Sunday, 26 April 2026

மாற்றத்தின் வித்து – ஒரு பட்டாம்பூச்சி விளைவு!

மாற்றத்தின் வித்து – ஒரு பட்டாம்பூச்சி விளைவு!

உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் உடனே ஒரு போர்க்கொடி தூக்க வேண்டும் அல்லது பில்லியன் டாலர் செக் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.

ஒரு சின்ன ஸ்பார்க் போதும். அது உங்கள் உள்ளுக்குள் ஒரு மெல்லிய குரலில் பேசும், ஏன் இதை இன்னும் கொஞ்சம் நல்லதாக மாற்றக்கூடாது? என்று.

இன்று உலகெங்கும் சாதாரண மனிதர்கள் அசாதாரணமான காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். புரட்சி என்பது எப்போதும் கர்ஜனை செய்வதில்லை. சில நேரங்களில் அது ஒரு மெல்லிய கிசுகிசுப்பாகத்தான் தொடங்குகிறது.

ஸ்கூல் கேன்டீனில் சாப்பாடு போடும் ஒரு பெண்மணி, அந்த இடத்தை ஒரு சின்ன மியூசிக் ஸ்டேஜ் ஆக மாற்றி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருகிறார்.

நீங்கள் உணவு பரிமாறும் போது பூக்கும் புன்முறுவல் சாப்பாட்டை இன்னும் அதி உன்னத ருசி கொண்டதாக ஆக்கும்.

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவர், இன்று அதே கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் காவலராக மாறியிருக்கிறார்.

நீங்கள் நடும் ஒரு மரம் நாளை ஆயிரம் பறவைகளுக்கு வீடாக மாறும். வெயிலுக்காக நிழலில் ஒதுங்கும் எத்தனையோ மனிதர்களுக்குக் குளுமையைத் தரும்.

அசாதாரண மாற்றங்களைச் செய்த யாரும் சூப்பர் மேன் டிரஸ் போட்டு வரவில்லை. தங்கள் வேலையைச் செய்யும் விதத்தை மாற்றிக்கொண்டார்கள், அவ்வளவுதான்!

நீங்களும் அப்படி உங்கள் மனதில் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்து கொண்டால், ஓர் அசாதாரண மாற்றம் இந்த உலகில் உருவாகும்.

ரிமோட் கிராமங்களில் வெளிச்சம் கொண்டு வரும் பாட்டிகள் ஒரு பக்கம் என்றால், குப்பையாக வீசப்படும் பிளாஸ்டிக் மலைகளில் பிரம்மாண்டமான கலைப் படைப்புகளைப் பார்க்கும் கலைஞர்கள் மறுபக்கம்.

வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே என்று நிரூபிக்கும் இளைய தலைமுறையினர். இவர்கள் எல்லாரும் உலகத்தை ரீஇமேஜின் செய்கிறார்கள்.

ஒரு மொட்டை மாடித் தோட்டம் அமைத்து தேனீக்களைக் காப்பாற்றுவதோ அல்லது ஒரு சின்ன அன்பான வார்த்தையைத் தொடங்கி வைத்து அது ஆயிரம் பேரைத் தொடச் செய்வதோ, அது எதுவாக இருந்தாலும் அது ஒரு ரிப்பில் எபெக்ட். தண்ணீரில் ஒரு கல்லைப் போட்டால், அது எப்படி வளையங்களாகப் பரவுகிறதோ, அப்படித்தான் மாற்றமும்.

ஒரு சின்ன நல்ல விசயம், மிகப்பெரிய நல்ல விசயத்திற்கான வித்து. நம் தலைமுறைக்கான சொத்து.

நாம் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி, ஒரு தனி மனிதனால் என்ன செய்ய முடியும்? என்பதல்ல.

நாம் கேட்க வேண்டிய சரியான கேள்வி, நான் முதலில் என்ன செய்யப் போகிறேன்? என்பதுதான்.

மாற்றம் என்பது ஒரு பெரிய சுவிட்ச் அல்ல. அது ஒரு சின்ன விதையைப் போடுவது போன்றது. இன்று ஒரு விதையைப் போடுங்கள், நாளை அது ஒரு காடாக மாறலாம்.

*****

No comments:

Post a Comment