Friday 23 August 2024

சாதனை ரகசியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்!

சாதிப்பதற்கு எது அவசியம் தெரியுமா?

சாதிக்கும் வரை பொறுமையும் அதுவரை காத்திருக்கும் மனப்பான்மையும்தான் அவசியமானது மற்றும் முக்கியமானது.

ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதை அடைவதற்கு எது மிக மிக தேவை என்றால் பொறுமையாகக் காத்திருக்கும் மனப்பான்மைதான்.

இதை ஓர் உளவியல் ஆய்வு கூட நிரூபிக்கிறது.

ஸ்டான்போர்ட்டு யூனிவர்சிட்டி உளவியல் பேராசிரியர் வால்டர் மிஷல் இது குறித்து செய்த ஆய்வு முக்கியமானது.

1960 இல் இந்த ஆய்வைச் செய்தார் வால்டர் மிஷல்.

இந்த ஆய்வில் பங்கேற்ற ஐந்து வயதுக்குட்பட்ட நூறு குழந்தைகளுக்கு மார்ஷ்மெல்லோ சாக்லேட் வழங்கப்பட்டது. அதனால் இந்த ஆய்வுக்கு மார்ஷ்மெல்லோ ஆய்வு என்ற பெயரும் உண்டு.

குழந்தைகள் அந்த சாக்லேட்டை 15 நிமிடம் சாப்பிடாமல் இருந்தால் இன்னும் ஒரு சாக்லேட் வழங்கப்படும் என்பதுதான் அவர்கள் செய்த ஆய்வின் சாராம்சம்.

என்ன நடந்தது தெரியுமா?

பல குழந்தைகள் பதினைந்து நிமிடம் காத்திருக்க முடியாமல் ஆசையால் மார்ஷ்மெல்லோ சாக்லேட்டைச் சாப்பிட்டு விட்டனர்.

சில குழந்தைகள்தான் 15 நிமிடம் வரை காத்திருந்து மற்றொரு சாக்லேட்டைப் பெற்றனர்.

விசயம் அத்தோடு முடிந்துவிடவில்லை என்பதுதான் இந்த ஆய்வின் மற்றொரு சுவாரசியம்.

அந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளை 40 வருடங்கள் வரை பின்தொடர்ந்து ஆய்ந்தனர் உளவியல் அறிஞர்கள்.

அவர்களுள் காத்திருந்து மற்றொரு சாக்லேட்டை வாங்கிய குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் சாதனையாளர்களாக இருந்தனர்.

சாதனை என்பது சட்டென நிகழ்ந்து விடுவதில்லை.

சில பல சோதனைகளுக்குப் பிறகே நிகழ்கிறது.

சோதனைகளைப் பொறுமையாக எதிர்கொண்டு சாதிக்கும் வரை அதை விடாது, அதை அடையும் மனப்பான்மையோடு காத்திருக்கும் தன்மை தேவையாக இருக்கிறது. அப்படி ஒன்றை அடைவதற்காகப் பொறுமையாகக் காத்திருக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்பவர்களே சாதிக்கிறார்கள்.

இதுவே சாதிக்க நினைப்பவர்களுக்கு மார்ஷ்மெல்லோ ஆய்வு சொல்லும் சூட்சமம்.

நீங்களும் சாதிக்க விரும்புகிறீர்களா?

அப்படியானால் உங்களுக்கான சாதனை ரகசியம் இப்போது கிடைத்திருக்குமே.

No comments:

Post a Comment