Tuesday 16 July 2024

குவைத்தும் இந்தியர்களும்!

சவூதி, ஈரான், ஈராக் போன்ற வளைகுடா நாடுகளில் குவைத்தும் ஒன்று.

குவைத்தில் இருப்பவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். அதனாலென்ன என்கிறீர்களா? குவைத்தின் மொத்த மக்கள் தொகையே 48.5 லட்சம்தான். அதாவது குவைத்தில் இருப்போரில் ஐந்தில் ஒருவர் இந்தியர்.

குவைத்தில் வேலை பார்ப்போரில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள்தான். அதாவது குவைத் தொழிலாளர்களில் மூன்றில் ஒருவர் இந்தியர்.

இப்போது எதற்கு இந்தத் தகவல்கள் என்கிறீர்களா?

வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்பதில் சிறந்த நாடு எது என்ற கருத்துக் கணிப்பு 52 நாடுகளில் நடத்தப்பட்டது. அதில் கடைசி இடம் அதாவது 52வது இடம் பெற்ற நாடு குவைத்தான். ஆனாலும் வேலை தேடி பலரும் செல்லும் நாடாக குவைத் இருக்கிறது.

குவைத்தில் வேலை பார்ப்பதில் மற்றொரு கஷ்டமும் இருக்கிறது. அங்கு கோடைக்கால வெப்பநிலை என்பது 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும். இங்கு நமக்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியலைத்  தாண்டினாலே நாக்குத் தள்ளுகிறது அல்லவா. அப்படியானால் குவைத்தின் கோடை வெப்பநிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.

அவ்வளவு கடுமையான வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு கடின உழைப்பை இந்தியர்கள் நல்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அங்குக் கிடைப்பதெல்லாம் மன உளைச்சல், கூடுதல் வேலை, சுகாதாரமற்ற வசிப்பிடம், மாசு நிறைந்த சுற்றுச்சுழல் மற்றும் குறைவான ஊதியம்தான்.

கடனை வாங்கி, சொத்தை விற்று மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்தான் இந்தியர்கள் பலரும் குவைத் போன்ற வெளிநாடு சென்று மிகவும் சிரமப்பட்டு வேலை செய்து சம்பாதிக்கின்றனர். அங்கு அவர்களுக்கு உயிரிழப்பு நேரிட்டால் அதை விட கொடுமையான விசயம் வேறு ஏதுமில்லை. அவர்களின் உடலை மீட்டு தாய்நாட்டுக்குக் கொண்டு வருவது வரையில் இழப்பீடு பெறுவது வரையில் எல்லாம் பிரம்ம பிரயத்தனமான காரியங்கள்.

பொதுவாக வெளிநாடு வேலைக்குச் செல்பவர்களுக்காக இந்திய அரசாங்கம் Pravasi Bharatiya Bima Yojana என்ற காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்தக் காப்பீடு திட்டத்தில் இணைந்து கொள்வது நல்லது.

அத்துடன் வெளி நாட்டுக்கு வேலைக்குச் செல்பவர்கள் தாங்கள் வேலைக்குச் செல்லும் நிறுவனம் குறித்தும், அங்கு தாங்கள் செய்யப் போகும் வேலை குறித்தும் போதுமான தெளிவைப் பெற்று அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்ட பின் செல்வது எப்போதும் உகந்தது.

No comments:

Post a Comment