அந்தப் பாதாளக் குளியலறையின் சுவர்களில் தெறித்து உறைந்தது.

அதன்பின்தான் விளையாட்டு ஆரம்பமானது.

டேமன் செத்துவிட்டான்.

ஆனால், அவன் ஆவி அந்த இடத்தை விட்டுப் போகவில்லை.

அவன் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே, அந்தப் பாழடைந்த குளியலறையிலிருந்து விசித்திரமான சத்தங்கள் கேட்கத் தொடங்கின.

ஆரம்பத்தில் அது ஒரு லேசான முனகலாக இருந்தது. போகப் போக, அது ஒரு மரண ஓலமாக, பயங்கரமான ஆக்ரோஷச் சத்தமாக மாறியது. நள்ளிரவில் அந்தப் பக்கமாகப் போனவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

ஊர் மக்கள் பயந்து நடுங்கினார்கள்.

வேறு வழியே இல்லாமல், அந்தப் பேய் குளியலறையின் வாசலை பெரிய கற்களைக் கொண்டு சுவர் எழுப்பி, அத்தோடு சீல் வைத்தார்கள்.

பூமிக்கு அடியில் டேமனின் ஆன்மா பூட்டி வைக்கப்பட்டது.

இதைத்தான், "நான் பிறந்து வளர்ந்த கேரோனியாவில் இன்றும் அந்தச் சத்தம் கேட்கிறது. சுவருக்குப் பின்னாலிருந்து யாரோ ஒருவன் வலியால் முனகும் சத்தத்தை என் காதுகளாலேயே கேட்டிருக்கிறேன்" என்று எழுதினார் புளூடார்க்.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், டேமன் இறந்து கிட்டத்தட்ட 200 வருடங்கள் கழித்து புளூடார்க் வாழ்ந்த காலத்திலும் அந்த முனகல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாம்!

இது நிஜமா? இப்படியும் நடக்குமா?

ஒரு மூடிய அறை அல்லது பாதாளக் குளியலறை என்பது ஒரு சிறந்த ரெசனன்ஸ் சேம்பர் போலச் செயல்படும். அதாவது, வெளியிலிருந்து வரும் மிகச் சிறிய சத்தத்தைக் கூட இந்த மூடிய அறை பல மடங்கு பெருக்கி வெளியேற்றும்.

காதுகளை மூடிக்கொண்டு சங்குக்குள் கேட்கும் சத்தத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அதே அகௌஸ்டிக் விதியின்படி, சுவருக்குள் சிக்கிய காற்று வெளியேறத் தவிக்கும் போது பயங்கரமான முனகல் சத்தம் கேட்டிருக்கலாம்.

என்றாலும், நீங்கள் நள்ளிரவில் அந்தச் சுவருக்குப் பக்கத்தில் தனியாக நிற்கும்போது, "டேமனின் ஆவிதான் அது" என்று மனம் சொல்வதை எந்த விதிகளாலும் தடுக்க முடியாது. அங்கேதான் மனதின் பயம் வேலை செய்கிறது.

சில மரணங்கள் எளிதில் கடந்து போவதில்லை. அவை சத்தமாக மாறுகின்றன!

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****