Thursday 2 February 2023

மத்திய பட்ஜெட் – 2023 இல் கல்விக்கான அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் – 2023 இல் கல்விக்கான அறிவிப்புகள்

2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் கல்வித் துறைக்காக மொத்தம் 1.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் பள்ளிக் கல்வித் துறைக்கு  68,804.85 கோடியும், உயர் கல்வித் துறைக்கு 44,094.62 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்ஜெட்டில் கல்வி குறித்து இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் :

1. தேசிய டிஜிட்டல் நூலகம் :

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக் கொள்ள பிராந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் கூடிய தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சியில் இயங்கும் என்.ஜி.ஓ.க்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. புவியியல், மொழிகள், நவீன சாதனங்களை அணுகும் செயல்முறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த புத்தங்கள் இந்த நூலகத்தில் இடம்பெறும். மேலும், மாநில அரசு அமைத்துள்ள கிராமப்புற பஞ்சாயத்து நூலகங்களிலும் இந்த டிஜிட்டல் நூலகத்தைப் பயன்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2. ஏகலைவா பள்ளிகளுக்குப் புதிதாக 38,800 ஆசிரியர்கள் நியமனம் :

பழங்குடியினப் பகுதிகளில் அமைந்துள்ள 740 ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் படிக்கும் சுமார் 3.5லட்சம் மாணவர்களுக்கு சேவை செய்ய அடுத்த மூன்று ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்ந்து 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் :

நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2014 இல் அமைக்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளின் இடங்களுக்கு அருகில் இந்த நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

4. கர்மயோகி திட்டம் :

மத்திய அரசின் மிஷன் கர்மயோகி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள ஒருங்கிணைந்த ஆன்லைன் பயிற்சி தளம் செயல்முறைபடுத்தப்படும். இதன்மூலம் நாடெங்குமிருக்கும் லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் தங்களின் திறனையும், மக்களை அணுகும் முறைகளையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

5. அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் :

தொழில்துறை தேவைகளையும் இளைஞர்களின் திறனையும் ஒருங்கிணைக்க 30 ‘ஸ்கில் இந்தியா மையங்கள்’ அமைக்கப்படும். செயற்கை நுண்ணறிவு (AI), கணினி ப்ரோகிராமிங் மொழிகள் (Programming languages) உள்ளிட்ட புதிய திறன் பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

6. ஆசிரியர் பயிற்சித் திட்டம் :

தகவல் தொடர்பு நுட்பங்கள் (ICT) முறையுடன் கூடிய புதிய மேம்படுத்தப்பட்ட முறையிலான ‘ஆசிரியர் பயிற்சித் திட்டம்’ அமல்படுத்தப்படவுள்ளது. கல்வியியல், பாடத்திட்ட பரிவர்த்தனை, தொடர்ச்சியான தொழில் வளர்ச்சி, டிப்ஸ்டிக் ஆய்வுகள் சார்ந்த பல பயிற்சிகள் இதன்மூலம் வழங்கப்படும். மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி துறை இதற்காக சிறந்த துடிதுடிப்பான கல்வி நிறுவனங்களாக உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

7. மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் ICMR ஆய்வகங்ளை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் :

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் குறிபிட்ட ‘ICMR’ ஆய்வகங்ளை மட்டும் பொது மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ‘R&D’ குழுக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

8. பொறியியல் கல்லூரிகளில் 5ஜி சேவைகள் கொண்ட 100 ஆய்வகங்கள் உருவாக்கும் திட்டம் :

5ஜி சேவைகளைப் பயன்படுத்தி புதிய செயலிகளை உருவாக்க மற்றும் மேம்படுத்த மொத்தம் 100 ஆய்வகங்கள் பொறியியல் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படும். மாணவர்கள் புதிய வேலை வாய்ப்புகளையும், தொழில் முறைகளையும் கற்றுக்கொள்ள இது உதவியாக இருக்கும். மேலும், இந்த ஆய்வகங்கள் ஸ்மார்ட் வகுப்பறைகள், துல்லியமான விவசாயம், சுகாதாரப் பாதுகாப்பு, அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகள் போன்ற துறைகளை மேம்படுத்த புதிய செயலிகளையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்க செயல்படும்.

9. செயற்கை நுண்னறிவு மையங்கள்:

“இந்தியாவால் உருவாக்கப்பட்ட ‘AI’க்கள் இந்தியாவிற்காக வேலை செய்ய வேண்டும்”. இதன் அடிப்படையில் நவீனமயமான எதிர்கால நோக்கத்துடன் மூன்று சிறந்த ‘செயற்கை நுண்னறிவு மையங்கள்’ இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களில் அமைப்படும். ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், அதிநவீன பயன்பாடுகளை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் முன்னணி நிறுவனங்கள் பங்குபெறும். விவசாயம், சுகாதாரம் போன்ற துறை சார்ந்தும் இவை செயல்படும். இந்தத் திட்டம் ஒரு நல்ல பயனுள்ள செயற்கை நுண்னறிவு சுற்றுச்சூழல் நிறந்த அமைப்பை மேம்படுத்துவதோடு, பல்வேறு துறைகளில் தரமான மனித வளங்களை வளர்க்கும்.

10. நவீன மருத்துவ உபகரணங்கள் தொடர்பான பல்துறை சார்ந்த படிப்புகள் :

எதிர்கால மருத்துவத் தொழில்நுட்பங்கள், உயர்தர உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிகளுக்கான திறமையான மனிதவளம் கிடைப்பதை உறுதிசெய்ய, நவீன மருத்துவ உபகரணங்கள் தொடர்பான பல்துறை சார்ந்த படிப்புகள் அறிமுகப்படும்.

மேற்கண்டவாறு கல்வி குறித்த அறிவிப்புகள் 2023 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

*****

No comments:

Post a Comment