Monday 12 December 2022

கி.வா.ஜ. வின் சிலேடை நயங்கள்

கி.வா.ஜ. வின் சிலேடை நயங்கள்

முகநூலிலும் புலனத்திலும் அதிகம் பகிரப்பட்ட கி.வா.ஜகந்நநாதன் எனப்படும் கி.வா.ஜ.வின் சிலேடை நயங்கள் குறித்த இப்பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று பகிர்கிறேன். குறிப்பாக பேச்சாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுவாரசிய தகவல் விரும்பிகளுக்கும் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதரின் மாணவர். உ.வே.சா.வின் என் சரித்திரத்தை ‘என் ஆசிரியர்பிரான்’ என்ற தலைப்பில் நூலாக எழுதி நிறைவு செய்த சிறப்புக்கும் உரியவர்.

Ø கி.வா.ஜகந்நாதன் ஒரு ஊருக்குப் பேச்சாளராகச் சென்றார்.  அவருக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்பவர், "தங்களுக்குப் பூரி பிடிக்குமா? என்று கேட்டார். அதற்கு இவர், 'ஜகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?' என்று சொல்ல, அருகிலிருந்தவர்கள் அவரின் சிலேடை நயத்தை ரசித்துச் சிரித்தனர்.

Ø ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கை கழுவ வந்தார், கி.வா.ஜ. ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அவர் கை கழுவத் தந்தார் ஒரு அன்பர். “சாதாரணமாக நீரில்தான் குவளை (மலர்) இருக்கும். இங்கே குவளையில் நீர் இருக்கிறது.” என்றார் கி.வா.ஜ. சிலேடை நயத்தோடு.

Ø கி.வா.ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் ‘இம்மை – மறுமை’ என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ. உடனே “இம்மைக்கும் சரியில்லை,  அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல, அனைவரும் ரசித்தனர்.

Ø ஒரு குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அப்போது அங்கே அருகில் இருந்தார் கி.வா.ஜ. “உப்புமாவைத் தின்ன முடியலையோ? உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா?'' எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி. உடனே கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு பார்த்தார். பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார். ஏன் என்று அந்த அம்மா கேட்டார், “ஊசி இருக்கிறது” என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ. சிலேடை நயத்தோடு.

Ø கி.வா.ஜ. ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப் பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு இருமல் Syrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள். கி.வா.ஜ. அவர்கள் “இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் ‘சிறப்பு’ (Syrup) என்கிறார்கள்” என்று கேட்டார் சிலேடை நயத்தோடு.

Ø பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர். பாராட்டுரை சொல்ல வந்த கி.வா.ஜ. பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, “நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்” என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது. அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி.வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, "நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பே-னாவால் கௌரவிக்கிறார்" என்றதும் மறுபடியும் கைதட்டல் எழுந்து வானைப் பிளந்தது.

Ø ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து நடந்தது. கி.வா.ஜ.வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க, கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார். “அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்என்றார் முதலாளி. “ஓகோ! கடை சிப்-பந்திக்குக் கடைசிப் பந்தியா?!” என்று கேட்டார் கி.வா.ஜ. சிலேடை நயம் ததும்ப.

Ø ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார். மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க, “மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!” என்றார் கி.வா.ஜ. சிலேடை நயத்தோடு.

Ø சிலேடையால் மடக்கும் கி.வா.ஜ.வைச் சிலேடையால் ஒரு பெண் மயக்கினார். ஒரு பெண்மணி அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள். கி.வா.ஜ. “இன்னிக்கு வேணாமே! தொண்டை கம்மியிருக்கு...” என்றார். அதற்கு அந்தப் பெண் சொன்னாள் “பரவாயில்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.” எனச் சிலேடை நயத்தோடு.

Ø ஒரு தடவை அவருக்குப் போர்த்திய பொன்னாடை கிழிந்து இருந்தது. அதற்கு அவரின் சிலேடையான பதில் "இந்த பொன்னாடையில் பூ இருக்கிறது, பழம் இருக்கிறது, பிஞ்சும் இருக்கிறது.”

*****

No comments:

Post a Comment