Sunday 20 November 2022

மழை பற்றி படித்ததில் பிடித்தது

மழை பற்றி படித்ததில் பிடித்தது

முகநூலில் (Facebook), கீச்சில் (Twitter), புலனத்தில் (Whatsapp) மழையைப் பற்றி விதவிதமாக பல காலமாக பலமுறை வந்த தகவல்களில் இந்தத் தகவல் எனக்கு மிகவும் படித்திருந்தது. பலமுறை இந்தத் தகவல் படிக்கப்பட்டோ, படிக்கப்படாமலோ தொடர்ந்து பகிரப்பட்டுப் பரிமாறப்பட்டுக் கொண்டு இருந்தது. இத்தகவலில் ஒரு முழுமையற்ற தன்மை இருந்தாலும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் என்பது புலப்பட்டது. நான் சில தகவல்களைச் சேர்த்து ஓரளவு முழுமைபடுத்தியிருக்கிறேன். இன்னும் இது முழுமைப்படுத்தவும் ஆராயப்படவும் வேண்டும். இத்தகவலைப் படித்தால் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதனால் பகிர்கிறேன். உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் பகிருங்கள். கைம்மாறு கருதாத மழைக்கு நாம் செய்யும் கைம்மாறு இந்தப் பகிர்தலாகவும் இருக்கலாம்.

மழை என்பது காரணப் பெயர்

மழ = தமிழில் உரிச்சொல்.

மழ களிறு= இளமையான களிறு

மழவர் = இளைஞர்கள்

அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே மழை எனும் சொல். மழ + ஐ = மழை.

இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை என்பது காரணப் பெயர்.

மழையைக் குறிக்கும் பல சொற்கள்

மழையைப் பின்வரும் சொற்களால் குறிப்பர். எனினும் இச்சொற்கள் அனைத்தும் ஒரே வகையான மழையைக் குறிக்காமல் அவற்றிற்கிடையே நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. மழையைக் குறிக்கும் பல்வேறு சொற்களாவன,

1. மழை

2. மாரி

3. தூறல்

4. சாரல்

5. ஆலி

6. சோனை

7. பெயல்

8. புயல்

9. அடை மழை

10. கன மழை

11. ஆலங்கட்டி

12. ஆழிமழை

13. துளி மழை

14. பனி மழை

இப்பல சொற்களுக்கு இடையே இருக்கும் நுட்பமான வேறுபாடுகள் குறித்து ஒவ்வொன்றாகக் காண்போம்.

1. மழை

இளமையாக மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல!

2. மாரி

சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல! அதாவது தாய்ப்பால் சுரக்கும் மாரிலிருந்து பெய்வது போல பெய்வதால் மாரி என்பதாக இப்பெயர் காரணப்பெயராக இருப்பது அறியத்தக்கது. காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது. அதனால்தான் இலக்கியங்களில் ‘மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆக மழைக்கும் மாரிக்கும் வேறுபாடு இருக்கிறது.

3. தூறல்

காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும். ஆனால் விரைவில் காய்ந்து விடும்.

4. சாரல்

பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும். மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்.

சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு. ‘சாரலடிக்குது சன்னலைச் சாத்து’ என்று நடைமுறையில் கூறுவதைக் கவனிக்கதக்கது.

சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்.

அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர்.

சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்

சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும். மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்.

5. ஆலி

ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி. உடலோ உடையோ நனையாது.

6. சோனை

மழை அறிகுறி காட்டும் மேகக் கட்டு மழை. ஆனால் மண் நனைவதற்குள் பெய்த அறிகுறி இன்றி நின்று விடும் மழை.

7. பெயல்

நிலத்தில் பெய்து மண்ணோடு மண்ணாய்க் கலந்து பெருகி ஓடும்படி பெய்யும் மழை. அதாவது செம்புலப் பெயல் போல சங்க இலக்கியத்தில் சிறப்பிக்கப்படும் மழை.

8. புயல்

காற்று அடிக்கும் போது கூடவே பெய்யும் மழை

9. அடைமழை

பார்வையை அடைத்தபடி அதாவது மறைக்கும் படி பெய்யும் மழை. ஐப்பசியில் பெய்யும் மழையைப் பொதுவாக அடைமழை என்பர்.

அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்குக் கிடைக்கும்.

ஏன் அடைமழை என்கிறோம்?

அடைமழை = வினைத்தொகை!

அடைத்த மழை (இறந்த காலம்)

அடைக்கின்ற மழை (நிகழ் காலம்)

அடைக்கும் மழை (எதிர் காலம்)

விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை = அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!

10. கனமழை

துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும் மழை. கார்த்திகையில் பெய்யும் மழையைப் பொதுவாகக் கனமழை என்பர்.

11. ஆலங்கட்டி மழை

திடீரென வெப்பச் சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து, மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை. இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும். புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

12. ஆழி மழை  

ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை.

13. துளி மழை

தளிர்கள் துளிர்க்கும் வகையில் பெய்து பச்சைப் பசேலெனப் பசுமையை உண்டாக்கும் மழை. இவ்வகை மழையை விசும்பின் துளி என்று வள்ளுவர் குறிப்பிடுவது அறியத்தக்கது.

14. பனி மழை

நீர்த்துளி இறுகி பனியாகப் பெய்யும் மழை. இமயமலை போன்ற மலைப் பகுதிகளில் பெய்யும் மழை. மார்கழி, தை மாதங்களில் பெய்யும் பனிப்பொழிவைப் பனிமழை எனக் கூறுவதும் உண்டு.

*****

No comments:

Post a Comment