பணக்காரர்களின் பணக்கார ரகசியங்கள்!
யாராலும்
அவர்கள் நினைப்பது போல மாற முடியும். ஆனால் வெகு சிலரே அப்படி மாறுகிறார்கள். மற்றவர்களால்
அப்படி மாற முடிவதில்லை. ஏன்? நீங்கள் எப்படி மாற நினைக்கிறீர்களோ அதற்கென சில ரகசியங்கள்
இருக்கின்றன. அந்த ரகசியங்கள் உங்களுக்குத் தெரிந்தால்தான் நீங்கள் அப்படி மாற முடியும்.
உதாரணத்துக்கு நீங்கள் பணக்காரராக வேண்டும் என்ற ஆசைப்படுகிறீர்கள் என்ற வைத்துக் கொள்வோம்.
ஆனால் உங்களால் ஆக முடியவில்லை. அதற்கு எது காரணமாக இருக்க முடியும்? உங்களுக்குப்
பணக்காரராவதற்கான ரகசியங்கள் தெரியவில்லை என்பதுதான் அதற்கான காரணமாக இருக்க முடியும்.
அந்த ரகசியங்கள் தெரிந்தால் நீங்களும் பணக்காரர்தான். பணக்காரர்களின் பணக்கார ரகசியங்கள்
என்ன? வாருங்கள் அவற்றை ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்வோம்.
1. ரகசியமானவராக இருங்கள் :
நீங்கள்
பணக்காரர் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்குத் தெரியக்
கூடாது. இதுதான் பணக்காரர் ஆவதற்கான முதல் ரகசியம். இதன் பொருள் என்ன? உங்களிடம் பணம்
இருப்பது உங்களுக்குத்தான் தெரிய வேண்டும். மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. ஏன் மற்றவர்களுக்குத்
தெரியக் கூடாது? மற்றவர்களுக்குத் தெரிந்தால், உங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு
நீங்கள் ஏன் அவர்களுக்கு உதவக் கூடாது என்றுதான் அவர்கள் நினைப்பார்களே தவிர, உங்களிடம்
இருக்கும் பணத்தைக் கொண்டு நீங்கள் பணக்காரராக வேண்டும் அவர்கள் நினைக்க மாட்டார்கள்.
ஆகவே உங்களிடம் இருக்கும் பணத்தைக் காட்டும்படி எந்த விதமான செயல்களிலும் ஈடுபட்டு
விடாதீர்கள். உங்களிடம் இருக்கும் காசைக் காட்டி யாரையும் வாயைப் பிளக்கச் செய்து விடாதீர்கள்.
உங்களிடம் இருக்கும் பணத்தைக் காட்டி யாரையும் கவர வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள்.
உங்கள் பணக்காரத்தனத்தைக் காட்டும் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து மற்றவர்களை ஏக்கப்
பெருமூச்சு விடச் செய்து விடாதீர்கள். அவர்கள் ஏக்கப் பெருமூச்சு விடுவதுடன் உங்களிடம்
இருக்கும் பணத்தை எப்படிப் பிடுங்குவது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
2. வாயை மூடுங்கள் :
ஒருவர்
பணக்காரர் ஆவதற்கு மிகப்பெரிய தடை அவருடைய வாய்தான். அது மூடியே இருந்தால் பிரச்சனையே
இல்லை. உங்களிடம் திறமையே இல்லை என்றாலும் நீங்கள் பணக்காரர் ஆகி விடுவீர்கள். உங்கள்
வாயைத் தேவையில்லாமல் திறந்து கொண்டிருந்தால் நீங்கள் திறமையானவராக இருந்தாலும் ஏழையாகவே
இருப்பீர்கள்.
ஏன்
வாயைத் திறக்கக் கூடாது என்றால், உங்களிடம் பணம் இருந்தால் உங்கள் வாயால் சும்மா இருக்க
இயலாது. உளறிக் கொட்ட ஆரம்பித்து விடும். உங்களிடம் பணம் இருப்பது தெரிந்தால், அதை
எப்படி உங்களிடமிருந்து நாசுக்காகப் பிடுங்குவது என்பதைத்தான் மற்றவர்கள் யோசிப்பார்களே
தவிர, அதைப் பாதுகாத்து உங்களிடம் தங்கச் செய்ய வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.
ஏன் இப்படி? யாருமே தங்களை விட இன்னொருவர் உயரமாகப் போவதை விரும்ப மாட்டார்கள். நாம்
மட்டும் ஏழையாக இருக்க, அவர் மட்டும் பணக்கரராக வேண்டும் என்றுதான் யோசிப்பார்கள்.
நாம் ஏழையாக இருப்பதால் அவரும் நம்மைப் போலவே ஏழையாகவே இருக்கட்டும் என்பதற்கான ஏற்பாடுகளை
மறைமுகமாகச் செய்வார்கள். இது தேவையா உங்களுக்கு? ஆகவே வாயை மூடுங்கள். அதுவே நல்லது.
3. எளிமையாக உடுத்துங்கள் :
உங்கள்
ஆடைகள் உங்கள் பணக்காரத்தனத்தைக் காட்டுவதாக இருக்கக் கூடாது. அப்படிக் காட்டினால்
நீங்கள் பணக்காரர் ஆக முடியாது. அதிலும் உங்களிடம் பணமே இல்லாமல் பணக்காரர் போல தம்பட்டம்
அடித்தால் உள்ளதும் போயிற்றே எனப் புலம்ப வேண்டியதுதான். அது போன்ற வேலைகளில் ஈடுபட்டு
விடாதீர்கள். அதற்காகப் பரதேசியைப் போலக் கந்தையை உடுத்த வேண்டும் என்பதில்லை. உங்கள்
ஆடைகள் எளிமையாகப் பாந்தமாக இருக்க வேண்டும். உங்கள் ஆடைகளைக் கொண்டு உங்களை யாரும்
பணக்காரர் என்று நினைத்து விடாதபடிக்கு உங்கள் ஆடைகள் அமையட்டும். ஏன் அப்படி? நீங்கள்
நடந்து சென்று ஒரு பொருளை வாங்குங்கள். அதையே காரில் சென்று வாங்குங்கள்? உங்கள் தோற்றத்தை
வைத்து நீங்கள் வாங்கும் பொருளுக்கு விலை சொல்பவர்கள் நிறைந்த உலகம் இது. உங்கள் தோற்றம்
எளிமையாக இருந்தால் உங்களுக்கு வைக்கப்படும் விலையும் எளிமையாக இருக்கும். இதனால் நீங்கள்
நிறைய பணத்தை மிச்சம் செய்து சேமிக்க முடியும். ஆகவே இதுவும் ஒரு முக்கியமான பணக்கார
ரகசியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
4. செலவுக் கோளாறைத் தவிருங்கள் :
சிலருக்குப்
பணம் வந்தால் போதும். அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்று வந்த பணத்துக்கு
மேல் செலவு செய்து கடனாளியாகி நிற்பார்கள். இதுதான் செலவுக் கோளாறு. உங்களுக்கு இந்த
மாதத்திலிருந்து ஊதிய உயர்வு என்றால் அதற்காக இந்த மாதத்திலிருந்து செலவுகளையும் உயர்த்திக்
கொள்ள வேண்டும் என்பதில்லை. ஊதிய உயர்வுக்கு முன்பிருந்த ஊதியத்தில் எவ்வளவு செலவு
செய்தீர்களோ, அதே செலவைச் செய்து அதிகமாகக் கிடைக்கும் ஊதியத்தை நீங்கள் சேமித்து,
வருமானம் தரும் முதலீடுகளின் மூலம் பணத்தை மேலும் பெருக்கலாம்.
5. பணத்தை வளர விடுங்கள் :
உங்களிடம்
பணம் இருந்தால் அதைச் செலவு செய்யாமல் சேமித்து சரியான முதலீடுகளைச் செய்து வளர விட
வேண்டும். நீங்கள் உறங்கும் போதும் உங்களுக்கான பணம் உங்களுக்காக வேலை செய்து கொண்டிருக்க
வேண்டும். எதில் பணத்தைப் போட்டால் அதுவாக உங்களை எந்தவிதமான தொந்தரவும் செய்யாமல்
வளர்ந்து கொண்டிருக்குமோ, அதில் பணத்தைப் போட்டு வளர விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இதுதான் பணத்தை வளர விடுதல் என்பது.
6. பணம் உள்ளே வர வேண்டும், வெளியே போகக்
கூடாது :
பணம்
உள்ளவே வர வேண்டும் என்றால் அதிகமாகச் செலவு செய்யக் கூடாது. அதிகமாகச் செலவு செய்யக்
கூடாது என்பதை விட தேவையில்லாமல் ஒரு பைசாவைக் கூட செலவு செய்து இழந்து விடக் கூடாது.
உங்கள் பைகளில் பணம் எப்போதும் வந்து கொண்டிருக்கும்படி நீங்கள் யோசித்து திட்டமிட்டு
நிதானமாகச் செயல்பட வேண்டும். அதை விட்டு விட்டு மற்றவர்களைப் போல வாழ வேண்டும், ஒவ்வொருரையும்
பார்த்து ஆசைப்பட்டு அது போல வாழ வேண்டும் என்று பையில் இருக்கும் பணத்தை இழந்து கொண்டிருக்கக்
கூடாது.
7. முதலீட்டை விரைவில் ஆரம்பியுங்கள் :
நீங்கள்
சேமித்த பணத்தைப் பாதுகாப்பாகவும் அதிகமாகவும் வளர வாய்ப்புள்ள முதலீடுகளில் தொடர்ந்து
செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அதுவும் இதை நீங்கள் இளம் வயதிலியே தொடங்கியிருக்க
வேண்டும். ஏனென்றால் பணத்தைப் பொருத்த வரையில் கூட்டுவட்டியின் மாயா ஜாலம் என்பது எவ்வளவு
விரைவில் தொடங்கியிருக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. காலம் தாழ்த்தித் தொடங்கினால்
அதற்கேற்பத்தான் உங்கள் முதலீடு வளர்ந்திருக்கும். இளமையிலேயே தங்கள் முதலீட்டைத் தொடங்கியவர்கள்
குறைவான தொகை முதலீடு செய்திருந்தாலும் அசத்தலான வளர்ச்சியைப் பெறுவர். அதிகமாக முதலீடு
செய்பவர்கள் தாமதமாகத் தொடங்கினால் அதற்கேற்ற வளர்ச்சியைத்தான் பெறுவர். இங்கே காலம்
என்பது கண் பொன்றது.
8. கூடுதலைக் கூட்டிக் கொள்ளுங்கள் :
உங்களிடம்
கூடுதலாகப் பணம் இருக்கிறதா? அதைக் கூட்டிக் கொள்ளும் வகையில் முதலீடு செய்து கொண்டே
இருங்கள். அதைச் செலவு செய்து வருங்காலத்தில் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தைக்
குறைத்துக் கொள்ளாதீர்கள். ஒரு பைசா கிடைத்தாலும் வருங்காலத்தில் அது இரண்டு பைசாகவாக
கிடைக்கும் விதத்தில் முதலீட்டைக் கண்டுபிடித்து அதைச் செய்யுங்கள்.
9. மற்றவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள் :
பணக்காரப்
பயணத்தில் உங்கள் கண்கள் கடிவாளம் கட்டப்பட்ட குதிரையப் போல இருக்க வேண்டும். மற்றவர்களைப்
பார்த்து அவர்கள் போல ஆடம்பரமாக வாழ வேண்டும், அவர்களைப் போலச் செலவு செய்து நம்மைப்
பற்றி நான்கு பேர் எட்டு விதமாகப் பேச வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள்
பணக்காரர் ஆவதற்குத் தகுதியில்லாதவர்களாக ஆகி விடுவீர்கள். ஏனென்றால் மற்றவர்களைப்
பார்த்து அவர்கள் போல ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்காகக் கடன்களை வாங்கி ஏழைகளாகிக்
கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பணக்காரர் ஆக வேண்டும் என்று நினைப்பவர் அந்த ஒன்றில்
மட்டும் கவனம் வைத்து பணத்தைப் பெருக்கும் சொத்துகளையும் முதலீடுகளை மட்டுமே உருவாக்குகிறார்கள்.
கடனை வாங்கி வைத்தால் அதற்கான வட்டி அவரை ஏழையாக்கிக் கொண்டே இருக்கும். பணத்தைப் பெருக்கும்
சொத்தையும் முதலீட்டையும் வாங்கி வைத்தால் அதிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் வருமானம்
ஒருவரைப் பணக்காரர் ஆக்கிக் கொண்டே இருக்கும்.
ஆகவே
இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். அமைதியாக யாருக்கும் தெரியாமல் பணம் சேர்ப்பதுதான்
நல்லது. அது யாருக்கும் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படித் தெரியாமல் இருப்பதுதுதான்
உங்கள் பணத்தைக்கும் உங்கள் பண வளர்ச்சிக்கும் எப்போதும் நல்லது.
இந்த
வழிமுறைகளைப் பின்பற்றி பணம் சேர்த்து பணக்காரராக வாழ வாழ்த்துகள்!
*****
No comments:
Post a Comment