Saturday 16 March 2024

டிஜிட்டல் ஆப்களில் கடன் வாங்க வேண்டாம்!

டிஜிட்டல் ஆப்களில் கடன் வாங்க வேண்டாம்!

டிஜிட்டல் ஆப்களில் கடன் வாங்க வேண்டாம் என்பதற்கான முக்கியமான காரணம், டிஜிட்டல் ஆப்களின் கடனுக்கான வட்டி விகிதம் 40 சதவீதத்திற்கு மேல். இது கிரெடிட் கார்டுக்கான வட்டி விகிதத்தை விட அதிகம். மேலும் கிரெடிட் கார்டுக்கான வட்டி விகிதம் என்பது ஓராண்டு என்ற கால அளவை அடிப்படையாகக் கொண்டவை. கடன் ஆப்களின் வட்டி விதிகம் என்பது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் என்ற கால அளவை உடையவை.

டிஜிட்டல் ஆப்கள் மூலம் கடன் வாங்குபவர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் அறிவோ, ஆங்கில அறிவோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு இந்த கடன் ஆப்கள் மட்டும் எப்படியோ அறிமுகமாகி விடுகின்றன. பெரும்பாலும் கல்வி அறிவற்ற தினக் கூலிகள், மாணவர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் இந்த கடன் ஆப்களில் சிக்கிக் கொள்கிறார்கள்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடன் ஆப்கள் ப்ளே ஸ்டோரில் புழங்குகின்றன. இவற்றில் பதிவு செய்யப்பட்டவையும் இருக்கின்றன, பதிவு செய்யப்படாதவையும் இருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து இயங்கும் ஆப்களும் இருக்கின்றன.

இந்தக் கடன் ஆப்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இயங்குவதால் அதன் விதிமுறைகள், வட்டி விகிதம் போன்றவை பற்றி பலரும் அறிந்து கொள்வதில்லை. கடன் வாங்கும் அவசரத்தில் இருக்கும் பலர் இவற்றைப் படித்துப் பார்ப்பதையும் விரும்புவதில்லை.

விளையாட்டு ஆப்பை டவுன்லோட் செய்து விளையாடுவது போலப் பலரும் கடன் ஆப்பை டவுன்லோட் செய்து கடன் வாங்கி சிக்கிக் கொள்கிறார்கள்.

இப்படிக் கடன் வாங்கிச் சிக்கிக்கொள்வதால் என்ன நேரிடும் என்றால் பத்தாயிரம் கடனைக் குறித்த காலத்தில் கட்டினாலும 14000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். ஒரு வேளை கட்டத் தவறினால் அபராதம் விதிக்கப்பட்டு பத்தாயிரம் கடனை இருபதாயிரம், முப்பதாயிரம் என்று கட்ட வேண்டியிருக்கும்.

கடனைக் கட்டாமல் மேலும் தவிர்க்க நினைத்தால் கடன் தந்த நிறுவனம் உங்களுடைய உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் அலைபேசியில் உங்களைப் பற்றிய ஆபாசமான, அசிங்கமான செய்திகளை அனுப்பத் துவங்கும். கடன் ஆப் நிறுவனங்களுக்கு எப்படி அவர்களுடைய எண்கள் தெரியும் என்றால் நீங்கள் கடனுக்கான ஆப்பை டவுன்லோட் செய்யும் போதே, உங்கள் தொடர்பில் உள்ள அத்தனை எண்களையும் கடன் ஆப் உறிஞ்சி எடுத்துக் கொண்டு வைத்து விடும்.

அத்துடன் உங்களுக்குப் பொய்யான போலீஸ் அறிக்கைகள் மற்றும் லீகல் நோட்டீஸ்களையும் அனுப்பும். இதனால் உங்களை மான பங்கப்படுத்தும் மற்றும் தற்கொலைக்குத் தூண்டும். கடனைக் கட்டினால் அன்றி உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை என்று ஒரு வழி செய்து விடும்.

நாட்டில் நடைபெறும் பொருளாதார மோசடிகளில் கால்வாசிக்கு மேல் கடன் ஆப்களில் நடைபெறுகின்றன என்பதால் இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். கடன் ஆப்களில் கடன் வாங்காமல் இருங்கள்.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

*****

No comments:

Post a Comment