சிறப்பாகப் படிப்பதற்கான 5 குறிப்புகள்
பள்ளிக்கூடம் துவங்க உள்ள
நிலையில் யாருக்குத்தான் சிறப்பாகப் படிக்க ஆசை இருக்காது? அந்த ஆசை நிறைவேற கடினமாக
உழைப்பது முக்கியமெனினும் நுட்பமும் நுணுக்கமும் தெரிந்து படிப்பது அதை விட முக்கியமானது.
உங்களுக்குப் படிப்பில் பயன்படும் முக்கிய நுணுக்கங்களும் நுட்பங்களும் இதோ!
1. முக்கிய சொற்கள்
நீங்கள் நான்கு பக்கங்கள்
படித்தாலும், நாற்பது பக்கங்கள் படித்தாலும் அப்பக்கங்களில் இடம் பெற்றுள்ளவற்றை ஐந்தாறு
முக்கிய சொற்களில் அடக்கி விட முடியும். அந்த முக்கிய சொற்களைக் குறிப்புகளாக எழுதிக்
கொள்ளுங்கள்.
2. சிறியதே சிறப்பு
எவ்வளவு பெரிய பத்தியானாலும்
அது ஒவ்வொரு வாக்கியங்களால் ஆனதே. எத்தனை பக்கங்கள் என்றாலும் அவை ஒவ்வொரு பத்தியால்
ஆனதே. எவ்வளவு பெரியதாக ஒரு புத்தகம் இருந்தாலும் அது ஒவ்வொரு பக்கங்களால் ஆனதே. ஆகவே
நீங்கள் எவ்வளவு பெரிய பகுதியைப் படிப்பதாக இருந்தாலும் அதைச் சிறு சிறு பகுதிகளாகப்
பிரித்துக் கொண்டு படியுங்கள். சிறு சிறு பகுதிளாகப் பிரித்துக் கொண்டு படிக்கும் போது
அது உங்களை எளிமையாக உணர வைக்கும். சிறிது சிறிதாகப் படிக்க ஆரம்பித்து நீங்கள் ஒரு
பெரிய பகுதியைப் படித்து முடித்திருப்பீர்கள்.
3. அவ்வபோது மீள்பார்வை
ஒரு மரக்கன்றை நட்டு விடுவதாலேயே அது மரமாகி விடாது.
அவ்வபோது அதைப் பார்க்க வேண்டும்; பராமரிக்க வேண்டும்; நீருற்ற வேண்டும். அது போல ஒரு
முறை படித்து விடுவதாலேயே படிப்பது அப்படியே பச்சக்கென்று மூளையில் ஒட்டிக் கொண்டு
விடாது. அவ்வபோது படித்ததை மீள்பார்வை செய்ய வேண்டும். இது தற்காலிக மறதிகளால் பாடப்பொருள்
மறந்து போவதைத் தடுக்கும்.
4. தொடர்ச்சியாகப் படித்தல்
நீங்கள் ஒவ்வொரு நாளும் சிறிய
அளவில் படித்திருக்கலாம். அது ஒரு பெரிய குறையில்லை. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகப்
படிக்கும் அளவானது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கும்.
சிறுதுளி பெருவெள்ளம் ஆவது போல, சிறுக சிறுகத் தொடர்ந்து செய்தால் எவ்வளவு பெரிய பாடத்தையும்
உங்களால் படித்து விட முடியும்.
5. மாறாத ஒழுக்கம்
தினமும் குறிப்பிட்ட நேரத்தில்
படித்தல், குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து படித்தல், படிப்பதற்குக் குறிப்பிட்ட முறையைப்
பயன்படுத்துதல் போன்ற மாறாத பழக்கங்கள் உங்களால் எதையும் படிக்க முடியும் என்ற நம்பிக்கையை
விதைக்கக் கூடியவை. அப்படி ஒரு தன்னம்பிக்கை உங்களுக்கு வந்து விட்டால் உங்களால் எதையும்
படிக்க முடியும். இதற்கு அடிப்படை மாறாத ஒழுக்கமே. மாறாத ஒழுக்கத்தால் உங்கள் படிப்பில்
ஒரு மாற்றத்தை உண்டு பண்ணி விட முடியும்.
நீங்கள் படிக்கும் போது மேற்படி
நுட்பங்களையும் நுணுக்கங்களையும் இணைத்துக் கொண்டு உங்கள் கல்வியில் மாற்றத்தை உருவாக்கி
முன்னேற்றத்தை அடைய வாழ்த்துகள்!
*****
No comments:
Post a Comment