Saturday 18 April 2020

ரிசர்வ் வங்கியின் பணப்புழக்க நடவடிக்கைகள்

ரிசர்வ் வங்கியின் பணப்புழக்க நடவடிக்கைகள்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, தொழில் துறைகள் முடங்கியதால், பணப் புழக்கம் குறைந்திருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு ரிசா்வ் வங்கி பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வங்கிகளிடம் ரொக்க கையிருப்பு இருப்பதை உறுதிசெய்யவும், பண சுழற்சியை அதிகரிக்கச் செய்வதற்கும் ரிசா்வ் வங்கி வங்கிகளுக்கு ரூ.50,000 கோடி கடனுதவி அளிக்கிறது.
நீண்டகால கடனுதவி என்ற அடிப்படையில் இந்தத் தொகையால் நபார்டு வங்கி, இந்திய சிறுதொழில் வளா்ச்சி வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி (என்ஹெச்பி) உள்ளிட்ட வங்கிகள் நிதி நெருக்கடியின்றி எளிதில் கடனுதவி வழங்க முடியும்.
இந்தத் தொகையில் தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.10,000 கோடி வழங்கப்படும். இதனால், வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு கடனுதவி கிடைக்கும். மனை வணிகத் துறையும் ஊக்கம் பெறும்.
ஊரடங்கு காலத்திலும் அனைத்துப் பகுதிகளிலும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடா்ந்து இயங்கி வருவது உறுதி செய்யப்படும்.
வங்கிகளிடம் பெறும் கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தத் தவறினால் 90 நாள்களுக்குப் பிறகு அவை வாராக்கடனாகக் கருதி வங்கிகள் நடவடிக்கைள் எடுத்து வருகின்றன. தற்போது அந்த கால அவகாசம் 180 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற சிறு வணிகா்கள், சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் கூடுதலாகக் கடனுதவி பெற்று பயன்பெற முடியும்.
பிற வா்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசா்வ் வங்கி பெறும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவா்ஸ் ரெப்போ) 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளின் பணம் ரிசா்வ் வங்கியிடம் தேங்குவது குறைந்து, கடன் வழங்குவது அதிகரிக்கும்.
அதேசமயத்தில், பிற வா்த்தக வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ விகிதம்) மாற்றம் எதுவுமின்றி 4.40 சதவீதமாகவே தொடரும். கடந்த மாதம்தான் ரெப்போ விகிதம் 5.15 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ரிசா்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் கூடுதலாக 60 சதவீதம் கடனுதவி பெறுவதற்கு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்படுகிறது.
மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டுக்கான ஈவுத்தொகையை வங்கிகள் பங்குதாரா்களுக்கு அளிக்கத் தடை விதிக்கப்படுகிறது. வங்கிகளில் பண இருப்பையும், பண சுழற்சியையும் அதிகரிக்கச் செய்ய உதவும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
ஈவுத்தொகை அளிப்பது குறித்து செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்.
தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரச் சவால்களை ரிசா்வ் வங்கி தொடா்ந்து கண்காணிக்கும்.
சவால்களுக்குத் தீா்வு காண்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் ரிசா்வ் வங்கி கையாளும். கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் ரூ.1.2 லட்சம் கோடி ரொக்கம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment