Sunday 23 January 2022

இரு நம்பிக்கை நட்சத்திரங்கள்

இரு நம்பிக்கை நட்சத்திரங்கள்

            இன்றைய நம்பிக்கை நட்சத்திரங்களாக இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் இளம் பகவத். மற்றொருவர் மாளவிகா ஹெக்டே.

            இளம் பகவத் ஆட்சிப் பணித் தேர்வில் சாதித்தவர். மாளவிகா ஹெக்டே கடனில் தத்தளித்த கணவரின் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தியவர்.

            தந்தையின் இழப்பினை அடுத்து கருணை அடிப்படையிலான பணிக்காகத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு அலையாய் அலைந்தவர் இளம் பகவத். ஆட்சியரகம் அவருக்கு வேலையைத் தரவில்லை. வலிகளையும் வேதனைகளையும்தான் தந்திருக்கிறது. அந்த வலிகளையும் வேதனைகளையும் உரமாக்கிக் கொண்டு குருப் 4, குருப் 1 எனப் படிப்படியாகச் சாதித்து ஐ.ஏ.எஸ். எனும் சிகரத்தை எட்டியிருக்கிறார் இளம் பகவத்.

            காபி டே எனும் கபேக்களைத் திறந்து பிரபலமானவர் சித்தார்த். எந்த காபி டேயால் பிரபலமானாரோ அதன் கடன் சுமை கழுத்தை நெரித்த போது தற்கொலை செய்து கொண்டார் சித்தார்த். சித்தாத்தின் மனைவி மாளவிகா. கணவரின் இழப்பு ஒரு பக்கம், கழுத்தை நெரிக்கும் கடன் சுமை மறுபக்கம். நிறுவனத்தின் தலைமையேற்று 7000 கோடியாக இருந்த கடனைப் பாதியாகக் குறைத்திருக்கிறார்.

            இளம் பகவத் தந்தையின் இழப்பைத் தாங்கிக் கொண்டு சாதித்தவர் என்றால் மாளவிகா கணவரின் இழப்பைத் தாங்கிக் கொண்டு சாதித்தவர். இருவரும் இழப்பினின்று மீண்டு வந்து சாதிப்பதற்கான புதிய பாடத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

            அரசு பணிக்காக இளம் பகவத் சந்தித்தவேதனைகளும் வலிகளும் அதிகம். கடன் சுமையிருந்து நிறுவனத்தை மீட்பதற்குள் மாளவிகா சந்தித்த வேதனைகளும் வலிகளும் அதிகம். இருவரும் வலிகளையும் வேதனைகளையும் வென்றிருக்கிறார்கள்.

            இழப்புகளும், வலிகளும், வேதனைகளும் எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்கின்றன. அவற்றைக் கடந்து வந்து தன்னை நிரூபிப்பவர்களைச் சாதனையாளர்களாகத்தான் குறிப்பிட வேண்டும் அல்லவா! அத்துடன் இவர்கள்தான் இன்றைய சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களும் அல்லவா!

*****

No comments:

Post a Comment