குழந்தைக் கல்வியின் பிதாமகர் மாண்டிசோரி!
மரியா
மாண்டிசோரி ஆகஸ்ட் 31, 1870 இல் இத்தாலியில் பிறந்தவர். 1952 இல் அவர் மறைந்த போது
உலகெங்கும் 70 ஆயிரம் மாண்டிசோரி பள்ளிகள் இயங்கின. இன்றைய குழந்தை மைய கல்விமுறைக்கு
அவரது கல்வி முறையே அடித்தளம். இதுவே அவரது கல்வி முறையின் சாதனை.
மாண்டிசோரி
1939 இல் இந்தியா வந்திருக்கிறார். அன்னிபெசன்ட் அம்மையாரின் அழைப்பை ஏற்று இங்கு வந்த
அவரை இந்தியா வெகுவாகக் கவர்ந்தது. இந்தியாவைத் தன்னுடைய இரண்டாம் தாய் வீடு என்று
குறிப்பிட்டுள்ளார் மாண்டிசோரி.
அவர்
அப்போது இந்திய விடுதலைப் போராட்டத்துக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்
என்பது நாம் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய வியப்பான செய்தி. குழந்தைகளின் கல்வியோடு
அவர் மக்களுக்கான சுதந்திரத்தையும் பெரிதும் மதித்தார்.
தாம்
பயின்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவராய்ப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி மாண்டிசோரி. அவர்
மனநோய் சிசிக்சைப் பிரிவில் மருத்துவராக இருந்தார். மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்குக்
கல்வியளிக்கும் முறையை ஆராய்ந்தார்.
1899
இல் இவரது கல்வி முறையில் பயின்ற மனவளர்ச்சி குன்றிய அறுபது குழந்தைகள் பள்ளி இறுதித்
தேர்வில் வெற்றி பெற்றதுடன், சராசரியை விட அதிக மதிப்பெண்களையும் பெற்றனர். மாண்டிசோரியைத்
இத்தாலி தேசமே கவனிக்க வைத்த நிகழ்வு இதுதான்.
1907
இல் குழந்தைகளின் இல்லம் என்ற பெயரில் தம்முடைய கல்வி முறையிலான பள்ளியை அவர் இத்தாலியின்
தலைநகரான ரோம் நகரில் தொடங்கினார். அவரது கல்வி முறை உலகெங்கும் பரவத் தொடங்கியது.
மாண்டிசோரி
கல்வி முறையில் ஆண்டுக்காண்டு அடுத்த வகுப்பு என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது. மூன்றாண்டுகளுக்கு
ஒரு வகுப்பு என்கிற முறையையே அவர் முன்னெடுத்தார். குழந்தைகள் சுதந்திரமான, மனஅழுத்தமற்ற
சூழ்நிலையில் கற்க அவ்வளவு கால அவகாசம் தேவை என்று அவர் கருதினார்.
மாண்டிசோரி
தாய்மொழி வழிக் கல்வி முறையையே வலியுறுத்தினார். இந்தியாவில் தொடங்கப்பட்ட பெரும்பான்மையான
மாண்டிசோரி பள்ளிகள் ஆங்கில வழியில் அமைந்ததால், அவர் ஆங்கிலக் கல்வியை வலியுறுத்தினாரோ
என்ற ஐயப்பாடு உருவாகி விட்டது.
உண்மை
என்னவென்றால், மாண்டிசோரிக்கு ஆங்கிலம் தெரியாது என்பது மட்டுமல்லாது, அவர் ஆங்கிலத்தைக்
கற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை என்பது ஆங்கிலக் கல்வி மோகத்தில் இருப்போர் அறிந்து
கொள்ள வேண்டிய முக்கியமான செய்தியாகும்.
மாண்டிசோரி
அம்மையார் மக்களின் சுதந்திரத்திற்காகவும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் குரல்
கொடுத்த முதன்மையான கல்வியாளர் ஆவார். இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சி ஏற்பட்டுக்
கல்வி கற்கும் குழந்தைகள் ராணுவப் பணிக்கு அனுப்பப்பட்ட போது, அதைக் கடுமையாக எதிர்த்தவர்
மாண்டிசோரி. அதனாலேயே இத்தாலியிலிருந்து அவர் நாடு கடத்தப்பட்டார்.
1990
இல் சிசிலியில் சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர்களாய்ச் சித்திரவதைச் செய்யப்பட்ட
குழந்தைகளைக் காப்பதற்காகப் போராடினார். 1949 இல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற
நாடுகளில் குழந்தைகளைக் கல்விக் கூடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதை ஓர் இயக்கமாக
முன்னெடுத்தார்.
குழந்தைகளின்
கல்விக்காகவும் அவர்களது சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்காகவும் இறுதி மூச்சு வரை உழைத்த
மாண்டிசோரி அம்மையார் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் விருது
வழங்கப்படவில்லை. விருது வழங்கப்படாதது, நோபல் பரிசின் சிறப்பைக் குறைத்திருக்கிறதே
தவிர, மாண்டிசோரியின் புகழைக் குறைக்கவில்லை.
*****
No comments:
Post a Comment