இலாபம் + இலட்சியம் = உலகை மாற்றும் மேஜிக்!
உலகம் ஓடிக்கொண்டிருப்பது லாபத்திற்காக மட்டும்தான்
என்று நினைத்தால் நீங்கள் அவுட் ஆப் டேட். இப்போது மார்க்கெட்டில் புது வரவுதான் சமூக
தொழில் முனைவோர். காசு பார்ப்பது ஒரு கண் என்றால், சமூகத்திற்கு நல்லது செய்வது இன்னொரு
கண்.
அர்ஜென்டினாவிற்குச் சுற்றுலா சென்ற பிளேக்
மைகோஸ்கி அங்கிருந்த குழந்தைகளின் வெறும் கால்களைப் பார்த்தார். அவருக்குத் தோன்றியது
ஓர் ஐடியா. ஒரு ஜோடி ஷூ வாங்கினால், இன்னொரு ஜோடி ஏழை குழந்தைக்கு இலவசம். பிசினஸில்
இது ஒன் பார் ஒன் மாடல். ஓர் அபார்ட்மெண்டில் ஆரம்பித்த இந்த ஐடியா, இன்று 625 மில்லியன்
டாலர் சாம்ராஜ்யம். லாபமும் நோக்கமும் கை கோர்த்தால் நடக்கும் அற்புதம் இது.
இதற்கெல்லாம் முன்பே பங்களாதேஷில் ஓர் அமைதிப்
புரட்சி நடந்தது. முகமது யூனுஸ் ஏழைகளுக்கு லோன் கொடுக்க அடமானமே வேண்டாம், என்றார்.
வங்கி அதிகாரிகள் சிரித்தார்கள். ஆனால் அவர் ஒரு சின்ன குழுவிற்கு தன் கைக்காசான
27 டாலரைக் கடனாகக் கொடுத்தார். இன்று கிராமீன் வங்கி 10 மில்லியன் பேருக்கு 37 பில்லியன்
டாலர் கடன் கொடுத்திருக்கிறது. 2006 இல் இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது ஒன்றும் ஆச்சரியமில்லை.
யூனுஸின் ஐடியாவை இன்டர்நெட்டுக்குக் கொண்டு
வந்தவர் ஜெசிகா ஜாக்லி. அவர் ஆரம்பித்த கிவா இணையதளத்தில் யாரிடமும் கேட்கத் தேவையில்லை.
உங்கள் கையில் 25 டாலர் இருந்தால் போதும், உலகின் ஏதோ ஒரு மூலையில் தொழில் தொடங்கக்
காத்திருக்கும் ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுக்கலாம். இது தானம் இல்லை, கடன். அவர்
திருப்பித் தரும்போது உங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் பாருங்கள், அதுதான் கிவா
மற்றும் உங்கள் மகிழ்ச்சிக்கான அல்வா!
அன்பு என்பது சளி பிடிப்பது மாதிரி என்கிறார்கள்
அன்பின் அனுபவவாதிகள். ஆனால் இது பாசிட்டிவ் வைரஸ். அதன் ரிசல்ட் எப்படியெல்லாம் இருக்கிறது
தெரியுமா?
யாராவது நமக்கு ஒர் உதவி செய்தால், மூளையில்
ஆக்ஸிடாசின் மற்றும் டோபமைன் சுரக்கும்.
அன்பு ஒரு செயின் ரியாக்சன் போலப் பரவும்.
ஒரு நற்செயலை நீங்கள் நேரில் பார்த்தால் கூட
உங்கள் எனர்ஜி லெவல் எகிறும். அடுத்தவருக்கு உதவத் தோன்றும்.
அன்பினால் உதவி செய்து அப்படி ஹீரோவானவர்கள்
நிறைய பேர். இவர்கள் ரீல் ஹீரோக்கள் அல்ல, ரியல் ஹீரோக்கள். யார் அவர்கள் என்கிறீர்களா?
முதலாமவர் பில் டிரேட்டன். இவர்தான் சோஷியல்
ஆன்டர்ப்ரனர் என்ற வார்த்தையையே கண்டுபிடித்தவர். அசோகா அமைப்பு மூலம் உலகெங்கும் உள்ள
ஐடியாவாதிகளுக்குத் தூணாக இருக்கிறார்.
இரண்டாமவர் மார்க் கோஸ்கா. ஒருமுறை மட்டுமே
பயன்படுத்தக்கூடிய கே1 சிரிஞ்சை கண்டுபிடித்தார். மாசுபட்ட ஊசிகளால் பரவும் நோய்களிலிருந்து
10 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.
மூன்றாமவர் ரேச்சல் பிராதென். வெறும் யோகா
வீடியோக்கள் மட்டும் போடாமல், சமூக வலைத்தளம் மூலம் யோகா கேர்ள் அறக்கட்டளை தொடங்கி
அருபா தீவின் பெண்களுக்கு உதவுகிறார்.
இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். உங்கள்
ஊரிலும் இருப்பார்கள்.
அன்பு என்பது ஒரு ஸ்பார்க். அது ஓர் அறையையே
வெளிச்சமாக்கும் சக்தி கொண்டது. அறையை மட்டுமல்ல, உலகையையேயும்தான்.
பிசினஸ் மூளையும், சமூக அக்கறையும் சேர்ந்தால்
உலகம் இன்னும் அழகாகும். அடுத்த முறை யாரிடமாவது அன்பாக இருக்கும்போது நினைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு பெரிய சங்கிலியின் முதல் கன்னி!
திருவள்ளுவரும் அதையேத்தானே சொல்கிறார், அன்பிற்கும்
உண்டோ அடைக்கும் தாழ் என்று.
*****






