Tuesday, 6 May 2025

மூன்று வாழ்க்கையிலும் முத்தைப் போல ஒளிர…

மூன்று வாழ்க்கையிலும் முத்தைப் போல ஒளிர…

ஒவ்வொருவருக்கும் மூன்று விதமான வாழ்க்கை இருக்கின்றது.

1. பணி வாழ்க்கை,

2. உறவு வாழ்க்கை,

3. சுய வாழ்க்கை.

இந்த மூன்று வாழ்க்கையையும் ஒருவர் சரிவரப் பராமரித்துக் கொள்ள வேண்டும். எதற்காகவும் எந்த ஒன்றையும் விட்டுக் கொடுத்து விடக் கூடாது.

பொதுவாகப் பணி வாழ்க்கையில் சிறப்பாக இருப்பவர்கள் சொந்த வாழ்க்கையில் கோட்டை விட்டவர்களாக இருப்பார்கள். இப்படியும் கூடாது. உறவு வாழ்க்கையில் சிறப்பாக இருப்பவர்கள் பணி வாழ்க்கையில் சோம்பேறிகளாக இருப்பார்கள். அப்படியும் கூடாது. சுய வாழ்க்கையில் சிறப்பாக இருப்பவர்கள் யாருமில்லாத தனிமரமாக நிற்பார்கள். இதுவும் கூடாது. இந்த மூன்றையும் சிறப்பாகக் கையாள வேண்டும்.

இதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா? இருக்கின்றன.

நீங்கள் ஒரே நேரத்தில் மூன்று பந்துகளைத் தூக்கிப் போட்டு மூன்றையும் மாற்றி மாற்றி சரியாகப் பிடிக்கும் நபரைப் பார்த்திருக்கிறீர்களா? அவரின் நுட்பத்தைத்தான் இதில் நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

ஒரு பந்தைத் தூக்கிப் போட்டு, அதை சரியாகப் பிடிப்பதில் என்ன இருக்கிறது? மூன்று பந்துகளையும் ஒன்று மாற்றி ஒன்று எனத் தூக்கிப் போட்டு மூன்றையும் மாற்றி மாற்றி சரியாகப் பிடிப்பதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. அதே சாமர்த்தியம்தான் வாழ்க்கையிலும் தேவை.

அதற்கு என்ன செய்வது?

நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த வேண்டும். அதை இன்னொருவர் கட்டுப்படுத்தும் விதமாக நீங்கள் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு நேரத்தில் ஒரு வேலையைத்தான் பார்க்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு பந்தைப் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதைப் பிடித்தவுடன் அதை எறிந்து விட்டு அடுத்ததில் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதை முடித்து விட்டு அதற்கு அடுத்ததில் கவனம் செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் மூன்றையும் பார்த்தீர்கள் என்றால் மூன்று பந்துகளும் கீழே விழுந்து விடும். மூன்றையுமே கோட்டை விட்டு விடுவீர்கள்.

தற்போது எது முக்கியமோ அதில்தான் உங்கள் கவனமும் செயலும் இருக்க வேண்டும். அதை விடுத்து தற்போது முக்கியமல்லாத வேலைகளில் உங்கள் கவனம் இருக்கவே கூடாது. ஒன்றை முடித்து விட்டுதான் மற்றொன்றில் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் இரண்டையும் பிடிக்க முயன்று இரண்டையும் கோட்டை விட மாட்டீர்கள்.

உங்களை எப்போதும் நீங்கள் அடுத்தடுத்து மாற்றி மாற்றி முன்னேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்தடுத்து பந்துகளை மாற்றி மாற்றி நீங்கள் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இங்கே பந்துகள் என்பன உங்கள் பணி வாழ்க்கை, உறவு வாழ்க்கை மற்றும் சுய வாழ்க்கை என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்பதில்லை. அந்த நேரத்தில் எது முக்கியமோ அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும். அதை ஒரு வரிசைக்கிரமமாக, ஓர் அமைப்போடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் உங்கள் பணி வாழ்க்கை, உறவு வாழ்க்கை, சுய வாழ்க்கை என்று மூன்றிலும் பிரகாசிப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பிரகாசிக்க வாழ்த்துகள்!

*****

No comments:

Post a Comment