Friday 30 August 2024

பணக்கார சூட்சமங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஒருவர் பணக்காரராகச் சம்பாத்தியம் மட்டும் முக்கியமில்லை. அவர் சம்பாத்தியத்தில் எவ்வளவு சேமிக்கிறார் என்பதும் முக்கியம். இதுவே பணக்காரர் ஆவதில் உள்ள முக்கிய சூட்சமம்.

பணக்காரராகச் சேமிக்க வேண்டும். சேமித்ததை லாபகரமாக முதலீடு செய்ய வேண்டும்.

அத்துடன் பணக்காரர்களின் மேலும் சில சூட்சமங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பணக்காரர்கள் முதலீட்டில் துணிந்து செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். அதிக வருமானத்திற்கு முதலீட்டில் கணிப்பின் அடிப்படையில் துணிகர முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்கள்.

பணக்காரர்களின் குணாதிசயம் என்று ஒன்று இருக்கிறது. அதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது என்னவென்றால், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எப்போது ஒரு பொருள் மலிவாகக் கிடைக்கிறதோ அப்போது அந்தப் பொருளை வாங்குகிறார்கள். அப்படி வாங்கிப் போட்டு விட்டு, சரியான விலை கிடைக்கும் வரை நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் பங்குச்சந்தையைப் பொருத்த வரையில் நேரம் பார்த்து முதலீடு செய்வதை விட, முதலீடு செய்து விட்டு நீண்ட காலம் காத்திருக்கிறார்கள்.

பணக்காரர்களின் மேலும் சில குணாதிசயங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் இலக்குகளை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். மனதில் நினைப்பதை விட எழுதி வைத்துக் கொண்டு, திரும்ப திரும்ப பார்க்கும் போது அவர்களுடைய இலக்கும் பயணமும் அவர்களுக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.

பணக்காரர்களின் செயல் அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. அவற்றுள் முக்கியமான ஒன்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பணக்காரர்கள் வழக்கறிஞர், தணிக்கையாளர், நிதி ஆலோசகர் ஆகிய மூவரைத் தங்களுடைய நண்பர்களாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொத்து எதையாவது வாங்க வேண்டும் என்றால் இந்த மூவரிடம் ஆலோசனை கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்கள். ஆலோசனைகள் பெற்று, சொத்து வாங்குவதால் பல தலைமுறைகளுக்குச் சிக்கல் இல்லாத சொத்துகளை அவர்கள் உருவாக்குவார்கள்.

இந்த விசயம் உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் பணக்காரர்கள் இந்தச் சின்னஞ்சிறு விசயத்திலும் அவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள். அது என்னவென்று கேட்கிறீர்களா?

பணக்காரர்கள் வெளியில் அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது, பணச் சேமிப்பும் கிடைக்கிறது.

அப்படியானால் பணக்காரர்களும் ஏழைகளும் எந்த இடத்தில் வேறுபடுகிறார்கள் என்கிறீர்களா? சந்தேகமே இல்லாமல் நாம் முதலில் பார்த்த அதே இடம்தான். அதாவது சேமிப்புதான்.

பணக்காரர்கள் மிச்சமாகும் பணத்தைச் சேமிக்கிறார்கள். ஏழைகள் சம்பாதிக்கும் காலத்தில் தேவையில்லாத செலவுகளைச் செய்துவிட்டு பணி ஓய்வுக்குப் பின் கஷ்டப்படுகிறார்கள். பிள்ளைகள் அல்லது மற்றவர்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆகவே நீங்கள் நினைத்தால் பணக்காரர் ஆகலாம். நீங்கள் நினைத்தால் பணக்கார நிலையிலிருந்து ஏழையாகவும் ஆகலாம். அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

ஒருவர் தன் வருமானத்தில் பத்து சதவீத தொகையைச் சேமித்தாலே ராஜா போல வாழலாம். பிறகென்ன சேமிக்கத் தொடங்குங்கள். சேமித்த தொகையை லாபகரமாக முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். பணக்காரர் ஆகுங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

No comments:

Post a Comment