Sunday 9 April 2023

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வீட்டுக்கடன் சலுகை

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வீட்டுக்கடன் சலுகை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கி அதிக வட்டித்தொகை கட்டுவதை விட தமிழக அரசு வழங்கும் வீட்டுக்கடனைப் பயன்படுத்திக் கொள்வதின் மூலமாகக் கணிசமாக வட்டித்தொகையை மிச்சப்படுத்தலாம்.

தமிழக அரசு தரும் வீட்டுக்கடன் தொகையைப் பயன்படுத்துவதால் ஐம்பது லட்சம் வரையுள்ள கடனுக்கு எட்டு சதவீத வட்டி கட்டினால் போதுமானது. ஐம்பது லட்சத்துக்கு மேலான தொகைக்கு ஒன்பது சதவீதம் வட்டி கட்டினால் போதுமானது. அதுவும் தனிவட்டி முறையில். இதுவே வங்கிக்கடன் என்றால் நீங்கள் கூட்டி வட்டி முறையில் கட்டியாக வேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் வங்கி மூலமாக ஐம்பது லட்சம் வீட்டுக்கடன் பெற்றால் நீங்கள் வட்டியோடு திருப்பிச் செலுத்தும் தொகை சுமார் ஒரு கோடியை எட்டும். அதுவே அரசு வழங்கும் வீட்டுக்கடன் என்றால் நீங்கள் வட்டியோடு திருப்பிச் செலுத்தும் தொகை சுமார் எண்பது லட்சமாக இருக்கும். உங்களுக்கு சுமாராக இருபது லட்ச ரூபாய் வரை மிச்சமாகும். இதுதான் வங்கிகளில் வாங்கும் வீட்டுக்கடனுக்கும் அரசு மூலமாகப் பெறும் வீட்டுக்கடனுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

அரசு மூலமாகப் பெறும் வீட்டுக்கடனால் உங்களுக்குக் கணிசமான தொகை மிச்சமாகும் என்பதால் நீங்கள் தமிழக அரசு ஊழியராக இருக்கும் பட்சத்தில் அரசு மூலமாக வீட்டுக்கடன் பெறுவது உங்களது திருப்பிச் செலுத்தும் தொகையைப் பெருமளவு குறைத்து விடும். அரசு வழங்கும் இவ்வீட்டுக்கடனை நீங்கள் மனை வாங்குவதற்காகவும் பயன்படுத்தலாம். மனை வாங்கி வீடு கட்டவும் பயன்படுத்தலாம். கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்கவும் பயன்படுத்தலாம்.

2023 ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையின் படி, தமிழக அரசு வழங்கும் வீட்டுக்கடனை ஐம்பது லட்சத்திலிருந்து உங்களது சம்பளத்தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதிகபட்சமாக 90 மாதச் சம்பளம் வரை பெறலாம்.

தமிழக  அரசு வழங்கும் இந்த வீட்டுக்கடன் உதவியைப் பெற நீங்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் தமிழக அரசு ஊழியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை மட்டும் பூர்த்தி செய்தால் போதுமானது.

இப்பயனுள்ள தகவல் மூலமாக தமிழக அரசு வழங்கும் வீட்டுக்கடனைப் பெற்று பணத்தைக் குறிப்பாக வட்டியாகக் கட்டும் பேரளவு தொகையை மிச்சப்படுத்துங்கள். இப்பயனுள்ள தகவலைப் பலருக்கும் பகிர்ந்து பலரும் பயன் பெற்று ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனப் பலருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

*****

No comments:

Post a Comment