Saturday, 3 May 2025

மாற்றுக்கல்வி முறையின் பிதாமகர் ஜான் கால்ட்வெல் ஹோல்ட்!

மாற்றுக்கல்வி முறையின் பிதாமகர் ஜான் கால்ட்வெல் ஹோல்ட்!

ஜான் கால்ட்வெல் ஹோல்ட் ஓர் அமெரிக்க கல்வியாளர்.

இவர் ஏப்ரல் 14, 1923 இல் கொலராடோவில் பிறந்தார். அதே ஏப்ரல் 14 இல்தான் புரட்சிகர மேதை அம்பேத்கரும் பிறந்தார் என்பதும் கவனிக்கத்தது.

ஜான் ஹோல்ட் இரண்டாம் உலகப் போரில் ராணுவ வீரராகப் பணியாற்றினார். யுத்தத்தின் பேரழிவுகளை நேரில் கண்ட இவர் அணுஆயுத எதிர்ப்பிலும் பணியாற்றினார்.

ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய ஜான் ஹோல்ட் கல்வி குறித்த அற்புதமான நூல்களை எழுதியுள்ளார்.

1964 இல் வெளியிட்ட ‘How children fail?’ என்ற நூல் கல்வி உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. குழந்தைகள் பள்ளிகளில் தோற்கவில்லை, பள்ளிகளாலே தோற்கிறார்கள் என்பதுதான் அந்த நூலின் சாரம்.

1967 இல் வெளியிட்ட ‘How children learn?’ என்ற நூல் கல்விக் கூடங்களின் பின்னடைவுகளை முன் வைத்தது. மனிதக் கண்டுபிடிப்புகளில் கல்விக் கூடமே தோல்வி அடைந்த அமைப்பு என்கிறார் ஹோல்ட். குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னிசையாகவும் கற்க அனுமதிக்கப்பட்டால் சிறப்பாகக் கற்பர் என வாதிடுகிறார்.

இன்று பள்ளிகளில் மாணவர்களை அடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பாடவேளைகளுக்கு இடையே இடைவெளி வழங்கப்படுகிறது. கல்விக்கூடங்களில் குழந்தைகளுக்கான சுதந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இவையெல்லாம் ஜான் ஹோல்டின் முன்னெடுப்புகளால் விளைந்தவையே.

1974 இல் வெளியிட்ட ‘Escape from childhood’ என்ற நூலில் பள்ளி சார்ந்த மற்றும் சாராத வன்முறைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை விளக்குகிறார்.

1976 இல் வெளியிட்ட ‘Instead of education’ எனும் நூலில் பள்ளிக்கூடங்களைக் கொத்தடிமைக் கூடங்கள் எனச் சாடினார் ஜான் ஹோல்ட். வீட்டில் இருந்து சுதந்திரமாய்க் கல்வி கற்பதுஅவசியம் என்பதை அந்த நூலில் வலியுறுத்துகிறார்.

1977 ஆம் ஆண்டிலிருந்து Growning without schooling என்கிற செய்தி மடலை மாற்றுக் கல்வி முறையை முன்வைக்கும் வகையில் வெளியிட்டார் ஜான் ஹோல்ட்.

1979 ஆம் ஆண்டை ஐ.நா. சபை குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கும் அளவுக்கு குழந்தைகளுக்கான ஜான் ஹோல்டின் முயற்சிகள் குழந்தைகளின் கல்வியில் முக்கியமாக அமைந்தன.

கல்விக் கூடங்களை அடிமைப்படுத்தும் நிறுவனங்கள் என்ற ஜான் ஹோல்ட் அமெரிக்கா வியட்நாம் மீது தொடுத்த போரை விமர்சித்த மனிதநேயம் மிகுந்தவர். அதற்காகவே தன் சொந்த நாட்டுக்கு வரி செலுத்தவும் மறுத்தார்.

வீட்டுக் கல்வி முறைக்கான முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த ஜான் ஹோல்ட் 1985 இல் காலமானார். அவரது கல்வியியல் சிந்தனைகள் காலத்துக்கும் நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன.

*****

No comments:

Post a Comment