Monday, 10 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.08.2026

1) பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

2) எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

3) தமிழக அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

4) ஆகஸ்ட் 16 வரை தமிழகத்தில் மித மழைக்கு வாய்ப்புள்ளது.

5) தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 111 பேர் உயிரிழந்தனர்.



Education & GK News

1) A resolution to accord priority to the 'Tamil Thai Vazhthu'  at public events was unanimously passed in the Legislative Assembly.

2) The rank list for MBBS and BDS courses has been released.

3) Applications for M.Ed. admission in government colleges of education in Tamil Nadu can be submitted starting today.

4) There is a possibility of moderate rainfall in Tamil Nadu until August 16.

5) 111 people lost their lives in a powerful earthquake that struck the South American country of Colombia.

உடலுக்கு வெளியே ஒருவன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 48

உடலுக்கு வெளியே ஒருவன்!

நள்ளிரவு 2:15.

மேஜையில் இருந்த டிஜிட்டல் கடிகாரம் எண்களை மாற்றிக் கொண்டிருந்தது. கருணாகரன் கண்களை மூடிப் படுத்திருந்தான். சுற்றிலும் ஒரே அமைதி. அவன் தூங்கவில்லை. ஆஸ்ட்ரல் டிராவல் அதாவது உடலை விட்டு ஆன்மா வெளியேறும் கலையைப் பற்றி இணையத்தில் படித்த மூன்றாம் நாள் அது.

முதுகெலும்பை நேராக வைத்து, மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து வெளிவிட்டான்.

10... 9... 8...  உடலின் ஒவ்வொரு பாகமும் தளர்வடைகிறது

... 3... 2... 1.

திடீரென்று ஒரு லேசான அதிர்வு. காதில் வண்டுகளின் ரீங்காரம் போல ஒரு சத்தம். கருணாகரனுக்குத் தலைச்சுற்றியது.

அடுத்த வினாடி. அவன் கூரையை நோக்கி மிதந்து கொண்டிருந்தான்!

கீழே பார்த்தான். கட்டிலில் கருணாகரன் படுத்திருந்தான். அதே வெளிர் நீல நிற சட்டை, அடர் நீல நிற கைலி. லேசாகத் திறந்திருந்த வாய்.

"அடேங்கப்பா, வொர்க் அவுட் ஆயிடுச்சு!" கருணாகரன் மனதுக்குள் மட்டற்ற மகிழ்ச்சி.

தான் உடலை விட்டு வெளியே வந்துவிட்டதை அவனால் நம்ப முடியவில்லை. கூரையைத் தொட்டுப் பார்த்தான். கை கூரைக்குள்ளே ஊடுருவிச் சென்றது. புவியீர்ப்பு விசை இல்லை. எடையில்லை.

"சரி, அடுத்து எங்கே போகலாம்? பிஇஓ ஆபிஸ்? சிஇஓ ஆபிஸ்? சென்சஸ் எடுக்கப் போகும் ஏரியா?"

யோசித்து முடிப்பதற்குள், மனதின் வேகத்தில் அவன் ஜன்னலைக் கடந்து காற்றில் மிதந்தான். தெரு விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத்தில் கொரடாச்சேரி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. கொரடாச்சேரி பாலத்தைக் கடந்து, குடவாசல் பக்கம் பறப்பது ஓர் அசாத்திய சுகத்தைக் கொடுத்தது.

திடீரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது. ஹெட் மாஸ்டர் வீடு பக்கம் போனால் என்ன? அவர் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர். அதில் தன்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்து விட வேண்டும் என்று தோன்றியது.

அடுத்த நொடி ஹெட்மாஸ்டர் படுக்கையறைக்குள் மிதந்தான். அவர் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். மேஜையில் அவர் எழுதிய டைரியை மூடாமல் அப்படியே தூங்கிப் போயிருந்தார்.

அவர் எழுதியிருப்பதைக் கருணாகரன் படிக்க ஆரம்பித்தான்.

"கருணகரனுக்கு பெர்மான்ஸ் போதாது. ஆவரேஜ். நாளை டிஎன்எஸ்இடி ஸ்கூல் ஆப்பில் ஆவரேஜ் பெர்மான்ஸ்தான் போட வேண்டும்."

"என்னது? ஆவரேஜா? ராப்பகலா கஷ்டப்பட்டு நோட்ஸ் எழுதி, பக்காவா எய்ட் தயார் பண்ணி கிளாஸ் எடுத்தா ஆவரேஜா? பெர்மான்ஸ் போதாதா? இதுக்கு மேல என்னடா பெர்மான்ஸைப் பண்ணுறது?" கருணாகரனுக்குக் கோபம் தலைக்கேறியது.

அந்த நாட்குறிப்பைத் தூக்கி எறிய கையை நீட்டினான். ஆனால், அவன் கை காற்றைத்தான் துளைத்தது. நுண் உடலால் பௌதிகப் பொருட்களைத் தொட முடியாது என்ற விதி நினைவுக்கு வந்தது.

சரி, ஹெட்மாஸ்டரைப் பயமுறுத்தலாம் என்று அவர் காதருகே போய் "யோவ் ஹெச்எம் என்னய்யா எழுதி வெச்சிருக்கே என்னைப் பற்றி?" என்று கத்தினான். ஆனால் ஒலி அலைகள் வரவில்லை.

ஹெட் மாஸ்டர் லேசாக உடலைத் திருப்பிப் போட்டுவிட்டு, "ம்ம். தேங்காய் சட்னி போதும். கார சட்னியைக் கொஞ்சம் வையுடி. எல்லாமே சப்புன்னு இருக்குடி" என்று தூக்கத்திலேயே புலம்பினார்.

கருணாகரனுக்குச் சிரிப்பு வந்தது, அதே சமயம் வெறுப்பாகவும் இருந்தது. "இந்த ஆன்மா பயணத்துல ஒரு பிரயோஜனமும் இல்லை. திரும்ப உடம்புக்கே போக வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டான்.

திரும்பவும் தன் வீட்டை நோக்கி மனதால் பயணித்தான்.

அவன் அறைக்கு வந்தான். கட்டிலில் அவன் உடல் படுத்திருந்தது.

ஆனால்,

அவன் உடலின் நெஞ்சின் மீது அவனது வளர்ப்புப் பூனை டைகர் உட்கார்ந்து கொண்டு, கருணாகரனின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. பூனைகளுக்கு நுண் உருவங்கள் தெரியும் என்பார்கள். டைகர் மிதந்து கொண்டிருந்த கருணாகரனைப் பார்த்து லேசாக "மியாவ்" என்றது.

"டேய் டைகர், நகருடா. நான் உள்ள போகணும்!"

டைகர் அசையவில்லை. கருணாகரனின் மூக்கின் மீது தன் வாலை வைத்து ஆட்டியது. உடம்புக்குள் செல்ல வழி தெரியாமல் கருணாகரன் காற்றில் தவித்தான். பூனை காலை எடுத்து வைத்தால்தான் ஆன்மா உள்ளே நுழைய முடியும்.

"ஐயோ, பொண்டாட்டி காலையில வந்து காபி குடுக்கறப்போ நான் பிணமா கிடந்தா என்ன பண்றது?" கருணாகரனுக்குப் பீதி தொற்றிக்கொண்டது.

கருணாகரன் உடலுக்குள் நுழைந்து விடுவானா?

உடலுக்குள் நுழையா விட்டால் கருணாகரனின் நிலை என்னவாகும்?

நாளை பார்ப்போம்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Sunday, 9 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.08.2026

1) 2035க்குள் இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் அறிவித்துள்ளார்.

2) சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

3) கொச்சியில் இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

4) தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) ஹோர்முஸ் நீர்ச்சந்தியை திறந்து விட அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

Education & GK News

1) The ISRO Chairman has announced that India will establish its own space station by 2035.

2) The Chief Justice administered the oath of office to 15 newly appointed judges of the Madras High Court.

3) A joint naval exercise involving the Indian and US navies has commenced in Kochi.

4) The Meteorological Department has stated that light to moderate rain is likely in some parts of Tamil Nadu today.

5) Iran has imposed new conditions on the US for opening the Strait of Hormuz.

பேனாவுக்கு ஏன் பேய் பிடிக்கிறது?

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 47

பேனாவுக்கு ஏன் பேய் பிடிக்கிறது?

நள்ளிரவு ஒரு மணி. அறையில் மெல்லிய வெளிச்சம். பேப்பரில் கை வைத்திருக்கிறீர்கள். திடீரென்று உங்கள் கை உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி நகரத் தொடங்குகிறது. கிறுக்கல்கள். அப்புறம் தெளிவான வார்த்தைகள், "நான் ஜகன்மோகினி. 1850 இல் இறந்தேன்." என்று அணிவகுக்கின்றன.

உங்கள் முதுகெலும்பில் இப்போது சில்லென்று ஒரு குளிர் இறங்குகிறதா?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இதுதான் மிகப்பெரிய பேன்டஸி. ஆவிகளோடு பேசுகிறோம் என்று சொல்லி மேசைகளை நகர வைப்பது, பேனா தானாக எழுதுவது, அப்புறம் டேப் ரெக்கார்டர் கேஸெட்டுகளில் ஆவிகளின் குரலைக் கேட்பது என ஆனானப்பட்ட அமெரிக்காவும் ஐரோப்பாவும் அமளிதுமளிபட்டது.

உண்மையிலேயே ஆவிகள் வந்து எழுதுகின்றனவா?

அல்லது நமது மூளை நம்மிடம் விளையாடும் நுட்பமான ட்ரிக்கா?

கொஞ்சம் அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வில்லியம் கார்பெண்டர் என்ற அறிவியலாளர் இதை மிகத் தெளிவாக விளக்கினார். நாம் ஒரு விஷயத்தை ஆழமாக நம்பும் போது அல்லது எதிர்நோக்கும் போது, நமது மூளை நமது தசைகளுக்கு மிகச்சிறிய, நமக்கே தெரியாத அசைவுகளைக் கட்டளையாக அனுப்புகிறது.

பேப்பரில் கை வைக்கும்போது, ஆவி வருமா? என்ற தீவிரமான எதிர்பார்ப்பில் உங்கள் ஆழ்மனம் விரல்களை லேசாக நகர்த்துகிறது. கை நகர்வது உண்மையிலேயே உங்கள் விழிப்புணர்விற்குத் தெரியாது. "நான் நகர்த்தவே இல்லை, ஆவிதான் எழுதுகிறது" என்று நீங்கள் சத்தியம் செய்வீர்கள். ஆனால், அது முழுக்க முழுக்க உங்கள் சொந்த ஆழ்மனதின் லீலை!

மேசை நகர்வதும் இதே கதைதான். நான்கு பேர் சேர்ந்து கையை வைக்கும்போது, ஒவ்வொருவரின் நுட்பமான அழுத்தமும் சேர்ந்து மேசையைத் தள்ளத் தொடங்கி விடும்.

வாய்ஸ் ரெக்கார்டர் கேஸெட் கதைகள் இன்னும் சுவாரசியமானவை. வெறும் ரேடியோ இரைச்சல் அல்லது காற்றுச் சத்தத்தைப் பதிவு செய்துவிட்டு, ஹெட்போனில் உற்றுக் கேட்பார்கள். அதில் "ஹலோ" என்றோ "காப்பாற்று" என்றோ குரல் கேட்கிறது என்பார்கள்!

இதற்குப் பெயர் ஆடிட்டரி பாரைடோலியா. மேகத்தைப் பார்த்தால் யானை போலவோ, பூனை போலவோ தெரியும் அல்லவா! அதே மனோதத்துவம்தான் ஒலியிலும் நடக்கிறது. தெளிவில்லாத சத்தங்களைக் கேட்கும்போது, நமது மூளை குழப்பமடைய விரும்பாது. தனக்கு முன் பரிச்சயமான ஒரு வார்த்தையை அந்தச் சத்தத்தில் வலுக்கட்டாயமாகப் பொருத்திப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்.

மனித மனதின் அறியப்படாத ஆழமும், நமது மூளையின் விசித்திரமான செயல்பாடுகளும்தான் இந்த ஆவி நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கும் நிஜமான மேஜிக்.

அடுத்த முறை பேனா தானாக நகர்ந்தால் பயப்பட வேண்டாம். உங்கள் ஆழ்மனதின் கிரியேட்டிவிட்டிக்கு மனதார ஒரு தேங்க்ஸ் சொல்லுங்கள்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 8 August 2026

அமானுஷ்யங்களின் வேதியியல்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 46

அமானுஷ்யங்களின் வேதியியல்

மனோகரின் இதயம் சீரற்ற முறையில் துடிக்கத் தொடங்கியது. கதவு தானாகப் பூட்டிக்கொண்டதும், வினோத்தின் குரல் மாறியதும் அவனுக்குள் மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தின.

ஆனால், மனோகரின் அறிவியல் மூளை சட்டென்று விழித்துக் கொண்டது.

அவன் கைகள் நடுங்கினாலும், சட்டென்று தன் டிஜிட்டல் வாட்சைப் பார்த்தான். அதில் ஆக்சிஜன் அளவு மற்றும் அறையின் காற்றுத் தரம் காட்டும் டிஜிட்டல் மீட்டர் இருந்தது.

அறையின் கார்பன் மோனாக்சைடு அளவு அபாய கட்டத்தைத் தாண்டி சிவப்பு நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது!

மனோகர் சட்டென்று டேபிள் லைட்டை எடுத்து, சுவரில் இருந்த பழைய ஏசி வென்ட்டை நோக்கி அடித்தான். அங்கே அடைபட்டிருந்த பழைய மரக்கட்டைகளில் இருந்து லேசான புகை ஆவியைப் போல வந்துகொண்டிருந்தது.

அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது!

"வினோத்! மூச்சை நல்லா இழுத்து விடுடா!" மனோகர் கத்தினான்.

"என்னடா சொல்ற? நான் நாராயணன்டா!" வினோத் இன்னும் அதே கம்பீரக் குரலில் பேசினான்.

"நாராயணனும் இல்லை, ஒரு மண்ணும் இல்லை! இந்த ரூம்ல கார்பன் மோனாக்சைடு கேஸ் லீக் ஆகுது. அதோட சேர்ந்து, இந்த பழைய மரத்துல வளர்ந்திருக்கிற ஒரு வகையான காளான் காற்றில் கலந்திருக்கு. அது மனித மூளையில கடுமையான ஒலிக்காட்சி பிரமைகளை உருவாக்கும்!"

மனோகர் வேகமாக ஓடிச் சென்று, அறை ஜன்னலின் கண்ணாடியை அருகிலிருந்த நாற்காலியால் அடித்து உடைத்தான்.

சில்லென்ற வெளிக்காற்று அறைக்குள் பாய்ந்தது.

கார்பன் மோனாக்சைடு நச்சு வாயுவும், அந்த ரசாயனக் காற்றும் வெளியேறத் தொடங்கின. அடுத்த சில வினாடிகளில், வினோத் லேசாக தலைசுற்றி கீழே விழுந்தான். சிறிது நேரத்தில் விழுந்த அவனது கண்கள் இயல்பு நிலைக்கு வந்தன. "மனோ! தலை பயங்கரமா வலிக்குதுடா. என்ன ஆச்சு?"  அவன் தன் சொந்தக் குரலில் கேட்டான்.

மனோகர் கேமராவை எடுத்துப் பார்த்தான். வீடியோவில் பேனா காற்றில் பறக்கவே இல்லை! அது டேபிளிலேயேதான் கிடந்தது.

கார்பன் மோனாக்சைடு நஞ்சால் மனோகரின் மூளை அடைந்த தற்காலிகப் பிரமையில்தான், பேனா பறப்பது போலவும், வினோத்தின் கண்கள் கருப்பாவது போலவும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது!

அதேபோல, வினோத்தின் ஆழ்மனதில் எப்போதோ கேட்ட நாராயணன் என்ற பெயர், வாயுவின் தாக்கத்தால் வெளிவந்து, அவன் தொண்டைத் தசைகளைச் சுருங்கச் செய்து குரலை மாற்றியிருக்கிறது.

"பார்த்தியா வினோத்!" மனோகர் மூச்சு வாங்கியபடிச் சொன்னான், "ஆவி, பேய்னு நாம நினைக்கிற 90% சம்பவங்களுக்குப் பின்னாடி, இதுபோல ஏதாவது ஒரு ரசாயன மாற்றமோ அல்லது மூளையோட பிரமையோதான் இருக்கும். அறிவியலுக்குத் தெரியாத ஆவி எதுவும் வெளியே இல்லை!"

வெளியே உடைந்த ஜன்னல் வழியாக நிலவு வெளிச்சம் அறையை நிறைத்தது. அறிவியலின் வெளிச்சம் போல!

இப்போது மேட்டருக்கு வர வேண்டுமே. வரலாறு முக்கியம் பாஸ். அந்த தாறுமாறு தக்காளிச் சோறு வரலாறு நாளைக்கு!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Friday, 7 August 2026

ஆவி கேமரா ஆக்சன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 45

ஆவி கேமரா ஆக்சன்!

கோனேரிராஜபுரத்தின் பழமையான அந்த வீட்டின் அறையின் காற்றில் ஒருவித ஈரமான மரத்தின் வாசனை. டேபிளின் நடுவே ஒரு வெள்ளைச் காகிதம், அதன் மேல் பளபளக்கும் ஒரு பவுண்டைன் பேனா.

நேரம் நள்ளிரவு 12:15.

எதிரில் அமர்ந்திருந்த வினோத் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தான். "மனோ! வேணாம்டா. ஆட்டோமேட்டிக் ரைட்டிங் பண்ணி ஆவியை வரவழைக்கறது ஆபத்து. உண்மையிலேயே ஏதோ ஆவி வந்துடுச்சுனா என்ன பண்றது?"

மனோகர் லேசாகச் சிரித்தான். "பயப்படாத வினோத்! ஆவியும் இல்லை, பேயும் இல்லை. நம்ம மூளையோட ஐடியோ மேட்டர் என்கிற ஒரு மனோதத்துவ விளையாட்டுதான் இது," என்றபடி, டேபிளின் ஓரத்தில் தன் ஹை டெக் கேமராவை ஆன் செய்து ஸ்டாண்டில் பொருத்தினான்.

இருவரும் கைகளை லேசாகப் பிடித்துக்கொண்டு, ஆள்காட்டி விரலை மட்டும் பேனாவின் மீது வைத்தார்கள்.

"ஆவி கேமரா ஆக்சன். யாராவது ஆவி இருந்தா, தயவுசெய்து இந்த பேனா மூலமா எழுதுங்க." வினோத் குரல் தழுதழுத்தது.

அறையில் ஏசி சத்தம் தவிர வேறு சத்தமில்லை.

ஐந்து நிமிடங்கள் அமைதி.

பிறகு அது நடந்தது.

பேனா லேசாக அதிர்ந்தது. காகிதத்தின் மீது கோடுகள் நகரத் தொடங்கின. வினோத்தின் கண்கள் விரிந்தன. அவனது கை அவனையும் அறியாமல் பேனா பிடித்து எழுதத் தொடங்கியது. அது எழுதியது,  நா-ரா-ய-ண-ன்.

"இது என் தாத்தாவோட பேருடா! 1998ல இறந்துட்டார்!" வினோத் கத்தினான்.

பேனா நிறுத்தாமல் தொடர்ந்து எழுதியது. "நாராயணன் ஒரு கொலையாளி. அவன் இப்போது அறைக்குள்ளேயே உன்னைக் கொல்லப் போகிறான்."

வினோத் அலறி அடித்துக்கொண்டு கையைப் பின்னுக்கு இழுத்தான். பேனா கீழே விழுந்தது.

மனோகர் லேப்டாப்பைத் திறந்து சாவதானமாக கூறினான். "ரிலாக்ஸ் வினோத். உன் ஆழ்மனசுல உன்னோட தாத்தா பத்தின ஏதோ ஒரு பயம் இருக்கு. அதான் உன் விரல்கள் உனக்கே தெரியாம நுட்பமா அசைஞ்சு அப்படி எழுதியிருக்கு. ஆவி வெளியில இருந்து வரல, உன் மூளைக்குள்ள இருந்து வந்திருக்கு. அதான் சயின்ஸ். அவ்ளோதான். வா கிளம்பலாம்."

மனோகர் கேமராவை ஆப் செய்யப் போனவன், திருப்திக்காக அதில் பதிவான வீடியோவை ப்ளே செய்து பார்த்தான்.

அடுத்த நொடி, மனோகரின் உடம்பில் ரத்தம் உறைந்துபோனது.

கேமரா ஜூமில் தெளிவாகத் தெரிந்தது, பேனா எழுதிய அந்த ஐந்து நிமிடங்களும், வினோத்தின் விரல்கள் காகிதத்தை விட இரண்டு அங்குலம் உயரத்தில், காற்றில் அசைவேயில்லாமல் நின்றுகொண்டிருந்தன.

வினோத்தின் கைகள் பேனாவைத் தொடவே இல்லை! பேனா மட்டுமே தானாக இயங்கியிருந்தது.

மனோகரின் தலை மெதுவாக நிமிர்ந்தது. எதிரில் வினோத் அமைதியாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் முற்றிலும் கருப்பாக மாறியிருந்தன. அவனது குரல் ஒரு 80 வயதுக் கிழவனின் கம்பீரமான குரலாக மாறியிருந்தது.

"ஐடியோமோட்டர் எபெக்ட். நல்ல தியரிதான் மனோகர். ஆனா, உன் நண்பன் வினோத்தோட ஆழ்மனசுக்கு நாராயணன் யாருன்னு தெரியாதே? ஏன்னா, அவன் தாத்தா பேரு விஸ்வநாதன்! 1950ல இந்த அறையில ஒருத்தனைக் கொலை பண்ணின நாராயணன் நான்தான்!"

மனோகர் அதிர்ச்சியில் பேச்சற்று நிற்க, அறையின் கதவு தானாக டப்பென்று பூட்டிக்கொண்டது.

சுவரில் இருந்த மின்விளக்குகள் விட்டு விட்டு எரியத் தொடங்கின.

கீழே கிடந்த அந்தப் பேனா, மீண்டும் மெதுவாகக் காற்றில் உயர்ந்து நிமிர்ந்து நின்றது.

எழுத்தாளர்கள் பேனா பிடிப்பது ஊரறிந்த கதை. ஆனால், ஆவிகள் பேனா பிடிப்பது?

கன்பார்மாக வந்தது ஆவிதானா? அல்லது இதுவும் ஒரு டுபாக்கூர் மூவிதானா?

அப்புறம், ஆவிகள் இப்படியெல்லாம் கையெழுத்து பயிற்சி எடுத்துக் கொள்வது ஏன்?

நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

ஆவியே வருக! வருக!!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 44

ஆவியே வருக! வருக!!

மன்னார்குடி, தமிழரசன் வீட்டில் நடந்தது என்ன?

மாரியப்பன் தாத்தா உண்மையில் ஆவியாக வந்து விசிட் செய்தாரா?

அப்படி ஆவியாக வந்து அவர்தான் அந்த டாக் ஷோவை நடத்தினாரா?

அதற்கு முன் நாம் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்கிற்குப் போக வேண்டும்.

தமிழரசனின் அண்ணன் அருளரசன். அவர் அண்மையில்தான் தமிழரசனின் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்த அமானுஷ்ய வேலை செட்டப் அனைத்தும் அவரது மெக்கானிக்கல் என்ஜினியரிங் வேலைதான். அவர் ஒரு மெக்கானிக்கல் மற்றும் சாப்ட்வேர் என்ஜினியர்.

இப்போது கேள்வி என்னவென்றால், அந்த ஐந்து பவுன் சங்கிலியை அவர் நேரடியாகவே கொடுத்திருக்கலாமே. அதற்கு ஏன் இப்படி ஓர் அமானுஷ்ய செட்டப் செய்ய வேண்டும்?

அதற்கு நாம் இப்போது அந்தச் சின்ன ப்ளாஷ்பேக்கைத் தாண்டி, ஒரு பெரிய ப்ளாஷ்பேக்கிற்குப் போக வேண்டும்.

அது நடந்தது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக.

மாரியப்பன் தாத்தா தனது அந்திம காலத்தில், மரணப் படுக்கையில் படுத்திருந்த போது அருளரசனைத் தனியாக அழைத்து அந்த ஐந்து பவுன் சங்கிலியைக் கொடுத்து விட்டு, இதை யாரிடமும் சொல்லி விட வேண்டாம் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு மறைந்து விட்டார்.

மாரியப்பன் தாத்தா மறைந்தாலும், அந்த ஐந்து பவுன் சங்கிலி மேட்டர் மட்டும் தமிழரசன் குடும்பத்தில் மறையாமல், அதைத் தேடும் வேட்டை சுமார் நாற்பது ஆண்டுகளாக நடந்து வந்தது.

அருளரசனும் தாத்தாவுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தால் அந்த ஐந்து பவுன் மேட்டரைத் தாத்தாவின் நினைவையே பாஸ்வேர்டாகப் போட்டு, மனதுக்குள்ளே லாக்கப் செய்து வைத்திருந்தார்.

அண்மையில் தமிழரசன் வீட்டுக்கு அவர் வந்த போது, ஜெயந்தி அந்த ஐந்து பவுன் சங்கிலியைத் தாத்தாவின் நினைவாக வைத்துக் கொள்ள விரும்பி, ஆவி பிடிப்பவர்கள் வரை இறங்கி, அதைக் கண்டுபிடிக்க தீவிரமாக இருந்ததை அறிந்து கொண்டார்.

உண்மையைச் சொல்லி அதை நேரடியாகக் கொடுத்தால், தாத்தா கொடுத்தது உங்களுக்குத்தானே, அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழரசனும் ஜெயந்தியும் சொல்லி விட வாய்ப்புண்டு.

ஆகவேதான் அருளரசன் ஜெயந்தியின் போக்கிலேயே சென்று, தாத்தாவின் ஆவியே தங்கச் சங்கிலியைக் கண்டுபிடித்துத் தருவதைப் போல, அந்தத் தேக்குமர மேஜையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜியனரிங் வேலையைச் செய்து வைத்திருந்தார்.

அதன்படி மேசையைப் பலம் கொண்ட மட்டும் தள்ளினால் மரப் பலகை லேசாக விலகி, உள்ளே இருந்து ஒரு பழைய டைரியும், அதனுடன் ஒரு சிறிய தங்கச் சங்கிலியும் வெளியாகும். அதுவெளியான உடனே, டேப் ரிக்கார்டர் இயங்கும்.  அப்படி அது இயங்கும் வகையில் அதற்கு ஒரு பேட்டரி போட்டு ஒரு செட்டப் வேலையைச் செய்து வைத்திருந்தார் அருளரசன். அதற்கேற்ப தாத்தாவின் குரலை ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸில் உருவாக்கி, இந்த டிஜிட்டல் காலத்திலும் ஆவிக்கு ஒரு ரியலிஸ்டிக் செட்டப்பைக் கொடுக்கும் வகையில், அதை டேப் ரிக்கார்டர் கேஸெட்டில் பதிவு செய்து வைத்திருந்தார்.

ஆக வந்தது தாத்தாவின் ஆவியும் அல்ல. பேசியது ஆவியின் குரலும் அல்ல. எல்லாம் அருளரசனின் என்ஜினியரிங் கெட்டப்பில் உருவான செட்டப் வேலைகள்.

ஆக விசயம் இதுதான். மனிதன் அறிவியலால் விளக்க முடியாததைப் பேய் என்கிறான். ஆனால், கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்தால், அங்கே பேய் இருக்காது, ஒரு மெக்கானிக்கல் என்ஜியனியரிங்கும், மனித அறிவின் புத்திசாலித்தனமும் மட்டுமே இருக்கும்! இப்போதுள்ள உள்ள காலத்தில் அதில் கூடுதலாக ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவும் சேர்ந்திருக்கும். அவ்வளவுதான் விசயம்.

இப்போது மேட்டருக்கு வருவோம். இது வெறும் மன்னார்குடியில் மட்டும் நடந்த சம்பவம் அல்ல.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அப்போது இதுதான் லேட்டஸ்ட் பேஷன். பிரபுக்கள் வீட்டு வரவேற்பறை முதல் எளிய மனிதர்களின் சமையலறை வரை சீயான்ஸ் என்ற பெயரில் ஆவி அழைக்கும் பார்ட்டிகள் பிய்த்துக் கொண்டு போயின.

மாலை நேரங்களில் டீ குடிக்கிறீர்களா? என்பதற்குப் பதிலாகக் கொஞ்சம் ஆவிகளோடு அரட்டை அடிக்கலாமா? என்று கேட்கும் அளவுக்கு நாகரிகக் கூத்தாக அது மாறியது.

அறிவியலும் மூடநம்பிக்கையும் சந்தி சந்தியாகக் கை கோத்துத் திரிந்த ஒரு விசித்திரமான காலம் அது.

நாற்காலியில் அமர்ந்து நடுவில் கைகளைக் கோத்துக்கொண்டால் போதும், கொஞ்ச நேரத்தில் மேஜை ஆடும். டக் டக் எனச் சத்தம் கேட்கும். ஒரு டக் சத்தத்துக்கு ஆம் என்றும், இரண்டு டக் சத்தத்துக்கு இல்லை என்றும் அர்த்தம். செத்துப் போன தாத்தாவிடம் "சொத்து எங்கே வச்சிருக்கீங்க?" என்று எஸ்.எம்.எஸ் அனுப்புவது போலக் கேள்வியும் கேட்கலாம்.

அத்துடன் ஆவிகளைத் தொடர்பு கொள்ள மீடியம் என்றொரு இடைத்தரகர் தேவைப்பட்டார். பெரும்பாலும் பெண்களே இதில் எக்ஸ்பெர்ட்டாக இருந்தார்கள். இருட்டறையில் திடீரென வாயில் இருந்து துணி போன்ற எக்டோபிளாசம் வரவழைப்பது, காற்றில் பெல் அடிப்பது என இவர்களின் மேஜிக் ஷோக்கள் அப்போது பட்டையைக் கிளப்பின.

அப்போது மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானி, "தம்பி, நீங்களாகத்தான் மேஜையைத் தள்ளுகிறீர்கள், தட்டுகிறீர்கள்.  உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் தசை இயங்குகிறது" என்று உண்மையை உடைத்துப் போட்டார்.

ஆனால், உலகம் நம்ப வேண்டுமே.

இதிலும் ஒரு வரலாற்று நகைமுரண் உண்டு.

ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிய ஆர்த்தர் கோனன் டாய்ல் கூட இந்த ஆவி ஆட்டத்தில் தீவிர நம்பிக்கையாளராக இருந்தார்; ஆனால் மாயாஜாலக்காரர் மற்றும் சர்க்கஸ் சாகசக்காரரான ஹூடினி இவர்களின் ட்ரிக்குகளை ஒவ்வொன்றாகப் போட்டுடைத்தார்.

ஆக மேட்டர் இதுதான்.

மனிதனுக்குச் சாவின் மீது எப்போதுமே ஒரு பயமும், அதைக் தாண்டி என்ன இருக்கும் என்ற தீராத ஆர்வமும் உண்டு. அந்தப் பலவீனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டதுதான் இந்த சீயான்ஸ் கலாச்சாரம்.

தொழில்நுட்பம் வளராத காலத்தில் இருட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடந்த இந்த விளையாட்டு, இன்றைக்கும் டிஜிட்டல் திரைகளுக்குப் பின்னால் புதுப்புது வடிவங்களில் தொடரவே செய்கிறது. ஏனென்றால், மனித மனதின் அடிப்படையான பயங்களும், எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் மாறவே மாறாது! பாவி மனிதர்களின் ஆவி நம்பிக்கைகளும் அது குறித்த பயங்களும், எதிர்பார்ப்புகளும் அப்படிப்பட்டவை.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****