Sunday 28 June 2020

நம்பிக்கையை நெருங்குங்கள்!

மனதோடு வீசும் மென்காற்று :

நம்பிக்கையை நெருங்குங்கள்!
நம்மை விழும் போது இறுக்கிப் பிடிப்பது
துவளும் போது தாங்கிப் பிடிப்பது
நம்பிக்கையே!

நம்பிக்கையை நெருங்குவதன் மூலம்
நம்மை நாமே நெருங்குகிறோம்.
நம்மிலிருந்து விலகி நிற்கும் நமக்கு
நம்மை நாமே நெருங்குவதற்கான ஏற்பாடு
நம்பிக்கையே!

வாழ்க்கையில் நிஜமான வேதனையையும், துன்பத்தையும்
தரக் கூடியது எது தெரியுமா?
இலட்சியத்தைக் கைவிடுவதும்,
கனவுகள் நிறைவேறாமல் போவதும்தான்.
அந்த வேதனைக்கும், துன்பத்திற்கும் மருந்திருக்கிறது
நம்பிக்கைதான் அந்த மாமருந்து.

இன்னல்களைக் கண்டு இடிந்துப் போகாதீர்கள்!
துயரங்களைக் கண்டு துவண்டுப் போகாதீர்கள்!
இன்னல்களால், துயரங்களால்
நாம் நம்பிக்கையை மிக அதிகமாக நெருங்குகிறோம்.
நமது நம்பிக்கை
இன்னல்களை இல்லாமல் போகச் செய்கிறது,
துயரங்களைத் துடைத்துத் தூர வீசி விட்டுப் போகிறது.

நோய்கள் நம்மை வாட்டலாம்
தோல்விகள் நம்மை வருத்தலாம்
வலிகள் நம்மை வேதனைப்படுத்தலாம்
தனிமைகள் நம்மை தளர்வுறச் செய்யலாம்
அவை நரகத்தின் படிகட்டுகள் அல்ல
நரகத்தைக் கடந்து
சொர்க்கத்தை நோக்கிச் செல்லும் படிகட்டுகள்
நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு
சொர்க்கத்தின் படிகட்டுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.

நம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் தோற்பதில்லை
சூரியன் மறைந்த பின்னும்
இருள் கவிந்த பின்னும்
தோல்விகள் சூழ்ந்த பின்னும்
நம்பிக்கை அணைவதில்லை
நம்பிக்கை தோற்பதில்லை
நம்பிக்கை நம்மோடு இருக்கும் வரை
தோல்விகள் தோல்விகளில்லை
நம்பிக்கையை இழந்து பெறும்
வெற்றிகளும் வெற்றிகளில்லை.

நமக்கு நம்பிக்கைத் தருவதை
வேறெந்தச் சக்தியாலும் தர முடியாது
நம்பிக்கை அசைக்க முடியாத சக்தி
தளராத மனதையும்
குறையாத பொறுமையையும்
நம்பிக்கையே நமக்குத் தருகின்றது.
தோல்வி வேண்டாத விருந்தாளியாக வரும் போது
நம்பிக்கை
வெற்றியை புதிய விருந்தாளியாக
கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது
நம்பிக்கையை நாம் கைவிடா வரை
வெற்றி நம்மை கைவிடுவதில்லை
நம்பிக்கையை நாம் கைவிடும் போதுதான்
வெற்றி நம்மை கைவிடுகிறது.
நம்பிக்கையை எப்போதும் கைவிடாதீர்கள்!
நம்பிக்கையை நெருங்குங்கள்
வெற்றி நம்மை நெருங்கும்!
*****



No comments:

Post a Comment