Thursday 2 March 2023

கல்வியின் அருமையை உணர்த்திய எம்.ஜி.ஆர்.

கல்வியின் அருமையை உணர்த்திய எம்.ஜி.ஆர்.

கல்வியின் அருமை குறித்து எம்.ஜி.ஆர். கூறியதாக ஒரு செய்தியை முகநூலிலும் புலனத்திலும் வாசிக்க நேர்ந்தது. அந்தச் செய்தியைப் படிக்க படிக்க நெகிழ்ச்சியாகவும் உருக்கமாகவும் இருந்தது.

படிப்பின் மேல் ஆர்வம் இல்லாதவர்களையும் படிப்பின் மேல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அப்பகிர்வின் சாராம்சம் இருந்தது. அப்பகிர்வுகள் மனதில் உண்டாக்கும் மந்திர மாற்றங்களை வார்த்தையில் சொல்லி விட முடியாது. ஆகவே அச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

எம்.ஜி.ஆர். ஒரு கல்லூரிக்குச் சென்றார். அங்கு அவர் பேசியது சில வார்த்தைகள்தான். அந்த வார்த்தைகள் கல்வியின் முக்கியத்துவத்தைக் காலா காலத்துக்கும் உணர்த்துவனவாக இருந்தன. அவர் பேசிய விவரமாவது,

“மாணவர்களே! நான் இன்று முதல்வர். இந்திராகாந்தி முதல் அமெரிக்க அதிபர் வரை பேசும் செல்வாக்கு உடையவன்.

என்னை அனுதினமும் சந்திக்க காத்துகிடக்கும் கோடீஸ்வரர்கள் ஏராளம். உதவி பெற வரிசையில் நிற்போர் ஏராளம். தினமும் என் வீட்டில் பசியாறுவோரும் ஏராளம். அப்படிபட்ட என்னால் வாங்க முடியாதது கல்வி.

இன்று மாகாண முதல்வர் என்றாலும் என் கல்வி நிலை நான்காம் வகுப்புத்தான். எனக்கும் படிக்கும் ஆசை இருந்தது. ஆனால் அதைவிட பலமடங்கு வறுமை வீட்டில் இருந்தது. நடிக்க வந்துவிட்டேன்.

எனக்குமட்டுமல்ல உலகில் எத்தனையோ பேருக்கு கிடைக்காத பாக்கியம் கல்வி. அது உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. அரசியல் எப்பொழுதும் செய்யலாம். உரிமைகளை எப்பொழுதும் கோரலாம். ஆனால் படிப்பு உரிய காலத்தில் இல்லாவிட்டால் படிக்க முடியாது.

என் செல்வங்களே! எனக்கு கிடைக்காத கல்வி உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. அதை நல்லமுறையில் படித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுள்ள மனிதர்களாக வாழுங்கள். அதுதான் இந்த அரசின் முதல் கடமை.

அதனால்தான் இன்றளவும் காமராஜரை என் வழிகாட்டியாக கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு எனச் சோறுபோட்டு படிக்க வைக்கும் முயற்சியினை எடுக்கின்றேன்.

எனக்கும் அன்று இப்படி சோறு போட ஒரு அரசு இருந்திருந்தால் நான்காம் வகுப்பை தாண்டாதவன் எனும் அவமானத்தோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்க‌ மாட்டேன்.”

எம்.ஜி.ஆர். இப்படிப் பேசியதும் அரங்கத்தில் ஒரு சலசலப்பில்லை. மாணவர்கள் உண்மை உணர்ந்தனர். அவர்களை பெற்றவர்கள் கையெடுத்து அவரை வணங்கி கொண்டிருந்தனர். அவர்தான் எம்ஜி.ராமசந்திரன். மக்களின் மனம் அறிந்ததாலேயே அவர் மக்கள் திலகமுமானார்.

உண்மைதானே!

*****

No comments:

Post a Comment