Friday 26 July 2024

சமூக ஊடகங்களால் ஏற்படும் கவனச் சிதறலைக் குறைத்துக் கொள்வது எப்படி?

கவனச் சிதறல் என்பது ஹேக்ஸ்பியரிலிருந்து செனகா வரை எல்லாருக்கும் இருந்தது. அந்தக் காலத்தில் கவனத்துக்கு இடையே கவனச் சிதறல் இருந்தது. இன்றோ கவனச் சிதறல்களுக்கு இடையே எப்போதாவது கவனம் செலுத்த முடிகிறது.

தற்காலத்தில் கவனச் சிதறல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மின்னணு சாதனங்கள். அதிலும் முக்கியமாக இருப்பது அலைபேசி. அதில் முக்கியமாக இருப்பது சமூக ஊடகங்கள். அடிக்கடி சமூக ஊடகங்களைத் திறந்து பார்ப்பதும், அதில் எதையாவது செய்து கொண்டிருப்பதும், செய்திகள் அனுப்பிக் கொண்டிருப்பதும், செய்திகள் ஏதேனும் வந்திருக்கிறதா எனத் தவிப்போடு இருப்பதும் நம்முடைய கவனச் சிதறலை வெகுவாக அதிகரித்து விட்டன.

ஒரு காலத்தில் அப்போது மின்னஞ்சலைத் திறந்து பார்ப்பதே ஆர்வமான ஒரு செயல். பிற்பாடு சமூக ஊடகங்கள் வந்த போது அந்த இடத்தை முகநூலும், கீச்சும் (பேஸ்புக்கும் டிவிட்டரும் (தற்போது எக்ஸ்)) பிடித்துக் கொண்டன. புலனம் எனும் வாட்ஸ்ஆப் வந்த பிறகு அந்த இடத்தை வாட்ஸ்ஆப் பிடித்துக் கொண்டது. இப்போது மின்னஞ்சலை அடிக்கடி திறந்து பார்ப்பவர்கள் குறைவு. வாட்ஸ்ஆப்பை அடிக்கடி திறந்து பார்ப்பவர்கள்தான் அதிகம். இப்படி கவனச்சிதறலை உண்டாக்கும் ஏதேனும் ஒன்று காலத்திற்கேற்ப வந்து கொண்டுதான் இருக்கின்றன, இருக்கும். அதைத் தவிர்க்கவே முடியாது.

முகநூலோ, புலனமோ அடிக்கடி என்னைத் திறந்து பாருங்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால் அப்படி ஒரு கட்டுபாட்டுக்கு நீங்கள் செல்கிறீர்கள்.

இதை எப்படித் தவிர்ப்பது?

முகநூல், புலனம் போன்றவற்றை ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் போட்டுத் திறந்து உள்ளே செல்லும் வகையில் அமைத்துக் கொள்வது ஒரு நல்ல வழி. அந்தக் கடவுச்சொல்லையும் எளிதில் நினைவில் கொள்ள முடியாதபடி கடினமான கடவுச்சொல்லாக அல்லது தட்டச்சுச் செய்வதற்குக் கடினமான கடவுச் சொல்லாக அமைத்துக் கொள்வது நல்லது. இதனால் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் போட்டு உள்ளே செல்லும் கடினத்திற்காகவே அதை அடிக்கடி திறந்து பார்க்க மாட்டீர்கள்.

அலைபேசியை இணைய இணைப்பிலேயே வைக்காமல் அதை அணைத்து விடுவது மூலமாக அவற்றில் செய்தி வந்ததற்கான சமிக்ஞைகள் அதாவது நோட்டிபிகேஷன் கிடைக்காமல் அடிக்கடி நீங்கள் அதை திறந்து பார்ப்பது குறையும். இதுவும் ஒரு வழிமுறைதான் அல்லவா?

முக்கியமான வேலை பார்க்கும் போது அலைபேசிக்கும் உங்களுக்கும் சில மீட்டர் இடைவெளி இருப்பது நல்லதுதானே? அல்லது அலைபேசியை அணைத்து வைத்து விடுவது மிகவும் நல்லதுதானே? இதனால் அடிக்கடி உங்களுக்கு சமூக ஊடகங்களால் ஏற்படும் கவனச்சிதறலைக் குறைத்துக் கொள்ளவும் தடுத்துக் கொள்ளவும் முடியும் அல்லவா!

No comments:

Post a Comment