Saturday 13 July 2024

ஏன் போர் வேண்டாம்?

ஒரு போர் நடைபெறும் போது அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு உமிழப்படுகிறது. கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக 17.5 கோடி டன் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் கலந்திருக்கிறது.

பொதுவாக உலகெங்கும் உள்ள நாடுகளின் ராணுவம் பயன்படுத்தும் எரிபொருள் காரணமாக 5.5 சதவீத அளவுக்கு கார்ப்ன டை ஆக்சைடு போன்ற பசுமைக் குடில் வாயுக்கள் சாதாரணமாக உருவாகின்றன.

போர்களின் போது விளைநிலங்களும் காடுகளும் எரிக்கப்படுகின்றன. அத்துடன் எண்ணெய் கிணறுகள் கொளுத்தப்படுகின்றன. இவற்றால் ஏகப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது.

போர்க்கருவிகள் செய்வதற்காக இரும்பு, எஃகு போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. போர் கட்டுமானங்களுக்காகச் சிமெண்டும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இரும்பு, எஃகு மற்றும் சிமெண்ட் தயாரிப்பின் போது ஏகப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது.

போர்களின் போது பயன்படுத்தப்படும் குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் வெடி பொருட்கள் ஏகப்பட்ட நச்சு வாயுக்களைக் காற்று மண்டலத்தில் கலக்கின்றன.

போர் நடைபெறும் நாடுகளில் இடையே விமானப் போக்குவரத்து நடக்காது என்பதால் விமானங்கள் சுற்றுப் பாதை வழியாகச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இவற்றால் அதிகம் செலவாகும் எரிபொருளாலும் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகும்.

இப்படி வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு வாயுவால் பூமி வெப்பமடைவது அதிகரிக்கிறது. பூமி வெப்பமடைவதால் பருவநிலைகள் மாற்றமடைகின்றன. ஒரு பகுதி கடும் வறட்சியையும் மற்றொரு பகுதி கடும் வெள்ளத்தையும் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. புயல்கள், சூறாவளிகள் போன்றவை அடிக்கடி திடீர் திடீர் என்று ஏற்படுகின்றன.

பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் போது காற்றின் ஈரப்பதம் ஏழு சதவீத அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. இது உருவாக்கும் வெப்ப சமனின்மையை எதிர்கொள்ள திடீர் வறட்சி, திடீர் வெள்ளம், திடீர் புயல்கள் ஆகியன பூமியில் உருவாகின்றன.

போர் இல்லாமலே அன்றாடப் பயன்பாடுகள், தொழில்துறை செயல்பாடுகள், வாகனப் பயன்பாடுள், மின்சார தயாரிப்புகள் போன்றவற்றால் ஏகப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வாயு நாள் தோறும் வளிமண்டலத்தில் கலக்கிறது. இவற்றுடன் போரும் சேர்ந்து கொண்டால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே இனி வரும் உலகில் போரும் நடைபெறக் கூடாது என்பதோடு கார்பன் டை ஆக்சைடை வெளியாக்கும் அன்றாட செயல்பாடுகளையும் இயன்ற வரை குறைக்க வேண்டும். அப்படி குறைக்காது போனால் திடீர் வறட்சியும், திடீர் வெள்ளங்களும், திடீர் புயல்களும் அன்றாடச் செய்திகளாகும்.

ஆகவே,

“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

போரிடும் உலகினை வேரோடு சாய்ப்போம்.”

என்கிற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப போரில்லாத உலகத்தைச் செய்வோம். அத்துடன் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத புதிய உலகத்தையும் படைப்போம்.

No comments:

Post a Comment