நாம் ஏன் ரத்தன் டாடாவை நினைவு கூர வேண்டும்?
அவமானங்கள்,
தோல்விகள் யாருக்கு இல்லை. நான் மட்டும் டாடா, பிர்லாவாக இருந்திருந்தால் அவமானங்கள்,
தோல்விகள் இல்லாமல் எப்படி சாதித்திருப்பேன் என்று சொல்கிறீர்களா? டாடாவுக்கே அவமானங்களும்
தோல்விகளும் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் கடந்து சாதனை படைத்தவர்தான் ரத்தன் டாடா.
யார் இந்த ரத்தன் டாடா?
டாடா
நிறுவனத்தை உருவாக்கிய ஜாம்ஷெட்ஜியின் பிள்ளைகள் இருவருக்கும் வாரிசுகள் இல்லை. அவரது
இரண்டாவது மகன் ரத்தன் மறைந்த போது அவர் மனைவி நவாஜ்பாய் தத்தெடுத்து வளர்த்த நேவல்
டாடாவுக்குப் பிறந்தவர்தான் ரத்தன் டாடா.
டாடாவுக்கும் பிரச்சனைகள் இருந்தன
10 வயதில்
பெற்றோர்கள் பிரிந்ததால் பாட்டியிடம் வளர்ந்தவர் ரத்தன் டாடா. கூச்ச சுபாவம் உள்ளவர்.
தன்னம்பிக்கை இல்லாத இளைஞனாக இருந்தவர். காதல் வாழ்விலும் தோல்வியுற்றவர். பாட்டியின்
அழைப்பால் இந்தியா வந்தவர். அப்போது ஜே.ஆர்.டி டாடாவின் பொறுப்பில் டாடா நிறுவனங்கள்
இருந்தன.
ஜே.ஆர்.டி
டாடா ரத்தனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள்
ஏதேதோ வேலைகளைக் கொடுத்தார். ஜே.ஆர்.டி. டாடாவுக்கும் ரத்தனுக்கும் ஒத்துப் போகவில்லை
என்பது நிறுவனத்தில் எல்லாருக்கும் தெரிந்த ரகசியமாக இருந்தது. ஜே.ஆர்.டி. டாடா மனம்
மாறி நிறுவனத்தை ரத்தனிடம் ஒப்படைத்த போது அவருக்கு வயது 53.
டாடாவுக்கும் நட்டம் ஏற்படும்
ரத்தன்
டாடாவின் முக்கியமான சாதனை டாடா நிறுவனத்தைச் சர்வதேச நிறுவனமாக மாற்றியது. இதற்காக
அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றை வாங்கினார். அதனால் ஒரு கட்டத்தில் டாடா நிறுவனமே
நட்டத்தில் தடுமாறியது. ஆனால் ரத்தன் டாடா ஓய்வு பெற்ற போது சரிபாதி டாடா நிறுவனத்தின்
வருமானம் வெளிநாடுகளிலிருந்து வந்தது.
டாடாவுக்கும் அவமானங்கள் நேர்கின்றன
ஒரு
கட்டத்தில் டாடாவின் மகிழ்வுந்து தயாரிப்பு பிரிவு (கார் பிரிவு) நட்டத்தில் தள்ளாடியது.
அதனால் டாடாவின் மகிழ்வுந்து பிரிவைப் போர்டு நிறுவனத்துக்கு விற்கப் போய் அவமானப்பட்டார்
ரத்தன் டாடா. ஆனால் காலம் அப்படியே போய் விடுமா? பொறுமையோடு முயற்சியைக் கைவிடாதோருக்குக்
காலம் கை கொடுக்கும் அல்லவா! பின்னாட்களில் போர்டு நிறுவனம் நட்டத்தில் தவித்த போது
அவர்களின் ஜாகுவார், லேண்ட் ரோவர் பிராண்டுகளை வாங்கினார் ரத்தன் டாடா.
நம்பகத்தன்மையைக் கைவிட முடியாது
ஜப்பானில்
இருக்கும் டோகோமா நிறுவனத்துடன் தொலைதொடர்பு துறையில் இறங்கிய டாடா நிறுவனம் அதில்
நட்டத்தைச் சந்தித்த போதும் அந்த நிறுவனத்துக்குத் தர வேண்டிய இழப்பீட்டை முறையாகத்
தந்தவர் ரத்தன் டாடா. ஆனால் அந்த இழப்பீட்டைத் தரக் கூடாது என மறுத்தவர் சைரஸ் மிஸ்ட்ரி.
இதற்காக நிறுவனத்திலிருந்து சைரஸ் மிஸ்ட்ரியையும் தூக்கி அடிக்க தயங்கவில்லை ரத்தன்
டாடா. நட்டம் வருகிறது என்பதற்காக நம்பகத்தன்மையைக் கைவிட முடியாது என்பது அவரது நிலைபாடு.
எளிமையின் சொந்தக்காரர்
டாடா,
பிர்லா இந்தியாவின் பணக்காரர்கள் என்பது நாடறிந்த உண்மை. ரத்தன் டாடாவிடம் பணக்காரத்தனத்தையோ,
பகட்டுத்தனத்தையோ பார்க்க முடியாது. அவர் எளிமையின் அடையாளம். அவரைச் சுற்றி பெரிய
பரிவாரங்களைப் பார்க்க முடியாது. மும்பையிலிருந்து டெல்லி செல்லும் போது அவர் தனது
கைப்பையைத் தூக்கிக் கொண்டு தனியாகத்தான் விமானம் ஏறுவார். அவர் வீட்டு வாசலில் கூட
கடும் பாதுகாப்பு இருக்காது.
ஏன் ரத்தன் டாடா நினைவுகூரப்படுகிறார்?
ஒரு முடிவை எடுத்துச் செயல்படுத்தும் போது அது சரியாகவும் அமையலாம். தவறாகவும் போகலாம். தவறாகப் போகும் போது அதைச் சரியானதாக மாற்றும் வேலையைச் செய்ய வேண்டும் என்பது ரத்தன் டாடாவின் கொள்கை. அதை அப்படிச் செய்தும் காட்டியவர் அவர். அதற்காகத்தான ரத்தன் டாடா தற்போதும் நினைவு கூரப்படுகிறார்.
உங்களுக்குப் பிடித்திருந்தால்
நீங்கள் ரத்தன் டாடாவின் குணங்களை உங்கள் வாழ்வில் பிரதியெடுத்துக் கொள்ளலாம். நல்ல
குணங்களை நம் வாழ்வில் பிரதியெடுப்பதன் மூலமாக இந்த உலகிற்கு நாமும் நல்லவராக வாய்ப்புகள்
இருக்கின்றனதானே!
*****
No comments:
Post a Comment