Thursday 25 June 2020

உங்களை வழிநடத்தும் நம்பிக்கை!

மனதோடு வீசும் மென்காற்று :

உங்களை வழிநடத்தும் நம்பிக்கை!
உங்கள் வாழ்வை, மனதை
எது வழிநடத்துகிறது என்று தெரியுமா?
நம்பிக்கைத்தான் வழிநடத்துகிறது.

அசெளகரியங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
துரதிர்ஷ்டங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
காயங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
வலிகள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
துக்கங்கள் எங்கே இல்லை சொல்லுங்கள்!
அவை எங்கும் எல்லா இடத்திலும் இருக்கின்றன
ஏனென்றால் வாழ்க்கை என்பது
அசெளகரியங்களும், துரதிர்ஷ்டங்களும்,
காயங்களும், வலிகளும், துக்கங்களும் சூழ்ந்ததுதான்.

புயல் வராது என்று சொல்வதற்கில்லை
பூகம்பம் நேராது என்று சொல்வதற்கில்லை
எரிமலை வெடிக்காது என்று சொல்வதற்கில்லை
அவை எப்போது வேண்டுமானால் தாக்கலாம்
வாழ்க்கை எப்போதும் அதனால் நிச்சயமற்றது
ஆனால் நம்பிக்கை எப்போதும் நிச்சயமானது.

நீங்கள் நல்லதே செய்தாலும்
தவறாகக் கருதப்படலாம்.
உதவியே செய்தாலும்
உபத்திரவமாக உணரப்படலாம்.
உதவும் முயற்சியில் தாக்கப்படலாம்
மரணத்தைத் தொட்டு விட்டும் வரலாம்
நம்பிக்கை எப்போதும் உங்களைக் காப்பாற்றும்
நம்பிக்கை தோற்காது
நம்பிக்கை சாகாது.

நம்பிக்கை சக்தி வாய்ந்தது, ஆற்றல் மிக்கது,
எப்போதும் எழுச்சி தரக் கூடியது.
அதன் ஒளி மகத்தானது, மகோன்னதமானது.
நம்பிக்கையின் பலத்தை, வலிமையை,
அதன் பேராற்றலை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்பிக்கை கருணையோடு வழிநடத்தும்
புதியப் பாதையைக் காட்டும்
ஆறுதலை ஆலோசனையைத் தரும்.

நம்பிக்கையே மனித குலத்தை வழிநடத்துகிறது
உங்கள் வாழ்க்கையின் உன்னதமான நம்பிக்கையை
உங்கள் மனதிலிருந்து கண்டடையுங்கள்
நம்பிக்கையோடு நடக்கும் போது
நம்பிக்கையே உங்கள் கை பிடித்து வழிகாட்டும்.
நம்பிக்கையால் எந்த தொந்தரவும் உங்களை பயமுறுத்தாது.
எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் உண்டாகும்.
அதை தங்கம் என்பதா? வைரம் என்பதா?
பொக்கிஷம் என்பதா?
அதை விட இன்னும் மேலானது என்பதா?
அதனால்தான் அதை அடைந்தவர்கள்
மாபெரும் மனிதர்களாகிறார்கள்
உலகுக்கே வழிகாட்டுகிறார்கள்.
*****

No comments:

Post a Comment