Thursday, 2 April 2026

புதிய நிதியாண்டில் அரங்கேறும் புதிய விதிகள்!

புதிய நிதியாண்டில் அரங்கேறும் புதிய விதிகள்!

தவிர்க்க வேண்டியதும், கவனிக்க வேண்டியதும்!

2025 – 2026 புதிய நிதியாண்டிலிருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாகிறது மற்றும் சில புதிய நிதி சார்ந்த விதிகளும் அமலாகின்றன. இவை பெரும்பாலும் ரொக்க பரிமாற்றத்தைக் குறைப்பதாக உள்ளன. இவற்றைப் பின்பற்றுவதும், கடைபிடிப்பதும் அபராதம் மற்றும் தேவையற்ற பணப் பிடித்தங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். அப்படிப்பட்ட 15 விதி சார்ந்த நெறிமுறைகளை இங்கு காண்போம்.

1. தனிப்பட்ட கடன்களில் 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் கூடாது

உறவினர்களிடமோ அல்லது வேறு நபர்களிடமோ 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாகக் கடன் வாங்கவோ அல்லது வாங்கிய கடனை ரொக்கமாகத் திருப்பிச் செலுத்தவோ கூடாது (Sec 269SS & 269T). மீறினால், எவ்வளவு தொகை ரொக்கமாகப் பரிமாறப்பட்டதோ அதே அளவு 100% அபராதம் விதிக்கப்படும்.

2. கூட்டுறவுச் சங்க பரிவர்த்தனைகளுக்கும் ரொக்க கட்டுபாடு

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளோர், இந்தச் சங்கங்களில் இருந்து 20,000 ரூபாய்க்கு மேல் கடனை ரொக்கமாகப் பெறுவதோ அல்லது திரும்பச் செலுத்துவதோ கூடாது. இதுவும் வருமான வரித்துறையின் கண்காணிப்புக்கு உட்பட்டதே.

3. இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் எந்தவொரு ரொக்கப் பரிவர்த்தனையும் கூடாது

நிலம், நகை வாங்குதல், மருத்துவமனை செலவுகள் அல்லது சுபநிகழ்ச்சி என எந்தவொரு நிகழ்வுக்கும் ஒரு நாளில் ஒரு நபரிடமிருந்து 2 லட்ச ரூபாய்கு மேல் ரொக்கமாகப் பெறவோ, கொடுக்கவோ கூடாது (Sec 269ST). மீறினால் 100% அபராதம் விதிக்கப்படும்.

4. குழந்தைகளின் கல்லூரி / கல்விக் கட்டணம்

உங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காகக் கல்லூரிகளில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாகக் கட்டணம் செலுத்த வேண்டாம். கல்வி நிறுவனங்கள் தாங்கள் பெறும் பெரிய ரொக்கத் தொகைகளை SFT மூலமாக வருமான வரித்துறைக்கு நேரடியாகத் தெரிவித்து விடுவார்கள்.

5. வங்கியில் பணம் செலுத்துவதற்கான வரம்பு

ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணம் செலுத்தினால், அது தானாகவே வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டு விடும். ரொக்கமாக 10 லட்ச ரூபாய்க்கு மேல் FD அல்லது அஞ்சலகத் திட்டங்களில் முதலீடு செய்தாலும் IT கண்காணிப்பிற்கு உள்ளாகும்.

6. வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு

வங்கியில் இருந்து அதிகப்படியான ரொக்கப் பணம் எடுப்பதைத் தவிர்க்கவும் (Sec 194N). கடந்த 3 ஆண்டுகளாக ITR தாக்கல் செய்யாதவர் என்றால், ஒரு நிதியாண்டில் 20 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2% TDS பிடிக்கப்படும். சரியாக ITR தாக்கல் செய்பவராக இருந்தால், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எடுத்தால் 2% TDS பிடிக்கப்படும்.

7. கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்

ஒரு நிதியாண்டில் உங்களின் கிரெடிட் கார்டு பில்லுக்காக ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வங்கியில் செலுத்தினால், அது வருமான வரித்துறையின் AIS பதிவேட்டில் வந்துவிடும். பில்களை Netbanking / UPI மூலமே செலுத்தவும்.

8. வரி விலக்கு கோரும் முதலீடுகள் (80G & 80D)

அறக்கட்டளைகளுக்கு 2,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை அளித்தால், வருமான வரியில் விலக்கு கிடைக்காது. காப்பீட்டுப் பிரீமியத்தை ரொக்கமாகச் செலுத்தினால் வரி விலக்கு கோர முடியாது.

9. சொத்து மற்றும் Mutual Funds (AIS கண்காணிப்பு)

AIS (Annual Information Statement) மூலம் உங்களின் பெரிய பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன. 30 லட்ச ரூபாய்க்கு மேல் அசையாச் சொத்துக்கள் (நிலம்/வீடு) வாங்கினாலோ அல்லது விற்றாலோ பதிவேட்டில் வந்துவிடும். ஒரு நிதியாண்டில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் கண்காணிப்பிற்குச் செல்லும்.

10. பழைய வாகனங்கள் வாங்குதல் / விற்றல்

பழைய கார்களை வாங்கும்போது அல்லது விற்கும்போது 2 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பரிமாற்றம் செய்யக்கூடாது. இதுவும் Sec 269ST விதியின் கீழ் 100% அபராதத்திற்கு வழிவகுக்கும்.

11. போலி வாடகை ரசீதுகள் வேண்டாம்

வருமான வரி விலக்கு பெறுவதற்காகப் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் பெயரில் போலி வாடகை ரசீதுகளைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்கவும். வாடகையை ரொக்கமாகக் கொடுக்காமல் வங்கிப் பரிமாற்றம் மூலமாகவே வீட்டின் உரிமையாளருக்குச் செலுத்த வேண்டும். ஆண்டு வாடகை ஒரு லட்ச ரூபாயைத் தாண்டினால் வீட்டின் உரிமையாளரின் PAN எண் கட்டாயம். இதில் முரண்பாடு இருந்தால் IT நோட்டீஸ் வரும்.

12. Form 16 ஐ மட்டும் நம்பி ITR தாக்கல் செய்யக் கூடாது

படிவம் 16 உங்கள் சம்பள விவரங்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால், நீங்கள் வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி மற்றும் FD வட்டி ஆகியவற்றையும் உங்கள் ITR இல் கணக்கில் காட்ட வேண்டும். இவற்றை மறைத்துவிட்டு Form 16ஐ மட்டும் வைத்து ITR தாக்கல் செய்தால், Defective Return நோட்டீஸ் அனுப்பப்படும்.

13. விடைத்தாள் திருத்தும் பணி & இதர வருமானங்கள்

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, தேர்தல் பணி அல்லது வேறு ஏதேனும் பகுதிநேர வேலைகள் மூலம் கிடைக்கும் மதிப்பூதியம் முழுவதும் வரிக்கு உட்பட்டதே. இந்தத் தொகைகள் அரசுத் துறைகள் மூலமாகவே உங்கள் கணக்கிற்கு வருவதால், இவை நேரடியாக AIS இல் பதிவாகிவிடும். எனவே, ITR இல் Other Income பிரிவில் இதைக் காட்டத் தவறாதீர்கள்.

14. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்கள்

விடுமுறை நாட்களில் வெளிநாட்டுச் சுற்றுலா செல்பவர்கள், அதற்கான கட்டணத்தை ரொக்கமாக செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் ஒரு லட்சத்தைத் தாண்டினால், TCS (Tax Collected at Source) விதிகளின்படி அது வருமான வரித்துறையின் நேரடிக் கண்காணிப்பிற்குச் சென்றுவிடும்.

15. PAN, ஆதார் மற்றும் SR இல் பெயர் முரண்பாடு

உங்கள் PAN கார்டு, ஆதார் கார்டு மற்றும் பணிப்பதிவேடு (Service Register - SR) ஆகிய மூன்றிலும் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதில் எழுத்துப் பிழைகளோ அல்லது மாறுபாடுகளோ இருந்தால், உங்களுக்கு வர வேண்டிய வருமான வரி ரீஃபண்ட் கிடைக்காமல் முடங்கிவிடும்.

மேற்படி நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது இனி வரும் காலத்திற்கு அவசியமான அவசியமாகும். இயன்ற வரை ரொக்கப் பரிமாற்றத்தைத் தவிர்த்து இணைய வழி, காசோலை வழி, யுபிஐ வழி மற்றும் இதர டிஜிட்டல் வழியிலான பரிமாற்றங்களைச் செய்வது நலம் பயக்கும்.

*****

No comments:

Post a Comment