Friday 19 July 2024

துணிக் குப்பைகளைக் குறைக்கலாமா?

முன்பு நாம் ஆடைகளைக் குறைவாக வாங்கினோம். பொருளாதார வசதியும் குறைவாகத்தான் இருந்தது. இருந்தாலும் எந்த ஆடையை எப்போது வாங்கினோம், எதற்காக வாங்கினோம், ஏன் வாங்கினோம், எங்கே வாங்கினோம், யார் வாங்கித் தந்தார்கள் என்பதெல்லாம் நன்றாக நினைவிருந்தது. ஒவ்வோர் ஆடையைப் பார்க்கும் போது அதற்கு ஒரு கதையைச் சொல்லி மகிழ்வோம். இன்றைக்கு நிலைமை அப்படியா இருக்கிறது?

இப்போது ஏகப்பட்ட ஆடைகளை வாங்கிக் குவித்திருக்கும் நாம் எந்த ஆடையை எதற்காக, ஏன் வாங்கினோம் என்பதெல்லாம் நினைவில்லாமல், ஒவ்வொரு வீட்டிலும் ஆடைகளைக் குப்பைகளைப் போலக் குவித்து வைத்திருக்கிறோம்.

அதென்ன திடீரென்று உடுத்திக்   கொள்ளும் ஆடைகளைக் குப்பைகளைப் போல என்று சொல்லி வீட்டிர்களே என்கிறீர்களா?

உண்மைதான். ஒவ்வொரு நாளும் உலக அளவில் வெளியாகும் துணிக் கழிவுகளை, துணிக் குப்பைகளை வரிசையாக அடுக்கினால் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போல இரண்டு மடங்கு இருக்கிறதாம். அப்படியானால் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் எவ்வளவு துணிகளை வாங்கி அவற்றை தினந்தோறும் ஒவ்வொருவரும் குப்பைகளாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்று.

பருத்தியிலான ஒரு T ஆடையை (காட்டன் டி சர்ட்) உருவாக்க 2700 லிட்டர் தண்ணீர் வேண்டுமாம். இது ஒரு மனிதருக்குத் தேவையான இரண்டரை வருட தண்ணீராம்.

பாலியஸ்டர் ஆடைகள் மக்க 200 ஆண்டுகள் ஆகுமாம். நாம் எத்தனை பாலியஸ்டர் துணிகளையும் ஆடைகளையும் பயன்படுத்துகிறோம். அவையெல்லாம் குப்பையாகப் போகும் போது அவை பூமியில் மக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். தினம் தினம் சேரும் இப்படிப் போகும் பாலியஸ்டர் துணிகள் பூமியின் மக்க வைக்கும் திறனை இருநூறு ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிப் போகச் செய்து கொண்டுதானே இருக்கும்.

இனியாவது அளவாகத் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் ஆடைகளை எடுத்துக் கொள்வோம். பொருளாதார வசதி அதிகரித்து விட்டது என்பதற்காக ஆடைகளை அதிகரிக்காமல் சிக்கனமாக இருப்பதால் நமக்கும் பணம் மிச்சமாவதுடன், பூமியில் உருவாகும் துணிக் குப்பைகளும் கழிவுகளும் குறைவாகும் அல்லவா!

No comments:

Post a Comment