Sunday 15 August 2021

சூரியன் வருவது யாராலே? - குழந்தைப் பாடல்

சூரியன் வருவது யாராலே?

            நாங்கள் சிறு வயதில் முதல் வகுப்பு படித்த போது படித்த பாடல் ‘சூரியன் வருவது யாராலே?’ எனத் துவங்கும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் எழுதிய பாடல். அந்த வயதில் மிகவும் தத்துவப் பொதிவு மிக்க பாடலாக இதைத் தேர்வு செய்து முதல் வகுப்பில் வைத்து விட்டதாக ஒரு கருத்து நிலவியதுண்டு. எனினும் எளிய வார்த்தைகளில் வலிமையான கருத்துகளை வைத்து கவிதையாடுவதில் நாமக்கல் கவிஞரும், கவிமணியும் வல்லவர்கள். அப்போதெல்லாம் பாடல்களைப் பாடிய பின்புதாம் வகுப்புத் துவங்கும். அப்படி இந்தப் பாடலை முதல் வகுப்பு முழுவதும் பாடிப் பாடி மனதில் பதிந்தது இப்பாடல். இப்பாடலின் சில வரிகள் அப்போது முதல் வகுப்பில் இருந்தன. இப்போது அண்மையில் முழுமையான பாடலை வாசிக்க நேர்ந்தது. சிறு வயது ஞாபகங்கள் மனதில் வந்து புகுந்து விட்டன. இது போல் தொண்ணூறுகளில் பால்ய வயதில் இருந்தவர்களுக்கும் நேரிடலாம் என்பதால் முழுப் பாடலையும் கீழே அனைவரின் அனுபவத்துக்காகவும்… அனைவரும் இந்தப் பாடலை ஒரு முறை படித்தோ பாடியோ பார்க்கலாம். நாமக்கல் கவிஞரின் சொல் நயம் புலப்படும் பாடல்.

சூரியன் வருவது யாராலே?

சூரியன் வருவது யாராலே?

சந்திரன் திரிவதும் எவராலே?

காரிருள் வானில் மின்மினிபோல்

கண்ணிற் படுவன அவைஎன்ன?

 

பேரிடி மின்னல் எதனாலே?

பெருமழை பெய்வதும் எவராலே?

யாரிதற் கெல்லாம் அதிகாரி?

அதைநாம் எண்ணிட வேண்டாவோ?           

 

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்

தரையில் முளைத்திடும் புல் ஏது?

மண்ணில் போட்டது விதையொன்று

மரஞ்செடி யாவது யாராலே?

 

கண்ணில்தெரியாச் சிசுவை எல்லாம்

கருவில் வள்ர்பதுயார் வேலை?

எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்

ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ?

 

எத்தனை மிருகம்! எத்தனை மீன்!

எத்தனை ஊர்வன பறப்பனபார்!

எத்தனை பூச்சிகள் புழுவகைகள்!

எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!

 

எத்தனை நிறங்கள் உருவங்கள்!

எல்லா வற்றையும் எண்ணுங்கால்

அத்தனை யும்தர ஒருகர்த்தன்

யாரோ எங்கோ இருப்பதுமெய்.

 

அல்லா வென்பார் சிலபேர்கள்;

அரன் அரியென்பார் சிலபேர்கள்;

வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தையென்பார்கள்;

 

சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’

என்றும் சிலபேர் சொல்வாகள்;

எல்லா மிப்படிப் பலபேசும்

ஏதொ ஒருபொருள் இருக்கிறதே!


அந்தப் பொருளை நாம்நினைத்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்,

எந்தப் படியாய் எவர் அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன?

 

நிந்தை பிறரைப் பேசாமல்

நினைவிலும் கெடுதல் செய்யாமல்

வந்திப்போம் அதை வணங்கிடுவோம்;

வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

-          நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்

 

No comments:

Post a Comment