Monday 29 June 2020

நம்பிக்கையால் கிடைக்கும் மதிப்பு!

மனதோடு வீசும் மென்காற்று :

நம்பிக்கையால் கிடைக்கும் மதிப்பு!
நம்பிக்கை வைரம் போன்றது
எப்போதும் மதிப்பு மிக்கது
வைரத்தை வசப்படுத்துவதுப் போல
நம்பிக்கையை வசப்படுத்துவதும்
எப்போதும் மதிப்பு மிக்கதும் உயர்வானதும் ஆகும்.
வாழ்க்கையின் நம்பிக்கையைக் கூட்ட
நம்பிக்கையைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் மரிக்கலாம்
வானம் இல்லாமல் போகலாம்
பூமி புதையுண்டு போகலாம்
நம்பிக்கை அப்பிடி கிடையாது
சாசுவதமானது, நிரந்தரமானது.
நம்பிக்கை மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்
நம்பிக்கை இறவாமை உடையது!

விதைக்கும் அனைத்து விதைகளும்
முளை விட்டு விடுவதில்லை
மனதில் எழும் எண்ணங்கள் அனைத்தும்
சாதனை படைத்து விடுவதில்லை
உன்னதமான விதையே
உயர்வாக முளைத்தெழுகிறது
வைராக்யமான எண்ணமே
சாதனையாக உருபெறுகிறது
நம்பிக்கை விதைகளில் உன்னதமானது
செழுமையான வாழ்வைத் தரும் நம்பிக்கை என்பது
அளவிட முடியாத அட்சயப் பாத்திரம்.

தோற்கும் மனிதரும் பூமியில் ஒரு மனிதரே!
வெல்லும் மனிதரும் பூமியில் ஒரு மனிதரே!
இரண்டு மனிதர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்பது
அவர்களுக்கு இடையே இருக்கும்
வலிமையும், புத்துணர்ச்சியுமே ஆகும்.
புத்துணர்ச்சியோடும் வலிமையோடும்
உயிர்த்தெழச் செய்யும் வரம் நம்பிக்கையிடம் உள்ளது.
நம்பிக்கை புத்துணர்ச்சியின் ஊற்று.
நம்பிக்கை வலிமையின் கருப்பை.

வானம் அளக்க பறவைகளுக்குச் சிறகே பிரதானம்
கடலை அளக்க மீன்களுக்கு துடுப்பே பிரதானம்
வாழ்க்கைய அளக்க மனிதர்களுக்கு நம்பிக்கையே பிரதானம்
பறவைகளுக்குச் சிறகுகளைப் போல
மீன்களுக்குத் துடுப்புகளைப் போல
மனிதருக்கு நம்பிக்கை.

வாழ்க்கையின் மதிப்பு
வாழ்ந்ததைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.
நம்பிக்கையே அங்கே அளவிடவும் மதிப்பிடவும்
பயன்படுகிறது.
நம்பிக்கையோடு வாழ்ந்ததைக் கொண்டுதான்
வாழ்க்கை மதிப்பிடப்படுகிறது.
நம்பிக்கையற்ற வாழ்க்கை மதிப்பிடுவதற்கான
தகுதிக்குரியதே இல்லை.
வாழ்க்கையின் மதிப்பை உயர்த்திக் கொள்ள
நம்பிக்கையோடு இருங்கள்!
நம்பிக்கை வைரத்தைப் போன்றது
வைடூரியத்தைப் போன்றது
ரத்தினத்தைப் போன்றது
வாழ்க்கையின் மதிப்பை
நம்பிக்கைக் கூட்டுகிறது
மனிதரின் மதிப்பை
நம்பிக்கை புகழ் ஏணியில் ஏற்றுகிறது.
*****


No comments:

Post a Comment