Friday 16 August 2024

வேலையில் வெற்றி காண்பதற்கான வெற்றிகரமான சூத்திரங்கள்!

வேலையில் வெற்றி காண வெற்றிகரமான பல சூத்திரங்கள் உள்ளன.

வேலையில் வெற்றி காண நீங்கள் எப்போதும் வேலை செய்பவராக மட்டும் இருக்கக் கூடாது. உங்கள் வேலை சம்பந்தமாக நிறைய படிக்க வேண்டும், உங்களைப் போன்ற வேலை செய்யும் வல்லுநர்களைச் சந்திக்க அவர்களுடன் உரையாட வேண்டும்.

வேலையில் வெற்றி பெற்ற பலரும் நிறைய நேரத்தைப் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் புதிதாக எதையாவது உருவாக்குவதற்கும் உபயோகிக்கின்றனர். இதன் மூலம் அவர்களது சிந்தனையும் செயலும் சீராக இருக்கிறது.

எந்நேரமும் பரபரப்பாக வேலை செய்வதால் மட்டும் வேலையில் வெற்றி காண முடியாது. ஏனென்றால், மேம்பாடு என்பது தொலைநோக்குப் பார்வை, செயலாக்கம் ஆகிய இரண்டையும் கொண்டது. எந்நேரமும் பரபரப்பாக இருப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

ஒரு வேலை என்றால் அதில் பிரச்சனைகளும் வரும். அப்படிப் பிரச்சனைகள் வரும் போது அதைத் தீர்க்கும் முறை முக்கியமானது. ஒரு பிரச்சனை குறித்து சரியாகச் சிந்திப்பதே அந்தப் பிரச்சனையைத் தீர்க்க பெரிய உதவியாக இருக்கும். இதற்குத் திறன் மேம்பாடு உங்களுக்குப் பெரிதும் உதவும்.

உங்கள் திறன் மேம்பாடு என்பது மூன்று விசயங்களைச் சார்ந்திருக்கிறது.

1. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக முடிவு செய்து கொள்வது.

2. அதைச் செய்வதற்கான சரியான நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்து கொள்வது.

3. குறிப்பிட்ட கால கட்டத்தில் அதை செவ்வனே செய்து முடிப்பது.

வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு ஒரு சூத்திரம் இருக்கிறது. அது என்னவென்றால், எண்ணமும் செயலும் ஒன்றாக இருக்கும் போது மட்டுமே ஒரு வேலையைச் செய்வதற்கான சக்தி கிடைக்கும். எண்ணமும் செயலும் வேறு வேறாக இருப்பதே ஒரு வேலையைச் செய்ய முடியாமைக்குக் காரணம்.

ஒரு வேலையைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்றால் நீங்கள் பின்வரும் ஐந்து வினாக்களுக்கு விடை காண வேண்டும்.

1. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது.

2. எப்போது செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது.

3. எங்கே செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது.

4. எப்படி செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது.

5. செய்ய வேண்டிய விசயங்களை செய்யும் போது எப்படி மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் செய்வது என்பதைத் திட்டமிடுவது.

வேலை குறித்த மற்றொரு முக்கியமான சூத்திரத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால், வேலைகளை எந்த அளவுக்கு எளிமையாக்கிக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு வெற்றி கிடைக்கிறது. ஒரு வேலையைக் கடினமாக்கித் தோற்பதை விட, எந்த ஒரு கடினமான வேலையையும் எளிதாக்கி வெற்றி காண்பதே புத்திசாலித்தனம்.

அத்துடன் வேலை குறித்த இந்தச் சூத்திரம் முக்கியமானது. அது என்னவென்றால், ஒரு வேலையில் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தால்தான் நீங்கள் அந்த வேலையைக் கற்றுக் கொள்ள முடியும். இது வேலை குறித்த கடினமான சூத்திரமாகத் தோன்றினாலும் இந்தச் சூத்திரத்தில் தேறியவர்கள்தான் வேலையில் கில்லாடிகளாக ஆகிறார்கள்.  

No comments:

Post a Comment