Tuesday, 25 August 2026

கள்ளிக்காடு கெஸ்ட் ஹவுஸ்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 64

கள்ளிக்காடு கெஸ்ட் ஹவுஸ்

"நீங்கதான் விஜயராமன் சொல்லி வந்திருக்கிற…"

ஆம் என்பது போல அவன் தலையசைத்தான்.

"சார், இது கள்ளிக்காடு கெஸ்ட் ஹவுஸ். இதோட வரலாறு…"

"வரலாறு வேணாம் கணேசன். ஆவி, பிசாசு, தலை இல்லாத பொண்ணு. இதெல்லாம் நான் ஆசிரியர் பயிற்சி படிக்கிற காலத்திலேயே பாக்கெட் நாவல்கள்ல படிச்சுட்டேன். பண்ணை வீட்டோட சாவி கொடு."

கணேசன் நடுங்கும் கையால் சாவியைக் கொடுத்தான். "சார், இதுவரைக்கும் யாரும் இந்த கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு ராத்திரி முழுசா இருந்தது இல்ல. ராத்திரிக்கு உள்ளே போனா காலையில பொணம்தான்."

"நாளைக்கு எல்லாமே மாறி இருக்கும். நான்தான் ஆசிரியர் தமிழரசன். பேய், பிசாசையெல்லாம் என் வீட்டுல சோதனைக் குழாய்ல அடைச்சு வச்சிருக்கேன்," என்று சொல்லி சிரித்தான். அந்த சிரிப்பு இருட்டில் பயங்கரமாக எதிரொலித்தது.

தமிழரசன் உள்ளே சென்றான். பழைய பர்னிச்சர், ஒட்டடை படிந்த சுவர்கள், காற்றில் ஆடும் ஜன்னல்கள். எல்லாம் ஒரு த்ரில்லர் படத்துக்கான செட்டிங் போல இருந்தன. தமிழரசன் பையைக் கீழே வைத்தான். உள்ளிருந்து கேமராக்கள், வெப்பநிலையை அளக்கும் கருவிகள், இன்னும் பல விசித்திரமான எலக்ட்ரானிக் சாதனங்கள் வெளியே வந்தன.

"இனி ஆரம்பிக்கட்டும் அந்தப் பேய் படம்!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு கருவிகளை செட் செய்தான். வேலை முடிந்ததும் பயணக் களைப்பில் லேசாகக் கண்ணயர்ந்தான்.

மணி பன்னிரண்டை நெருங்கியது.

திடீரென, அறையின் வெப்பநிலை குறையத் தொடங்கியது. கருவிகள் பீப் என்று ஒலியெழுப்பின. தமிழரசன் டக்கென்று விழித்துக் கொண்டு கேமராவைப் பார்த்தான். "ஆவி, பிசாசுன்னு ஆராய்ச்சி பண்ற இந்த விஜயராமனால ராத்திரி முழுக்க தூங்க முடியாம வேலை பார்க்க வேண்டியிருக்கே! இவனோடு ஆராய்ச்சி என்றைக்கு முடியுறதோ? நான் என்றைக்கு நிம்மதியா தூங்குறதோ?" என்று முணுமுணுத்துக் கொண்டான்.

ஒரு மூலையில், மங்கலான உருவம் தெரிந்தது.

ஒரு பெண் உருவம்.

பழைய பாணி பேய்களுக்கே உரிய அக்மார்க் வெள்ளைப் புடவை அணிந்திருந்தது.

தமிழரசன் சிரித்தான். "ஆகா அருமை! நல்ல செய்நேர்த்தி. ஆனா என் கருவிகள ஏமாத்த முடியாது."

அவன் ஒரு லேசர் பாயிண்டரை எடுத்தான். அந்த உருவத்தின் மேல் அடித்தான். லேசர் ஒளி அந்த உருவத்தின் வழியாக ஊடுருவிச் சென்றது.

தமிழரசனின் சிரிப்பு சட்டென்று நின்றது.

"இது ஏமாத்து வேலை மாதிரி தெரியல." என்று முணுமுணுத்தான்.

அடுத்த நிமிடம், அறையின் விளக்குகள் அணைந்தன.

இருள் சூழ்ந்தது.

தமிழரசனின் கருவிகள் அனைத்தும் செயலிழந்தன.

"யார்? யார் அங்கே?" தமிழரசனின் குரலில் பயம் தெரிந்தது.

இருளில் ஒரு கை அவன் தோளைத் தொட்டது. அது ஜில்லிட்டு இருந்தது.

"என் கதையக் கேளு!" ஒரு குரல் கேட்டது.

அது பெண்ணின் குரல். தீனமாக, ஆனால் தெளிவாக இருந்தது.

தமிழரசன் திரும்பினான். அந்தப் பெண் உருவம் இப்போது அவன் முன்னால் நின்றது. அதன் கண்கள் இருட்டில் மின்னின.

"நான் குப்பாயி. இந்த கெஸ்ட் ஹவுஸ்ல வேலை செஞ்சேன். இந்த ஊர் பெரிய மனுஷன்..." அவள் பேசப் பேச, அறைக்குள் குளிர்ந்த காற்று வீசியது.

தமிழரசனின் உடல் நடுங்கியது.

அவள் தன் கதையைச் சொன்னாள். துரோகம், பழிவாங்கல், மரணம் என எல்லாமே அந்த பண்ணை வீட்டின் அவனிருந்த அறையில் நடந்திருந்தது.

"எனக்கு நீதி வேணும். என் ஆவி இங்கேயே அலைஞ்சுட்டு இருக்கு."

தமிழரசன் அப்படியே உறைந்து போயிருந்தான். அவனால் பேச முடியவில்லை. நகர முடியவில்லை.

காலை வெளிச்சம் வந்தது.

கணேசன் அறைக் கதவைத் திறந்தான்.

தமிழரசன் தரையில் மயங்கிக் கிடந்தான். அவனது கருவிகள் சிதறிக் கிடந்தன.

கணேசன் அவனை எழுப்பினான். "சார், என்ன ஆச்சு? பேய் ஏதாவது வந்துச்சா?"

தமிழரசன் மெதுவாகக் கண் திறந்தான். "பேய்... குப்பாயி..." என்று முணுமுணுத்தான்.

கணேசன் குழப்பத்துடன் பார்த்தான். "நான்தான் சொன்னேன்ல சார்!"

தமிழரசன் குப்பாயியின் கதையைச் சொன்னான். கணேசன் அதிர்ச்சியுடன் கேட்டான்.

"ஆனா, நீங்க உசுரோட இருக்குறதுதான் ஆச்சரியமா இருக்கு. வெளியே போஸ்ட் மார்டம் பண்றதுக்கு போலீஸ் கூட ரெடியா இருக்கு!"

தமிழரசன் அதிர்ந்தான். "அடப் பாவிகளா? ஒரு மனுஷனை உள்ளே அனுப்பிச்சிட்டு மறுநாள் பாடை கட்டுற வரைக்குமாடா தயாரா இருப்பீங்க?"

கணேசன் சிரித்தான். "சார், நீங்களாத்தான் விருப்பப்பட்டு ஏதோ ரிசர்ச் பண்றேன்னு உள்ளே வந்தீங்க. சரி நீங்களாவது ஏதாச்சும் கண்டுபிடிப்பீங்கன்னு பார்த்தா, நைட்டு பூரா நாலு புல்லை ஏத்துனவன் மயங்கிக் கிடக்குறாப்புல மயங்கிக் கிடக்குறீங்க."

அதற்கு மேல் கணேசன் பேசுவதைக் கேட்கப் பொறுமையில்லாமல், தமிழரசன் தன் கருவிகளைப் பார்த்தான். கேமரா பதிவுகள் அனைத்திலும், அந்த உருவம் தெளிவாகத் தெரிந்தது.

"கனவா?" தமிழரசன் நினைத்துக் கொண்டான். "ஆனால், இந்தக் கருவிகள் பொய் சொல்லாதே!"

"சார்! இந்த உண்மையை வெளியே சொல்லுங்க. உலகத்துக்குத் தெரியட்டும்." என்றான் கணேசன்.

அவன் கள்ளிக்காடு கெஸ்ட் ஹவுஸை விட்டு வெளியேறினான். அவனது மனதிற்குள் அந்தப் பெண் உருவத்தின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பேய் அதுவாக வந்து கேமராவுக்குள் அகப்பட்டுக் கொண்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி எந்தப் பேய் வந்து அதுவாக வாண்டட் ஆக மாட்டிக் கொள்ளும் என்று யோசனையாக இருந்தது. இதை அப்படியோ ஷார்ட்ஸாகவோ, ரீல்ஸாகவோ போட்டால் வியூஸ் மில்லியனில் அல்ல பில்லியன் டிரில்லயனில் பிய்த்துக் கொள்ளும்.

ஒருவேளை ஓவர் நைட்டில் பாப்புலர் ஆக ஆசைப்படும் பேயாக அது இருக்குமோ என்ற சந்தேகம் வேறு அவனை வாட்டியது.

அதுமட்டுமில்லாமல், இதை வெளியே சொன்னால் சுந்தர் சியோ ராகவா லாரன்ஸோ அடுத்த படத்திற்கான ஸ்கிரீன் ப்ளே பண்ணி விடுவார்களோ என்ற பயமும் இருந்தது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Monday, 24 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.08.2026

1) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் ‘தமிழ்நாடு – அறிவுப் பாடத்திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

2) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய விளையாட்டு உடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

3) ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்துக்குக் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயு உருளைகள் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

4) அக்டோபர் 2 முதல் புறநகர் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் எனத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

5) பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

6) வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த நாசிக்கிலிருந்து விரைவுத் தொடர்வண்டிகள் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கும் வெங்காயம் அனுப்பப்பட்டு வருகிறது.




Education & GK News

1) The ‘Tamil Nadu – Knowledge Curriculum’ is set to be introduced in all government schools across Tamil Nadu starting from the next academic year.

2) School Education Minister Rajmohan has announced that new sports uniforms will be provided to government school students.

3) Tamil Nadu Chief Minister S. Joseph Vijay has announced that three free LPG cylinders per year will be provided to families with an annual income of less than Rs. 2.5 lakh.

4) The Chief Minister has announced that women will be able to travel free of charge on mofussil buses starting October 2.

5) The Chief Minister has announced the cancellation of the Parandur airport project.

6) To curb the rise in onion prices, onions are being transported from Nashik to various parts of the country via express trains.

அறிவியலையே அமானுஷ்யங்களுக்குக் கேடயமாக்கிய வரலாறு!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 63

அறிவியலையே அமானுஷ்யங்களுக்குக் கேடயமாக்கிய வரலாறு!

அறிவியல் ரொம்பச் சுவாரஸ்யமானது. அதைவிடச் சுவாரஸ்யமானது, மனிதர்கள் அறிவியலைத் தங்கள் பயங்களுக்கும், ஆசைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எப்படிப் பயன்படக்கூடிய வாதங்களாக மாற்றிக் கொள்கிறார்கள் என்பதுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி என்பது, உலகம் அதுவரை கண்டிராத ஒரு மாபெரும் தொழில்நுட்பப் பாய்ச்சலுக்குள் மெல்லக் காலெடுத்து வைத்த காலம். மனித குலத்திற்குத் திடீரென்று பார்வை விரிவடைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுவரை மனிதன் தன் அறிவின் எல்லையாக எதை நினைத்துக் கொண்டிருந்தான் தெரியுமா?

"நான் கண்ணால் பார்ப்பதுதான் உலகம். என் காதால் கேட்பதுதான் உண்மை."

ஆனால், அந்தப் பெருமிதத்தை மிக அசாத்தியமாக உடைத்து நொறுக்கின அந்த அறிவியல் கண்டுபிடிப்புகள்!

1895 ஆம் ஆண்டு. ஜெர்மனியில் தன் ஆய்வகத்தில் உட்கார்ந்துகொண்டு, கேதோடு கதிர்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார் வில்ஹெல்ம் ராண்ட்ஜன். தற்செயலாக ஓர் அதிசயத்தைக் கண்டார். இருட்டறையில், ஒரு தடிமனான அட்டையைக் கூட ஊடுருவிச் சென்று, அங்கே இருந்த திரையில் ஒளி வீசியதுது ஒரு கதிர்!

அதற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் எக்ஸ் கதிர் என்று பெயரிட்டார். தன் மனைவியின் கையை அந்தச் சோதனையில் வைத்தார். அடுத்த சில நிமிடங்களில், சதைகள் எல்லாம் மறைந்து, எலும்பும் கல்யாண மோதிரமும் மட்டும் அச்சு பிசகாமல் படமாக விழுந்தன. உலகமே ஸ்தம்பித்துப் போனது.

அதே காலகட்டம். 1890களின் மத்தியில் இத்தாலியில் மார்க்கோனியும், ஜெர்மனியில் ஹெர்ட்ஸும் ரேடியோ அலைகளைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். கம்பியே இல்லாமல், காற்றில் செய்திகள் பறந்தன. ஒரு பக்கத்தில் இருக்கும் பொத்தானை அழுத்தினால், நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் மணி அடித்தது!

அதுவரை மனிதனின் மூளைக்குப் பழகியிருந்த "தொட்டுப் பார்க்கும்" இயற்பியல் விதிகள் எல்லாம் தலைகீழாக மாறின.

மனிதனுக்கு ஒரே ஆச்சரியம்! அதைவிடப் பெரிய குழப்பம்!

திடீரென்று தன் கண்கள் தங்களுக்குப் பொய் சொல்கின்றன என்பதை உணர்ந்தவுடன், மனித மூளை சும்மா இருக்குமா? தனக்குச் சாதகமாக யோசிக்கத் தொடங்கியது.

"அடடா! கண்ணுக்குத் தெரியாத அலைகள் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, ஏன் கண்ணுக்குத் தெரியாத பேய்களும் ஆவிகளும் அதே காற்றில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது?"

அவ்வளவுதான்! ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஸ்பிரிச்சுவலிசம் எனும் ஆவி இயக்கம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 1880களில் சிறு தீயாக இருந்த இந்த இயக்கம், எக்ஸ்ரே மற்றும் ரேடியோ அலைகளின் வருகைக்குப் பின் ஒரு காட்டுத்தீயாக மாறியது.

அன்றைய மனிதர்களின் அப்போதைய லாஜிக்குகள் ரொம்பவே எளிமையானவை, ஆனால் ஆபத்தானவை.

எக்ஸ்ரே சுவரை ஊடுருவிப் பார்க்கிறது அல்லவா? அப்படியானால் ஆவிகளும் சுவரை ஊடுருவி வரும் என்பதில் என்ன சந்தேகம்? இது முதல் லாஜிக்.

ரேடியோ அலைகள் மூலம் கம்பியில்லாமல் தூரத்தில் இருப்பவருடன் பேச முடிகிறதே? அப்படியானால் தந்தி மிஷின் போல ஒரு கருவியைச் செய்து, செத்துப் போன தாத்தாவிடம் பேச முடியாதா என்ன? இது இரண்டாவது லாஜிக்.

காற்றில் அலைகள் செல்லும்போது நமக்குத் தெரியவில்லை, ஆனால் ரிசீவர் வைத்தவுடன் சத்தம் கேட்கிறது. அதேபோலத்தான் ஆவிகளும் காற்றில் இருக்கின்றன; ஒரு மீடியம் கிடைக்கும் போது ஆவிகள் பேசாதா என்ன? இது மூன்றாவது லாஜிக்.

கேட்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன இந்த லாஜிக்குகள்?

இப்படித்தான் அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளைத் தங்களின் பழைய பயங்களுக்குச் சான்றாக மாற்றிக் கொண்டார்கள் அன்றைய மனிதர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஏதோ விவரமறியாத பொதுமக்கள் மட்டும் இதை நம்பவில்லை. அன்றைய தலைசிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஏன் சில அறிவியலாளர்கள் கூட இந்த மாயையில் விழுந்தார்கள்.

புகழ்பெற்ற எழுத்தாளர் சர் ஆர்தர் கோனன் டாய்ல் உலகிலேயே மிகச் சிறந்த தர்க்க அறிவும், பகுத்தறிவும் கொண்ட 'ஷெர்லாக் ஹோம்ஸ்' என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியவர்! அவர் ஆவிகள் உலகத்தைப் பைத்தியக்காரத்தனமாக நம்பத் தொடங்கினார். தன் மகனும் சகோதரனும் போரில் இறந்த பிறகு, அவர்களின் ஆவியுடன் பேசுவதற்காகக் கூட்டங்கள் நடத்தினார். "எக்ஸ்ரே இருக்கும் போது ஆவிகள் இருக்க சாத்தியமுண்டு" என்பதுதான் அவரது பிரதான வாதமாக இருந்தது.

இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்றவர் சர் வில்லியம் க்ரூக்ஸ். இவர் தான் எக்ஸ்ரே கண்டுபிடிப்புக்கு மூல காரணமான க்ரூக்ஸ் டியூபைக் கண்டுபிடித்தவர்! அவரே ஆவிகளுடன் பேசும் மீடியம் கூட்டங்களில் கலந்து கொண்டு, ஆவிகள் உண்மையிலேயே இருக்கின்றன என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.

திசைகாட்டி காந்த ஊசியை கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு புலம் திருப்புகிறது என்றால், அறையில் இருக்கும் ஆவியும் அதைத் திருப்பலாம்தானே? என்பதுதான் அன்றைய அறிஞர்களின் சயின்டிபிக் லாஜிக்.

தந்தி மிஷினில் சில மேம்பாடுகளைச் செய்த தாமஸ் ஆல்வா எடிசன் கூடத் தனது வாழ்நாளின் இறுதியில் "இறந்தவர்களுடன் பேசுவதற்கான ஒரு மின்னணு சாதனத்தை உருவாக்க முயல்கிறேன்." என்று பேட்டி கொடுத்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

ஆனால், இதில் ஒரு சிறிய, மிக நுட்பமான வித்தியாசம் இருந்தது. அன்றைய மக்கள் அதை வேண்டுமென்றே கவனிக்கத் தவறினார்கள் அல்லது கவனிக்க விரும்பவில்லை.

அது என்னவென்றால், எக்ஸ்ரே கண்ணுக்குத் தெரியாதுதான். ஆனால், அதன் விளைவு துல்லியமானது. நீங்கள் எத்தனை முறை எக்ஸ்ரே எடுத்தாலும், அது ஒரே மாதிரி எலும்பைத்தான் காட்டும். அதை புகைப்படத் தகடில் பதிவு செய்ய முடியும். எந்த ஆய்வகத்திலும் அதைத் திரும்பச் செய்து நிரூபிக்க முடியும்.

ரேடியோ அலைகளும் அப்படியே. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் சிக்னல் அனுப்பினால், உலகத்தில் எந்தக் மூலையில் இருக்கும் ரிசீவரும் அந்தச் சிக்னலைப் பிடிக்கும்.

ஆனால் ஆவிகள்?

அது மூட் இருக்கும்போது மட்டும் வரும்! வெளிச்சம் போட்டால் ஓடிவிடும்! கேமரா வைத்தல் வேலை செய்யாது! சந்தேகப்பட்டால் ஆவி கோபித்துக் கொண்டு பேசாது!

அறிவியல் என்பது தெரியாததைச் சோதித்து, நிரூபித்து, தெரிந்துகொள்ளும் பாதை. மனித மனமோ தெரியாத வெற்றிடத்தில் தனக்கு விருப்பமான பயங்களையும் ஆசைகளையும் நிரப்பும் பாத்திரம்.

ரேடியோ அலைகளும் எக்ஸ்ரேக்களும் மின் காந்த ஸ்பெக்ட்ரமின் இயற்பியல் பகுதிகள்.

ஆவிகள் என்பவை மனித விருப்பங்களின், மன மாயைகளின் மனோவியல் ஸ்பெக்ட்ரம்!

சரி, இதெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் முடிந்துவிட்டதா என்றால், நிச்சயமாக இல்லை!

இன்றைக்கும் நாம் புதுப் புது தொழில்நுட்பங்கள் வரும்போதெல்லாம், நமது பழைய மூடநம்பிக்கைகளுக்குப் புதிய அறிவியல் சாயத்தைப் பூசிக் கொண்டுதானே இருக்கிறோம்?

தொழில்நுட்பங்கள் மாறுகின்றன. ஆனால் மனிதனின் அடிப்படை மனநிலை மாறவே இல்லை.

மனிதன் எப்போதும் தன் அஞ்ஞானத்தை மறைக்க, அன்றைய அதிநவீன அறிவியலையே அமானுஷ்யங்களுக்கு ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறான்.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், எக்ஸ்ரேயும் ரேடியோ அலைகளும் மனிதனின் உடலையும் தொடர்பையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன. ஆனால் மனித மனமோ, அந்த அலைகளின் மீதேறித் தன் பழங்கால பேய்களுடனும் ஆவிகளுடனும் பயணம் செய்யவே ஆசைப்பட்டது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Sunday, 23 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.08.2026

1) தமிழ்நாட்டில் சர்க்கரையின் விலை உயர்ந்து கிலோ 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

2) வீடுகளில் சமையலுக்கு இயற்கை எரிவாயுவுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

3) வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

4) ஒடிசா அருகே வங்கக் கடலில் பனாமா நாட்டின் சரக்குக் கப்பல் மூழ்கியதில் 22 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

5) அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தால் வளைகுடா நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

Education & GK News

1) The price of sugar in Tamil Nadu has risen, and it is now being sold at Rs. 72 per kilogram.

2) The Central Government has urged state governments to prioritize the use of natural gas for domestic cooking.

3) Rain is likely in Tamil Nadu today and tomorrow due to a low-pressure area formed over the Bay of Bengal.

4) Search operations for 22 sailors have intensified following the sinking of a Panamanian cargo ship in the Bay of Bengal, near Odisha.

5) Iran has warned Gulf nations that they will face severe consequences if they support the actions of the United States.

அதிர்வெண் லீலைகள்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 62

அதிர்வெண் லீலைகள்

மறுநாள் காலை பத்து மணி.

சந்தோஷ் லேப்பில் சோடா பாட்டில்கள் காலியாகியிருந்தன. கோவிந்த் தூங்கவில்லை. அவன் கண்கள் சிவந்திருந்தன.

எதிரே தமிழரசன் உட்கார்ந்திருந்தான். கோவிந்தின் உடனடி அழைப்பின் பேரில் இரவோடு இரவாக கிளம்பி வந்திருந்த மன்னார்குடியில் வசிக்கும் நீடாமங்கலத்து ஆசிரியன்.

நொறுங்கிப் போயிருந்த அந்த ஐந்து லட்சம் ரூபாய் ஸ்பெக்ட்ரம் அனலைஸர் பாகங்களை ஒவ்வொன்றாகக் கழற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான் தமிழரசன்.

"கோவிந்த்! நீ ஒரு முட்டாள்!" தமிழரசன் கையில் இருந்த அதன் பாகங்களைக் கீழே வைத்தான்.

"ஏய்! நான் பொய் சொல்ல! 48.5 மைக்ரோடெஸ்லா காந்தப் புலம். டெம்பரேச்சர் திடீர்னு 14 டிகிரிக்குச் சரிஞ்சது. அப்புறம் அந்த ஆடியோ! 'தேர் இஸ் நோ ரிசீவர்'ன்னு தெளிவா மோர்ஸ் கோட்ல."

"நிறுத்து கோவிந்த்! நீயும் சுந்தரும் சேர்ந்து ஒரு சைக்கோ அகவுஸ்டிக் மாயையில சிக்கியிருக்கீங்க."

கோவிந்த் நிமிர்ந்து உட்கார்ந்தான். "அதை தயவு பண்ணி கொஞ்சம் விளக்குத் தமிழ்!"

தமிழரசன் நொறுங்கிய சென்சார் போர்டைச் சுட்டிக்காட்டினான்.

"முதல் விஷயம் இன்ப்ரா சவுண்ட். அந்த வீட்டின் இரண்டாவது மாடி அறையில் நீ அளந்த 7 ஹெர்ட்ஸ் அதிர்வெண். மனிதக் காதுகளுக்கு 20 ஹெர்ட்ஸ்க்குக் கீழே கேட்காது. ஆனா, 7லிருந்து 19 ஹெர்ட்ஸ் அதிர்வெண் காற்றில் உருவானால், அது மனித உடலில் என்ன பண்ணும் தெரியுமா? நம் கண்ணின் விழித்திரையில் ஒரு குறிப்பிட்ட சுய அதிர்வெண் இருக்கு. அது 18 ஹெர்ட்ஸ். காற்றில் 18 ஹெர்ட்ஸ் இன்ப்ரா சவுண்ட் வரும்போது, உன் கண் விழித்திரை அதிர்ந்து, மூளைக்குத் தவறான பிம்பங்களை அனுப்பும். அதைத்தான் ஹாலுசினேஷன் அதாவது, பார்வை மாயைன்னு சொல்வாங்க. நீ திரையில பார்த்த அந்த முகம், வேற எதுவும் இல்லை. உன் கண்ணின் அதிர்வால் உருவான ஒளியியல் பிழை!"

"சரி, அப்ப அந்த 14 டிகிரி குளிர்? அதுக்கு என்ன சொல்ற?" கோவிந்த் குறுக்கிட்டான்.

"ரொம்ப எளிமையான விசயம். அது வென்ச்சுரி எபெக்ட். பழைய வீட்டின் அந்தச் சிறிய ஸ்டோர் ரூம் ஜன்னல் இடுக்கில், வெளியே இருந்து வந்த காற்று மிகச் சிறிய துளை வழியா வேகமாக ஊடுருவும்போது, காற்றின் அழுத்தம் திடீரெனக் குறையும். இயற்பியல் விதிப்படி, அழுத்தம் குறையும்போது வெப்பநிலையும் சட்டெனச் சரியும். இதைத்தான் தெர்மோடைனமிக்ஸ்ல ஜூல் தாம்சன் விளைவு என்பார்கள். அது பேய் வந்ததால் வந்த குளிரில்லை. வெறும் காற்றின் அழுத்தம் மாறுபட்டதால் வந்த இயற்பியல் குளுமை! இதுக்குதான்டா பனிரெண்டாவதோட படிப்பை முடிக்காதே. இன்ஜினியரிங் போய் படின்னு சொன்னேன். நீ கேட்காமே நானே சுயமா படிச்சு இன்ஜினியரிங்கைத் தாண்டி விஞ்ஞானி ஆவேன்னு சவடால் விட்டேல்ல. இப்போ மாட்டிக்கிட்டே பார்த்தியா?"

கோவிந்த் யோசித்தான். "அதை விடு. அந்த வயசு அப்படி. இப்போ விசயத்துக்கு வா. அப்போ அந்த தந்தி தட்டுற சத்தம்? மோர்ஸ் கோட்?"

"அங்கேதான் உன் கருவி உன்னை ஏமாற்றியிருக்கிறது!" தமிழரசன் சிரித்தான்.

தமிழரசன் அந்தச் சிதைந்த சர்க்யூட் போர்டில் இருந்த ஒரு சிறிய கருப்புச் சிப்பைக் காட்டினான்.

"நீ இந்த அனலைஸர்ல பயன்படுத்தியிருக்கிறது ஒரு மலிவான அனலாக் டு டிஜிட்டல் கன்வெர்ட்டர். எம்எம்டிஏ சந்திரமுகித் தெருவில் பக்கத்து வீட்டிலோ அல்லது தெருவிலோ யாரோ ஒருத்தர் பழைய சீலிங் பேனையோ, அல்லது கம்ப்ரஸரையோ ஆன் பண்ணியிருக்காங்க. அது உருவாக்கின ஸ்பார்க் மிஷின் அலைகள், இந்த அனலைஸரின் ஷீல்ட் செய்யப்படாத ஒயர்கள் வழியா உள்ளே நுழைஞ்சிருக்கு. தந்தி தட்டுவது போலக் கேட்ட அந்த டிக் டிக் சத்தம் பக்கத்து வீட்டு மின்சாரக் கசிவால் உருவான ரேடியோ பிரீக்வென்சி இன்டர்பெரன்ஸ்!"

"அப்போ அந்த ஆடியோ? 'உன்னோட மெஷின் நல்ல ரிசீவரா வேலை செய்யுதே'ன்னு குரல் கேட்டதே?"

தமிழரசன் சோடாவை எடுத்து ஒரு மடக்கு குடித்துவிட்டுச் சொன்னான்.

"அது பரோடிலியா அப்புறம் ஆம்ப்ளிடியூட் மாடுலேஷன். காற்றில் ஆயிரக்கணக்கான ஏ.எம். ரேடியோ அலைகள், வாக்கி டாக்கி அலைகள் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. உன் நொறுங்கிய மெஷினில் இருந்த நான் லீனியர் ஜங்ஷன் ஒரு சாதாரண டியூனர் போலச் செயல்பட்டு, காற்றில் சுற்றிய ஏதோ ஒரு லோக்கல் ஏ.எம். அலைவரிசையைப் பிடித்துவிட்டது. காற்றில் கேட்ட இரைச்சலையும், ரேடியோ சிக்னலையும் உன் பயந்த மூளை, உனக்குப் பிடித்த ஆவி கதையோடு இணைத்து, மொழிபெயர்த்துக்கொண்டது! அவ்வளவுதான்!"

கோவிந்த் அமைதியானான்.

தமிழரசன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் அசைக்க முடியாத அறிவியல் தர்க்கம் இருந்தது. அந்த அறிவியல் மிகத் தெளிவாக விளக்கிவிட்டது. பயம் விலகி, கோவிந்தின் மூளைக்கு மீண்டும் புத்துணர்ச்சி வந்தது.

"நிஜமா நீ சொன்னபடி, நான் எவ்வளவு பெரிய முட்டாள்!" கோவிந்த் தலையில் அடித்துக் கொண்டான்.

"விடு கோவிந்த். 1895ல எக்ஸ்ரே வந்தப்போ உலகமே இப்படித்தான் பயந்துச்சு. அறிவியல் விளக்கம் தெரியாத வரைக்கும் எல்லாமே அமானுஷ்யம்தான்! உன்னாலே ஒரு நாள் விடுப்பு காலி. இப்பவே கிளம்புனாத்தான் நாளைக்காவது பள்ளிக்கூடம் போகலாம். " தமிழரசன் சிரித்துக்கொண்டே மன்னார்குடி கிளம்ப தயாரானான்.

"அப்புறம் தமிழ்! இதெப் பத்தி விஜயராமன்கிட்டெ சொல்லி இதோட ஹிஸ்டாரிக்கல் நோட்டைக் கொஞ்சம் எழுதச் சொல்றீயா?"

"ஏன்டா உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா? ஆவி, அமானுஷ்யம்ன்னு என்னவோ பாம்பு பிடிக்க அலையுற மாதிரி ஆவி பிடிக்க அலைஞ்சுகிட்டு இருக்கீங்க! நாட்டுல எவ்வளவோ வேலை இருக்கு. அதெப் போயிப் பாருங்கடா முதல்ல." என்றபடி தமிழரசன் உடைந்து கிடந்த அந்த ஸ்பெக்ட்ரம் அனலைஸரை எரிச்சலில் எட்டி உதைக்க, அது காயலான் கடைக்கு டிக்கெட் எடுக்க தயாரானது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 22 August 2026

ஆவி டியூனிங்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 61

ஆவி டியூனிங்!

சென்னை, சூளைமேடு, பெரியார் பாதை.

அந்தப் பழைய கால கட்டிடத்தின் முதல் மாடியில் 'சந்தோஷ் லேப்' என்ற பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது.

உள்ளே மேஜை முழுக்க சர்க்யூட் போர்டுகள், பழைய வால்வு ரேடியோக்கள், அப்புறம் பனிரெண்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க விருப்பமில்லாமல், சுய படிப்பில் தானே ஒரு விஞ்ஞானியாகி விட வேண்டுமென்ற வேட்கையில் ஏதேதோ ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கும் கோவிந்த்.

வயது முப்பத்து ஐந்து.

எப்போதும் லேசான தாடி, கசங்கிய டீஷர்ட்,

அப்புறம் கண்களில் ஒருவிதமான அடங்காத அறிவியல் வெறி.

எதிரே உட்கார்ந்திருந்தான் சுந்தர். சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அஞ்சல் துறை ஊழியன். மடியில் ஒரு பழைய பித்தளைக் கடிகாரம்.

"மிஸ்டர் கோவிந்த்! நீங்க இந்த எலக்ட்ரோ மேக்னடிக் பீல்டை வச்சு என்னென்னவோ பண்றீங்கன்னு தமிழரசன் சொன்னார்.  அதான் வந்தேன்."

கோவிந்த் தன் சோதனைக் குழாயை ஓரமாய் வைத்துவிட்டு, சோடா பாட்டிலைத் திறந்து ஒரு மடக்கு குடித்தான்.

"சொல்லுங்க சுந்தர். என்ன பிரச்சனை? வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா? இல்ல உங்க மொபைலை யாராவது ஹேக் பண்ணிட்டாங்களா?"

"அப்படியெல்லாம் இல்லை கோவிந்த்!" சுந்தர் குரலைத் தாழ்த்தினான். "நான் தங்கியிருக்கிற எம்எம்டிஏ காலனி ஏரியாவுல இருக்கிற ரூம்ல ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல, தந்தி தட்டுற மாதிரி சத்தம் கேக்குது. டிக் டிக் டிக் டிக்ங்ற மாதிரி சத்தம். கூடவே யாரோ மூச்சு விடுற சத்தமும். போய்ப் பார்த்தா யாரும் இருக்க மாட்டாங்க. ஆனா, அந்த இடத்துல கையை வச்சா ஜில்லுனு ஐஸ் மாதிரி குளிரும்."

கோவிந்த் புன்னகைத்தான். "மிஸ்டர் சுந்தர்! 1895ல எக்ஸ்-ரேவும் ரேடியோ அலையும் கண்டுபிடிச்சப்போ ஐரோப்பால என்ன ஆச்சு தெரியுமா? காத்துல கண்ணுக்குத் தெரியாத அலைகள் இருக்கும் போது, கண்ணுக்குத் தெரியாத ஆவிகளும் இருக்கும்னு ஊரே பைத்தியமா சுத்துச்சு. நீங்களும் அதே 19 ஆம் நூற்றாண்டு லாஜிக்ல பேசுறீங்க. அதுவும் நீங்க வேற போஸ்டல் டிபார்ட்மெண்ட்ல இருக்கீங்க. இப்போ உங்க டிபார்ட்மெண்ட்ல தந்தி கூட கிடையாது. நாட்டுல தினத்தந்தின்னு ஒரு பேப்பர் தவிர உலகத்துலயே தந்தி கிடையாது. இருந்தாலும் அந்தத் தந்திக் காலத்து ஞாபகத்துல கொண்டு வந்து உங்க மூளை பண்ணுற மேஜிக்தான் அது. அது ஒன்னும் பேய் இல்லை சுந்தர். சுவத்துக்குள்ள போற பைப்புல தண்ணியோட சத்தமா இருக்கலாம். குளிருறதுக்குக் காரணம் அங்கே ஏதேதோ ஏர் டிராப்ட் இருக்கும்."

"கோவிந்த உங்க அளவுக்கு எனக்கு அறிவியலெல்லாம் தெரியாது. ஆனா எங்க தாத்தா 1942ல தந்தி ஆபரேட்டரா இருந்தவர். நீங்க ஒருவாட்டி வந்து பாருங்களேன். சும்மா உங்களோட அந்த மெஷின்களை வச்சு செக் பண்ணுங்களேன்!"

"அதென்ன கையில பித்தளைக் கடிகாரம்?"

"இது எங்க தாத்தாவோடது. இது என் கையில இருந்தாத்தான் எங்க தாத்தா ஆவி என்னை ஒண்ணும் பண்ணாது. இல்லன்னா இன்னிக்கு ஏன்டா ஒழுங்கா வேலை பார்க்காம ஓப்பி அடிச்சேன்னு கனவுல வந்து கெட்ட கெட்ட வார்த்தையால திட்டும்!"

"காமெடி பண்ணாதீங்க சுந்தர்!"

"காமெடில்லாம் இல்ல கோவிந்த். என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். தமிழரசன் சொன்னார் உங்களால முடியாதது இந்த உலகத்துலயே எதுவுமே இல்லன்னு. ப்ளீஸ் ஹெல்ப் மிஸ்டர் கோவிந்த்!"

கோவிந்திற்கு அது ஒரு சவாலாக இருந்தது. மூடநம்பிக்கைகளைத் தன் கருவிகளால் உடைப்பது அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

இரவு 11:45.

எம்எம்டிஏ காலனியின், சந்திரமுகி தெருவில் இருந்த அந்த எண்பது வருடப் பழமையான வீடு. மரப் படிக்கட்டுகளில் ஏறும்போதே கீச் கீச் என்று சத்தம் கேட்டது. காற்று கனமாக இருந்தது.

கோவிந்த் தன் கையில் இருந்த கருவியைச் சரிசெய்தான். அது அவன் சொந்தமாக டிசைன் செய்த ஸ்பெக்ட்ரம் அனலைசர் வித் அல்ட்ராசோனிக் சென்சார்.

அதாவது, மனிதக் காதுகளால் கேட்க முடியாத 20 ஹெர்ட்ஸ்க்குக் குறைவான அதிர்வெண்களையும், கண்ணுக்குத் தெரியாத மின்காந்த மாற்றங்களையும் டிஜிட்டல் திரையில் அலைகளாகக் காட்டும் கருவி.

சுந்தர் பயத்தோடு பின்னால் வர, கோவிந்த் அந்த இரண்டாவது மாடி அறையின் கதவைத் திறந்தான்.

அறை முழுக்கத் தூசி, நான்கைந்து மாதங்களாகத் துவைக்காத துணிகள். நடுவில் ஒரு பழைய மர மேஜை.

"இங்கதான் கோவிந்த்!" சுந்தர் சுட்டிக் காட்டினான்.

கோவிந்த் சுற்றும் முற்றும் பார்த்தான். தன் கருவியை ஆன் செய்தான். திரையில் பச்சை நிற அலைகள் சீராக ஓடிக்கொண்டிருந்தன. மின்காந்தப்புல அளவு 0.2 மைக்ரோ டெஸ்லா. முற்றிலும் இயல்பானது.

"பாத்தீங்களா சுந்தர்? இங்க எந்த அலைவரிசையும் இல்லை. எல்லாமே உங்க மனப் பிராந்தி!"

"நான் பிராந்தியெல்லாம் குடிக்கிறதில்ல கோவிந்த்!"

"யார்யா உனக்கு தமிழ் வகுப்பு எடுத்தது? பிராந்திக்கும் மனப்பிராந்திக்கும் வித்தியாசம் தெரியல."

கோவிந்த் சொல்லி முடிப்பதற்குள், மொபைல் போன் சிக்னல் கட் ஆவது போல, அவன் கையில் இருந்த கருவியின் திரை திடீரென பிளிங்க் அடித்தது.

டிஜிட்டல் திரையில் பச்சை நிறக் கோடுகள் பித்துப் பிடித்தது போல மேலும் கீழும் எகிறின!

மின்காந்தப்புல அளவு 48.5 மைக்ரோ டெஸ்லா! வெப்பநிலை: 32°Cலிருந்து திடீரென 14°Cக்கு சரிந்தது!

கோவிந்தின் கழுத்துப் பிடரி மயிர் சிலிர்த்தது. அறிவியலை மட்டும் நம்பும் அவன் மூளை, 'இது சாத்தியமில்லை' என்று கத்தியது. ஏதோ ஒரு மாபெரும் ஆற்றல் அந்த அறையின் காந்தப் புலனை நொடியில் மாற்றியமைத்துக் கொண்டிருந்தது.

அடுத்த வினாடி.

'டிக்.... டிக்…. டிக்… டிக்…. டிக்…'

மர மேஜையின் மீதிருந்து சத்தம் வந்தது!

கோவிந்த் டார்ச் அடித்துப் பார்த்தான். அங்கே எதுவுமே இல்லை. வெறும் தூசி படிந்த மர மேற்பரப்பு. ஆனால் சத்தம் துல்லியமாகக் கேட்டது. மோர்ஸ் குறியீடு.

கோவிந்திற்கு மோர்ஸ் குறியீடு தெரியும். தந்தி தட்டும் சத்தத்தை மனதுக்குள் மொழிபெயர்த்தான்.

T - H - E - R - E

"தேர்" கோவிந்த் வாய்விட்டுச் சொன்னான்.

அடுத்த சத்தம்:

I - S

"இஸ்"

மூன்றாவது சத்தம் மெதுவாக, ஆனால் அழுத்தமாகத் தட்டப்பட்டது:

N - O

R - E - C - E - I - V - E - R

"நோ ரிசீவர்"

கோவிந்த் உறைந்துபோய் நின்றான். சுந்தர் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான்.

"தேர் இஸ் நோ ரிசீவர்" கோவிந்த் முணுமுணுத்தான்.

1895 இல் மார்கோணி ரேடியோ அலைகளை அனுப்பியபோது, அதை ஏற்றுக்கொள்ள ஒரு ரிசீவர் தேவைப்பட்டது. காற்றில் அலைகள் எப்போதும் இருக்கும், அதை உணரும் கருவி இருந்தால் மட்டுமே அது சத்தமாக மாறும்!

திடீரென்று, கோவிந்த் கையில் இருந்த அல்ட்ராசோனிக் சென்சார் அலறியது.

மனிதக் காதுகளுக்குக் கேட்காத, ஆனால் உடலை நடுங்க வைக்கும் 7 Hertz இன்ப்ராசவுண்ட் அந்த அறையை நிரப்பியது. அது மனித மூளையில் தீவிரமான அச்சத்தையும், பார்வைக் கோளாறையும் உருவாக்கக்கூடிய அதிர்வெண்!

சுந்தரம் அலறி அடித்துக்கொண்டு படிக்கட்டில் கீழே இறங்கி ஓடினான்.

ஆனால் கோவிந்தால் நகர முடியவில்லை. அவன் கால்கள் தரையோடு ஒட்டிக் கொண்டன.

அவன் கையில் இருந்த டிஜிட்டல் திரையில், அந்த மின்காந்த அலைகள் மெல்ல மெல்ல ஒரு உருவத்தின் வரைபடமாக மாறத் தொடங்கின. ஒரு மனிதனின் முகம் கண்ணாடியுடன்.

அறைக்குள் ஐஸ் பெட்டிக்குள்ளிருப்பது போன்ற கடும் குளிர். கோவிந்தின் மூச்சுக் காற்று வெள்ளையாகப் புகையாக வந்தது.

அவன் கையில் இருந்த கருவியின் ஸ்பீக்கரில் இருந்து, ரேடியோ ஸ்டேஷன் டியூன் செய்யும்போது வரும் ஹிஸ்ஸ்ஸ் சத்தத்திற்கு நடுவே, ஒரு மனிதக் குரல் மிகத் தெளிவாகக் கேட்டது:

"நீங்க மார்கோணி காலத்திலேருந்து அலைகளை மட்டும்தான் கண்டுபிடிச்சீங்க கோவிந்த். அந்த அலைகள்ல பயணம் செய்ற எங்களைக் கண்டுபிடிக்கல. இப்போ உன்னோட இந்த மெஷின் நல்ல ரிசீவரா வேலை செய்யுதே!"

மேஜை மீது இருந்த தூசி, யாரோ கையால் எழுதுவது போல மெல்ல விலகியது. அங்கே இரண்டு வார்த்தைகள் அச்சிடப்பட்டது போல உருவாயின, "THANK YOU"

கோவிந்தின் கை நடுங்கி, அவன் உருவாக்கிய அந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருவி தரையில் விழுந்து நொறுங்கியது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Friday, 21 August 2026

ஆய்வகச் சோதனையில் ஆவிகள்!

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் – 60

ஆய்வகச் சோதனையில் ஆவிகள்!

இரவின் அமைதியில் ஒளிரும் சிறு விளக்குகளின் வெளிச்சத்தில் அமர்ந்து, "அங்கே இருப்பது யார்?" என்று மனித மனம் அஞ்சிக்கொண்டிருந்த காலத்தில், அதாவது 1900களின் தொடக்கத்தில், இங்கிலாந்தில் சில ஆய்வாளர்கள் முறையான உடைகளுடன், குறிப்பேடுகளைக் கையில் ஏந்திக்கொண்டு இருண்ட அறைக்குள்ளும் நுழைந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல, 'சொசைட்டி பார் சைக்கிகல் ரிசர்ச்' எனும் எஸ்.பி.ஆர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

அவர்களின் முதன்மை இலக்கு யாதெனில், அமானுஷ்ய நிகழ்வுகளை வெறுமனே மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிடாமல், ஆய்வகத்தில் வைத்து அறிவியல்பூர்வமாகச் சோதித்துப் பார்ப்பதே.

1882 ஆம் ஆண்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதன்மை விஞ்ஞானிகளும் தத்துவஞானிகளும் ஒன்றிணைந்தனர். ஹென்றி சிட்ஜ்விக், வில்லிம் பிளெட்சர் பாரெட் போன்ற அறிஞர்கள் இது குறித்து விரிவாக விவாதித்தனர்.

ஒருபுறம் நியூட்டன், டார்வின் ஆகியோரின் கோட்பாடுகளுடனும், மின்சாரத்தின் வருகையுடனும் உலகம் அறிவியலை நோக்கி அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருந்தது.

மறுபுறம், 'என் வீட்டில் நாற்காலி தானாக நகர்கிறது', 'மறைந்த என் தாத்தா கனவில் வந்து பேசுகிறார்' போன்ற கூற்றுகளை மக்கள் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள்.

இவற்றை வெறுமனே மூடநம்பிக்கை என்று நிராகரித்துவிட முடியுமா? அறிவியல் பூர்வமாக அணுகுபவர்கள் ஆதாரத்துடன் அல்லவா எதையும் மறுக்க வேண்டும்? எனவே, இத்தகைய நிகழ்வுகளை விரிவாக ஆராய்வோம் என முடிவெடுத்தனர் எஸ்.பி.ஆர் அமைப்பினர்.

அப்படி ஆராய உருவாக்கப்பட்டதுதான் இந்த எஸ்.பி.ஆர் அமைப்பு. இவர்களது நோக்கம் ஆவிகளை வழிப்படுவதோ அல்லது அவற்றைக் கண்டு அஞ்சுவதோ அல்ல. அமானுஷ்யம் என்று கூறப்படும் நிகழ்வுகளை அறிவியல் கண்ணோட்டத்துடனும், எவ்வித முன்முடிவுகளும் இன்றியும் ஆராய்வது மட்டுமே.

1900களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆவி அழைக்கும் முறை பெருமளவில் பிரபலமடைந்தது. வார இறுதியில் சிலர் ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, "மறைந்த ஆவிகளே வருக" என்று அழைப்பார்கள். அப்போது மேஜை தட்டப்படும் ஒலி கேட்கும்; ஆவிகள் வந்து பேசுவதாகக் கூறுவார்கள். இச்செயலைச் செய்பவர்களை 'ஆவி தொடர்பாளர்கள்'  என்று அழைத்தனர்.

எஸ்.பி.ஆர் விஞ்ஞானிகள் இந்த நிகழ்வுகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் அணுகவில்லை.

தங்களோடு வெப்பமானி, எடைத் தராசு, அகச்சிவப்பு ஒளி புகைப்படக் கருவி, கால்வானோ மீட்டர் போன்ற போன்ற சில முதன்மையான கருவிகளையும் கொண்டு சென்றனர். அதாவது, வேதியியல் ஆய்வகத்தில் திரவங்களைச் சோதிப்பதைப் போல, ஆவிகள் தொடர்பான கூற்றுகளையும் அவர்கள் முறைப்படி சோதிக்கத் தொடங்கினர்.

எஸ்.பி.ஆரின் ஆய்வுகளில் 90 சதவீத முடிவுகள், "அவை முற்றிலுமாக திட்டமிடப்பட்ட ஏமாற்று வேலைகள்" என்பதையே வெளிப்படுத்தின.

அக்காலத்தில் எக்டோபிளாசம் என்றொரு கருத்து நிலவியது. ஆவிகள் மனித உடலிலிருந்து வெள்ளை நிறத் திரவமாகவோ அல்லது புகையாகவோ வெளிவரும் என்று நம்பப்பட்டது. எஸ்.பி.ஆர் விஞ்ஞானிகள் களமிறங்கி, அந்த 'எக்டோபிளாச' மாதிரியாகச் சேகரித்துச் சோதித்தபோது, அது வெறும் மெல்லிய துணியும் உருளைக்கிழங்கு மாவும் கலந்த கலவை என்பது தெரியவந்தது.

ஆவி தொடர்பாளர்கள் தங்கள் கால்களாலும் முழங்கைகளாலும் மேஜையைத் தட்டி, ஆவிகள் பேசுவதாக ஏமாற்றியதை, கேமராக்கள் மற்றும் பிரத்யேகக் கயிறு நுட்பங்கள் மூலம் எஸ்.பி.ஆர் அமைப்பினர் அம்பலப்படுத்தினர். இதன் விளைவாக, புகழ்பெற்ற பல 'ஆவி அழைப்பாளர்கள்' அறிவியலின் முன்னால் தங்களின் உண்மை முகத்தை இழந்தனர்.

இங்குதான் அறிவியலின் உண்மையான சுவாரசியம் தொடங்குகிறது. 90 சதவீத ஏமாற்று வேலைகளைக் கண்டறிந்த எஸ்.பி.ஆர் விஞ்ஞானிகளால், மீதமுள்ள 10 சதவீதச் சம்பவங்களை அவ்வளவு எளிதாகப் பொய் என்று புறந்தள்ள முடியவில்லை.

எடுத்துக்காட்டாக, டெலிபதி எனும் எண்ணப் பரிமாற்றம் என்பது ஒரு மனிதரின் எண்ணம், எந்தவொரு தொடர்புச் சாதனமும் இன்றி மற்றொரு மனிதருக்குச் சென்றடைவது. இதை எஸ்.பி.ஆர் அமைப்பு ஆயிரக்கணக்கான சோதனைகள் மூலம் ஆராய்ந்தது. சீட்டுக்கட்டுகளை வைத்து நடத்தப்பட்ட இச்சோதனைகளில், தற்செயலாக நடப்பதைக் காட்டிலும் அதிகளவில் சரியான கணிப்புகள் வெளிவந்தன. டெலிபதி என்ற சொல்லை உருவாக்கியதே எஸ்.பி.ஆரின் முதன்மை உறுப்பினரான பிரெட்ரிக் மையர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிபதியைப் போலவே புலன் கடந்த அறிவு, முன்னறிவு போன்ற 10 சதவீத நிகழ்வுகளுக்குப் பழமையான இயற்பியல் விதிகளால் உடனடியாகப் பதிலளிக்க இயலவில்லை.

"ஆவிகள் இருக்கின்றனவா?" என்ற கேள்விக்கு "இல்லை" என்று பதிலளித்த ஆய்வாளர்கள், "மனித மூளைக்குள் நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத ஏதோவொரு பரிமாணம் இருக்கிறது" என்பதை ஒப்புக்கொண்டனர்.

அறிவியல் என்பது 'தனக்குத் தெரிந்த விஷயங்கள் மட்டுமே உண்மை' என்று வாதிடுவதல்ல; மாறாக, 'தனக்குத் தெரியாத விஷயங்களை எவ்வாறு புரிந்துகொள்வது' என்று தேடுவதே ஆகும். 1900களில் அவர்கள் மேற்கொண்ட இச்சோதனைகளே, பின்னாளில் பாரா சைக்காலஜி என்ற தனி ஆராய்ச்சித் துறை உருவாவதற்கு வழிவகுத்தன.

1900களில் எஸ்.பி.ஆர் அமைப்பினர் மேற்கொண்டது ஒரு பெரிய ஆராய்ச்சிப் பயணமாகும். அவர்கள் ஆவிகளைத் தேடிச் செல்லவில்லை; உண்மையைத் தேடியே சென்றனர். மூடநம்பிக்கை என்னும் இருண்ட அறையில் அறிவியல் என்னும் ஒளியைப் பாய்ச்சினர். அந்த வெளிச்சத்தில் பெரும்பாலான ஆவிகள் வெறும் நிழல்களாகவும், ஏமாற்று வேலைகளாகவும் கலைந்துபோயின.

எனினும், அதே வெளிச்சத்தில் மனித மூளையின் விவரிக்க முடியாத சில புதிர்களும் வெளிப்படைத்தன்மை பெற்றன. "மனித மூளையைக் காட்டிலும் பெரிய அமானுஷ்யம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை!" என்பதே எஸ்.பி.ஆரின் ஆராய்ச்சிகள் உணர்த்திய இறுதி உண்மை.

*****